30.12.11

ஒரேதரம்....



தொலைக்காட்சி சிறந்த பத்து
மொக்கைசினிமாக்களை வரிசைப்படுத்தும்.
இந்தியா டுடே சிறந்த பத்து
கொள்ளைக்காரர்களை வரிசைப்படுத்தும்,
பத்திரிகைகள் சிறந்த பத்து
பரபரப்பை வரிசைப்படுத்தும்,
குமுதம் சிறந்த பத்து
தொடைகளை வரிசைப்படுத்தும்,
அரசியல்வாதி சிறந்த பத்து
சூட்கேசுகளை பத்திரப்படுத்துவார்,
அம்பானிகள் சிறந்த பத்து
தனியார் திட்டங்களை வரிசைப்படுத்துவார்கள்,
அன்னா ஹசாரே சிறந்த பத்து
உண்ணாவிரதப்பந்தலை வரிசைப்படுத்துவார்,
சமூக வலைத்தளம் கூட
பத்து வரிசையை பற்றிக்கொள்ளும்
இவையெல்லாம் சேர்ந்து
வஞ்சித்த மக்களுக்கு வஞ்சனையின்
எண்ணிக்கையும் தெரியாது அவற்றைத்
தரப்படுத்தவும் நேரமிருக்காது
அவர்களுக்கு ஒன்றுமட்டும் தெரியும்
மேற்சொன்ன எல்லாமே ஒரேதரம் என்று.

29.12.11

ஏழைகளின் கண்ணீரெனும் வற்றாத நதிமூலம்


வாச்சாத்தித் தீர்ப்பின் போது நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் பெண்கள் தீர்ப்பைப் பற்றிச் சொல்லும்போது தெளிவாகச் சொல்லி, நேர்ந்தவற்றைச் சொல்லும் போது உடைந்து நொறுங்கிக் குலுங்கிக் கண்ணீர் சிந்துவார்காள். அணைகட்டியிருந்த அந்த உப்புவெள்ளம் எங்கே இருந்தது.

காரமான உணவு சாப்பிடுவதாலும் கண்ணில் தூசி விழுவதாலும்  கொட்டாவி விடுதல்,கோபம்,சோகம்,ஆனந்தம் சிரிப்பு போன்ற மிகு உணர்ச்சிகளின் மூலம்  உருவாகி பின்னர் அது கன்னம் வழி ஓடி மண்  கலக்கிறது. மூளையினின்றும் தனியே தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும்  தன்னாட்சி நரம்பு மண்டலம் தான் கண்ணீரை உருவாக்குகிறது. அந்த அடானமஸ் அமைப்பு கண்ணீரை மூன்று வெவ்வேறு காரணங்களுக்காக திறந்து விடுகிறது. இதனால் கண்ணில் இருக்கும் மூன்று திரைகளுக்கு உயவுப்பொருளாக மாறுவதும் பழய்ய  உயவுப் பொருளை சுத்திகரிக்கவுமான இரண்டு பிரதான வேலையை இந்த கண்ணீரானது  செய்கிறது.

ஆத்திரம், ஆனந்தம், சோகம்,வெங்காயம் உரிப்பதுபோன்ற வேலைகளில்லாத விலங்குகளுக்கும்கூட  இயல் பாகவே கண்ணீர் வழிகிற ஏற்பாடு இருக்கிறதாம்.இப்படி பட்டியலிட சுட்டிக்காட்ட அறிவியல்  காரணங்கள், கண்டுபிடிப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூடக் கண்ணீர் உணர்வால் ஆனது. அதுவே அதன் விஷேச குணம். ஆற்றமுடியாத சுயவலிகளைக் காயங்களை யாரும் குறைக்க முடியாதபோது சொந்தக் கண்ணீர் அதை இலகுவாக்கும். அழுவதனால் பாரம் குறைந்து ஆயுள் கூடுகிறதாம். கண்ணிலே நீரெதற்கு காலம் எல்லாம் அழுவதற்கு, அழுதால் கொஞ்சம்  நிம்மதி, கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்,உன்கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று கண்ணதாசன்கள் எழுதி  வைத்திருக்கிறார்கள்.  இந்த வரிகளை க்கேட்கும் போதே கண்ணீர் மண்டலம் கலங்கும்.எதிராளியை இயக்கும். அல்லது இப்படிச்சொல்லலாம் இளகிய மனதைக் கட்டாயம் இழுத்துப் பிடித்து ஆட்டும்.

அதனாலேதான் எலிகள் தனது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள உடல் முழுவதும்  சொந்தக்  கண்ணீரை தடவிக்கொள்ளுமாம். இளகியமனது இருக்கிறதோ இல்லையோ கண்ணீருக்கு எதிராளியை  இளகச் செய்யும் வேதியற்பண்பு ( chemistry- chemical reaction) இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஆமாம் ஆண் மிருகங்களின் காம வேட்கையைக் குறைக்கும் சக்தி கண்ணீருக்கு இருக்கிறதாம். இப்படி அறிவியல் ஆய்வின் முடிவுகளும் இலக்கிய குறிப்புகளும். ஒரு புள்ளியில் இயல்பாகவே  சந்தித்துக்  கொள் கின்றன. அது  ஆதிக் கத்தை எதிர்கொள்கிற இயலாமையின் வெளிப்பாடு கண்ணீர் என்பதே. அதனால் தான் ஜெர்மனியக் கவிஞன் குந்தர்கிராஸ் எதிர்க்கவலுவில்லாத ஏழைகளின் கண்ணீர் ஆயிரம் வாளுக்குச்சமம் என்று கூறுகிறார்.

தனக்கெனத் தனியே தமிழ்,ஆங்கிலம், உருது, பாலி, ஸ்பானிஸ், பிரெஞ்சு,ருஷ்ய,மொழிகளென ஏதும் இல்லாத குழந்தைகள் தங்களின் தேவைகளை,உணர்வுகளை அழுகையால் மட்டுமே உலகுக்கு அறிவிக்கிறது. அப்படியான ஒரு மொழியைப் புரிந்து கொள்ளமுடிகிற இன்னொரு வகை தாய்களின் வகை. அவள் மட்டுமே ஒரு  குழந் தையின் அசைவுகளையும் மொழியின்றி அறிந்துகொள்ளும் ஆதி அறிவியல் அறிஞர் ஆகிறாள். அந்த அறிவின் பயன்பாடுகளை அவள் ஆதிக்கத்துக்கு  எதிரான தனது இயலா மையின் போது  பரீட்சித்துக் கொள்கிறாள்.

உலகமெங்கிலும் கண்ணீர் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானது என்கிற பெருங்கருத்து நிலவுகிறது. லத்தீனமெரிக்க நாடுகள் தவிர்த்த ஏனைய தேசத்தில் அழுவது ஆண்களுக்கு அழகானதல்ல என்கிற  ஆதிக்கச் சிந்தனதான் நிறைந்திருக்கிறது என்பது விநோதமான வரலாற்றுச் செய்தி. வரலாறோ, நீதியோ அது எப்போதும் எழுதுபவனுடைய சார்புத்தன்மையையே நிலைநிறுத்தும். வரலாற்றை உருவாக்கிய பெண் ஒதுக்கப்பட்டு எழுதிய ஆண் தன்னை நிறுவிக்கொண்ட கொடுமை வீரம் என்கிற பதத்தால் உருவாயிற்று.

24.12.11

குழந்தையும் தெய்வங்களும்.


நிற்ககக்கூட இடமில்லமல் இருந்த பேருந்துகளில் கூட்டம் குறைந்து கொண்டிருக்க,புகைவண்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. எல்லாமே அம்மாவின் கைங்கர்யம்.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் பணிநிமித்தம் போக நேர்ந்தது.பேருந்தில் 32 ரூபாய் புகைவண்டியில் 9 ரூபாய். ரயிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதுதான். கூட்டம் ஏன் அலைமோதாது. இதையும் வைகோ கவனித்தாரானால் ஐந்துவருடத்திற்குள்ளேயே பலன் கிடைக்கலாம்.

இறங்குகிறவர்களும் ஏறுகிரவர்களும் அந்த மூன்றடி வாசலுக்குள்ளேய மோதிக்கொண்டார்கள்.ஒருவழியாக உள்ளே நுழைந்தால் இரண்டு எதிர் எதிர் இருக்கைகளை வெறும் நான்கு  ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள்.  பழங் காலத்துஎம்ஜியார் படத்தில் இப்படித்தான் எம் ஆர் ராதா படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவார்.அது அறுபதுகளில் தமிழனின் மனோபாவத்தை கிண்டலடித்தகாட்சி.ஐம்பது வருடங்கள் தாண்டியும் இதில் துளிக்கூட மாற்றமில்லை.

