30.6.10

உள்ளே, வெளியே.

நெல்லை வண்ணாரப்பேட்டை முகப்பிலேயே இருந்தது அந்தக்கட்டிடம்.எல்லா மருத்துவமனைகளைப்போலவே
தான் அதன் வடிவமைப்பும் இருந்தது.வரவேற்பறையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு தொலைபேசியும், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் தனியார் மருத்துவமனைகளின் ஆகம விதிப்படியே இருந்தது.

பாபுவா 117 ஆம் நம்பர் ரூம். ஏ பாபு இங்கே வா ஒங்க மாமா வந்த்ருக்கார்
பாபு நல்லபையன் சார், பீடிதான் ஒரு நாளைக்கு ஒரு கட்டு காலியாகுது.

வந்தான். கொஞ்சம் தெளிவாக இருந்தான்.கொண்டு வந்திருந்த கோணிப்பையை உற்றுப்பார்த்தான் நல்ல பசி போலிருக்கிறது.அவனது அக்காளும் தம்பியும் அறைக்குப்போனார்கள்.சற்று நேரத்தில் கோழிக்குழம்பின் வாசம் வரவேற்பறைக்கு வந்தது.117 ஆம் எண் அறை வாசலில் இருந்து அவள் என்னை சைகை காட்டிக்கூப்பிட்டாள்.
போனதும் அவளது அம்மா கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தது. 'இந்த வயசுபோன காலத்ல என்னைய ஆஸ்பத்திரி கூப்பிட்டுட்டு போகனும்,ஏம்பொழப்பு அவனக்கூட்டிக்கிட்டு ஊர் ஊரா அலையிரன்'.உட்கார்ந்து
சப்பிடச் சொன்னார்கள் மருத்துவனைச் சூழலில் சாப்பிடுகிற மனநிலையும் பசியும் இல்லை அப்றம் சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

மருத்துவமனை வராண்டாவுக்கு வெளியே மரங்கள் இருந்தன.ஒரு பன்னீர் மரமும் இருந்தது பக்கத்தில் போய் நின்று உலுக்கி சொரிகின்ற பூக்களில் நனைந்தேன்.போய்க்கொண்டிருப்பவள் கதை ஞாபகத்துக்கு வந்து போனது.பிரதானச்சாலையில் போகும் வாகன இரைச்சலைத் தாண்டி குருவிகள் பேசிக்கொண்டிருந்தன.சற்றே தள்ளி ஒரு கொய்யா மரத்தில் கொத்து கொத்தாய்ப் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தது.வாசனை இழுக்க மரத்தடிக்குப்போனேன் கீழே கிடந்த கனிந்த பழம் எடுத்து துடைக்காமல் கடித்தேன்.வரவேற்பரைப்பெண் ஓடி வந்தாள்

'சார் அந்தப்பக்கம் யாரும் போகக்கூடாது,டாக்டர் எங்களத்திட்டுவாரு சார் ப்ளீஸ் வாங்க சார்'.

வரவேர்பறையில் உட்கார்ந்தேன் தொலைக்காட்சியில் அஜித் 'எலே கலெக்டரு' என்று கூட மீன்பிடிக்கிறவரிடம் பேசுவதுபோலப் பேசிக்கொண்டிருந்தார்.

'மிஸ் ரஜினி படம் வைங்க மிஸ் 'என்று எனக்கெதிரே உட்கார்ந்திருந்த பெண் கேட்டாள்.
'எந்த சானல்லயும் ரஜினி படம் இல்லக்கா',
'சரி பரவால்ல,என்ன அக்கான்னு கூப்டாதேன்னு எத்ன தரஞ்சொல்றது'.
'சரி சர்மிளா',சொல்லிவிட்டு சிரித்தாள்

எதிரே உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்தேன்.அவளும் என்னைப் பார்த்தாள்.கொஞ்சம் கனத்த உடம்பு,இருபத்தி ஏழு வயசிருக்கும்.தாலி இருந்தது.

'சார் பாபுவ பாக்க வந்தீங்களா,என்ன சார் இந்தச் சின்னவயசில இப்டி உட்டுட்டீங்க,
'எங்க வர்க் பண்றீங்க,
'மேனஜரா,
'ஏன்சார் ப்ரமோசன் டெஸ்ட் எழுதலாம்லா

இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள் முதலில் ஒரு அறிமுகமில்லாத அந்நியப்பெண்ணோடு பேசுவது லாஞ்சனையாக இருந்தது.ஜொள் பார்ட்டி என்று நினைத்துவிடக்கூடும் என்கிற ஜாக்கிரதை உணர்வு இருந்தது.கொஞம் கொஞ்சமாக இயல்பாகிப் பேசிக்கொண்டிருந்தேன். என்னால் அவளின் முகம் பார்த்துப்பேச இயலவில்லை.நான் பார்க்கிற நேரம் மிகத் துல்லியமாக எனது கருவிழியை ஊடுருவிப் பார்த்துக்கொண்டு பேசினாள்.வரவேற்பறைப்பெண் இடைமறித்து சாப்பிடலயா என்று கேட்டாள்.பின்னர் தனது அறையில் இருந்து என்னைப்பார்த்தாள்.பிறகு மாடிக்குப்போய்விட்டு இறங்கிவந்தாள்.அப்போது சர்மிளா என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

'பசங்க ஹைஸ்கூல் படிக்கிறாங்களா பொய்சொல்லாதீங்க சார்'

மாடிப்படியில் இருந்து ஒரு வயதான தாய் இறங்கி வந்தார்கள்.

'வாம்மா சப்டலாம்,சாரும் சாப்டணுமில்ல'
'ஆமா சாப்டு சாப்டுத்தான் இப்டி குண்டாயிட்டேன்,நீ போ சார்ட்ட பேசிட்ருக்கேன்ல'  
'சொன்னாக்கேளு சார் கிட்ட எவ்ளோ நேரம்தான் பேசுவ'

விருட்டென்று எழுந்தாள்.அவள் அம்மாவைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.

'நா என்னா தப்புசெஞ்சேன் ஆம்பளயோட பொம்பள பேசக்கூடாதா,ஏ'
'அந்தாளு எங்கூடப்பேசுனான்லா,அவன ஏ யாரும் கூபடல'
'நா அவம்முகத்தப் பாத்துப் பேசினே அவந்தா எம்முகத்தப்பாத்துப் பேசல,எல்லாப்பயளுகளும் அப்டித்தான்'
'அத்தன ஆம்பளப்பெயகளுக்கும் கண்ண நோண்டனும்'

படியேற படியேற ஆவேசமகப் பேசிக்கொண்டே போனாள். அதற்குள் கையைக் கழுவாமல்  ஓடிவந்தாள்.

'சார் ஒங்கள மொதல்லயே ரூமுக்குப்போகச்சொல்லி சைகை காமிச்சன் நீங்க கவனிக்கல'
'இவங்க பேஷண்டா'
'ஆமா சார்'
'நல்லாத்தான பேசுறாங்க'
'டாக்டரயே உண்டு இல்லன்னு ஆக்கிருவாங்க'.

அன்று முழுக்க சர்மிளாவே என்னை ஆக்ரமித்திருந்தாள்.அவள் பேசியதும்,கோபப்பட்டதும்,கேள்விகேட்டதும் எல்லாமே சரிதானே? அவளை ஏன் சமூகம் மனநல மருத்துவமனைக்குக் கொண்டுவந்தது. இப்படித்தான் அந்த மனநலக்காப்பகத்தில் இருக்கிற ஒவ்வொரு நோயாளி மீதும் பதிலற்ற சராசரிக் கேள்விகள் புதைந்துகிடக்கிறது.

28.6.10

ஒரு தூங்குமூஞ்சியும்,செயற்குழுக் கூட்டமும்.

அப்போதுதான்  தொழிற்சங்கத்தின் தீவிர உறுப்பினராக அறியப்பட்டேன்.பயிற்சிவகுப்புகள்,ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்குபெறுகிற ஆவல் மிகுந்த நாட்கள் அவை. பின்னர் செயற்குழு உறுப்பினராக அறியப்பட்டேன்.வெறும் கொடியும் கோஷங்களும்,வேலை நிறுத்தங்களும், சம்பள உயர்வுமாக அறியப்படுகிற தொழிற்சங்க நடைமுறைகள் இன்னும் பொது உலகம் சரியாக அறியாதது. அவ்வளவு ஏன், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அதற்குள் புழங்கிக் கிடக்கிற எனக்கும் புரியயாதது செயற்குழுக் கூட்டங்கள். முன் இரவு நேரங்கள் தொடங்கும். அல்லது ஞாயிற்றுக்கிழமை பகல் பதினோறு மணிக்குத் துவங்கும். வீடுகளில் பொதுவாக 'மீட்டிங்குக்குபோயிருக்காக' சொல்லிவிடுவார்கள்.(இதைச் சொல்லுகிற 'மாநாட்டு நாயக்கர்' என்கிற சிறுகதை முடிகிற தருவாயில் இருக்கிறது).பெரும்பாலும் இரவு நேரங்கள் நடக்கும் விவாதங்களில் தாக்குப் பிடிக்காமல் தூக்கப்பேய் பீடிக்கப்பட்டவனாய் எனது தலை எனக்குத் தெரியாமலே ஆடும். அதைச் சமாளிக்கிற உத்தியாய் கைவிரல்களால் தாளம் போடுகிற மாதிரி ஒரு பாவனை செய்துகொள்வேன்.

முழித்திருக்கிறவர்கள் நான் கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறேன் அல்லது சிந்திக்கிறேன் என்பதாக நினைக்கவேண்டும் என்கிற அலிபையை உருவாக்குகிற செயல் அது. ஆனாலும் எல்லோருக்கும் 'பயல பேய் பிடிச்சு ஆட்டுது' என்று தெரிந்துவிடும். 'தோழா போய் முகத்தக்கழுவிட்டு வா' என்று கடுகடுப்பாய் மாது சொல்லும்போது கையுங் களவுமாய் பிடிபட்டுப்போன குற்ற உணர்ச்சி வரும்.இல்ல சமாளிச்சிரலாம் என்று பதில் சொல்லும் ரோஷம் ரெண்டு நிமிஷத்தில் தவிடு பொடியாக மீண்டும் தலை மீண்டும் வெடுக் வெடுக்கென ஆடும்.அப்போது சம்பள உயர்வில் இருக்கிற குளறுபடிகளை ஈக்வேசனை சுட்டிக்காட்டி பிச்சமுத்து விளக்கிக்கொண்டிருப்பார்.அல்லது அகில இந்திய சங்கத்தின் முடிவுகளை கிருஷ்ணகுமார் அறிவித்துக்கொண்டிருப்பார்.ஆனால் என்னை அந்த பாழாய்ப்போன சாத்தான் வந்து ஆட்டுவிக்கும்.

எனது கிராமத்தில் சவுத் இண்டியன் பாப்திஸ்ட் மெசின் சார்பில் முழு இரவு ஜெபக்கூட்டம் நடக்கும். சின்ன வயசில் வாத்தியாருக்குப் பயந்து அங்குபோகனும். பாட்டுப்படும்போதும்,கதைகள் சொல்லும்போதும் விழித்திருப்பேன்,ஆனால் பிரசங்கங்கள் என்னைத் தாலாட்ட நான் தூங்கிப்போய் விடுவேன். அப்போதும் பைபிளம்மா என்கிற மேரிப்பாட்டி என்னை இப்படித்தான் திட்டும் 'ஒன்னய சாத்தான் பிடிச்சி ஆட்டுது'.ஏவீஸ்கூல்  ராமச்சந்திரனும்,ராமகிருஷ்ணன் சாரும் சயின்ஸ் பாடம் நடத்தும்போது ஒரு நல்ல கனவோடு தூங்கிப் போய்விடுவேன்.அதுபோலவே கல்லூரியில் எக்கனாமிக்ஸ் நடத்தும் பேரா.லிங்கசாமி. அவரைப் பார்த்தவுடனே எனக்குத்தூக்கம் வந்துவிடும்.நிற்க வைத்து மானத்தை வாங்குவார்கள்.அதுபோலத்தான் இந்த செயகுழுக்கூட்டங்களும். ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பள்ளி இறுதித் தேர்வைப் போலப் பயமுறுத்திக்கொண்டு வரும்.

ஒரு நாள் விருதுநகரில் கூட்டம் நான் முருகவேல்,கிருஷ்ணன் மூன்று பேரும் அழைக்கப்பட்டிருந்தோம்.அன்று மாலையே கிளம்புகிற நேரம்,இடம் எல்லாம் சொல்லிவிட்டார் கிருஷ்ணன்.நான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன் இருட்டுப்பக்கம் இருந்து வந்த கிருஷ்ணன் நீங்கள் பேருந்தின் முன்பகுதியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் நடுப்பகுதி. முருகவேல் கடைசிப்பெஞ்சு என்று குசு குசுத்துவிட்டுப் போய்விட்டார். விருதுநகரில் இறங்கியதும் நீங்க ரயில்வேபீடர் ரோடு வழியா வாங்க, நான்மெயின்ரோடு வழியா,முருகவேல் கந்தபுரம் தெருவழியா என்று சொல்லிவிட்டு மீண்டும் மறைந்து விட்டார். எனக்கு என்ன நடக்கப்போகுதோ என்கிற பயமும் ஆவலும் ஒருசேர வந்துவிட்டது.பலகோணங்களில் யூகித்துவிட்டு இறுதியில், அடடா ஒருவேளை இன்னைக்கே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பிச்சிருச்சுரும் போல இருக்கே வீட்லவேற சொல்லாம வந்துட்டமே என்கிற நமைச்சல் இருந்தது. கல்யாணம் ஆகி ஆறுமாசம் கூட ஆகலையே,அவள் என்ன செய்யப்போகிறாளோ என்கிற பதைபதைப்பு இருந்தது.தெருவில் எதிர்ப்படுகிற எல்லோரையும் சந்தேகத்தோடு பார்த்தேன்.எந்த நிமிடத்திலும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் பரபரப்பு இருந்தது.கூட்டம் நடந்த இடத்துக்கு போய் கூட்டம் ஆரம்பித்து பாடுபழமைகளைப் பேச ஆரம்பித்ததும் ஏமாந்து போய் தூக்கம் வந்துவிட்டது.

செயற்குழுவின் பதினைந்து பேரில் பணிரெண்டு பேர் சிகரெட் குடிக்கிறவர்களாக இருப்பார்கள்.தோழர் சாமிநாதன் என்னைவிட ரொம்ப இளையவன்.அவன் வளர்த்திருக்கிற தாடி,அவன் குடிக்கிற சிகரெட்,அவனது பேச்சுத்தொணி எல்லாம் என்னை 'நீ ஒரு நாளும் ஒரு தீவிர தொழிற்சங்கவாதியாக முடியாது' என்கிற மாதிரிக் கேலிசெய்யும்.அதுபோலவே முருகவேல்,கிருஷ்ணன்,சோமு போன்ற தீவிர தொழிற்சங்கவாதிகள் என்னையும் மாதுவையும் விளையாட்டுப் பிள்ளைகள் என்பார்கள். இந்த மூன்று பேரில் சோமுவிடம் கூட ஏதாவது பேசிவிடலாம். கிருஷ்ணன், முருகவேல் இருவரிடமும் எது குறித்தும் பேச முடியாது. எல்லாவற்றையும் மறுதலித்து அல்லது எதிர் நிலையிலிருந்துதான் பேசுவார்கள். சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று சொன்ன மறுகனமே புரியாமப் பேசாதீங்க,நீங்க மேற்குப்பக்கம் நிற்பதனால் தான் அது கிழக்கே இருக்கிறது என்று சொல்லுவார்கள். அந்தானிக்கில சுவத்துலபோய் ரெண்டுதடவ முட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேன்.

