27.11.11

நாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.

வலைநண்பர்கள் 
அணைவருக்கும் 
நன்றி. 
இது 500 வது பதிவு.


மேகம் கருத்து ஊதக்காத்து வீசியதும் தட்டான்கள் தாளப்பறக்கும். நெய்க் குருவிகள் எங்கிருந்தோ கிளம்பிவந்து ஊர்களுக்குள் குதியாளம் போடும். மாரிக்கிழவன் புருவத்துக்குமேலே கைவைத்து சலாம் போடுகிற பாவனையில் அண்ணாந்துபார்த்து ’ தெக்க எறக்கமா இருக்கு ஓடப்பட்டி காட்டுல ஊத்து, ஊத்துனு ஊத்துது’ என்று புளகாங் கிதப்படுவான்.உடனே கலப்பையில் பிஞ்சு கிடக்கும் கைப்பிடியை சரிசெய்ய அல்லிராஜ் ஆசாரியிடம் ஓடுவான். முத்திருளாயிச் சித்தி அண்டாவைத் தூக்கிவந்து ஊர்மடத்து மொட்டை மாடியின் குழாய்க்கு நேராக வரிசை போடுவாள். அஞ்சப்பெரியன் ஓடிப்போய் காட்டில் கட்டிப் போட்டிருக்கும் எருமையை இழுத்துக் கொண்டுவந்து ஆள் புழங்காத ஓட்டைவீட்டில் கட்டிப் போடுவான். எப்படியும் ஓடப்பட்டியில் பெய்யும் மழை ஊருக்கு வந்துவிடும் என்கிற சந்தோசத்தில் ஊர்பரபரக்கும்.  இப்படித்தான் அந்த முண்டாசுக்கவிஞனும் ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியென்று  புளகாங்கிதப் பட்டிருப்பானோ?.

கொடியில் காயும் ஒற்றை மாற்று பழுப்புநிற வேட்டியை எடுத்து மடித்து பத்திரப்படுத்தும் சூரிக்கிழவனுக்கு கூரை முகட்டைப் பார்த்து பார்த்து கலக்கம் வரும். மச்சினன் வீட்டில் போய் ரெண்டு சருகத்தாள் ஊரியாச்சாக்கு கடன் கேட்பான்.எதோ ரெண்டேக்கர் கம்மாக்கரை பம்புசெட்டை எழுதிக்கொடுக்கிற மாதிரி நெடுநேரம் யோசிப்பான் மச்சினன் யோசியப்பு. பொண்டாட்டிக்காரி எடுத்துக்கொடுத்த பிறகு தருமப்பிரபு பட்டத்தை தானாகப் புடுங்கிப் போர்த்திக் கொள்வான்.அதில் அவனுக்கொன்றும் லாஞ்சனையில்லை. தாயாருந்தாலும் பிள்ளையாயிருந்தாலும் வாயி வகுறு வேற வேற என்பதே அவனது தாரகமந்திரம். தனக்குப்போகத்தான் தானம் என்கிற சொல்லில்  மறைந் திருக்கும்  நமுட்டுச்சிரிப்புத்தான். ஆனாலும் ஊர்- சமூகம் என்பது பகிர்தலின் ஆதிப்பொதுவிலிருந்தே ஒன்றுசேர்கிறது. அரைக்கிலோ கறியெடுத்துவந்து வதக்கி ஒத்தையாளா திண்ணு ஏப்பம் விடும் ஆசாமிகள் ’எலும்புக் கொழம்பில் தான் சத்து இருக்கு’ என்கிற மாதிரி எப்போதுமே ஒரு மந்திரச்சொல்  வைத்திருப் பார்கள். அல்லது சம்பாதிக்கிற எனக்கே அதை செலவழிக்கிற தகுதியும் திறமையும் இருக்கிறதென்கிற இருமாப்புத் தத்துவம் எழுதிவைத்துக் கொள்வான். அது வெள்ளந்தி தெருக்களில் குறைவாகவும் சமத்தர்களின் பகுதியில் அதிகமாகவும் விளைந்துகிடக்கும்.

கொட்டாரத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கும் சாம்பக்கோழிக்கும் தெரிந்து போகும் இன்னும் கொஞ்சநேரத்தில் மழைவந்துவிடுமென்று. கொக்கொக் என்று குஞ்சுகளைக்கூப்பிட்டுக்கொண்டு தாழ்வாரங்கள் தேடிப்போகும். கூடடையும் கோழிக்குஞ்சுகளைப் பார்த்ததும் முத்தரசி மதினிக்கு மகன் ஞாபகம் வந்து  வீடு வீடாய்த் தேடுவாள். ’நடக்கத் தெரிஞ்சுக்கிட்டு இந்த கருவாப்பய ஒருநிமிஷம் வீடுதங்க மாட்டிக்கானே அவங்க அப்பனமாதிரி’ என்று முனுமுனுத்துக் கொண்டுபோய் தீப்பெட்டிக் கட்டு ஒட்டும் சரோஜாச்சித்தி  வீட்டி லிருந்து  கருவாப்பயமகனே என்று கன்னத்தைக் கடித்துக்கொண்டே  தூக்கிக்கொண்டு வருவாள். சின்னம்மாப் பாட்டி வெளியில் வந்து ’எலே ஏ வேலவரு எங்கே போய்த்தொலஞ்சான் இந்த மூத்த பய’ என்று மகனைத்தேடுவாள். அவள் கூப்பிட்ட சத்தம் தொடர் சத்தங்களால் ஓட்டைமடத்தில் உட்கார்ந்து  திருட்டுத் தனமாய் சிகரெட் குடிக்கிற வேலவருக்கு வந்துசேரும். உருப்பிடியா ஒரு சீரெட்டுக்குடிக்க  விட மாட்டாகளே என்று ராக்கெட் விடுவதை தடுத்தமாதிரி சலித்துக்கொண்டு கிளம்புவான். ’எய்யே எங்கய்யா போன மழ இருளோ மருளோன்னு வருது. களத்துல மொளகாப் பழங் காயுது. மாட்டுக்கு கூளம் உருவிப்போடனும் நீபாட்டுக்குல போயி ஓட்ட மடத்துல ஒங்காந்தா எப்புடி’ என்று  கெஞ்சுவாள். பின்னாடி வந்த  பவுலைப்  பார்த்துக் கொண்டே அந்த ஓட்ட மடத்துல  என்னாதான் இருக்கோ என்று புலம்புவாள்.