கணவன், மனைவி,இரண்டு குழந்தைகள்.மனைவி கனணவன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள்.  குழந்தை களை அதட்டிப் படுக்க வைத்திருந்தான். ஏறிய பயணிகள்  எந்திரிக்கச் சொன்னார்கள்.மனைவிக்கு உடம்புக்கு முடியவில்லை என்று பொய் சொன்னான்.குழந்தைகளை ’கொண்டே போடுவேன் க்காலி படுத்துக்கோ  எந்திரிக் காத என்று மிரட்டினான். பேச்சுவழக்கு அவனை மதுரைக்காரன் என்று நிரூபித்தது. பயணிகள் அவனோடு சண்டைபோட்டாகள். இவன் நா மதுரக்காரெய்ங்க தெரியுமில்ல என்றான்.அவன் கருப்புக்கலர் வேஷ்டி  உடுத்தி யிருந்தான். அவர்கள் நாங்க ராமநாதபுத்துக்கரங்க தெரிஞ்சுக்கோ என்றார்கள் அதில் ரெண்டுபேர் காவிக்க்கலர் வேஷ்டியுடுத்தியிருந்தார்கள். இந்தக்களேபரத்தில் குழந்தை அழுதது.சண்டை போடுவதை  கைவிட்டுவிட்டு. இருக்கிற கொஞ்ச இடத்தைப் பகிர்ந்து கொண்டு உட்கார்ந்து அவர்களுக்குள் பேச  ஆரம்பித் தார்கள்.சுகமில்லை என்று சொன்ன மனைவி எழுந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க  ஆரம் பித்தாள். பிறகு குழந்தைகளும் எழுந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. அந்த இடத்தின் கலவரச் சூழல் குறைய்ய ஆரம்பித்தது.

இரண்டு குழந்தைகளில் ஒன்றுக்கு இரண்டுவயது இருக்கும்.அது மெல்ல மெல்ல எல்லோரது மடிக்கும் தாவி அவர்களது சாப்பாட்டுப் பையை நோண்டியது.அவர்களின் சட்டைப்பயை துழாவியது, முகத்தை  வருடியது. அவர்களும் நடந்த சண்டைக்கும் அந்தக்குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதை தூக்கி  வைத்துக் கொஞ்சுவதில் காட்டினார்கள். மதுரைக்கார வீரன்,அந்தக்குழந்தையுடைய அப்பனின் முகத்தைப்பார்த்தேன் தலைகுப்பறக் கவிழ்ந்திருந்தது.

22.12.11

சுடச்சுடத்தேநீர் மற்றும் அரசியல்


எல்லா நேரமும் குளிரும் பனியும் கவிழ்ந்திருக்கிறது.
தேநீர்க்கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.
ஒருகுவளையின் கடைசி மிடறுகுடிக்குமுன்னே
ஆறிப்போகிறது சுடேற்றும் திரவம்.
ஒவ்வொரு மிடறு உள்ளே போகும் போதும்
வெளியேறுகிறது அவரவர்க்கான அரசியல் அறிவு.
ஞொம்மால இருக்குற சேட்டங்கடையெல்லாம் நொறுக்கணும்
என்கிறான் தமிழ்ப் பற்று மிகுந்த சுத்தத் தமிழன்.
சிங்கப்பூர்ல நம்மூர்க்காரன் ஒரு அமைச்சர் தெரியுமா
தொடை தட்டும் ஆண்ட பெருமைத் தமிழன்.
இதையெல்லாம் கேளாது பசிமிகுந்து வாய் பார்த்து
நெடுநேரம் கையேந்தி நிற்கிறான் ஒரு வறிய தமிழன்.
எதுவும் பேறாது என்று திரும்பும் அவன் குனிந்து
ஒரு எச்சில் சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறான்
இப்போதைக்கு இதுபோதும்
வயிற்று எரிச்சலுக்கும் வாடைக்குளிருக்கும்.

21.12.11

வறுமையும் அறியாமையும் விகடமாகும் வெள்ளந்தி வீடுகளில்


எங்கோ போவதும் திரும்பி வந்து சீ இந்தப்பொழப்பும் ஒரு பொழப்பா என்று புலம்புவதுமாக இருக்கிற அம்மையைப் பார்க்க பாவமாக இருந்தது. ரெங்குப் பெட்டியில் இருக்கும் சில்லறைகளை எண்ணிப்பார்த்தான் பதினேழு ரூபாய் முப்பந்தைந்து காசு இருந்தது. பழய்ய நோட்டுப் புஸ்தகத்தையெல்லாம் எடுத்து அடுக்கினான். அதைப்பார்த்த அம்மை ’ஏலே ஏ ஒனக்கென்ன கிறுக்குப்பிடிச்சிருச்சா சரஸ்வதியப்போய் எடைக்குப்போடப்போற என்றாள். எம்மா இது பழசுதாம்மா,இதெதுக்குமா இன்னும்,எடத்த அடச்சுக்கிட்டு’ என்று சொன்னான்.’அதுக்காக படிக்கிற பொஸ்தகத்த வெலைக்குப் போடனுமா இருப்பா யார்ர்ட்டயாச்சும் கடன்  வாங்கியாரன்’.  சொல்லிக் கொண்டே விடுவிடுவென்று வெளியே கிளம்பினாள்.

என்சிசி யில் சேர்வதற்கு பெயர்கொடுக்கும் போதே சொன்னார்கள்.ஆளு ஒசரமா  இருக்கணும்,  முட்டிதட்டக் கூடாது,டெய்லி புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஆறுமணிக்கே பள்ளிக்கூட மைதானத்தில்  இருக்கணும், தாமதமானால் 15 ரவுண்டு மைத்தானத்தை சுற்றவிடுவார் வெள்ளைச்சாமி சார்,வேறு ஏதும் தப்பு பண்ணினால் மணல் மூடையை தூக்கிதலையில வச்சுருவார் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.அதற்கெல்லாம் அசரவில்லை. எட்டு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கூடம் போனவனுக்கு,லீவுநாட்களில் கூலி வேலைக்குப் போகிற வனுக்கு இந்த தண்டனைகள் எல்லாம் எறும்புகடிச்ச மாதிரி.ஆனால்  125 ரூபாய் டெப்பாசிட் கட்டணும்  என்று சொன் னதும் தான் ஆடிப்போனான்.அவ்வளவு பெரிய தொகையைக்கேட்டால் தங்கராசை அவங்கம்மா  நிப்பட்டியது போல போதும் போதும் நீ படிச்சுக் கிழிச்சது, ஓடு சீலுத்தூருக்கு கல்லொடைக்க என்று அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் தொற்றிக்கொண்டது.

ஆனாலும் புதன் கிழமையும் வெள்ளிக் கிழமையும் காலையில்  மசாலக் கிழங்கு வாசம் மணக்க மணக்க தனலெச்ச்சுமி ஓட்டல் பூரிக்கிழங்கை திண்கிற என்சிசி மாணவர்களைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கும். புழுச்செத்து மிதக்கும் கோதுமைக் கஞ்சியைக் குடிக்க அரசு மாணவர்  விடு தியில் வரிசையில் நிற்கிற போதெல்லாம் தனலெச்சுமி ஓட்டலின் பூரிக்கிழங்கு கேந்தியைக் கிளப்பும். இந்தப் பிறவியில் தனலெச்சுமி ஓட்டலில் காசு கொடுத்து பூரிக்கிழங்கு வாங்கித்திண்போம் என்கிற நம்பிக்கையும் சுத்தமாக இல்லை அவனுக்கு. திங்கள் கிழமை காலையில் கொடுத்து விடுகிற ஒரு ரூபாயில் வெள்ளிக்கிழமை திரும்ப கொடைக்கான் பஸ்சில் வருவதற்கு 25 காசு எடுத்து வைத்துக்கொண்டு அந்த வாரம் முழுக்க செலவழிக்கணும். இடையிடையே பேணாவுக்கு மையும் அடைக்க வேண்டும். இவ்வளவு கையிருப்பில் வாங்கித்திங்க கட்டுபடியவது  ஏவீஸ்கூல் வாசலில்  விற்கிற  அரை நெல்லிகாயும், சவ்வு மிட்டாயும்தான்.

