21.3.11

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்.


வழகத்துக்கு முன்னாலேயே முழித்துக்கொண்டு ஊர் ஒத்தையடிப்பாதைவழியே பஞ்சாயத்துப்பள்ளிகளை
நோக்கி பயணப்படும். நடக்கமுடியாதவர்கள், வயோதிககர்கள், பிள்ளைத்தாச்சிப் பெண்கள் எல்லாம்
மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்படுவார்கள். நீண்டவரிசையில் பாட்டும் கூத்துமாக
நகர்ந்துபோய் ஆட்காட்டி விரலில் மை தடவிக்கொண்டு திரும்ப வருவார்கள்.  ஏதாவது வேப்ப மர
நிழலில் மொய் எழுதுகிற தங்கிலியான் உட்கார்ந்து ரெண்டு கருத்த வெத்திலையும் ஒரு கொட்டப்பாக்கும்
கொடுத்துக்கொண்டிருப்பார். கூட ரெண்டு குடுத்தா ஙொப்பன் வீட்டுச்சொத்தா போயிரும் என்று கேட்கிற
மதனிமார்களுக்குச் சொல்ல, ''வீட்டுக்கு வா கூட ரெண்டு போனி கூலு கரைச்சித்தாரன், அதுவுமில்லைன்னா
குருன வாங்கிப்பொங்கி கருவாட்டுத் தண்ணி வச்சித்தாரன், இது ஊர்த்துட்டுல வாங்குன வெத்தில,
பங்காளத்தபடிதான்''  யோக்கியமான பதிலும் அவரிடம் இருக்கும். ஓட்டுப்போடுவதைப் பார்க்கவென்றே
சின்னப்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும். ஜனநாயகத்தின் பெரும் திருவிழாவாக கள்ளங்கபடமற்ற
தேர்தல் கடந்துபோன காலங்கள் அது.


முடியாட்சியும் ஆங்கில ஆட்சியும் தாண்டியொரு மக்களாட்சியை ருசிக்கத்தொடங்கிய காலம் அது. கிட்டத்தட்ட
எண்பதுகள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இருபது வருசத்தில் எல்லாம் வேகமாய் மாரிக்கொண்டு
வருகிறது. இப்போது எல்லாக் கிராமங்களிலுமே காலைப் பேருந்துக்கு ஒரு கூட்டம் கிளம்புகிறது. தாலுகா
ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் இப்படி மக்கள் வந்து
போகும் இடங்களுக்கு  அவர்கள் பிரிந்து போய் காத்திருப்பார்கள். பிரச்சினைகளை உண்டாக்க, பெரியதாக்க,
பிரச்ச்சினைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ண, கடைசியாய் ராசி பண்ணிவிட்டு மதியம் சீமைச்சாராயமும்,
பிரியாணியும்  இரவு கடைசி வண்டிக்கு வீடு திரும்பும் போது ஒரு நூறு ரூபாயாவது பையில் இருக்கும்.


பருத்தியும் மிளகாயும் விளைந்த நிலங்களில் வேலிக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்க, எங்கள்
உழைப்பாளர்கள் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்து கௌரவப் பிச்சைக்காரர்களாக உருமாறுகிறார்கள். நகரத்து வீதிகளில்
பிரியாணி வாடை மணக்கிற முகங்கள் தேடி அலைகிறார்கள். ஏற்கனவே நாறிக்கிடக்கிற பல அலுவலகங்கள்
இன்னும் அதிகாமாக சுத்தம் செய்ய முடியாத படி நாறடிக்கப்படுகிறது. ஒரு நாள் பொழுது கழிவதற்காக
விலை மதிக்க முடியாத நாணயமும் நேர்மையும்  விலைபோகிறது. கைநாட்டுக்காரர்களும், நகரம்
பரிச்சயமில்லாத அப்பாவிகளும் இவர்களை நம்பி குறுக்குப்பாதையில் பயணமாகிறார்கள்.

1975 ஆம் ஆண்டு சாத்தூரில் அழகுத்தேவர் என்கிற எம் எல் ஏ ஒருவர் இருந்தார், அவரிடம் கையெழுத்து
வாங்கி மாணவர் விடுதியில் சேர எனக்கு எட்டு கிலோ மீட்டர் நடக்கிற நேரம் மட்டுமே செலவானது.
தம்பி எந்த ஊரு, என்ன படிக்கிறெ, நல்லாப்படிக்கனும் என அறிவுரை சொல்லிக்கொண்டே
”அமுக்குத்தேவர்” என்று கையெழுத்துப்போட்டு விட்டு கீழே வைத்த வேப்பங்குச்சியை எடுத்து திரும்பவும்
பல்விலக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தானின் முகம் எதோ கனவில் வருகிற மாதிரித்தான் நிழலாடுகிறது.
அவர் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் இப்போது யாரோ தீப்பெட்டி ஆபீஸ் போர் மேன் வாடகைக்கு
குடியிருக்கிறார்.