ஒரு முறை, வேறுகிளைக்கு மாறுதல் வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஒரு தோழர் சாத்தூருக்கு வந்திருந்தார்.அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வயதான தாய் தந்தையருக்கு உடம்புக்கு முடியவில்லை,பணப்பிரச்சினை,குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை.இந்த பிரச்சினைகளோடு தினம் அறுபது கிலோமீட்டர் பயணம் செய்து கிளைக்குப் போனால் கிளையில் மேலாளர் புரிதலில்லாமல் எதெற்கெடுத்தாலும் சண்டைக்கு வருகிறார் இப்படியெல்லாம் சொல்லிவிட்டு.'உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடி' என்கிற பழ மொழியைச் சொன்னாராம். 'எது எப்பிடியோ ஓசை வருதில்ல' என்றாராம் தொழிற்சங்க சுப்புடு.

மேடைப் பேச்சென்றால் கரகரத்த குரலில் உச்ச ஸ்தாயியில், முஷ்டி உயர்த்திக்கொண்டு'ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில் மிகு வாலிபர்களே,நாற்றமெடுத்த சமுதாயத்தை நறுமணம் கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்'என்று பேசுவதுதான் என்கிற நம்பிக்கை மூடியிருந்த காலம்.அதை உடைத்துப்போட்டு ஒரு நிகழ்
கலையாக்கி மேடையை தமிழகமெங்கும் மேடைகளை  அபகரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணக்குமாரோடு ஆட்டுக்குட்டி போல அழைந்தோம் நானும் மாதுவும். அவர்தான் எங்கள் சங்க செயலாளர். அப்போது எங்கள் சங்க கூட்டங்களில் வாழ்த்திப் பேச நன்மாறன் வருவார். அவர் வந்துவிட்டால் சங்கவித்யாசமில்லாமல் தோழர்கள் கூடிவிடுவார்கள்.அரைமணி நேரம் மேடையில் பேசினால் வயிறு புண்ணாகிப்போகும்.சரவெடியாய்ப் பொருத்திப் போட்டுக்கொண்டே போவார்.

முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு எங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது முன்வரிசையில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.ஒருவர் வந்து தலைவர் கூப்பிடுகிறார் என்று சொல்லி என்னை வெளியே அழைத்துக்கொண்டு போனார்.அங்கு உட்கார்ந்திருந்த அவர் 'ஒரு தொழிற்சங்கவாதி இப்படி சாமான்யன் போல சத்தம்போட்டு சிரிக்கக்கூடாது' என்று கண்டிப்பான குரலில் சொன்னார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது.தப்புச் செய்துவிட்டோ மே என்கிற குற்ற உணர்ச்சி மேலிட்டது.இனி உட்கார்ந்து தொழிற்சங்க சட்டதிட்டங்களை மணனம் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்கிற வெறிவந்தது. ரெண்டு நாள் மனசு சரியில்லாமல்  மூன்றாம் நாள் நடந்ததை மாதுவிடம் சொன்னேன்,அவன் கிருஷ்ணக்குமாரிடம் சொன்னான் ரெண்டு பேரும் குதித்துக் குதித்துச் சிரித்தார்கள்.

உடனிருக்கிற மனிதரை தனதுறவாய்,தோழனாய்ப் பாவிக்கிற உணர்வும் ,அவர் துன்பம் கண்டு வதங்கும் மனசும்.அவற்றை ஒருங்கிணைக்கிற சரடாகச் சங்கமும் இருக்கிறது.அங்கு  எல்லாச் சட்டதிட்டங்களையும் மீறிய மனிதாபிமானம் இருக்கிறது. அங்கு புழங்குகிற தோழர்களின் இன்ப துன்பங்களோடு களத்தில் பங்கெடுக்கிற போது எழுத்தில்வராத நியதிகளாய் புதுப்புது அனுபவங்கள் வந்துசேரும். அப்போது இதையெல்லாம் இரவு நேரங்களில் சாவகாசமாக உட்கார்ந்து நினைத்துச் சிரிக்கலாம். காலம்தான் எல்லாவற்றிற்குமான மருந்து,காலம் தான் எல்லாவற்றிற்குமான தீர்வு. இதோ தொழிற்சங்கத்துக்கு எதிர் முகாமில் இணைந்து விட்ட அந்த கிருஷ்ணனின் அந்த பழய்ய ஞாபகங்கள் மலரும் நினைவாக இருக்குமா?  எப்படியிருக்குமெனத் தெரியவில்லை.

25.6.10

இது இலவசங்களின் காலம்.

சுமார் ஒரு கிலோ மீட்டருக்குமேல் அலங்கார வளவுகளும்,அதில் வாழைமரங்களும் நட்டி பிரதானச்சாலை அமர்க்களப்படுத்தப்பட்டிருந்தது. குறைந்த பட்சம் ஒருகிலோமீட்டர்தூரம் வளைவுகள் நட்டு குழல் விளக்கு எரிய விட்டால் மட்டுமே மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதாக கற்பனை செய்துகொண்டு அரசியல் மற்றும் ஜாதிக்கட்சிகள் காசைக் கரியாக்குகிறார்கள். நேற்று சாத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடந்தது.ஆனி மாதம் நடக்கும் தேரோட்டத்துக்கு இணையான மக்கள் கூட்டமும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.இப்போதெல்லாம் அரசியல் கூட்டம் நடந்தால் காசுகொடுத்து ஆளைக் கூப்பீட்டு வருகிற கட்டாயம் ஆகிவிட்ட இந்தச்சூழலில் ஆச்சரியத்தோடு ஆர்வமும் கூடியது. பிறந்த நாளுக்கு பரிசாக பிரியாணிப் பொட்டலமும்,படிக்கிற பிள்ளைகளுக்கு இலவச நோட்டும் வழங்கியதால் இவ்வளவு கூட்டம் என்று பேசிக்கொண்டார்கள்.

புறநகரில் உள்ள முருகன் திரையரங்கம் முழுக்க மக்கள் வெள்ளம். கட்டுக்கடங்காத கூட்டத்தில் கொண்டுவந்திருந்த நோட்டுகளை விநியோகிக்க முடியாமல் பாதியிலேயே கட்சிக்காரர்கள் போய்விட்டார்களாம். ஆனாலும் மீதமிருக்கிறநம்பிக்கையில் மக்கள் அங்கிருந்து அமீர்பாளையம்,பழய்ய பாலம்,நகர் முழுக்க கிராமத்து தய்மார்கள் குழந்தைகளும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்கள். கையில் பையைக் கணமாகத் தொங்கவிட்ட குழந்தைகள் ஜார்ஜ் கோட்டையைப் பிடித்துவிட்ட சந்தோசத்திலும்.கிடைக்காத குடும்பத்தார் அதைக் கோட்டை விட்டுவிட்ட மனநிலையிலும் கடந்துபோனார்கள்.

சாத்தூர் நகரில் உள்ள தெருக்களில் இருந்து குறைச்சலாகவும் சுத்துப்பட்டு கிராமம் முழுக்க உள்ள குழந்தைகள் அடர்த்தியாகவும் வந்திருந்தார்கள்.இவ்வளவு ஜனங்கள் ஒரு நான்கு நோட்டுக்கூட வாங்க முடியாத வக்கில்லாதவர்களாக காலம் கடத்துகிறார்களா என்பதை நினைக்கும்போது நடுக்கம் வருகிறது.ஒரு சட்டசபைத்தொகுதியே கையேந்தி நிற்கிற மாதிரித்தோன்றியது.47 முதல் 67 வரை காங்கிரஸும் அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை மாறி மாறித் திராவிடக்கட்சிகளும் நடத்திய ஆட்சியின் நிகரப்பலன் என்ன என்றால், ஒரு கட்சியில் சேர்ந்து சம்பாதித்த தனி நபர்கள் தொகுதி தொகுதியாய் தரும காரியங்கள் செய்ய முடிகிற முதலைகள் ஆனதுதான். அதுவும் அடுத்த தேர்தலுக்கான அச்சாரமாகவும்,சம்பாதிக்கப்போகும் ஆசைக்கு முதலீடாகவும். கேள்வரகு,கம்பு சோளத்திலிருந்து ரேஷன் அரிசிக்கும்,தெருச்சண்டை ஓசிச் சினிமாவிலிருந்து இலவச தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொட்டப்பாக்கு வெத்திலையில் இருந்து பான்பராக்குக்கும் கிராமங்களின் பொருளாதாரம் நகர்ந்திருக்கிறது.

24.6.10

வானம் அறிந்ததணைத்தும் - ஒற்றைக் கதவு.

இப்படிக்கற்பணை செய்துகொள்ளலாம்.அடர்ந்த பசிய காடு.அப்பொழுதுதான் மழைபெய்து ஓய்ந்த இளம் மாலை.அருகே பெண்குரலில் பேசியபடி நடக்கக்கிடைக்கிற சிலாக்கியம் எப்பொழுத்தாவது வாய்க்குமானல் அதை நான்
தோழர் ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பான ஒற்றைக்கதவு என்றே சொல்வேன்.அதிர வைக்கும், அல்லது விடுகதை  முடிவாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏதுமில்லாமல்.கதைகளை இயல்பாகச் சொல்லி முடிக்கிறார்.சந்தோஷ் ஏச்சிக்கானம்.மலயாள மூலமான இந்த சிறுகதைத் தொகுப்பை.அப்படியே தமிழ் மயமாக்கி விட்டிருக்கிறார் ஜெயஸ்ரீ. ஒரிஜினாலிட்டி வேண்டுமென்பதற்காக 'மச்சி,ஙொய்யால' என்று கதை வசனம் பேசுவதாய் மொழி பெயர்க்கிற ஹாலிவுட் மொழிமாற்றப் படங்களைப் பார்த்தவுடன் வடிவேலு இல்லாமலே சிரிப்புவரும்.

இன்னொரு நாட்டின் இலக்கிய வளங்களை சொந்த மொழிக்குக் கொண்டு வரும்போது நாம் வெறும் கதைகளை மட்டும் உள்வாங்கிக் கொள்வதில்லை. அந்த நிலப்பரப்பு,அதன் மொழி,அங்கு சாப்பிடுகிற உணவு,உடை உள்ளடக்கிய எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். தெரியவழி செய்ய வேண்டும். கண்ணைமூடிக்கொண்டு யோசித்தால் ஸ்தெப்பிப் புல்வெளியும்,மணப்பாடு கடலும்,அன்னைவயலின் கோதுமை வரப்புகளும்,எக்கத்தரினா பாவலவ்னாவும், சோக எழில் ததும்பும் ஒற்றையடிப் பாதையும் காட்சியாக ஓடவேண்டும்.ராஜாக்களையே பார்த்திராத நூற்றாண்டுகள் தாண்டிய தலைமுறைகளுக்கு அவர்களின் முகபாவங்களைக் கூடச் சித்தரிக்கமுடிகிற வல்லமை எழுத்துக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படித்தான் மலயாள மண்ணின் சுகந்தத்தையும்,செடிகளின் பசிய வாடையையும்,அந்த மக்களின் மேல் இயல்பாய்க் கவிழ்ந்திருக்கிற ஈரத்தையும் சொல்லுகிறது தோழர் ஜெயஸ்ரீயின் வலிமையான மொழி.
விருந்தாகும் உடல்கள் என்கிற கதையை எதற்காக முதல் கதையாக தெரிவு செய்தார் என்று தெரியவில்லை.நீச்சல் பார்க்க கரையில் உட்கார்ந் திருந்தவனை இழுத்துபோடும் அதிர்வுகளை உள்ளே வைத்திருக்கும் கதை.ஒருபெரு நகர மத்திய தரப்பெண்ணை ஒரு பல்பொருள் அங்காடிக்குள் பிரவேசிக்கச்செய்கிற பாவனையில், இந்தச்சமூகத்தின் ஆழ்மனத்தையும், சொகுசு தேடும் அதன் தவிப்பையும்,அதற்குப் பலிகொடுக்கிற இயல்பு களையும்.  இயலாமையையும்,குழைத்துக்கொடுக்கிறது இந்தக்கதை. டைனசரின் முட்டை,கோட்டை ஆகிய இரண்டுகதைகளும் அமானுஷ்யமான கதைப்போலத் தோன்றும் பெண்ணின் படிமங்கள்.

ஒரு நகர நெரிசலில் தற்செயலாய்க் கண்ணில் படுகிற ஊர்நண்பன் பீதாம்பரனோடு கழியும் ராமகிருஷ்ணனின் ஒரு இரவின் மதுநெடி மிகுந்த நினைவுகள் தூண்டில் முள்ளாய் அழுத்துகிறது.அங்கு நாம் நிச்சயிக்கப்பட்ட எந்த முடிவுகளையும்  அடையாதபடிக்கு மிகைப் போதையின் கடைநேர வாந்தி வந்து நிற்கிறது.

தொலைக்காட்சிப்பெட்டி இல்லாத ஒரு வீடு சில மணிநேரப் புலம் பெயர்தலை இயல்பாய் சொல்லி நகர்கிறது செய்திகளின் கூடெனும் சிறுகதை.அகதிகளின் கூடு,பழய்யமரங்கள் என்கிற கதைகளெல்லாம் அந்தப்பசிய வனங்களினூடே நிலைபெற்றுப்போன வீடுகளின் பெருமூச்சாய் நம்மை சூழ்ந்துகொள்கிறது.ஒரு பயணக்குறிப்பு போல சொல்லப்பட்டதாகினும்,ஆண்டாள்கோயில் பூசுபொடியின் சுகந்ததோடு நெடுநாட்கள் கூடவரும் கதை.நினைத்த நேரமெல்லாம் கோதுமை வயலின் வாசம் வீசும்.டமால் அதிர்வுகளோ,தத்துவ விசாரங்களோ இல்லையானாலும் அந்த மேலோட்டமான வார்த்தைகளில் நட்பின் ஆணிவேர் காணலாம்.ஒருபிடி கோதுமை என்கிற கதை.

இப்படியான கதைகள் ஏதும் அளவில் குறைந்தவையல்ல ஒரு தொகுப்பின் இருகரையையும் அடைத்துக்கொண்டிருக்கும் பதினான்கு கதைகளும் அதனதன் இடத்திலிருந்து வாழ்க்கையை உற்றுநோக்குகிறது.எதுவும் இளப்பில்லை காண் என்கிற குரலிருந்தாலும் ஒரு சிறுகதையைத் தலைப்பாக்குவதும் தலைமையேற்று நடத்தச் சொல்லுவதும் மனித மாண்பாகிறது.முன்னதாக தோழர் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் சூர்ப்பநகை கதையைப்படித்துவிட்டு நானும்,மாதுவும்,மாப்பிள்ளை ஆண்டோ வும் பறிமாறிக்கொண்ட விசும்பல்களை நினைவு கொள்ளவைக்கிறது 'ஒற்றைக்கதவு'.

