30.11.10

இடைக்காலபண்டிகைகள்.

ஒரு மாதமாகவே விருதுநகர் மாவட்டம் ஒரு இடைக்கால பண்டிகைக்கு தயாராகிக்கொண்டிருந்தது.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலங்குலம் அருகே நமது மதிப்பிற்குறிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின்
ஊருக்கு அருகே உள்ள கீழாண்மறைநாடு.அங்கே சமத்துவபுரத்தை திறந்துவைத்து,சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.குண்டும் குழியுமாக கிடந்த குறுகலான சாலைகள் துரித கதியில் தன்னாலே அகன்று கொண்டன.இருமருங்கும் அடர்ந்துகிடந்த வேலிச்செடிகள் வெட்டப்பட்டன.சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை வரை குறுக்கோடிக்கிடந்த சுமார் முப்பது வேகத்தடைகள் அகற்றப்பட்டன.இப்போது அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் போவது அவ்வளவு சுகமானதாக மாறிவிட்டது.

எல்லாம் துணை முதல்வரின் வருகை செய்த புண்ணியம்.மார்த்தாண்டத்திலிருந்தும் திருச்சியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்பு அலங்கார வளைவுகளில் செம்மொழித்தமிழ் கம்பளம் விரித்திருந்தது.தென்படுகிற சுவர்களெல்லாம் வருக வருக வாசகங்கள். இடைவிடாமல் இருமருங்கும் கட்சிக்கொடிகள் நட்டப்பட்டு கண்ணைப்பறித்தது.ஊர் ஊருக்கு கட்சி கிளைச்செயலாளர்கள் பம்பரமாய்ச்சுழன்று வாகனம் ஏற்பாடு செய்து,சுய உதவிக்குழுக்களோடு கலந்துபேசி ஆள் திரட்டினார்கள்.

இந்த உழைப்பின் பலன் 29 ஆம் தேதி காலையிலிருந்தே கிராமங்கள் நகரங்கள் வித்தியாசமில்லாமல் ஆணும் பெண்ணும் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சலைக்கு வரத்தொடங்கினார்கள்.எல்லாப்பாதைகளும் ஏழாயிரம்பண்ணை சாலையை நோக்கி. எங்கு பார்த்தாலும் எம் தாய் தங்கைகளின் தலைகள்.மக்கள் ஜனநாயக்கப்புரட்சி ஒன்று வருமா அதை நம் வாழ்நாளில் பார்த்துவிட முடியுமா என்கிற ஏக்கத்தை இதைப் பார்ப்பதன் மூலம் கற்பனை தனித்துக் கொள்ளலாம். அப்படியொரு மனித திரள்.அந்த காலை ஒண்பது மணி இரண்டு சக்கர நான்கு சக்கர பரபரப்பை தூக்கி விழுங்கிக்கொண்டு தார்ச்சாலைகள் முழுக்க மனிதப் பாதங்கள்.சாத்தூர் சின்னப்பர் குருசடியிலிருந்து தெற்கே கிருஷ்ணன் கோயில் நிறுத்தம் வரை இரண்டரை அல்லது மூன்று கிலோ மீட்டர் இருக்கும். அதை  இருசக்கர வாகனத்தில் கடக்க பதினைந்து நிமிடங்கள் ஆனது.

என்னோடு கூட ஒரு அண்ணாதிமுக அனுதாபி வந்தார் அமீர்பாளையம் நிறுத்தத்தில் குறைந்தது முந்நூறு பேர்,அதே போல சடையம்பட்டியிலும். இதைப்பார்த்து கடுப்பாகிப்போன அவர் சொன்னார் மேட்டுப்பட்டியில் இவ்வளவு மக்கள் இருக்கமாட்டார்கள் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அங்கிருக்கும் மக்கள் உயர்ந்த ஜாதிக்காரர்களும் இன்னொன்று அதிமுகவின் ஸ்திரமான கட்சிமக்களும் சமீபத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரும் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.அங்கு காத்திருந்த மனித வெள்ளத்தைப் பார்த்ததும் 'அடப்பாவிகளா என்ன மாயஞ்செஞ்சீங்கடா' என்று கத்தி விட்டார்.இதே நிலைமைதான் பதினாறு பேருந்து நிறுத்தங்களிலும்.

28.11.10

நந்தலாலா - அபூர்வமாகப் பூக்கும் தமிழ்ச்சினிமா.

எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.பத்து இருபது வருடங் களுக்குப் பிறகு ஆசையோடு பார்க்கப்போன பகல்காட்சி.நீல நிறப்படுதாவை விலக்கியபோது உள்ளிருந்த நூறுபேரில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.காட்சி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.விசிலடிக்க,கட்டவுட் வைக்க, தாள்களைக் கிழித்து தூவி விட யாரும் வரவில்லை. அப்பொழுது அகி பள்ளிக் கூடத்தி லிருந்து வந்து கொண்டிருந்தான்.திருவனந்தபுரம் கலாபவன் அரங்கில் பார்த்த ஒரு நூறு திரையிடல்களில் இருந்த அமைதி திரும்பிவந்தது.அங்கே பார்த்த ஒவ்வொரு படத்தின் முடிவிலும் இப்படியொரு படத்தைத்தமிழில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் வந்து போகும். அந்த ஏக்கத்தை தனிக்கிற படம் நந்தலாலா.பாஸ்கர் மணி கீழ்பாக்கம் மருத்துவம்னையிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் 'அகி' என்கிற அகிலேஷ் வீட்டிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் இருவரையும் சேர்த்துவைக்கிற தாயின் தாகம்.தங்களின் தாயைத்தேடி நடக்கிற பயணம் தான் கதை.

அவர்கள் பயணிக்கிற வழியெங்கும் தட்டுப்படுகிற மனிதர்கள் எளிதில் கோபப்படுகிறவர்களாகவும்,நிதானித்து புரிந்து கொண்ட பின் மனிதம் வழிந்தோடுகின்ற ஈர மனசுக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.ஒரு நெடிய பயணத்தில் கரம் கோர்க்கிற ரெண்டு குழந்தைகளும் கால்நடையாகவே தொடர்கிறார்கள்.அவர்களை ஏனையோர் சந்திக்கிற ஒவ்வொரு பகுதியும் தனித்தனி குறும்படம்.அவர்களை நடக்க விடாமல் எல்லோரும் கைகளில் தாங்கி, முதுகில் ஏற்றிக்கடத்தி விடுகிற கவிதை நிகழ்வுகள்.இதில் இன்னோவா காரில் வரும் புதுமணத் தம்பதிகள் தவிர எல்லோரும் ஒரே வகை.

க்ளோசப் காட்சிகளை தொட்டால் சினுங்கி,ரயில் பூச்சி,ஆலம் விழுதின் நுனி,பிறந்த குழந்தையின் விரல்களைப்போன்ற வெளிர் மஞ்சள் நுனி ஆகியவற்றுக்கு ஒதுக்கி வைத்து விடுகிறார். மற்ற எல்லாவற்றையும் உணர்வு பூர்வமான பிரதிபலிப்புக்கு அர்ப்பனித்து விடுகிறார்.கலவரம் நடக்கும் பகுதியில் வந்து போகிற மாற்றுத்திறனாளியும்,கூட்டு கற்பழிப்புக்குள்ளாகிற பெண்ணும்,சாலையோர விபச்சாரியும் இந்த உலகத்துக் உரத்த மௌனத்தில் ஏதேதோ சொல்லிவிட்டுப் போகிறார்கள்.சாலையோர விபாச்சாரி விவரிக்கிற பழய்ய வாழ்க்கை ஒரு கண்ணீர்க்கவிதை.வசனகர்த்தாவை துக்கிவைத்துக் கொண்டாடவேண்டும்.

பெரும்பாலான தமிழ்சினிமாவின் கதாநாயகர்களின் முதல் பிரவேசத்தை, காமிரா காலில் தொடங்கி  மேலேறி முகத்துக்கு கொண்டு வரும். சாயங்கால மானால் மாடு வீடு திரும்பும் பாதைக்கு அணிசையாய் இழுத்துச் செல்வது போல. நாயகிகளின் இடுப்பையும், மார்பகத்தையும் கண்டால் நகராமல் இருப்பது எல்லாம் தமிழ்சினிமா காமிராக் கலாச்சாரம். இந்தப்படம் முழுக்க முழங்கால்களுக்கு கீழேயே அதிக காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.எதோஒரு ஜப்பனியப்படத்தின் தழுவல் தானென்றாலும்,இப்படியும் படம் எடுக்காலாம் பாருங்கள் என்று முகத்திலடிக்கிற முயற்சி இது.சூறைக்காற்றில் மேலெ ழும்பும்  மக்கும் மக்காத குப்பைகளுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த அரிதான தமிழ் சினிமா.இடைவேளையில் வெளிவந்த போது வந்திருந்த பத்து முப்பது இளைஞர்களின் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

75 வருட திரைப்படங்கள் தமிழ் ரத்தங்களில் ஏற்றி வைத்திருக்கிற சாக்கடையை  ஒன்றிரண்டு திரைப்படங்கள் மூலம் சுத்தப்படுத்திவிட முடியாது. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற காட்சிகள்.கஞ்சிக்கில்லாத ஏழை நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில் வசிக்கிற செட்டுகள்.லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை  ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும். ஆனால் பாருங்கள் மொத்த தமிழ்ச் சினிமாவின் குறிப்பிட்டுச் சொல்லுகிற படங்கள் எல்லாமே அந்தந்த காலத்தில் ஓடாமல் முடங்கிய மொக்கைப்படம் என்பது தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடு.

இதில் விமர்சிக்கவேண்டிய இடங்கள் இல்லையா என்றால் இருக்கிறது. எனினும் அதைப் புறந்தள்ளிவிட்டு தூக்கிப் பிடிக்கவேண்டிய படைப்பு இது.இல்லையென்றால் 200 கோடி,162 கோடி செலவு செய்து தயாரிக்கும் கதையில்லாத திரைப்படம் தான் படைப்பு என்று சந்தைக்கு வரும்.

காட்சிகளின் உறுத்தலற்ற பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இசை இழுத்துச் செல்லுகிறது. இந்திய திரை இசையில் பின்னணி இசைக்கு புதிய பரிணாமமும்,அழகிய பரிமாணமும் கொடுத்து நிறுத்தி வைத்திருப்பவர் இளையராஜாதான்.ஒரு ஏழை வீட்டுக்கு வரும் அதிகாரியின் பிரவேசம் என்ன மனநிலையை உருவாக்கும் என்பதை குஞ்சுக் கோழியின் கெக்கெக் சத்தத்தை சேர்த்து பிரம்மிப்பூட்டியவர் இளையராஜா.படம் முள்ளும் மலரும் இடம் காளியின் வீட்டுக்கு வரும் எஞ்சினியரின் வருகை.ஒரு 900 இந்தியத் திரைப் படங்களுக்கு இசையமைத்த அவரின் மேதமை மத்திய அரசால் நான்கு முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

காட்சி ஊடகத்தின் மீதும், கதை மீதும்  அதீத நம்பிக்கை வைத்திருக்கிறது இந்த நந்தலாலா.அதற்கு ஈடு கொடுக்கிற அகிலேஷ்,பாஸ்கர்மணி அகியோருக்கு இணையாக இசை கூடவே நடக்கிறது.இருவரும் தங்கள் தாயைச்சந்திக்கிற  மனசை உலுக்குகிற காட்சியை கண்ணீர் விடாமல் சந்திப்பது சிரமம். அந்த ஈரம் அடுத்தொரு தரமான தமிழ்ச்சினிமா வரும் வரை காயாமல் காத்திருக்கும். நம்பிக்கையோடு.

26.11.10

எது கலாச்சாரம் ?, யார் அதை வடிவமைத்தார் ?