நெல்லிக்காயென்றதும் அவனுக்கு ரோசாப்பூவின் நினைப்பு வந்தது. சனிக்கிழமை வாங்கிப் பத்திரப்படுத்திய முழு நெல்லிக்காயை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.மேலத்தெருவுக்குள் நுழையும் போது ரோசாப்பூவின் சிநேகிதி காளீஸ்வரி வந்தாள்.ரோஜா எங்கயிருக்கா என்று கேட்டான். என்ன புஸ்த்தகம் கொடுக்கவா என்று கேட்டுவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள். கவனிக்காமல் ஓடினான்.போனவேகத்தில் திரும்பி வந்தான். ஏ லூசு அவ  கோயில் பட்டிக்கு போயிருக்காளே சொல்லமிண்ண அப்படி என்ன அவசரம் என்றாள்.இதக்கொடுத்துரு என்று கொடுத்தான் அப்புறம் என்றாள். இரண்டு நெல்லிக்காயைக்கொடுத்தான். அதானே என்றாள். வீட்டைத்திறந்து போட்டுவிட்டு வந்த ஞாபகம் வந்தது.ஓட்டமெடுத்தான். ரெண்டு வட்டி சண்முகப் பெரியாவோடு  பேசிக் கொண்டிருப்பது அம்மா மாதிரித் தெரிந்தது. கையில் ஒரு புது மண்பானை வைத்திருந்தாள்.என்சிசிக்குப் பணம் கெட்டத்  துப்பில்லை, இந்நேரத்தில் புத்துப்பானைக்கு என்ன அவசரம் என்கிற கோபம் வந்தது.அம்மா வந்ததும் கேட்டேவிட்டான்.சும்மா கெட பெரிய்ய மனுசனாட்டம் என்று கண்டுக்காமல் பித்தளைப்பானையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

ராத்திரி முழுக்க கனவில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் வந்தார்கள்.இவனுக்கு கொடுத்த  ராணுவத்துப்பாக் கியை வேறு யாரோ புடுங்கிக்கொண்டு ஓடுவது போலெல்லாம் வந்தது.விடிகாலையில் எழுந்து  அரக்கப் பறக்க கிளம்பிக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டு கையில் பத்து ரூபாய் நோட்டாக ஒரு கத்தையை வைத்தாள் அம்மா. அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது.ஏதும்மா என்று கேட்டான்.செல்லம்மா பெரிம்மாட்ட சீட்டு போட்ருந்தேன்ல என்று சொன்னாள். அப்போதும் கூட அந்த பித்தளைப்பானை வீட்டில் இல்லாதது அவனுக்குத் தெரியவில்லை.புதூர் ஞானப்பழம் சைக்கிளில்  தொத்திக் கொண்டு எட்டுமணிக்கே பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தான். என்சிசி ஆபீஸ் திறக்கவில்லை.மைதானத்துக்குப் போய் ரெண்டு ரவுண்டு ஓடினான்.திரும்பி வந்தான் அன்றைக்கு விளையாட்டு வாத்தியார் வெள்ளைச்சாமி லீவு என்று சொன்னார்கள். பூதம் அடைகாத்த மாதிரி அந்த 125 ரூபாயை பொத்தி பொத்தி வைத்திருந்தான்.மறுநாள் தான் கடைசி நாள்பயந்து கொண்டே இருந்தான். பணத்தைக் கட்டி காக்கிக்கலர் சீருடையும்,தொப்பியும்,பூட்சும்  வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்த போது ஒரு ராணுவ வீரனின் மிடுக்கோடுதான் வந்தான்.

அந்த வாரத்தில் சனியும் ஞாயிறும் பயிற்சி இருந்தது.ஊருக்குப்போக முடியவில்லை.சனிக்கிழமை காலையில் பரேடுக்கு வரும் போது பஜாரில் சாமிக்கண்ணு மாமாவைப் பார்த்தான்.வலியப்போய்  அவர் முன்னாடி நின்று மாமா என்று கூப்பிட்டான்.பதறிப்போனவரிடம் அம்மாவிடம் இந்த வாரம் லீவுக்கு வரமுடியாதுன்னு  சொல்லி ருங்க மாமா என்றான்.அடுத்த வெள்ளிக்கிழமை எப்போ வரும் என எதிர்பார்த்துக் கிடந்தான். சாயங்காலம்  எஸ் ஜி ஜே வண்டியில் ஏறும்போது எல்லோரும் இவனை உற்றுப் பார்த்தார்கள்.ஜன்னலோர இருக்கையில் இருந்த படியே ஊருக்குள் உலாவினான். அம்மாவின் அகலவிரியும் கண்கள்,வாசலில் நின்றுகொண்டு  பெருமை யடிக் கப்போகும் அவளது உற்சாகம் எல்லாம் வந்துபோனது.ரோசாப்பூவிடம் உடுப்போடு போய் நிற்கிறபோது அவளிடம் என்ன ரியாக்சன் இருக்கும் என்பதை கற்பனை செய்தான். இந்தப்பவுலுப் பயல் கட்டாயம் இதை ஓசி கேட்பான் கொடுக்கக் கூடாது. நிறுத்தம் வந்து விட்டது. அப்போதுதான் நடத்துநர் சுதாரித்துக்கொண்டு ’ஏப்பா பள்ளிக்கூடத்தான் நீயா,ஏட்டய்யாவோன்னு நெனச்சி வுட்டுட்டேன். இந்தா டிக்கெட்’ என்று கொடுத்தார்.

பஸ் கிளம்பியதும் பஸ் நிறுத்தத்தில் பாஞ்சாம்புலி ஆடிக்கொண்டிருந்த கூட்டம் பதறி எழுந்தது.  கஞ்சாப் பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்த  ஐயண்ணா பொன்னுச்சாமி அதை வேலிச்செடிக்குள் எறிந்துவிட்டு காட்டுக்குள் போய் வேட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே இருப்பது போல உட்கார்ந்து கொண்டார். நெருங்கிப் போனான். சார் கல்கெடங்குல தண்ணி பெருகிருச்சு வேலையில்ல, சும்மா பொழுது போகலன்னு பாஞ்சாம்புலி என்று சொல்லிக்கொண்டே ஏ முத்தையப் பெரிய்யா மகன் மாசிலாமணி டா.என்று சொன்னதும் ஒரே  ஆச்சர் யமும் சிரிப்புமானது.அப்பிடியே போலீஸ் மாதிரியே இருக்கடா,ஏ மாப்புள இங்கரு சொங்கி ராமன் வேட்டில ஒண்ணுக்கிருந்துட்டான் என்று சொல்லி வெடிபோட்ட மாதிரி சிரிச்சான் கருத்த மணி.அத உடு அஞ்சு ரூவாய்க்கு வாங்குன கஞ்சாவத் தூக்கி எறிஞ்சிட்டு கெதிபுடுங்கா ஓட்றாண்டா பொன்னுச்சாமி. இந்நேரம்  குறுக்க கூடி ஓடிப்போய் சிவகாசி சேர்ந்திருப்பான்.அங்கன போய்த்தான் திரும்பிப் பாப்பாம்போல என்று சொல்லிவிட்டு வேலிச் செடிக்குள் கஞ்சாப் பொட்டலத்தை தேடிப்போனான்.

ஒத்தையடிப் பாதையிலெ நடந்துகொண்டிருந்தான் சரக்கு சரக்கென்கிற பூட்சுக்காலின் சத்தம் இப்போது அவனுக்கு பெருமிதத்தோடு சிரிப்பையும் கொண்டுவந்தது. ஊர் நெருங்க நெருங்க அம்மாவும் ரோசாப்பூவும் ஆயிரம் முறை வந்து போனார்கள். கொஞ்ச நேரத்தில் பின்னாடியே ஆட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது. பஸ்ஸ்டாப்பில் இருந்த  மணி மச்சானும்,ஒலக்கை செல்வராசு சித்தப்பனும் தான். எய்யா அஞ்சு ரூவா கஞ்சாவ ஓசியாக்குடுத்த ஞண்ணே மகனே கொஞ்சம் நில்லுய்யா. மடத்துல மும்மரமா சீட்டுவிளாட்டு  நடக்கு. வெட்டுச் சீட்டு.மொத்தமா ஐநூறு தேறும்.வாப்பா ஒன்ன வச்சி அதப்பூராம் கைப்பத்திரமுய்யா. என்று சொன்னார்கள். ஏ வேண்டாம் மச்சான் எங்கய்யா,ஊர்ர்ப்பெருசு எல்லாம் இருப்பாக என்றான். இங்கரு நீ ஒண்ணுஞ்செய்ய வேண்டாம் இந்தா சைக்கிளப்பிடி, பைய்யக்கொண்டா, நா அத்தையிட்ட குடுத்திர்ரேன்,ரோட்டுவழிய வந்து மடத்துக்கு பத்தடி தள்ளி நில்லு. இன்னைக்கி இருக்குடி ஒங்கலுக்கு கொடமானம்’.என்று சொல்லிவிட்டு பையை வாங்கிக்கொண்டு ஊருக்குப்போனார்கள்.

கும்பிடப் போனசாமி குறுக்க வந்த மாதிரி சைக்கிள் கையில கெடச்சிருச்சி. ரோட்டுவழியே போனால்  மேலத் தெரு தாண்டித்தான் ஊருக்குள் நுழையணும். ரோட்டுமேலதான் ரோசாப்பூ வீடு. நாய்குறைத்த சத்தங்கேட்டு ரோசாப்பூ வெளியே வந்தாள்.இரண்டே நொடியில் இனங்கண்டு கொண்டாள். என்ன என்று கைச்சாடை  போட் டாள். என்சிசி ல சேந்துருக்கேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். பத்தடி தூரத்தில் ஒலக்கை சித்தப்பன் நின்று கொண்டிருந்தான்.பக்கத்தில் ஒரு வாண்டு கருப்பாயி மதினி மகன் இருந்தான்.பதறிஓடுகிற மாதிரி ஓடி போலிஸ்,போலிஸ் என்று சொன்னான். மடத்தில் இருந்து யாரோ எட்டிப்பார்த்தார்கள்.அடுத்த விநாடி சட்டையைத் தோளில் போட்டபடி,அண்ட்ராயரோடு,தெக்க வடக்க சந்து பொந்துகளுக்குள் நுழைந்து ஆட்கள் ஓடினார்கள். ஓடமுடியாத அம்மாச்சிக்கிழவன் ஒரு ஓரமாய்ச்சுருண்டு படுத்துக்கொண்டான். மடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் பொம்பளைகள் கூடினார்கள்.

