| வெப்பம் குடித்து சினந்த மண்ணில் மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள். வருடாந்திரமாகப் புதைந்து கிடந்த பசுமையின் விதைகள் சீரற்ற மரகதப் பளிங்கெனப்பாவும் காடு. எடுத்துக் கொண்ட தானே மீளப்போர்த்தும் குளங்களின் அம்மணம். அங்கிருந்து தவளைகள் நிரப்பும் இசை இரவு. வேலிப்புதருக்கும் வெட்டவெளிக்கும் அலைந்து கதறும் பன்றிக்கூட்டம். வெளுத்த துணியிலிருந்து கிளம்பும் புழுங்கல் சுவாசம். கருத்த மேனியெங்கும் கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை. கடக்கும் நத்தையும் ஓணானும் நாயும் நசுங்கும் நாற்கரச்சாலை. அப்பாடவெனச்சொல்லி ஓய்வெடுக்கும் குளிர்பதனப்பெட்டி. அணைத்திலும் ஊடுறுவித் தகிப்பை விரட்டும் அடைமழை. விரட்டப்பட்ட வெப்பம் தஞ்சம் புகுந்து கொள்ளும் ஒரு கவிதையாய். |
10.11.09
வெப்பம் அடைகாக்கும் வீடு.
9.11.09
சீசேம் வீதி. Sesame Street ( சவளைபாய்ந்து கிடக்கும் குழந்தைகள் இந்தியா)

உலகமெங்கும் வாழுகிற குழந்தைகளுக்கான கொண்டாட்டமாக சீசேம் வீதியின் நாற்பதாம் ஆண்டுக்கொண்டட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சீசெம் வீதி என்றால் என்னவென்று சொல்லு பிறகு கொண்டாட்டத்தைப் பற்றிப்பேசலாம் என்கிற குரல் கேட்கிறது. அது சீசேம் வீதி ஒரு ஆச்சரியம் ஆம் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிதான் சீசேம்வீதி. 1960 ஆம் ஆண்டுக்கு முன்னாள் குழந்தைகளை மையப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்சி ஏதும் இல்லையென்பது அமெரிக்ககளுக்கு பெரும்குறையாக இருந்திருக்கிறது. இந்தியாவில் தொலைக்காட்ட்சி புழக்கத்தில் வந்ததே 1975 ஆம் ஆண்டுதான் என்பது நாம் பெருமையோடு நினைவுகூற வேண்டிய செய்தி. அதுவும் கூட அந்த ராமாயணத்தில் இந்த மஹாபாரதத்தில் வந்தது என ரூதர்போர்டுக்கு போட்டியாக நமது புராணங்களை முன்னிறுத்திக் கொண்டிருந்தோம் இருக்கிறோம் இருப்போம். இதைச் சவாலாக எடுத்துக்கொண்ட கார்னெகி கல்வி நிருவணம் 1966 ஆமமாண்டு ஜோன் கேன்ஸ் கூனி எனும் இயக்குநரை தத்து எடுத்து இது குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டது. மத்தியதர, குறைவான வருமானமுள்ள குடும்பத்துக் குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வியை விதைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதின்மூன்று தொடருக்கு சில்றன்ஸ் டெலிவிசன் வர்க்சாப் நிறுவணத்தின் சின்னமே சிசேம்வீதியின் சின்னமாக இருந்தது. அதன்பிறகான செழுமைப்படுத்தலில் கல்வியாளர்கள்,மனோத்ததுவநிபுணர்கள்,குழந்தை ஆர்வலர்கள் கூட்டு முயற்சியில் புதுப்பொலிவுடன் 1969 ஆண்டு நவம்பர் 10 ஆம்தேதி முறைப்படி ஆராம்பிக்க இருந்தது. இந்தத்தொடரின் முன்னோட்டம் அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஒலிபரப்பப்பட்டவுடன் அமெரிக்க அரசு இதன் முக்கியத்துவம் உணர்ந்து அரசு கஜானாவில் இருந்து ஒரு பெரும் தொகையை கொடுத்தது. கணினி வரைகலை, பொம்மைகள், நிஜ நடிகர்கள் எல்லவற்றையும் இணைத்து குழந்தைகளுக்கான கற்றலின் முனைப்பை தூண்டுகிற விதமாக வடிவமைக்கப்பட்டது. குழந்தைகளிடம் எழுத்து எண்,கணிதவினாக்களுக்கான விடைகள் ஆகியற்றை பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தியது. கல்வியை அன்றாட சமூக நிகழ்வுகளில் இருந்து எடுத்துக் கொடுத்தது.வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்த முடியாததாகக் கல்வியை மாற்றியது சீசேம் வீதி. கனத்த காட்சிகள், சடுதியில் மாறும் நிகழ்வுகளின் தொகுப்பு, வேடிக்கை, சிரிப்பு இசை எனும் லாபம் கலந்த வியாபார யுக்திகளோடுதான் துவக்கத்தில் தயாரிக்கப்பட்டது சீசேம்வீதி. இதைக் கேள்விப்படும்போது உங்களுக்கு ஏதாவது அலையாடுகிறதா?. உங்கள் ஊகம் சரிதான், சோப்பு, சீப்பு, உப்பு, கண்ணாடி, பல்பொடி விற்க இன்று பயன்படுத்தப்படும் விளம்பர யுக்தியை அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் கண்டுபிடித்து உலகத்துக்கு விற்று விட்டார்கள். தங்கள் நிராசைகளை ஏற்றிவைக்கும் நடுகல்லாகவும், அருதப்பழசான ஜாதி,மதம்,கடவுளைப் புதுப்பிக்கும் இடமாகவும்குழந்தைகள் பேனப்படுகிற பொது இந்தியாவில் இது போன்ற செய்திகள் வியப்பானதாக இருக்கிறது. |
7.11.09
உலகைப் புரட்டிய ஓர்நாள் - The November 7, Remember today

நெருக்கடிகளின் அடர்த்தியில் தானாக முளைக்கிற எதுவும் புரட்சியின் அடையாளமாகும்.தொழிற் புரட்சிக்குப் பிந்தைய ரஷிய சமூக பொருளாதாரப் பின்னடைவுகளில் அங்கிருந்த 50 சதமான தொழிற்சலைகள் மூடப்பட்டன. கோடிக்கணக்கான தொழிலாளர் வேலையிலிருந்து விரட்டப்பட்டனர். மீதமிருந்த தொழிற்சாலைகள் அதையே காரணம் காட்டி வாங்கிக்கொண்டிருந்த கூலியில் 50 சதமானத்தை தட்டிப்பறித்தன. அதற்கெதிரான கிளர்ச்சியாக டான்பாஸ் சுரங்கத்தொழிலாளர்கள், யூரல் உலோகத்தொழிலாளர்கள், பக்கு எண்னெய் உற்பத்தித்தொழலாளர்களின், மத்திய ஜவுளி உற்பத்திக்கழக தொழிலாளர்களின் ஆர்ப்பட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நாடுதழுவிய உஷ்ணத்தை உற்பத்தி செய்தது. 1917 ஜூலை முதல் நாள் பெற்றோக்ரேடில் கூடிய ஐந்துலட்சம் ஆர்பாட்டக்காரர்களின் மேல் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. கூலி உயர்த்திக்கேட்ட தொழிளார்கள் அறுபத்துநான்குபேரின் உயிர்தான் நவம்பர் புரட்சிக்கான முதல் முதலீடானது. அங்கு சிந்திய 650 பேரின் குருதியில் இறுதி வடிவம் நவம்பர் 7 நாளில் மாஸ்கோ பெட்றோக்ரேடில் போல்ஸ்விக்குகளின்புரட்சியாக மாறியது. ப்ரவின்சியல் அரசு தூக்கிவீசப்பட்டு உலகின் முதல் தொழிலாளர் அரசின் செங்கொடி அலையாடியது. வறட்சி வந்தால் புரட்சி வரும் எனும் கிராமச் சொலவடையின் மகோன்னதமான நிஜம் நவம்பர் 7 புரட்சி.பெருகி வரும் வேலையிழப்பு, அரைப்பட்டினி-முழுப்பட்டினி, பட்டினிச்சாவுகள், சோகையான கர்ப்பவதிகள்,குழந்தை தொழிலாளர்கள், அவுட்சோர்சிங் என்கிற கணக்கிலடங்கா நெருக்கடிகள் நிறைந்திருக்கிறது இங்கே. தகிக்கும் தனலின் மேல் ஈரத்துணிகள் போர்த்தும் நவவஞ்சகம் ஜெயிக்கிற தேசத்திலிருந்து வலைமக்களுக்கு புரட்சி நினைவுகூறும் வாழ்த்துக்கள். |
5.11.09
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்.