சின்னவயசில் கோழியச்சுற்றுகிற சேவலைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழும் இவை இரண்டும் எப்போது கல்யாணம் பண்னிக்கொண்டன என்று.தாய் பிற ஆடவனுடன் பேசும்போது சேலைத் தலைப்பை பிடித்து இழுத்து வீட்டுக்கு வா என்று அடம்பிடிக்காத குழந்தைகள் இருப்பதில்லை.அது என்ன வகையான பொஷெசிவ் என்று இனம் கண்டு பிடிக்க முடியாது.எழுத்து, சிந்தனை, செயல் எல்லாமே ஆண்வயப்பட்டதாகவே களத்திற்கு வருகிறது. கொஞ்சம் குறைய நிறைய்ய ஆணவத்தோடும் களமிறங்குகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு காதல் பிடிக்கும்.இந்தக் கேள்விக்கு தயங்காமல் 99.99 சதம் ஆதரவுக்குரல் தான் வரும்.எத்தனை தகப்பன்களுக்கு காதலைப்பிடிக்கும்,அதுவும் பெண்ணைப்பெற்ற தகப்பன்களுக்கு?.மௌனம்,திசை திருப்பல் வியாக்கியானம் தான் வரும்.என் சொந்த தாய் மாமன் அவனுக்கு  என்னைவிட ஒரே ஒரு வயது
தான் அதிகம்.கல்லூரிக்காலத்தில் அவன் காதல் பிரசித்தமானது.ஒரு ஐந்துவருடம் ஊரில் அவன் பேச்சுத்தான் பேசப்படும்.அவனைக்காதலித்த பெண்னுக்கு அடி உதை. அப்புறம் பள்ளிக்குடம் கட்.அப்புறம் வீட்டைவிட்டு வெளியே போகும் சுதந்திரம் கட்.எல்லா வேலிகளில் இருந்தும் காதல்  ஒவ்வொரு முறையும் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொடுக்கும். கொடுத்தது.காதலுக்கு ஆதரவான கோஷ்டி,எதிரான கோஷ்டி என ஊர் ரெண்டானது.இறுதியில் அந்தப்பெண்ணின் குடும்பம் ஊரைக்காலி பண்ணிக் கொண்டு  ஒரேயடியாக வெளியூர் போய்விட்டார்கள்.

ஆனல் அது இறுதியல்ல.போன இடத்தில் அவளுக்கு பேய் பிடித்துக்கொண்டது.பிடித்த பேயை விரட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் கொண்டு போனார்கள்.இவனும் போனான்.'கள்ளம்பெருசா,காப்பாம்பெருசா'என்கிற சொலவடை முழுதாகப் புரிந்தது.பிறகு போலீஸ் டேஷன், அவனுக்கு ரிமாண்ட். அத்தோடு முடிந்து போனதென்று அவனும் அவளும் உட்பட ரெண்டு பக்கமும் ஒதுங்கிக் கொண்டார்கள்.ரெண்டு வருடம் கழித்து திடீரென ஒரு நாள்மாலையும் கழுத்துமாக வந்து நின்றார்கள். அலுத்துப்போன பெற்றோர்கள்,அதற்குமேல் ஏதும் செய்ய முடியதவர்களாக பெற்றோர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.பின் ஏற்றுக்கொண்டார்கள்.இது, இந்தக் கதை ரெண்டு ஜாதிகளுக்குள் இல்லை நண்பர்களே கவிஞர் மீராவின் கவிதையை போல செம்புலப்பெயநீர் சொந்தத்துக்குள். காவியத்தில்  காதலென்றால் கனிந்துருகும் மானிடம் நமது.அது இன்னொரு வீட்டில் நடக்கும் போது மட்டும்.

இருபது வருடங்கள் ஓடிப்போனது,என்னிடம் ஒரு பிராது வந்தது 'ஊரில் ஒரு பய நம்ம பொண்ணு பின்னால சுத்துறான் என்ன செய்யலாந் தம்பி' ஒரு பெரியவர் வந்து சொன்னார். யார் பொண்ணு என்கிற விபரம் கெட்டேன்.  சொன்னார்.தாய் தகப்பன் என்ன சொல்றாங்க என்று கேட்டேன். 'கொதிச்சுப் போயி  இருக்காங்க,கேசு குடுக்கலாமா ,ரெண்டு தட்டு தட்டி வுடலாமா ஒரு ரோசன சொல்லு' என்றார்.ஒன்னுஞ்செய்ய வேண்டாம் புருசனும் பொண்டாட்டி யையும் தனியா ஒக்காந்து அவுக எப்பிடிக்கல்யாணம் முடிச்சாங்கண்ணு யோசிக்கச் சொல்லுங்க, எல்லாஞ்சுமூகமா முடிஞ்சிரும் என்று சொன்னேன்.அதன் பிறகு 'மழையில்ல,தண்ணியில்ல,இந்த பொம்பள ஆச்சியில வெலவாசியப்பாரு ஒங்க கம்மூனிஸ்ட்காரங்க சொல்றது சர்த்தாம்பா' என்று அரசியல் பேசிவிட்டு போய்விட்டார்.தூது அனுப்பிய தாய் தகப்பன் தான் முதலில் சொன்ன காதலர்கள்.முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை இங்கு,ஏராளம்.

கேட்டால் 'எங்கள் காதல் தெய்வீகமானது,இதுக சும்மா டைம்பாசுக்கு கடல போடுதுக' என்று சொல்லுவார்கள்.காலங்காலமாக பெற்றோர்களின் வார்த்தைகள் மாறிவரும் கருத்து மாறாது. இந்தச்சாதாரணக் கதையை வலையுலகத்துக்குள் நுழைந்து அவர்கள் படிக்கப் போவதில்லை என்கிற தைர்யத்தில் எழுதிவிட்டேன்.ஆனால் யாரும் வெளியில்சொல்ல முடியாத காதல் கதைகள் கோடி கோடி கொட்டிக்கிடக்கிறது. அவை யாவும் கெட்டிப்படுத்தப்பட்ட சமூகச்சுவர்களின் மறுபக்கம் உருவாகும் இருட்டுக்குள் புதைந்து கிடக்கிறது.வண்ண வண்ணக்கோலங்கள் படம் பார்க்கிற யாருக்கும் அதில் எந்த விமர்சனமும் வராது உள்ளூர ரசிப்போம்.அந்தக் கதை மாந்தர்களுக்கு கிடைக்கிற காட்டு சுதந்திரத்தை ஒரு நாளாவது அனுபவிக்கவேண்டும் என்கிற ஆவல் வந்து போகும்.அது துஷ்யந்தனுக்கும் சாகுந்தலைக்குமென்றால் காவியமாகும்.நடப்பில் என்றால் கள்ளத்தனமாகும்.

இது சரியா தவறா என்கிற வாதம் ஒரு புறம் கிடக்கட்டும்.இந்த வாதமே தவறானது இல்லை ஒருதலைப்பட்சமானது என்று புரியலாம்.இங்கு நடப்பது மோனோ ஆக்டிங் மட்டுமே.ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம்.'எலே ஊதாரிப்பெயலே நீ பெரிய சண்டியர்னு ஓண்ட அடங்கிப்போலடா,இந்த பச்சமண்ணுக தெருவுல அலையுமேங்குற கவலயிலதான் ஓண்ட சவண்டு போய்க்கெடக்கேன்' ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல் அமுங்கிப்போகலாம்.சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத மௌனத்துக்கு சக்தி அதிகம்.அடங்கிப்போவது வெடித்துச் சிதறுவது இந்த இரண்டில் எது கலாச்சாரம் என்பதுதான் கேள்வி இப்போது ?

நண்பர்களே ஒரு தென்மாவட்டத்து குக்கிராமத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து சாத்தூருக்கு வந்த புரிதல் இது.சென்னைப் பெருநகர் வாழ்க்கை,வேகம்,நெரிசல் இவையெல்லாம் எனக்கு சர்க்கஸ் பார்க்கிற அனுபவம்தான்.அங்கிருந்து  கிளம்புகிற இந்த வாதத்தை முழுமையாக அறிய வலை ஒரு வெளியாகிறது. எனவே

உயர்திரு மருத்துவர் ருத்ரன்,
மதிப்பிற்குறிய மருத்துவர் ஷாலினி,
பாலாண்ணா (வானம்பாடிகள்),
யாராவது ஒரு பெண்பதிவர் 
மற்றும் மாதவராஜ்

ஆகியோர் விரிவாகப்பேசினால் தேவலாம்.

25.11.10

மறதியெனும் புதை சேற்றுக்குள்

'mission scandal eradication' திருப்திகரமாக முடிந்தது.

இனி  புரட்சிப்பெண் vs சுதந்திரப்போராட்ட தியாகி வழக்கில் ஊடகங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தும்.உலக வரலாற்றில் முதன் முறையாக அரங்கேறும் இந்த குடும்பச் சண்டையின் ருசிகர ,எதிர்பாராத, ஹேர்பின் திருப்பங்கள் ஆகியவற்றை தொகுத்துவழங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள். இது போதாதென்று 162 கோடி மெகா பட்ஜெட்டில் மொழிமற்றம் செய்யப்பாடப்போகிறது ஒரு உலகமஹா காவியம்.அதற்கும் கணிசமான பக்கங்கள் ஒதுக்கியே தீரவேண்டும்.

மறதி எனும் புதைசேற்றில் நுற்றாண்டு  சூதாட்டம் தொடர்கிறது கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை காலம் தொடரும்?

24.11.10

உலகமாதா எண் 2.

கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் முந்தி அறிவியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்தான்.ஒல்லியான ஒசரமானஉருவம்.கொஞ்சம் இலக்கிய ஆர்வம்,வெகு தீவிரமான பேச்சாளி.வழக்காடு மன்றங்களில் தனக்கு பிடித்த தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அப்படியே அரசியல்வாதி மாதிரி உச்சஸ்தாயியில் பேசுவான்.அப்போதெல்லாம் கிலோக்கணக்கில் அவனுக்கு லந்து கொடுப்பேன்.அப்போது எனது நண்பன் முருகையா ஒரு புரட்சிகரப் பேச்சாளன் அவனோடு எல்லா இடங்களுக்கும் போவேன்.நான் நல்லாப் பாடுவேன் என்று அறிமுகம் செய்து பாட்டுப் போட்டியில் பேரும் கொடுத்து தள்ளிவிட்டு விடுவான்.மேடையில் எனக்கு முன்னாடிப் பாடியவர்கள் கொஞ்சம் முறைப்படி சங்கீதம் கற்றவகளாக வந்து ஒரு போடு போட்டு விட்டுப்  போனப் பிறகு, எனது சிவாஜி பாடல்கள் கரகரத்துவிடும்.

வேலை கிடைத்து ஒரு பகல் முழுக்க பயணம் செய்து கிளைக்குள் நுழையும் போது பெரிய அதிர்ச்சி காந்த்திருந்தது. அங்கே அவன் உட்கார்ந்திருந்தான். இரண்டு நாட்கள் என்னோடு தங்கி ரூம் பார்த்து விட்டு விட்டுப் போக வேண்டு மென்று வந்திருந்தார் எனது சித்தப்பா. ஆனால் அவன் இருக்கும் நிம்மதியில் சாயங்காலமே கிளம்பிவிட்டார்.அந்த வாலிபக் காலத்தில் பீறிட்டுக் கிளம்பிய உற்சாகம்,பெண்களைப் பார்க்கிறபோது ஏற்படுகிற குறு குறுப்பு,அந்யாயத்தைக் கண்டு வெடிக்கிற கோபம் இவற்றில் என்னோடு கூடவந்த தோழன் அவன். ஒருவருக்கொருவர் தோற்றுப்போன காதலைச் சொல்லி இறுக்கமானோம். பின்னர் குடும்பப் பின்னணியைச் சொல்லி இன்னும் நெருக்கமானோம்.அவன் குடும்பக் கதை சொல்லும்போது எனது வறுமை ரொம்பச் சிறியதாகத் தெரிந்தது.ஒரே ஒரு மாணாவரிக்காடு, மூன்று குழந்தைகள்,புகைப்படத்தில் கணவன் இவற்றோடு தன்னந்தனியே வாழ்வை எதிர்கொண்ட தாயின் பிம்பம் அரிச்சலாக இருந்தது.மாற்றலாகி ஊருக்கு வந்த சிலமாதங்களில் அவன் வீட்டுக்குப்போனேன். நானே வரைந்து கொண்ட தாயின் சித்திரம்  நேரில் பார்க்கும்போது கலைந்து நடக்கும் அமைதிக்கடல் மாதிரி இருந்தார்.

