31.12.09

முதல் புதுவருடமும் என் தேவதைத்தாயும்.


எட்டாம் பண்டியலு என்று சொல்லிக்கொண்டுதான் எனக்கு இந்த புதுவருடம் முதன் முதலில் அறிமுகமானது.அந்த வேதக்கோயிலில் குழாய் ரேடியோ அலறலுக்கு ஆட்டம்போடப்போய் பீடம் முழுக்க மெழுகுவர்த்தி எரிய அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே தங்கிவிட்டேன். சாமத்தில் பூஜை நடக்கும் போது பீடத்துப்பக்கம் காலை நீட்டித்தூங்கிய என்னை எழுப்பிவிட்டார்கள். வெள்ளை அங்கியில் அவர் ஜபம் சொல்லிக்கொண்டிருந்தார்.எனக்கு பாட்டி சொன்ன பலிகொடுக்கும் கதைகள் ஞாபகத்துக்கு வந்து அழுதுவிட்டேன்.கடுப்பான பாதிரியார் பூஜையை நிறுத்திவிட்டார்.எங்கோ சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த என் தகப்பனாருக்குச் சொல்ல, அவர் ஓடிவந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.

எட்டுப்படிக்கும்போது ஊருக்கு பிரச்சார்த்துக்கு வந்த அந்த சிஸ்டர்தான் என்னைக் கூப்பிட்டு பீடத்தை அலங்கரிக்கச்சொனார். அந்த வார்த்தை கன்களுக்குள் கிடந்த கனிவு.என் தலைமுடியைக்கோதிவிட்ட விரல்களில் சிக்கிக்கொண்டு அவர்களின் பின்னாலே அலைந்தேன்.ஊரிலிருந்து சாத்தூர் எட்டு கிலோமீட்டர் அவ்வளவு தூரம் அவர்களோடு நடந்து போய் கான்வெண்ட் வாசலில் விட்டுவிட்டு வருவேன்.அந்தளவுக்கு கிறுக்குச் செய்தது அவர்களின் அன்பு.குழிப்பணியாரம் பிடிக்கும் என்று சொன்ன அவர்களுக்காக என் அம்மாவிடம் மன்றாடி தினையில் செய்த பணியாரம் கொண்டுபோய்க் கொடுத்தேன். வாங்கிக்கையில் வைத்திருந்த அவர்களின் முகத்தில் தெரித்த வெளிச்சம் எந்த தேவதூதர்களுக்கும் கிடைக்காதது.

காட்டு வழியே நடக்கும் போது வாடா என் தங்கமகனே என்று என் தோழில் கைபோட்டபடியே நெடுந்தூரம் நடந்து வரும். அப்போது அந்த வெள்ளை அங்கியில் படிந்திரிருக்கும் டெட் சோப்பின் வாசத்தோடு நான் கண்மூடி நடப்பேன்.ஒரு வேலிப்புதரில் நின்று நீ முன்னாள் நட என்று சொன்னபோது விளங்கவில்லை.நான் அவர்களின் காவலன் என்கிற கர்வத்தில் நகரவில்லை. லூசுப்பயலே போடா யூரின் போகனும் என்று சொன்னபிறகுதான்.
தேவதைகளும் மனுஷிகள் என்பது புரிய ஆரம்பித்தது அந்தச் சின்னவயசில்.ஒரு முறை சிஸ்டர் நீங்க சடைபோடுவீங்களா என்று கேட்டதற்கு பதில் சொல்ல ஒரு பெரிய மௌன இடைவெளி விட்டதை நிறைய்ய காலங்கள் கழித்து படம் பிடித்து வைத்துக்கொண்டேன்.

அவர்கள் தான் முதன் முதலில் புது வருடத்துக்கு கான்வெண்டுக்கு வா நான் உனக்கு புத்தாண்டுப்பரிசு தருவேனென்று சொன்னார்கள்.அன்று வாங்க முடியாமல் போன அந்த சிகப்பு நிற நேவி பேனாவின் எழுதப்படாத
மையில் என்னைபெறாத அந்த அன்னையின் நினைவுகள் உறைந்துகிடக்கிறது. அது  என்னை அலைக்கழிக்கிறது.
அம்மா நீ எங்கிருக்கிறாய்.

30.12.09

தேடு கல்வியில்லாத ஊரை

அவள் பெயர் லட்சுமி,வயது பதினாறு இருக்கும். எழுபது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றதற்கான சிறப்பு உதவித்தொகை கிடைத்திருந்தது அவளுக்கு. அந்த காசோலையை மாற்ற எங்கள் வங்கிக்கு வந்தாள்.கணிதத்திலும்
பௌதிகத்திலும் தொண்ணூறு சதவீத மதிப்பெண் வாங்கியிருந்தாள். மிகப்பெருமையாக இருந்தது. ஊக்கம் சொன்னேன். நல்ல கல்லூரியில் சேர் எதாவது ஆலோசனை சின்னச்சின்ன உதவிகேள் செய்யலாம் என்றேன் எல்லாவற்றுக்கும் மௌனத்தை அல்லது தலையாட்டுவதைப் பதிலாக்கி விட்டுப் போனாள். பணம் வந்ததும் எடுத்து அதை நிலையான வைப்புத்தொகையில் போடச்சொன்னாள் ஏன் என்று கேட்டதற்கு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரை வைத்திருந்தாள்.