'ஏ.... வெளங்காதவனே  ஙொப்பஞ் சீரழிஞ்சது போதாதா நீயுமா இப்பிடி படிக்கிற காலத்துல  பீடிசீரெட்டுக்குடிச்சுக் கிட்டு அலைவ இந்தா இந்தக்கோணிச்சாக்க கொண்டு போ, புதுருக்கு கடக்கிபோன மனுசன் மழையில நனைஞ்சிட்டு வருவான் கொண்டு போய்க்குடு’ என்பாள் பவுலின் அம்மா குந்தாணிப்பாட்டி. கொட்டாரத்தில் வெட்டிப்போட்ட விறகுகளைக் கட்டித் தூக்கிவந்து மழை படாத இடம் பார்த்து திண்ணையில் அடுக்கி வைப்பார் கொண்டச்சுந்தரப்ப மாமன். இத்தினிக்கானு வீட்ல ஆளுகளுக்கு கால்நீட்ட எடமில்ல வெறகக்கொண்டுவந்து அடுக்குறதப்பரு கிறுக்குப்பிடிச்ச ஆளு என்று கிண்டல் பண்ணும் சீதேவி அத்தையை அடிக்க ஓங்கிக்கொண்டே ’அங்க பாரு அடச்சுக்கிட்டு வருது சாய்ங்கால மழ, லேசுக்குள்ள விடாது, வெறகுநனஞ்சு போனா கால நீட்டியா அடுப்பெறிப்ப அறிவுகெட்ட சிறுக்கி’ என்று கடிந்துகொள்வான்.

மழைக்காலம் தொடங்கி விட்டது.இனித் தெருக்களில் கால் நீட்டிப்படுக்க முடியாது.தெருவிளக்கில் உட்கார்ந்து சீட்டு விளையாட்டு நடக்காது. நிலவொளியில் சின்னஞ்சிறுசுகள் கண்டொழிப்பான்  விளையாடாதுகள். வழக்கத்துக்கு முன்னாடியே ஊரடங்கிப் போகும். தீப்பெட்டி யாபீசுகளில் வேலை நின்றுபோகும். மூனுமாசத்துக்கு கையில துட்டு இருக்காது. காலையில் சூடாகக் காப்பிகுடிக்க பாயாசக்கரண்ணனிடம் கடன் சொல்லி வசவுவாங்க வேண்டும். சிலுவாடு சேர்த்துவைத்த காசுகள் வெளியேறி கடைக்குபோகும்.முத்துமாரி மதினி இருக்கங்குடிக்கு முடிஞ்சுவச்ச காணிக்கைத் துட்டை எடுத்து கருவாடு மொளகா வாங்கிக்கொள்வாள். மஞ்சள் துணியிடம்  மன்னிப்புக் கேட்டால் கூட மனதிறங்கி மாரியாத்தா சும்மா வுட்டுருவா.சனங்கள் தீப்பெட்டியாபீசிலிருந்து கிளம்பி வயக்காட்டு வேலைகளுக்கு மாறிக் கொள்ளும். இனிக்கூலியாக தானிய தவசங்கள்தான் கிடைக்கும்  அதைசாப்பாடாக தயார் பண்ண சாயங்கால நேரங்களில் பூமி அதிர அதிர உரல்கள் இடிபடும்.

கனகமணிஅத்தையும் ஞானசுந்தரிச்சித்தியும் காலக்கம்மம்புல்லை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில்  ரெண்டு பேர் ஜோடிபோட்டு உரலிடிப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ஒரு அடி விட்டமுள்ள உரல்வாயில் மேல் செருகியிருக்கிற உரப்பட்டியிலும் படாமல் ஒரு உலக்கையை இன்னொன்று உரசி விடாமல் நெஞ்சாங் குழியிலிருந்து ஹ்ர்ர்ம் ஹ்ர்ர்ம் என்று உருமல்குரல் கொடுத்துக்கொண்டு நடக்கிற ஒரு விளையாட்டுப் போட்டி போலத்தெரியும். நேரம் ஆக ஆக வேகமெடுக்கிற உலக்கைகளின் குத்து அந்த பிரதேசத்தயே அதிரச்செய்யும். சற்று நிறுத்தி முகம் முழுக்க ஓடித்திரியும் வியர்வையை சேலைத்தலைப்பை எடுத்து அழுத்தித் துடைத்துக்கொள்ளும் ஞானசுந்தரிச் சித்தியின் முகத்தில் ஆயிரமாயிரம் தேவதைகள் குடியிருப் பார்கள். உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி இரண்டு கையையும் உரசி ஈரப்படுத்திக்கொண்டு கனமணி அத்தை கேட்கும் ’என்னவிள அவ்வளவுதானா ஓ எசக்கு’ என்றதும் உலக்கையை எடுத்து உயர்த்துவாள். ஏ இருடி இருடி என்று சொல்லிக்கொண்டே குண்டாலச் செம்பெடுத்து கம்பரிசியில் கொஞ்சம் தண்ணீர் ஊத்திவிட்டு தனது தொண்டைக்குழியில் கொஞ்சம் ஊற்றிக்கொள்வாள் கனமணி அத்தை.