அப்புறம், எப்போது வீட்டுக்குப் போனாலும் அடுப்படியில், துவைகல்லில், முற்றத்தில் காயப்போட்ட கோதுமை இப்படித் தான் வெளிப்படுவார்கள். பர்த்ததும் சோபையாய் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு 'றாய்ய,டீ தாஹு' என்று சொல்லுவார்கள். உடலும், மனசும்,உடையும் வெண்மையான அந்தத்தாய். அவனுக்கு தெலுங்கு தெரியாது என்று சொன்னப்பிறகு அதைப் பொருட் படுத்தாமல் தமிழுக்கு மாறிவிடுவார்கள்.தேநீர் தானே வரப்போகிறது என்று பேசாமல்லிருந்தால்,கேட்காமலே சாப்பாடு போட்டு வைத்துவிடும் தாயுள்ளம் அவர்களுக்கு.ஒரு மாத இடைவெளியில் மீண்டும் வீட்டுக்குப் போகும்போது மறக்காமல் 'றாய்யா,கூச்சுண்டு' என்று சொல்லுவார்கள்.நான் சில நேரம் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசுவேன்.ஆனால் பல நேரங்களில் எனக்குத் தெரிந்த தெலுங்கில் பதில்பேசிவிடுவேன்.

தன் மகனோடு நெருக்கமாகப் பழகுகிறவர்கள் தன் சுயஜாதிக்காரர்களாக மட்டுமே இருக்க முடியும் என்கிற நம்பிக்கை.அது ஒரு மாணாவாரிக் குடும்பத்தின் சொச்சம் என்கிற விமர்சனம் எனக்குள் இருந்தது.கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அது இந்த சமூக அழுக்கின் மிச்சம் என்பதை உணரலாம்.வீடு குழந்தைகள் வறுமை.காடு,பாடு,பற்றாக்குறை இதற்குள்ளிருந்தே மீளமுடியாத பெண்ணை வீட்டுக்குள்ளிருந்து கூட கைதுக்கிவிட முன் முயற்சி எடுக்காத சொந்த ஆதிக்கம்.அதைக் கலாச்சாரத்தின் பெயரால் சகித்துப்போகிற பெண்கள் பெரும்பாண்மை வகிக்கும் சமூகம்.ஒவ்வொரு ஊரிலும் கூட்டமாக  ஒரு ஜாதியை ஒதுக்கி வைத்திருப்பது மேக்ரோ ஆதிக்கம்.அது போல ஒவ்வொரு வீட்டு அடுப்படியிலும் ஒதுக்கி வைத்திருப்பது மைக்ரோ ஏற்பாடு. இந்த ரெண்டையும் எதிர்த்து குரல் எழுப்பியவர்களை ரொம்பச் சுளுவாக நாத்திகர்கள் என்று ஒதுக்கிவிவைத்து விட்டது எவ்வளவு பெரிய கொடுமை.

இதைப்புரிந்து கொள்ளும்போது அந்த வெள்ளை உள்ளம் கொண்ட தாய் என் மதிப்பில் வெகுவக உயர்ந்தார்.நான் அவரோடு  தெலுங்கு மட்டுமே பேசுவது என்கிற முடிவெடுத்தேன். எனது வக்கபுலேரியில் மேலும் அதிக தெலுங்கு வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன்.அடுத்த முறை போகும்போது அவர்கள் இல்லை.கடைக்குப்போயிருந்தார்கள். வந்ததும்  'எப்பய்யா வந்தே, அண்ணன் ஊருக்கு போயிருக்கான்,வீட்டுக்காரியையும் பேரனையும் கூட்டிட்டு வரலாமில்லய்யா' என்றார்கள். ஏதேதோ இற்று இடிந்து விழும் சத்தம் கேட்டது.நான் குனிந்திருந்தேன்.நீட்டிய கையில் வரக்காப்பி இருந்தது. ஆனால் பால் வாடை அதிகமாக அடித்தது.

23.11.10

நுங்கும் நுறையாக ஓடும் காட்டாறுகள்.

இந்த மழைக்காலத்தில் பூமியெங்கும் நீராய் நிறம்பி வழிகிறது.சாத்தூரிலிருந்து மதுரை வரை குறுக்கே வருகிற அர்ச்சுனா,கௌசிகா காட்டாறுகள் நுங்கும் நுறையுமாக இழுத்துக்கொண்டு போகிறது.வேலிச்செடிகள் கரையில் அடைத்துக்கிடக்கும் பெரிய பொந்துகளாய்க்கிடந்த கரட்டு ஓடைகள் இப்போது கரை ததும்பி குதூகலமாக ஓடுகின்றன.மதுரையைக்கடக்கிற போதெல்லாம் அந்த வைகையைப் பார்க்கும் போது ஏக்கமும் பெருமூச்சும் மட்டும் வந்து போகும்.இதோ ரெண்டுகரையும் அடைத்துக்கொண்டு ஏப்பம் விடுகிறது வையை.சனம் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு பாலங்களில் நின்று நீரோட்டம் பார்க்கிறதுகள்.அடித்துச்செல்லும் மரக்கிளைகளில் மனசை ஓட விட்டு மெய்மறக்கிற கணங்கள் அலாதியானவை.

திரும்புகிற திசையெல்லாம் பசேலெனக் காடுகள் கண்னைப் பறிக்கின்றன. பிளந்து போட்ட பிளாட்டுகளின் நடுகற்களை மறைத்துக்கொண்டு கோரைப் புற்கள் பச்சைக் கொடியுயர்த்துகின்றன.உச்சிமத்தியானம் ஊதக்காத்து அடிக் கிறது எங்கள் வெயில் தேசத்தில்.எங்கு தான் மறைந்துகிடந்தனவோ இத்தனை காலம்,  இந்த தாரை தப்பட்டை முழங்குகிற தவளைகளும்,தாழப் பறக்கிற தட்டானும், ஈசலும், நெய்க்குருவிகளும். மொது மொதுவெனக் கிளம்பி வசந்த விழாக்கொண்டாடுதுகள்.

அரட்டாவளையை (அரைத்தவளை) மீனென்று நினைத்து குளம் குட்டைகளில் அலைந்து திரிந்த காலங்கள் மெல்லிதாய் வந்து போகிறது.பிடித்த அரட்டா வளையைச் மேல் சட்டையில் அள்ளிக்கொண்டுவந்து அம்மாவிடம்
கொடுத்து  கொழம்பு வைக்கச் சொல்லி பாராட்டு வாங்கலாமென்று அப்துல் கலாம் கண்டுகொண்டு போனதும்.ஒத்தப்பிள்ளையப்பெத்து இப்பிடி அரக் கிறுக்குப்பிடிச்சு அலையுதே. எலெ நீ என்ன சீனாக்காரனா தவளையத் திங்கச்சொல்ற' என்று அம்மா செல்லமாய் திட்டியதும்.வந்து அலையடிக்குது.

செக்கச்செவேலென கிடக்கும் கண்மாய்த்தண்ணீரில் ஆண் பெண் வித்தியாச மில்லாமல் நீச்சலடிச்ச காலம் வந்து போகுது.முங்கு நீச்சலடிச்சு வந்து சரசுவின் காலை அவளுக்குத் தெரியாமல் பிடித்த நிமிடங்கள் அந்த நேரத்து சாகசங்கள்.அதே கண்மாய்த் தண்ணீரில் முங்கி சாகக்கிடந்த பிச்சைக்கனியை தூக்கிக்கொண்டு வந்ததும். வண்டியக் கொடசாய்ச்சி சக்கரத்தில் வச்சு சுத்தியதும். ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த  நிஜ ஞாபகங்கள்.

22.11.10

ஊடகச்செய்திகளும் மக்கள் சேதிகளும்.

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தொழிற்சங்கம்,செல்வி ஜெயலலிதா தொழிற்சங்கத்தை ஆதரித்தது. செய்தி.

துணை நடிகர் முதல் பிரபலநடிகர்வரை தங்களுக்கென்று தனித் தனியாக தொழிற்சங்கம் தொடங்க அவரவர் தனி மேலாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்களாம். வதந்தி.
0

அடுத்தடுத்து தோல்வி,நிதானமாக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் விக்ரம்.செய்தி

டிட்டர் லெனின் எடுத்த நாக் அவுட் குறும்படமும்,அடுத்து ஒரு தேயிலைக்கம்பெனி எடுத்த
விளம்பரப்படமும் என்ன கணக்கில் வரும் ?.இப்போது காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும் மணப்புறம் கோல்டு லோன் விளம்பரம் வெற்றியா,தோல்வியா?.இல்லை கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சங்கர்,மணிரத்னம் படங்களில் சம்பாதித்தது தோல்வியா ? வெவரமாக் கேட்டுச் சொல்லுங்க. பொதுஜனம் சந்தேகக் கேள்வி.
0
கன மழையால் விருதுநகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செய்தி.

ரே ஒரு நாள் வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்தது செய்தியா வருது, வருஷம் முழுக்க ஆறு,ஓடை,கண்மாய்,குளங்களுக்குள் வீடுகள் புகுந்ததப்பத்தி எழுதறதே இல்லை ஏன்.நீர் நிலைகள் அங்கலாய்ப்பு.

கோடிக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை போட்டார்கள். செய்தி

ரெண்டு மாசத்துக்கு இம்சையிலிருந்து விடுதலை. மனைவிமார்கள் உற்சாகம்.ரெண்டுமாசத்துக்கு யாவாரமே நடக்காது அந்திக்கடைக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகிகளும் வருத்தம்.
0
விசாரணக்கைதி கொலைசெய்யப்பட்டதால் பெரியகுளத்தில் பதட்டம்.

ரே மாசத்துல ரெண்டு கொலை செய்திருக்கிறோம் ஒன்றுக்கு இனிப்புக்கொடுத்து மாலை மரியாதை பண்றாங்க.இன்னொன்னுக்கு கலவரம் பண்றாங்க. குழப்பம்.

21.11.10

பேருந்து நிலையத்தின் புகைப்படம்

ரெண்டு வாயில்கள் உள்ள அந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயில் எப்போதும் சிறுநீர் வாடை காரமாக நெடிக்கும்.அங்கிங்கெனாதபடி செத்துப்போன சித்தப்பு வுக்கு நினவஞ்சலி சுவரொட்டி இருக்கும்.அங்கு ஒதுங்குகிறவர்களை அருவெறுப்புடன் பார்த்த நானே ஒரு மழைநாளில் ஒதுங்கி குனிந்து கொண்டே திரும்பி வந்தேன்.ரெண்டே ரெண்டு சைக்கிள் ரிக்ஷா இருக்கும்.ஒரு நாள் கூட யாரும் அதில் ஏறிப்பயணம் செய்த காட்சி எனக்கு நினைவுக்கு வரவே இல்லை.ஆனால் அவர்களைக்கடக்கும் போதெல்லாம் குளிர்காலத்தில் கொசுக்களை விரட்ட போடும் புகை மூட்ட வாசனை வரும்.

அதைக்கடந்து போனால் பூவிற்கிற பெண்.ஒரு நாளும் அவர் தலையில் பூவிருந்து பார்த்ததில்லை.ஒரு ஆரு மாதத்தில் பரிச்சயமாகிப்போனபின் 'பூ வாங்கிட்டுபோங்க சார்' சொல்வார்.யாருக்கு வாங்கிட்டுப்போக என்று கேட்டால்.கல்யாணமாகியிருந்தா வீட்டுக்கரம்மாவுக்கு,இல்லாட்டசாமிக்கு என்று சொல்லுவார்.முதலாவது பழக்கமில்லை ரெண்டாவது நம்பிக்கை யில்லை என்று சொன்னால்.'இந்தக்காலத்துலயும் இப்பிடியா ?எங்க வீட்டு அண்ணாச்சி காத்தியல் ஒண்ணாந்தேதி போட்ற மாலையை தைப்பொங்கல் கறிநாளாண்ணிக்குத் தான் கழட்டுவார்'.என்று சொல்லும்.பலநாள் சிரித்த படியே கடந்து போகலாம்.