ஒருநாளாச்சும் லாரியக்கொண்டாந்து அத்தனபேரையும் அள்ளிப்போட்டுக்கிட்டு போகமாட்டெங்க்றாங்களே. வேல வெட்டிக்குப் போகாமெ இருக்கிற சாமங்களையெல்லாம் அடகு வச்சி இவிங்க பண்ற ஆட்டந்தாங்கல.வாங்கடி இன்னைக்கு அந்த ஏட்டய்யாட்டப் போயி யார் யாருன்னு எழுதிக்கொடுத்திருவம். என்று லசுமித்தாய் சொல்லுச்சு. பாப்பாத்தியக்கா விருவிரு வென்று வீட்டுக்குப்போய் கொண்டா நாயக்கர் பிஞ்சையிலிருந்து எடுத்துவந்த  பருத்தி மாத்தை தூக்கிக்கொண்டுபோய் விறகுகளுக்கு அடியில்  ஒளித்து  வைத்து விட்டு வந்தாள். திடு திப்புனு வந்துருக் கானுகளே ? நேத்து கொண்டைய்யன் வீட்டுக்கும் அகத்தியன் வீட்டுக்கும் அடி புடி நடந்துச்சே அதுக் காருக்குமோ.இல்லக்கா போன வாரம் மொளகா நாத்தக்காணுமின்னு புதூர் நாடார் தேடி வந்தாரே  அதுக்காகத் தான் இருக்கும். நம்மூருக்காரங்களுக்கு ஊறுகாமட்ட வாங்குறதுக்கே துப்புக்கிடையாது கச்சேரிக் கெங்க  போகப் போகுதுக. சின்னப்பயலுகள் கூட்டமாக ஓடிவந்து மெல்ல மெல்ல மாசிலாமணிக்கு அருகில் கெக்கெக்கே என்று சிரித்தார்கள்.

அப்புறம் சனிஞாயிறு ரெண்டு நாளும் பவுலுப்பயதான் அந்த பூட்சையும் உடுப்பையும் போட்டுக்கொண்டு தெருத்தெருவாய் சிரிப்புக் காட்டிக்கொண்டு அலைந்தான்

18.12.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல் ( போட்டி நிகழ்சிகள் )


இன்று மதியம் ஜெயா( அப்படிச்சொல்லலாமா?) தொலைக்காட்சியில் ஒரு போட்டி நிகழ்ச்சி நடந்தது. சமயல் போட்டி.எது எதற்கெல்லாம் போட்டி வைக்கலாம் என்கிற வரையரை ஏதும் இல்லை.அது அவரவர்களின் சுதந்திரம். இருக்கிறவன் கொழுப்புக்கு போட்டிவைப்பான் இல்லாதவன் பசிக்கு போட்டிவைப்பான்.கொழுப்புக்கு நடக்கும் போட்டிகளில் நேரமும் பணமும் இன்னபிறவும் விரயமாகும்.இல்லாதவனுக்கு அப்படியில்லை.
நிகழ்சியில் நூடுல்ஸ் சமைத்துக்கொண்டுவந்த ஒரு இளம் யுவதியின் நூடுல்ஸ் நிராகரிக்கப்பட்டது உடனே அவள் கண்ணைப்பிழிந்து கொண்டு அழுதாள். மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

இப்படித்தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளிலும் சிறார்களைப் போட்டிக்கு இலக்காக்கி அவர்களுக்கு தோல்வியைப் பற்றிச்சொல்லிஅழவைத்து அதற்கு பின்னணி இசை அமைத்து காசாக்குகிறார்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பீட்டுப் பேசக்கூட கூடாது என்று உளவியலார்கள்  சொல்லு கிறார்கள். அது ஒரு புறமிருக்கட்டும். தோல்வியடைந்த இந்தக் குழந்தைகளின் இசைத் திறமையோடு புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக்காரர்கலைப் பாட வைத்தால் குழந்தைகள் தான் ஜெயிப்பார்கள். பித்துக்குளி முருகதாசின் தொண்டையையும்,ஏ.ஆர்.ரகுமானின் தொண்டையிலிருந்து வரும் பாடல்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும்போது ஒரு குழந்தையின் பாட்டை நிராகரிப்பது கொடூரம். ஏன்  கே.பாக்கியராஜையும், டீஆரையும் கொண்டாடுவத்ற்கு இங்கொரு கூட்டமே இருக்கிறதே.

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். இந்த உலகம் தனது குழந்தையின் மழலையை கூடிநின்று கேட்டுக்குதூகலித்துக்கொண்டாடுகின்ற உலகம்.அதன் மொழிக்கு இலக்கணம் கிடையாது.  அப்பாவைப் போடா என்று சொல்லும்,விருந்தினரை தொந்தி மாமா என்று சொல்லும்.ஏற்றுக்கொண்டு சிரிப்பதில்லை.இப்போது அது இல்லையா?. எல்லாம் மறந்துப்போய் நடுவர்கள் அப்போது ஒரு தத்துவம் சொல்லுவார்கள். போட்டியென்று வந்துவிட்டால் ஒருவர் தான் ஜெயிக்க வேண்டும் அதனால் நாங்கள் உங்களை நிராகரிக்கிறோம் என்று. இது  போட்டி நடுவர்களின் தத்துவமல்ல.இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து.

எல்லா விலையாட்டிலும் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது இன்னொருவராகவும் தான் இருக்கும். ஆனால் இந்த தாராள உலகமய விளையாட்டில் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது கோடிக் கணக்கிலும் பெருகிவருகிறது. வால்மார்ட் ஜெயிப்பதற்காக இந்தியா தோற்கிறது.விலைவாசி பஸ்கட்டணம் ஜெயிப்பதற்காக
தமிழ் மலையாள உணர்வுகள் பணயம் வைக்கப்படுகிறது.

11.12.11

பாரதி எனக்கு நினைவுகள் கொண்டுவரும் தூதுவன்.


செய்யுள்களை மதிப்பெண்களுக்காக மணப்பாடம் செய்த பள்ளி நாட்களில் அந்தப்பாரதியின் மீசையும்,முண்டாசும் கொடூரமாய்த்தெரியும்.எங்கள் பள்ளிகூடத்து பெரிய சார்.( தலைம ஆசிரியர் திரு சுப்பையாபிள்ளை )  அறிமுகப் படுத்திய தேசியத் தலைவர்களில் சிவாஜிக்கும் திப்புசுல்தானுக்கும் வித்தியாசம் தெரியாது  ரெண்டு பேரும் தலைநிறைய்யத் துணிசுற்றி வைத்திருப்பார்கள்.அவர்களைப் பற்றிச் சொல்லிய கதைகளை குலசாமி  கதை களைக் கேட்பது போலக்கேட்டோம்.அப்போதெல்லாம் தமிழ் இலக்கியம் என்றால் மனப்பாடம்  செய்யுள் மட்டும்தானே.

சுதந்திரத்தினத்துக்கு கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்களே அன்று கொடியேற்றியவுடன் தாயின் மணீக்கொடி பாரீர் என்கிற பாட்டைப் படிக்க தேர்வுசெய்யப்பட்ட போது நடுக்கமும்,சந்தோஷமும் குழைந்து கிடைத்து.எழுதிவைத்து உட்கார்ந்து ரவ்வாப்பகலா மணனம் செய்து ஆகத்து 15ல் அரைகுறையாய்ப்  படித்தாகி விட்டது. அப்போதும்கூட  பாரதியைப்பற்றித் அலாதியாகத் தெரியவில்லை. சுதந்திரத்துக்காகப் போராடினால் கட்டாயம் தலப்பாக் கட்டியிருக்கணும் போல என்று நினைத்துக் கொண்டேன்.அந்த வருடம் தொடக்கம் சுமார் ஐந்து வருடங்களாக எனக்கே சுதந்திரநாளில் கொடிக்குண்டான சவரட்ணைகள் அணைத்தும் செய்கிற வேலைகள் ஒதுக்கப்பட்டது.

ஆயிரவைசிய மேநிலைப்பள்ளியில் எங்கள் தமிழாசிரியர் தணுஷ்கோடி ராமசாமிதான் கண்களை உருட்டி உருட்டி பாரதிபோல ஜாடை செய்து பேசுவார். அவரின் நாடகத்தனமான பேச்சும் செய்கையும் பாரதிமேலன்றி அவர்மேல் பாசம் வரச்செய்தது. அவரது இல்லத்தில் வைத்திருக்கும்தாடியோடும் தடியோடும் நிற்கும் பாரதியின் மேல் ஈர்ப்பு வர ஆரம்பித்தது. என்பத்தி நான்காம் ஆண்டுக்கப்புறம் எங்கள் தோழர் கிருஷ்ணகுமாரோடு அலைந்த போதுதான் பாரதியிமேல் காதல் மலர்ந்தது. கழுதையைக் கட்டிப் பிடித்துக் கொண்டலைந்தார். மீசையை  முறுக்கிக் கொண்டார்,கனகலிங்கத்துக்கு பூணூல் மாட்டினார்,கடன்வாங்கிவந்த அரிசியைத்தூக்கி குருவிகளுக்கு படையல்செய்தார்,கஞ்சாக்குடித்தார்,கண்ணம்மாவின் மேல் பித்துப் பிடித்தலைந்தார்,சென்னைவந்த  காந்திக் கெதிரே கால்மேல் கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்து ’விளையாட வருகிறாயா’ என்றுகேட்பதுபோல கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா என்றுகேட்டார்,கைதானார்,தப்பியோடி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார் இப்படியே ஆயிரமாயிரம் தகவல்களைச் சொல்லிக்கொண்டே போவார்.