வரிவரியாய் உள்வாங்கவேண்டிய அந்தக்கதையை என்னால் முழுவதுமாக அறிமுகப்படுத்த இயலாது.
ஒரு ஜெயிலில் பரிதவிக்கிற அதிகாரி நேர்மையைப் பாரமாய்ச்சுமக்கிற வர்க்கீஸ்.காவல் கோட்டைகளையும் ஊடுறுவி அங்கு உலவுகிற வெளியுலகின் நாற்றத்தைக்கண்டு பிதற்றுகிறவனாகிறான்.தண்டனையை நிரைவேற்றுகிறவர்கள் பெருங்குற்றவாளியாக மாறும் போது நியதிகள் சின்னாபின்னமாகும். அப்படி நியதிகளின் மேல் தீராதகேள்விகளை வைக்கிறவனாக கடத்தல் குற்றவாளி அந்தோணி வருகிறான்.தனது மேலதிகாரி தன்னை குத்திக்குதறுவதற்கு மனசாட்சியை அடகுவைத்து அவர் செய்கிற தவறுகள்தான் என்பது தெரிகிறது.ஆனாலும் அந்த ஜெயிலுக்குள் கஞ்சாவும்,மதுவும் புழங்குவது அந்தோணியின் ப்ளாக்கில்தான் என்கிற வெறியோடு அவனைத்தேடிப்போய் அடித்து நொறுக்குகிறார். ஆனால் அவன் தழும்புகளிலிருந்து வெளியேறும் கதையிலிருந்து, தான் இது வரை சேர்த்துவைத்த கற்பிதங்களை நொறுக்கிவிட்டு வெளியேறுகிறார் வர்க்கீஸ். வெளியிலிருந்து ஒரு மம்பட்டியான் சினிமா,ஒரு நாவல்,ஒரு மனிக்குறவன் நடோ டிப்பாடல் சொல்லுகிற கதையை ஜெயிலுக்குள்ளிருந்து வெகு இயல்பாகச்சொல்லுகிறது இந்த ஒற்றைக்கதவு.

மகாநதி படத்தில் லேசாகத்திறந்து காட்டப்பட்ட அந்த ஜெயிலின் உட்புறத்தை மிக லாவகமாகத் திறந்து சாவகாசமாகப்  பிரவேசிக்க  விடுகிறார்கள் மூலமொழியாளர் சந்தோசும்,மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயும். ஆம் ஒரு படைப்பை உள்வாங்கும் போது மனிதர்களோடு நிலவியல் வரைபடமும் சேர்ந்து பதிந்து போவதுதான் எழுத்தின் மஹிமை.அது ஒற்றைக்கதவின் வழியே வலிமையாக விரிகிறது.

ஒற்றைக்கதவு

மூலம் -சந்தோஷ் ஏச்சிக்கானம்
தமிழில் -கே.வி.ஜெயஸ்ரீ
வெளியீடு -வம்சி புக்ஸ்
விலை- ரூ.80

22.6.10

விஜய் விருதுகள்,வறண்ட பிரதேசத்தில் பசிய நம்பிக்கை,அபிநயா.

மொட்டை வெயிலில் ஒற்றை வேப்பமரத்து நிழலில் கைலியைத் திரைத்துக்கொண்டு உட்கார்ந்து,தலைத்துண்டை அவிழ்த்து மடியில் வைத்துவிட்டு இருக்கிற தண்ணீரில் கை அலம்பிக்கொண்டு( டெட்டால் போட்டு கழுவிக்கொண்டல்ல)தூக்குவாளியின் மூடி திறக்கிற நேரம்.ஒரு உழைப்பாளிக்கு உலகத்தின் அத்துணை உன்னதங்களும் பின்னுக்குப் போய்விடும்.அந்த புளிச்ச கஞ்சி,வறுத்த வத்தல் டால்டா போட்டு,சாயம் பூசி,சாப்பாடு என்ற பெயரில் பரிமாறப்படுகிற ஒப்பணைகளை ஊதித்தள்ளும்.பசி ருசியறியாது.அதே உழைப்பாளியின் ஞாயிற்றுக்கிழமை முன்மதியம் வீட்டிலிருந்து வெளிக்கிளம்புகிற தாளிப்பு வாசனையில்
கிறங்கிப்போய் பசியின் அளவுகூட்டும்.அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்துக்குமான இடைவெளி மிகப் பெரியது அது பழய்ய கஞ்சிக்கும்,பீட்சாவுக்குமான காத தூர இடைவெளி.


வாழ்வில் ஒப்பனைகளுக்கான இடம் விரிந்துகொண்டே போகிறதுப்போல பிரம்மாண்டப்படுத்தப்படுகிறது தொலைக்காட்சியில்.அப்படியொரு பிரம்மாண்டம் தான் விஜய் அவார்ட்ஸ்.ஒருமணி நேரத்துக்குமேலே காட்டப்படுகிறது விருதுக்கான முன் தயாரிப்புகள்.விழா மேடையின் டாம்பீகம்.அங்கே வந்து ஆடப்போகும் தமிழறியாப்பெண்டிரின் எக்சைட்மெண்ட்,வந்து நிற்கும் வெளிநட்டுக்கார்கள் அதிலிருந்து இறங்கும் பரம்பரை நடிகர்கள்.அரைகுறை ஆடையில் வந்த ஒரு நடிகைக்கு ஆன் த ஸ்பாட் வார்த்தை விருதுகொடுக்கிற தத்துபித்து அறிவிப்பாளினி. இவைகளையெல்லாம் பார்க்கிற சாதாரண ஜனங்களுக்கு சினிமா மீது பிரம்மை மட்டுமே ஏற்படுத்துகிற துள்ளியமான ஏற்பாடு இது.


அப்படியிருந்த சினிமாவை தரையில் இறக்கிவிட்டது எண்பதுகளின் சினிமா முயற்சி. சற்று ஓய்ந்து மீண்டும் வேதாளம் ஏறிய முருங்கையாய் இன்னும் நீடிக்கிறது சினிமா.அந்த செல்லுலாய்ட் உற்பத்தி நிறுவனம் சாமன்யர்களை அண்டவிடாது அகழி பாய்ச்சி வைத்திருக்கிறது.அந்த அகழியை தாண்டி வந்து ஜெயிக்கிறது சமீபத்திய புது வரவுகள், சுப்ரமணியபுரம், பருத்திவீரன், ரேணிகுண்டா,நாடோ டிகள்,பசங்க, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள்.இவையாவும் அதன் கதைகளால் அறியப்பட்ட படங்கள்.அவற்றில் மருந்துக்கும் நட்சத்திர அந்தஸ்து உள்ள எவரும் முன்னிறுத்தப்படவில்லை என்பது நம்பிக்கையளிக்கிற விஷயங்கள்.2009 ஆம் ஆண்டு வெளிவந்த 132 படங்களில் பெருவாரியான பரிசுகளை ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே தட்டிச்செல்லமுடியும் என்பது கொண்டாடப்படவேண்டிய அதே நேரம் வேதனைக்குறிய விஷயம். வலுவானதாக கதைகளைத் தேடுவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.சினிமா உலகம் சற்று நிதானமாகச் சிந்திக்கவேண்டிய விஷயம் இது.


அகலிகைக்கு கிடைத்தது சாப விமோசனமில்லை.ஒரு அங்கீகாரம். அவள் கல்லிலிருந்து மனுஷியானாளோ இல்லையோ. கவனிக்கப்பட்டாள்.அதுதான் பசங்க பட நாயகன் சொன்னதுபோல ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக normal மனிதர்கள் ஏங்குகிற போது.மாற்றுத்திறனாளிகள் இன்னும் சற்று அதிகமாகவே ஏங்குவார்கள்.அவர்களை அங்கிக்கரிக்கிறபோது அரங்கில் ஒலித்த அபிநாயவின் அந்த உற்சாகக்குரல் கவனிக்கப்படாத எல்லோரிடத் திலிருந்தும் வெளியேறும்.நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா பரிசு வாங்கிய தருணங்கள் ஒரு அழகிய திரைக்காவியத்தை நெருங்கும் நிகழ்வுகள்.நாம் அறியாமலே கண்கள் கலங்குகிறது.அந்த நிகழ்வில் கோபிநாத் நடந்துகொண்டதும் கவனிக்கத்தக்கதும், கதிர் சொன்னதுபோல கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

21.6.10

கடவுளைக் காப்பாற்றியவன்.

அவர் குறி சொல்லும் போது ரொம்பப் பயமாக இருக்கும். பற்களை நற நற வெனக்கடித்துக் கொண்டு கூரை முகட்டைப்பார்த்து தலையை ஒரு உலுக்கு உலுக்கி

 " தாயே சக்கம்மா என் கொட்டாரடி காத்த புண்ணியவதி தலமேல வந்திறங்கு
  அடங்காத கருப்பன், கம்பெடுத்தால் அரக்கன் அருவாள கீழபோட்டு கிட்டவாடா
  வெள்ளக்குதிர ஏறி வீச்சருவா கையிலேந்தி விளையாட ஓடிவாட சுடலமாடா
  அள்ளி முடிச்சு, ஆங்காரம் எறக்கி வச்சி ஈஸ்வரியே எந்தாயீ  ஈசானமூலயில வந்து நில்லு
  தொட்டது தொலங்கும், தோட்டம் வச்சாக்காய்க்கும் எனப்பெத்த மகராசி முத்தரசி முன்னவாம்மா
  மார்மேலும் தோல்மேலும் தூக்கிவளத்து குருவுங்கொலையும் குடுத்த எங்கய்யா எல்லாத்தையு அடக்கி வையி "

இரவு பத்து மணிக்கு சரணமுழக்கம் ஆரம்பிக்கும். எட்டு மணிக்கே ஊரடங்கிப்போகும் கிராமத்தில் குறிசொல்லும் ராசாச்சின்னயாவின் உடுக்கையடி கொலைப்பதற வைக்கும். இருந்தாலும் பூஜை முடிந்து திங்கப்போகும் தேங்காச்சில்லும் வாழைப்பழமும் பயத்தை ஓரங்கட்டும்.

குறிபார்க்க வருபவர் முதல்நாளே சொல்லிவிடவேண்டும். அன்றைக்கு காலையில் இருந்து பச்சைத்தண்ணி பல்லில் படாது விரதமிருப்பார். சாணிமெழுகி சாம்பிராணி புகையவிட்டு வீடு சுத்தப்படுத்த வேண்டும். அணைக்கரைப்பட்டி பொத்தையக்குடும்பனிடம் ரெண்டு பாட்டில் சாராயம் வாங்கிவைக்கச் சொல்லிவிடுவார். பூஜைசாமன்கள் எடுத்து அடுக்கிவைக்க, அருள்வந்து தடுமாறுவார் அப்போது தாங்கிப்பிடிக்க நான்கு எளவட்டங்கள் வேண்டும். பூஜை முடிந்து கொடுக்கும் கூவாத சேவலும் காசும் மறுநாளைக்கு அரிசிச்சோறும் கறிக்குழம்புமாகும்.

தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். ராசாச்சின்னையா சிலநேரம் வெளியூர் போய் குறிசொல்லுவார் லீவு நாட்களில் நானும் போவேன். பெத்துரெட்டிபட்டி ராமசாமி நாயக்கரின் வண்டிச்சக்கரம் காணாமல்போனது. அவர்கள் அதைச் சொல்லமல் விடுகதையை போல  ஒரு பொருள் களவு போய்விட்டது குறி பார்க்கவேணுமென்று சொல்லி  மூணு நாளாச்சு. அத்தனை சாமிகளுக்கும் சேர்ந்து முக்கி முக்கி உடுக்கடிச்சாலும் களவுபோன பொருள் என்னவெனக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறலெடுத்துவிட்டது ராசாச் சித்தப்பாவுக்கு. பெத்து ரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கம்மாப்பட்டி, கரிசல்பட்டி, செவல்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தையால் போன்ற ஊர்கள் கரிசல் விவசாயம் பெருத்த நாயக்கமார்களின் ஊர்கள். இங்கு குறி தோத்துப் போனால் பிறகு வருசம் முழுக்க  குண்டிவழியா வேர்வை வடிய கல்லுடைக்க, கருதறுக்க லோல் படவேண்டும். மூன்று தலை முறையாய் பார்த்த சோசியத் தொழில் கெட்டுப் போகும். இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சினை.

மூன்றாம் நாள் ஒரு பீடியைப்பத்த வைத்துக்கொண்டு காலாற நடந்து போய் படப்படியில் ஒண்ணுக்கிருந்தார்.
திரும்ப விறு விறுவென வந்தார். தீர்மானமாக உட்கார்ந்தார். ஒரு பத்துநிமிடம் காட்டப் பத்தி கரையப்பத்தி பாட்டுப் பாடினார்,
அனுபவம்,சமூகம்,குறிபார்த்தல்
'' யாரப்பாத்து சோதன பண்றீங்க இந்தச் சொடல மாடங்கிட்டயா வெளாட்டுக் காற்றீங்க ன்னு "

ஒரு அதட்டுபோட்டார்.

" காணாமல் போனது வலது பக்க வண்டிச்சக்கரம், எடுத்துட்டுப் போன கொம்பனுக்கு மேல்திசையில ஊரு, மேலே ஏதுங் கேள்வி இருந்தாக் கேளு "

சொல்லி முடித்ததும் ஆடிப்போனார் ராமாசாமி நாயக்கர். கூடப்போன நாங்களூம் ஆடிப்போனோம்.
ஊரு வந்து ஒரு வாரம் சாராயம்தான், வெடக்கோழி தான். ஆவல் அடங்காமல் ஒருநாள் கேட்டபோது,
தொழில் ரகசியம் வெளியே சொல்லாதே என்ற பீடிகையோடு சொன்னார். வைக்கோல் படப்புக்கு மறுபக்கம் பேன் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்களிருவர் பேசிக்கொண்டது அவரது காதில் விழுந்ததாம்.

 "சாமி சுத்து சுத்து ண்ணுதா, செப்பும் வண்டிச்சக்கர ண்ட்டா செப்பும் "
இவ்வளவு கெடச்சா போதாதாப்பா.அதுக்கப்புறம் சித்தப்பன் ஆடித் தொலச்சிறமாட்டேனா என்று சொன்னார்.

'அப்போ யாருவேண்ணா குறி சொல்லலாமா சித்தப்பா'
'ஒழுங்கா படிப்பக்கவனி'
'அப்போ சாமி இருக்கா இல்லியா'
'லூசுப்பெல லூசுப்பெல'

சொல்லிவிட்டு,அணைந்துபோன பீடியை மீண்டும் பற்றவைத்தார்.காலச்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நசிந்துபோனது விவசாயத் தொழில் மட்டுமல்ல, பண்ணையடிமை முறையும். தீப்பெட்டி ஆலையின் காவலராகிக் காலம் தள்ளும் ராசாî சித்தப்பாவின் முகதைச்சுற்றி இப்போதும் வட்டமிடும் பீடிப்புகையில் என்ன நினைவுகள் மிதக்கும்.

20.6.10

ராவணன்- கைதேர்ந்த வியாபாரிகளின் கடைச்சரக்கு.