இந்த ஞாயித்துக்கெழம கம்மாய்க்கு குளிக்கப்போகனும்டி,நீச்சடிச்சு குழிச்சு எம்பூட்டு நாளாச்சு என்பாள். அந்த எம்பூட்டு என்கிற கால அளவின் ஊடே மாரிமுத்துவின் உருவம் வந்துபோகும்.பதினாலு வயசிருக்கும் தண்ணிக்குள்ள தொட்டுப்பிடிச்சி விளையாண்டார்கள்.அப்போதெல்லாம் கனகமணியை யாராலும் நீச்சலில் பின்தொடர முடியாது. அதே போல மாரிமுத்து இந்தக்கரையில் முங்கி அந்தக்கரையில்  எந்திரிப்பான். இரண்டு நீச்சல் எதிரிகளை அந்த சித்திரை மாசத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் போட்டிக்கு அழைத்தது. என்னத்தொட்டுரு ஒனக்கு உள்ளாங்கையில சோறுபொங்கி ப்பொட்றேன் என்றாள். அது பழமொழி.உள்ளபடி கனகமணிக்கு வெண்ணி வைக்கக்கூடத்தெரியாது.கூட வந்ததெல்லாம் நண்டும் நசுக்கும்.கரையில் உட்கார்ந்திருந்து துணிகளுக்கு காவலிருந்த ஏஞ்சல்தான் ரெப்ரீ.

பொம்பளப் பிள்ளதானே என்று நினைத்து பின்தொடர்ந்த மாரிமுத்து திணறிப்போனான்.குளிக்கிற படித்துறை யிலிருந்து நேராகப்போனால் அக்கறைவந்துவிடும்.பக்கவாட்டில் போனால் கண்மாய் வளைகிற இடத்தில் நாணல் புதர்களும் வேலிச்செடிகளும் இருக்கும் அதைக்கடந்து போனால் படித்துறையின் பார்வையில் இருந்து மறைந்து போய்விடலாம்.விரட்டிப்போன மாரிமுத்து மிக அருகில் மடேரென்று எழுந்தாள். பதறிப்போன மாரிமுத்து சுதாரிப்பதற்குள் மறுபடி முங்கி காணாமல் போனாள்.ரெண்டு நிமிசம் கழித்து தூரத்தில் மாரிமுத்து மாரிமுத்து என்கிற சத்தம் கேட்டது.வேகமாகப்போனான் கால்ல எதோ சுத்தி இருக்கு சாரப்பாம்பா பாரு என்றாள் முங்கி அவள் காலைப்பிடித்தான் அது எதோ செடியின் தண்டு.அங்கிருந்து ஒரு மேடான பகுதிக்குப் போனார்கள். அந்தப் புதரில் தொங்கிய தூக்கணாங் குருவிகள்,. நாணல் பூக்கள், நாணலுக்குள் சலப் சலப் என்று விளையாடும் குறவை மீன்கள் எல்லாம் ரம்மியமானதாகத்தெரிந்தது அவற்றோடு மாரிமுத்துவும். ஏபிள்ள இதென்ன உதட்டுக்கீழ என்று கம்மாய்த் தண்ணீரின் சிகப்பு படிந்திருந்த நாடியைத் தடவினான். சூடாக இருந்தது.ஏவின நா ஒனக்கு நா சித்திமொற என்றாள்.’சீரெங்கபுரத்து சமியாடிபொன்னையச்சின்னையன் ஒனக்கென்ன மொற’ ’அது எங்கம்மா கூடப்பிறந்த மாமா’.’எனக்குச்சித்தப்பா, இப்பச்சொல்லு’ என்றான்.’இங்கரு தொட்ட நீதாங்கட்டிக் கிறனும்’. இதமொதல்லயே சொல்லவேண்டியதுதான என்று தண்ணீரோடு நெருங்கினான்.

அவன் கண்களில் இருந்து பீச்சியடிக்கிற காந்தத்தில் உடல் முழுக்க சூடு பரவியது. வீட்டில் யாரும் வாய் வச்சு தண்ணீர் குடித்தால் அந்த டம்ளரில் அதுக்கப்புறம் தண்ணீர் குடிக்காத சுத்தக்காரிக்கு.தனக்கெனக் கோரம்பாய், தட்டு,சீப்பு என தனித்து பதவிசு பார்க்கும் மேட்டிமைக்காரிக்கு மாரிமுத்துவின் எச்சில் ருசித்தது.சித்திரைக் கண்மாய் வெளியே வெதுவெதுவெனவும் உள்ளே குளு குளுவெனவும் ரெண்டு குணங்களில் கிடக்கும்.எச்சில் பட்ட ஒரு அரைமணிநேரம் கழிந்து போனது. திரும்பி வரும்போது இவர்களிடம் இருந்த இயல்பு தொலைந்து போயிருந்தது. எஞ்சல் மட்டும் இருந்தாள் ரெண்டுபேர் கண்ணையும் உற்றுப்பார்த்தாள். போய்ட்டு வரட்டா சித்தி தொட்டுட்டேன் நீ பந்தயத்துல தோத்துட்ட என்றபடியே சைக்கிளை எடுத்து விருட்டென்று மறைந்து போனான்.

அதற்க்கப்புறமான நாட்களெல்லாமே ஞாயிற்றுக்கிழமையை குறிவைத்தே கழிந்தது.ஒருவாரம் அவன் ஊரில் இல்லை. அடுத்த வாரம் ஒரே பெரிய பொம்பளைகள் கூட்டம். ஏ ஆம்பளப்பயக தனியாப்போங்கடா என்று அதட்டி விரட்டி விட்டாள் பன்னீரக்கா. ஒரு வெள்ளிகிழமை தீப்பெட்டி ஆபீஸ் சோதனை என்று சொல்லி பிள்ளைகளை விரட்டி விட்டிருந்தார்கள் நேரே கண்மாய்க்குத்தான் ஓடிவந்தாள். நெடுநேரம் மாரிமுத்து வரவில்லை தலை துவட்டி  பட்டன் போடும்போது வந்தான். பேசாமல் விடுவிடுவென்று போய் விட்டாள். குளிப்பதா வேண்டாமா என்கிற சிந்தனையிலேயே உட்கார்ந் திருந்தான்.கரையில் கூழாங்கற்களை எடுத்து களுக் களுக் கெனச் சத்தம் வர போட்டுக்கொண்டிருந்தான். ஒரு சாரப்பாம்பு தலை தூக்கியது சிலீரென்றது உடம்பு.அப்புறம் கனகமணியின் நினைவு வந்தது. பின்னாடி இர்ந்து பெரிய கல் விழுந்தது. திரும்பிப்பார்த்தான் கனகமணி நின்றுகொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டான் ஏங்கூடப்பேசாத என்றாள். பின்னர் தண்ணீருக்குள் இறங்கினாள் ஏஞ்சல் மேட்டில்போய் உட்கார்ந்து கொண்டாள். இவன் திரும்பிக்கொண்டான்.மேட்டிலிருந்து ஏ மாரிமுத்து ஒங்காளு கம்மல் தண்ணிக்குள்ள விழுந்துருச்சாம் கொஞ்சம் தேடிக்குடு என்றாள்.  ரெண்டுபேரும் தேடினார்கள். அதற்கப்புறம் ரெண்டுமூனு வாரத்தில் தண்ணீர் காலியாகி முட்டளவுக்கு வற்றிப்போனது.நிறமும் மங்கி குளிப்பதற்கு ஏதுவானதில்லாமல் போனது.மீன்பிடிக்க ஆரம்பித்தார்கள்.