அப்போதும் கூட பிரம்மிப்பில் பாரதியின்  புத்தகங் களைப் படிக்கவில்லை. ஏன் படிக்கவேண்டும். தோழர் bk சொல்லுகிற தகவல்களைக்  கேட்டுக் கொண்டி ருந்தாலே போதும்.பாரதிமேல் அப்படியொரு குருட்டு  பக்தி யிருந்தது அதனாலே தான் எங்கள் சங்கக் கையெழுத்துப் பத்திரிகைக்கு அக்கினிக்குஞ்சு எனப்  பெயரிட் டோம். எனது முதல் மகனுக்கு கிஷோர் பாரதியெனப் பெயரிட்டோம், ரெண்டாவது பையனுக்கு  சூரியபாரதி யெனப் பெயரிட்டோம். அதன் பிறகு எனது சுற்றத்தார் அணைவரது குழந்தைகளும் பெயரின் பின்னாடி  பாரதி யைச் சேர்த்துக் கொண்டார்கள்.தொண்ணூ றுகளில் தோழர் bk எங்களிடமிருந்து தூரமானார்.மூன்று  இரண்டானது. அப்போதுதான் ஒரு பாரதியின் படைப்புகளடங்கிய புத்தகம் வாங்கினேன்.

ஒரு பொருளும்,இடமும்,சப்தமும்,வாசனையும் அதனதன் இருப்பை மட்டும் உணர்த்துவதில்லை.அந்த  பொருட் களுடனான நினைவுகளையும் கொண்டுவரும். இதோ இந்த பாரதிகவிதைகள் புத்தகத்தைப்  பார்க்கும்  போதெல் லாம் 42 பி எல் எஃப் தெரு நாட்கள் ஓடிவந்து உட்கார்ந்துகொள்ளும். யாராவது ஒருவர்  வரத்தாமத மானாலும் காத்திருந்து மாதுவுடனும் bk யுடனுமாக மூன்றுபேரும் ஒன்றாகச் சாப்பிடுவது,  ஒரேநேரத்துக் குத்தான்  உறங்கப் போவது.அன்றுவாங்கிய பேனாக்கதை முதல் அவளுக்காக அலைந்த கதைகள் வரை  பேசிக் கிடந்தது என நட்பின் உச்சானிக்கொம்பில் இருந்த நாட்கள் அவை. அவற்றயும் சேர்த்து நினைவுகூறக் கிடைத்தது இந்த பாரதி நினைவுநாள்.

10.12.11

பொங்கியெழும் அணையும்,உடைப்பெடுக்கும் ஒருமைப்பாடும்



தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கிற ஒவ்வொரு முறையும் அண்டைமாநிலத்தோடு உரசல் தீவிரமடைவது எதேச்சையானதா திட்டமிட்ட்டு நடக்கிறதா என்கிற சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து கசிந்த தண்ணீர் விவகாரம் பெரிதாக உடைப்பெடுத்தது. பூதாகாரமாகி பின்னர்  திரைப்படத் துறையினரின் கூட்டுப் படப்பிடிப்பெல்லாம் கூட நடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதை முழுநீள நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சிக் குழுமங்கள் நேரடியாக ஒளிபரப்பியது. என்ன மாயமோ தெரியவில்லை இப்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசுவது செய்தி வெளியிடுவது out of fashion ஆகிவிட்டது. தண்ணீர் தேவையான  அளவுக்கு  அங்கிருந்து கிடைக்கிறதா இல்லை போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று தமிழ் உணர்வாளர்கள் முடித்துக்கொண்டார் களோ என்னவோ தெரியவில்லை.

 மூன்று முக்கிய தேசியக் கட்சிகள் மட்டுமே களத்தில் இருக்கிற கேரளத்தில் உணர்வு ரீதியான போராட் டங்கள் ஆரம்பித்து வைக்கப் படுகிறது.  இதில் ஆர் எஸ் எஸ் சும் அதன் கொடுக்குகளும் போடுகிற ஆட்டம் அபரிமிதமானது. ஆனால் பத்திரிகைகள் காங்கிரஸையும் தோழர்.அச்சுதானந்தனையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு சடக்கென்று கடந்து போய்விடுகின்றன.

முதலில் இந்த முல்லைப் பெரியாறு அணை எங்கே இருக்கிறது,அதன் வரலாறு என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பிறகு நீர்-நிலம்-காற்று-மற்றும் பொதுத்துறைகள்  எல்லாம் தேசத்தின் பொதுச்சொத்துக்கள் என்கிற புரிதலும் வரவேண்டும். அதன் பின்னர் எதன் மீது தனிக்கவனமும் யார் மீது கோபமும் வரவேண்டும் என்கிற வழிகளைத் தேர்ந்து கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு கேரளாவில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 881 மீட்டர் உயர்த்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 1895 ஆம் ஆண்டு. பிரிட்டிஷ் இந்தியாவால்  கட்டி முடிக்கப்பட்டது. முதலில் பெரியாறு அணை என்றும் பின்னர் முல்லைப்பெரியாறு அண என்றும் பெயர் மாற்றப்பட்டது.காரணம் கேரளத்து நதிகளான முல்லய்யாறும்,பெரியாறும் கலந்து தேக்கிவைக்கப்படும் இடம் என்பதே. அப்போதைய திருவிதாங்கூர் அரசர் விஷாகத்திருநாள் ராம வர்மனுக்கும் இந்திய  மாகானச் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அந்நாளைய ராணுவ செயற்பொறியாளர் ஹென்னிங்டனும் திருவிதாங்கூர் திவான் ராம் ஐய்யங்காரும் 1886 ஆம் ஆண்டு அக்டோபர்29 ஆம் நாள் கையெழுத்திட்டனர்.

999 வருடத்திற்கான ஒப்பந்த ஷரத்துப்படி 8000 ஏக்கர் நிலம் அணைக்காகவும் 100 ஏக்கர் நிலம் கட்டுமானத் திற்காகவும் சர்வ சுதந்திர பாத்தியதைக்காகக்  கையளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து ரூபாய் வாடகை வீதம் வருடத்திற்கு 40000 ரூபாய் செலுத்தவேண்டும்.

சென்னைப்பட்டாளியன்களும் போர்ச்சுக்கீசிய கைவினைகர்களும் ஈடுபடுத்தப்பட்ட கட்டுமானத்தின் உத்தேச மதிப்பீடு 1கோடியே நான்குலட்சம். செங்கற்ஜல்லிகள்,சுண்ணாம்பு,கருப்பட்டி ஆகியவை கலந்து உருவாக்கப்பட்ட பழய்ய தொழில்நுட்பம்.கட்டுமான காலத்தில் சுமார் 450 பேர் உயிரிழந்தார்கள் இரண்டுமுறை உடைப்பெடுத்து பெருத்த சேதமேற்பட்டது எனவே செலவினங்கள் கூடியது, உடனே பிரிட்டிஷ் அரசு அணை கட்டுமானத்தை நிறுத்திவைத்தது.சர் பென்னிகுயிக் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கட்டுமானத்தைத் தொடர்ந்தார்.

இந்தக் கட்டுமானத்தின் விஷேசம் என்னவென்றால் இரண்டு நதிகளின் போக்கு அரபிக்கடலை( மேற்கு)  நோக்கி யிருக்கிறது. அதைத் தேக்கி வங்காள விரிகுடாவுக்குத் (கிழக்கே) திருப்பவேண்டும். திருப்பியதால் தென்  தமிழக த்தின் மழைமறைவுப் பிரதேசங்களான மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்து மாவட்டங்கள் பயனடைந்தன.அங்கிருந்த சுமார் 85000 ஏக்கர் பொட்டல் காடுகள் விலை  நிலங்களாக மாறின. இந்த  அணையி லிருந்து கேராள பயன்பாட்டுக்கு ஒருசொட்டுக் கூடக் கிடையாது.அதே போல அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு எல்லாமே தமிழ்நாட்டைச்சார்ந்தது.

இந்த ஒப்பந்தம் இந்திய சுதந்திரத்துக்குப் பின் காலாவதியாகிய படியால் அதன் பிறகான பலசுற்றுப்  பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து இறுதியில் 1970ல், முதல்வர் அச்சுதமேனன் அரசால் ஒப்பந்தம்  புதுப்பிக்கப் பட்டது.அதன் பிரகாரம் வாடகையை ஒரு ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்தியும் அதுபோக தயாரிக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட் மின்சாரத்துக்கும் 12 ரூபாய் வரியாகவும் செலுத்தவேண்டுமென ஒப்பந்தமானது.