கூட வந்த ஒரு அம்மாவிடம் கேட்டதற்கு அப்பா படுத்த படுக்கை,அம்மா தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்க்கிறாள்,வீடு வாசல் இல்லாத கூலிச்சனங்கள் என்று சொல்லிவிட்டுப்போனது. மீண்டும் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். எங்கப்பாவ விட எனக்கு படிப்பு ஒண்ணும் பெரிசில்லை என்று சப்பென அறைந்து விட்டுப்போனாள்.அந்த அதிர்ர்சியிலிருந்து மீள்வதற்கு ஒரு ஆறு மத அவகாசம் கூடக்கொடுக்காமல் மீண்டும் ஒரு அதிர்ச்சியைகொண்டு வந்தாள். இப்போது அவளோடு ஒரு பதினெட்டு வயது வாலிபன்.அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு. 

இது நமது கண்களுக்குத் தெரிந்தவை தெரியாத கதைகளோடு சாயங்காலம் பருத்தியை அடைந்த மாதிரி அடைத்துக் கொண்டு போகும் தீப்பெட்டி ஆபீஸ் வாகனத்துக்குள்ளிருந்து கழுத்தை நீட்டிக் கல்லூரிகளையும் அங்கு சுடிதாரோடு நிற்கும் பொறாமைகளையும் எறித்தபடிப் போகிறது நூற்றுக் கணக்கான அக்கினிக் குஞ்சுகளின் கண்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் இந்த பிரச்சினை அதிகரித்துகொண்டே இருக்கிறது. சாத்தூரில் ஆறு தமிழ் வழிப் பள்ளிகளும் ( அதில் இரண்டு பெண்களுக்கானது) இரண்டு ஆங்கில வழிப்பள்ளிகளும் இருக்கிறது. சுற்றியிருக்கிற கிரமத்துக் குழந்தைகள் குறிப்பாக வறிய குடும்பத்துப் பெண்குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு சேர்வதென்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது.ஆம்  சென்ற வருடம் மட்டும் தகுதிகாண் தேர்வில் தோற்று விட்டதாகக் கூறி  தேர்வெழுதிய நூற்றி எழுபது பிள்ளைகளில் நூற்றி ஐம்பது பிள்ளைகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி சிபாரிசுக்கு அலைந்து முட்டிமோதித் திகைத்து நிற்கிறார்கள்.

பள்ளிகளில் நல்ல ரிசல்ட் வேண்டும்,இதற்குமேல் இட வசதியில்லை,ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனும் பதில் வருகிறது.இந்தத் தடை தாண்டிப் படிக்க நினைக்கும் பிள்ளைகள் கதி. தீப்பெட்டி,பட்டாசு ஆலைகளில் கிடைக்கிற குடும்ப வருமாணத்தில் படிக்க வைப்பது பெரும்பாடு. அதுவும் சாத்தூருக்கு பேருந்தில் அனுப்பிப்படிக்க வைப்பது அதைவிடப் பெரும்பாடு. இதில் இடறி விட்டால் மீண்டும் தீப்பெட்டி ஆபீஸ் எனும் அந்தப்பாழுங் கிணறு வாயைப்பிளந்து அவர்களை ஏந்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது. பத்தாயிரம் இருபதாயிரம் முன்பணத்தோடு.

29.12.09

இன்னொரு கோயிலும், இன்னொரு தாயும்.

திருச்செந்தூரில் இறங்கும்போது கடல் காற்று சில்லென்று முகத்திலடித்தது. நிறைய சலிச்ச வாசம் வீசுகிற காற்றில் மீன்களின் வாசமும் அடங்கியிருந்தது. எதிர்ப்படுகிற பேருந்தின் பெயர்ப் பலகையினையெல்லாம் உற்றுப்
பார்த்தான்.பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்த.அவன் அடுத்த பஸ் வர இன்னும் அரைமணி   இருக்கு  வா  தம்மடிப்போம் என்று சொன்னான். யாரோ  உற்றுப்பார்த்து விட்டுபோனார்கள். இந்தப்பெட்டிக்கடையில தான் சிகரெட் வாங்கி ஒளிஞ்சு ஒளிஞ்சு தம்மடிப்போம். அப்ப ரஞ்சன் ஒரு சிகரெட் அடிச்சுட்டு நாலு அசோகாபாக்குப் போடுவான். அவங்க க்றிச்டியன்ஸ், ரஞ்சன் தெரியும்லா. இந்தப் பஸ்டாண்ட், கடக்கரை, ரைல்வே ஸ்டேசன், எல்லாம் எங்க ஆளுகைìகுள் இருந்த பகுதிகள்.அவன் கண்ணுக்குள் எண்பதுகளின் கல்லூரிக்காலம் மினுங்கியது.   ஒரு வலத்தியான பெரியவர் 'எப்ப வந்தெ எப்பிடிப்பூ இருக்கா, நேத்தே வருவேன்னு அம்மா வாசல்லயே உக்காந்திருந்தாங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார். முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.