கனகமணியை ரெண்டுவாரம் குச்சலுக்குள் உட்காரவைத்தார்கள். ஜன்னல் வழியே பார்த்து பார்த்து  மாரிமுத்துவைக்காணாமல் துவண்டு போனாள்.சடங்குவைத்தார்கள்.மூன்றே மாதத்தில் எலவந்தூருக்கு  வாக்கப்பட்டுப் போய்விட்டாள்.மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு தாம்பரத்துக்கு கல்லுடைக்கப்போய்விட்டான். நான்கைந்து வருடத்தில் கனகமணி புருசனோடு திரும்ப ஊருக்கே வந்துவிட்டாள்.மாரிமுத்துவும் அக்கா மகளைக்கல்யாணம் முடித்து தாம்பத்திலேயே தங்கிவிட்டான்.

அந்த வழியாக வந்த செல்லமுத்து கம்புகுத்த வரலாமா என்று கேட்டுவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான்.அதில் ரெட்டை அர்த்தமில்லை ஒற்றை அர்த்தம்மட்டுமே என்பதை புரிந்துகொண்ட ஞானசுந்தரிச் சித்தி சும்மா
வாய்ட்ட அளக்கக்கூடாது வந்து எங்கூட ஜோடி போட்டு இடிச்சிட்டு அப்புறம் பேசனும் என்றதும்  பாஞ்சாம் புலியாட நடையை கூட்டிவிடுவான் செல்லமுத்துச் சின்னையன். ஞானசுந்தரிச்சித்தி ஏதோ சொல்ல மொங்கு மொங்கென்று சிரித்து விட்டு சும்மா கெட பிள்ள அது எனக்கு தம்பி மொற என்பாள். அந்த வழியே அழுதுகொண்டு போகிற சின்னத்தாயின் மகனைக் கூப்பிட்டு மூக்கைப்பிடித்து துடைத்துவிட்டு,கையில் ஒருகைப்பிடி கம்பரிசியை உருண்டை பிடித்துக்கொடுப்பாள் கனகமணி அத்தை. அந்த நேரத்தில்  சொட்டு சொட்டாய் இறங்கும் மழையை முந்திக்கொள்ள வேகமாக இடிபடும் உரல்.இடித்த அரிசியை அள்ளி குத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள்.ஒவ்வொருமழையும்,எட்திர்ப்படுகிற
கண்மாய்களும் மாரிமுத்துவையே ஞாபகப்படுத்தியபடி கழிந்தது. இந்தமுறை கட்டாயம் கண்மாய்நிறையும் என்று ஆளாளுக்குச் சொல்லும் போதெல்லாம் நாணல்புதர் செழித்து வளருவதுப்போல் நினைவுகளும் வளரும்.   வீட்டுக்கு வந்தாள் அங்கே புருசன் கண்ணுச்சாமி உட்கார்ந்திருந்தான்.

ஏம்மா இந்த வருசம் ஒரு குண்டு வயக்காட்ட வாரத்துக்கு பிடிச்சி நெல்லுப்போடுவமா  என்றுகேட்டான்.  ஒத்துக் கொண்டாள். நாணல் புதருக்கு எதிர்த்தாப்போல வயக்காடு கிடைத்தது. சங்கிலியைக்கழட்டி அடகுவைத்து நெல் நட்டார்கள். மூணு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி வயக்காட்டுக்குப் போனாள். அந்த மாசிமாசம் மாரிமுத்து தங்கச்சி மகளுக்கு காது குத்துக்கு ஊருக்கு வந்திருந்தான். குளிப்பதற்கு வீட்டுக்காரியைக்  கூட்டிக் கொண்டு கம்மாக்கரைக்குப் போனான். கொண்டுவந்த துணிகளை எடுத்துக்கொண்டு நாணல்புதர் பக்கம் போனார்கள்.அங்கேயே ஒரு கல்லெடுத்துப் போட்டு துவைத்தார்கள். வயக்காட்டைப்பார்க்க வந்த கனகமணிக்கு நாணல்புதர் பக்கம் ஆள்சத்தம் கேட்டது. கம்மாக் கரையேறினாள்.அது மாரிமுத்துவின் சத்தமேதான். நானும் எம்பிரண்டும் போட்டிபோட்டு முங்குநீச்சடிச்சு இங்கவந்துதான் விளையாடுவோம் என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நாணல்புதருக்குள் குறவைமீன்கள் சலப் சலப் என்று சத்தமிட்டுக்கொண்டு ஒன்றையொன்று விரட்டிக்கொண்டலைந்தன.

13.11.11

ஆற்றாது அழுத கண்ணீர்......


