29.9.09

புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும்.

புதுவிசை 25 வது இதழ் வெளியானதின் பொருட்டு 9.9.2009 அன்று மாலை சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் ஒரு வாசகர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. தமுஎச பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பிரபஞ்சன், பெண்ணிய ஆர்வலர் முனைவர்- ஆய்வாளர் வ.கீதா, கவிஞர் குட்டிரேவதி, இதழியலாளர்- உயிர் எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில், முனைவர் ரவீந்திரன், இந்தியமாணவர் சங்க செயலாளர் செல்வா, நாடக ஆசிரியர் பிரளயன், பன்முகக் கலைஞன் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், ஆசிரியர் குழுவிலிருந்து பெரியசமி, ஆதவன்தீட்சண்யா பங்கேற்பு செய்தார்கள்.


முதலில் பேசிய தோழர் ச.தமிழ்ச்செல்வன் விசை ஆரம்பிக்கப்பட்டதையும் அது தொடர்ந்து வெளிவர நேர்ந்த சிக்கல்களையும்விவரித்தார். கூடவே புதுவிசை பேசுகின்ற விஷயங்கள் தமிழ் எழுத்துலகில் அடர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும். தாங்கள் ஆசைப்பட்ட அளவு இலக்கிய முகம் இல்லை எனவும் சுருக்கமாகத் தனது கருத்துக்களை முன்வைத்தார். புதுவிசையை திருமங்கலத்தில் ஆரம்பித்தோம் எனும் தகவலைச் . 25 இதழ்கள் கடந்துவந்த புதுவிசை பல சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது. எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் நான், புதுகை சஞ்சீவி, அருள் எழிலன், ஸ்ரீவில்லிப்புத்தூர் சிவகுமார், தஞ்சை சாம்பான் இப்படி பல அறிமுக எழுத்தாளர்களை ஊக்குவித்த வரலாறு ஜஸ்ட் லைக்தட் நிராகரிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.


இதை எங்கள் அன்புச்சகோதரி கவிஞர் குட்டி ரேவதியும் கூட கடந்து போனதுதான் மனதுக்கு நெருடலான சங்கதி. அங்கிருந்தே எனக்கு அந்த விழா மீதான நெருடல்கள் ஆரம்பித்திருந்தது. நான் மேடைப்பேச்சின் மீது மிக மிக எதிர்க் கருத்து வைப்பதற்கு ஏதுவான கருத்துக்கள் துவங்கியிருந்தது. ஆம் மேடையில்பேசிய முனைவர் வ.கீதா, குட்டி ரேவதி, முனைவர் ரவீந்திரன் ஆகியோர் புது விசை குறித்துப்பேச எடுத்துக்கொண்டது மிகக்குறைவு. அவர்கள் முழுக்க முழுக்க ஈழப்பிரச்சினை குறித்த விவாதங்களையே வெகுவாக முன்வைத்தார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் தமுஎகச மாநில மாநாட்டில் சொன்ன கதைகளையே மூன்றாம் முறையாக மீண்டும் சொன்னார்.


முனைவர் வ.கீதா 24 மற்றும் 25 வது இதழ்களில் வந்த கட்டுரைகளில் இரண்டு அல்லது மூன்றை அடிக்கோடிட்டு விட்டு விசைசார்ந்த உரையாடல்களைச் சுருக்கிக் கொண்டார். எனவே மேடைப்பேச்சு என்பது நபர் சார்ந்த இசம் சார்ந்த மயக்கங்களின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் சுருங்கிப்போவதை தவிர்க்க இயலவில்லை. ஆம் இவ்வளவு மகாமித்யங்கள் பொருந்திய மாடு இந்த கொம்பிலே தான் கட்டப்பட்டிருந்தது என்று முடிப்பதுதான் மேடைப்பேச்சின் சாமர்த்தியமாகிறது. உலகின் மனிதாபிமானமுள்ள யாரும் நிராகரிக்க முடியாத ஜெனோசைட் ஈழப்பிரசினை. யாரும் காதுகொடுத்துக் கேட்க இயலாத அவலம் மூன்று லட்சம் தமிழகதிகளின் வாழ்நிலை. இதற்கெதிராக பேசும் யாரும் மனிதாபிமான விரோதிகள் என்பதில் இரண்டு கருத்தில்லை. ஆனால் ஒரு சிற்றிதழின் வாசகர் சந்திப்பில் உரையாடல்களே இல்லாமல் பேச்சாளர்கள் கருத்தாக்ரமிப்பு மட்டுமே மிஞ்சிப்போனது தான் கஷ்டமாக இருக்கிறது. தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.


ஆதவன் தன் ஆசிரியர் உரையில் பேசிய விஷயங்களில் வெகுவாக ஈர்த்தது, தமிழ்நதி - ஆதவன் விவாதத்தில் பெண்ணியம் சார்ந்த சில சில சொல்லாடல்கள் குறித்து அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியவாத்தை. அவரது தர்க்க ஞாயத்தையும், ஒடுக்கப்பட்டவர்களின் குமுறலையும், ரசிக்கத்தக்க நையாண்டியையும் தாண்டி அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுதான். தலைவிரி கோலமாய், மூக்கைச் சிந்திக்கொண்டு போன்ற சொல்லாடல்கள் ஆதவன் எழுத்தில் ஊடுபயிராவதைச் சொன்னார்வ.கீதா. அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு ஆதவன் மண்ணிப்புக் கோரியது தான் நான் சொல்ல வந்தது. பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு கருத்தில், தனது எழுத்துக்களில் வந்த பிறழ்வு குறித்து மறுபரிசீலனை செய்வது அலாதியான விஷயம்.அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியது இலக்கிய உலகில் கவனம் பெறத்தக்கது. ஒரு முழு இரவு நானும் தோழன் மாதுவும் இந்தப் பிரச்சினை குறித்து தொலை பேசியில் ஆதவனிடமும், தமிழ்நதியிடமும் பேசியதையும் நேர்மையாக நினைவு கூர்ந்தார். கீழ்நிலை மக்களுக்காக எழுதுபவன் பெண்கள் குறித்த ஆணாதிக்க அடிப்படை வாதச் சொல்லாடல்களை எழுதக்கூடாது என்று சொன்ன எங்கள் இருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதள்குள் அது தேசம் நெட்டில் பிரசுரமாகிவிட்டது. அந்த வெப்பத்தில் கண்டு கொள்ளப்படாதது என்னுடைய மற்றும் தோழன் மாதவராஜின் குறுக்கீடு. அந்த விவாதம் வேறு திசை நோக்கிப் பயணமான போது நான் வெளியிட்ட பதிவு மிகத் துச்சமாக ஒதுக்கப்பட்டது. காரணம் இங்கே எல்லாம் பிரபலத்தின் மூலமே கணக்கிடப்படுகிறது.


ஆம் தோழர் தமிழ்நதி எனக்கெழுதிய பதில் பதிவில் ஒரு காமராஜ் சொல்லுவதற்கும், ஒரு ரஜினி சொல்லுவதற்கும் அளவுகோல் மாறுபடும் என்கிற கருத்தில் தனது தர்க்கத்தை வைத்தார். தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை. இருக்கிறது என்று எவரேனும் வாதிட வந்தால் எழுதுவதை நிறுத்திவிட்டு வாருங்கள் . அது தான் உங்கள் வாதத்துக்கு நீங்களாவது உண்மயாய் இருப்பதாகும். இன்னொன்று சாகும் வரை இது போன்ற விவாதத்துக்கு ரஜினி ( ரஜினி இமேஜ் உள்ள எழுத்தாளர்களும்) வரமாட்டார் என்பது தான் கசக்கும் நிஜம். அதுதான் க்ராப்ட்மென்ஷிப், அல்லது தக்கவைத்தல். தேசம் நெட்டிலும், கீற்றுவிலும் இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் இடையில் வந்த எனது கட்டுரை ஜாய்சில் ஒதுக்கப்பட்டு விட்டது. காரணம் சண்டையைத் தூண்டிவிடும் எந்த வார்த்தையும் அதில் இல்லை என்பதுதான். அது தான் இன்றைய பெரிய்ய பிரச்சினை. எழுத்து என்பது வெறும் WWF மட்டுமல்ல என்கிற எனது வெள்ளந்திக் கருத்து போய்யாகிப் போகலாம். எழுத்து பொய்யாகிப் போவதில்லை.


அரங்கத்தின் குளிரும் அமைப்பும் மேடைப் பேச்சாளர்களின் பேச்சைப் போலவே ஒட்டாமல் இருந்தது. உயிர் எழுத்து ஆசிரிய சுதிர் செந்தில் சொன்னது போலவே பார்வையாளர் பகுதி இறுக்கமாகவே இருந்தது. பார்வையாளர் பகுதியிலிருந்து அதாவது வாசகர் பகுதியிலிருந்து கேள்விகள் விவாதங்கள் வருமென எதிர்பார்த்த எனது ஆவல் திடுமெனக்கழிந்தது. இதுகாறும் வெளியில், புதுவிசைகுறித்த பல ஹேஸ்யங்கள், கேள்விகள், நெருடல்கள் போன்றவற்றை முன்வைத்த பெரும்பாலான வாசகர்கள் வந்திருந்த போதும் கூட அரங்கில் கேள்விகள் வரவில்லை. மேடைப்பேச்சின் கூறுகள் அறியாத நானும், பெரியசாமியும் மைக்கைத் தொட்டுவிட்டு திரும்பி ஓடிவந்து விட்டோம். எதிர்பார்த்த அளவு தனது பங்களிப்பைச் செலுத்தமுடியாமல் தோழர் பிரளயனும் பார்வையாளர்களும் திரும்பிப்போக நேர்ந்தது, நிகழ்வின் முடிவில்

8 comments:

மண்குதிரை said...

aathavn enakku pitiththa sirukathai ezhuththaalar

nalla visiyamthaan thaan sir.

appuram, enakkum ungkal uurthaan sir.

சுகுணாதிவாகர் said...

மேடையில் பேசியதில் வ.கீதாவின் உரையும் ரவீந்திரனின் உரையும் நன்றாகத்தான் இருந்தது. ஆதவன் தீட்சண்யா கேட்ட மன்னிப்பு, அவரது அரசியல் நேர்மையின் அடையாளம். ஆனால் அதே விவாதத்தில் தமிழ்நதியின் பதிவில் வந்த பின்னூட்டங்களில் தலித் மக்கள் இழிவுபடுத்தப்பட்டது குறித்த கேள்வியையும் ஆதவன் அதே மேடையில் எழுப்பியிருந்தார். அதற்கான பதிலைத்தான் யார் சொல்வார்கள் என்று தெரியவில்லை.

க.பாலாசி said...

அனுபவப் பகிர்வுக்கு நன்றி அன்பரே...

மாதவராஜ் said...

தோழனே!

மிக வெளிப்படையான கருத்துக்களைக் கொண்ட பதிவு இது. பலர் மௌனமாகவே இந்த பதிவைக் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

உங்களின் கோபம் அழகாய் இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் எனக்கு இல்லை. எழுத்தில் இவ்வளவு தீவிரமாக இயங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கோபத்திற்கான காரணங்கள்...
புதுவிசையின் இலக்கிய முகம் பற்றிய கேள்விகள்,
உங்களின் குறுக்கீட்டை கண்டு கொள்ளாமல் போனது
உங்கள் பதிவைப் பற்றிய சிலாகிப்பு இல்லாதது
பிரபலமானவர்களின் ஒளியில் மற்ற படைப்பாளிகள் மங்கிப் போவது
பேச்சு சுகம், கேட்பாளர்கள் இல்லாதது
மேற்கூறிய எல்லாமே உங்கள் கோபத்திற்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் ஒன்று நிச்சயம், உங்கள் கோபம் அழகாய் இருக்கிறது.

அன்புடன்,
ராகவன்

சந்தனமுல்லை said...

:(

பகிர்வுக்கு நன்றி!

Karthikeyan G said...

Sir, ஆதவன் மீது என்றுமே பெரும் மதிப்பு
உள்ளது.


Thanks for the post..

காமராஜ் said...

முதன் முதலில் எனது வலைப்பக்கத்துக்கு வந்த சுகுனாதிவாகருக்கும், பதிவுக்கு வந்த, பின்னூட்டமிட்ட அணைவருக்கும்
எனது நன்றி தோழர்களே.