இன்னும்  ஒரு மணி நேரத்தில்   அம்மவைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு வந்ததும் தைப்பொங்கலை, பங்குனிப்பொங்கலை, எதிர்னோக்குகிற அவஸ்தை இருந்தது. கூடவே இன்னொரு சஞ்சலமும் இருந்தது. அதை அப்புறம் சொல்லலாம்.  பால்ய கால நன்பண் இங்க தான் இருக்கான் வா பாப்பொம்'' என்று சொல்லி விட்டு முன்னல் நடந்தான். கோவில் வாசல் போகிற அலங்கார வலைவுக்கு அருகில் சைக்கில் ரிக்சாக்கள் நின்றிருந்த பகுதியில் நின்றான். ரெண்டு மூணு பேர் வந்து கோயிலுக்கா என்று கேட்டார்கள் இல்லை என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டான். வீடு ரொம்ப தூரமா என்று கேட்டேன் இல்ல என்று சொல்லிவிட்டு சிரித்தான்.செரி வா பஸ் வந்துருக்கும் திரும்ப நடந்தவேகத்துக்கு ஈடு கொடுக்க நான் ஓடும்படி ஆனது அவன் ரொம்ப உயரம் நான் கொஞ்சம் கம்மி. நகரப்பேருந்தில் மொத்தம் இருபது நபர்கள் மட்டும் இருந்தார்கள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டோ ம். இரண்டு கிலோ மீட்டர் கடந்தவுடன் வாழையும் நெல்லும் சாலையின் இரண்டு புறமும் பொறாமைய்யொடு செழித்துக்கிடந்தது.


நெல்வயல்களைக் கடந்து வந்த காற்று பசிய வாசத்தோடு வந்தது. வாசங்கள் உள்ளூர நினைவுகளை எழுப்பிவிடும். வயல் காற்று வீசும் போதெல்லாம், செல்லிமுத்துநாடார் கிணற்றில் மல்லாக்கமிதந்த ரத்தினத்தாயென்னும் பேரழகின் உருவமும், அந்தச்சாவில், சாதீய வன்மத்தின் கொடூரம் முதன்முதலாய்  உணர்ந்த  ஞாபகங்கள் தவிர்க்கமுடியாது வந்துசேரும். எப்போதுமே இந்தக்காற்று இப்படித்தான் அது பூக்களுக்கென்றும், பீயாங் காட்டுக்கென்றும் விருப்பு வெறுப்பு சுமந்து வீசுவதில்லை.சாலையோரம் ஒரு வாய்க்கால் செருக்கோடு தண்ணீரைக் கடத்திக் கொண்டிருந்தது. ஓடைகளில் சம்பு அடர்த்தியாக முழைத்துக்கிடந்தது அதன் பூக்கள் ஏதோ வேற்று பிரதேசத்து நிலப்பரப்பைப்போல பரவசம் உண்டாக்கியது. இதுக்குள்ள தான் தூக்கனாங்குருவிகள் கூடுகட்டியிருக்கும். உள்ளே போனா கொத்து கொத்தா தொங்கும். முட்டையெடுத்து அவிச்சுத்திம்போம் அப்போ மாரப்பன் எப்போதும் கூடவே இருப்பான்.குரவ மீனெல்லாம் ரொம்ப அனாயசமா பிடிப்பான். குரவ மீன் முள்ளு குத்துச்சுன்னா ரெண்டு நாளைக்கு கடுக்கும்.

இப்படிக்கதைகள் சொல்லிக் கொண்டே வந்தவன் தூங்கிப்போனான். கதை சொல்லிகளைத்தூங்க வைத்த விநோதம் என்னவாக இருக்கும். ஒரு வேளை அந்தக்குளிர் காற்று, அந்தத்தளிர் நிலங்கள் ,பின்னிழுத்துக்
கொண்டுபோய் மீண்டும் அவனைத் தாய் மடியில் கிடத்தியிருக்கும். தூங்கட்டும்.எனக்கு தூக்கம் வரவில்லை நான் அந்தக்காடு,வயல்கள் தண்ணீரோடும்,  காற்றை கிழித்துக் கொண்டு நீச்சலடிக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டு போனேன்.பூச்சிக்காடு வருவதற்கு முன் முழித்துக்கொண்டான். பேருந்தை விட்டு இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லை.வீட்டுக்குபோனா தம்மடிக்க முடியாது இரு ஒரு தம்மடிப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு பெட்டிக் கடைக்குப் போனான்.

வீட்டுக்கு நடந்து போகிற வழியில் ரெண்டொரு பேர் எப்பப்பூ வந்தா,என்று விசாரித்தபடி முகம் மலர்ந்தார்கள்.அவனையொத்த முகஜாடையிருந்த ஒரு பெரியவரைக்காட்டி எங்க சித்தப்பா, கொஞ்சம் சண்ட என்றான் அவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கடந்து போனார். கூரைத்தாழ்வாராமும் ஓட்டுக்கூரையும் நார்க்கட்டிலும்,புராதான மரப்பீரோவும்,ஒரு பப்பாளி மரமும்,அடர்ந்த பிச்சிக் கொடியும் புதிதாய்க்கட்டிய ஒரு கழிப்பறையுமான வீட்டுக்குள் நுழைந்தோம்.முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில்  இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான். கொஞ்சம் எட்டத்தில் இருந்தேன். எப்படி அவர்களோடு முகமன் சொல்லிக் கொள்வதென்னும் குழப்பம் என்னை ஆட்டுவித்தது. முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது.

23.12.09

தண்டிக்கப்பட்ட அலுவலகக் காதல்.

இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. அவரது பணிக்காலம் முடிய ஆனாலும்கூடுதல் சுறு சுறுப்போடு அலுவலகம் வந்துவிடுவார்.அவருக்கிருக்கிற அந்த ஆஸ்த்துமா தூசியை,துர்நாற்றத்தை,குளிரை,சில நேரம் வெப்பத்தையும் கூட தாங்கமுடியாத்தாக்கிவிடும்.அது ஒரு கிராமம். பின்தங்கிய கிராமம்.காய்கறி மார்க்கெட்டைப்போல எந்த நேரமும் மனிதர்கள் கூடம் கூட்டமாக வந்துபோகும் வங்கிக்கிளை.பத்து மணிக்கு இருக்கையில் உட்கார்ந்தால் கடவுளே வாசலில் வந்து நின்றால் கூட எழுந்து போய் பார்க்கமுடியாத பணிச்சுமை.வேலைக்கு சேர்ந்த காலத்தில் நூறு வவுச்சர்களுக்கு ஆறு க்ளர்க்,ரெண்டு ஆபீசர்,ஒரு மேனேஜர்.இப்போது முன்னூற்றைம்பது வவுச்சர்களைத் தாண்டிவிடுகிறது.அதைச் சமாளிக்க வெறும் ரெண்டு க்ளார்க்குகள் தான்.தண்ணீர்ப்பந்தல் மாதிரி தான் வங்கிவேலை ஆகிப்போனது.'கையெழுத்துப் போடத்தெரியாதுல்ல' என்று மிகுந்த கர்வத்தோடு படிவங்களை முகத்துக்கு நேரே நீட்டும் மானாவாரி மனிதர்கள். மனிதாபிமானமுள்ளவர்களாக வாழ்வது சற்று சிரமம்.

சக ஊழியரின் சிரமத்தை,நிர்வாகத்துக்குள் இருக்கும் பாரபட்சத்தை,களவாணித்தனம் பண்ணிவிட்டு பதவிக்குள் ஒளிந்துகொள்ளும் கபடத்தைக் கண்டு பொங்குகிற மனிதர்கள் தேடி ஒருங்கிணைக்கப்பட்டதுதான் தொழிற்சங்கம்.அண்ணன் சுப்புராஜ் அப்படிப்பட்ட தொழிற்சங்க மனிதர். பழம் பெரும் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஒரு கல்லூரியின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர். லோன் வாங்கிவிட்டு டீ வாங்கிக்கொடுத்தால் கெட்டவார்த்தையில் திட்டித்தீர்க்கிறதை அவர் நேர்மை என்றும் உலகம் முசுடு என்றும் புரிந்து வைத்திருக்கிறது.ஒரு கிராமத்து நாட்டாமையின் கோபத்தோடு உயர் அதிகாரிகளைக்கூட விமர்சனம் செய்யும் அவர் தான் எங்கள் மேலாளர்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு நூறு கிலோமீட்டர் தாண்டி மாறுதல் போடப்படுகிறது. புதிதாக வேலைக்குச்சேர்ந்த அவருக்கு விடுப்பு ஏதும் இல்லை.இப்போதிருக்கும் கிளையில் பேறுகாலம் வரை நீடிக்க அனுமதி மட்டும் தான் கேட்கிறார் தயவுதாட்சண்யம் இல்லாமல் மறுக்கப்படுகிறது. இதைப்பற்றி அங்கலாய்ப்பது கூட தேசத்துரோகக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

.இதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் முதலில் நானுன்,அன் டோ வும்,அப்புறம் முத்துவிஜயன் சார், இப்போது கிட்டத்தட்ட 49 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எந்த வித முகாந்திரமும் சொல்லப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை. பிரிட்டிஷ் அரசு நாங்கள் நாய்களைக்கொல்வதானாலும் காரணம் சொல்லிவிட்டுத்தான் கொல்லுவோம் என்று சொன்னது.இங்கே அந்த சல்ஜாப்புக்கூட மிஞ்சவில்லை. ஒரு பொதுத்துறை நிறுவணம் ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஊறுகாயாகிவிட்டது. அந்தப்பச்சை மை சிந்துகிற ஒவ்வொரு நேரமும் பல வீடுகளில் கண்ணீர் சிந்துவதுதான் வாடிக்கையாகிவிட்டது. 

சனிக்கிழமை அண்ணன் சுப்புராஜுக்கு பனியிடைநீக்க உத்தரவு வருகிறது எனத்தெரிந்து.மருத்துவ விடுப்பை முறித்துக்கொண்டு கிளைக்கு வந்தார்.லேசான கலக்கம் இருந்தாலும். திமு திமுவென வந்த வாடிக்கையாளர்  கூட்டத்தில்  அது காணாமல் போனது.தன்னுடைய மேஜையில் இருந்த அவருக்கான உடமைகளை  எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து டெபாசிட்,லோன் வவுச்சர்களை சரிபார்த்து பாஸ்பண்ணுவதில் குறியாக இருந்தார்.அன்று கொடுக்கப்படவேண்டிய சுய உதவிக்குழுக் கடனை சாங்க்சன் செய்தார். பனிரெண்டு மணிக்கு ஆளுக்கு இரண்டு மாரி பிஸ்கட் தருவார்.அதுவும் வந்தது. இந்த வேகத்தினூடே வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.உத்தரவைத் தூக்கிக்கொண்டு வரும் அந்த மனிதன் வருவானென்று. வரவில்லை.திமுதிமுவென சீருடையில் சுய உதவிக் குழுப்பெண்கள் வந்தார்கள் கதவடைக்க இன்னும் பத்து நிமிடம் தான் இருந்தது. அவர்களின் தலைவி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டாளென்றும் அவள் மீது காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டுமென்றும் கசமுசவென்று கத்தினார்கள். அவர்களைச்சமாதானப்படுத்தி தலைவிக்கு இன்னொரு முறை அவகாசம் கொடுக்கலாம் என்று சொல்லி  அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

வழக்கமான பேருந்தை தவற விட்டு தாமதமாக வீட்டுக்குப்போனார்.அங்கே அவருக்கான இடை நீக்க உத்தரவு தபாலில் வந்திருந்தது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக்கூடாது என்பது தான் நீதித்துறையின் ஆதாரம். சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் மனிதர்களுக்காக உருவானது. மன்னிக்கத்தெரிந்த மனிதனின் இதயம் மாணிக்கக் கோவிலப்பா என்னும் சினிமாப்பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது.மனசு பாரம் அழுத்தும் போது இலக்கியங்கள் லேசாக்குகிறது.
 
நேற்று அலுவலகத்துக்குப் போனேன் சதாகாலமும் அவரோடு சண்டைபோட்டு கொண்டிருந்த நினைவுகள் சுரீரென்றது. அவரது நாற்காலியைச்சு ற்றி எறும்புகள் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது மாரிப்பிஸ்கட்டின் துகள் களைத் தூக்கிக்கொண்டு.அவரது கோபச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது ஒரு மூத்த சகோதரனின் வாசனையோடு. 

22.12.09

கதம்ப மனிதர்கள் நிறைந்த மல்லிகை நகரம் மதுரை.

அந்தக்காலத்தில் துணிவே துணை அப்டீன்னு ஒரு திரைப்படம் வந்தது. தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது.எல்லாப்படத்திலும் ஒரு சூட்கேசைத் தூக்கிக்கொண்டு சுவரோரமாகவே பதுங்கிக்கொண்டு போகிறதைதவிர அவர் நடித்ததாக நினைவில்லை என்று ஜெய்சங்கரைப்பத்தி எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. அதில் ஜெய்சங்கர் வழக்கம் போல ஒரு சிஐடி அதிகாரி. ஒரு கொலையைக் கண்டுபிடிக்க அந்த ஊருக்குப்போவார். ஊர் ஒரே மர்மமாக இருக்கும். தண்ணித்தாகம் எடுத்து மனுசன் நாக்குவரண்டு கிடக்கும்போது கூட அவருக்கு யாரும் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள்.

அந்தப் படம் பார்த்தபிறகு அந்தப் பெயருடய சாயலுள்ள எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு திக் திக்கென இருக்கும்.இப்படித்தான் இந்த திரைப்படம் ஒரு பொருளை அதன் கண்வழியே பார்க்க வைத்துவிடுகிறது.
இப்போதும் கூட இந்த மதுரையை அப்படிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. மதுரையென்றால் முன்னமெல்லாம் எனக்கு, எனக்குமட்டுமல்ல இந்த உலகத்துக்கு சங்கத்தமிழ்,வைகை ஆறு, மீனாட்சியம்மன்
கோவில்,திருமலைநாயக்கர் மஹால்,கண்ணகி,மல்லிகைப்பூ என பல பிம்பங்கள் நினைவுக்கு வரும்.தோழர் நன்மாறன் மதுரையப்பற்றிச் சொல்லும்போது அது ஒரு தூங்காத நகரம் என்று வர்ணிப்பார்.இரவு இரண்டு மணிக்குக் கூட சூடாகப் புரோட்டாச் சாப்பிடுகிற மக்களைப்பற்றி வியந்து சொல்லுவார் அவர்.சினிமா நடிகர்கள் எல்லோருக்கும் தலைமை ரசிகர் மன்றம் மதுரையில் தானிருக்கிறது.

ஆனால் சமீப காலமாக மதுரையென்றாலே அருவா,அடிதடி என்கிற அளவுக்கு இந்தச்சினிமா மதுரையைப் புரட்டிப் போட்டுவிட்டது.மதுரையச் சுற்றியுள்ள கிராமங்களில் எல்லோரும் முதுகு சொரிவதற்குக்கூட அருவாளைத்தான் பயன்படுத்துவது போலொரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் ஒரு படம் ஒரே படம் வெற்றியடைந்து வசூலில் சாதனை பண்ணிவிட்டால் அப்புறம் அந்த நடிகர், அந்தக் கதையின் சாயலில் கதைகள், அந்தப்படத்தின் பாடலைப் போலே பாடல்கள்  போதும் போதும் எனச்சொல்லும் அளவுக்கு கொண்டுபோய்விடும் நமது சினிமா. ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்து குழந்தைகளைக் கொன்ற பூமியும் அதுவாகத்தான் வெளி உலகுக்குச் சொல்லப்பட்டது.கோதுமைக்கலரில் இருக்கும் தமன்னா ' நான் ..... ஊர்க்காரி வெட்டிருவன்' என்று சொல்லுவதாக காதல்கொண்டேன் படத்தில் வசனம் வரும்.இப்படியே உருமாக்கட்டி இழுத்துக்கிட்டுப்போய் இப்பொ அந்த ஒன்னுக்குமத்த விளம்பரத் தொடரிலும் மதுரைப்பேய் பிடித்து ஆடத்துவங்கிவிட்டது.

சாத்தூர் மதுரையிலிருந்து எழுபது கிலோமீட்டர் தான் இருக்கும். மதுரை மாவட்டம் விருதுநகர் தாண்டியதுமே துவங்கிவிடும். அந்த எல்லையிலிருந்து நிலம், மண், மனிதர்கள் எல்லாம் வித்தியாசமாகி தரையிலிருந்து அருவா முளைத்துக் கிடக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.அங்கும் கூட நெல்,வாழை,கரும்பு கம்பு,சோளம்,கேழ்வரகுதான் நிலத்தில் விளைகிறது. ஒரு கொலை என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமில்லை. அது சம்பந்தப்பட்ட இருண்டு குடும்பங்களையும் சின்னா பின்னப்படுத்திவிடும். என்சிசி சீருடையில் உள்ளூர் மாணவர்கள் வந்தால்கூட வீட்டை,காட்டை,பெண்டுபிள்ளைகளை மறந்து தலைதெறிக்க ஓட நேர்வதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைவிட கொலைசெய்த குடும்பத்தில் மிஞ்சியிருக்கிற பெண்களைப் பற்றி இன்னும் முழுமையாக எந்த இலக்கியமும் பேசவில்லை. அவர்களுக்கான இரவுகள் பெருமைகளால் அலங்கரிக்கப்பட்டதில்லை.கட்டிய மனைவியிடம் சிரித்துப்பேசியவனை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப்போனவனின் மனைவிதான் மிச்ச நாட்களில் அந்த ஊரின் கேலிப்பொருளாவாள் என்பதை யாரும் அவதானிப்பதில்லை.
மானுடவியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி இதையே ஒரு நூலுக்கான விமர்சனத்தின் பேசுபொருளாக காலச்சுவடு இதழில் முன்வைத்திருக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் சகோதரர் சீமான் 'மதுரை அருவாள்களால் அறியப்படுகிறது அது பல்வேறு பகுதி மக்களின் கூட்டு வாழ்விடம்' என்பதை தனது பேட்டியில் அறியத்தருகிறார்.

ஐந்து வகை நிலங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வட்டார வழக்குகளும் கலந்துகிடக்கிற தமிழகத்தில் எல்லா மண்ணுக்கும் தனித்தனிக்கதை உண்டு. எதுவும் பெரிதில்லை எதுவும் சிறியதும் இல்லை. இசுலாமியத்தமிழ்,கன்னடத்தமிழ்,தெலுங்குத்தமிழ்,சௌராஷ்ட்டிராத்தமிழ்,மலையாளத்தமிழ் எனும் மொழிக்கலப்பும் இங்கே கெட்டிப்படுத்தப் பட்டிருக்கிறது.சமீபத்தில் ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஒருவர் சுமார் ஐம்பதுகிலோ மீட்டர் எல்லைப்பரப்புள்ள இருக்கன்குடிப் பகுதி ஒரு நாடாக இருந்ததென்று சொல்லுகிறார். இருஞ்சோ நாடாம் அதன் பெயர். புராண கதைகளில் ஐம்பத்தாறு தேசம் என்று பாடல் வரும். அப்போது ஒட்டுமொத்த உலகத்தைத்தான் அப்படிச்சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில்  இருந்த நாடுகளாம் அவை. ஒவ்வொரு தெருவும் கூட ஒரு நாடாகி இருந்த கல்தோன்றாக்காலத்து வெட்டிப்பெருமைகள் பல இருக்கிறது.அப்படி வழக்கொழிந்துபோன கல்லாயுதங்களை மீண்டும் தோண்டியெடுத்து மக்களுக்கு
கையில்கொடுத்து கணினி யுகத்தின் முதுகில் ஏற்றவேண்டாம் சினிமா அன்பர்களே.

7.12.09

முகம் காட்ட மறுத்தான்

            வெளியே எங்காவது சுற்றிவிட்டு காலை எட்டரை மனிக்குமேல் வீடு திரும்புகிற நடுத்தரக் குடும்பத்து ஆடவனைப்பற்றி சொல்வதற்கு நிறெய்ய இருக்கிறது. பெரும் தாக்குதலை எதிர்கொள்ளும் அத்துனை உபாயங்களையும் அசைபோட்டபடி சாலையில் பயணிப்பான். எதிர்ப்படுகிற தெரிந்தவர்களை, நண்பர்களை கவனிக்காதவன், திமிர் பிடித்தவன் கௌரவக்காரன் என்கிற பழிபாவம் தன்மேல் குவிகிற விஷயம் தெரியாத அப்பாவியானவன். அதிலும் இரண்டுபேரும் வேலைக்குப் போகிறவர்களாயிருந்தால்  ஐஸ்வர்யாராயும் அப்துல்கலாமும் எதிரே வந்தால் கூட அலட்சியப்படுத்திவிட்டுப் போவான்.

மே மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடக்க இருக்கும் கலை இரவுக்கான பேனரை முக்குலாந்தக்கல்லில் தூக்கிக் கட்டியிருந்தார்கள். மூன்று இரவுகள் தூங்காமல் பார்த்துப்பார்த்து அழகர்சாமி உருவாக்கிய பிரம்மாண்டம் .நாயகனும் நாயகியும் காமக்கிளர்ச்சியை கூவிக்கூவி விற்கிற சினிமா போஸ்ட்டர்களும்  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் கட்சிக்காரர்களின் மனக்குமுறலோடு பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த இடத்தில் பாசாங்கில்லாத ஓவியம் செருக்கோடு நின்றிருந்தது. வாசல் படியில் உட்கார்ந்து   சிறுமிகள் இருவர் பேன் பர்க்கிற நிஜத்தின் பிம்பம். அசல் புகைப்படத்திலிருந்த முகபாவங்கள் மாறிப்போயிருந்தபோதும் வேறு கோணத்தில் அதன் உணர்வுகளை அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது. கடந்துபோன யுகத்துக்குமான ஏழைப்பெண்களின் ஒட்டுமொத்தப் பதிவாக அந்த முகத்தில் ஒரு இறுக்கம் மேலோங்கியிருந்தது. இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் தீர்ந்து போனபின்னும்பேச்சு தீராமலிருந்தது. பள்ளிக்கூடத்தில்   வரைந்த  பொங்கல் பானை கரும்பு   ஓவியம் தொடங்கி மோனலிசாவின் மர்மப்புன்னகை, சோவியத் புத்தகங்களில் பார்த்த ஓவியங்களின் நுணுக்கமான முகபாவங்கள், கீழே கிடக்கும் காய்ந்த சருகுகளில் கூடப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி பற்றியெல்லாம் பேசப்பேச நேரம் தெரியாமல் முங்கிக்கிடப்பது. லீவா என்ற கேள்வியின் உசுப்பலில் சுதாரித்துக்கொண்டு தலைதெறிக்கக் கிளம்புவது வாடிக்கையானது. வீட்டில் அதற்கு கிடைக்கும் எதிர்விளைவுகள் அலாதியானது.

"விடிஞ்சும் விடியாமப் போயி அப்பிடி எந்தக் கோட்டயைப் பிடிக்கப் போறீங்களோ?" விடியுமுன்னே கண்முழிக்கிற எல்லோருக்கும் கோட்டை பிடிபட்டுவிட்டால் பால்காரர்கள், டீக்காடைமாஸ்டர்கள், பேப்பர் போடுகிற பையன்கள் எல்லாம் இந்த தேசத்தில் கிரீடங்களோடு அலைவார்கள். இந்தக் கேள்விகளோடும் பதில்களோடும் போனபோது வீடு வேறு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருந்தது. முகம் தெரியாத மனிதரொருவர் ஊர்க்காரன் என்று சொல்லிக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்திருக்க அடுப்பு வேலையும் கவனிக்காமல் வந்த மனிதனிடமும் பேசாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.                 

பையன் வேறு வீட்டுப்பாடமும் எழுதமுடியாமல், அம்மாவிடம் ஸ்கெட்ச் பேனா வேணும் புதுப்பை வேணும் என்று கேட்கமுடியாமல் அந்த ஆளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். வந்தவரும் விருந்தாளிக்குண்டான லச்சணமில்லாமல் நாற்காலியில் உட்காராமல் வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்து இனம் புரியாத பயம் வரும்படிக்கு அலைந்துகொண்டிருந்தார். அடையாளம் கண்டுகொள்ள எனக்கே சில மணித்துளிகளானது. பாட்டிவழியில் தூரத்து சொந்தக்காரன் மாரியப்பன். என்வயதுக்காரனாயிருந்தாலும் கிராமத்து வறுமையில் கிழட்டுத்தொற்றம் ஏறிப்போயிருந்தது. கிழிந்த அழுக்குச்சட்டை, பரட்டைத்தலை, குளிக்காத உடம்பு, ஒரு பிச்சைக்காரனைப் போலிருந்தான். அவனது வருகையின் நோக்கத்தை கனிக்கமுடியாதவனாகித் தவித்துக்கொண்டிருந்தேன். பொதுவாக ஊரிலிருந்து வருகிறவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு பாத்திரங்கள், வென்னீர், பழைய போர்வை கேட்டு வருவார்கள். விசேச வீடுகளுக்கு பத்திரிகை வைக்க, இனி எதுவும் வழியில்லை என முடிவாகி பெரிய எதிர்பார்ப்பில் கடன் கேட்டு, ஊர்காரியங்களுக்காக நன்கொடை கேட்டு, இப்படித்தான் இந்தப் பதினைந்து வருடத்தில் ஊர்க்காரர்களுடனான தொடர்பு இருந்தது. மருமகன், பேரன், பால்ய காலத்துச் சேக்காளி பந்தமெல்லாம் மங்கிப்போய் அரசாங்க வேலைக்காரன் கிராமத்துக்கூலிக்காரன் என்கிற மாயத்திரை விழுந்திருந்தது. எதுவும் கேட்காதவர்களின் முகமும் கண்களும் கூட ஏக்கத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு வீசும்.   