பேருந்தில்,ரயிலில்,வங்கியில்,ரேசன் கடையில்,புண்ணியத்தலங்களில் இப்படி எங்கெங்கு போனாலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.ஆனால் அந்த ராட்ஷச திரையரங்கில் சனிக்கிழமை மாலை மூன்று நூறு ஜனங்களே உட்கார்ந்திருப்பது விநோதமாக இருக்கிறது. எம்ஜியார் படம் பார்க்கப்போய் நெரிசலில் சிக்கி இறந்த வரலாறுகளும்,ஹவுஸ்புல் போர்டுகளும் ஒரு சஹாப்தமாக கடந்தே போய்விட்டது.சினிமாவைத் தியேட்டரில் பார்க்கிற மோகம் குறைந்துபோயே போய்விட்டது. இதோ வந்த முன்னூறுபேர்களிடம் ஒரு  இரண்டாயிரம் பேருக்கான தொகையை கட்டணமாகப் பிடுங்கிக்கொண்ட திருப்தியில் வெள்ளித்திரை ஒளிர்கிறது. கோவில்பட்டி போன்ற சிறிய நகரத்திலேயெ நூறு ரூபாய்க்கு நுழைவுச் சீட்டு விற்கமுடியுமானால் சென்னை போன்ற பெரு நகரங்களை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இந்தக்கதையில் வரும் சம்பவங்களும்,பாத்திரங்களும் கற்பனையே.உயிரோடு இறக்கிற அல்லது இறந்துபோன யரையும் நினைவுபடுத்தினால் அது தற்செயலானதே. என்கிற அறிவிப்போடு தொடங்குகிறது கோடிக் கணக்கான பணத்தைக் காவு வாங்கிக்கொண்டு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் முன்னே தள்ளிக்கொண்டு வந்த ராவணன். மனிரத்னம், சுகாசினி,விக்ரம் , ஏஆர்.ரஹ்மான், உமறுப்புலவர் போன்ற பெயர்களைத் தவிர ஏனையப் பெயர்களெல்லாம் ராமாயணம் சீரியலில் வருகிற பெயர்களாகவே வருகிறது.அந்த சீரியலைப்பார்க்காதவர்கள் இந்தப்படத்தை தைரியமாகப் பார்க்கலாம்.

கதை.
சாத்தூர் ஏவீஸ்கூலில் அண்ணாமல என்கிற ஒரு சயின்ஸ்வாத்தியார் இருந்தார்.'ராமம்பொண்டாட்டிய ராவணந்தூக்கிட்டுப் போனான்,ராமம்போய் சண்டபோட்டு கூட்டிட்டு வந்துட்டான் இது தாண்டா ராமாயணம், பாடத்தக்கவனி, அவகாற்றோவின் கற்பிதக்கொள்கையின்னா' என்று ஒருவரியில் கதையை முடித்துவிட்டு பாடத்தை துவங்கிவிடுவார்.அதே ராமாயாணம் தான் கதை.விபீடணன்,சூர்ப்பநகை,அனுமன்,ராமன்,சீதை எனும் புராணப்பாத்திரங்களை அப்படியே அட்சர சுத்தமாக இந்தப்படத்தில் eguate செய்துகொள்ளலாம். அதே நேரம் வீரப்பனின் சாயல் தெரிந்தாலும் அதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

முழுக்க வட இந்திய மலைமுகடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. ரவ்வும் பகலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.'சோ' வெனப்பெய்யும் மழையில் நம்ம சீயான் படுத்து குறட்டை விட்டுத் தூங்குகிறார்,மழையிலே கிடாக்கறியும் மீனும் சமைக்கிறார்கள்,மழையிலே ஆடிப்பாடுகிறார்கள்.மணிரத்னம் படத்தில் எப்படியும் ஒரு மழைப்பாட்டு வந்துவிடும் ஆனால் இந்தப்படம் முழுக்க மழையிலேதான்.எங்கு பார்த்தாலும் பசிய காடுகள்,செழிக்கச் செழிக்கத் தண்ணீர் கிடக்கிறது.மலைவாசியா,ஒடுக்கப்பட்டவனா என்கிற அடையாளமில்லாத விக்ரம் அண்ட் கோ அரண்மனைகளிலும்,கோவில் முகடுகளிலும் விழாக்கொண்டாடுகிறது. கதைக்களம், மொழி,வட்டாரவழக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாமே குழறுபடிகளாகவே தொடர்கிறதால் நம்பகத் தன்மை கடுகளவும் இல்லாமல் பாண்டசித்தன்மையே மேலோங்குகிறது.

கதை ராமாயணத்திலிருந்து விலகி சீதையின் கற்பு குறித்த மறுவாசிப்புக்கு உட்படுத்துவதற்கு நெருங்கிப்போய் மீண்டும் கற்பே பிரதானம் என்கிற நீதியைத்தூக்கிப் பிடிக்கிறது.அதனாலேதான் இறுதிக்காட்சியில் திடீரென முளைக்கும் ப்ருதிவிராஜ் துள்ளத்துடிக்க விக்ரமைப்போட்டுத் தள்ளுகிறார்.  அதனாலேதான் ப்ரியாமணி கூட்டுக் கற்பழிப்பில் ப்ருதிவிராஜ் இருக்கிறாரா இல்லையா என்பதை மங்கலாக்கிவிட்டு விடுகிறார் டைரடக்கர்.விக்ரம் ஏன் பக் பக் பக், டண்டனக்க என்கிற வார்த்தைகளை மேனரிசமாக்குகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

காமிரா,படத்தொகுப்பு,இசை இன்னபிறவெல்லாம் இருக்கிறதே அதைப்பத்தி ஏன் சொல்லவரவில்லை என்கிற கோபமும் கேள்வியும் வரலாம்.ஒரு நல்ல உயர் தொழில் நுட்ப காமிரா,பல ஆங்கிலப்படங்கள் பார்ப்பதற்கான கொடுப்பினை,துட்டத் தண்ணியாச் செலவழிக்க ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் போதும் என்ன தப்பும் செய்யலாம்.  சரிசெய்வதற்கு இருக்கவே இருக்கிறார்கள் நம்ப CG டிபார்ட்மெண்ட் இளைஞர்கள்.அதைவைத்து என்னமாதிரியான பிரம்மாண்டங்களையும் உருவாக்கிவிடலாம்.அந்த பிரம்மாண்டம் கதையில்லாது போகுமானால் காமிக்ஸ் லெவலுக்கும் கீழே போய்விடும்.

உழைப்பும் முயற்சியும் இருக்கிறதே அது கண்ணுக்குத் தெரியவில்லையா என்கிற எதிர்விமர்சனம் வரும்.எங்கூர்ல,  அதான் சிவகாசியில, ஒரு பட்டாசுக்கம்பெனி முதலாளி இருந்தார்.அவர் சீசன் காலங்களில் 
விடிகாலையில் எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு குற்றாலத்துக்குப் போய், குளித்துவிட்டு, அவர் கட்டிக்குளித்த ஈரிழைத்துண்டு காய்வதற்குள் சிவகாசி திரும்பிவிடுவாராம். ஒரு நாள் ரெண்டு நாளில்லை மூனு நாலு மாசத்துக்கு தினம்தினம் இதே சோலியாய் அலைவாராம். இதிலும் கூட அவரது அயராத உழைப்பு,திறமை,தியாகம் எல்லாம் அடங்கி இருக்கிறது.

உலகமே ஆஹா ஓஹோன்னு பாராட்டுது,எங்க பாத்தாலும் ராவணன் ராவணண் என்கிற பேச்சே அடிபடுகிறது. எல்லோரும் பாராட்டுகிற ஒரு படைப்பை எப்படிக்குத்தம் சொல்லலாம்.தயாரிப்பாளர் யார்.ரிலையன்ஸ் நிறுவணம், அனில் திருபாய் அம்பானி.துணியில் ஆரம்பித்து, ,அலைபேசி இப்படி நூற்றுக்கணக்கான பொருள்களை தனது வியாபார உத்தியால் விற்றுவிடுகிற அதே ரிலையன்ஸ்தான். குடும்பச்சண்டையை, பங்காளி சண்டையயே மூலதானமும் விளம்பரமும்,வியாபராமும் ஆக்கிய அதே ரிலையன்ஸ்தான். இந்திய மூளைகளில் ஆழப்பதிந்து கிடக்கிற ராமாயணத்தை விற்கவந்திருக்கிறது,அதுவும் பாப்புலர் மீடியா மூலம்.ராமாயணம் நெடுந்தொடராய் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த எண்பதுகளில், ஒரு ஞயிற்றுக்கிழமை, மின்தடையினால் ஒளிபரப்பமுடியாமல்
போனது. ஆத்திரமடைந்த பக்தர்கள் ஒளிபரப்பு நிலையத்தையும்,மின்வாரிய அலுவலகத்தையும் உடைத்த பெருமையுடைத்து இந்திய பாரம்பரியம். ஆந்திரா,உபி,மபி,ராஜஸ்தான்,மராட்டா மாநிலங்களில் தொழிற்சங்க மாநாடுகளில் கூட ராமர் படத்தை வைத்து பூஜை நடத்திய பிறகே மாநாடுகள் துவங்கும் தொண்மம் ஒட்டிக்கிடக்கும் இந்தியாவில்,இது இந்த ஏக போகம் சாத்தியமே.

இந்த அருதப்பழய்ய கதைக்கு 120 கோடி ரூபாய் செலவாம்.மீண்டும் சிவகாசி தான்.அங்கே இரண்டு முதலாளிகளுக்குள் போட்டி வந்ததாம். நீ பெரியவனா நான் பெரியவனா போட்டி.'ஓந்துட்டுக்கும் ஏந்துட்டுக்கும் ஜோடி போட்டுக் கிடுவமா ஜோடி'  என்றபோட்டி.ஆளுக்கு கால்கிலோ அரிசி கொடுத்து ஆக்கச் சொன்னார்களாம் யார் சீக்கிரம் ஆக்குகிறார்களோ அவரே பெரிய பணக்காரர். ஒரே ஒரு நிபந்தனை அடுப்பெரிக்க ரூபாய் நோட்டை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்'.இதை நாம் எந்த வகையில் சேர்ப்பது சமையல் வகையிலா,போட்டி வகையிலா, பொழுதுபோக்கு வகையிலா.அரசாங்கத்தை ஏமாற்றி, தொழிலாளர் வயிற்றிலடித்து, நுகர்வோரை மொட்டையடித்துச் சேமித்து வைத்த கொழுப்புக்கும் திமிருக்கும் உரசிப்பார்க்கிற இடமாக இப்போது  சினிமா கிடைத்திருக்கிறது.

மணிரத்னத்துக்கு கதைப்பஞ்சம் வந்துவிட்டது என்பதெல்லாம் நமது ஆதங்கம். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் கலையா, வியாபாரமா என்கிற கேள்வியில்  கண்ணை மூடிக்கொண்டு வியாபாரப் பக்கம் நிற்கும் யாரிடமும், நாம் இப்படி கதையை எதிர்பார்ப்பது தவறு.,ஏமாற்றம் தான் மிஞ்சும்.எனக்கு பலகாலமக ஒரு தீராத சந்தேகம் இருந்தது. தமிழ் ஹீரோ,ஹிந்தி ஹீரோயின், ஹிந்தி வில்லன் இந்தக் காம்பினேசனில் மட்டுமே படமெடுக்கிறாரே வித்தக்காரன் மணிரத்னம் என்று.அது மார்க்கெட்டிங் உத்தியென்பது ரொம்ப லேட்டாகத்தெரிந்து கொண்டேன்.ரேணிகுண்டா படத்தை ஒரு பத்துதரம் பார்க்கவேண்டுமென்கிற இம்போசிசன் குடுக்கனும்.

கடைசியில் நடிப்பைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும்.நாற்பது ஐம்பது படம் நடித்தால் எல்லாரும் கைதேர்ந்த நடிகராகிவிடலாம். பயிற்சிதானே ?.ஆனால் ஓயாத மழையிலும்,பனியிலும்,ஆத்துக்குள்ளும்,கரண்டே இல்லாத அந்த பிராந்தியத்திலும் ஐஸ்வர்யா ராயின் உதட்டுச்சாயம் குறையாமல் பார்த்துக் கொண்ட அவரது சொந்த நடிப்புத்திறனையும்,டெக்னீசியன்களின் ஒத்துழைப் பையும்  என்ன பாராட்டினாலும் தகும்.

ராமாயணத்து ஒளிவட்டமும்,மணிரத்னத்தின் ஒளிவட்டமும் குறையக்கூடாது என்று நினைக்கிற எல்லோருக்கும் பிடித்தமான வியாபாரப்படைப்பு இது.

19.6.10

பழசும் புதுசும்

முன்னமெல்லாம் நடுவழியில்
வாகனங்களை நிறுத்தி
காசுபுடுங்கினால் அதுக்குப்பேர் வழிப்பறி.

இப்போ அதே சோலியை யூனிபார்ம்
போட்டுக்கிட்டு செஞ்சா
அதுக்குப்பேர் போக்குவரத்து காவல்துறை
இனிமே ரசீது கொடுத்து புடுங்குவான்லா
அதுக்குப்பேர் டோ ல்கேட்.

முன்னமெல்லாம்
ஆலும் வேலும் அவனவன் பல்லுக்குறுதி
இப்பெல்லாம்
பல்விளக்கினால் ப்ராக்டர் அண்ட் கேம்பிள்
கல்லாவுக்கு உறுதி.

முன்னமெல்லாம் பேசாத ஆளைப்பாத்து
பேச்சிமுத்தா அவம் பேசக்காசுகேப்பானின்னு
கேலி பேசுவாங்க.
இப்பல்லாம் யார் யாரோட பேசினாலும்
எடுத்து வைக்கனும் நிமிசத்துக்கு 49 பைசா.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

அரசியலில் புகுந்து அள்ளிக்கொட்டுதல்,
சினிமாவில் சேர்ந்து தூத்திக்கொள்ளுதல்,
பத்து வட்டிக்குக்கொடுத்து பறித்துக்கொள்ளுதல்,
பச்சை நெலத்த கூறுபோட்டு ரியல் எஸ்டேட் நடத்துதல்,
அன்னயாவினும் சுலபவழி ஆங்காங்கே
ஆங்கிலப்பள்ளி எஞ்சினீயரிங் கல்லூரி கட்டுதல்.

18.6.10

சூப்பர் சிங்கர் ஜூனியர்களும், கலைக்கூத்தாடிச் சிறுவர்களும்.

எங்கிருந்தாவது வந்து செவிகுளிரும்,நரம்புகளூடோ டி உதிரம் உருகும்,தலையாடும் காலாடும், சூழல் நிராகரித்துச் சிந்தனை குதியாட்டம் போடும்,இசையால் குழந்தைத் தன்மையைக்கொண்டு வரமுடியும்.

ஒருவருடம் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் கரைந்துபோனது என் பல முன்னிரவுகள்.களிமண் குழைந்து குழைந்து பாண்டமாகும் நுட்பமும்.றுங்கல் உடைந்து உடைந்து சிலையாகும் நுட்பமும் பயிற்சியால் சாத்தியப்படும். அதை நிரூபித்துவிட்டார்கள் அந்தக் குழந்தைகள். ஸ்ரவனைக்குழந்தை என்று ஏற்றுக்கொள்ளத்தான் கொஞ்சம் லாஞ்சனையாக இருக்கிறது. வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக்கண்டு சில நேரம் வியக்கவும் சில நேரம் முகம் சுழிக்கவும் நேர்ந்தது. அந்த ஸ்ரீகாந்த் சொந்தமாக மூச்சாப்போகத்தெரியாத வயசில் 'ஏரிக்கரைமேலே போறவளே பொன்மயிலே' பாடும் போது அவன் தொலைத்த பால்யம் நினைவுக்கு வராமல் போகாது.