அதைத்தாண்டி வேப்ப மரத்துக்கடியில் ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை போட்ட வெளிமாநிலத்துக்காரன் உட்கார்ந்திருப்பான். ஒரே ஒரு சூட்கேஸும் ஒரு மரப்பலகையும் கொண்டு வருவான். விரித்து வைத்து,ஒரு ஒலிபெருக்கியையும் டேப் ரிக்கர்டரையும் இணைப்பான்.பத்தி பொருத்தி வைத்து ஒலிபெருக்கியை உசுப்பி விடுவான். அதிர்ஷ்டக்கல் மோதிரம்.அதை வாங்கி உபயோகித்தால் உண்டாகும் நண்மை களைப் பட்டியல் இடும் ஒலி பெருக்கி. மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வியாபாரத்தில் நஷ்டம்,மாமியார் மருமகள் சண்டை,கணவன் மனைவி பிணக்கு,சந்தேகம்,பில்லி சூனியம், இல்லற இன்பம் என அந்த சிவகாசிப் பேருந்து நிலையத்துக்கு வந்து போகும் அத்தனை பேரின் புகாருக்கும் ஒரே கல்லில் தீர்விருப்பதாகச் சொல்லும்.

அந்த அதிர்ச்சியைத் தாங்கி நின்றால் அடுத்த இடியை இறக்கும். வாங்கி கொண்டுபோய் இரண்டு வாரத்தில் பலனில்லையென்றால் பணம் வாபஸ் பண்ணப்படுமாம். அப்படிச்சொல்லிவிட்டு மராட்டிய மாநிலத்தின் ஒரு குக்கிராமத்து பேர், பின்கோடோ டு விலாசமும் சொல்லும்.கல்லின் விலை எவ்வளவு தெரியுமா?, வெறும் பத்து ரூபாய்.'இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சியை சிவாகாசித் தொகுதியில் ஜெயிக்கவைக்கணும் அதற்கு இந்தகல்லை வைத்து ஏதாவது செய்ய முடியுமா' என்று கேட்டார் ஒரு குறும்புக்கார பக்தர். முறைத்துவிட்டு தலை கவிழ்ந்து கொள்வான்.உள்ளே நுழைகிற சஞ்சல முகத்துக் காரர்களை எல்லாம் அளந்து, அழைப்பான்.எப்போதாவது வரும் ஒரு கிராமத்து மனிதரை எதிர்பார்த்து தனது தேநீர் தாகத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே  இருப்பான்.

அங்கிருந்து கொஞ்சம் தள்ளி ஏட்டு கண்ணன் நிற்பார்.யாரையும் அதட்டமாட்டார்,என்ன நடந்தாலும் அதிர்ந்து பேச மாட்டார்.மாலை ஐந்து மணி பேருந்துகளில் நெறிபொழியும் கூட்டத்தை நெறிப்படுத்தவும் மாட்டார். அவ்வளவு அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் அவரை எப்படி அந்த காவல் துறை சகித்துக்கொள்கிறதென்று புரியவில்லை.எனக்குத்தெரிந்த பூசாரியின் மகன் பரமசாது .குங்குமமும், துண்ணுரும் இல்லாமல் குளிக்கக் கூடப்போகமாட்டான்.விதவிதமாய் மீசை வைக்கவேண்டிய கல்லூரி நாட்களில்கூட மழித்துக்கொண்டு திரிந்தவன்.போலீசுக்கு தேர்வான மறுநாளே கிடா மீசை வளர்த்துக்கொண்டான். ஏட்டுக்கண்ணன் போட்டிருக்கிற உடுப்பைத்தவிர போலீசுக்கான அடையாளம் ஏதுமிருக்காது.அப்படிப்பட்ட ஆளிருந்தால் ஜேப்படிக்காரனுக்கு கொண்டாட்டம் தானே?.

வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் அங்கு வரும் அந்த வெளிர்நீள கால்சராய்க்காரனுக்கு கூட்டம் கூடும்நாட்களெல்லாம் கொண்டாட்டம் தான். சாத்தூர்,விருதுநகர்,ஸ்ரீவில்லிப்புத்தூர்,வெம்பக்கோட்டை போன்ற பிரதான வழிகளில் தான் அங்கிருந்து கிளம்புகிற எல்லாப்பேருந்தும் போகும். எல்லாப் பேருந்திலும் ஏறி இறங்கிவிடும் அவனது  வேலை நேரம் இரண்டு மூன்று நிமிடங்களில் முடிந்து போகும்.எதுவும் கிடைக்காத நேரத்தில் ஒதுங்கி ஒரு பீடி பற்றவைத்துக்கொள்வான்,சுபாரி பாக்குப்போட்டு நாற்றம் குறைத்துக் கொள்வான்.பையில் இருக்கும்  சீப்பை எடுத்து தலைவாரிக்கொள்வான்.யாரும் சந்தேகப்படக் கூடாது என்கிற ஜாக்கிரதை.பெரும்பாலும் பெண்களின் பின்னாடி நெருங்குவான்.அவர்கள் கவனத்தை மனிப்பர்சிலிருந்தோ, கைப்பையி லிருந்தோ திருப்புவதற்கு சில்மிஷத்தை நம்புவான்.ஒரு சாமான்யனான எனக்கு அவன் ஜேப்படிக்காரன் என்று தெரிந்திருக்கையில் அவனைக்கண்டுபிடிக்கிற தொழில் புரியும் ஏட்டுக்கண்ணனுக்கு ஏன் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதற்கு யூகங்கள் மட்டுமே பதிலாக இருக்கும்.

ஒரு கையில்லாத கட்டைக்குரல் கிருஷ்ணமூர்த்தியும், அவனது தொடுப்பு அட்டை கொடுத்து பணம் வசூலிக்கும் முக்காட்டுக்காரியும் வருவார்கள்.

(ஒரு நான்கு வருடம் காலையும், மாலையும் படிக்கும் புத்தகமாக இருந்தது.சில நேரம் தரமான திரைப்படம் காண்பிக்கப்படும் திரையரங்கு போலவும் மாறும்.இன்னும் சில நாட்கள் ச்சய் என்ன பொழப்பு என்று உருகி வெறுக்கும் நிகழ்வுகளும் திடும்மென வந்து விழும்.சிவகாசி என்னார் கே ஆர் பேருந்து நிலையம்.)

20.11.10

ஒரு சாமக் கனவும்,பிரம்ம முகூர்த்தவேளையும்.

பன்னாட்டு கம்பெனிகளிடம் கையேந்தாமல்,எல்லோருக்கும் சமாமய் எப்போதும் கிடைக்கிற காற்று.எந்த நடிகை நடிகரும் சிபாரிசு செய்யாமல் இயற்கையே குளிர்பதனம் செய்யது கொடுத்தகாற்று.
பிரம்ம முகூர்த்த வேலையில் கிடைக்கிற இலவச விடிகாலைக் காற்று.இதை அனுபவிக்க ஒரு பின்னிரவின் தூக்கத்தைத் தியாகம் செய்யவேண்டும்.அல்லது முன்னிரவின் ரசஞ்சாதமோ இல்லை ஒரு துர்க்கனவோ வந்து தூக்கத்தைக் கெடுக்கவேண்டும்.

வீட்டுக்குள்ளிருந்து வீசியெறியும் வெள்ளி உருண்டைகளாய் சிதறும் தண்ணீர் பட்டதும் சிலிர்த்துக்கொள்ளும் கதைகள் பொதிந்த வீட்டு  முற்றங்கள்.
எழுப்பி விட்ட குழந்தைப்போல கோலம் கேட்டுக் காத்திருக்கும் ஆதிப்பூமி.
உறக்கத்தின் மிச்சத்தைக்கண்களிலும்,கனவின் மிச்சத்தைக் கைகளிலுமாக கோலப் பொடிகளில் குழைத்துக் கொண்டு வரும் சோதரிகள்.

தகரக்குவளைகளில் உரசல்களில் எழுந்து வரும் தடதடப்பில் லயம் சேர்த்துக்கொண்டு மனதுக்கிசைந்த பாடலோடு  கடந்து போகும் பால்காரரின் சைக்கிள்.தலை எது கால் எது என்று தெரியாமல் படுத்துறங்கும் தார்ச் சாலை.எரிச்சல் தராத இறைச்சலோடு எப்போதாவது கடந்துபோகும் வாகனங்கள்.தண்ணீர் வற்றிப்போன அடிகுழாயில் தனது முழுபெலத்தையும் செலவழிக்கும் நகரத் தாதி அழகம்மாள்.

கச்சா மாவில் உப்பு உறைப்பு சரிபார்த்துவிட்டு முதல் உளுந்த வடையைப் பிளந்து வராத காக்கைக்கு ருசிபார்க்கக்கொடுக்கும் தேநீர்க்கடைக்காரர். ஆவன்னா.ராசா முதல் அக்கன்னா ராசாக்கள் வரை நாழிதழ் வழித் தெரிந்து கொள்ள உட்கார்ந்திருக்கும் முதல் போனி, பணி ஓய்வுபெற்ற பரந்தாமன் வாத்தியார். ஒரு நண்பர்கூட்டத்தின் உற்சாகம்,சிரிப்பு ஆதங்கம் சின்னச் சின்னச் சண்டை களின் மிச்சமாய்ச் சாலையின் விளிம்பில் சிதறிக்கிடக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர், சிகரெட்டுப்பெட்டி,காலியான புட்டி.அதைப் பார்த்து நினவில் கொண்டு வரலாம் ஒரு ரம்மியமான மதுவின் நாளை.

இந்த ரம்மியங்கள் யாவும் சிதைந்து போகாமல் வீடு திரும்பவேண்டுமென்றால் அந்த காட்சியைப்பார்க்காமல் திரும்ப வரவேண்டும்.

நாற்கர சாலைப் பாலத்தின் அடியில்.பீடிக்கங்கின் வெப்பத்தில் சுற்றுக்குளிரை சமாளித்தபடி ரெண்டுபேர்.அந்த விடிகாலையில் ஈக்கி விளக்கமார் தயாரிக்கும் தூரத்து மாவட்டத்துகாரர்கள்.அவர்கள் அருகில் குவிந்துகிடக்கும் துடைப்பங் களின் அளவில் தெரியும் தொலைந்து போன அவர்களின் ராத்தூக்கம். எந்திரகதியில் சுழலும் கைகளுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டி ருந்தது அவர்களின் கைப்பேசியில் ஒலித்த சினிமாப்பாடல்.

16.11.10

இது அரசியல் அல்ல, தொடர்தீபாவளி.

மூக்கைப் பொத்திக்கொண்டு
தன் பங்கு கழிவு சேர்க்கும்
கூவத்தின் தீராத நாற்றம்
தேசிய வாசனையானது.

கூவத்திலிருந்து ஒரு குவளை
சாக்கடையை அகற்றிவிட்டு
தேசிய நீரோட்டத்தை
தெளிந்த பன்னீராக்கியதாய்
திருப்திபடும் தேசம் எனது தேசம்

தெற்குக்கரை மோசம் என்று
வடக்குக்கரை வழக்குத்தொடர்கிறது.
வியாதி செய்யும் விந்தை மருத்துவம்
கறையைப்போக்க கறையே நிவாரணி.

இதோ...
உச்சக் கட்ட ஆட்டம் ஆரம்பம்
உனது எனது சுட்டு விரலில் கறைதடவ.

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி
சிறந்ததெனத்தேர்வு செய்ய நாள் வருகிறது.
வண்டியில்போய் வழியப்பலியாகும்
ஐந்து வருடத்தீபாவளி நெருங்குகிறது.

14.11.10

நோக்கியா,கோயம்முத்தூர்,மற்றும் அங்காடித்தெருக்கள்.

அன்று மூவரும் பேசிக்கொண்டிருந்த போது அண்ணன் சோலைமாணிக்கம் இது பற்றி பதைபதைக்கச்சொல்லிக்கொண்டிருந்தார்.தோழன் மாது இது இப்பதா உங்களுக்குத்தெரியுமா என்று கேட்டான்.கூடவே மேலும் பல தகவல்களைச் சொன்னான்.கைப்பேசி உபகரணத்தின் மதர் போடு எந்திரத்துக்குள் விழுந்து விட அதற்குள் தலையை விட்டு எடுக்கப்போன அம்பிகா இறந்து போனாள்.எந்திரச் சிங்கத்தின் வாய்க்குள் தலையை நுழைத்திருக்கிறாள்.இது சாதாரணமாக நிகழக்கூடியதுதான் எனினும் கட்டுப்பாட்டை இழந்த எந்திரம் சக ஊழியர்களின் கண்முன்னே தலையைத்துண்டாக்கியிருக்கிறது.கழுத்தை நெருக்கிக்கொண்டிருந்த  எந்திரத்தினை உடைத்து அம்பிகாவின் உயிரைக் காப்பாற்றத் துடித்திருக்கிறார்கள் அவர்கள்.அந்த மனிதாபிமானிகளின் கோரிக்கை ஈனக்குரலாகிப் போனதாம்,எந்திரத்தின் விலையைச்சொல்லிய அதிகாரியின் சிம்மக்குரலால்.