| ஒருகாலை வேலையில் கலைஞர் தொலைக்காட்சி சந்தித்த வேளை நிகழ்சியில் கண்ணதாசன் நற்பனிமன்றத்தலைவர் ஒருவரின் நேர்கானல் ஒளிபரப்பாகியது. அவர் பல முரணான தகவல்களைப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனார். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய பிறகுதான் தமிழ் மக்கள் இந்து மதம் என்ற ஒன்று இருப்பதாக அறிந்தார்களாம். அதிர்ச்சியாக இருக்கிறதா இன்னும் கேளுங்கள். உழைக்கிற மக்கள் திரளில் உள்ளவர்கள் படித்து பெரிய பெரிய சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகளாக மாறிவிட்டாகளாம் அதனால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். விஞ்ஞானம் நாற்று நட, கதிரறுக்க,என விவசாய எந்திரங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் கருத்து தெரிவித்தார். விவசாயம் நசிந்து வருவதற்கு பல காரணிகள் இருக்கிறது என்பதை மறைத்து பொதுவாகவே பல பிரபலங்கள் கூட இதையேதான் சொல்லுகிறார்கள்.கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது உண்மையா.? இல்லை. இந்திய அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்த பட்சத் தினக்கூலி என்பது ரூ231.69பைசா. அதைக் கொடுக்க விவசாயிகளெல்லாம் தயாராகக் கையை நீட்டிக் கொண்டிருந்தது போலவும் அவர்கள் அதையெல்லாம் வேண்டமென்று உதறித் தள்ளிவிட்டு ஊதாரித் தனமாக விவயாக் கூலிகள் அலைகிற மாதிரியும் ஒரு மூட நம்பிக்கை பரப்பி விடப்படுகிறது. பெண்களுக்கு தினம் நாற்பது முதல் அறுபது ரூபாயும் ஆண்களுக்கு அறுபது முதல் எண்பது ரூபாயும் தான் விவசாயக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு என்னென்ன வாங்கிவிட முடியும்?. ஒரு படி நெல் அதுவும் பொக்குநெல் அதிகம் கேட்டதற்காகத்தானே வெண்மனியில் கருகியது நாற்பது உயிர். நிலப்பிரபுத்துவ முறையும், பண்ணையடிமை முறையும் ஆழ வேரூன்றிக் கிடந்த காலங்களில் பழைய கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுத்து மாட்டை விடக் கேவலமாக மனிதர்களிடம் உழைப்பை உறிஞ்சிய காலம் விவசாயிகளுக்கு பொற்காலம். விவசாயக் கூலிகளுக்கு ?. விவசாய இடுபொருள், உரம் இவைகளின் விலைகளை வெளிநாட்ட்டு முதலாளிகள் நிர்னயிப்பதும். விளைந்த பொருட்களின் விலையை உள்ளூர் முதலாளிகள் நிர்ணயிப்பதுமான சிக்கல்களில் விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படுகிறது. அதை மீட்கக்கிடைக்கும் மாண்யத்தையும் கடல்தாண்டிய உத்தரவுகள் தடுக்கிறது. இது பற்றி யோசிக்கத்தெரியாத, பேசத்தெரியாதவர்களின் அரை வேக்காட்டு பொருளாதாரத் தத்துவமே இப்படித்தான் இருக்கும். இன்னொரு வெடிகுண்டை வீசினார் அவர். அதுதான் ஹாலில் இருந்த என்னைத் தூக்கிவாரித் தெருவில் போட்டது. இப்படி,இப்படியேதான் இந்த உலகம் மாற்றங்களைச் சந்திக்கிறதாம் " மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றதெல்லாம் மாறிவிடும்" இதைக்கூட கவிஞர் கண்ணதாசன் தான் சொன்னாராம். அதுபடிதான் நடக்கிறதாம். அப்படியானால் அந்த தாடிக்கார மனுஷன் காரல் மார்க்ஸ் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் ஒலிநாடாவுக்கு உரை எழுதினாரா ? |
4.11.09
நினைவுகளில் மட்டும் நெற்றிதொடும் பாசமலர்கள்.