ஒரு வாரமாகக் கொண்டாட்டம்,எதிர்பார்ப்பு,பார்வையாளர்களை ஆர்வத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்த வியாபார உத்தி இவைகளை ஸ்டார் தொலைக் காட்சி  கச்சிதமாக்கியது. ஆச்சு. நேற்று எதிர்பார்த்தபடியே அல்கா அஜீத் முதலாவது வந்துவிட்டாள்.அவளது குரலில் ஒரிஜினல் பாடல்கள்கூட கூனிக்குருகும் நுனுக்கமும் பயிற்சியும் பொதிந்து கிடந்தது.எனக்குப்பிடிக்காத பல பாடல்களை அவளின் குரல் விருப்பப்பாடல்களாக உருமாற்றித்தந்தது.
பலநேரங்களில் அலுவலக, இயக்க, குடும்ப நெருக்கடிகளையும் இறுக்கத் தையும்  தளர்த்திவிட்டது  அல்காவின் குரல் தேடிய இந்த  நிகழ்ச்சி.

சின்னச்சின்ன இழப்புகளையும்,தோல்விகளையுமே தாங்க முடியாத இந்த நடுவன் வாழ்க்கை அதற்கான மாற்றை இப்படி கூடத்தில் உட்கார்ந்து வரித்துக்கொள்கிறபோது.யுகயுகமாய் தோத்துப்போன உழைப்பாளர்கள் எம்ஜியாரை,ரஜினியை,அஜித்தை நாடிப்போவதில் வியப்பில்லை. வெள்ளத்தனைய நீர்மட்டம். 'விரலுக்கு, விரலுக்குத்தக்கன வீக்கம்.உரலுக்கு உரலுக்குத்தக்கன வீக்கம்'.

சம்பாதிப்பதில் சரிபாதி சந்தோசத்துக்குச் செலவிடும் வளமை கொண்டது மேலை நாடுகள்.வார இறுதியென்பது அவர்களுக்கு ஒரு பொங்கல், தீபாவளியைப் போலவே கழியுமாம். வெறும் ஓய்வோடு நில்லாது உற்சாகத்தை பாடத்திட்டமாக்கும் அவர்களது வாழ்வில் உடனுக்குடன் புத்துணர்வு ரீசார்ஜ் செய்யப்படுகிறது.வறுமையும், அசமத்துவமும் குறைச்சலாகி அன்றாடத் தேவைகளுக்கு அவர்கள் உயிரைப்பணயம் வைக்கத்
தேவையில்லாத வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.

பேருந்து நிறுத்தத்தில் ஒரு தாய் தாளம் உறும,தந்தை சாட்டையடிக்க, தனயன் தட்டேந்த கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு தந்தையின் உதிரத்தை நெஞ்சிலேந்தும் அந்த அஞ்சு வயசுப்பிஞ்சுக் குழந்தை, பெயர்தெரியா நாடோ டி ஸ்ரீகாந்தைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறாள். பின்பக்கமாக வளைந்து குதிகாலைப்பிடிக்கிறபோது ஒட்டிப்போய் மறைந்து விடும் அவள் வயிறு திறந்து கிடக்கும் வான்வெளியில் வீசுகிறது ஒரு பசியின் இடிச் சத்தத்தை.

ஒரு உச்சுக்கொட்டுதலில் நகர்கிறது நமது பொழப்பும் அன்றாடமும். இளகிப்போன மனசாட்சியும்,கூனிக் குறுகிப்போன பொறுப்புணர்ச்சியும் சில்லைரையாய்ச் சிதற அவளின் ஒருவேளை வயித்துப்பாடு கழிகிறது.

அந்த உழைப்பும் நேர்த்தியும் பயிற்சியும் அன்பார்ந்த ஸ்டார் தொலைக் காட்சியின் காமிராவுக்குள் வருமா ?

ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா ?.

17.6.10

எளியோரைப் பகடிசெய்யும் ஊடகமும்,இந்தியரைப் பகடிசெய்யும் ஆண்டர்சனும்.

அந்த அதிகாலை வேலையில் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் அவர் வந்து இறங்கினார். அந்த தேநீர்க்கடையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மேல் சட்டையைக் கழற்றி ஓரப்பெட்டியில் வைத்து மூடினார்.கைலிஒயை மடித்துக்கட்டிக்கொண்டு இடுப்பில் கொக்கியை சொருகிக்கொண்டு கிளம்பிப்போய் விட்டார்.அங்கே தேநீர் அருந்திக்கொண்டிருந்த சூட்டுப்போட்ட கனவான்களும், இன்னும்சிலரும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.அவர் கடந்துபோனதை உறுதி செய்துவிட்டு இப்போது விமர்சனங்கள் வெளியேரின.

'பைக் இல்லாத கொத்தனார் ஊர்ல கிடையவே கிடையாதுங்க,ரொம்பத்தான் முன்னேறிட்டாய்ங்க'
'இது கூடப்பரவால்ல சார், நேத்து கக்கூஸ் கழுவ வந்தவன் பசக்குனு செல்போன எடுத்து பேசுறான்'
டீக்கடை நீதிமன்றம் தனது தீர்ப்புகளைச் சொல்லத்தொடங்கியது.

இப்படித்தான் நமது பொதுப்புத்தியில் பல அழுக்குகளும், சாக்கடைகளும் திட்டமிட்டுத் திணிக்கப் பட்டிருக்கிறது. காலங்காலமாக, ஆடை அணிகலன்கள், படிப்பு,ஞானம்,சௌகர்யம்,சுத்தம் எல்லாமே ஒரு சாராருக்குமட்டும். அதாவது சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது எனவும்மப்படியல்லாதவர்கள் அதை உபயோகிக்கிறபோது அவர்கள் ஒரு கேலிப் பொருளாகச் சித்தரிக்கப்படுவதுதான் இங்கிருக்கிற கொடுமை.

முழுக்கால் சாராய் என்பது ஆங்கிலேயர்களின் ஆடைவகை.அதை அணிவதற்குத் தகுதியானவர்கள் முதலில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இன்னபிற மக்கள் என்பதை காலங்காலமாகச் சினிமாக்கள் நமது பொதுப்புத்தியில் ஏற்றிவைத்துவிட்டது அதனால்தான் ஞண்ணாச்சி பாரதிராஜா கூட  சப்பாணி சூட்டுப்போட்ட காட்சியை மிகப்பெரிய விகடக்காட்சியாகச் சித்தரிப்பார். பூ படத்தில் சசிக்குமார் ஒரு ஆட்டுக்காரச்சிறுவன் கைப்பேசி உபயோகிப்பதை உலகமகா சிரிப்பாணியாக்குவார். இதற்கு இவர்கள் டூயட்டில்,சண்டைக்காட்சியில்கூட சமரசம் ஆகிவிட்டுப்போயிருக்கலாம்.

கழிப்பறை சுத்தம்செய்ய வருகிற பெண்கள் குடைப்பிடித்துக்கொண்டு வருவது போலவும்,பிச்சைக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருக்கிற மாதிரியும் சித்தரித்துக் கிச்சணங் காட்டுவதுதான் திரைத்துறையின் சிரிப்புக் கிட்டங்கியில் கிடக்கும் நாற்றம் பிடித்த சிந்தனைகள்.ராசாவீட்டு நாய் சிம்மாசனத்தில் ஏறலாம்,சலவைக்காரர்வீட்டு நாய் வெள்ளாவிப்பானையில் ஏறலாமா என்கிற பழமொழிகளை அப்படியே கணினி யுகத்துக்கு உருமாற்றம் செய்கிறதிந்த பிரபல திரைப்படங்கள்.

எளியவர்களை நசுக்கவும், வலியோருக்கு ரத்தினக்கம்பளம் விரிப்பதும்தான் காலங்காலமாக பிழைப்பு நடத்தும் தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.அல்லது தர்மமாக ஓதப்படுகிறது.அதைத்தான் கலை உலகம் தனக்கிட்டபணியாக தலைச்சுமையாய் விற்றுவருகிறது.

பெப்சி குளிர்பாணத்தில் நச்சுத்தனமியிருக்கிறதென்னும் விவாதம் சூடேறிக்கொண்டிருந்த காலத்தில் தான் சிந்தனைச் செல்வி ராதிகாவும்,விவேக்கும் பெப்சி,கோக் குளிர்பாணங்களின் சரிவுக்கு முட்டுக்கட்டையக தாங்கி நின்றார்கள்.ஐஎஸ்ஐ,ஐஎம்ஏ,போன்றவற்றோடு போட்டிபோட்டுக் கொண்டு அவர்களுக்குத் தரச்சான்றிதழ் வழங்கினார்கள்.
ஒருபாட்டில் தண்ணீர் பதினைந்து ரூபாய்க்கு விலைபோகிற அவலத்தைச்சொல்லுவதற்கும்,பத்துரூபாய்க்கு ஃபேர்அண்ட் லவ்லி களிம்பு வாங்கித்தடவினால் கருப்பு மாறிச் சிகப்பாகிவிடலாம் என்கிற பித்தலாட்டத்தை விமர்சனம் செய்வதற்கும் தில்லில்லாத சிங்கங்கள்
ஓங்கி ஒரு அடி அடிச்சா ஒன்னர டன் வெயிட்டுறா என்று ஊளை விடும்.

ஒரு ஆடை, ஒரு வாகனம், ஒரு அலைபேசி உபயோகப்படுத்துவதில் கூட ஒவ்வாமையை ஒளித்துவைத்திருக்கும் சமூகம் எப்படி நீதியை ஒரே தட்டில் வைத்து வழங்கும் ? 

பழனிக்குபாத யாத்திரை போகிறமாதிரி போபால் விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணூறு கிலோ மீட்டர் கத்திக்கொண்டே டெல்லிக்கு வருடா வருடம் போவது ஊடகங்களின் தப்பித்தவறிக் கூட காண்பிக்கப் படவேயில்லை. எண்பதுகளின் இறுதியில் துவங்கிய வழக்கு தீர்ப்பாக இரண்டு தலைமுறை தாண்டிவிட்டது.ஆனாலும் யூனியன் கார்பைடிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை இன்னும் படிந்துகிடக்கிறது. அதைவிடக் குரூரமாக ஆட்சியாளர்களின் பாரபட்சம் நீதித்துறையில் படிந்து கிடக்கிறது. அது குறித்த ஸ்மரணை இல்லாமல் 27 வருடங்கள் கழிந்துபோய்விட்டது.எங்காவது உரிமை கேட்டுப்போராட்டம் நடத்தினால்  அரசு பிருஷ்டத்தில் ஒளித்து வைத்திருக்கும் தனது இரும்புக்கரத்தை எடுத்து அப்பாவி மக்களை அடக்குகிறது.ஆண்டர்சன் விவகாரத்தில் அதே இரும்புகரம் உருகி சாக்கடையாய் ஓடுகிறது.

மும்பை தாஜ் ஒய்யார விடுதி தீவிரவாதத் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் முடியவில்லை அதற்கான தீர்ப்பு சமீபித்து  விட்டது. உயிர்ச் சேதக் கணக்குப்படிப் பார்த்தால் போபாலில் நடந்தது மும்பைத் தாக்குதலைக் காட்டிலும் 200 மடங்கு தீவிரமானது. அது ஒரு இனப்படுகொலை. அந்த வீரமும் விவேகமும் எட்டாயிரம் உயிர்களை ஒரே இரவில் பலிகொண்ட போபால் விவகாரத்தில் ஏன் காட்டமுடியாமல் போனது ?. நீதித்துறையின் கைககளைக் கட்டிப் போட்டது எது ?. எனில் ஒரே வகையான நீதி வழங்க முடியாமல் போன அது, அழங்கரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து என்பதே தகும்.

ஆமாம் நண்பர்களே எதாவது ஒரு சினிமாப்படத்தில் ஒரு கணம் கடந்து போக்கும் காட்சியாக அல்லது ஒரு வரி வசனமாக இடம்பெற்றிருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனால் தான் இது வரை 23 ஆயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆண்டர்சன் இந்தியர்களைப் பார்த்துக் கெக்கலிட்டுச் சிரிக்கிறான்.நரகாசுரக் குரலில் பகடி செய்கிறான். நாம் இன்னும் டீக்கடைப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு,'அங்கபார்றா அவன பேண்ட் போட்டுக்கிட்டு போறான்' என்றும் நமது கலாச்சார ஊடகம் 'அடடா நீங்களும் சங்கம் வச்சீட்டிங்களாடா' என்றும் கீழ்தட்டு மக்களைப்பகடி செய்வதிலேயே தனது சக்தியை விரயம் செய்துவிட்டு. நாங்க பிலிய சொலகால அடிச்சு வெரட்னோ஡மில்ல என்று பீத்திக் கொள்கிறவர்களாகிவிட்டோம்.

13.6.10

மொழியாக்கச் சிறப்பிதழ்

// இரண்டு சின்னப்பெண்கள் எலுமிச்சை பாணம் கொண்டு வந்தார்கள்.மாப்பிள்ளைப் பையன் எடுத்துக்குடிக்க ஆரம்பிக்கு முன்னே  மீண்டும் தன் தகப்பனிடம் காதில் குசுகுசுத்தான்.இந்த முறை அவர் முகம் சுழித்தார் எனினும் அவன் வெளியே ஓடினான்.கூட்டத்தின் கவனத்தைத் திசை திருப்ப ஐயா பீடி இருக்கிறதா என்று ரத்னாகரிடம் கேட்டார். பீடிக் கட்டைத் தேட அடுக்களைக்குப் போன ரத்னாகரின் கண்ணில் மாப்பிள்ளைப் பையனின் உருவம் தென்பட்டது.பாவம் பையனுக்கு பதட்டம் போல என்றபடி அவனைப் பார்த்தான். அசோக மரத்துக்கு அடியில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த அவன் முகம் கடுகடுப்பாக இருந்தது.முடிந்து திரும்பி வரவேண்டிய அவன் உறைந்து நின்றான் தலையை அண்ணாந்து பார்த்து தண்ணீரில் மூழ்கியவனைப்
போல பாவனை காட்டினான்.

மறுநாள் தரகர் வந்து பட்டாசுக் கடைக்காரருக்கு ருக்மினியின் பாட்டு பிடித்துப் போனதாகச் சொன்னான். தேதி குறிக்க வேண்டியதையும், மண்டபம் பிடிக்கவேண்டியதையும் சொல்லிக் கொண்டிருக்கும் போது ரத்னாகர் சஞ்சலத்துடன் தலையை ஆட்டினான்.காலையில் பேருந்தைப் பிடித்து குடைவீதிக்குப் போனான்.பட்டாசுக் கடையின் கல்லாவில் உட்கார்ந்திருந்த பையனின் தகப்பனார் வரவேற்றார். வருங்கால மாமனார் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லி பையனைக் குஷிப்படுத்தினார்.'அவருக்கு வணக்கம் சொல்லவேண்டாமா' என்று கேட்டுவிட்டு பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம் என்று சொன்னார்.அவருடன் பேசிக்கொண்டிருந்த போதே
பையனின் நடவடிக்கைகளைக் கவனித்த ரத்னாகர் அவனிடம் தனியாகப் பேசவேண்டுமெனக் கேட்டார்.

கடையை விட்டு நடந்த இருவருக்குள்ளும் மௌனம் கூடவே வந்தது.நெடுந்தூரம் நடந்த அவர்கள்  அனுமன் கோவிலுக்கருகே ஒரு ஆலமரத்தடிக்கு வந்தார்கள். அவனை உட்காரச் சொன்ன ரத்னாகர். கொஞ்ச நேரம் அவனைப் பேசவிட்டு அவனது முகம் உதடு,ஆகியவற்றைக் கவனித்தான்.திடீரென்று அவன் மணிக்கட்டைப்பிடித்து

'எங்கிருந்து இதை வாங்கினாய்,ரோட்டோ ரத்திலா?,லாட்ஜிலா?,இல்லை கட்டைச் சுவருக்குப் பின்னாலா?. //

0

சுல்தானின் பேட்டரி

ஆங்கிலம்-அரவிந்த் அடிகா
தமிழில்- எஸ்.காமராஜ்
மொழியாக்கச் சிறுகதையில் ஒரு சிறு பகுதி.