தமிழ் மக்களின் மேல் கவிழ்ந்திருக்கும் நீங்காத சாபம்தான் இந்த நிகழ் அரசியலும்,சினிமாவும். ஒரு ஐந்துவருடம் மக்கள் பட்டு அழுந்திய மனக்குமுறலுக்கும் ஆயாசத்துக்கும் திமுகவுக்கு கோட்டைவாசலைத் திறந்துவிட்டது 2006 தேர்தல் . அதை மாற்றம் எனக்கணக்கிலெடுத்துக் கொண்டால் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்குள் நடந்த சண்டைகளைக்கூட மாற்றம் என்று தான் புள்ளி விபரப் படுத்தவேண்டிய கேடுகாலம் வந்துபோனது தமிழகத்தில். யாருக்குமே தெரியாமல் சும்மா மதுரைக்குள் சம்பாதித்துக்கொண்டிருந்த அழகிரி யானைமாலை போட்டதுபோல மத்திய மந்திரி ஆனார்.நானென்ன இளைத்தவனா என்று தயாநிதி அழகிரியும் மத்திய மந்திரி ஆனார். இவர்களிருவரும் மந்திரியாகிறபோது நான் மட்டும் என்ன சூத்தக் கத்திரிக்காவா என்கிற கேள்வியோடு கனிமொழியும் களமிறங்கினார். தமிழக அரசியல் சூடு பிடித்துக் கொண்டது.நீங்கள் இதே சூத்திரத்தை அப்படியே தமிழ்ச் சினிமாவுக்கும் தூக்கிப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரே குடும்பத்தில் இரண்டுபேருக்குமேல் சினிமாத்துறையில் இருந்தால் மட்டுமே ஸ்டார் அந்தஸ்து பெறமுடியும் என்பதை எழுதாத சட்டமாக்கி அரசி யலைப்போல சினிமாவா? சினிமாவைப்பார்த்து அரசியல் கள்ளக் காப்பி அடிக்கிறதா? என்று கண்டு பிடிக்க முடியாமல் செய்து விட்டார்கள். சண்ட,சண்டக்கோழி, கோழிச்சண்ட,சண்டியர்,420,பருத்திவீரன்,வீரமும் ஈரமும் இப்படியான சினிமாக்களாக கொட்டிக்குவித்து இதிலிருந்து ஏதாவது ஒன்றைத்தான் நீ தெரிவுசெய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தியது தமிழ்ச்சினிமா. அதாவது நாற்பத்தேழுவருடமாக திமுக அல்லது அதிமுக மட்டும்தான் கட்சிகள் என்கிற ரெட்டைச்சாளர ஆரசியலை நிலை நிறுத்திவிட்டார்களே அதுபோல.அரசியலென்பது குறைந்தபட்சம் ஒரு டாடா சுமோவாவது
வைத்துக்கொண்டு திமிர்த்தனம் பண்ணுவது,லஞ்சம் வாங்குவது,லஞ்சம் வாங்கிக்கொடுப்பது,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது மக்களை சாதிய ரீதியாக ஒன்று திரட்டுவது என்கிற பண்ணையார்த்தனங்களை ஆராதிக்கிற செயல்களாக மாற்றமானது. அதை அப்படியே கட்டமைக்கிற நடவடிக்கைகளை இந்த இரண்டு குப்பையில் ஊறிய மட்டைகளும் துள்ளியமாக நடத்தியது.

படிப்பறிவில்லாமல் வெறும் சண்டியர்த்தனத்தால் கட்சியேறி பதவிக்குவந்தவர்கள் மட்டுமே இப்படிச்செய்தார்கள் என்கிற நியதியில்லாமல் பெரும் பட்டமும், வக்கீல்கள்,டாக்டர்கள்,பேராசிரியர்கள்  உயர்படிப்பு படித்தவர்களும்  கூட இதே சாக்கடைக்குள் தான் விழுந்து புரண்டார்கள். ’ஏற்றதொரு கருத்தைச்சொல்வேன் எவர் வரினும் அஞ்சேன்,நில்லேன்’ என்கிற வரிகளைப் படித்துப் புல்லரித்தவர்கள் திமுக, அதிமுக அரியணைகளுக்குள் சிக்கிச்
செல்லரித்துப் போனார்கள். நான் கோட்டைக்குள் மட்டுமல்ல தமிழகத்தில் செருப்பே அணிவதில்லை ஏனென்றால் அம்மா ஆளும் தமிழகம் எனது கோவில்’ என்கிற உலகப் புரட்சிகரமான,திராவிடத்தனமான கருத்தை ஒரு சட்ட வல்லுநரான அமைச்சர் உதிர்க்கிறார்.அதை இந்தக்களவாணிப்பத்திரிகைகள் பெருமிதத்தோடு செய்தியாக்குகிறது.தமிழகம் படித்துவிட்டு காறித்துப்புவதை மறந்து எதிரும் புதிருமாய் உட்கார்ந்து கொண்டு நீயா நானா வென விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்துமதமெனும் வர்ணாசிரம கொடுங்கோண்மைக்கு எதிர்ப்புத்தெரிவித்து தம்மை வெளியிழுத்துக்கொண்டு
கலகம் செய்து ஆரம்பிக்கப்பட்ட தத்துவங்கள்  அந்நாட்களில் பௌத்தம், சீக்கியம், சூவ்பி, ஜைனம் ,சமணம், அருட்பெரும் ஜோதி,வீரசைவம்,பார்சீ யெனக்கிளம்பியவற்றின் நீட்சியாக தெற்கில் உதித்தது திராவிடம். ஒரு கருஞ்சூரியனின் அலைச்சலும் ஆற்றலும் சிந்தனையும் செயலுமான வெக்கை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அசாத்திய அரசியல் வரலாறு. பெரியாரின் படத்தை உபயோகப்ப்படுத்துவதோடு பெரியாருக்கும் திராவிடக்கட்சிகளுக்குமான பந்தம் நின்றுபோனது. அதனால்தானோ என்னவொ அந்த தீர்க்கதரிசி போங்கடா வெங்காயங்களா நீங்களும் உங்கள் தேர்தலும் என்று மூக்கைப்பொத்திக்கொண்டு ஒதுங்கிப்போய் நின்று கொண்டார். ’கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்பது அறுபதுகளில்
நாடிநரம்புகளை சிலிர்க்கச்செய்யும் வார்த்தைகள்.இது அந்தக்காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கஞ்சிக்கு வழியில்லாமல் பஞ்சத்திலடிபட்ட தமிழர்களை உசுப்பி விட்டது.