இந்த தகவல் சொல்லும்போதும் கேட்கும்போதும் உடல் பதை பதைக்கிறது.உடனிருந்த தோழர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்கிற கற்பனை மரணத்தைவிடக் கொடூரமானதாக இருக்கிறது. அந்தக்கொடூரம்தான் தொழில் நுட்பம்,லாபம்,போட்டி என்கிற பெயரில் தேசியமயமாக்கப்பட்டு வருகிறது.இது இந்த காலத்தின்  மிகப்பெரிய அவலம்.பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சமாளிக்கத்தான் பிறப்பெடுத்து வந்ததாக அறிமுகப்படுத்தப்படும் பன்னாட்டு நிறுவனங்கள். அது குளிரூட்டப்பட்டு கணினி மயமாக்கப்பட்ட கொட்டடி என்பதை கையில் கிடைக்கிற காகிதங்கள் மறக்கடித்துவிடுகின்றன.ஒரு கணினி அறைக்கும் இன்னொரு கணினி அறைக்கும் இடையில் இருக்கும் தடுப்புச்சுவர் தனக்கு மிக அருகில் உட்கார்ந்திருக்கும் மனிதன் யார் என்பதை மறைக்கிற பார்க்காமைச்சுவர்.அருகிலிருக்கும் சக ஊழியனுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனத்தெரியாமல் உலக அரசியல் உலக இலக்கியத்துக்குள் கால் நனைத்து என்ன ஆகிவிடப்போகிறது ?.

இதைவிட மோசம் கார்,செல்போன்,ரசாயன உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும்  சீருடை அனிந்த பண்ணையடிமைகளின் நிலைமை.ஒவ்வொன்றாகப் பட்டியலிட அவசியமில்லை நீங்கள் அங்காடித் தெருவைப் பார்த்திருந்தால்.மதுரை போத்தீஸ் ஜவுளி நிறுவணத்தின் ஊழியர்கள் ரெண்டு பேர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த மாசம் இருவத்தி அஞ்சுநாள் வேலை செய்தால் ஒருமாசச் சம்பளமாம் என்றார் ஒருவர். சொன்னவுடன் கேட்டுக்கொண்டிருந்த சிப்பந்தி உற்சாகத்தில் துள்ளிக் குதித்துவிட்டார்.அப்போது நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அல்வா என் கையிலிருந்தது.அதைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டேன்.ஆனால் அதே நேரத்தில் நிறுவண அதிபரின் பிம்பம் ஊழியர்களின் மனதில் தாறுமாறாக உயர்ந்திருக்கும். அது உண்மையுங்கூட.

ஒப்பீட்டளவில் பார்த்தால் போத்தீஸ் நிறுவணம் ஏனையவற்றைவிட ஒசத்தியாகத் தெரியலாம்.1987 ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து இந்தியா சுற்றிப்பார்க்க வந்த ஒரு இளைஞனிடம் பேசியபோது அவன் கம்பெனி செலவில் நாடு சுற்றிப்பார்க்க வந்திருக்கிறான் என்று ஆச்சர்யம் அறிந்தேன்.கம்பெனி ஒன்றும் மல்டி நேசனல் கம்பெனியல்ல. சும்மா சாதாரண ரொட்டிக்கடை.12 நாள் தற்செயல் விடுப்பு,மாசம் ஒருநாள் மருத்துவ விடுப்பு,ஈட்டு விடுப்பு,அப்புறம் அரசாங்க விடுப்புகள் என்பதெல்லாம் யாரும் போட்ட பிச்சையுமல்ல,கடவுள் கொடுத்த வரமுமல்ல.உழைக்கிற ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கவேண்டிய ஜீவாதார உரிமை.

இந்த 2010 ஆம் ஆண்டில் சனி ஞாயிறு லீவுக்கு சம்பளம் கொடுக்கிற மனிதன் கடவுளாக  றுவதற்கும். பண்ணையடிமை காலத்தில் ஆண்டைகள் கொடுத்த இன்னும் கிராமங்களில் கொடுத்துக்கொண்டிருக்கிற பண்டிகைக்கால பரிசுகளுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே அத்தக்கூலி தான் என்று சொன்னால் அவர்களே என்னைத் திட்டலாம். பரந்துகிடக்கிற கிராமங்களில்,சிறு நகரங்களில், வயிற்றுக்காக வாழ்வு கடத்தும் கோடான கோடி ஜனங்களின் வாழ்வு இன்னும் அப்படியே அத்தக்கூலியாகத்தான் தொடர்கிறது. அந்த பண்ணையடிமை சமூகத்திலிருந்து இன்னும் இந்தியா மீண்டு வரமுடியவில்லை என்பதற்கு குளிரூட்டப்பட்டு,எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்ட ஐந்து மாடி விஸ்வரூப உதாரணம் இது.

அதிலிருக்கிற குமுறல்களை ஒன்றிணைத்து சங்கமாக்கி வருகிற சிஐடியு வைப்பற்றி தீக்கதிர் தவிர நீங்கள் வேறு எந்த தினசரி ஊடகத்திலும் படிக்க முடியாது.தமிழகத்தில் மொத்தம் விற்பனையாகிற இருபதினாயிரம் பத்திரிகை,கொஞ்சம் சிற்றிதழ்கள்,அப்புறம் வினவு,மாதவராஜ் ஆகியோரின் பரப்புறைகள் பத்துக்கோடி ஜனங்களுக்கு பத்துமா?.
அப்படியே இருந்தாலும் எந்திரன்,மோகன்ராஜ்,கூட்டணிப் பரபரப்பில் இந்தசெய்தி எடுபடுமா?.

ஹியுண்டாய் கார் கம்பெனி ஊழியனுக்காகப் போராடி கைவிலங்கு மாட்டப்பட்டு ஜெயிலுக்குப்போன எங்கள் தோழர் அ.சவுந்திரராஜன் அந்தக்கம்பெனி ஊழியர் இல்லை.அந்த தொழிலாளிகளின் ஜாதிக்காரரும் இல்லை.அவர்களை முன்னிறுத்தி பேரம் பேசி சூட்கேஸ் வாங்கும் அரசியல் வியாபாரியும் இல்லை.எங்கு கொடுமைம் நடந்தாலும் அது கண்டு ரத்த அழுத்தம் கூடிப்போகிற கூட்டத்தின் தலைவன்.அப்படிப்பட்ட அசல் மனிதர்களை அச்சுறுத்துவதற்காக கொலைகாரர்களுக்கு இணையாக கைவிலங்கு மாட்டி அழைத்துப்போனது தமிழகம். அந்த தகவல் தமிழகத்தின் எத்தனைகோடிப் பேருக்குத்தெரியும்.

ரஜினி காந்தும்,சங்கரும் அந்த பாலைவனப்பகுதிக்கு பிரத்யேக விமானத்திலும் காரிலும் போனதை சாகசமாக்கிக் காட்டிக் கொண்டிருந்தது சன் டீவி.ஐஸ்வர்யாராயோடு நெருங்கி நடிக்கும் போதெல்லாம் அமிதப்பச்சன் 'கபர்தார்' என்று வக்கணம் காட்டியதாக மனசாட்சியை தொலைக்காட்சிகளில் உருக்கினார் ரஜினிகாந்த். இந்த நடிகர்களின் மனசாட்சியெல்லாம் திரையோடும்,திரைத்துறை சார்ந்த பிரபலங்களோடும் தீர்ந்து போய்விடுவதுதான் சோகமும் திசை திருப்பலும் ஆகிறது.அந்த திசை திருப்பல் வேலைகளை விட அசிங்கமானது அன்பிற்கினிய பேச்சாளர்,நாடாளுமன்ற சட்டமன்ற வித்தகர்,பழுத்த காங்கிரஸ்காரர்  ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைதியைக் குழைக்க சதி நடக்கிறது என்று பேசிய பேச்சு.

இந்த அரசு வன்முறையை,அரசாங்கமே வழிய திணிக்கிற கொத்தடிமையை முறையை தொழிற்சங்கங்களைச் சாடுவதன் மூலம் நியாயப்படுத்துகிறார் அவர்.வடக்கே தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொடங்கிய போதும், பம்பாயில் கப்பற்படை எழுச்சி நடந்த போதும்,தென்கோடியில் வ உ சி தொழிற்சங்கம் ஆரம்பித்த போதும் யார் அமைதி கெட்டுப்போனதோ அவர்களின் அமைதி மீண்டும் கெடுகிறது. கவலைப்படுவது தேசத்தை மீட்டதாகச்சொல்லுகிற அதே காங்கிரஸ் காரர்கள்.இது  விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய கேலிக்குறிய விசயம்.

பன்னாட்டு நிறுவனங்களில் செய்து வைக்கப்பட்டிருக்கிற பலத்த மௌனத்திற்குப் பெயர்தன் அமைதி என்றால் அது போலவே அமைதி மயானங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதைப் பேசுவதும் அதன்மூலம் சில வரம்பு மீறல்களைக் கண்டறிவதும் மனிதக்கூடத்தின் இயல்பு.அது மனித சுபாவமுள்ள தொழிலாளிகளின் உரிமை.அட்டூழியங்களை எதிர்த்துக் கேட்பது அமைத்திக்குப் பங்கம் என்பது பண்ணையார்கள் உருவாக்கிய உத்தி. அந்த விஷ உத்தியை இன்று வரை கெடாமல் பாதுகாத்து உலகமயத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்ததும் அவர்களே. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு எஞ்சினிய்யரிங் கல்லூரி இருக்கிறது அங்கு சேட்டை செய்த எம் இ மாணவனை கட்டைக்கம்பால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறார் ஒரு தாளாளர்.விசாரித்துப் பார்த்ததில் அவர் ஒரு பட்டாசுக்கம்பெனி அதிபர் என்பது தெரிய வந்தது.இன்னும் தோண்டித் துருவி விசாரித்ததில்  அவர் குடும்பம் ஒரு பண்ணையார்க் குடும்பம் என்றும் தெரிந்தது.தனது பாட்டனார் வயக்காட்டிலும்,தனது தந்தை பட்டாசுக் கம்பெனியிலும் செய்ததை அவர் எஞ்சினியரிங் கல்லூரியில் நடைமுறைப்படுத்துகிறார்.

கோயம்பத்தூர் குழந்தைகளின் உயிரைக்குடித்த கயவனை என்கவுண்டரில் கொன்ற அரசுக்கு. அம்பிகாக்களை மெல்ல மெல்லக்கொல்லும் நிறுவணங்களை எச்சரிக்கக்கூடத் திராணியில்லை.இரண்டுமே உயிர்தானே?.
இப்போது 'பராசக்தி' படத்தின் கனல் தெறிக்கும் வசனங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகிறது.
அம்பிகாவின் உயிரைவிட எந்திரத்தின் விலை உயர்ந்தது என்று கணக்குப்போடும் எம்பிஏ படித்தவருக்கும்,எம் இ படிக்கிற மாணவனைக் கட்டக்கம்பால் அடித்து மண்டையுடைத்த தாளாளருக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாச மில்லை.பண்ணையடிமையின் குரூரங்களும் பன்னாட்டுக்கம்பெனிகளின் லாபவெறியும் கைகோர்க்கிற இடம் அது. அதுதான் இனிமேல் வரப்போகும் சந்ததிகள் சந்திக்கவேண்டிய மிகப்பெரும் சவால்.

அதைச்சமாளிக்கிற பொறுப்பு இப்போது இந்தியப்பெண்கள் பக்கம் திரும்புகிறது.சங்கம் அமைக்கும் நடைமுறை களுக்கும்,தொழிற்சங்க உரிமைகளுக்கும்,பயந்து பெரும்பாலும் பெண்களை மட்டுமே பணியமர்த்துகின்றன தனியார் நிறுவணங்கள்.அதன் மூலம் அமைதியயையும் லாபத்தையும் ஒருசேர குவிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிற வர்களின் கணக்குத் தப்பாக ஒரு நாள் எல்லாம் மாறும்.அந்த மாற்றத்தைப் பெண்களே முன்னெடுப்பார்கள்.