1979 ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள மோர்வி அணை உடைந்து சுமார் 1500 பேர் உயிரிழந்து 150000 பேர்  பதிக்கப் பட்டனர்.அதன்பின் அணைகள் குறித்த பாதுகாப்பில் தீவிரம் காட்டப்பட்டது.116 வருட பழமையும்,19ஆம்நூற் றாண்டின் கட்டுமானத் தொழில் நுட்பமும், வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டது. கூடவே இரண்டு முறை  இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், கல்லாறு பகுதிகளில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் நிலநடுக்கம். மாறிவரும் பூமி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் முல்லைப் பெரியாறு தேக்கத்தை மையப்படுத்தி கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீரின் தேக்க அளவு குறைக்கப்பட்டது.கொந்தளிப்பு இரண்டு மாநிலங்களுக்கிடையிலான
சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது எனக்கிளம்பிய போராட்டங்கள் கொந்தளிப்பாகி அவ்வளவுபெரிய அணயை உடைப்போம் என்று கேரளத்தார் அறிக்கைவிடுகின்றனர்.இந்த அறிவீன அறிக்கைகளை தூக்கிக் கொண்டு பிரதேச உணர்வை கிளறிவிடுகிறது கேரளாரசியல்கட்சிகள்.ஆனால் அங்கிருக்கிற சமூக ஆர்வலர்கள் இலக்கியவாதிகள் தமிழகத்துக்கு வழக்க ம்போல தண்ணீர் தந்தே ஆக வேண்டும் என அறிக்கை விடுகிறார்கள். நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு இது எதோ வெளிநாட்டுப் பிரச்சனைபோல கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எத்தனை பொதுத் துறைப் பங்குகளை விற்கலாம்,எந்தெந்த துறைக்குள் அந்நிய முதலீட்டைப் புகுத்தலாம்,சில்லறை விற்பனையோடு சேர்த்து எதையெல்லாம் விற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

பொங்கிவரும் போராட்ட உணர்வைப் பார்க்கும்போது. சரி இருக்கட்டும் ஒரு நல்ல போராட்டத்துக்கான தருணம் வரும் அப்போது இன்னும் அடங்காத கோபத்தோடு மக்கள் கிளம்புவார்கள் என்கிற நம்பிக்கை வருகிறது.

6.12.11

’மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல’ (அண்ணல் அம்பேத்கர் நினைவுக்கு)


                                                        ( S.Radhakrishnan )

இந்தப் பதம் ஒரு நெடுங்கவிதையின் இடையில் வரும்.இதை எழுதிய கவிஞர் வலைமக்களால் பெரிதும் அறியப்பட்டவர்.அவன் தோழன் மாதவராஜ் .( தீராதபக்கங்கள்). அவன் எழுதிய இன்னொரு குருசேத்திரம் என்கிற கவிதையின் இடையில் தான் இந்தப்பதம் வரும். இது நாங்கள் நடத்திய அக்கினிக்குஞ்சு என்கிற கையெழுத்துப் பத்திரிகையில் தவிர வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. இருந்தும்  1984 ஆம் ஆண்டு வாசிக்கப்பட்ட கவிதையின் இடையில் வரும் இந்தச்சொல் ஏன் எனக்குப் பிடித்துப்போனது என்பதை முழுக் கவிதையையும் வாசித்தல் தான் புரியும்.அது ஒருபுறம் இருக்க மனம் இருந்தும் ஒருதாழம் பூவைப்போல ஒதுக்கிவைக்கப்பட்ட பலரில் பாபா சகேப் அம்பேத்கர் முதலானவர்.

அவர் குறித்த பல புத்தகங்கள் இருக்கிறது.இன்னும் வலையில் தேடினால் அதற்கதிகமாகவும் கூடப்படிக்கலாம்.ஆனால் அவரைப்பற்றிய சில அறிதான செய்திகளை எனது தாய்மாமனார் திரு எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லிக்கேட்கவேண்டும்.. அம்பேத்கரைவிட பெருந்தலைவர் காமராஜர் குறித்த அறிதான விஷயங்களை இடம் காலம் குறித்த துள்ளியத்தோடு தனது அலாதியான விமர்சனத்தையும் சேர்த்துச் சொல்லுவார். அப்படி ஒருமனிதர் அதுவும் பள்ளி ஆசிரியர் பொதுச் சமூகத்தில் இருந்தால் அவரைக்கொண்டாட சமூகம், அமைப்புகள் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கும். ஏனோ தெரியவில்லை இந்த ஐம்பத்தெட்டு வயதிலும் யாராலும் இனங்காணப் படாத மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் கூட இந்த மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப் போல என்கிற பதத்தின் பட்டியலின் கீழ்வருகிற ஒரு மனிதராவார். அவர் அம்பேத்கர் குறித்துச்சொன்ன ஒரு விஷயத்தை இங்கே இன்று பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அவர் தனது மகனுக்காக ஒரு சான்றிதழ் வாங்க ஒரு வழக்குறைஞரிடம் போனாராம்.அங்கே வழக்கறிஞரின் நண்பர்களும் சொந்தங்களுமாக நான்கைந்து பேர் குழுமியிருந்தார்களாம். இவரைப்பார்த்ததும் இந்த அம்பேத்கர் என்னதான் செய்துவிட்டார் நாடு முழுக்க சிலைவைத்துக் கொண்டாடு மளவுக்கு என்று ஒருவர் கேட்டாராம் மற்றவர்களும் பகடி செய்து சிரித் தார்களாம். உடனே ’நான் ஒரு கையெழுத்து வாங்க வந்திருக்கிறேன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி என்காதில் விழுகிறது,நான் பதில் சொன்னால் ஒருவேளை எனக்கு போட வேண்டிய கையெழுத்து கிடைக்காமல் போய் விடும் ஆனாலும் என்னிடம் கேட்கப்படாத இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் போக முடியாது’ என்று சொன்னதும் சரி அப்படி என்னதான் செய்தார் இந்த அம்பேத்கர் என்று கேட்டிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவுக்கு வரிவடிவிலான சட்டம் ஒன்று தேவைப்பட்ட தொடக்க காலத்தில் அதை உருவாக்கு வதற்கான அரசியல் நிர்ணய சபையைக் கூட்டினார்கள்.அதன் தலைவராக முன்னாள் சனாதிபதி திரு ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டாராம். பின்னர் அந்த சபை நான்குமுறை கூடி யிருக்கிறது அதன் பின்னர் கூட சுதந்திர இந்தியாவில் நான்குபேர் கொண்ட குழு அமைக்கமுடியவில்லை. பிர்தமர்நேருவின் ஆலோசனைப்படி அதற்குத் தகுதியான ஒரே நபர் என்கிற நிணயசபையின் உறுப்பினர்கள் எல்லோரும் அம்பேத்கரைப்பார்க்க அவரது இல்லத்துக்குப் போனார்களாம். வரவேற்று உபசரித்து வருகையின் நோக்கம் கேட்ட அறிந்துகொண்ட அம்பேத்கர் ’உங்களுக்கு ஒரு இதிகாசம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமாக இருந்தோம்,ஒரு புராணம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமான வர்களாக இருந்தோம் இப்போது சட்டம் தேவைப்படுகிறது இப்போதும் கூட நாங்கள் தான் தேவைப்படுகிறோம்’ என்று சொல்லிவிட்டு அரசின் விருப்பத்துக்கு இணங்க சட்டக்குழுவின் தலைவராக இருக்க ஒத்துக் கொண்டார். அந்தக்குழுவில் அம்பேத்காருடன் இணைந்து பணிபுரிய சர். அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யரும், டிடி.கிருஷ்ணமாச்சாரியும்,வங்கத்தின் நர்சிங்ராவும்,கேகே முன்ஷி,கனேஷ் மாவ்லாங்கர் ஆகியோர்...... நியமிக்கப் பட்டார்கள்.

அந்தகுழுவின் முதல் கூட்டம் மட்டுமே ஆறுபேருடன் நடந்தது. பொதுவாகவே இப்படியான அமைப்புக்களின் முதல்கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் என்னவாக இருக்கும்.அலுவலகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம்.
அலுவலக சாதனங்கள்,சப்பாடு,தேநீர் இவற்றை எங்கு இருந்து தருவித்துக் கொள்ளலாமென்கிற விடயங்கள் குறித்து மட்டுமே பேசியிருக்கமுடியும். அதன் பிறகு தனக்கு வயதுஆகிவிட்டது என ஒருவரும்,தான் மேலைநாடு போகிறேன் என்று இன்னொருவரும்,தனக்கு உடல்நிலைசரியில்லை என மூன்றாமவரும் அந்தக்குழுவில் இருந்து விலகிக்கொண்டார்களாம்.

குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லிக் கேட்காமல் அம்பேத்கர் தனக்கிட்ட பணிகளை தன்னந்தனியே தொடங்கினார். அவர் குறிப்புகள் சொல்லசொல்ல அவரது உதவியாளர் அப்போதைக்கிருந்த அந்தக்கால ரெமிங்டன் தட்டச்சு எந்திரத்தில் அதை எழுத்துருவாக்க பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.

இடைப்பட்ட காலத்தில் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் சனாதிபதி ராஜேந்திரப் பிரசாத்திடம் போய் ஒரு தேசத்தின் சட்டவடிவை உருவாக்க எப்படி ஒருதனிநபரைமட்டும் சார்ந்திருக்கமுடியும் என்று வாதிட்டு இருக்கிறார்கள். அவர்களின் முணுமுணுப்பை புறந்தள்ளிய சனாதிபதி அவருக்கு துணைக்கு  ஆள் தேவைப்பட்டால் அவரே கேட்டிருப்பார் நானாக வழியப்போய் ஆட்கள் நியமித்தால் அவரை என்னால் எதிர்கொள்ள முடியாது தவிரவும் அவரது திறமை பற்றி எங்களுக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டாராம்.

ஒன்றிரண்டல்ல பத்தொன்பது மாதங்கள் அல்லும்பகலும் தன்னந்தனியே கிடந்து உருவாக்கிய வரைவு சட்டமசோதாவை மிகச்சரியாக நவம்பர் 1949 ஆம் ஆண்டு 26 ஆம் தேதி நிர்ணயசபையின் கூட்டத்தில் சமர்ப்பித்தார் அம்பேத்கர். 95 திருத்தங்கள்,12 பட்டியல்கள், 22 தொகுதிகள்,448 ஆர்ட்டிகிள்ஸ், ஆகிய வற்றை உள்ளடக்கிய 117369 ஆங்கிலச் சொற்களினால் உருவாக்கப்பட்ட ஒருகணத்த கோப்பு அது.

அந்தக்கூட்டத்தில் இந்த சட்ட உருவாக்கலில் தனக்கு உறுதுணையாக இருந்த ஏனையோருக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் பங்களிப்பில் தான் இது சாத்தியமாகி யிருக்கிறது என்று உரையாற்றினாராம். கூட்டத்தில் ஆஜராகி யிருந்த ஏகே அய்யர் என்கிற அல்லாடி கிருஷ்ணமூர்த்தி உட்பட யாரும் ஏதும் சொல்லாமலிருந்தாலும்,டிடிகே அவர்கள் எழுந்து உண்மையில் இந்த சட்ட உருவாக்கலில் எங்களுக்கு  பங்கில்லாத போதும்கூட எங்கள் பெயரை இணைத்திருப்பது அம்பேத்கரின்  பெருந்தண்மையைக் காட்டுகிறது என்று சொன்னாராம்.

உண்மையான நடப்பு இப்படி இருக்க பத்திரிகையாளர் திரு சோ.ராமசாமி அவர்கள் எதாவது சட்டநுணுக்கங்கள் பற்றிச் சொல்லும்போது பெரும்பாலும் டாக்டர் டிடிகே அவர்களின் பெயரையும், சர்.அல்லாடிகிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மட்டும்தான் மேற்கோளிட்டு காட்டுவார்.

மிகப்பெரும் படிப்பாளி,மிகப்பெரும் எழுத்தாளர்,கல்வியாளர்,உலகின் அணைத்து மதங்கள் குறித்து நுணுக்கமாக கற்றறிந்த அவர்தான் இந்து மதம் குறித்த மிகப்பெரிய எதிர்க் கருத்தை வலுவாக முன்வைத்தார்.சுமார் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிற சாதனை இதுவரையில் யாராலும் எட்டப்பட முடியாதது. தான் முதலாக வெளியிட்ட இந்தியாவில் ஜாதிகள் எனும் புத்தகம் தொடங்கி 1956 ல் வெளியான புத்தமும் அவரது தம்மமும் எனும் புத்தகத்தோடு சுமார் 21 புத்தகங்களை அறிவுலகத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.அவர் எழுதிய புத்தமும் தம்மமும்,ரைடில்ஸ் ஆப் ஹிண்டுயிஸம்,சூத்திரர்கள் யார், அனிஹி லேசன் ஆப் கேஸ்ட் ஆகியவை எவராலும் மறுதலிக்கமுடியாத பொக்கி ஷங்கள். இந்தியாவின் சமூகபொருளாதார அமைப்புக்குறித்த அவரது தீர்க்க மான மற்றும் ஆழமான கருத்தியல்கள் பொதுச்சமூகத்தால் புறந்தள்ளப் பட்டவை. சத்திய சோதனையும்,வேர்ல்டு ஆப் டிஸ்டனியும் தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் அளவுக்கு அம்பேத்கர் அறியப்படவில்லை. சுமார் 50000 புத்தகங்களை தனது சொந்தச்செலவில் வாங்கி நூலகமாக்கிய பெருமை வேறெந்த கல்வியாளருக்கும் கிடையாது.

இந்தத் தகவல்களை உலக நடப்புகளோடும்,இன்றைய்ய செய்திகளோடும் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டே போவார் திருராதாகிருஷ்ணன் அவர்கள். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சத்தூரில் இருக்கிறது. அந்த பட்டாளம்  தேவி ஸ்டுடியோவிலோ,என் ஆர்கே சுவீட்ஸ் வாசலிலோ, இல்லை ஒரு தேநீர்க் கடையிலோ தினப்படிக்கு கூடும். மிகச்செறிவான அரசியல் சமூக, இலக்கிய,திரைப்படம் குறித்த விமர்சனக் கருத்துக்கள் பதிவுசெய்யப் படாமல் காற்றில் கறைந்து கொண்டே போகிறது. அவரிடம் அழியாத வாய்மொழிப் பொக்கிஷங்கள் தேங்கிக்கிடக்கிறது அதிலிருந்து கொஞ்சமாவது  எடுத்து பதிவு செய்ய ஆவலாக இருக்கிறது.எனவே இந்தநாளின் நடுப்பகலில் அவரைச் சந்தித்து அவரோடு பேசிக்கொண்டிருந்த தருணம் மிக முக்கியமானது.


         

4.12.11

சில சில்லறைத் தகவல்களும் தேசபக்தியும்.



இந்த வார்த்தையே கொஞ்சம் சிக்கலானது அதென்ன தேச பக்தி. நாம் வாழும் தேசத்தின் மீது பக்தி மட்டும்தான் இருக்கவேண்டுமா? காதல் இருக்கக்கூடாதா ? நேசம்,அன்பு,பற்று,அபிமானம்,மரியாதை இவையெல்லாம் இருக்கக்கூடாதா ?. பக்தி என்கிற சொல்லே குதர்க்கமானதும் நிறைய்ய உள்குத்துகள் அடங்கியதும்  ஆகும். முதலில் தேசம் என்பது என்ன வெறும் எல்லைகள் மட்டும்தானா ? அதில் வாழுகின்ற மனிதர்  சகமனிதர், உயிரினங்கள்,இயற்கை,மண்,வளங்கள் இவை யாவும் கூட்டாக சேர்ந்தது தானே தேசமாக முடியும்.நம்மோடு இங்கிருக்கிறவற்றை நேசித்து விட்டு பிறகல்லவா எல்லைகள் பற்றி  யோசிக்கவேண்டும்.  இருப்ப வற்றை கூடியமட்டும் கூறுபோட்டு விட்டு தேசபக்தி வேண்டுமெனத் தேடினால் என்ன  கிடைத்து  விடப் போகிறது. கிடைக்கப்போவது அக்மார்க் அடிமைத்தனம் மட்டுமே?

இந்த இந்தியா அம்பத்தாறு தேசங்களாக பிரிந்துகிடந்த காலத்தில் மேலை நாடுகளில் இருந்து எதாவது வாசனத்திரவியங்களை விற்கவந்தார்ர்கள். வந்ததும் லாட்டரி அடித்த சந்தோசமடைந்தார்கள். எதற்கு ஏவாரம் பண்ணவேண்டும் நாட்டையே  அடிமைப் படுத்திவிட்டால் கப்பல் கப்பபலாய் அள்ளிக்கொண்டு போகலாம் என்று முடிவுபண்ணினார்கள். அது அவர்களுக்கு வியாபாரம் பண்ணுவதை விட சுலபாமான வேலையாக இருந்தது.அவர்களின் உடலுக்கு ஏற்ற தட்பவெப்பம் சரியாக இல்லாதிருந்த போதுகூட அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கான தட்பவெப்பம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

கிறிஸ்து பிறந்து 2011 ஆண்டுகள் கடந்து போன பின்பும்,கணினி,உயிரி,பௌதிக,ரசாயன தொழில்நுட்பங்கள் கூடிப்போன இந்தக்காலத்தில் கூட கேரளத்தோடும், கர்நாடகத்தோடும், மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற இதே மனிதர்கள் தான் அன்றைக்கு சேர,சோழ,பாண்டிய மீசைகளை முறுக்கிவிட்டுக் கொண்டலைந்தார்கள். சகமனிதனை வெட்டிச் சாய்த்துப் பீய்ச்சி அடிக்கிற ரத்தத்தைக் கண்டு கொந்தளிக்கிற குரூரத்தை வீரம் என்று பீற்றிக் கொண்டு கிடந்தார்கள். ஆடுமாடு திருடுவதை ஆநிறை கவர்தல் என்று புராணகாவியங்கள்  எழுதி வைத்தார்கள்.