புதுவிசை (ஏப்-ஜூன் 2010 ) காலாண்டிதழில்.

மராத்தி, இந்தி, கவிதைகள்

சலீல் வாஹ,அமிதா கோகடே நிதின் குல்கர்னி,  தமிழில்- மதியழகன் சுப்பையா

சிறுகதைகள்.

மந்திரக்கண்ணாடி- மலையாளம் ;கிரேஸி        தமிழில்- உதயசங்கர்
நிர்வாணம் -ஆங்கிலம்; நர்கீஸ் தலால்          தமிழில்- ஆனந்தசெல்வி
சுல்தானின் பேட்டரி- ஆங்கிலம் ;அரவிந்த் அடிகா தமிழில்- எஸ்.காமராஜ்

மற்றும்

மரு.உமர்பாரூக்,தஞ்சை சாம்பான்,ந.இரவீந்திரன்,எவிடென்ஸ் ஆய்வறிக்கை,முருகவேல்,முனைவர் சி.லட்சுமணன்,கோ.ரகுபதி,சுகவன முருகன் ஆகியோரின் கட்டுரைகள்.

விமர்சனம்

3 பத்தாண்டுகளும் உதயசங்கர் சிறுகதைகளும் - அப்பணசாமி

12.6.10

கண்ணுக்குத் தெரியாத பெருஞ் சுவர் - 1

புழுதியைகிளப்பிக்கொண்டு ஊருக்குள் போலிஸ் ஜீப் நுழைந்தது கொட்டாரத்தில் முள் ஒடித்துக்கொண்டிருந்த சின்னப்பொண்ணு தான் முதலில் பார்த்துச் சொன்னாள். கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தவர்கள், வாலை விட்டு வந்து உலை வைத்தவர்கள் , எல்லாரும் அங்கங்கே கூடினார்கள். ஊர் மடத்தில் சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் அலறிபுடிச்சி இடத்தைக்காலி பண்ணிவிட்டு ஓடினார்கள். பொன்னுச்சாமி பயத்தில் விரித்திருந்த கோரப்பாயையும் சீட்டுக்கட்டையும்வேலிச்செடிக்குள் எறிந்து விட்டு ஓடினார்.  இன்னு செத்த நேரம் இருந்திருக்கணும் கூப்டு போயி நாலு நாளைக்கு ஒலமூடியில் ஒண்ணுக்கிருக்க வசிருப்பாக என்று  தன் புருசன் கருப்பசாமியைப்பார்த்து கனகமனி சொல்லிக்கொண்டிருந்தாள். கள்ளச்சாராயம் விற்கிற நடராசன் குறுக்கால ஓடி கண்மாய்க்குள் மறைந்துகொண்டான்.

ஊர் நடுவே வந்த போலிஸ் ஜீப் சிறிது நேரம் நின்றது, உள்ளிருந்து ஒரு காவலர் காளியப்பன் வீடு எது எனக்கேட்டார்மூணாவது போஸ்டுக்கு பக்கத்துல கிழக்கால பாத்த வீடு என்று சொன்னார்கள்.

யே எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் அவஞ்செத்து மூணு வருசமாச்சே நல்லா அடையாளஞ்சொல்ற ,
என்று கனகமணி சொல்லியது.

ஏம்மா ஊதாச்சேல இங்க வா

என்று கூப்பிட்டார் அதே காவலர். கனகமணி வரவில்லை

ஏ ஒன்னத்தா திமிரப்பாரு, இங்கெ வா

ஊராம்பொண்டாட்டியெ நீ வா போ ன்னு கூப்பிட்டிட்டு, திமிராண்ணு நம்மளப்பாத்து கேக்குதப்பாரு, இது சாயம்போன செகப்புச்சேல, ஊதாச்சேலயா, ரெம்பத்தா... ஏ சனங்கா அவுகளே தேடிக் கண்டுபிடிக்கட்டும்.

ஆய்வாளர் இறங்கி வந்து கேட்டார்.

'சார் மாரியப்பன், காளியப்பன்னு கேட்டா ஊர்ல முக்காபாதிப்பேர் வந்துருவாங்க, நீங்க தேட்றது காளியப்பன் ,மேலத் தெரு, அந்தா மேக்க இருக்கு'.
ஜீப் ஒரு வளையம் அடித்து திரும்பி  மேலத்தெருப்பக்கம் போனது பின்னாலே நாய்களும் விரட்டிக்கொண்டு போனது.

அந்ததெருவுல இருக்குற அத்துண பேரையு அள்ளி போட்டுக்கிட்டு போகணும். கொக்கரகுளத்துஅந்தோணியம்மா சொன்னதும்.

'ஏடி தப்புச்செஞ்சவுகளுக்கு தண்டண குடுத்தாலே போது, இவனுக போறதப்பாத்தா வேற ஏதோ கோக்கு மாக்கு நடந்திருக்கணும். எப்பிடிப் போம்பள அப்பிடியே செப்புச்செல கெணட்டா இருப்பாளே, ஒவ்வலன்னா வேற கண்னுதெரியாத காட்டுக்கு கட்டிக்குடுத்துருக்காலாம், பொம்பளப் பொறப்புகளப்போல தண்ணிக்கு தரைக்குமா உசுரச் சொமந்துக்கிட்டு அலஞ்சிருப்பா, சாகுற வயசா, ரதி, ரதி, கொலகாரப்பாவிக'.

சொல்லிக்கொண்டே கண்ணைத் துடைத்தாள்.சுத்தியிருந்த ஆணும் பொண்ணும் கண்கலங்கியது.

'எப்பிடி வாஞ்சையான நாச்சியா ஒரு நாளு வித்தியாசம் பாக்காது எக்கா தங்கச்சி ன்னு கூடப்பொறந்தவா மாதிரி பேசும்',  சொல்லிக்கொண்டிருக்கும்போதே மூக்கைச்சிந்தினாள் கருப்பாயி.

மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி நொடித்துப்போன வசந்தியின் குடும்பம் ஊருக்கு வந்து பத்து வருசம் ஆனது.  அப்போது வசந்தி பவாடை சட்டைபோடுற வயசு. ஐந்தாவது வகுப்பில் சேர்த்து விட்டர்கள் இருக்கிற பிள்ளைகளில் பெரிய பிள்ளையாக இருந்த வசந்தி வந்தகொஞ்ச நாளிலே லீடராகிவிட்டாள்.  ஒண்ணாப்பு ரெண்டாப்பு வாத்தியார் விடுப்புஎடுத்த நாட்களில் அவள் தானந்த வகுப்புகளுக்கு பாடம் எடுப்பாள்.  பள்ளிக்கூடம் வராத குழந்தைகளை கும்பலாகப் போய் துரத்திப்பிடித்துவருகிறவர்களுக்கு அவள்தான் தலைமையாக இருப்பாள். வாத்தியார்கள் நுழையக் கூச்சப்படுகிற தெருக்களில் ஐயரவில்லாமல் நுழைகிற அவளுக்கு. தெருவிலும் ரசிகர் பட்டாளம் உண்டு    அந்த ஊரில் படிக்கிற அவள் வயதுப்பையங்களுக்கு அவள் தான் கனவுக்கண்ணியாக இருந்தாள். பேச்சிமுத்து, கணேசமூர்த்தி, துரைராஜ், எல்லோருமேஅவளுக்காக தினம் தினம் அவள் வீட்டுக்கு எதிரே உள்ள பூவரசமரத்துக்குப்போவார்கள் அங்குதான், எல்லா விளையாட்டும்.

காலங்களின் சுழற்சியில்.ஆளுக்கொரு மூலையாக பிய்த் தெறியப்பட்டார்கள். அவர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வேறு வேறு முகங்களும் விசயங்களும் காத்திருந்தன. பத்து வரை படித்த வசந்தி அதற்குப்பிறகு குடும்ப வறுமையினாலும் அண்ணியின் வசவுகளைத் தாங்காமலும் படிப்பை நிறுத்திக் கொண்டாள்.தீப்பெட்டிக்கட்டு ஒட்டுகிற முழுநேர வேலைக்கு இடையே படிக்க முடியாமல் போனதனது ஏக்கத்தை திசைதிருப்ப கண்ணில்படுகிற எல்லா எழுத்தையும் படித்தாள். குமுதம் ஆனந்த, விகடன் வாரப்பத்திகைகளும், சில கதைப்புத்தகங்களும் படிக்க அவள் இரவுகளை ஒதுக்கிக்கொள்வாள் அல்லது மத்தியானம் சாப்பிட்டு முடித்ததும் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து படிப்பாள். புத்தகங்கள் விலைகொடுத்து வாங்கமுடியாததால் சாமுவேல் வாத்தியார் மகள் ஜாக்குலின் இவளது தோழியானாள். அவர்கள் பக்கத்து ஊர் பஞ்சாயத்து நூலகத்தில் உறுப்பிர்களாக இருந்தது இவளுக்கு இன்னும் கூடுதல் அனுகூலமாக இருந்தது. எல்லோரும் படித்துவிட்டு கசங்கிநிலையில் கைக்கு வரும் அந்தப்புத்தகங்களை எதிர்பார்த்தபடியே கட்டு ஒட்டுவாள்.

ஒரு காலை சம்மனமும் ஒரு காலைக் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் வசந்தியின் கைகளுக்கிடையில் ஊதத்தாளும் அட்டைச்சில்லும் பசையும் கலந்து சின்னச்சின்ன தீப்பெட்டி டப்பாக்களாக மாறும். அவள் கையிலிருந்து சுழன்று சுழன்று எதிரே விரித்திருக்கும் சாக்கில் விழும். விழுகிற டப்பாக்களுக்குள் உள்ள  இடைவெளி சொற்ப கணங்கள். அதைக் கூர்ந்து கவனித்தால் எதோ மாயாஜாலம் நடப்பது போலிருக்கும். இந்த நேரங்கலில் தான் படித்த கதைகளைவிஜயலட்சுமிக்குச் சொல்லுவதிலோர் பரவசம் கிடைக்கும். கதைகளைக்கேட்டுக்கொண்டே அந்தக் கதைகளுக்கான ஓவியங்களில் கரைந்துபோவாள் விஜய லட்சுமி.

கல்யாணமான மறு வாரம் அஸ்ஸாம் போன தன் கணவனை நினைத்தபடியே காலம் தள்ளுவதாக ஊர் பேசும் விஜயலட்சுமிக்கு ஒரு இருட்டுக்கதை இருந்தது. அது நெடு நாட்களாக வசந்திக்குக் கூடத் தெரியாது. விஜயலட்சுமியின் கதை தெரிந்தபோது,இரண்டு நாட்கள் அவளிடம் மூஞ்சி கொடுத்துப் பேசவில்லை,
ஒரு நாள் சாயங்காலம் வேலிக்காட்டுக்குப் போகும்போது விஜயலட்சுமி வலியப்போய் அவளிடம் சொன்ன விசயங்களின் நியாயம் புரிந்துகொண்டு மீண்டும் இருவரும் சகஜமாகிப் போனார்கள்.ஏற்கனவே கல்யாணமாகி மூணு பெண்கள் இருந்த அவன் கேட்ட அம்பதாயிரம் ரொக்கத்தை சாக்குச்சொல்லி பழய்ய வாழ்க்கைக்குப் போய்விட்டான். பின்னிரவு நேரங்களில் வருகிற அந்த மாய உருவம் யார் என்று தெரிந்து கொள்ள வசந்திக்கும் ஆவலாக இருந்தது. அது கீழத் தெருவிலிருந்துதான் வருகிறது என்னும் ஒரே ஒரு தகவலை
வைத்து யார் என அனுமானிக்க முடியவில்லை.

தெருப்பக்கம் வருகிற எல்லா வாலிபர்களையும் சந்தேகப்பட்டாள். அப்படித்தான் ஒரு நாள் கென்னடியும் இரவு எட்டரை மணிக்கு அந்தத்தெரு வழியே நடந்து போனான். காலில் இருந்த செருப்பு காதறுந்து போகவே விஜயலட்சுமி வீட்டு வசலில் நின்று குனிந்து கொண்டிருந்தான். விஜயலட்சுமியும் அதே நேரம் வாசலுக்கு வந்தாள். இந்த காட்சி அவள் சந்தேகத்தை வலுப்படுத்தப் போதுமானதாக இருந்தது. அன்று வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் வேலைக்குப் போய்விடக்காத்திருந்து விஜயலட்சுமி வீட்டுக்கு ஓடோடிப்போனாள். இவள் சொன்னதைக் கேட்டு விட்டு சத்தம் போட்டுச்சிரித்தாள்.

'அவனா,பைத்தியம் அவ என்னோடதா படிச்சான் இங்கெ கல்லுவீட்டு முதலியார் மகனுக்கு டியூசன் எடுக்க வருவான். அவனா இருந்தா இன்னேரம் நானே கூட்டிட்டுப்போய் தாலிகட்டி நாலு பிள்ளப் பெத்துருப்பேன்'. என்று சொல்லிவிட்டுச்சிரித்தாள். அவனு ஒன்னிய மாதிரித்தா கதபுஸ்தம்னா சோறுதண்ணி கூட வேண்டாம். ஆனா தண்டி தண்டியா பெரிய புஸ்தகங்களாத்தா படிப்பான்'.

அதன்பிறகு விஜயலட்சுமியின் சிபாரிசின் பேரில் கென்னடி படிக்கும் தடித்த நாவல்கள் வசந்தியின் கைகளுக்கு வந்தது. முதலில் மோகமுள் படித்து தன்னைவிட இளைய ஆடவனோடு காதலான யமுனாவை நினைத்து உருகிப்போனாள். அப்புறம் கடல் புறத்தில் படித்துவிட்டு அது குறித்து யாரிடமாவது பேசவேண்டும் என்று மருகினாள். 'இன்னும் நெடுநாளைக்கு கடலிரைச்சலும், பிலோமிக்குட்டியும் பவுலுப்பாட்டாவும்
கூடவே வருவார்கள்'. என்று  கடைசிப்பக்கத்தில் எழுதியிருந்தது அது கென்னடி'தானென்பதை புரிந்துகொண்டபின் அவனோடு பேசவேண்டுமென்ற ஆவல் கூடியது.ஒரு செவ்வாய்க்கிழமை பகல் பணிரெண்டு மணிக்கு தெருவில் நடமாட்டமில்லாத நேரத்தில் விஜயலட்சுமியின் வீட்டில் மூன்றுபேரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். வண்டி வண்டியாய் அவன் வாசித்த புத்தகங்களைப் பற்றிப்பேசிக் கொண்டே இருந்தான் பாட்டியின் மடியில் கிடந்து கேட்பதைப்போல கிறக்கமானது.

11.6.10

பஞ்சாலையிலிருந்து ஒரு மாலை விடுதலை

கூடடையும் குதூகலத்துடன்
சாப்பாட்டுக் கூடையோடு
திரும்புகிறது பொழப்பின் மாலை.

தூக்குவாலியும் வயிறும்
காலியாய்க்கிடக்க ததும்புகிறது
வீட்டுமுற்றத்தில் காத்திருக்கும்
பிஞ்சுவிரலும் பீடிவாசமும்.