10.11.10

கொள்ளிவாய்ப் பிசாசு,சரஸ்வதியின் அண்ணன்,பாதிரியாரின் அங்கி.

தேசிய நெடுஞ்சாலை ரெண்டாய்ப்பிளக்கும் நகரம் சாத்தூர்.வைப்பாறு படுத்திருக்கும் வடகரையில்  அமர்ந்திருக்கும் வளரா நடு நகரம்.ஒருகாலத்தில் மணல் பெருக்கெடுத்தோடிய பெருமையுடைத்து நம்ம வைப்பாறு.ஹார்வி( மில்லும்)பஞ்சாலையும்,மதுரா கோட்சும் இங்கிருந்தது என்று சொன்னால் என்னைக் கல்லால் அடிக்க வர்லாம்.ஆனால் அதன் எச்சங்களான வேதக் கோயில் கோபுரமும்,இந்து.... பாடசாலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிற எத்தல்ஹார்வி,எட்வர்டு பெயர்கள் கட்டாயம் காரணம் சொல்லும். வேதக் கோயில் கோபுரம் எத்தனைமைல்கல்லுக்கு அப்பாலிருந்து பார்த்தாலும் சிலுவையோடு தெரியும்.கரிசல் கிராமங்களின் காலை நேரங்களில் சூரியன் பட்டுத் தெறிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும்.மாலைநேரத்து மஞ்சள் வெயில்பட்டுத் தெறிக்கும் வேதக்கோயில் கோபுரமும் பால்யத்தில் பொதிந்து கிடக்கும் நினைவுகளில்  ரொம்ப உசரமானவை.

'அடே காமராசு, காலைல ஏறுனா சாய்ங்காலம் ஆகிறும் கோவரத்து உச்சிக்கு போக தெரியுமா ?' என்று சொன்னபடி தன் டவுசரை ஏத்தி விட்டு அண்ணாக் கயிறால் இறுக்கிக் கட்டிக்கொண்டு நிற்கும் கந்தசாமி தான் அப்போது எங்கள் அறிவு டார்ச்.அவன் எது சொன்னாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.அவனோட அக்கா புருசன் வெவரக்கார சாமிதாசுதான் ஊரிலிருந்து சாமியாரைப் பார்க்க வாராவாரம் போய்வரும் ஆள்.

பதிலுக்கு சாமியார் வருசா வருசம் பண்டியலண்ணிக்கு(க்ரிஸ்துமஸ்) வருவார்.அன்னைக்குத்தான் குள்ளிப்பிளசர்(அம்பாசடர் கார்) ஊருக்கு வரும்.அதைத்தொட்டுப் பார்க்கவும்,கார்க் கண்ணாடியில் பல்லைக்கட்டிச் சிரிக்கவும் பசங்க கூட்டத்தில் அடிபுடி நடக்கும்.ஆனால் எனக்கு அதிலேதும் நாட்டமிருந்ததில்லை.தூசி படிந்த பின்புறத்து கண்ணாடியில் சிவாஜி வாழ்க,எஸ்கேஆர் இப்படி எழுதினால் தான் தூக்கம் வரும்.அல்லது சாமியாருக்கு பக்கத்தில் நின்றபடி 'அருள் நிறைந்த மரியே வாழ்க' மணப் படமாகச் சொல்லி அவர் பாராட்டுவாங்கவேண்டும்.கன்னத்தைப்பிடித்து கிள்ளி மலையாளம் கலந்த தமிழில் என் பெயெரென்னவெனக் கேட்க வேண்டும். இது நடந்து ரெண்டு நாளைக்கு நான் தற்காலிகத் தலைவ னாகிவிடுவேன்.பழைய்ய தலைவன் கந்தசாமி எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கமாட்டான்.

சாமியாரைப்பற்றி பல மயிர்க்கூச்செறியும் ஹேஸ்யங்கள் சொல்லுவான்.அவர் சாப்பிடவே மாட்டாராம் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போதே மானத்திலிருந்து பன்ரொட்டியும் பாலும் வருமாம்.அவர் போட்டிருக்கிற வெள்ளைஅங்கி அழுக்காகவே ஆகாதாம்.அப்படியே ஆனாலும் சம்மணசுகள் ( தேவதைகள்) வந்து சரிசெய்துவிடுமாம்.பகல்பூராம் பார்க்கமுடியுமாம். ராத்திரியானால் ரூமுக்குள் போய் ஆவியாகி காணாமல் போய்விடுவாரம்.இதையெல்லாம் சொல்லும் போது எல்லோரும் டவுசரைக் கழற்றிக்கொண்டு ஓடையில் இருந்தோம்.அதனால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்டேன்.'சாமியப்பத்தி தூஷனமாவா கேக்க இரு செம்பட்ட...' என்று சொல்லிக்கொண்டே கழுவாமல் ஓடிப்போய் அவனுடைய மாமனிடம் சொல்லிவிட்டான்.சாமி கண்ணக்குத்திப்புடும் என்கிற பயம் ஒரு பக்கம். சாமியின் சேவகன் அடித்துவிடுவானென்கிற பயம் இன்னொரு பக்கம். ஒரு வாரம் அவன் வீட்டு வழியே போகாமல் ஒரு தெரு சுற்றித்தான் பள்ளிக்கூடம் போனேன்.

ஒரு ராத்திரி நேரத்தில் சுற்றிப்போகத் தெம்பில்லாமல் அவன் வீட்டு வழியே போனேன்.வீட்டு முற்றத்தில் சப்பிட்டு விட்டு மொழுகுநீட்டி உட்கார்ந்து வளமை பேசிக்கொண்டிருந்தார்கள்.சரஸ்வதியும் இருந்தாள்.ஏதோ நடக்கப் போகிறது என்று தலையைக்கவிழ்ந்து கொண்டு நடந்தேன்.என் தலை தெரிந்ததும் ஒரே சிரிப்புச்சத்தம். எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவளும்தான். திடுத்திடுவென ஓடிவந்துவிட்டேன். ஏன் சிரித்தார்கள்.?


செம்பட்ட....கெட்டவார்த்தையில் என்னைத் திட்டிக்கொண் டலைவான். மூன்றாம் நாள் சாயங்காலம் கூப்பிட்டு வா தலைமையேற்றுக் கொள், மலங் காட்டுல ராத்திரி ராத்திரி ஏன் தீப்பிடிக்கிறது சொல் எனக்கேட்போம்.  கொஞ்ச நேரம் பிகுப் பண்ணிவிட்டு 'அப்ப நீ ஏண்ட மன்னிப்பு கேலு' என்பான். மண்ணிச்சிக்கோ ஆனா புருடா மட்டும் விடக்கூடாது என்பேன்.விசுக்கென எழுந்து குண்டி வரை கழன்ற டவுசரைத் தூக்கிவிட்டுக்கொண்டு கிளம்புவான். கூட்டம் என்னைக் கெட்டவார்த்தையில் திட்டும்.எல்லா வசவுகளையும் வாங்கிச் செரித்துக்கொள்வேன் சரஸ்வதிக்காக.அவள் கந்தசாமியின் தங்கச்சி.அவ கெடக்கா விடுங்க. சிரிக்கும்போது  பச்சரிசிப்பல் தெரியும். குளிச்சமஞ்சளின் வாசம் சாத்தூர் தாண்டி வீசும்.கணக்குப்பாடம் சந்தேகம் கேட்கும் போது அவள் கூழுக்கு கடித்த வெங்காயத்தின் வாசம் கட்டாயம் மணக்கும்.பெயரும் பெயரும் அருகிருக்கும் அழகு பார்த்து மகிழ்ந்து போன அது மயிலிறகுக் காதல்காலம்.அது எதுக்கு இப்போ?.

அந்த தேவதைக்காக கந்தசாமிசொல்லும் பேய்க்கதையை நம்புகிற மாதிரி முகத்தை வைக்கவேண்டும்.ரெண்டுவார்த்தை சொல்லிவிட்டு என்முகத்தை உற்றுப்பார்ப்பான்.கொள்ளிவாய்ப்பிசாசுகள் தான் மலங்காடுகளில் ராத்திரி நேரம் தீயாக வேசம் போட்டுக்கொண்டு அலையும் என்பான்.அதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனென்றால் அவனது பெரியம்மா வீடு மூணாறு எஸ்டேட்டில் இருக்கிறது.உடனே தமிழ்சினிமாவில் வரும் கண்ணாடி பங்களாவை கற்பனை செய்துகொள்ளவேண்டாம்.வீடு குடிசை வீடுதான். தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு பங்களாவா கட்டித்தருவான் மொலாளி. ஒரு தரம் அங்கே கல்யாணத்துக்கு போய்விட்டு வந்தான் கந்தசாமி. ஆகிற படியால் அவன் பேயை நேரடியாகப் பார்த்திருப்பான் என்று எங்கள் கூட்டம் நம்பியது.

பேய்க்கதை கேட்டண்ணிக்கு ஏழுபேரும் ஒருத்தன் கையை ஒருத்தன் பிடிச்சபடித்தான் அலைவோம்.அதிலும் கந்தசாமி கையைப்பிடிப்பதற்கு கடும் போட்டி நடக்கும்.பேயைப்பார்த்ததும்,சூலாயுதத்தை நீட்டலாம், இரும்புக் கம்பியைக்காட்டலாம், தீக்குச்சி எடுத்து பொருத்தலாம்.இதுல எதாச்சிலும் செய்தால் பேய் காத தூரம் ஓடிப்போகும் என்பான்.அதுக்காக பையில் எப்போதும் ரெட்டைக் கிளித் தீப்பெட்டி வைத்திருப்பான்.தடுக்கி விழுந்தால் தீப்பெட்டிக் கம்பெனிகள் இருக்கிற ஊரல்லவா. எல்லோர் பையிலும் கிடக்கும்  தீப்பெட்டியை நானும்கூட எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக்கொண்டு அலைந்தேன்.அதனால் பீடிகுடிக்கத்தான் வைத்திருக்கிறேன் என்று நினைத்த என் தாய்மாமன்களிடம் அடிவாங்கியதுதான் மிச்சம்.

இந்த அடிகளும்,கெட்டவார்த்தை வசவுகளும்,பயம் கலந்த பால்யமும் அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.

8.11.10

குழந்தையும் தெய்வமும்.

மதுரை டவுன்ஹால் ரோட்டின் தீபாவளிக்கு முந்திய வாரம். அந்த பாட்டா செருப்புக் கடையின் வாசலில் ஒரு பெரிய தூக்குப் பையோடு வந்தாள் அவள். வயதுக்கு மீறிய சுமை.இறக்கிவைத்து விட்டு கையை நீட்டி உதறிக் கொண்டாள்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த இடத்தில்  உட்கார்ந்து விட்டாள்.

சரி உடன் வந்த அம்மா அப்பா வருகிற வரை அங்கே உட்கார்ந்திருப்பாள் போல என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பையின் ஜிப்பை திறந்தாள்.சதுர சதுரமான ப்ளாஸ்டிக் பைகளை எடுத்து கீழே போட்டாள். அதிலிருந்து ஒன்றை எடுத்து நுனியில் வாய் வைத்து ஊதினாள்.ஆஹா கிடைத்த சிறிது நேரத்திலும் தன் விளையாட்டுப் புத்தியை விடவில்லையே,குழந்தைகள் குழந்தைகள் தான் என்று சந்தோஷமாக இருந்தது.

ஊதிப்பெருக்கிய பொருள் ஒரு காற்றுத்தலையணையானது.பின்னர் ஒவ்வொன்றாக எடுத்து பத்துப்பதினைந்து காற்றுத் தலையணைகளை உருவாக்கி அதை எல்லாம் இணைத்து கட்டி பாதசாரிகளின் பார்வையில்படும்படி வைத்துவிட்டு தெருவை வெறித்தாள் அந்தச்சிறுமி.

ஒரு குட்டி லட்சுமி மிட்டல் டவுன்ஹால் வீதியில் தனது வியாபாராப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். இந்த உலகமயமாக்களில் அவளின் அன்றைய வியாபார இலக்கு என்னவாக இருக்கும்.இந்த போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் அவளின் உடனடி போட்டியாளர் யாராக இருக்கும்.யோசித்து வையுங்கள்.