ஆனால் அதே வழியில்வந்த இந்த அரசு இதோ 13500 மக்கள் நலப்பணியாளர்களை வயிற்றிலடித்துத் தெருவுக்குள் தள்ளி விட்டிருக்கிறது.ஒரே காரணம் அவர்களெல்லோரும் திமுக ஆட்சிக்காலத்தில் பணியிலமர்த் தப்பட்டவர்கள் என்பது மட்டுமே. இதே போலத்தான் சென்ற முரையும் ஆடுகோழி வெட்டக்கூடாது என்று சட்டம் இயற்றியது இந்த அரசு.ஒரே கையெழுத்தில் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களைத்தெருவுக்கு அனுப்பியது. தெருவுக்கு வந்த குடும்பங்கள் அதைசமாளிக்கமுடியாமல் அழுதுபுலம்பியது.எண்பது தோழர்கள் இறந்து போனார்கள். நூறுக்கும் அதிகமானவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். இறுதியில் தேர்தல் பயத்தினால் மறுபடியும் பணிக்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் இறந்துபோனவர்கள் விட்டுச்சென்ற  குடும்பங்கள். அந்தக் குடும்பங்களின் கண்ணீர் அப்படியே உறைந்து போயிருக்கிறது. மனப்பிறழ்வானவர்களின் வார்த்தைகள் திரும்ப திரும்ப இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தக்கறையே நீங்காமல் திட்டுத்திட்டா இருக்கும்போது இதோ மறுபடியும் மக்கள் நலப்பணியாளர்களை தெருவுக்கு கொண்டுவந்திருக்கிறது அரசு.

வேலையிழந்த பெண்கள் தெருப்புழுதியில் புரண்டு அழுகிற காட்சி மனம் பதற வைக்கிறது. அப்படி அவர்கள் வயிற்றிலடித்து,அவர்கள் கண்ணீரை கோட்ட வைத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த அரசு. தோற்றுப்போன மந்திரிகளையும்,கட்சிக்காரர்களையும் கோர்ட்டுக்கு அலைய வைக்கிற செயல்கள் சரியென்கிற ஒரே  காரணத் துக்காக அவர்களுக்கு ஓட்டுப்போட்ட சனங்களை வயிறெரிய விட்டு விட்டு மின்விசிறிகள் கொடுப்பது
எதற்கு? வெக்கையை இன்னும் விசிறிவிடுவதற்கா?.

எதிர்க்க வழுவற்ற ஏழைகள் அழுதுபுலம்பி ஆற்றாமல் சிந்தும் கண்ணீர் ஆயிரமாயிரம் கூர்மையான வாள்களுக்குச்சமம்

என்று ஜெர்மானியக் கவிஞர் குந்தர்கிராஸ் சொல்லுகிறார்.  


6.11.11

வரலாறு நெடுகிலும் அணைக்கப்பட்ட அறிவொளி தீபங்கள்.......

                                         ( அமெரிக்கப்படை தீயிட்டுக்கொளுத்திய பாக்தாத் நுலகம்)

இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த பௌத்தம் உயிர்ப்பலிகளை எதிர் கொண்டு நிர்மூலமாக்கப்பட்டது.போதிமரம் இருபதுமுறைக்குமேல் வெட்டப்பட்டது.உலகின் முதல் பல்கலைக்கழகமான நலந்தா தரைமட்ட மாக்கப்பட்டது. அதற்குப்பின்னர் அங்கிருந்த அறிவுப்பொக்கிஷங் களான ஓலைச்சுவடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.(கிமு1193)பற்ற வைத்த தீ மூன்று மாதங்களுக்கு மேல் எறிந்துகொண்டிருந்ததாம்.

http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

போலந்து,பல்கேரிய நாடுகளில் நாஜிகள் நூலகங்களைத்தீகிரையாக்கினர்(கிபி 1941-42).

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக நூலகம் எறிக்கப்பட்டது(1981).

ஆப்கனில் தாலிபான்கள் நூலகத்தைத்தீக்கிரையாக்கினார்கள்(1998).

ஈராக் போரில் அமெரிக்கா ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்ததோடு நின்றுபோகாமல் அங்கிருந்த புகழ் மிக்க கலைப் பொக்கிஷங்களைஅழித்து நாசம் பண்ணியது (கிபி2003).

இப்படி வரலாறு நெடுகிலும் அறிவுத்தீபத்தை அணைக்கிற சிந்தனைக்கொலைகள் நிகழ்ந்து வந்திருக்கிறது. அவையாவும் கடைந்தெடுத்த காட்டுமிராண்டிச் செயல்கள் என்றால் சென்னை கோட்டூர்புரத்தில் இருந்து இடம்மாற்ற முடிவு செய்யும் தமிழக யோசனை  மேற் சொன்னவற்றின்  ஹைடெக் வடிவம். நூலகம்  ஆளும் கட்சி,எதிர்க்கட்சி எனும் குடுமிபிடிக்குள் அடங்காத அறிவுப்பெட்டகம்.அதன் மேல் கைவைக்கிற அரசின் செயலைக் கண்டிக்க அறிஞர்கள்,எழுத்தாளர்கள் கலைஞர்கள் மட்டும் போதும் என்கிற எல்லைகள் தவறானது. அதைத் தாண்டி இது ஒரு பொதுப் பிரச்சினை என்பதை பரவலாக்க வேண்டும்.

அண்ணா நூற்றாண்டுவிழா நூலகப்பிரச்சினையில் குரலெழுப்பும் எல்லோருக்கும் செவ்வணக்கம்.

o

by Su Po Agathiyalingam on Wednesday, 02 November 2011 at 17:25

புஷ்யமித்திரன் புத்தநினவுத்தூண்களை இடித்தான். ஹிட்லர் நூலகத்தையும் புத்தகங்களையும் எரித்தான்.சிங்களக் காடையர்கள் யாழ் நூலகத்தை எரித்தனர்.தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தனர்.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் சூறையாடியது.பாபர் மசூதியை சங்பரிவாரங்கள் நொறுக்கின.வரலாறு முடியவில்லை... ஜெயலலிதாவுக்குபகை கருணாநிதிமீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார்..’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார்.இதையெல்லாம் வரலாற்றில் பாசிசம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?ஆனால் வரலாறு பாசிஸ்டுகளைக் குப்பைத்தொட்டியில்தான் வீசியெறிந்துள்ளது? கடைசியாக ஒரு தகவல்:குமரிமுனை திருவள்ளுவர் சிலை பாசிஸ்டுகள் கண்ணை உறுத்துகிறதாம்...தற்போது ஆயுதப்போலீஸ் காவல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாம்.ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம் ( நலந்தா பற்றிய குறிப்பு)
http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

1.11.11

இசைஞானியின் மனைவியின் மறைவுக்கு...