தலையில் படர்ந்திருக்கும்
பஞ்சுத்துகள்களை ஒதுக்க மனசில்லாமல்
பேருந்து ஏறுகிறது நூலாம்படை வாழ்க்கை.

பயண நெரிசலில் உரசும்போது
பறக்கிறது தாவணி நாட்களின் பொறி.
நடத்துனரின் விசிலொலியில்
ஒளிந்திருக்கிறது மாரியப்பனின்
சிருங்காரச் சீழ்கையொலி.

பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது
இரவுபகலெனும் அன்றாடங்களில்.

9.6.10

மனசின் கடிவாளமற்ற பயணம்.



'ஒங்கப்பன மாதிரியே வளந்துட்டியேடா... அவம்லாடா சினிம நாடகம் கட்சிக் கூட்டம்னு அலைவான்.இந்த மேனா மினுக்கித்தனம் சோறு திங்க உதவாதுடா... எங்கூட கடயில வந்து இரு... ரெண்டே வருஷத்துல ஒன்னய இந்த ஊர்ருக்கே ராசாவாக்கி சிம்மாசனம் போட்டு ஒக்கார வக்கேன்...'என்று இப்போதும் திட்டுவார்.அதுவும் இந்த மழைக்குள் யாரோ சிநேகிதனைப் பார்க்க போனேன் என்று மனம் போன போக்கில் அலைகிறவனை  (மாமா) ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.

பாவூர்சத்திரத்துக்குப் பக்கத்திலிருந்து கிளம்பி தூத்துக்குடிக்கு மழையோடும் தொட்டுக்கோ துடைச்சிக்கோ என்கிற அளவு காசோடும் போய் நனைந்து அலையும் மனிதனின் கதை.அந்த மழையோடு போய் அவன் சாதிக்க நினைத்தது எது தெரியுமா?. கல்லூரி நண்பன் கதிரேசனைப் பார்த்து நாலுவார்த்தை பேசி விட்டு வர நினைத்த அந்த சாதனைதான் வண்ணநிலவனின் 'மழை' ச்சிறுகதை. ஒரு மழை நாளில் முகம்தெரியாத மனிதர்களிடத்தில் விலாசம் தேடித்தெப்பலாக நனையும் அனுபவம் நம்மைச் சூழ்ந்துகொள்ளுகிற கதை இது.அந்த நேரத்தில் வரிசையாய் ஒவ்வொருத்தராய் வந்துபோகிறார்கள் பால்யத்திலும் பிராயத்திலும் தோளில் கைபோட்டலைந்த நண்பர்கள்.

பாடுசோலியில்லாமல் ஒரு நண்பனைப்பார்க்க மாத்திரம் இப்படி மெனக்கெடுவானா சாமான்ய மனிதன்.மெனெக்கெடுவது கவியுள்ளத்துக்கு மட்டும் சாத்தியம்.அங்கே வரவு செலவு தெரியாது, லாபம் நட்டம் நுழையாது பிரியங்கள் மட்டும் முறுக்கேறிக்கிடக்கும்.எந்த ஒரு துணைக்காரியமும் இல்லாமல் ஒரு நண்பனைப் பார்க்க மட்டுமே விடுப்பெடுத்து அலைந்திருக்கிறோமா என்கிற கேள்வி முள்ளாய்க் குத்துகிறது. அப்போதெல்லாம் அந்த மனுஷன் 'கோணங்கியை' நினைத்து நினைத்துப் பொறாமையாய் இருக்கும்.


கடல்புறத்தில் படித்து முடித்துவிட்டு.அந்த உப்புக்காத்தில், அலை இரைச்சலில்,கடலோர குடிசைக்குள் பவுலுப்பாட்டாவோடு தூங்க வைத்த வலுவான எழுத்து வண்ணநிலவனுடையது.அதை நானும் மாதுவும் கிறங்கிக் கிறங்கிப்பேசிக்கிடந்திருக்கிறோம் 42பி எல் எஃப் தெருவில்.ரஞ்சி,சாமிதாஸ்,பிலோமியின் பிரியங்களையும் கனவையும் அது கிடைக்காமல் போனபின் நிகழ்வை ஏற்றுக்கொண்டு பிரியம் மாறாமல் தொடரும் வாழ்க்கையையும் சிகரத்தில் ஏற்றிவைப்பார் வண்ணநிலவன். எண்பதுகளில் படித்த அந்த புதினத்தின் வாசனையை மணப்பாடு கடல்கிராமத்து மணலில் கால்வைக்கும் போது நீண்டமூச்சால் ள்ளிழுத்துக் கொண்டேன். அதன் பெருமைக்களைச் சொன்னபோது கூடவந்த வாண்டுகள் 'இங்க என்ன சினிமா எடுத்தாங்கப்பா ?' என்று கேட்டார்கள்.சினிமாவை விடவும் உன்னதமான இலக்கியம் இந்த மணல்துகள்களுக்குள் ஒட்டிக்கிடக்கிறது அது 'கடல்புரத்தில்' படித்தால் மட்டுமே உடனடியாக வெளிக்கிளம்பும் என்று சொன்னேன்.

இப்படித்தான் என் நணபர் நடராஜனோடு சுற்றுலாப்போகும் போது தஞ்சைப்பெரிய கோயிலில் வைத்து, இந்த ஏரியாவில் எனக்கொரு சொந்தக்காரர் இருக்கிறார் என்று சொன்னேன். அவரும் சீரியஸ்ஸாக யாரெனக்கேட்டார். எங்க ஒர்க் பன்றார் வீடெங்கெ இருக்கு என்றெல்லால் தொண தொணக்க ஆரம்பித்து விட்டார்.திஜா என்கிற தி.ஜானகிராமன் எழுத்தாளர் இப்போ இல்லை என்று சொன்னதும் அடிக்க வந்துவிட்டார்.

1987 ல் வெளிவந்த 'கதை அரங்கம்' மணிக்கதைகள் தொகுப்பை இன்று அதிகாலையில், மீளவாசிக்கத் தேரம் கிடைத்தது. அப்போது அலையலையாய் பழைய்ய நாட்கள் இடறியது.அந்த தொகுப்பிலேதான் சு.சமுத்திரம்,நாஞ்சில்நாடன்,பிரபஞ்சன்,பாலகுமாரன் கதைகளோடு  கிராவின் கதையும் பூமணியின் கதையும் இருக்கிறது.பாண்டிச்சேரியிலிருந்து இடைசெவலுக்கு வந்த பெரியவர் கிரா சாத்தூரில் மெனக்கெட்டு இறங்கி நாங்கள் தங்கியிருந்த 42 பி எல் எஃப் தெருவுக்கு வந்து பேசிக்கொண்டிருந்த நாள் பளிச்சென வந்துபோனது.'ஒருநாளாவது மெனக்கெட்டு நண்பன் தேடிப்போகவேண்டும்னே' இப்படிச்சொன்ன  தம்பி கார்த்தி  நீண்ட இடைவேளைக்கப்புறம் நேற்றிரவு என்னைத் தேடிவந்தது  நெருடுகிறது.பலநாட்கள் சங்கத்துக்காகவும்,கட்சிக்காகவும் விடுப்பெடுத்து அலைந்தேன் என்கிற சப்பைக்கட்டு ஒரு புறமிருந்தாலும் நணபர்களுக்காக மெனெக்கெடும் வேட்கை கனன்று கொண்டேஇருக்கிறது.

7.6.10

வெயிலில் தெரியும் நிழலின் அருமை

மூட்டுக்கள் வலியெடுத்து,பசிகுறைந்த போது அசதி வந்தது. வீட்டுக்கு வந்ததும் படுக்கச்சொல்லும் உடம்பில் காய்ச்சலின் தூதர்கள் நுழைந்துவிட்டார்கள்.காலருகே பந்து வந்தும் உதைக்க மனசில்லாதது
போல சோறுதண்ணி மீது நாட்டமில்லாமல் இருந்தது.ரெண்டாம் நாள் கய்ச்சலில் உடம்பு முழுக்க தனலள்ளிப் போட்டதுப்போலக் கொதித்தது.
கருப்பட்டிக்  காப்பியும்  அனாசின் மாத்திரையும் வயித்துக்குள் போன வேகத்தில் திரும்பி வந்தது. கொட்டாரப் பக்கம் போய் கொடங்கொடமா வாந்தியெடுத்தேன்.  குடலில் தசை நார்கள் தவிர எல்லாம் வெளிவந்து விழுந்தது. வயித்தில் ஒன்னும் இல்லை. உடம்பு லேசாகியது. தொண்டைக்குழிக்குள் நிற்கும் நினைவுகள் தவிர உடம்பில்  எசக்கு ஏதுமில்லை. பின்னாடியிருந்து அம்மா வந்து நெற்றியைப்பிடித்தாள். வாந்தியெடுத்தவுடன் தலை வின் வின்னென்றுதெறிக்கும் என்பதை அவள் அறிந்திருந்தால் போலும்.

தூக்கமும் போர்வையும் மூன்றுநாள் துணையிருக்க. வெளித் திண்ணையிலும் வீட்டுக்குள் பாயிலுமாகத்தேரம் போனது தெரியவில்லை.ஒரு சாயங்காலம் எழுந்து கொட்டாரப்பக்கம் போய் கோபால் பல்஡பொடியெடுத்து பல் விளக்கினேன். 'வாய் ரொம்பக்கசக்குதாய்யா' 'இல்லம்மா''பின்னெதுக்கு பொழுதடைய பல்வெளக்கணு'அப்போதுதான் பார்த்தான் சின்னச் சுப்பையப் பெரியா மாடுகளைப் பத்திக் கொண்டு கூனையைச் சுமந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எதுத்த வீட்டு லச்சுமி மதினி என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே மசாலை அறைத்தாள்.'என்ன கொழுந்தனாரே எதப்பாத்து பயந்த' மதினியின் கேலிக்குள் ஒளிந்துகிடந்தது தவசெல்வியின் கன்னத்துக்கருகில் மினுங்கும் பூனைமுடியின் தகதகப்பு.பாக்கியக்கிழவி சிம்னியைக் கழற்றிச் சாம்பல் வைத்து துடைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் காளிமார்க் சோடா பாட்டிலில் காத்திருந்தது சீமத்தண்ணி.
அப்போதுதான் தீப்பெட்டியாபிசில் இருந்து வந்த வள்ளிச்சித்தி வாசலைப் பறட்டு பறட்டுன்னு கூட்டித்தள்ளினாள்.மொளகாச்செடிக்கு தண்ணிபாய்ச்சி விட்டு ஈரவேட்டியைக் காயப்போட்டபடி திரும்பி வந்த கந்தசாமி மாமாவின் உதட்டில் பீடியில்லை, பதிலுக்கு ஏரிக்கரையின்மேலே பாட்டின் சீட்டி ஒலி தவ்வி விழுந்துகொண்டிருந்தது.

எல்லோருக்கும் நான் பொழுதுசாயப் பல் விளக்கிய சங்கதியைக் காற்றுக்கொண்டு போய் சேர்த்தது. கீழத்தெரு முழுக்க சிரித்துக் கொண்டிருந்தது. செத்த நேரத்தில் பதினைந்து வீடு தள்ளியிருக்கும், தெய்வானைச் சித்தி  'யக்கா இந்தா இருக்கங்குடித்திநீரு,போட்டுவிடு காத்துக்கருப்பிருந்தா சொல்லாமக் கொள்ளாம ஓடிரும்' .அடுப்பில் தும்பை துளசி வேகப் போட்டுக்கொண்டிருந்த அம்மா. 'ஏடி அத நீயே பூசிரு ஒம்மகனுக்கு'.அந்த ஒம்மகனுக்குள் கொட்டிக்கிடக்குது எனக்கும் தேவான சித்திக்குமான ,பந்தம்.வளத்த தாய் அவதான். பிறந்த ஒரு மாதத்தில் இதே காய்ச்சலால் அம்மா படுக்க, எனக்காக மடிசுறந்த இன்னொரு தாய்.அதிலிருந்து நேரங் கிடைக்கிற போதெல்லாம் என்னை மடியில் வைத்துக் காலம் தள்ளுவாளாம். சாத்தூருக்கு தூக்கிப்போய் என்னோடு நிழற்படம்  எடுத்து மாட்டிக்கொண்ட பாசமும் போட்டோ வும் அவளது வீட்டுச்சுவத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. வீட்ல வெண்ணி வச்சாலும் அதிலொரு டம்ளர் எனக்கென்று எடுத்துவைக்கும் பிரியத்தை ரகம் பிரிக்க எந்த அளவுகோளும் இல்லை.

தேவானச்சித்தி வெளிக்காட்டிய இந்த பாசத்தை சொல்லத் தெரியாமல் கிடந்தது மிச்சமிருக்கிற ஊர் மொத்தமும்.இந்த மூன்று நாட்களில் வீட்டுவாசலில் நின்று யாராவது ஒருவருக்கு காய்ச்சலின் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.சில நேரம் ,'ஏடி இந்தா இந்த மல்லிச் சட்னி அறைச்சிரு,ஞொண்ணனுக்கு காய்ச்சல்னா வெல்லக்கட்டி கூடக்கசக்கும், இந்த சட்னியு,சுடுகஞ்சியு வச்சாத்தா தொண்டைக்குள்ள எறங்கும்'.விசாரிக்க வந்தவளை வேலைவாங்குவாள் அம்மா.அவளும் தலைமேலேந்திக்கொண்டு ஆளில்லாத அம்மி தேடிப்போவாள், அங்கு அறைத்துக்கொண்டே காய்ச்சல் சேதி பரப்புவாள்.கேட்கிற காதுகளுக்குள் ஒன்று தவசெல்வியுடதாகவும் இருக்கும். நேத்துலருந்து மூக்கு கணகணன்னு இருக்கு மயினி,மல்லிக்காப்பி போற்றுப்பீகள்ல,ஒரு கிளாஸ் குடுங்க ஒங்க கைராசிக்கு ஒரே தேரத்துல ஓடிப்போகும் என்று,சுக்குக்காப்பி குடிக்கவரும் ஆட்களும்.போனவாரம் மெட்ராஸ்லருந்து வந்த ஒங்க கொழுந்தன் கொண்டுவந்தார் இந்தாக்கா டைகர்பாம் தம்பிக்கு நெத்தியில அரக்கிவிடுங்க' என்ற அன்புக்குள்ளே புதைந்து கிடந்தேன்.இந்தக் காய்ச்சலில் புதைந்துகிடந்த நேசத்தைத் துடைத்துக் கொண்டு வந்து கொட்டியது ஊர்.போன வாரம் நாறவசவு வஞ்சு சண்டைப் போட்ட பூமாரியத்தை கூடஎம் மருமகனுக்கு காய்ச்சலாமில்ல என்று கேட்டபடி பகை மறந்து போனார்கள்.