முதல் நபர் வந்து விலைகேட்டார் ஹிந்தியில் நாற்பது ரூபாய் என்று சொன்னது.பேரம் பேசினார் உறுதியாக மறுத்து முதல் போனியை ஆரம்பித்தது.பணத்தை எண்ணி சரிபர்த்து முகத்தில் ஒற்றிக்கொண்டு பிரார்த்தனை பண்ணியது. பார்த்துக்கொண்டிருந்த நமக்கே பதற்றமாக இருந்தது.அந்தக் கடவுள் என்னவாக ஆகியிருப்பார்.

7.11.10

ஓபாமாவிடம் கேட்கப்பட்ட அசட்டுக்கேள்வி.

தீபாவளிக்காக கரியாக்கப்பட்ட பொருளாதாரத்தைவிட அதிகம் திரு.பாரக் ஓபாமாவின் வருகைக்காக இந்தியா ஒதுக்கியது.செலவுக்கதிகமான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் கூடிக்கொண்டே போனது. எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,கருத்து மோதல்கள் என ஊடகங்களின்மூலம் அல்லோல கல்லோலப்பட்டது தேசம்.சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பர நேரத்தில் இடம் பிடிக்காதது மட்டும் தான் குறை. எல்லாம் ஒரு அமெரிக்க அதிபர் சம்பிரதாய வருகைக்காக.

வந்தவர் மும்பை புனித சேவியர் கல்லூரியின் மாணவர்களோடு உரை யாடினார். கேள்விகளும் பதிலுமான அந்த நேரத்தை உலகம் உற்றுக் கவனிக்கிறது. ஒரு மாணவி 'ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்கவில்லை, ஏன் இன்னும் நீங்கள் நட்பு பாராட்டுகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறாள். இந்தக்கேள்வியும் அதற்கு திரு.பாரக் ஓபாமா சொன்ன பதிலும் தான் இந்த நிமிஷத்தின் தலைபோகிற பிரச்சினையாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல வேளை ஜாவேத் அக்தாரை மெல்லமாக பந்துவீசச் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை.

'டைம்ஸ் நௌ' தொலைக் காட்சியின் நேரலையில் மும்பைத் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கபட்டுக் கொண்டிருக்கிறது.பிரதம செய்தியாளர் மும்பை,டெல்லி போன்ற நகரங்களின் நிருபர்களோடு தொடர்பு கொள்கிறார் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவர்களும் பதறுகிறார்கள்.அங்கிருந்து இஸ்லாமாபாத்துக்கு தொடர்புகொண்டு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளரிடம் பேசுகிறார்.தொழில் நுட்பத்தின் சகல தகிடு தத்தங்களையும் உபயோகித்து  அவரது பதிலை ஒரு எறிகிற பிரச்சனையாக்குகிறது தொலைக் காட்சி வியாபாரம்.

அடிப்படையில் அமெரிக்கா ஒரு ஆயுதவியாபார தேசம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டாவது பாகிஸ்தானைக் 'கிள்ளுகிறான் முள்ளுகிறான்' என்று சொல்லி பிராது கொடுக்கிற அளவுக்கு அமெரிக்கா ஒன்றும் சட்டாம்பிள்ளையில்லை.அது ஒரு உலக நாட்டாமையும் இல்லை.உலகத்துக்கே நீதிசொல்லுகிற அளவுக்கு மனிதவளமும், அறிவுத் திறனும் இருக்கும் 117 கோடி ஜனத்தொகை கொண்டவர்கள் நாம்.அதை மறந்து அமெரிக்காவிடம் நியாயம் கேட்கிற அளவுக்கு இந்தியா கையறுநிலைக்குப் போய்விட்ட காரணம் என்ன?பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து விடுவதன் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்.லாபமிருக்கா இல்லையா வெனத்தெரியாது.ஆனால் அறிவித்தால் அது அமெரிக்காவுக்கு எவ்வளவு நஷ்டம்.

போபால் விஷ வாயுக் கசிவினால் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலம்,பிடி கத்திரிக்காய்,காப்புரிமை,அனு ஆயுதபரவல், சந்தைப் பொருளாதாரம் போன்றவை குறித்து அமெரிக்காவிடம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரமாயிரம் இருக்கிறது.அது பற்றி அந்தப்பெண்ணுக்கு தெரியுமோ தெரியாதோ. 

இதையெல்லாம் தெரியாத ஒரு மாணவியின் அசட்டுக்கேள்வியை இந்த தேசத்தின் கோரிக்கையாக்கப் பார்ப்பது எவ்வளவு கபடம் நிறைந்தது. இது ஒரு மாணவியின் அசட்டுக் கேள்வி மட்டுமல்ல ஒரு 63 ஆண்டுகாலம் ஊட்டிவளர்த்த வெறுப்பின் பிரதிபலிப்பு.ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட இந்த பகைக்குப்பின்னாடி மிகப்பெரிய மேல்மட்ட அரசியல் இருக்கிறது. அதற்குப் பின்னாடி சர்வ நிச்சயமாக ஊடகங்கள் இருக்கின்றன.(அந்தக்கேள்விக்கு ஒரு நீண்ட பதிலைச்சொல்லிய திருமிகு ஓபாமா இறுதியில் 'இரு நாடுகளும் உட்கார்ந்து பேசித்தீர்க்கவேண்டிய விடயம் இது' என்று சொல்லுகிறார்.)இந்த ஊடக நாடகத்தின் தொடர்ச்சியாக இன்று மாலை அரசு முறைச் சந்திப்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திப்பதையும், 20 நிமிட நேரம் தனியே உரையாடுவதையும் அறிவிக்கிறது. ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிறது என்பதை போகிறபோக்கில் சொல்லி விட்டுக்  கடந்துவிடுகிறது.

சாமான்யன் முதல் அறிவு ஜீவி வரை எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டு பொழுதுபோக்க புனித சேவியர் கல்லூரி மாணவியின் கேள்வி.மேல்மட்ட இந்தியா இன்னும் கொழிப்பதற்கு தங்கு தடையில்லாத ஒப்பந்தங்கள்.

5.11.10

தீபாவளியின் வரலாற்றுப் பின்னணி -எஸ்.ஏ.பெருமாள்

எங்கள் ஆசான்,யதார்த்தத்திற்கும் மார்க்க்சீயத்திற்கும் ஊடுசரடாய் விளங்கியவர். எண்பதுகளில் காமராசர் மாவட்டத்து மத்தியதர உழைக்கும் மக்களின் மத்தியில் ஒரு மூத்த சகோதரனின் வாஞ்சையோடு மார்க்சீயத்தை அறிமுகப்படுத்தியவர். இசை, இலக்கியம்,கதை,காமம்,காதல் குறித்து தோளில் கைபோட்டுப்பேசிய ஒரு மாவட்டச் செயலாளர்..ஜோக்கடிக்கிற மார்க்சீயவாதி. ஜோக்கை ரசித்து வெடித்துச் சிரிக்கிற கம்யூனிஸ்ட். எங்களுக்கெல்லாம் ஒரு நடமாடும்  'வாழ்கா முதல் கங்கைவரை' புத்தகமானவர். எங்கள் தோழர்.
' எஸ் ஏ பி ' யின் தீபாவளி இது . அவசியம் படிக்கணும்


தமிழகத்தில் ஆரம்பக் காலத்தில் பண்டமாற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் நாள டைவில் வணிக வர்க்கமாய் உயர்ந்தனர். வளர்ச்சிப் போக்கில் தமிழகத்தில் வணிகர் கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுக ளோடும் வணிகம் செய்தனர்.

வணிகம் பெருகப் பெருக துறைமுகங்கள், நகரங்கள் உருவாகி வளர்ந்தன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்தனர்.

“கலம் தந்த பொற்பரிசம்” என்றும் “யவ னர் தந்த வினைமாண் நன்கலம் பொன் னொடு வந்து கறியொடு பெயரும்” என்று புறப்பாடல்கள் கூறுகின்றன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்ததால் “மன்னர் பின் னோர்” ஆகி அரசருக்கு நிகராயினர். போடி நாயக்கனூரிலும், சென்னை மாம்பலத்திலும் கிடைத்துள்ள பொன் நாணயங்கள் மீன் இலச் சினையோடு உள்ளன. இவற்றைப் பாண்டிய நாட்டு வணிகர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிகர் தம் பெருமை களை சிலப்பதிகாரமும் மதுரைக்காஞ்சியும் செப்புகின்றன.

தங்கள் வளர்ச்சிக்குத் துணை நின்ற சமணத்துறவிகளுக்கு மடங்கள், பள்ளிகள், குகைகள், குடவரைகள் உருவாக்க வணிகர் கள் உதவினர். செல்வ வளம் பெற்று, சமூகச் செல்வாக்குப் பெற்ற வணிகர்களைப் பின்பற் றிப் பொதுமக்களும் சமணத்தைத் தழுவினர். இதனால் அரசர்களும் சமணத்தைத் தழுவி டும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வணிகர்கள் உற் பத்தியில் நேரடியாய் ஈடுபடாதவர்களாவர். வேளாளரே நிலவுடமையாளராய் உற்பத்தி யைக் கையில் வைத்திருந்தனர். இவ்வேளாண் பெருமக்களின் வீடுகளில் உணவு தானியங் கள் மலைபோல் சேமித்து வைக்கப்பட்டிருந் தன. நிலக்கிழார்களான வேளாளரில் அரசர் களுக்கு ஆதரவாகப் படைதிரட்டி ஆள் அனுப்பி உதவினர். “படை வேண்டுழி படை யுதவியும் - வினை வேண்டுழி வினையுதவி யும் செய்ததாய்” புறப்பாடல் கூறுகிறது.

கடவுளை மறுத்த சமயங்களான புத்த, சமண சமயங்களை வளர்த்ததில் வணிகர் கள் பங்கு மகத்தானது. நாட்டுப்புறத்தெய்வங் களுக்கு ஏராளமான சிலைகள் வைக்கப் பட்டு, ஒவ்வொரு சிலையின் பேராலும் பூசா ரிகள் ஆடு, மாடுகளைப் பொதுமக்களிடம் பலியாய் கேட்டனர். இந்தக் கொடும் சுரண் டலிலிருந்து மீள மக்கள் புத்த, சமண சமயங் களில் கூட்டம் கூட்டமாய் சேர்ந்தனர். வணி கர்களின் தயவில் புத்த மடாலயங்களும் நிறு வப்பட்டன. நாகையில் பெரும் புத்த விகார் நிறுவப்பட்டிருந்தது.

சமூகத்தில் வணிகர்கள் ஒரு வர்க்கமாய் உருவெடுத்தனர். வணிக வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையே முரண் பாடுகள் வளர்ந்தன. இந்த இரு பெரும் பிரிவு களும் தமது நலன் கருதி ஒருமித்தும் சென் றன; மோதவும் செய்தன. உற்பத்தியில் ஈடு பட்ட வேளாளரும், அந்த உற்பத்திப் பொருட் களைப் பரிமாற்றம் செய்த வணிகர்களும் சமூகத்தில் அருகருகேதான் வாழ்கின்றனர். இரு பிரிவினருக்குமே அரசனிடத்தில் செல் வாக்கு உண்டு. இருவரும் தமது முரண்பாடு களை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத் தினர். இந்த முரண்களையும் மோதல்களை யும் சிலப்பதிகாரம் பிரதிபலிக்கிறது.

பொதுவாக ஆளும் வர்க்கங்களின் கருத் துக்களையே மதங்கள் கூறி வந்துள்ளன. மனிதகுல வரலாற்றில் முரண்பட்ட இரு வர்க் கங்கள் சேர்ந்தே வாழ்கின்றன. ஒன்றோ டொன்று போராடுகின்றன. முரண்பாடு முற் றும் போது அது பகை வடிவமாய் வெளிப்படு கிறது. ஒரு காலத்தில் பாங்கறிந்து பட்டிமண் டபம் ஏறித் தங்கள் கருத்து முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டனர். முரண்பாடு பகையான தும் “அனல் வாதங்களும் புனல் வாதங்களும் எழுந்தன. அதில் தீர்க்க முடியாது போய் “கழு வேற்றங்களில்” முடிந்தது.