தமிழகத்து வீடுகளில்,தெருக்களில்,சந்தோசத் திருவிழாக்களில், காற்றில், மின்காந்த அலைகளில்,அலைக்கற்றைகளில் கடல்கடந்து வாழும் தமிழர்களின் நினைவுகளில் இரண்டறக் கலந்துகிடக்கிறது இளையராஜாவின் இசை.

மனசை வசீகரிக்கிற இசையைத் தந்த படைப் பாளியோடு வாழ்ந்த அவரது மனைவி திருமதி ஜீவா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.

நடைபாதை மனிதர்களும் அவர்களை வயிறு இழுத்துக்கொண்டுபோகும் வாழ்க்கையும்.


நாள் முழுக்க மழை நசநசவெனப் பெய்துகொண்டே இருந்தது. குடைகளற்ற மனிதர்கள் பெரும்பாலும் பஜாரில் நடமாடவே இல்லை. வழக்கமாக காய்கறி விற்கும் நடைபாதை வியாபாரிகள் ஒரு குடையையும் ஒரு கோணிச் சாக்கையும் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்கள். போன வரம் பெய்த மழை கத்தரிக் காய்களையும் வெண்டைக் காய்களையும் இழுத்துக்கொண்டு தெருவழியே ஊர்கோலம் போனது. போனதுபோக மிச்சமாவது விற்கட்டும் என்று உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு அம்மா, தனது கத்தரிக்காய் குமியில் இருந்து பக்கத்துக் கடைக்கார அம்மாவின் குமிக்கு உருண்டு போனதற்கு ஒருமணிநேரம் சண்டையிட்டார்.

ராமநாதபுரம் எங்கும் மீன்கள் கிடைக்கும் கருவாடு கிடைக்கும் என்பதுதான் எல்லோருக்குமான பொதுப்புத்தி.  ஆனால் பச்சைப்பசேலென குவிந்துகிடக்கிற புத்தம் புது காய்கறிகள் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தையும் உண்டாக்கும். மிகச்சரியாக நான்கரை  மணிக் கெல்லாம் அந்த நியான் விளக்கின் அடியில் நூற்றுக் கணக்கான பெண்கள் வந்து டாடா ஏசியில் இறங்குவார்கள். கூடவே அவர்களின் காய்கறிகளும் இறங்கும்.

பொதுவாகவே இரவு ஒன்பதுமணிக்குள் அடங்கிவிடுகிற ராமநாதபுரம்.பத்துமணிக்கு சாப்பாட்டுவிடுதிகள்,பெட்டிக்கடைகள் ஏன் மருந்துக் கடைகள் கூட அடைத்து விடுகிற ராமநாதபுரத்தில். கோழிகள் கூவாத அந்த மூன்றாம் சாமத்தில் விழித்துக் குழுமிக்கொள்வது வியப்பாக இருக்கும். அதுவும்  பெண்கள் உழைக்கிற, கிராமத்து விவசாயப்பெண்கள் குழுமியிருப்பது எதிர்மறையான ஒன்று. தலையில் கவிழ்ந் திருக்கிற முக்காட்டைச் சரிசெய்துகொண்டே காய்கறி மூடைகளைச் சுமந்து வரும் இஸ்லாமியப்பெண்களும் அதில் இருப்பார்கள். எல்லாம் வயிற்றுக்காக அது எல்லாவிதமான கோடுகளையும்,வரப்புகளையும் இலக்கணங்களையும் உடைத்துக்கொண்டு வெளியேறும்.

சாத்தூருக்கு நிகராக வெள்ளரி விளைவதும் அது ராமநாதபுரத்து பேருந்து நிறுத்தங்களில் கூறுகளாகத்தாகம் தீர்க்க காத்துக்கிடப்பதும் சொல்லியாகவேண்டிய ஒன்று. ஆனால் சாத்தூர் ராமநாதபுர,திருமங்களம்,சென்னை என வித்தியாசமில்லாமல் அதை விற்கிற பெண்களின் கண்களில் அந்த நாளின் கொதிக்கப்போகும் அரிசியின் ஏக்கம் ஒரே மாதிரித்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்துதான் வர்க்கம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மட்டுமே வர்க்கம் தலைதூக்க முடியாதபடி வர்ணக் குழம்பு அமுக்கிவிடுவதுதான் பரிதாபம்.

நீங்கள் தமிழகத்தின் எந்த நகரம் அல்லது பெருநகரங்களுக்குப் போனாலும் அங்கே ஒரு புராதனமான,பிரதானத்தெரு இருக்கும். அங்குதான்
அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடக்கும், நாடகங்கள், கச்சேரிகள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் துவங்கும், அங்குதான் நடைபாதை வியா பாரிகள் வியாபித்திருப்பார்கள், அங்குதான் பெரும்பாலும் இறுதி ஊர்வலம் வந்து நின்று பின் வேகமெடுக்கும்,அங்குதான் ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் வந்து தங்களை ஆசுவாசப் படுத்தியிருக்கும். ஒரு இருபது ஆண்டுகளில் நகரங்களின் முகங்கள் முற்றிலும் மாற்றி யமைக்கப்பட்ட போதிலும் இன்னும் தனது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அங்கே. எதாவது ஒரு ஸ்தூபி, நினை விடம், நடுகல், இல்லை ஒரு கொடி மரம் நின்று கொண்டு தன் மக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

பொதுவீதிகள்,பொட்டல்கள்,விளையாட்டுமைதானங்கள்,பொதுச்சொத்துக்களான,கல்விக்கூடங்கள்,பொதுத்துறைநிறுவணங்கள்,ஏன் நடைபாதைகள்,கோவில்கள்( ஒரு சில) கூட அடித்தட்டு மக்களை அகலக் கைவிரித்து வரவேற்கும் கருணைப்பிரதேசங்கள்.அங்கே அத்துமீறுவபர்கள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை.