வாங்கிய பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிருசு பெருசெனும் போட்டியில் சண்டை போட்டுக் கொள்ளவும். எனது பழய்ய சட்டையைப் போட்டுக் கொள்ளவும். சின்னச்சின்ன தவறுகளை அப்பனிடம் போட்டுக் கொடுக்கவும். பாசி, ஸ்டிக்கர், பெண்கள்கைப்பை பார்க்கிற நேரங்கள் நினைவுக்கு வரும் அக்கா தங்கையில்லாத அனாதைக்கு. இல்லாத பொருள்கள் மீது வட்டமிடும் கனவுபோல எங்கிருந்தாவது வந்து அலைக்கழிக்கிறது எனது நாட்களை இந்தப்படம். ஆளில்லா நேரத்தில் கண்ணாடியின் முன்னாடி அல்லாடும் குருவியைப் போலவே. பிள்ளை விளையாட்டில் என் பிறப்பாக வந்த செல்லக்கனி. எட்டாம் வகுப்பில் ஜோடி போடும்போது எனக்குத் தங்கை முறையாக வந்த மைதிலி. பணியில் சேர்ந்த பின்னால் நடராஜன் மனைவி அம்மு, இன்னொரு .. இப்படி நான் எனக்கென வரித்துக்கொண்ட பிறப்புகள் ஏராளம். பாசமலர் பார்க்கிற நேரமெல்லாம் எங்கம்மாமேல் எனக்கு கோபம் வரும். அதையெல்லாம் இறக்கி வைக்கிற முதிர்ந்த பிறப்பாக,காற்றைக்,கடலை,காக்கைகுருவிகளைக் கைநீட்டும் யாரையும் உறவாக்கச்சொல்லியபடி கிந்திக் கிந்தி நடக்கும் அவள் தான் சின்னத் தங்கச்சி, பெரியக்கா. |
31.10.09
வலை மீது அலை பாயும் மனசு
வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன். சுவைக்கநேர்ந்ததென் பசியாற. எழுத்தில் தெரியுமா கரங்களின் மென்மை. |
30.10.09
எளிய மக்களின் கையிருப்பான நம்பிக்கையில் ஒன்று குறைகிறது.

நேர்மை,எளிமை, அர்ப்பணிப்பென்னும் ஆடம்பர அரசியலில் காணக்கிடைக்காத அரிய குணங்களோடு இரண்டு முறை மதுரை தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினராயிருந்த தோழர் பொ.மோகன் அவர்கள் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார். கடந்த இருபது வருடங்களில் பலமுறை தொழிற்சங்க நிகழ்வுகளில் சந்திக்க நேர்ந்த தலைவர். பாராளுமன்ற உறுப்பினராவதற்குமுன்னாள் அவரிடம் இருந்த எளிமையில் ஒரு சிறு துரும்பளவுகூட மாற்றம் இல்லாமல் காணக்கிடைப்பது இன்றைய இந்திய அரசியலில் அரிதானது. உழைக்கிற மக்களுக்காக, அடித்தட்டுமக்களுக்காக, போராடும் தொழிற்சங்கங்களுக்காக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் இருக்கும் குறைவான நம்பிக்கைகளில் ஒன்று மறைந்து போயிருக்கிறது. தோழர் மோகன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. |