இதுவரை உற்பத்திப் பொருட்கள் மீது மட் டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வணிக வர்க் கம், உற்பத்திச் சாதனமான நிலங்களையே பறித்து மதபீடங்களுக்கு வழங்கியது. வேளா ளர்களின் நிலங்களை மதப் போர்வையில் பறிக்கும் போது பகை முரண்பாடு முற்றுகிறது.

தங்கள் நிலங்களை மீண்டும் மீட்டு, உற்பத்தியில் தாங்கள் இழந்த கட்டுப்பாட்டை நிலை நிறுத்தும் முயற்சியில் வேளாளர்கள் இறங்கினர். சமண மதப் பிடிக்குள் இருந்த அர சர்களையும் குறுநில மன்னர்களையும் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தனர். எனவே கருத்துலகிலும் தங்கள் போராட்டத்தை நடத்த களமிறங்கினர்.

பொருளாதார அடித்தளத்தில் மேலிருந்த மேற்கட்டுமான இலக்கியம், மொழி, இசை, தத்துவம், மதம் போன்ற பல அம்சங்களில் வணிகர்களுக்கு எதிரான போராட்டமே சம ணத்திற்கு எதிரான போராட்டங்களாய் மாறின. வணிக வர்க்கத்துக்கு எதிரான நிலப்பிரபுத்து வத்தின் பொருளாதாரக் குரோதம் சமண சம யத்திற்கு எதிரான போராட்டமாய் உருவெடுத் தது. அடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தகர்த்துப் புத்துருவாக்கம் செய்தது எனலாம்.

சமணம், கடவுளை மறுத்தது. பந்தங்களி லிருந்து விடுபட்டு மோட்சமடைந்த உயிரே கடவுளாகும். உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. உயிர்கள் தமது சொந்த முயற்சி யாலே மோட்சம் எய்த முடியும். இதுவே உயி ரின் இயல்பாகும் என்பதே கடவுள்- உயிர் குறித்த சமணக் கோட்பாடாகும். இதை சைவம் கடுமையாய் எதிர்க்கிறது. இறைவன் உயிர்களுக்காகவே உலகைப் படைத்தான். உயிர்களின் கர்மத்தைப் பக்குவப்படுத்தி அறியாமை, ஆணவமயத்தைப் போக்குகி றான். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும் உயிர்களின் பொருட்டு இறை வனால் நிகழ்த்தப்படுகின்றன என்றது சைவம்.

சிலர் உயர் குடியாய் வணிகராய் வாழ்வதற் கும், பெரும்பாலோர் கூரைக்குடியாய் ஏழ்மை யில் வாழ்வதற்கும் அவர்தம் வினைப்பயனே காரணம் என்று சமணம் கூறியது. ஏழ்மை யில் வாழ்தல் வினைப்பயன் என்று கூறி அவர்களைச் செயலற்றவர்களாக்கியது. சிலப் பதிகாரம் கூட ஆள்வினையை விடச் சூழ்வி னையே வலிமையானது என்று கூறுகிறது. சமணர் என்று கருதப்படும் திருவள்ளுவர் கூட வினைக் கோட்பாட்டை வலியுறுத்து கிறார். இதற்கு எதிர்க் கோட்பாட்டை நிறுத்த வேண்டிய அவசியம் சைவத்துக்கு ஏற்பட் டது. மக்களைச் செயலிழக்கச் செய்யும் வினைக் கோட்பாட்டினை அடிப்படையில் தகர்ப்பது தங்களுடைய வர்க்க நலனுக்கும் எதிரானது என்று சைவர்கள் கருதினர். இத னால் வினையை எதிர்க்காது, அவர்கள் வினையின் முதன்மைத்தன்மையை மட்டும் எதிர்க்கின்றனர். வினைக்கும் மேலாய் இறை வனை நிறுத்தினர். வினையின் வெம்மைத் தன்மையை நீக்கி இறைவனின் கருணைத் தன்மையை வைத்தனர். இறைவனை வணங்கினால் வினைகள் அகலும் என்று பிரச்சாரம் செய்தனர்.

பக்தி இயக்கம் கண்ட நாயன்மார் தமிழ் மொழிக்கு ஏற்றம் கண்டனர். தத்துவவாதிகள் எல்லாக்காலங்களிலும் மொழியை ஒரு சிறந்த கருவியாய் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் நாயன்மாரும் தமிழின் புகழைப் பாடியே தமது தத்துவங்களைக் கூறினர். மொழி செவிவழியோடி, கண் வழிகண்டு மனிதரின் மனத்தை நிறைக்கிறது. தமிழைப் புகழ்ந்து அவர்கள் அதற்குத் தெய்வத்தன்மை கொடுத்தனர். தமிழையே தாய்த் தெய்வமாக் கினர். “மறையிலங்கும் தமிழ்” என்றும், “தவம் மல்கு தமிழ்” என்றும் பாடிப் புகழ்ந்தனர். இதன் மூலம் சமணரின் வடமொழி, பிராகிருத மொழிகளை எதிர்த்து நின்றனர். தமிழை ஏற்றிப் போற்றி மக்களை உணர்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தினர்.

தமிழையும் புலமையையும் கடவுளாக்கி யது போல் கடவுளையே புலவராகவும் தமிழ் மேதையாகவும் ஆக்கினர். இதை சிவனுக் கும் நக்கீரனுக்கும் நடந்த சொற்போரினால் அறியலாம். சமண சமயத்தின் தர்க்கவியல் அணுகுமுறையான எரிந்த கட்சி, எரியாத கட்சிப் பட்டிமண்டபங்களைச் சைவரும் தொடரவேண்டிய அவசியம் இருந்தது. இது ஏற்கனவே இருந்த தமிழர் சிந்தனை மரபைப் பின்பற்றியதாகும்.

போராட்டங்கள் நடைபெறும் போது அவற் றின் ஏற்ற இறக்க திசைவழிக்கேற்ப கருத்துக் களும் மாறுதல் அடையும். கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உருவான சங்கம் அதற்குப் பின்பு வந்த சமண சமய எதிர்ப்பாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டது. நூற்றாண்டுகளில் கால மாறுதலுக்கேற்ற கருத்துக்களும் வளர்க்கப் பட்டன. கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள், திருமங்கையாழ்வார் போன்ற வைணவக்கவிஞர்களாலும் , கி.பி 9ம் நூற் றாண்டில் மாணிக்க வாசகராலும் வளர்க்கப் பட்டது.

பொன்னையும் பொருளையும் குவித்து பண்ட மாற்றில் மட்டுமே ஈடுபட்டு, உற்பத்தி யையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வணிக வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. வேளா ளர் வர்க்கம் வெற்றி பெற்று உற்பத்தியையும் பங்கீட்டையும் தானே செய்தது. பொருளியல் ஆதிக்கம் வேளாளர் கைக்கு வந்தது. சமயப் போர்வையில் வணிகர்கள் கைப்பற்றிய நிலங் களை வேளாளர்கள் பரந்த மக்கள் சக்தியைத் திரட்டி மோதி வெற்றி பெற்று மீட்டுக்கொண்ட னர். ஒரு காலத்தில் கோலோச்சிய சமண, பவுத்த சமயங்கள் அடியோடு வேரறுக்கப்பட்டு சைவமும், வைணவமும் தமிழகத்தில் தழைத்தன.

பவுத்த ஆலயங்கள் வைணவக் கோவில் களாய் மாற்றப்பட்டன. புத்தரின் அனந்த சயனச் சிலைகள், பள்ளிகொண்ட பெருமா ளாக்கப்பட்டது. அதே போல் சமணக் கோவில்களும் பள்ளிகளும் சிவ, முருகக் கோவில்களாய் மாற்றப்பட்டன. பவுத்த, சமணத் திருவிழாக்கள் வைதீக மதத்தால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. அதில் ஒன்று தான் தீபாவளியாகும்.

1.11.10

ஒதுங்கிக் கிடக்கும் உபகதை

சாக்கோவின் பாட்டனார் காலத்தில் வெளுத்தனின் பாட்டானார் அவர்களுக்கு பண்ணையடிமையாய் இருந்தார்.சாக்கோவின்  அப்பாவுக்கும் வெளுத்தனின் தகப்பனாரும் அப்படியே. சாக்கோ அமெரிக்கா சென்று அங்கேயே வேலை தேடி,அங்கேயே மார்க்கரெட்டையும் மணந்துகொள்கிறான்.மார்க்கரெட் இன்னொரு ஆடவனோடு உறவு கொண்டாட அவளிடமிருந்து விவாகரத்து வாங்குகிறான்.பின்னர் அங்கு வாழப்பிடிக்காமல் கேரளா திரும்புகிறான். இதனிடையில் மூன்று தலைமுறைகள் கடந்துவிடுகிறது. தொழில், கல்வி, திருமணம்,விவாகரத்து, என வாழ்நெறிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.அந்த மாற்றங்களினால் எந்த வித சலனமுமில்லாமல் வெளுத்தனின் குடும்பம் சாக்கோவின் குடும்பத்தை அண்டியே வாழ்கிறது.

சாக்கோ உருவாக்கும் ஊறுகாய் தொழிற்சாலையின் பிரதான மெக்கானிக் காககவும்,தச்சு வேலைக்காரனாகவும் மூன்றாம் தலைமுறை வெளுத்தன் தயாராக இருக்கிறான்.சாக்கோ தனது ஆங்கில மனைவி மார்க்கரெட்டின் நினைவுகளால் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப் படுகிறான்.மார்க்கரெட்டின் இரண்டாவது கணவன் இறந்து போக, அந்தக்குடும்பம் மார்க்கரெட்டை ஏற்றூக்கொள்ளத் தயாராகிறது.

சாக்கோவின் விதவை சகோதரியான அம்முவின் குழந்தைகளுக்கு பணிவிடை செய்கிற பொறுப்பு பாரம்பரிய முநறைப்படி வெளுத்தனுக்கே வந்துசேர்கிறது. குழந்தைகளுக்கான பணிவிடைகள் சிநேகமாகி,கெட்டிப்பட்டு உறவாகிறது. அம்முவுக்கும் அவனுக்கும் ஒரு மறு உலகின் வாசல் திறக்கிறது. அது முழுக்க முழுக்க இரவுகளால் மட்டுமே அறியப்படுகிறது. மார்க்கரெட்டை ஏற்றுக் கொள்ளும்   சாக்கோவின் குடும்பம் முழுக்க வெளுத்தனை நிராகரிக்கிறது. மார்க்கரெட்டின் குழந்தை ஷோபி ஒரு ஆற்றுப்பயணத்தில் தவறிவிழுந்து இறந்துவிட,அந்த மரணமே அதுவரை தங்கள் காலடியில் கிடந்த வெளுத்தனைப் பழிவாங்கப் போதுமானதாகிறது. அம்முவைக் கற்பழிக்க முயன்று தோற்றுப்போய் பழிவாங்கும் வெறியால் குழந்தையைக் கடத்திக்கொன்றுவிட்டான் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படுகிறான்.

ஆற்றுப் பயணத்தில் ஷோபியோடு பயணம் செய்த அம்முவின் இரட்டைக் குழந்தைகளான எஸ்தாவும்,ரஹேலும் தான்  உண்மையான மரணத்தை அறிந்தவர்கள்'அந்த தெய்வக்குழந்தைகளும்.காலங்காலமாக தன் குடும்பத்தை போஷித்து வந்த குடும்பத்தின் நன்றியறிதலை உதறிவிட்ட எஜமான் சாக்கோவும்.கால மாற்றத்தின் நீட்சியாய் பெரும் உருவெடுத்த கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் மீது வைத்திருந்த நம்பிக்கையும்.அந்தக்கட்சியின் பிரதேச செயலாளர் என எல்லோராலும் கைவிடப்படுகிறான் வெளுத்தன்.நம்பிக்கை செத்துப்போய் போலீசின் காட்டுமிராண்டி வதைகளால் காயப்பட்டு அவனிடம் மிச்சமிருந்த உயிரும் பிரிகிறது.

புக்கர் பரிசுபெற்ற ' தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ் 'புதினத்தின் உபகதை இது.கிட்டத்தட்ட இதே போலோரு பாத்திரம் ரப்பர் நாவலிலும் காணக்கிடைக்கும்.