ஒரு திரைப்படத்தில் விவேக் தனது அறிவார்ந்த விகடத்தை காவலர்களிடம் சொல்லுவதாக இப்படிச்சொல்லுவார்.
‘டேக் டைவர்சன்,இந்தப்பக்கம் போகக்கூடாது
ஏன் சார்
போராட்டம் நடக்கு,நடைபாதைவியாபாரிகள் போராட்டம் நடத்துறாங்க
நடைபாதையின்னா நடக்குறதுக்குத்தான...ஙே....

என்று சொன்னதும் தமிழகம் தன்னை மறந்து சிரிக்கும்.அதில் நடைபாதை வியாபாரிகளும் கூட சேர்ந்து சிரிப்பார்கள்.
இதே விவேக் வாழ்கிற தேசத்தில்தான் பொதுத்துறைப் பங்குகள் ஊளைமோர் விலைக்கு விற்கப்படுகிறது. நிலஅபகரிப்புகள், நிலஆக்ரமிப்புகள், ஊகபேரவர்த்தகங்கள்,என  நடந்தேறிக்கொண்டிருக்கும் அது குறித்த எந்த எள்ளலும் அவர் சிந்தனைவட்டத்துக்குள் வருவதில்லை.மாறாக ஊனமுற்றவர்கள்,வயதான மூதாட்டிகள்,பாலியல்தொழில்நடத்துவோர், திருநங்கைகள், விளிம்புநிலைமக்கள், சேரித்தமிழர்கள், பிச்சை யெடுப்போர்,குஷ்டரோகிகள் நகரசுத்தித் தோழர்கள் என இவர் விகட எல்லைக்குள் வருகிற ஜனங்கள் எல்லாமே அடித்தட்டுமக்களும் அவர்தம் இயலாமை மற்றும் இல்லாமையும் கேலிப்பொருளாகும்.

கடைசிப் பேருந்தைத் தவறவிட்ட கிராமத்தார்கள்,வந்த இடத்தில் தங்க நாதியில்லாமல் ஏங்கிவரும் பயணிகள் காலையில் வரும் தொடர்வண்டியில் ஏறக்குடும்பத்தோடு வந்து காத்திருக்கும் முபதிவுசெய்யமுடியாத ஏழைகள். இவர்கள் எலோரும் தலைசாய்த்துப்படுக்கிற பேருந்து நிலையங்களும்,ரயில்நிலையங்களும் கருணையோடு கதவு திறந்துவைத்திருக்கின்றன. பின்னிரவுநேரத்தில் மதுரை ரயில் நிலையச் சந்திப்புக்குப் போனால் நடைபாதை தொடங்கி முன்பதிவு இடம் வரையில் கால்மாடு தலைமாடாகப் படுத்திருக்கும் ஜனங்கள் வேறெங்கே போவார்கள். ஏக்கர் கணக்கில் விரிந்துகிடக்கிற தனியார் நிறுவண வாசலிலும் ஐந்துநட்சத்திர விடுதிவாசலிலுமா போய்ய்ப்படுக்க முடியும்?.றயில்வே ஸ்டேசன்கிறது ரயில்ல பயணஞ்செய்யத்தானே.....என்று ஒவ்வொன்றுக்கும் விகடஞ்செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்.

எண்பதுகளின் மத்தியில் ஈழத்தமிழ் போராட்டங்கள் ஊக்கிரமாக இருந்த காலத்தில் கள்ளத்தோணிகளில் கூட்டம் கூட்டமாய்ச்சனங்கள்
ராமேஸ்வரம் தொடங்கி நரிப்பையூர் வரையான கடற்கரையில் வந்து இறங்குவார்கள். அவர்கள் கண்களில் அநாதரவாய் விட்டுவந்த பண்ணைவீடுகளும் தென்னந்தோப்புகளும்,எண்ணெய் ஆலைகளும் முங்கிக்கிடக்கும். சட்டப்படி அவர்களிடம் எந்த அரசும் கடவுச்சீட்டுக் கேட்பதில்லை. நம்பிகைகள் தளர்ந்து புகலிடம் தேடி வரும் மனிதர்களை அரவணைக்கிற முகாம்கள் கருணையினால் ஆனது.
அப்படிக்கருணைமுகங்கள் அரசிடமே இருக்கும் போது கலைஞனிடம் தொலைந்து போவது வேதனையின் உச்சமல்லவா தோழர்களே?

நீங்கள் ராமநாதபுரத்துக்கு வரநேர்ந்தால் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் ஆகிய லேண்ட்மார்க்குகளுக்குகள் தானே உங்களை இழுத்துச் செல்லும். ஆனால் அந்த மூன்றாம் சாமத்து வேளையில் அரண்மனைவாசலில் வந்திறங்கும் காய்கறி லாரிககளும்,மீன்லாரிகளும்
அவைகளின் பின்தொடரும் சில்லறை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளியும்,அவர்களுக்குள் நடக்கும் சில்லறைச்சண்டைகளும் ரம்மியமானது. அவர்களுக்கென திறந்து வைத்திருக்கிற ஆவிபறக்கிற டீக்கடைகளும்,அங்கே அதிகாலையிலேயே சூடு பறப்பிக்கிடக்கும் முட்டைக்கோஸ் உருண்டைப்போண்டாக்களும் இனிப்பானவை.

அங்கிருந்து கொஞ்சம் விலகிப்போனால் மொத்தம் மொத்தமாய் பெண்களும் ஆண்களும் மங்கிய வெளிச்சத்தில் மங்கிய ஊதாச்சேலயும், காக்கிச்சடையும் போட்டுக்கொண்டு எதிர்ப்படுவார்கள்.சொல்லிவைத்தது போல எல்லோர் தோளீலும் ஒரு குத்தாலத்துண்டு மடித்துக் கிடக்கும். ஐந்தரை மணிக்குள் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களுக்கான ஏவலை மேஸ்த்திரியிடம் தெரிந்துகொண்டு துடைப்பங்களோடு கிளம்புவார்கள். தீராத இந்த தேசத்துக் குப்பைகளைக் குறிவைத்தபடி.