12.9.09

வலையும் நானும் - ஒரு தொடர் பதிவு




அந்தப்பக்கம் போகாதே, போனாலும் உடனே திரும்பிவிடு, தாமதமானாலும் யாரோடும் சேராதே, உனக்கு கோஷ்டிவேண்டாம் இப்படியான வேப்ப மர உச்சிக் கதைகள் கேட்ட பின்னரும் நான் வந்துவிட்டேன். எனக்கு முன் யானை பார்த்தவர்கள் குருடர்கள் அல்லர். தன்னைப்போல் பிறரை நேசி, எதிராளியின் இடத்திலிருந்தும் யோசி. எனும் பதங்கள் கூட வர, இதோ ஒரு வருடம் ஓடிவிட்டது. திசைதெரியா தூரத்திலிருந்து அன்பெனும் அலை பொங்கிப் பெருகி இக வாழ்வின் கஷ்டங்களையெலாம் துடைத்தெறிகிறது எனது பக்கம்.


நான் இந்த வலைக்குள் நுழைந்த வரலாறு சொல்லவேண்டுமானால் உடனடியாக ஆத்திகனாய் மாறுவேன். ஆம், அன்பையும் நட்பையும், தோழமையையும் துதிக்கும் ஆத்திகனாக மாறுவேன். அவன் என் கடைவிரல் பற்றி நாங்கள் இணைந்து நடக்கத்துவங்கி இதோ இருபத்தைந்தாண்டுகள் பூர்த்தியாகிறது. என்னிடம் அரசியல், இலக்கியம், இசங்கள், பணச் சிலாக்கியம் இன்ன பிறவும் முன்வைத்து இறுதியில் நட்பையும் சேர்த்து வைத்து எதவதொன்றைத்தேர் என்றால் எல்லாவற்றையும் புறந்தள்ளி நான் நட்பை மட்டும் தேர்ந்துகொள்வேன். அது எனக்கு எல்லாம் தரும்.. ஜீபூம்பா. சென்ற வருடம் துண்டிக்கப் பட்டிருந்த இணைய இழையை கோர்த்துவிட்டு வலையை எனக்கு அறிமுகம் செய்துவைத்தான் தோழன் மாதவராஜ்.


சிறுகச் சிறுக 72 பேர் எனது பக்கத்தில் இணைந்திருக்க எண்ணவியலா அன்பும் நட்பும் குவிந்துகிடக்கிறது. வெளிப்பயணம் இல்லா போதுகளில் வலைப்பயணம் கொண்டு வந்து குவிக்கிறது செலவழிக்க இயலா பெரும்அறிவுத் திரவியத்தை. ஒரு பக்கம் சண்டை, வெறுப்பு, ஒதுக்குதல், கோஷ்டி என எல்லாம் இருப்பினும் வலைக்குள்ளும் மனிதர் இருக்கிறார். குறைந்தபட்ச இடைவெளியில் ரசனைகள் ஒத்துப்போகிற கூட்டம் சேர்கிறது. படிக்கப்படிக்க திருத்திக்கொண்டு பெரும் இடைவெளிகூட குறுகலாம். பிறந்ததிலிருந்தே கூடவந்த வெற்றுப் பிடிவாதங்கள் கூட மாறலாம். எல்லாம் கற்றலில் சாத்தியம். கற்றலிற் கேட்டல் நன்று, இங்கு அந்த இரண்டுமே உண்டு.


திக்கெட்டும் இருந்து இலவச நேரடித் தகவல் தரும் வலை மாந்தர் யாரும் புறந்தள்ள முடியாத தன்னூடகம்.(self media ). இதை புரிந்து கொள்ள வெளியார்க்கு காலமாகும். ஆகாமாலும் போகும் அதனாலென்ன ஆயிரம் பூக்கள் மலரும், மலர்ந்தே தீரும். அதுதான் பிரபல எழுத்தூடகங்கள் கூட வலைக்கெனப்பக்கம் ஒதுக்க நேர்கிறது. இந்த கைப்பேசி அல்லது அலைபேசியைக் கேளுங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கே தெரிந்திருக்காது இவ்வளவு வாடிக்கையாளர்களின் சட்டைப்பைக்குள் கிடப்போம் என்று. கலிலியோவுக்கு நேர்ந்த கதி தெரியுமா உலகம் உருண்டை எனச்சொல்லிவிட்டு சனாதன கிறிஸ்தவ மடத்தில் சாஸ்டங்கமாய்க் காலில் விழுந்த கலிலியோ.


எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.


12 comments:

thiyaa said...

//எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.//

உண்மைதான் வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல நண்பர்களையும், அவர்தம் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது இந்த வலைப்பூக்களின் அற்புத சாதனை.

பரந்து விரிந்த உலகினை உள்ளங்கைக்குள் கொண்டுவந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

அன்புடன் அருணா said...

/எல்லாம் கற்றலில் சாத்தியம்/

இதுதான் என் உறுதியான நம்பிக்கையும் கூட!
/தக்கது நிற்கும் தகாதது வீழும்/
உண்மை...உண்மை....

Unknown said...

மாமா!உங்கள் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளீர்கள்.சூப்பர்...

சந்தனமுல்லை said...

நல்ல அனுபவ குறிப்பு! தங்கள் 25 வருட நட்புக்கு ஒரு சல்யூட்!! :-)

பா.ராஜாராம் said...

நல்ல முதிர்வான நடை காமராஜ்.நண்பர் மாதவனின் முகம் வரைந்து தரும் பக்குவம் மிக அழகு.நட்புதான் எம்புட்டு பெருசு!வானந்தண்டி! இல்லையா..

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

//எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.//

அருமை!

குப்பன்.யாஹூ said...

அற்புதமான பதிவு.

உங்களை அறிமுகப் படுத்திய மாதவராஜுக்கும் நன்றிகள்.

ஈரோடு கதிர் said...

காற்றில் மிதக்கும் காந்த அலைகள்தான்
வலை வடிவத்தில் என்னையும், உங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தின என்பது உணமையே..

வலைக்கு வந்த பின் புதியதொரு உலகம் கண்டேன்...

நன்றி நண்பரே

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்கப்படிக்க திருத்திக்கொண்டு பெரும் இடைவெளிகூட குறுகலாம். பிறந்ததிலிருந்தே கூடவந்த வெற்றுப் பிடிவாதங்கள் கூட மாறலாம். எல்லாம் கற்றலில் சாத்தியம். கற்றலிற் கேட்டல் நன்று, இங்கு அந்த இரண்டுமே உண்டு.

உண்மை :)

Deepa said...

மிகப் பெருமையாக இருக்கிறது.. உங்களுக்கும் அங்கிளுக்கும் இடையிலான நட்பை நினைத்து.
அதன் பயனாக எங்களுக்கு உங்கள் எழுத்தை வாசிக்கக் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி.

வாழ்க உங்கள் நட்பு.

- இவ்வளவு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். எப்படியோ மிஸ் பண்ணியிருக்கிறேன். :-(