என்னடா மூனுநாளா தெருவ அளக்க ஆளக்காணுமேன்னு பாத்தா காலெஜ்காரரு காய்ச்சல்ல படுத்துருக்காராக்குமென்று சொல்லிப் போனார் மேலத்தெரு கருப்பைய்யா பிள்ளை.ஆளில்லா மதியங்களில் மூன்று வாரத்துக்கு முந்திய ஆனந்தவிகடனை வைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்தபடி வெறிச்சோடிக்கிடக்கும் தெருப்பார்க்கவும்,கீழக்கோடியில் குரைக்கும் செவலை நாயின் குரல்கேட்கவுமாக எழுத்துக்கள் உள்ளிறங்கும். பொட்டிக்கடையில் உட்கார்ந்து கொண்டு நேற்றைய தினத்தந்தி நாளிதழை ராகம்போட்டுப் படிக்கும் முத்தையாக் கிழவனும், அதை உள்வாங்கி கேள்விகேட்கும் கண்தெரியாத பெரியசாமித்தாத்தாவும் மதிய மௌனத்தை கலைக்க எத்தனிப்பார்கள்.உடல் முழுக்க கசப்பேறிக்கிடக்க காய்ச்சி வைத்த கஞ்சியும்,மல்லித்துவையலும் குடிப்பதற்காகவேணும் காய்ச்சல் வேணும்.இரண்டு நாள் வேலைக்குப் போகாமல் கூடவே இருந்த அம்மா சுருக்குப்பை கணம் குறைந்ததாலும், எனக்கு கொஞ்சம் காய்ச்சல் குறைந்ததாலும் நெத்தியில் கைவைத்துவிட்டு வேலைக்குப்போய் விட்டாள். அவளின் அடையாளமாக காப்பியும், மாத்திரையும் மூலையில் மூடிவைக்கப்பட்டிருந்தது.

பொட்டிக்கடையில் தாவணி தெரிந்தது. அதில் தவசெல்வியின் சாயல் தெரிந்தது.அவளுக்கு இந்தத்தெருவில் என்ன வேலை ? அவளாக இருக்காது. அதுவும் ப்ளஸ்டூ பரீட்சைக்கு இன்னும் ரெண்டுநாள் தான் இருக்கிறது அவள் எட்டுக்குதிரை போட்டு மறிச்சாலும் போகாமலிருக்கமாட்டாள். அவளாக இருக்காது.தூக்கம் வருகிற மாதிரி கண்சொருகியது உள்ளே போய் படுத்தேன்.கனவு வந்தது. தவசெல்வி வந்தாள்.நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.என்னைக் கட்டிக்கொண்டாள்.விக்ஸின் வாசனையையும், காய்ச்சலின் நெடியையும் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு  ஒரு பிரிட்டானியா பிஸ்கெட்  பாக்கெட்டைப்  பக்கத்தில் வைத்து விட்டு போய்விட்டாள். நெடு நேரம் தூங்கியிருக்க வேண்டும்.அம்மாவின் சத்தமும், அடுப்பங்கறையின் சத்தமும்.

'வச்சது வச்சபடியே கெடக்கு எய்யா மதியம் கஞ்சி குடிக்கலையா மாத்தரையு அப்டியே இருக்கு'

நெத்தியில் கைவைத்தது அம்மாவா தவசெல்வி யாவெனத் தெரியவில்லை. கண்முழிந்தேன்.

'இதேதுப்பா பிஸ்கட்டுப்பாக்கெட்டு யாருவந்தா'.

அம்மாவின் கேள்விக்கு எப்படிப்பதில் சொல்வேன்.

5.6.10

நினைவடுக்களிலிருந்து சில கிளிசீட்டுக்கள்.

எண்பதுகளில் தமிழெழுத்துக்களுக்கு புதிய களம் அமைத்த தோழர்கள்.
ஆஹா நாமளும் எழுதலாமே என்கிற துணிச்சலைக் கொண்டுவந்த பாடுபொருட்கள்.ரொம்பக் கிட்டக்க வந்து தலையில் விரல் விட்டு பேனுக்கு அலைந்து விடுகிற சாக்கில் கிளர்ச்சியை கொண்டு வந்த எங்கூருக் கிழவிகளின் வாசம் கொண்டுவருகிற எழுத்துக்கள் இது.கொதிக்கிற குழம்பெடுத்து நொட்டாங்கையில் விட்டு ருசிபாகாக்க நாலு சொட்டு.

கொஞ்சம் சாம்பிள்.

0

ஒரு பார்வைக்கு அந்த ஆலமரம் அப்பத்தா இடுப்பு போலிருக்கும்.அப்பத்தா ஒருக்களித்துப் படுத்திருக்கும்போது இடுப்பில் உட்கார்ந்து குதிரையோ,
யானையோ ஓட்டலாம்.அல்லது பஸ்கூட ஓட்டலாம்.அல்லது வயக்காட்டில் பொம்ப்ளைங்க கட்டி மித்திக்கிறமாதிரி அவளுடைய மிருதுவான பருத்த உடம்பின் மேலேறி நின்று சுவரைப்பிடித்துக்கொண்டு மிதி மிதி என்று மிதிக்கலாம்.அவ மிதிக்காதலே,மிதிக்காதலே என்று சொல்லுகிற தினுசே இவனை இன்னும் தீவிரமாய் மிதிக்கச்சொல்லி உற்சாகப்படுத்தும்.

மற்றும் மைனாக்கள்

ச.தமிழ்ச்செல்வன்.


பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும்.தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள். விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களில் பாய்ச்சிக் கொள்வோம்.  நூற்றாண்டுகள்  தடித்த இருட் சுவற்றைக் கடக்க வேண்டியவர்களன்றோ  நாம்.

இரவாகி விடுவதாலே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை.

ஆதவன் தீட்சண்யா.

கடகடவெனபிரதேசமே அதிரும்படி லாரி ஒன்று ரோட்டில் போனது.மண்லாரி. குவிந்திருந்த மணலில் கைகால்களைப் பரத்திப் போட்டு வானம்பார்க்க ஒரு மனிதன் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வெயிலிலா? எங்கிருந்து வருகிறான் ?. கண்ணிலிருந்து  லாரி மறைந்த  பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதனுக்கு எது வெயில்?.

இயேசுவானவன்.

மாதவராஜ்.

முடியவில்லை திட்டுத்திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக்கறைகளில் பாட்டும் சந்தோசமும் ஒட்டிக்கிடந்தன.

தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது  தெரிந்தது. நடை தானாகவே சத்ததைக் குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப்பார்க்கவே கோபமாய் வந்தது.

சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான்.ரெண்டுபேருமே பேச ஏதுமற்றுப்போனது.விரித்திருந்த பாயின்மேல் படுத்து அவளது பழைய்ய புடவையைப் போர்த்திக்கொண்டான்.அவள் இவனைப்போர்த்திக்கொண்டாள்.

ஏழுமலை ஜமா.

பவா செல்லத்துரை.

மனசிருந்தால் புளிய இலையில் இரண்டு பேர்படுத்துத் தூங்கலாம்.

ஷாஜஹான்.

3.6.10

அதிகாலையிலே ஆரம்பிக்கிறது

சாமக்குருவி கூவியது
அப்புறம் முழித்துக்கொண்ட
ஒற்றைச் சேவலும் கூவியது
சரி இனி விடிந்துவிடும் எனச்
சமாதானத்தோடு தூங்கப்போயின.
சூரியன் சிரித்துக்கொண்டது.

பாக்கெட் பாலை நீரூற்றி
பசும்பாலாக்கினான்
வித்தை தெரிந்த சமத்தன்
பசுமாடு சிரித்துக்கொண்டது.

2.6.10

மொண்டி அருவா.

காப்பிக்கலரும், கருப்புக்கலரும் குழைந்த
கைப்பிடியில்லா ஒரு ஆயுதம் இருக்கிறது.
ஊரில் அதைத் துருப்பிடித்து போனது
என்று சொல்லுவார்கள்.

எங்கோ விறகொடிக்கப்போகையில்
கண்டெடுத்தது என்பதைத்தவிர
அதன் தோற்ற வரலாறு ஒன்றுமில்லை.

யாருக்கும் இரவல் கொடுக்கச்சம்மதிக்காத
எனது தாத்தாவின் விருப்ப பிராணி.
பேரீச்சம்பழக்காரரிடம் போட்டுத்தின்ற
நாளில் எனக்கு விழுந்த வசவும், அடியும்
இன்னும் தித்திப்பாய்க் கசக்கிறது.

வில்லும், பம்பரமும், கிட்டிப்புல்லும்
விளையாடக் கொடுத்தது அதை வைத்துத்தான்.

எங்க வீட்டுக்கூனக் கெழவிக்கு ஊனுகம்பும்
ஆடுமேய்க்க தொரட்டிக்கம்பும்
செதுக்கித்தந்த உற்பத்திக்கருவி.

எதுத்தவீட்டு ஏகலைவத்தாத்தன்
காக்காவலிப்புக்கு அடிக்கடி
கையில்கொடுக்கிற மருத்துவக்கருவி.

வேலையில்லாத காலங்களில்
வேலிக்காடுகளைச்சாய்த்து
விறகாக்கி விற்றுத்தரும்
சம்பாத்தியக் கருவி.

குலசாமி கெழவனாருக்கு
பொங்க வைக்கயில்
பூவோடும், மஞ்சளோடும்,
பூஜைத்தேங்காயோடும்
மங்களமாகப் பயணப்படும்.

யாராவது மொண்டி அருவா
என்று சொல்லிவிட்டால்
ஆங்காரத்தோடு சண்டைக்குப்போவார்.

1.6.10

மூன்று பேருந்து பயணங்கள்.

பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்து நிறுத்தத்துக்கு வந்தவுடன் இன்னும் நெரிசல் அதிகமானது.நானும் மாதுவும் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞன் பேருந்து குலுங்காதவேளையிலும் கூட அருகிருந்த பெண்ணின் மீது உரசி உரசி திருட்டு சுகம் தேடினான். அவள் நெளிந்து விலகிப்போனாள்.அடுத்த நிறுத்தத்தில் இவனுக்காகக் கூட்டம் ஏறியது மீண்டும் அந்தப் பெண்ணருகில் போனான்.ஏறிய கூட்டத்தில் இன்னொரு பெண் ஏறவும் இன்னும் குஷியானான்.ஆர் ஆர் நகர் வந்ததும் கூட்டத்தில் பாதி இறங்கிப்போனது. இருக்கைகள் காலி ஆனது. உட்கார மன்சில்லாமல் இரண்டு பேர் இருக்கையில் அவன் மட்டும் தனித்து
உட்கார்ந்தான். நின்று கொண்டிருந்த பெண் பெருநகரில் வசிக்கிற பெண் போல இருக்கவேண்டும்.விகல்பமில்லாமல் அவனருகில் போய் உட்கார்ந்தாள்.

அந்த உரசல் பார்ட்டி சப்த நாடியும் ஒடுங்கிப்போய் ஜன்னல் பக்கமாக தனது உடலைச் சுருக்கிக் கொண்டே  போனான். அந்தச் சின்ன இருக்கையில் இப்போது இருவருக்குமிடையில் அரை அடி இடைவெளி இருந்தது.
உட்கார்ந்த மாத்திரத்தில் அந்தப்பெண் கண்ணை மூடிக்கொண்டு தூங்கிப் போனாள். சாத்தூர் வந்து இறங்கும்போது பார்த்தோம் அவன் ஜன்னல் கம்பிகளில் ஒன்றாக மாறிப்போனான்.

0

நேற்று நகரப்பேருந்துப் பயணத்தின்போது பின்னிருக்கையில் இரண்டு கிராமத்து மனிதர்கள் உரையாடிக்கொண்டுவந்தார்கள். ஒருவர் தன் பாடு பழமைகளைச்சொல்லிக்கொண்டு வந்தார்.அந்த பிரிண்டிங் பிரஸ்சில் ஒரு மனிநேரத்துக்கு பதினான்கு ரூபாய் சம்பளமாம்.ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வேலைகிடைப்பதே பெருத்த உபகாரமாம். அதிக பட்சம் ஒரு நாளைக்கு எழுபது ரூபாய் சம்பாதிக்கும் அவர் அதுதான் அன்றாடம் கொழம்புச் செலவுக்கு என்று சொன்னார்.ஆனம்,வெஞ்சனம்,தொட்டுக்க,கடிச்சிக்கிட என்கிற பலபெயர்கொண்டு புழங்கும் சைடு டிஷ்.அப்படியானால் சாப்பாடு.ரேஷன் அரிசிதானாம்.'வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது மட்டும் கடை அரிசி வாங்கிப் பொங்குவோம் அவர்கள் போனப்பிறகு வழக்கம்போல' என்று சொன்னார்.

இப்படி ஆரம்பித்த பேச்சு அரசியல் பக்கம்போனது ஒன்றியப் பெருந்தலைவர் மகள் கல்யாணத்துக்கு பத்தாயிரம்  பத்திரிகை அடித்தாராம் ஒரு பத்திரிகையின் விலைமட்டும் என்பத்தி இரண்டு ரூபாயாம். பூ வைக்கிற நாளன்னைக்கே மருமகனுக்கு ஒரு வெளிநாட்டுக்கார் வாங்கிக்கொண்டுவந்து நிறுத்திவிட்டாராம் தலைவர்.இதற்குள்,பேருந்து நகரம் தாண்டி  ராமசாமிநாயுடு ஞாபகார்த்தக்கல்லூரி நிறுத்தத்துக்கு வந்துவிட்டது.கல்லூரிப் பெண்கள் இறங்கிப்போனார்கள்.

'ஆமா ஓம்பொன்னு இந்த வருஷம் பதினொன்னு போகுதே என்ன செய்யப்போற' என்று இன்னொருவர் கேட்டார்.'ஆமா அவளுக்கும்,பயலுக்கும் சேர்த்து மூவாரம் ரூபாயாவது வேணும் என்ன செய்யப்போறேனோ தெர்ல'என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டார்.பின்னிருக்கை நெடுநேரம் உரையாடல் இல்லாமல் உறைந்து போயிருந்தது.தடதடக்கும் பேருந்து ஜன்னலின் சத்தம் உக்கிரமாகக் கேட்டபடியே இருந்தபோதும். அதன்பிறகான பேருந்து இறைச்சல் ஏதும் பெரிதாகத்தெரியவில்லை.

0

தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கிராமத்துக்கு 'இதுவேறு இதிகசம்' ஆவணப்பட ஒளிப்பதிவுக்காகப்போயிருந்தோம்.தொண்ணூறுகளில் நடந்த ஜாதிய மோதலில் பாதிக்கப்பட்ட பகுதியில் நடந்த பேட்டி அது.இன்னும் ஒரு
யுகத்துக்கு அந்தக் கிராமத்தோடே கூடவரும் பேரதிர்வுகள் நிறைந்த சம்பவம்.பேட்டி முடிந்து மதுரை திரும்புகிற போது அந்த பயங்கரத்தோடு தொடர்புடைய்ய இன்னொரு தகவலை ஒருதோழர் சொன்னார்.

கொலை நடந்த பேருந்தில் சகல பகுதி மக்களும் பயணம் செய்தார்கள் தாக்குதல் நடத்திய கும்பலின் குழுவைச்சேர்ந்த ஒரு பெண்ணும் அதில் பயணம்செய்தார்.அந்தக் கொடூரம் நடந்துகொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த ஒருவர் தப்பித்து ஓடிவந்து பயணிகளிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார்.அப்போது அந்தப்பெண் அவரைத் தனது காலுக்கடியில் ஒடுங்கவைத்து சேலையால் மூடிக்கொண்டார்.

எமனிடமிருந்து உயிர்களை மீட்டிய கதைகளின் நம்பகத்தன்மைக்கு வலுச்சேர்க்கும் நிஜமான தீரமிது.ஒரு உயிரின் விலை என்ன என்பதை எமனை விடவும், கடவுளைவிடவும், எவனைவிடவும் துள்ளியமாகத் தெரிந்து வைத்திருப்பவள் தாய்.அந்த ஆதிப்பெருந்தாயும் அவராலே மறு ஜென்மமடைந்த மனிதனும் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் சொன்னார்.அவள் இருந்த திசைபார்த்துவிட்டு திரும்பிவந்தோம்.