9.12.08

ஊடகங்களை இடைமறித்து சில கேள்விகள்


சத்ரபதி புகை வண்டி நிலையத்திலும், தாஜ் உயர்தர உல்லாச விடுதியிலும் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு நூற்றி எண்பது உயிர்களுக்கு அதிகமாக மீண்டும் பலியானதன் அதிர்வோசை இன்னும் உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உயிர்கள் எங்கும் எப்போதும் விலைமதிப்பற்றது. உடனடி விளைவாக இதோ இந்தியா ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருபதாவதாக இணைந்துவிட்டது. இஸேரேல், ஈரான், ஈராக், சோமாலியா, பெரு, ஆப்கான், பாகிஸ்தான், என்று நீள்கிற பட்டியலை உருவாக்கிய அமெரிக்கா இருபது நாடுகளிலும் முதலில் பற்பசை, குளியல் சோப், முகச்சவர களிம்பு என நுரை பொங்கும் பொருட்களோடு நுழையும். பிள்ளையைக் கிள்ளிவிட்டு பின்னர் தொட்டிலை ஆட்டுகிற அமெரிக்கா இறுதியில் அமைதிப்படையோடு வெளியேறும்.

வெறியேற்றப்பட்ட நாய்களின் கைகளில் உயர் தொழில்நுட்ப கொலைக் கருவிகளும் பணமும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் எல்லா தேசத்திலும் இருக்கிறது. கொலைகாரன்பரட்டைத் தலையோடும், கருப்பான கோரமுகத்தோடும், முட்டிவரை ஏத்திக்கட்டிய லுங்கியோடும இருப்பான் என்பது கைக் குழந்தைகளுக்கு அம்மாக்களும், சாதாரண ஜனங்களுக்கு சினிமாவும்காண்பித்த மூட பிம்பம். முற்றும் துறந்த முனிவர்களும், மழுமழுவென முகம் மழித்த ஹைடெக் யுவன்களும் கொத்துக் கொத்தாக உயிர்குடிப்பார்கள் என்பதை நம்பமுடியாத அதிர்ச்சியோடு உலகம் உள் வாங்கிக் கொண்டிருக்கிறது.

எமது சகோதரர்கள் இமய மலை முகடுகளில் விறைக்கிற பனியில் நமக்காகக் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள எனும் நிம்மதியோடு நாம் இனி கடைத்தெருக்களில் நடக்க முடியாது. இரட்டைக்கோபுர சிதைவுநடந்த பின்னால் அமெரிக்காவுக்கு குண்டி தாங்கும் நமக்கு எதிரி இமய மலை வழியாகத்தான் இந்தியாவுக்குள்வருவான் என்று முப்படைத் தளபதிகள் நினைத்துக் கொண்டிருந்தது பத்தாம் அல்ல, பத்தாயிரம் பசலித்தனம்.


ஆயிரக்கணக்கான மைல்கள் கடல் எல்லையாக அமைந்திருக்கிற ஒரு நாடு இப்படி ஊடுருவல்களை அவதானிப்பது மிகச்சிரமமான காரியம் எனவே வந்துவிட்டார்கள். வந்தவர்களைச் சந்தேகிக்கிற காவலர்கள் இந்தியாவில் இல்லை. அவர்கள் சந்தேகக்கேசில் பிடித்துப்போகிறவர்கள் எல்லாம் இரவு கடைசிப் பேருந்தைதவற விட்டு பேருந்து நிலையத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கும் அழுக்கு மனிதர்களை மட்டும் தான்.