பிறன்மனை நோக்கக்கூடாது என்பதை இதிகாசமாக்கிய காலத்தில்தான் ஒருத்தன்  பொண் டாட்டியை இன்னொருத்தன் அபகரிக்க ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் விலை மதிப்பில்லாத உயிர்களைப் பகடைக் காய்களாக்கினார்கள். மலை உச்சியில்,நதிக்கரைகளில் நூறு இருநூறு ஏக்கர்களில் அரண்மனை  கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்களை வைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு ஏழைகளின் வயிற்றிலடித்து வரிகள் வாங்கிக் குவித்தார்கள். இதே மன்னர்கள் தான் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போன மனைவிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கான மனிதர்கள் உழைப்பை உறிஞ்சி மண்டபங்கள் கட்டினார்கள். இதை எவனும் எதிர்த்துக்கேட்க வழியில்லாதவாறு மனிதர்களை நிறம்பிரித்தார்கள்.

இதுபோதுமானதாக இருந்தது மேலைத் தேசத்தவர்கள் நம்மை அடிமையாக்க.வெறும் பிரிட்டிஷார் மட்டும் தான் நம்மை அடிமையாக்கினார்கள் என்பதுபோலத்தான் இன்றுவரை நமக்கு வரலாறுகள்  சொல்லிக்கொடுக்கின்றன. வந்து போனவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவமானத்தில் உடல்பதறுகிறது.  கில்ஜிகள், முகம்மதியர்கள், பார்சீகள்,போர்ச்சுக்கீசியர்கள்,யூதர்கள்,சிரியர்கள்,டச்சுக்காரர்கள், அப்புறம் தானே பிரிட்டிஷார்கள் வந்தார்கள். இதிலென்ன கொடுமை என்றால் இந்த இனத்தவரெல்லாருடைய நாட்டு வரைபடத்தைப் பாருங்கள்  வெற்றிலை எச்சிலைத்( அல்லது பான்பராக்) துப்பியது போலதிட்டுத் திட்டாய்மட்டுமே இருக்கும். அப்படியே நமது இந்திய வரைபடத்தைப் பாருங்கள் மிகக்கேவலாக இருக்கும். அதைவிடக் கொடுமை என்ன வென்றால் யூதர்களுக்கு நாடே கிடையாது.

இந்த யூதர்களுக்குத்தான் கேராளா தொடங்கி பம்பாய் வரையிலும் இந்தியா சிக்கிக்கிடந்தது. அதற்குப்பெயர் யூத இந்தியாவாம்.அந்த யூத வந்தேறிகளுக்கு அப்போதைய ’இந்து’ மன்னன் ஒருவன் கிறித்தவ யூதத்தலைவன் ஜேம்ஸ் ராப்பனுக் கொடுத்த உரிமைகைகளின் எண்ணிக்கை 72 வகையாகும்.ஆள்,அம்பு,பரிவாரம்,அரண்மனை,அந்தப்புறம் இவைகள் போதாதென்று ஆனைமேலே  அம்பாரி. அந்த அம்பாரி போகும் போது முன்னாடி முரசறைந்து கொண்டு பராக் சொல்லவேண்டும். சொல்லும்போது கீழ்சாதிக்காரார்கள் ஓடோடி கண்ணில் படாமல் மறைந்து கொள்ளவேண்டும். இதே வகை மரியாதைகள் சிரியதேசத்து கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டதாகத் தாமிரப் பட்டயம் சொல்லுகிறது.( ஜேம்ஸ்மெஸ்ஸேயின் ’தி டவுன்ட்ரோடன்’ பக்கம் 17 ).தனது மண்ணில் தன்னோடு பிறந்து தனக்காக உழைத்து,வியர்வை சிந்துகிறவனை பார்க்கக்கூடாதவனாகவும் தன்னை  அடிமையாக்க வந்தவனிடம் குண்டி குப்புறவிழுந்து எல்லாவற்றையும் இழந்து போனவர்கள் தான் வீரம் செரிந்த மன்னர்கள் என்று நாம் இன்னும்கூடப் போற்றிப்பாடுகிறோம்.

ஏகலைவன் என்கிற ஒரு சாமான்யன் வில்வித்தை தெரிந்துகொண்டான் எனக்கலங்கிப்போய் அவன் பெருவிரல் பிடுங்கிய சூழ்ச்சிக்காரர்கள் வாழ்ந்த இந்த தேசத்திலிருந்து தான் போதி தர்மன் வருஷக்கணக்காய் பயணமாகிப் போய்  சீனர்களுக்குத் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்தானாம். இது எப்படியிருக்கிறது ?. புராணங்களின் காதுகளிலேயே சமகாலக் கதைகள் பூச்சுற்றுகிறபோது பழங்காலக் கதைகள் சும்மாவா  இருந்திருக்கும் ?. சொல்லுகிற கதைகளெல்லாம் வீரம்தான் என்று வைத்துக்கொள்வோம். அதையெல்லாம் வைத்துக்கொண்டு உள்ளூர்க்காரனை மட்டும் தான் அடிக்கவேண்டுமா அயல்நாட்டுக்காரனை அடிக்கக்கூடாதா? அப்படியானால் அது
என்னவகை வீரம். அந்த வீரத்தை 1947 வரை அடகுவைத்திருந்தார்களா? இல்லை  பத்மநாதபுரம் கோயில் நகைகளைப்போல குழிதோண்டிப் புதைத்துப் பூட்டிவைத்திருந்தார்களா?.

இந்தியப்பரப்பில் எத்தனை பேரரசர்கள்,எத்தனைஎத்தனை சிற்றரசர்கள்,எவ்வளவு குறுநிலமன்னர்கள்,இன்னும் ஜமீந்தார்கள் இருந்தார்கள்.  அவர்களில் எத்தனை அரசருடைய ஆள் அம்பு பரிவாரங்கள் பிரிட்டிஷாரைக்குறி பார்த்தது. கணக்குபார்த்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வரி வசூலிப்பவர்களாகக் கப்பம் கட்டுகிறவர்களாக காலந்தள்ளிய மன்னர்கள் பட்டியல் தான் கணக்கிலடங்காதது. ராணி லக்குமிபாய், வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்றோரைக் கணக்கிலெடுத்தாலும் மெல்லமெல்லக்கிளம்பும் தரவுகள் குழப்பம் தருகிறது.

ஆனால் சாமன்யர்களின் கால்கள் வீதிக்கு வந்தபிறகுதானே சுதந்திரம் என்கிற சொல் உருவானது. அப்படிச்சொல் உருவாக உயிர் புதைத்தோர் பட்டியல் நீளமானது அவர்கள் யாரும்  அரச குடும்பத்தையோ, ஜமீந்தார்  பரம்பரை யிலோ இல்லை வழிவழியாய் நெஞ்சில் வாள் கொண்டு எழுதிய வீரக்கதைகளுக்குச் சொந்தக்காரர்களோ
இல்லை. ஜாலியன் வாலா பாக்கில் மலிவாக மடிந்துபோன உயிர்களுக்கு பதில் கேட்க முப்பதுவருடங்கள் பதுங்கியிருந்து ஜெனரல் டயரின் உயிரை பிடுங்கினன் ”உத்தம் சிங்”.இந்தப்பெயரைக்கேட்டாலே உடல் புல்லரிக்கிறது. வன் ஒரு சாமன்யன்.அதேபோலத்தான் சூரியா  சென்,  கல்பனாதத் , பகத்சிங்,  சுகதேவ், ராஜகுரு,வாஞ்சி,குமரன்,வ உ சி,சிவா என்கிற எளிமையான மனிதர்கள் தான் போராளிப்பட்டம் ஏந்தினார்கள். அவர்களின் கதைகள் கேட்ட சாமான்யர்கள்தான் தெருவில் இறங்கினார்கள்.இறங்குவார்கள்.

அதுவரை
சில்லறை சில்லறையாய்
எல்லாவற்றையும் சுருட்டிக்கொள்ளும்
இந்த தேசத்து ஆட்சியாளர்களோடு
கைகோர்த்துக்கொண்டு
அமெரிக்காவும் ஆட்டம்போடும்.
அதுவரை
நாமும் மலையாளிகளும் மாறி மாறி
உண்ணாவிரதம் இருக்கலாம்.
அதுவரை
தேசம் என்பது பக்திக்கானதாக
மட்டுமே பற்றவைக்கப்படும்.

2.12.11

மாற்றத்தைத் தடுக்கும் அரண்


எகிப்து தொடங்கி
வால்தெரு வரை
பற்றிப் படர்ந்த தீ,
என்தேசத்துக்குள்
நுழையவில்லை.
ஏனெனில்
அது மூன்று பக்கம்
ஜாதியாலும்
ஒரு பக்கம்
மதத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது.