30.9.11

பிரிவினைப் பணிமனை ( கருத்தக் கவிதைகள் )




ப்ரைனாவின் அம்மா அழுதுகொண்டிருக்கிறாள்
பள்ளியிலிருந்து வீடுதிரும்பிய செல்லம்
தேம்பலோடு சோகம் கொண்டுவந்தாள்.

அவளது வகுப்பில் இரண்டு ப்ரைனாக்கள் உண்டாம்
ஆதலால் இவளைக் ’கருப்பு ப்ரைனா’ என
அழைப்பதன் மூலம் இனம் கண்டார்களாம்.

இனிமேலும்நான் கருப்பு ப்ரைனாவாக
இருக்கமாட்டேன் அடம்பிடித்தவளுக்காக.
ஏதும்செய்ய இயலாத அம்மாவும்
ஏசுவே நான் என்ன செய்வேன் என்று
நொந்துகொண்டு அழுதாள்

அப்புறம் அவளது பொம்மைகளையும்
கொஞ்சம் கருப்புக் கதைகளையும் தந்தேன்.
அவளுக்கு நான் வேறென்ன சொல்லமுடியும்.

ஐந்து வயதாகுமுன்னே குழந்தைகளுக்கு
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது
கருப்பு என்பது நிறமல்லவாம்
அது எமது மக்களின் தோல் தானாம்.

= டாய் டெர்ரிக்கோட்

கண்மாய் அழிவும் உள்ளாட்சித்தேர்தலும்.

அடைமழைநேரம் மழை வெறித்ததும் அப்படியே கண்மாய்க்கரைப்பக்கம் காலார நடந்து போனால் சொத சொதவென நீர்பாரித்துக்கிடக்கும் செம்மண். பின்னாடித் திரும்பிப்பார்த்தால் கால்தடம் கூடவரும். கண்மாய்க்கரையில் ஏறி நின்றுபார்த்தால் நுங்கும் நுறையுமாய் சிகப்புத் தண்ணீர் வந்துகொண்டிருக்கும். அப்புறம் ஒருமாத காலத்துக்கும் த்ண்ணீர் செந்நிறமாகவே கிடக்கும்.நாளாக ஆக அது அலை யடித்து தண்ணீர் நிறமாக மாறும். புழுப்பூச்சிகள், தட்டான்கள், அரைத்தவளை, கெண்டைப்பொடிகள், சிறுநண்டுகள் தண்ணீர்ர்ச்சாரை, நீர்க்காக்காவென ஜீவராசிகள் புதுசாக்குடியேறும்.பழைய்ய டியூப்களில் காற்றடைத்துக்கொண்டு நீச்சலடிக்கலாம்.நீந்திக்களைத்தபோது நண்டுபிடிக்கலாம்.மடைக்கார ஒத்தையால் சண்முகண்ணாச்சியோடு சேர்ந்து மடைதிறக்கலாம்.அங்கிருந்து வரப்பு வழியே கண்மாய் நினைவுகளோடு வீடுசேரலாம்.




இவை எல்லாவற்றையும் அள்ளிச்சிதறி சண்டையும் கூத்தும் கும்மாளமுமாய் இறங்கி மீன்பிடித்து வருகிற ஒருநாள் வரும்.அது கண்மாய் அழிகிற நேரம்.அந்தசேறும் சகதியும் சண்டையும் வசவுமாக வந்து நிற்கிறது உள்ளாட்சித்தேர்தல்.ஆளாலுக்கு சகதிக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் கூடைகூடையாய் அள்ளிக்குவிக்க.

26.9.11

நம்பிக்கையூட்டும் கதைகளின் வரிசையில்- எங்கேயும் எப்போதும்



ஒரு ஓம்னிப் பேருந்துப் பயணம் தான் மொத்தக் கதை.பயணமும் பயணம் சார்ந்த நினைவுகளும் மட்டுமே தமிழ்ச்சினிமாவுக்கு மையக் கருவாக இருப்பது உண்மையில் துணிச்சலான விஷயம். நீண்ட தூரம் பேருந்தில் பயணப்பட்ட எல்லோரோடும் இந்தக்கதை கைகோர்த்துக் கொள்ளும்.அப்படிப் போகாதவர்களை வெகுவாக ஈர்க்கும் சமாச்சாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற எதார்த்தப் பதார்த்தம் தான் ’எங்கேயும் எப்போதும்’.

பயண நேரங்களில் நமக்கு கிடக்கும் சௌகர்யங்களையும் அசௌகர்யங்களையும் அழகாகத் தொகுக்க முடிந்திருக்கிறது இயக்குநர் சரவணனுக்கு. கிராமத்திலிருந்து நகரம் போகிற எல்லோருக்கும் போதனைகள் கட்டாயம் காத்திருக்கும். அந்தப்போதனைகள் எச்சரிக்க வழிநெடுகச் சந்திக்கிற மனிதர்களை எல்லாம் கட்டாயம் சந்தேகிக்க வைக்கும். அப்படியாப்பட்ட சூப்பர் ஹீரோவாக இல்லாத சராசரி மனிதனின் பின்னாடி நகர்கிறது ஒலிப்பதிவாளரோடு கூடிய இந்த இயக்குநர் பட்டாளம். மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் இந்த வெடுக்வெடுக்கென ஆடும் இடுப்பும்,ரத்தம் கோபளிக்கிற சண்டையும்,கண்ணீர் கொப்பளிக்கிற செண்டிமெண்டும் இல்லையென்றால் போட்ட துட்டை எடுக்கமுடியாது என்கிற இலக்கணத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சின்னச் சின்ன இயக்குநர்கள்.

பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப்போகும் அறிமுகமில்லாத பயணியாக வரும் நபர் மூன்று நான்கு ஷாட்டுகளில் விவேக்கையும் சந்தானத்தையும் ஊதித் தள்ளிவிட்டுப் போகிறான். தாம்பரத்தில் வண்டியை நிறுத்தி திருச்சி திருச்சி என்று நடத்துநர் கத்தியவுடன் எழுந்து பையைத் தூக்கிக்கொண்டு திருச்சி வந்துருச்சா என்று இறங்குகிற போது தியேட்டர் குபீரென ஆர்ப்பரிக்கிறது. சமீபத்திய எல்லாப் படங்களிலும் அழகிய படித்த மேல்தட்டுப் பெண்ணை ஒரு ரவுடி காதலிப்பதாகத்தான் கதை பண்ணினார்கள்.அது விதிவிலக்கு.ஆனால் எதார்த்தமாக தங்கள் கனவுகளுக்கு அருகில் வருகிற ஆண்கள் மேல் காதல் கொள்வதும் அதையே பரஸ்பரம் பெண்கள் மேல் கொள்வதுமாக சித்தரிக்கப்பட்ட நிஜம் இது. உறுத்தாத நிஜம்.

இந்த தமிழகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதை ஆட்டுவிக்கிற ஒரு பொருள் உண்டெனில் அது தொழில் நுட்பக்கல்லூரிகள். அங்கிருந்து வெளியேறும் எதிர்கால இந்தியா.வெளியேறவிடாமல் வாசலிலேயே வழிமறித்து அழைத்த்துக் கொண்டுபோய் அடைத்துக் கொள்ளும் கார்ப்பரேட் நிறுவணங்கள். அடைக்கப்பட்ட கதவுகளுக்குள்ளிருந்து வெளியேறி எந்த ஊடகத்தையும் சலனப்படுத்தாத பேய்க்கதைகள் மண்டிக்கிடக்கிறது அங்கே. அதைப்பற்றி இன்னும் விரிவாக எந்த ஊடகமும் சொல்லவில்லை சித்தரிக்க வில்லை.அதன் வெளிப்புற விஷயங்களை நம்மோடு லேசாய்க் கசியவிட்டுப் பகிர்ந்து கொள்கிறது இந்த திரைப்படம். அந்த இளைஞர்களின் காதலை தெய்வீக-அமரத்துவம் வாய்ந்ததாக அறிமுகப்படுத்தாமல் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பாக முன்வைத்திருப்பது ஆரோக்கியமானது.

அஞ்சலி ஜெய் இணையின் சந்திப்பும் காதலும் அடித்தள நடுத்தரவர்க்கத்தின் ஸ்பெசிமனாக்கியிருப்பதும், துபாயிலிருந்து திரும்புகிற  பிறப்பதற்குமுன் துபாய் கிளம்பிப்போய் ஆவலோடு திரும்புகிற தகப்பன், இளங்காதலர்கள்,ப்ராக்போட்டுக்கொண்டு அண்டை இருக்கைக்கெல்லாம் போய் காட்சியளிக்கிற குட்டீஸ் இந்தப் பாத்திரங்களின் செதுக்கல் எல்லாமே அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் வரவழைக்கத்தான் என்பதை இறுதிக்காட்சி சொல்லுகிறது.

நேர்க்குநேர் மோதிக்கொள்கிற பேருந்துகள் சின்னாபின்னமாகிற காட்சிதான் தமிழ் சினிமாவின் நிஜத்தொழில்நுட்பம். எனவே கதைகள் வற்றிப் போய்க்கிடந்த தமிழ்ச்சினிமாவுக்கு பலகோடிக் கதைகளில் ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுக்க புது ரத்தங்கள் கிளம்பிவிட்டது. அதை அர்த்தத்தோடு சுவீகரிக்கிறது தொழில்நுட்பம். முந்தைய திரைப் படங்களுக்குச் சொல்லியிருந்த எமது விமர்சனங்கள் இதுபோலில்லையே என்கிற ஏக்கம் மட்டும் தான். இந்த நல்லவைகளுக்காக ஒரு பாட்டையும் அதைப்பாடுகிற உதித்நாராயணனையும் மன்னித்துவிடலாம்.

.இறுதிக்காட்சியில் லாரிக்காரர் ப்ரேக்போட்டு நிறுத்தி ஓடிப்போய் இடிபாடுகளுக்குள் பயமிலாமல் இறங்குவது.செல்போனில் நூற்றி எட்டுக்கு தகவல்கொடுக்கும் அடுத்த பேருந்துப் பயணிகள், களையெடுப்பைப் போட்டுவிட்டு ஓடிவரும் உறுத்துள்ள நிஜச்சனங்கள்.சிதறுண்ட உறுப்புகள்,ரத்தம், ரத்தம் உறய்ய வைக்கிற காட்சிகள் மருத்துவமனை மரணஓலம் என அதகளப்படுத்துகிறது அந்த எங்கேயும் எப்போதும் டீம். எங்களோடு திரைப்படம் பார்க்க வந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் கடைசிக்காட்சிகளைத் தவிர்த்துவிட்டு வெளியே போய் நின்றுகொண்டார்கள்.

நாம் படைக்கிற படைப்பு லேசாக சிலிர்ப்பையாவது உண்டு பண்ணி பார்வையாளனைச் சலனப்படுத்தவேண்டும்.அப்படிச்சலனப்படுத்தி தன்னை படைப்பாளியென நிரூபித்துக்கொண்ட இயக்குநர் சரவணன் நிச்சயமாய்ப் பாராட்டுக்குறியவர்.

வாழ்த்துக்கள் ’எங்கேயும் எப்போதும்’ பட்டாளத்துக்கு.

25.9.11

வாணியின் பாடலைக் காதலித்தவன்


காலையில் வசந்த் தொலைக் காட்சியில் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப்பாடல்கேட்டதும் வெளியே பல்துலக்கிக் கொண்டிருந்தவன்  திடுதிடு வென உள்ளே ஓடிவந்தால்.வீட்டுக்காரி என்ன சொல்லுவாள். நெனப்பு வந்துருச்  சாக்கும். என்னமும் சொல்லிவிட்டுப்போகட்டும். இந்தப்பாட்டைக் கேட்கிறபோதெல்லாம் என்னிலிருந்து விலகி மிதந்து அமிழ்ந்து உள்ளே போய்விடுவேன்.

நீண்ட வெயில் சைக்கிள் பயணத்தில் திடீரென மேகம் கவிழ்ந்துகொண்டு நிழல் கூடவரும் சுகம் அலாதியானது. அப்படித்தான் எங்கிருந்தாவது இழைந்தோடும் வானிஜெயராமின் திரைப்பாடல்.எனது பதினான்மூன்றாவது வயதில் நான் காதலித்த பலவற்றில் அந்தக்குரலும் ஒன்று. எவளோ ஒருத்தியி டமிரு ந்தெனக்கொரு காதல் கடிதம் கிடைத்தது போல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலிருந்து எனக்கென இசைக்கப்பட்டது போல வாணி ஜெயராமின் குரல் வரும். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா என்கிற பாடல் என்னைக் கிறக்கியபோது மல்லிகை பற்றியும் நானறியேன். மன்னனெப்படி மயங்குவானென்பதையும் நானறியேன்.அதற்கு வாயசைக்கும் கே ஆர்.விஜயாவுக்கு  என்  அம்மா வயசிருக்கும். பாடிய வாணிஜெயரமைப் பார்த்ததில்லை. எனவே எனது கனவும் கற்பனையும் கலந்து அந்தக் குரலுக்கொரு உருவம் கொடுத்திருந்தேன்.அந்த ஓவியம், ஆம் அந்த ஓவியம் இன்னும் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கிறது என்னிடம்.

அப்புறம் இன்ரீகோ இசைத்தட்டுக்களின் உறையில் பாடகர்களை பதிவு செய்யும் வழக்கம் வந்தது.அப்போது ஒத்தையால் ஜானகிராம் சவுண்டு சர்வீசின் கண்ணன்ணனை நான் பழகிவைத்திருந்தேன். எங்கள் ஊரில் கல்யாணம் சடங்கு பொங்கல் கிறிஸ்துமஸ் வரும் போதெல்லாம் நான் அவரோடுதான் இருப்பேன்.ஒரு இசைத்தட்டு சுழன்றுமுடிக்கிற தருவாயில் அடுத்த இசைத்தட்டை எடுத்து ஒரு துணியால் துடைத்துக் கொடுக்கிற இசைச்சேவை செய்வேன்.அப்போதெல்லாம் ஊர் என் தெரிவுகளையே இசைத் தெரிவாக ஏற்றுக்கொள்ளும்.எவனாவது எம்ஜியார் சிவாஜி என்று வம்பி ழுத்தால் அவனுக்கிருக்கும் அன்றைய இரவில் கொடமானம்.சிவாஜியும் எம்ஜியாரும் கொடிகட்டப் போட்டிபோட்டுப் பறந்த காலமது.அப்போது, அவர்களுக்கு இணையான புகழுடன் இருந்த டி எம் எஸ் சுசீலாம்மாதான் அவர்களுக்கு பாடவேண்டும் என்கிற ஒரு மேட்டிமைத்தனம் இருந்தது. அப்போதெல்லாம் வாணியம்மா சிவகுமார், ஜெய்சங்கர், முத்துராமன், கமலஹாசன் போன்ற சில்லண்டி நடிகர்களின் ஜோடிகளுக்குத்தான் குரல்கொடுத்துக் கொண்டிருந்தார்.அந்தக் குரல்தான் எனக்கு கனவுக் கன்னியாக இருந்தது.

அந்தகுரலுக்கு நான் வரைந்த ஓவியத்தைப்போல யாரும் தென்படவில்லை.அதன் அருகில் வந்தவளை சின்னமணி உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருந்தான்.சின்னமணி என் நண்பணாக இருந்ததால் நான் அந்தக்காதலுக்கு தூதும் போனேன். நான் காதலித்ததாக நினைத்துக் கொண்டிருந்த  கலைச்செல்வியை என் நன்பணும் அண்ணனுமான அன்பரசன் நிஜமாகவே காதலித்தான் என்பதை அறிந்து தோற்றுப்போன காலமது. அந்த தோல்விகளை சரிக்கட்டும் விதமாக மர்பிரேடியோ பாடும் எல்லா இடங் களுக்கும் போவேன் எப்படியும் ஒன்றிரண்டு வாணியம்மாவின் பாடலை கே எஸ் ராஜா கொழும்பிலிருந்து சுழல விட நான் நடுச்சூரங்குடியிலிருந்து அதை வாங்கிக் கொள்வேன். உலகம் எல்லாம் காதலித்துக்கொண்டிருக்கும் போது நான் தனித்து விடப்பட்டதைப் போலொரு கழிவிறக்கம் வரும். அதனாலே உலகமெல்லாம் சுசீலாவையும் டி எம் எஸ்சையும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்த அந்த காலத்தில் ஒதுங்கி வாணிஜெயராமின் பாடல்கள் போதுமென ஒதுங்கிக்கொண்டேன்.

அப்போது இளையராஜா மெல்ல மெல்ல தமிழ் திரையிசைத்தளத்தில் தன்னை நிறுவிக்கொண்டிருந்தார். என்னடா சினிமாப்பாட்டு ஒரே ’ரண்டணக்காவா’ இருக்கு என்கிற விமர்சனங்கள் சொல்லுவது பேசனாக இருந்தது.அப்படியான விமர்சகர்களுக்கு சாஸ்திரிய இசைபற்றியும் தெரியாது திரை இசை பற்றியும் தெரியாது.ஆனால்  அவர்கள் எப்படியோ சிரமப்பட்டு இளையராஜாவின் ஜாதியைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். அந்த தகுதியே அவரை விமர்சனம் செய்ய போதுமானதென்று கருதியகாலம் அது. அன்னக்கிளியின் மச்சானப்பாத்தீங்களா பட்டிதொட்டிகளின் விருப்பகீதமாக மாறிப்போன மாற்றத்தைச்ச்கைக்கமுடியாத இந்த விமர்சனம் வரும் முன்னதாகவே அவர் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் தஞ்சாவூரு நாந்தாவி வந்த என்கிற பாடலில் தனது திறமையைச்சொன்னவர். ஆனாலும் பாருங்கள் அந்த அன்னகிளி படத்தில் சுசீலாம்மா ஜானகியம்மா,சுசீலாம்மா பாடியபாடல்கள் அனுபவித்துப்பாடினமாதிரி இருக்கும் டிஎம் எஸ் பாடியது மட்டும் ஊரா பிள்ளைக்கு கால்கழுவி விட்ட மாதிரி இருக்கும். இருந்துவிட்டுப்போகட்டும் அது இசையரசியல்.

அப்போதெல்லாம் தமிழ்ச்சனம் தங்கள் சுகதுக்கங்களை சினிமாவோடும் சினிமா இசையோடும் குழைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தெரு ஊர்,ஜாதி,மதம்,கோவில்,கல்யாணம்,அவன் இவர் எனப்பிரிந்து கிடக்கிற அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் குவிய வைக்கிற மகத்தான பணியைச்செய்தது சினிமா.அதற்குப் பிரதியுபகாரமாக நகுமோகு இசைத்து சில துதிப்பாடல்களோடு தங்கள் சுபகாரியங்களைத் துவங்கினார்கள். மணமகளே மணமகளே வா வா என்று இசைத்தட்டு முழங்காத கல்யாணம் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்யாணம் இல்லையென ஆகிப்போனது. அப்போது களையெடுக்கும் பெண்கள் ஆஆங் ஸ்ரீரெங்கபுரத்து சன்னாசி மகன் அழகாபுரிக்காரிக்கு தாலிகட்டிட்டாண்டி என்று கணித்துக்கொள்வார்கள்.

இப்படிப் பாடலோடும், இன்னும் சில பாடல்களோடும் தனக்கும் கல்யாணம் விடியும் எனக் கனவுகண்ட சின்னமணியின் காதல் குடும்பச் சண்டையில் முடிந்தது. கிழக்கே போகும் ரயில் சுதாகரைப்போல அவன் ஊரைவிட்டுப் போய்விட்டான்.ஆதலால் அவளுக்கும் வாணியம்மாவின் பாடல்கள் பிடித்துப் போயிருந்தது. எனக்குகிக்கிடைத்த அந்த ஏகாந்தத்தைப்பறித்துக் கொள்ள வந்தவள் போல வந்தாள். ஒருவருக்கொருவர்  சோகங்களைப் பகிர்ந்து கொள்கிற பாவனையில் ரசனைகளை,விருப்பங்களை பேசிப் பகிர்ந்து கொண்டோம். சீனிக் கிழங்கவித்து சொலகில்வைத்து பனியில் நனைய விட்டுக் காலையில் எடுத்துத் திண்ண நான் பேயாய் அலைவேன் என்பதை தெரிந்து கொண்டாள். அதைப் போலவே செய்து கொண்டுவந்து தரும்போது அதில் அடிப்பிடித்த கிழங்கை தனக்கென ஒதுக்கிக்கொண்டாள். அது இன்னமும் வாசமாக இருக்கும் என்பதை இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

ஒருவருடம் கழித்து ஒரு வெயிநாளில் பூவரசம்பூக்கள் பூக்க வந்த சின்னமணி அவளிடமும் பேசவில்லை என்னிடமும் பேசவில்லை. அவன் ஊராரிடம் அதிகம் பேசியிருந்தான். ஊர் எங்களைப்பற்றிப் பேசியிருந்தது அப்போதுதான் தெரிய வந்தது. அப்போது ஒரு சின்ன விலகல் இருந்தது வேண்டாம் இந்த வீண் பழி என இருவரும் ஒதுங்கிப்போயிருந்தோம். ஒருமாத இடைவெளி தான் பௌதிக மாற்றங்களொடு மிக நெருக்கமானது. இரண்டுநாள் சோர்வாய் இருந்தவளிடம் துளசிபிடுங்கிக்கொடுத்தேன்.மறுப்பின்றி வாங்கிக்கொண்டாள் அந்த துளசி வாடிப்போய் மறுநாள் குப்பையில் கிடந்தது கண்டு சோர்ந்து போனேன்.சொன்னேன். காரணம் சொன்னபோது நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். இது கூடத்தெரியாத மக்கு என என்தலையில் ஒரு கொட்டுக் கொட்டினாள். அந்த செல்லக் குட்டுக்கு பதிலாக நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி ஒரு வெற்று இன்லாண்ட் லட்டரை அவளுக்கு அனுப்பியிருந்தேன். ஊர் அதை நான் அவளுக்கு எழுதிய காதல் கடிதம் என திரித்து எழுதியது.  இல்லை இல்லை எனச்சொல்லிக்கொண்டே எதோ புள்ளியில் திரித்து எழுதியது நிஜமாவே மாறியது.

அப்புறமான எனது பொழுதுகளை நகர்த்தும் கடிகார முட்கள் அவளைச்சுற்றியே வட்டமடித்தது. நாங்கள் வாணியம்மாவின் எல்லாப் பாடலிலும் துள்ளல் இசையோடு காலம் கடத்தினோம். அந்த வருடம் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அந்தப்படத்தில் கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் வாணியம்மாவே பாடியிருந்தார். ஒரு முன் நிலவுநாளில் கனிநாடாரின் சோளப்பிஞ்சைக்குள் சந்தித்துக் கொண்ட நாங்கள் எதையெதையோ பேசி னோம்.  மூச்சுக்காற்றும்,மனசும்,உடம்பும் வெப்பத்தோடு கனன்று கொண்டிருக்க  நாங்கள் நல்லவர்களாக நடித்துக்கொண்டிருந்தோம். அம்மா தேடும் என்று எழுந்தவளின் கையைப் பிடித்தேன் இரண்டு கையும் வெப்ப மாகவே இருந்தது.  உதறிவிட்டு ஓடியவளிடம் மறுநாள் நேருக்கு நேர் முழிக்க முடியவில்லை. ரெண்டுபேரும் கையில் கிடைத்ததை தவறவிட்ட ஏக்கத்தில் இருந்தோம்.அதன் பிறகு அப்படியொரு நிலவு திரும்பவரவேஇல்லை. சித்திரை வெயில்தான் வந்தது. அம்மாவிடம் சண்டைபிடித்துக்கொண்டு ஊருக்கு மேற்கே இருக்கும் காந்திநாயக்கர் தோட்டத்து பம்புசெட்டு தாவரத்தில் படுத்துக்கிடந்தேன்.

திடீரென மழைபெய்தது போலக் கனவுகண்டு விழித்தேன் ஈரத் தலையிலிருந்து சொட்டும் நீரை முகத்தில் விசிரியபடி அவள் சிரித்திருந்தாள். அந்த வெயில் நாளிலிருந்து மூன்றாம் நாள் எஸ்ஜிஜே பேருந்தில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் போனேன். மல்லியை நெருங்கியதும் சிலுசிலுவெனக் காற்றடித்தது. கோடை மழை. மல்லியிலிருந்து கிளம்பும்போது கிடைத்த ஜன்னலோர இருக்கை. மழை நின்ற மண்வாசனை.முகத்தில் அடிக்கும் காற்று அவள் நினவு இப்போது என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் என்கிற வாணியம்மாவின் பாடல்.

 இப்போது சொல்லுங்கள் கேட்கிற நேரம் எல்லாம் கிறங்கவைப்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா?

என்ன அவள் பெயரையே சொல்லவில்லையா ? நான் யாரென்று சொல்லவில்லையா ?.

நினைவுகளில் மிதக்கிற எல்லோருடைய பெயரும் என் பெயர். அலைக்கழிக்கிற எல்லாப்பெயரும் அவள்பெயர்.

24.9.11

கொடியங்குளம்-தாமிரவரணி-பரமக்குடி...ஜனநாயகத் தலைகுனிவுகள்.


ராமநாதபுரத்தில் இருந்து வீடு திரும்பும்போது சக ஊழியர் ஒருவர் சீக்கிரம் பஸ்ஸப்பிடிச்சி ஊரு போயிருங்கப்பு எங்கனயாச்சும் பஸ்ஸ நிப்பாட்டிட்டா அவ்ளோதான் என்றார். பரமக்குடி அஞ்சு முக்குரோட்டில் வானுயர்ந்த ப்ளக்ஸ் பேனர் இருந்தது. மறுநாள் குருபூஜை என்பதால் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கவந்தவர்களைக் கூட நிக்காத போ என விரட்டிக் கொண்டிருந்தார்கள். உடன்வந்த பயணிகள் உச்சுக்கொட்டி தங்களது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அடுத்த நாள் கடை யிருக்காது கூட ரெண்டு பால் பாக்கெட் வாங்கிவச்சுக்கொங்க என்று அருகிலிருந்தவர் போனில் மனைவிக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அந்த உரையாடல்களோடு பரமக்குடி இயங்கிக்கொண்டிருந்தது.
சமூகம்,உலகம்,இந்தியா,ஜாதி,பரமக்குடி
ஒரு தெய்வநம்பிக்கை இல்லாதவனாக தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ’குருபூஜை’ என்கிற சொல்லை நானும் வெறுக்கிறேன். ஆனால் சுற்றிலும் நடக்கிற நடப்புகள் தான் அடுத்த வீட்டுக்காரனை ஆட்டுவிக்கிறது. நமக்குப் பிடித்துப்போனால் யப்பா கூட்டம் ஜேஜேன்னு இருக்கும் என்று கொண்டாடுவோம். பிடிக்காவிட்டால் ஒரே கசகசப்பு தொந்தரவு தாங்கமுடியாது என்று சபிப்போம். இப்படியான  சிந்தனைகள் நமது சாதிய ரத்தத்தில் ஊறிப்போனவை. பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலுக்காக நான்கைந்துமுறை அந்தப்பகுதிகளில் பயணித்து பேட்டிகளுடன் இருந்தபோது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலித்தல்லாத எல்லோரும் திரு.தொல்திருமாவளவன் அவர்களின் பெயர் சொல்லும் போது ஒருமையிலும் ஒவ்வாத முகத்துடனமே தங்களை நிரூபித்துக் கொண்டார்கள். எல்லாம் சகஜமாக இருந்ததாம் அவர் வந்துதான் சாதீய மோதல்களை உருவாக்கிவிட்டாராம். இதே கருத்தை ஒரு படிப்பறிவில்லாத கூலிக்கார ஆதிக்க சாதிக்காரர் தொடங்கி முற்றும் கற்ற கல்வியாளர் என்று சொல்லிக்கொள்கிறவர் வரை வைத்திருக்கிறார்கள். அதில் முற்போக்கு பிற்போக்கு எல்லாம் ஏதும் வித்தியாசம் இல்லை.

இந்திய சமூகத்தில் வேரோடிக் கிடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் அடிநாதமாக இருப்பது சாதி மட்டும் தான் என்பதை இனங்கண்டு அதை வேரறுக்க கிளம்பிய தலைவர்கள் எல்லோரும் பகடி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் புறந்தள்ளப் பட்டிருக்கிறார்கள் அல்லது சாதிய அடையாளம் கொடுத்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு கடவுள் அவதரிக்கவெண்டுமென்றால் கூட அவன்  மேல் சாதியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சாத்தூருக்கு அருகிலே உள்ள ஓ.மேட்டுப்பட்டி என்கிற கிராமத்தில்  பகடை காளியம்மன் கோவில் என்று இருக்கிறது. சாமி இருக்கிறதா இல்லையா என்கிற விவாதத்துக்கு முன்னாள் இந்த மனிதன் தனது சாதியை எங்கெல்லாம் கொண்டுபோய் நிறுவி வைத்திருக்கிறான். பார்த்திபனூர் நுழைவுவாயிலில் பரளை என்று ஒருகிராமம் வரும் பத்தடி தூரத்தில் முஸ்லீம்பரளை என்று இன்னொரு கிராமம் வரும். அதே போலவே கடற்கரை கிறித்தவ புண்ணியத்தலமான உவரி போகும் போது, நாடார் உவரி என்று இன்னொரு ஊர் வரும்.

இப்படித்தான் இந்த தேசம் முழுக்க நானும் அவனும் ஒன்றில்லை என்கிற மூர்க்கமான குரலின் நடப்புகள் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு சின்னச் சின்ன பங்கம் வரும்போதெல்லாம் அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாதி தனது கொடூர மரண தண்டனைத் தீர்ப்பை மிகச்சுலபமாக நிறைவேற்றிக் கொள்கிறது. இவை எதுவும் வேண்டாம், வாருங்கள் சீக்கியத்துக்கு என்று அழைத்துக் கொண்டு போனார்கள்.அங்கே சரியில்லை வாருங்கள் கிறித்தவத்துக்கு என்று  அழைக்க அங்கே ஓடினார்கள். அம்பேதகர் வந்து எல்லா வற்றையும் மறுதலித்து பௌத்த மதத்துக்கு  கூட்டிக் கொண்டு போனார். பின்னர் மீனாட்சிபுரங்களாவது நமக்கு பூரண மனித அடையாளம் தரும் என்று நம்பி ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் முன்னாடி வழிகாட்டியவர்களை அவர்களது தலைவர் களாக வரித்துக்கொண்டார்கள். ஆனால் பாருங்கள் இந்த தலித் சமூகம் தன்னை பெரும்பான்மை மக்களில் இருந்து ஒரு இம்மியளவு கூட வித்தியாசப்படுத்தாமல் அப்படியே அச்சு அசலாக அவர்களைக் நகலெடுத்துக் கொண்டுதான் வாழ்ந்து தொலைக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த குருபூஜை.

சமீபகாலங்களில் குருபூஜை கொண்டாடாத சாதிகளே இல்லையென ஆகிப்போனது. இப்போதெல்லாம் தமிழகத்தில் புதிய புதிய சுதந்திரப் போராட்ட வீரர்களும் புதிய புதிய மன்னர்களும் கொண்டாடப் பட்டுக்  கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்குக்கூட ஜாதிப்பெயிண்ட் பூசி தெருமுனையில் நிறுத்தி விட்டார்கள். அப்படிப் பூசிவிடுகின்ற கூட்டங்களில் இருந்து ஒரு போதும் தலைவர்கள் உருவாவதில்லை. அவர்களை காசுபோட்டு,லாரிபிடித்து ஒருங்கினைத்து மாநாடு நடத்தி தங்கள் தொழிலையும், கருப்புப் பணததையும் காப்பற்றிக்கொள்கிறார்கள். கூடவே சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கான தொகுதிகளை ஒதுக்கி அப்புறம் உல்லாசங்களையும் ஒதுக்கி கொள்கிற வியாபரம் பெருகிக்கிடக்கிறது.

ஆனால் இவைகளோடு தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தையும் வரலாற்றையும் எடைபோடமுடியாது. அவர் யார்,எங்கிருந்துவந்தார்,என்னசெய்தர்,எதற்ககாகக் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தியை தெரிந்துகொள்ளவேண்டும். நாம் நமது சொந்த ஜாதி அடையாளத்தைக் கழற்றி வைத்து விட்டுப் படித்தோமேயானல் ஏனைய சாதிய மாநாடுகளுக்கும் அவரது நினைவு தினத்துக்குமான வித்தியாசம் புரியும்.

இன்னும் போராட்டக்களத்தில் இருக்கும் மணிப்பூர் மக்களின் கொதிநிலையை மேலேற்றி விட்டவர் தோழர் மனோரமா தேவி.  ராணுவச் சட்டம் afspa 1958 அமலானதால் அந்த இன மக்கள் சந்தித்த இன்னல்களை ஒன்று திரட்டியவர்.ஒரு தன்னார்வத் தொண்டர்.அந்த ஒரே காரணத்துக்காக அவர் கூட்டிக்கொண்டு போய் கற்பழித்து தெருவில் வீசியெறியப்பட்டார்.அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அந்த பசுமையான மணிப்பூர் பிரதேசம் பற்றி எறிந்துகொண்டே இருக்கிறது.  இப்படித்தான் உலகமெங்கும் தியாகிகள் இனங்காணப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு போரட்டக்காரர்தான் தியாகி இமானுவேல் சேகரன் அவரைக்கொண்டாடும் செப்டம்பர் 11 ஆம்நாள்.அது குருபூஜையல்ல. ஒரு தியாகியின் நினைவுதினம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் கற்ற கல்வி, பட்டறிவு இவற்றை செலவழித்தவர். படிப்பறிவில்லாமலும் அடிமை இருட்டிலும் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் கொண்டுவந்தவர். செருப்புப் போடக்கூடாது,நல்ல ஆடைகள் அணியக் கூடாது. படிக்கக்கூடாது,எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற அடக்குமுறை முதுகுளத்தூர் பகுதிகளில் அமலில் இருந்தது. விடுதலைக்குப் பிந்திய காங்கிரஸ் ஆட்சியும்,கிறித்தவ மதமும் இவற்றிலிருந்து தலித்துகளூக்கு விடுதலை கொடுத்தது. அதனாலேயே காங்கிரசுக்கு ஓட்டளிக்கக் கூடாது என்கிற மேல் அடக்குமுறையை ஏவி விட்டார்கள்.

அடங்ககமறுத்து தலித்துக்கள் எதிர்த்து நின்றார்கள். கலவரங்கள் வெடித்தது. அந்தக் கலவரங்களுக்கு முடிவுகட்ட அரசு அமைதிப் பேச்சு வார்த்தையை ஒருங்கிணைத்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்து சிறைசென்றவரும், பின்னர் ராணுவத்தில் பணியாற்றியவரும், திரும்பிவந்து தகப்பனார் ஆரம்பித்த தேவேந்திர வேளாளர் சங்கத்தை வழிநடத்தினார் ஒருவர். அவர் இம்மானுவேல் சேகரன்.  அந்த தலித் மக்களில் இருந்து மேலெழுந்து வந்து  அவர்களுக்கான மூன்று பிரதிநிதிகளில் ஒருவராக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடந்த சமாதானக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.அதனாலேயே,அதாவது ஒரு தலித்தை தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியாத மறுநாள் 11.09.1957 ஆம் தேதி கொல்லப்படுகிறார்.

இப்படித்தான் இதே ரீதியில்தான் உலகெங்கிலும் உள்ள போராட்ட வரலாறுகள் காணக்கிடைக்கிறது. எனது சந்ததிகளுக்கு எம் பெருமைகளைச் சொல்லாதே நாம் சந்தித்த அவமானங்களைச்சொல், நாம்பட்ட வேதனைகளைச்சொல், நாம் சிந்திய ரத்தத்தைப் பற்றிச்சொல் அதிலிருந்து அவர்கள் புதிய வரலாறுகளை உருவாக்குவார்கள் என்கிற கோரிக்கைகளோடே நசுக்கப்பட்ட உலக சமூகம் காத்துக்கிடக்கிறது. இந்தியாவில் அதைச்சொல்லுகிற தலித்துகள் மட்டும் கலகக்காரர்களாக, பிரிவினைக்காரர்களாக, கலவரங்களைத் தூண்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களின் அணிதிரட்டல்கள் மூர்க்கத்தனமாக கையாளப்படுகிறது.  அவர்களின் கொண்டாட் டங்கள் மட்டும் அமைதிக்கு பங்கமென்கிற மாதிரி அரசாலும் ஊடகங்களாலும் திரித்துக் கூறப்படுகிறது. தோழர் ஜான்பாண்டியன் அப்படிச் சித்தரிக்கப் படுகிறவர்களில் ஒருவர். திரித்துக் கூறப்படுகிற ஒரு நிகழ்வு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம்.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்திய சமூகம் ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம்,சாலைமறியல் ஆகிவற்றை  நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ள அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது,கைதுசெய்கிறது. மிஞ்சி மிஞ்சிப்போனால் தடியடி நடத்தி அப்புறப்படுத்துகிறது. ராம் லீலா மைதானத்தில் கைதுசெய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட பாபா ராம்தேவுக்காக இந்தியா முழுமைக்கும் கொதித்து எழுந்ததுபோல பத்திரிகைகள் சித்தரித்தன. அன்னாஹசாரேவின் உண்ணா விரதத்துக்கு அனுமதிமறுக்கப்பட்ட போது இந்திய மேட்டிமை வாதிகள் ஜனநாயகம் செத்துவிட்டதென கூக்குரலிட்டது. நீதிமன்றம் தலையிட்டு உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது.

அவற்றையெல்லாம் நேரலையாக இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது. நடந்து முடிந்து இன்னும் ஒருமாதம் கூட ஆகவில்லை.  ஆனால் ஒரு நூற்றி ஐம்பது கிராமத்தார்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்ததற்கு துப்பாக்கி சூடு நடந்திருப்பது இந்திய சமூகத்தில் தலித் தல்லாதவர்  சந்தித்திராத  கொடுமை. சமாதானம் செய்திருக்கலாம், கைது செய்திருக்கலாம், கண்ணீர்ப் புகை வீசிக் கலைத்திருக் கலாம். அத்துணையிலும் ஆத்திரம் தீரவில்லையா  லத்திக்கம்பால் கூட அடி அடித்திருக்கலாம்.எதிரி நாட்டுப் படைகளைச் சுடுவது போல துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை. அவ்வளவு ஆத்திரம் எங்கிருந்து வந்தது. நிராயுத பாணிகளான அப்பாவி களின் உயிரைப் பறிக்க உத்தரவு  கொடுத்தது யார் ?.

ஒரு மத்திய மந்திரியைச் செருப்பாலடித்தவனைக் கூட இழுத்துக் கொண்டுபோய் சிறையில்தான்  அடைத்தார்கள். நாடுகடந்து வந்து மும்பை தாஜ்விடுதியில் கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்திய கசாப் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்க, இந்த அதிரடித்துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் தாழ்த்தப்பட்ட்வர்கள் என்பதால் மட்டுமே. இது போன்ற சாதி ஊர்வலங்களுக்கு கொடுக்கிற எச்சரிக்கையாக அரசு இதைச்செய்ததாம்.இருக்கிற அரசியல் அழுத்தங்களைத்திசைதிருப்ப அல்லது தமிழர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க எடுக்கப்பட்ட சாணக்கியத்தந்திரம் என்றெல்லாம் நோக்கர்கள் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். வேறெந்த சாதியின் ஊர்வலமும் இங்கே நடக்கவில்லையா ?எனில் இந்த தலித் மக்களின் ஏழு உயிர் என்ன சோதனைச்சாலைக்கு கொண்டு போகும் எலிகளின் உயிரைவிட மலிவானதா ?தாக்குண்டால் புழுக்கள் கூட தரைவிட்டுத்துள்ளி எழும் சாக்கடைப் புழுக்களா தலித் மக்கள் காரணமில்லாமல் நசுக்குவதற்கு.

ஒரு அரசுக்கே தலித் மக்கள் மீது கவிழ்ந்திருக்கும் குரோதத்தின் மிக வெளிப்படையான சாட்சிதான் இப்படியான படுகொலைகள். இது கொடியங்குளத்தில், தாமிரபரணியில் இப்போது பரமக்குடியில். இந்த அரசின் இமாலயத் தவறைச் சுட்டிக்காட்ட இப்போது மொத்த தமிழகமும் விரல் நீட்டியிருக்கவேண்டும்.  ஆழ்மனத்தில் தாண்டவமாடும் எக்காளத்தை முகத்தில் மறைக்க மௌனம் சாதிப்பதை நீண்ட நாள் மறைக்கமுடியாது. அதைக் கவனம் கொள்கிற பக்குவம் இங்கிருக்கும் இருபதுகோடிக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வரும்.

அதுவரை தாங்கள் சிந்திய ரத்தத்தை கணக்கெடுத்து வைத்துக்கொள்வார்கள்.

18.9.11

பெட்டிக்குள் சுருங்கிப்போன பிராயங்கள்.


அம்மையின் இடுப்பும்
அப்பன்காரனின் முதுகும்

வாசற் கதவும்
வள்ளிமுத்து தாத்தாவீட்டு
வண்டி மேக்காலும்

வானம் விரித்துப்போட்ட
படுதாவில் வரைந்த
மேகச்சித்திரங்களும்

பள்ளிக்கூடப்பெஞ்சும்
பார்வதியின் சடைக்குஞ்சமும்

மதியமழைநாளில்
காரைவீட்டு மொட்டைமாடிக்
குழாயிருந்துகொட்டும் குற்றாலமும்

வேலவர் பவுல் மாதுவென
சாயக்கிடைத்த தோள்களுமாய்
விளையாடக்கிடைத்த நாட்களை

ஈடுகட்டுமா
பொம்மைப்படங்களும்
போகோசானலும் ?

காட்ட்டுப்புழுதியில்
சுட்டுத்தின்ற
காடைமுட்டையின்
ருசியறியுமா
பீட்ஷா சகதிக்குள்
பிசைகின்ற விரல்கள்.

17.9.11

நிறுவணங்கள் எந்திரத்தாலானது. (அக்கம்பக்கம் பராக்குப்பார்த்தல்)


ஒரு ஐந்து நாட்கள் மறைமலை நகரில் நடந்த பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள நேந்தது. பசுமையான சூழலும்,ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பும் அதிக இறைச்சல் இல்லாத அமைதியும் அது அலுவலர்களுக்கானதென்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. புதிய புதிய மனிதர்கள் புதிய புதிய புரிதல்கள் அதிலேற்படும் நெருக்கம் நட்பு என இன்னொரு கதவு திறந்துவிடப்பட்டிருந்தது. இதுவரை ஏற்றி வைத்திருந்த பாரத்தை இறக்காமல் பயணிக்க சிரமாமமாக இருந்தாலும் தொடர்கிறது பயணம்.

பிஜய்குமார் ஸ்வைன் என்கிற பயிற்சியாளர் மூன்று நாட்கள் எங்களோடு இருந்தார் அறுபது வயதை நெருங்கும் அந்த ஒரியாக்கார மனிதர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் படித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி இடையில் இன்னொரு கம்பெனிக் குத்தாவி இப்போது national institute of rural development பயிற்சி நிறுவணத்தின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஒரியாவும் ஆங்கிலமும் கலந்த அவரது வார்த்தைகளில் ஒரு மிதமிஞ்சிய வேகம் இருக்கும். மிகக்கராறான நேரம் தவறாமையும், சின்னசின்ன ஒழுங்கீனங்களின் மேல் அவர் வைத்திருக்கிற துவேசமும் வியப்பானதாக இருக்கிறது.

நாட்டில் பெருகிவரும் பட்டினி வயிறுகளைக் கண்டு கொள்ளாமல் நாம் நமது   செலுத்துவோமானால் நமது சோறு பறித்துக்கொள்ளப் படும் என்று சொல்லுகிறார்.ஒரே நாள் இரண்டுவேளை சாப்பிட முடியாமல் போனால் கண் சொருகுகிறது நடை சோர்வடைகிறது, நாவரட்சியாகிறது ஆனால் பதின்மூன்று நாட்கள் பட்டினியாய்க் கிடந்த மனிதர் ஒருவர் எழுந்து கையை சுறுசுறுப்பாய் ஆட்டிக் கொண்டு பொது மக்களுக்கு போஸ் கொடுப்பது எப்படி என்கிற எள்ளல் இருக்கிறது அவரிடம். ஆனால் அதே வேளையில் இருக்கிற அத்துணை பொதுத்துறை நிறுவணங்களின் மீதும் துவேசம் வைத்திருக்கிறார்.

லாபம் ஈட்டாத நிலைமைகளுக்கு பணியாளர்கள் மட்டுமே காரணம் என்கிற ஆணித்தரமான கருத்தும் இருக்கிறது. முன்னதை மனிதாபி மானத்தோடு சேர்ந்த அறிவென்றும் பின்னதை தொழில் பக்தி என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் அப்படியே காலாற நடந்து நால்வழிசாலைக்குப் போனால்  நோக்கியா நிறுவணத்தின்  மிகநெடிய தனிச் சாலையும் பார்த்தவுடன் பயம் பிடித்து ஆட்டுகிற தொழிற்சாலையும் தூரத்தில் தெரிகிறது.அங்கிருந்து வெளியே வரும் இளம் யுவதிகளின் கழுத்தில் தொங்குகிற அடையாள அட்டையும் அவர்கள் கண்களில் தங்கி  இருக்கிற சோர்வும் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. வேலை முடித்துவருகிற களைப்பும் திருப்தியுமில்லை அது. உழைக்கிற போது வெளியேறுகிற வியர்வைமேல் வெளிக் காற்று பட்டவுடன் ஒரு பரவசம் வருமே? அதுவும் இல்லை. பிஜய்குமார் ஸ்வைனைப்போல ஒரு கடைந்தெடுத்த பயிற்சியாளனிடம் மேலாண்மை பயின்ற ஒரு மேலாளரின் மனித உழைப்பைப் பிழிந்தெடுக்கிற தந்திரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் சாயல் அது.

அப்புறம் நண்பரோடு மறைமலை நகரில் மதுபாணம் வாங்க டாஸ்மாக் கடைக்குப்போனோம்.  திரையரங்குகளில் நுழைவுச் சீட்டுக் கொடுக்கிற இடம் போல விற்பனையாளருக்கும் வாங்குபவருக்குமிடையில் ஒரு சிறு துளை மட்டுமே இருக்கிறது. முற்றிலும் கம்பி அழி பாய்ச்சப்பட்ட முகப்பில் தொங்கிக்கொண்டு, கூட்டம் அலைமோதுகிறது ஒரு கால் புட்டி மதுவாங்க. எறி திராவகத்தைத் தொண்டை வழி இறக்கி ரத்த நாளங்கள் வழியே சிறுமூளையை தள்ளாட வைக்கிற கிறக்கம் தேவையிருக்கிற மனிதர்கள் லட்சம் லட்சமாய்ப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் கூடுகிற எல்லா இடங்களையும் கட்டுப்படுத்த ஒரு குறுகலான வழி இருக்கிறது.

விருதுநகரைக் கடந்து வரும்பொழுது தமுஎசவின் மாநிலமாநாட்டு பதாகைகள் சுவரெழுத்துக்கள் கண்ணில் தோன்றி பெரும் சலனத்தை உண்டு பண்ணுகிறது. சொந்த சித்தப்பா வீட்டுக்கல்யாணம் ஊரில் நடக்க பங்கேற்கமுடியாத நானும் என் அம்மாவும் எதையெதையோ பேசிக்கொண்டு சாத்தூர் போன நாட்களின் நெருஞ்சி நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது.  தமுஎச மாநில மாநாடு குறித்து நடக்கிற சம்பாஷனைகளில் இருந்து விலகி ஒளிந்து கொள்ளவேண்டிய ஒதுக்க நிர்ப்பந்தம் இருக்கிறது. முதல் கலை இலக்கிய இரவுக்காக சாத்தூரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திறவாத கதவையெல்லாம் திறந்து சேமித்த உண்டியலின் சலசலப்பு நிழலாடுகிறது.

தீக்கதிர் செய்தியை வாசித்து தலைதூக்குகிற மனைவியின் கண்களை சந்திக்கமுடியாமல் பின்வாசலுக்கு  போக வேண்டியிருக்கிறது. திரும்பிவரும்போது அவள் கேட்கிற கேள்விக்கு ஒன்றுமில்லை எனச்சொல்லவேண்டியிருக்கிறது. வழிநெடுக சிந்திக்கிடக்கும் இந்த ஒன்றுமில்லை என்கிற வார்த்தைகள் துகள்களாகி வழி நடந்த பாதை மண்ணெங்கும் உரமேறிக் கிடக்கிறது.

11.9.11

மங்காத்தா - தமிழ்சினிமா இதுவரை அரைக்காத கதை.




மங்கம்மா சபதம், ஒளிவிளக்கு,நல்லவன் வாழ்வான் என்றெல்லாம் தலைப்பைத்தேடித்தேடிஅலைந்த தமிழ்ச்சினிமா பயபுள்ள,ஏய், டூ என்றெல்லாம் தலைப்பு வைக்க துணிந்து விட்ட நிலையில் மங்காத்தா என்கிற இந்த தலைப்பு கொஞ்சம் முற்போக்கானதாக தோற்ற மளிக்கிறது. அந்த மங்காத்தாவை ராமநாதபுரம் வேலுமணிக்கம் திரையரங்கில் பார்த்தேன். சவாலே சமாளி என்கிற படத்தைப் பார்க்க எனக்கு எழுபதுகளில் வெறும் இருவத்தைந்து காசுகள் மட்டும் செலவானது. இப்போது சர்வசாதாரணமாக நுறு ரூபாய் வாங்கிக்கொண்டு நுழைவுச் சீட்டைக் கொடுக்கிறார்கள் அது என்னமோ ஆஸ்பத்திரி அட்டை மாதிரி இருக்கிறது. இருக்கைக்கு நுழையும்போது அதைக் கவனமாக திரும்ப வாங்கிக்கொள்கிறார்கள்.வீட்டுக்கு ஒரு ஹசாரேவை வைத்து கண்கானித்தாலும் அம்பானி வகையறாக்கள் அதற்கும் செலவுகளை ஏற்றுக்கொண்டாலும் கூட எதுவும் செய்ய முடியாது என்பதை நிமிடத்துக்கு நிமிடம் உறுதிசெய்கிற இந்திய லஞ்சத்தின் இன்னொரு வடிவம் இது. ஹசாரே ...அது வேறுவகையான சினிமா.

சமீபத்தில் அதிகம் பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்த பெருமை காஞ்சனாவுக்கு அடுத்து மங்காத்தா படத்துக்குத்தான் சேரும் அவ்வளவு கூட்டம். படம் வெளியாகி எட்டுநாள் கழித்து இவ்வளவு கூட்டம் என்பது இப்போதைய தழிழ்சினிமா வரலாற்றில் அபூர்வம்தான். அதற்கான ஈர்ப்பு இந்தப்படத்தில் இருக்கிறதா என்றால் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நீண்டகாலமாக கெட்டவனைப் போரிட்டு ஜெயிக்கும் நல்லவன் கதைகளாகப் பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு முள்ளும் மலரும்,பொல்லாதவன், இப்படியான நெகடிவ் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தபோது ஏற்பட்ட ஈர்ர்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஒரே அருவா,கிராமம் வெட்டுக்குத்து இந்த ரத்தவாடைக்குள் ரெண்டு குத்துப்பாட்டு,ஒரு டூயட் பாட்டு பாத்துப்பாத்து சுருண்டுபோன மக்களுக்கு விநாயக் மகாதேவன் பாத்திரம் தெம்பான அறிமுகம். ஒரு இருபது வருடங்கள் இந்த சினிமவுக்குள் கிடந்து முதிர்ச்சி அடைந்த ஒரு நடிகனுக்கு கிடைத்த லட்டு மாதிரியான பாத்திரம். இதுவரைக்கும் தமிழ்சினிமா உலகில் பேசப்படாத கிரிக்கெட் சூதாட்டம் இதில் பேசப்படுகிறது.

யூகிக்கமுடியாத கதைத்திருப்பங்களும் வேகம் வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு சேர்க்கப்படும் கட்சிகளும் இல்லாத இந்த ரகம் புதுசு.இடைவேளைவரை படம் மெல்ல நகர்கிறதென்கிற குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துகிற இயல்புக்காட்சிகள் நிறைய்ய இருக்கிறது. தூங்குவது குளிப்பது இனிமேல் குடிக்கக்கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது நிச்சயமாக அதிகம் சோர்வைத்தரும் காட்சிகள் தான்.அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பின்னணி இசையே இருக்காது எதோ கல்யாண வீடியோ பார்த்த  உணர்வு வரும். ஆனால் அந்த மந்தக் காட்சிகள் தான் இந்தப்படத்தின் முடிவுக் காட்சிகளுக்கு கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது. மேக்கப் இல்லாத நரைத்த முடியோடு அஜித். தமிழ்ச் சினிமாவுக்கு அச்சாணியாக இருக்கிற காதல் சரக்கை உலகத்துக்கே அச்சாணி என்று பினாத்துகிற உருகுதல் இல்லாதது. விவேக்,சந்தாணம் போன்ற ஹைகிளாஸ் கமெடியன்கள் வைத்துக் கொள்ளாதது. ஆகக்சிறந்த எழுத்தாளர்கள் என்கிறவர்களை எழுதச் சொல்லி ஆகக் குப்பையான, ஆக பிற்போக்குத் தனமான, ஆக சாதிய திமிர்நிறைந்த சிந்தனைகளை பரப்புதல் என்று செக்குமாட்டு தடத்திலிருந்து கொஞ்சம் விலக எத்தனித்திருக்கிற முயற்சி இது.

த்ரிஷாவும் அஜித்தும் மீண்டும் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு.கல்யாணமாகி புதுத்தாலியின் நிறம் மங்காமல் இருக்கும் அஞ்சலிக் காகவாவது வைபவ் உயிரோடு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை.வேறு எவனாவது புதுசா ஒரு வில்லன் வந்து ஊடே புகுந்துகொள்ள த்ரிஷாவின் தகப்பனாரான ஜெயப்ரகாசும் அஜித்தும் கைகோர்த்துக்கொண்டு துவம்சம் செய்வதற்கான ஒரு தமிழ் ஆக்சன் சினிமா  இடை வெளியிருக்குமே அதற்குள்ளும் கதை ஊடுறுவவில்லை.  

ஆக இது வழக்கமாக அரைத்த மாவு இல்லை. என்றாலும் செறிவூட்டம் மிக்க கதையும் பாத்திரத்தேர்வும் இதில் இல்லை. யுவனின் பின்னணி இசை அருமை என்று பல பல விமர்சனங்கள் இட்டுக்கட்டினாலும் வத்தியக்கருவிகளை மூடிவைத்து விட்டு நடிக்க வாய்ப் பளிக்கிற உணர்வுகளை அதிகப்படுத்துகிற மௌனமும், புல்லாங்குழல், தவில், கஞ்சிரா, உடுக்கு, எவர்சில்வர் பானை, கோழிக்குஞ்சு அடங்கி அழவைக்கிற தாலாட்டு என அள்ளி அள்ளி கொடுத்த இளையராஜாவைத் தாண்டி இதுவரையாரும் முயற்சிக்க வில்லை. ராமராஜனா, மோகனா நீங்க எப்படிவேண்டுமானலும் சொதப்புங்கள்.ஆனால் வாழ்நாளெல்லாம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இதமான பாடல்கள் கிடைக்கும் என்று நம்பித் தியேட்டருக்குப் போகவைத்த இசை இப்போது கிடைப்பதில்லை. ஒரு வேளை இது தலைமுறை இடை வெளி யாகக் கூட இருக்கலாம். ஆனால் இசை வெளியென்பது நினைவுகளை இழுத்துக்கொண்டு அலைவது. அப்படி இழுக்கிற ஒரு பாடல் கூட இந்தப்படத்தில் இல்லை.

இவ்வளவு சீரியசான கதைக்குள் வலிந்து புகுத்தப்பட்ட ப்ரேம்ஜி அநாவசிய பாத்திரம். காமெடி கட்டாயம் வைத்தால்தான் படம் ஓடும் என்கிற மூட நம்பிக்கையும் எப்படியாவது தலையைக் காண்பிக்க வைக்கவேண்டும் என்கிற சகோதர பாசமும் அநாவசியம். ப்ரேம்ஜி க்கு கிடைத்திருக்கிற மேடை கிடைத் தற்கரிய மேடை அதை உபயோகப்படுத்த நிறைய்ய யோசிக்க வேண்டும் மெனெக்கெடவேண்டும். அதே போல கங்கை அமரனுக்கு கிடைத்த  கரகாட்டக் காரன் மாதிரி வெங்கட்பிரபுவுக்கு இந்த மங்காத்தா. தமிழ்ச்சினிமாவுக்குள் ஒரு இடத்தை நிறுவி இருக்கிறது அதைக்கவனத்துடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

5.9.11

வற்றிய குளத்தில் கிணறு தோண்டும் கைகள்.


கேட்கலாம் என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கேள்வி
பகிர்ந்து கொள்ள நினைவில் வைத்திருந்த ரயில் பயண அணுபவம்
பகிர்ந்துகொள்ளமுடியாமல் யாருக்கோ விற்றுப்போன மதுப்புட்டி

தோளில் சுற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்த கைகள்
வெளிநாட்டு சிகெரெட்டைப்பார்க்கும் பொழுது கிளர்ந்தெழுந்த ஞாபகம்
எல்லாமே எழுதமுடியாத கவிதை போல பதுங்கிக்கிடக்கிறது

யாரோ அருகில் வந்து எடுத்துக்கொடுக்கிறார்கள்
உனது வியர்வை வாடையின் சாயலையும்
முதல்வரி எழுத கொஞ்சம் கவிதை நினைவுகளையும்.

4.9.11

மனதில் கேடுள்ள மனிதனை எளிதில் பழக்கமுடியாது.


சில நேரம் விதி என்பது கூட உண்டோ என்கிற மாதிரி நிகழ்சிகள் அமைந்துவிடுகிறது. ஒரே சுற்றுச்சுவர் இருக்கும் ஜெகன் மினி ஜெகன் தியேட்டரில் காஞ்சனா,ரௌத்திரம் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டிருந்தது. காஞ்சனாவில் நகைச்சுவையும் புதிதாக திருநங்கையர் குறித்த மாறுபட்ட தமிழ்சினிமா அனுகுமுறையும் இருப்பதாக நண்பர்கள் சொல்லியதால் அந்தப்படம் பார்க்கப்போய், தவறுதலாக ’ரௌத்திரம்’ டிக்கெட் எடுத்து உள்ளே போக நேர்ந்தது. விதி வலியது. கொடுத்த எழுபது ரூபாய்க்கு படம் பார்த்து தீர்ப்பது என்கிற முடிவு. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது போலாகியது. ரௌத்திரம் என்பதற்கு பொத்துக்கொண்டு வருவது என்று பதவுறை எழுதியிருக்கிறார் உயர்திரு கோகுல் என்கிற இயக்குனர். சமீபமாக பார்க்கநேர்ந்த இப்படிக்கதைகள் மிகத்துள்ளியமாக ஒரு குறிப்பிட்ட மக்களை குரூர எதிரியாகச் சித்தரிக்கிறது. அப்படி சுட்டிக் காட்டப்படும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அதற்கு எதிராக எந்த சலலசலப்பும் எழுவது இல்லை. பெரும்பாண்மை மக்களை பெருமைப்படுத்தி கதை புனையப்படுவதால் அவர்களும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கதாநாயகன் நடுத்தர குடும்பத்து உயர் ஜாதிக்காரனாக சித்தரிக்கப்படுகிறான்.போகட்டும்.அவன் நடுத்தெருவில் எதிரிகள் என்று சொல்லப் படுகிற ’கருப்பு நிற ’ ரவுடிகளை துவம்சம் செய்கிறான். வில்லன் வில்லனின் கையாட்கள்,அவர்களுக்கு உதவிசெய்கிற சட்டமன்ற உறுப்பினர் எல்லாமே கலப்படமில்லாத கருப்புநிறத்தில் இருப்பது போல தேர்ந்துகொண்டிருப்பது ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரிகிறது. அந்தக்கதையின் தர்க்கத்தை நியாயப்படுத்த பாலாவின் படத்திலிருந்து ராஜ்கிரன் பேசுகிற வசனமாக சாமி நேர வராது அநியாயத்தை தட்டிக்கேட்கிற ஓவ்வொருத்தனும் சாமி தான் என்கிற வசனத்தை கோர்க்கிறார். அப்புறம் நடுத்தெருவில் இழுத்துக்கொண்டு போகும் பெண்ணைக் காப்பாற்றி அவள் அப்பனிடம் ஒப்படைக்கிறான். அவர் பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாத நான் உன்னத்தான் சாமியாக்கும்பிடுகிறேன் என்று சொல்ல பின்னணியில்  வேத ஊச்சாடனங்கள் ஒலிக்க  பெருமாள் சிலை உயர்ந்து,அவர் உலாத் துவங்குகிறார்.

எல்லாமும் சரிதான். தவறு செய்கிறவன் எவனாயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் முக்கியமான ரவுடியும் அவன் சேரித் தெருவும்,அவன் அணிந்திருக்கும் சிலுவைக்குறியும் க்ளோசப்பில் காட்டுவதால் தப்பு செய்கிறவன் எல்லோரும் விளிம்பு நிலைக்காரன் என்கிற கேடுகெட்ட சினிமாப் புத்தியை பொதுவாக்க முயல்கிறார் திருவாளர் கோகுல். இது மாதிரியான காட்சியமைப்புகள் கிட்டத்தட்ட தமிழ் (அகோர)ஆக்க்ஷன் படங்களின் பொது விதி என்றே ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் இருந்து திருடப்பட்ட இப்படிப்பட்ட காட்சி களை தமிழ் மயப்படுத்துகிற பாவனையில் அப்பாவி விளிம்புநிலை மனிதர்களை எதிரியாக்குகிற படங்களை திருப்பாச்சி,நான் மகான் அல்ல, போன்றவற்றை குறிப்பிட்டு வரிசைப்படுத்தலாம். தமிழ்நாட்டின் நிவியல்புகளையும், சாதிய அடுக்குகளையும், அவற்றுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகளையும், அங்கு நடந்தேறுகிற பயங்கரங்களையும் அறியாத வெறும் தொழில்நுட்ப மொன்னைகள் தான் தங்களைப் படப் பாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளுதுகள். இப்படிகதைகள் தயாரிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரம்மாண்டச் செலவில் உருவாகி விற்றுப்போவதும் விநோதமில்லை. ஒரு இயக்குநர் குறைந்த பட்ச சமூக சிந்தனையில்லாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான் இங்கே விநோதமாக இருக்கிறது.

ஒரு கால் நூற்றாண்டுகாலம் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப்பறந்த திருவாளர் எம்ஜியாரை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவர்  திரைப் படங்கள் எல்லாமே நலிந்த மக்களின் பக்கமும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் மட்டுமே இருக்கும். தவறியும் அதில் ஜாதிய அடையாமும் ஜாதிய துவேசமும் இருக்கது. மதங்களுக்கிடையிலான முரண்களில் குளிர்காய்கிற சில்லறைத்தனமும் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டு பிடிக்கமுடியாது. அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே அவர் ஜெயித்தார். சிலநேரங்களில் ஆரம்பப்பாடசாலைச் சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி பாட்டும் வசனமும்,நடிப்பும் கூட இருக்கும்.அப்போதெல்லாம் நான்  அதைகேலி செய்திருக்கிறேன்.  ஆனால் இப்போதெல்லாம் அந்தக்குள்ள உருவம் கொண்ட கலைஞனின் விசாலமான மனது விஸ்வரூபமாகத் தெரிகிறது. இப்போதிருக்கிற கிராபிக்ஸ்,உயர்தொழில்நுட்பம் எல்லாவற்றையும் காலில்போட்டு மிதித்தபடி.

1.9.11

எனக்கு இல்லையா கல்வி -ஆவணப்படம்.


மேகம் இருண்டு சிலுசிலுவெனக் காற்று வருடி தட்டாம்பூச்சிகள் பறக்கிற போது அந்த மழையை ரசிப்பதைவிட அப்போது டமடமவென கேட்கும் இடியோசை வரும்.அப்போது நமறியாமலே 'அச்சுனம்பேர் பத்து' என்று நமது வாய் முனுமுனுக்கும். இடிவிழும் போது அப்படிச் சொல்லவேண்டுமென அம்மா சொன்னபோது எனக்கிருந்த கேள்விகள் எப்படி இருண்டுபோனதோ,அதைவிட அடர்த்தியாய் என் அம்மாவுக்கும் இருண்டு கிடந்திருக்கும்.

வழி வழியாய் கவிழ்ந்து கிடந்த இந்த இருட்டிலிருந்து வெளிவர எனக்கு கிழித்துப்போட்ட தீக்குச்சியாய் அந்த ரத்தினா ஆரம்பப் பாடசாலையும் அது துவக்கி வைத்த கல்வியும் இருந்தது. ஆனால் அந்தக் கிராமத்தில் முளைத்த ஏனையோருக்கும் இது கிடைத்ததா என்றால், இல்லை. தொண்ணூறுக்கும் மேற்பட்ட விழுக்காடு சனம் இதுதான்நமக்கு விதிக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சந்தோசமாய் கிளம்பி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த உலகம் எல்லோருக்கும் சமமானது என்கிற அறிவின் சாவி கல்வி. அதைப் பறிகொடுத்து விட்டு பறிகொடுக்கப்பட்டதையும் அறியாது வாழ்ந்துகொண்டிருக்கும் சனங்கள் கோடிகோடியாய் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி விசனப்பட இந்த பரந்த உலகில் வெகு சிலரே முன்வருகிறார்கள். அப்படி முன்வருகிற வாதங்களின் தொகுப்புதான் எனக்கு இல்லையா கல்வி என்கிற ஆவணப்படம்.

இங்கிருக்கிற நூறுகோடி மக்களுக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அப்படிக்கொடுக்கிற அடிப்படைத்தேவைகள் சரியான அளவிலும்  முறையிலும் கொடுக்கப்படுகிறதா என்கிற கவனிப்பும் அரசின் கடமையாகிறது.
இவையாவும் கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் கடைக்கோடி மனிதர்களைத் தேடி தேடிப்பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படக் குழு . சென்னை ஜெயின் பள்ளி பத்மாஷேசாத்ரி மதுரை வேலம்மாள் பள்ளிகளுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருக்கிற கார்களை மட்டுமே பார்த்துப் பூரித்துப்போன மனிதர்களுக்கு மேற்கூரையில்லாத கிராமத்து ஆரம்பப் பாடசாலைகள் கட்டாயம் அதிர்ச்சியூட்டும். பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்யக் கனவுகண்ட பாரதியின் தேசத்தின் பள்ளிக் கூடங்கள் இரவு நேரம் சட்டவிரோத செயல்களும் சட்டபூர்வ மதுவருந்தும் செயல்களும்தான்  நடக்கிறதென்கிற பதிவும் பார்வையாளர்களைக் கலங்கடிக்கும்.

அதே போல பத்துக் கிலோமீட்டர்கள் மலைப்பாதைவழியே நடந்துபோய் கல்வி கற்கத்துடிக்கிற சிறார்களின் பின்னாடி தொடர்கிற காமிராவுக்கு ஒரு சலாம் போடவேண்டும்.  தர்மபுரி பகுதியில் அம்மலை மக்களின் அன்றாட வாழ்க்கையே சவாலாக இருக்கிறது. அவர்களின் வாழ்வு, மொழி, தேவைகளெல்லாம் வேறு வேறாயிருக்கிறது. அவர்களுக்கு கல்வி என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது சமச்சீர்கல்வி என்பது விவாதத்துக்கு வெளியே தள்ளப்படுகிறது. இதைக் கவனப்படுத்துகிற கல்வி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வரிசையாய் நம்மோடு பேசுகிறார்கள்.

முன்னாள் துனைவேந்தர் வசந்திதேவி,பேரா.ச.மாடசாமி,திரு.ஹென்றிதிபேன்,வழக்கறிஞர் எழுத்தாளர்ச.பாலமுருகன், பவா,அழகிய பெரியவன்,சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.லதா,குணசேகரன்,தடாரஹீம், மாசானி, ஆர்.லட்சுமி, ரா.முனியம்மாள் என்று பலதரப்பு சிந்தனையாளர்களின் வாதங்களைத் திரட்டியிருக்கிறது இந்த ஆவணப்படம். அவர்கள் தரும் தகவல்களும் தரவுகளும் வெளியுலகில் கிடைக்காத அரியவை. பாடத்திட்டங்களின் கடினம் தான் மாணவர்களை விரட்டி அடித்து மீண்டும் அவர்களை உடல் உழைப்பாளர்களாக ரவுடிகளாக விளிம்புமனிதர்களாக மாற்றுகிறது என்கிற பேரா ச.மாடசாமியின் வாதத்தை பொதுசனம் வேறு எங்குசென்று கேட்கமுடியும் ?  

கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள்,பாடத்திட்டம்,இப்படி தமிழ்க்கல்விச்சூழலை பகுதி பகுதியாக ஆவணப்படுத்தியிருக்கிறது ’எனக்கு இல்லையா கல்வி’. அவையாவற்றையும் சொல்லவேண்டுமானால்.இந்தக்கவிதைமாதிரி ஆகிவிடும்

’படித்தவற்றில் பிடித்தவற்றை
அடிக்கோடிட்டேன்
முடித்துப்பார்க்கையில்
புத்தகம் முழுக்க அடிக்கோடு’.

ஆம்.நாம் கேள்விப்படாத ஹண்டர் கமிட்டி,எந்த வரலாற்றிலும் இடம்பெறாத அரசியல் உள்விவகாரங்கள் என இந்தப் படம் நெடுக தமிழகம் அறிந்துகொள்வதற்கான கல்விகுறித்த சேதிகள் அதிகம் இருக்கிறது. ஆனாலும் அந்த வகுப்பறை வன்முறை என்கிற பகுதி இந்த ஆவணப்படத்தின் செரிவூட்டப்பட்ட பகுதி. சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்கும் துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ரா.முனியம்மாள் என்கிற பத்து வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இந்த தேசத்தின் மனசாட்சிமேல் அடிக்கிற ஓயாதசாட்டை அடி.
யாருக்காவது இன்னும் இருக்கிறதா சாதி என்கிற சந்தேகம் இருந்தால் அவள் கண்களில் இருக்கும் சோகம் பதிலாக இருக்கும்.

மாதா பிதா குரு என்று எழுத்தறிவிக்கிற ஆசிரியர்களை வழிபாட்டுக்கு உரியவர்களின் வரிசையில் மூன்றாவது நிறுத்தியிருக்கிறது முன்னோர் சொல். ஆனால் சாதி வெறி நீங்காத அந்த ஆசிரியர்களை, அதுவும் பெண் ஆசிரியர்களை எங்கே நிறுத்தி வைப்பதெனத் தெரியவில்லை. அதற்கு அழகிய பெரியவன் சொல்லுகிற அம்பேத்காரின் வார்த்தைகள் மட்டுமே சரியாக இருக்கும். பள்ளிப் பிள்ளைகளை குழுவாக பிரித்து விளையாட்டு,சாப்பாடு,கொடியேற்றுதல் என்று பொறுப்புக்கொடுக்கிற ஆசிரியர்கள் சுகாதாரப்பிரிவை மட்டும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு ஒதுக்கி வைப்பது என்கிற நடைமுறையை read அமைப்பின் ஆய்வு சொல்லுகிறது. இந்த சாட்சியங்கள் இளகிய மனதுள்ள எல்லோர் கண்ணிலும் நீர் தருவிக்கிற சாட்சியங்கள்.

அறிவும் உணர்வும் நெடுநாள் அலைக்கழிக்கும் சமூக சோகமுமாக எனக்கு இல்லையா கல்வி ஆவணப்படம் நமோடு கூடவரும்.
அதனோடே ப்ரபாகரின் இசையும், இரா. தனிக்கொடியின் பாடலும், அந்த சிறார்களின் குரலுமாக அந்தப்பாடலும் நம்மோடு கூடவரும்.
துடைத்துப்போடப்பட்ட கண்ணாடி வழித்தெரியும் பிம்பங்களாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிற காமிரா
அதை ஒருங்கிணைத்த படக்கோர்வை. துள்ளியமான ஒலிச்சேர்க்கை என இந்த ஆவணப்படத்தில் தனது திறமையான செய்நேத்திய  நிரூபித்திருக்கிறார் எங்கள் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.