2003 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 17107 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டாகள். அதற்கு அமெரிக்க உரங்களும், விதைகளும், உரமானிய வெட்டும் காரணிகள். தேசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கையின் படி ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் 116 பேர்களும், கர்நாடகத்தில்87 பேர்களும் கொல்லப்பட்டது எல்லை கடந்த தீவிர வாதத்தால் அல்ல. விடிகிற ஒவ்வொரு நாளும் இந்தியக்கிராமங்களில் எங்காவது ஒருமூலையில் ஜாதிய மூர்க்கர்களால் ஒரு பூஞ்சைத் தலித் கொல்லப்படுவதாக உலகமனிதஉரிமைச் சங்கம் கணக்கிடுகிறது. இந்தச்செய்திகள் எந்த ஊடகத்தின் முதல் பக்கத்திலும் இடம்பெறவில்லை.

ஆனால் நேரடி ஒளிபரப்பில் இந்தியா கைபிசைந்து கொண்டிருந்ததை உலகம் பார்த்தது. காவலர்களும் அதிரடிப்படை,கவச வாகனங்கள், வஜ்ரா, எனும் எல்லாமே அப்பாவிகள் ஊர்வலம் வந்தால் விரட்டியடிப்பதற்கும், வாச்சாத்தி, கொடியங்குளம் மாதிரி ஊர்களில் தலித் குடியிருப்புக்குள் புகுந்து வெறியாட்டம் போடவும் மட்டுமே பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ராணுவக் கவச வாகனம் உள்ளே நுழைந்ததும் பிரதம அறிவிப்பாளரே எம்ஜிஆரைப் பார்த்த கிராமத்தான் மாதிரிதுள்ளிக்குதித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மக்களுக்கு பதுகாப்பு கொடுப்பதுதானே அவர்களின் வேலை.

ஒரு வீரேந்திர சேவாக்கோ, விஸ்வநாதன் ஆனந்தோ, இல்லை ஷாருக்கானோ துப்பாக்கி தூக்கிக்கொண்டு வந்திருந்தால் ஆச்சரியப்படலாம். தினம் தினம் பாதாளச் சாக்கடையில் அடைப்பெடுக்க உள்ளே இறங்கும் நகரசுத்தித் தொழிலாளரைஎன்றைக்காவது இவர்கள் காமிரா படம் பிடித்திருக்கிறதா அவரும் உயிரைப்பணயம் வைத்துத் தான் நாட்டுக்காக தியாகம்பண்ணுகிறார், ரொம்பக்குறைந்த கூலியில்.

சமீபத்தில் மாதவராஜ் பிளாக்கில் இது என்ன சினிமா என்று மகன் கேட்டதாக ஒரு கவிதையைப்பார்த்து முதலில்அது கொஞ்சம் அதிகமான விமர்சனம் என்று நினைத்தேன். ஆனால் மொத்த நேரடி ஒளிபரப்பையும் பார்த்த பின்னர் அதுகுறைவான விமர்சனம் என்றுணர்ந்தேன். நன்றாக அலங்காரம் செய்யப்பட்ட வர்ணனையாளர்கள், தேர்தல் நேரத்தைப் போல அரசியல் விமர்சகர்களின் பேட்டி, இவை யாவும் கைதேர்ந்த பின்னனி இசையோடு வழங்கப்பட்டது. இடையிடையே வியாபார இடைவேளையோடு. எழவு வீட்டில் ரிக்காடு டான்ஸ் போலிருந்தது.

தனது சரக்கை விற்றுத் தீர்க்கிற முயற்சியில் இங்கு ஒரு நிரந்தர வெறி உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கு அனுதாபம் திரட்டுவது இறுதி இலக்காகிறது. சின்னச் சின்னக் கனவுகள், ஒரு பகாசுர அனுதாபத்தின் கால்களில் மிதிபட்டு நசுங்கிப்போகும்.

1 comment:

cheena (சீனா) said...

உண்மை உண்மை காமராஜ் - ஊடகங்களின் வியாபாரப் புத்தி மாற வேண்டும். அரசு விதி முறைகள் கொண்டு வரவேண்டும். எதை மிகைப்படுத்திக் காட்டக்கூடாது என்பதனை வரையறுக்க வேண்டும். நல்ல உரை. நல்வாழ்த்துகள்