தன்னைத்தேடி வருகிறவர்களை காக்கவைப்பதுவும் அழைக்கழிப்பதுமே ராஜதந்திரமாகிப்
போன காலமாகிவிட்டது இப்போது. லஞ்சப்பணத்தில் பங்களாக் கட்டியவன் பிளைக்கத் தெரிந்தவனாகிறான்.
நேர்மையான அரசு அதிகாரி முசுடு, மனிதரண்டாதவன் எனப் பட்டம் வாங்கி மதிப்பிழந்துபோகிறான். அந்த
கருத்துருவாக்கம் நகரம் தாண்டிப் பயணமாகி பான்பராக் பொட்டலம்போல், அழுகுனி சீரியல் போல்
கடைகோடிக் கிராமத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் இப்போது ஒவ்வொரு கிராமத்திலும்
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், கொள்ளை நடக்கிறது. ஐந்து வருசம் தங்களைச்சுரண்டித்திங்க
தலைக்கு இருநூறு முன்னூறு என்று சுய அடமானம் அரங்கேறுகிறது.

ஒரு துக்க விட்டுக்குப்போவதற்கு இரவு பணிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்கு ப்போக வேண்டிய
நிர்ப்பந்தம் வந்தது நான்கு கிராமங்கள்  தாண்டிப்போகவேண்டும் ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பத்துப்பேர்
உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற வாகனங்களை மறித்துக்கொண்டிருந்தார்கள். சாதிக்கலவரம் ஏதும் நடந்து
விட்டதோ என்னும் பயத்தோடு கடந்துபோன என்னயும் வழிமறித்து எந்தக்கட்சி என்று விசாரித்தார்கள் ஒரு
வேளை கட்சிக்கலவரமாக இருக்குமோ என்னும் சந்தேகம் வந்தது. கிராமங்களில் கட்சி மற்றும் மதக்கலவரங்கள்
வருவதற்கு சாத்தியமே இல்லை.

கிராமங்கள் அழிந்து வருவதற்கு சமச்சீரற்ற நடைமுறையும், அதன் ஆதிக்காரணியான சாதியும் தான் முக்கிய
காரணம். அதை அழிக்க எந்த விஞ்ஞானியாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அங்கு
என்ன ஜீவாதாரப் பிரச்சினை குறித்துமுரண்பாடு வந்தாலும் அது சாதிக் கலவரமாகத்தான் மாறும், அது
வேறு பிரச்சினை. எனது ஊருக்கு முந்திய ஊரில் என்னை இடை மறித்தார்கள் பக்கத்து ஊர் என்பதால்
தைரியமாக நின்றேன் என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் குசலம் விசாரித்து  விட்டு போகச்
சொன்னார்கள். என்ன என்று கேட்டேன் "" தேர்தல் செலவுக்கு பணம் தர ஆள் வரும் அதான் நிக்கோம்,
பையப்பதனாமா போங்க"" என்று என்னை அனுப்புவதிலே குறியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும்
வெவ்வேறு கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்லிப்புகள் இருந்தன.

வீட்டுக்குப் போனதும் என எனது அம்மா முழித்துக்கொண்டு ’என்னய்யா துட்டிக்கு வாரவன் கண்ணு வெளிச்சத்திலே வரலாமில்ல இந்த ராவுல ஒத்தியில வண்டியில ஏ வரணும்’ என்று விசனப்பட்டார்கள். தந்தையாரைக் காணவில்லை
காரணம் கேட்டேன். ’கச்சிக்காரங்க வருவாங்கண்ணு ஊரே போய் ரோட்டுல நிக்கி ஙொய்யாவும் அங்கன போய் கெடக்காரு’
ஒன்று விளங்கவே இல்லை  எல்லா கட்சியில் அட்டைகளையும் வைத்திருப்பது ஏன் என்று கேட்டேன். வருகிற கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஊரின் மொத்த ஓட்டும் என்று சொல்லி பணம் வாங்கத்தான் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

யார் யாரை எமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை.

(மீள் பதிவு)

8 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

vasan said...

அர‌சிய‌ல்வாதிக‌ளே, நீங்க‌ள் எவ்வ‌ளவேணும் கெட்டுத் தொலைங்க‌. ஆனால் எங்க‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ளையும் இப்ப‌டி கெடுத்துத் தொலைச்சிட்டிங்க‌லே? பாவி ம‌க்கா, இந்த‌ப் ப‌லி பாவ‌த்துக்கு, நீங்க‌ என்ன‌ நிலைக்குப் போவிங்க‌ளோ!!

சேக்காளி said...

இது எல்லாமே சுகங்களை தேடித்தானே.எல்லோரையும் அடித்து தின்ற பிறகும் பசியும், தாகமும் உண்டாகத்தானே செய்யும்.அன்றைக்கு அந்த கடைசி சுகவாசி அவன் வேலையை அவனே செய்யும் நிலை வருமல்லவா?.அந்நாளை நோக்கித்தான் இந்த வேக உலகம் செல்கிறதோ?

kashyapan said...

யாரை யார் ஏமாற்றகிறார்கள்? அருமையான பதிவு. ஆனாலும் நீலமை கட்டு மீறி விட்டதே! காமராஜ்! ---காஸ்யபன்

அன்புடன் அருணா said...

நிறைய இடங்களில் நிலமை இதுதான்!

லெமூரியன்... said...

வணக்கம் அண்ணா...!
நலமறிய ஆவல்..!
வழக்கமான உங்களின் நடை..!
ஆனால் பதிவு கொஞ்சம் நீளம் அதிகரித்துவிட்டது போல தோணுது

ஜோதிஜி said...

இதைப்பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கின்றேன் காமராஜ். நிறைய அதிர்ச்சி.

ஓலை said...

அருமையான பதிவு நண்பரே!