இது எதிலும் அடங்காத முகபாவத்தோடு மாரியப்பன் இருந்தான். உட்காரச் சொன்னதற்கு நாற்காலியைத் தவிர்த்து மெத்தையைத் தேர்ந்தெடுத்தான். முதல் வார்த்தையிலே ஏன் வந்தாய் என்றுகேட்க மனம் தயங்கியது. தகுதிக்கு மீறிய கோரிக்கையாக எதுவும் கேட்டு   இல்லையென்று சொல்லும் தைரியம் குறைந்தவனாயிருந்தேன். ஊரில் மழை தண்ணி எப்படி, பொழப்பு எப்டி இருக்கு, பயங்க என்ன செய்றாங்க... வழமையான விசாரிப்புகளுக்கு அவனது பதில்கள் சம்பந்தமில்லாமல் இருந்தது.

"பொங்கலுக்கு நம்மூர்ல பட்டிமண்டகம் போடனுமப்பா ஐயோனி நல்லாச் சிரிக்கச் சிரிக்க பேசுராம்ப்பா', "ஒங்கய்யனச் சத்தம்போட்டு வை ஓவராத்தண்ணியப் போட்டுட்டு வந்து அக்காட்ட சண்ட போடுராரப்பா","இன்னிமேக்கொண்டும் ரெட்டெலைக்கு ஓட்டுப் போடக்கூடாது இங்க பாரு தன்னியத்துட்டுக்கு விக்கிர கொடுமையெ" பேசிக்கொண்டிருக்கும் போதே அடுப்படிக்கு போய் தானே தண்ணீர் எடுத்துக் குடித்துக்கொண்டான். திரும்பிவந்து டீவிப்பெட்டிக்கருகில் உட்கார்ந்து முறைத்துப்பார்த்தான். போடுவதற்க்கு எத்தனித்துத் தோற்றுப்போனான். இந்த அத்து மீறல் ஒட்டுமொத்தமாக எல்லொருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியது. அடுப்படியில் இருந்து நீ உட்பட உங்கள் ஊர் மனிதர்களே இப்படித்தான் என்று கடுங்குற்றம் சுமத்துகிற பார்வை பார்த்தாள்.  சைகையாலே என்ன நடக்குது என்று கேட்டுவிட்டு மீண்டும் ஸ்கூல் கிளம்புகிற வேலைகளில் முங்கிப்போனான் பாரதி. இனியும் தாமதித்தால் பையனை பள்ளிக்கூடத்தில் விடுவது ஒன்பதேகால் பஸ்ஸைப் பிடிப்பது தாமதமாகிப்போகலாம்.

"ச்செரி என்னசோலியா வந்தெ பயல போயி உடனும்"அவசரப்படுத்தினேன். "அவுக இவுகமாரி வாங்குன கடனக்குடுக்காத ஆளில்ல, கடம்னா நமக்கு கை கூசும் சொந்தக்கரன் ஓண்ட கேக்காம வேரார்ட்டக்கேக்க' பலமான பீடிகையோடு ஆரம்பித்தான் அடுப்படியைப் பார்க்காமல் தவிர்த்துத் தோற்றுப்போனேன். ஆயிரம் ஐனூறு என்று கடன் வாங்கிப்போன ஊர்க்காரர்களைப் பார்வையால் பட்டியல் போடுவது தெரிந்தது. தவிரவும் வாங்கும்போது கடனாகப்பேர்கொள்ளும் காசு, நாள்பட நாள்பட இனாமாக மாறிப்போகும் வரலாறுகளையும் நினைவூட்டுகிறமாதிரி தெரிந்தது. மாத நடுவில் காசுபணம் கையிலிருக்காத விஷயத்தை விளக்க ஆரம்பித்தேன்.

"கடங்காரங்க மானத்த வாங்குறாங்க, நாக்கப்பிடுங்கிக்கிர்ராப்பயிருக்கு, ஒரு தடவ நீ இந்த ஒதவியச்செய்யி திரிப்பித்தர மிடியாட்டாலும் நீ வீடு கட்டம்போது கொத்த வேல செஞ்சி கழிச்சிர்ரனப்பா"

"இந்தா வச்சிக்க ஏண்ட்ட இப்பக்கடங்குடுக்ற அளவுக்கு காசில்ல' சட்டைப்பையிலிருந்து நூறுரூபாயை எடுத்து  நீட்டினேன்.

வடக்கடைக்கு எட்டு ரூவா, சோமண்ணங்கடக்கி பீடி வாங்குன பாக்கி ஆறு, ஆருமுகச்சாமி மோலாளி கடயில குருனயரிசி வாங்குன கடன் பன்னண்டு, பஸ்ஸுக்கும் பீடிச்செலவுக்குமாச்சேத்து முப்பத்தஞ்சி போதும்" சொல்லித்திடுக்கிட வைத்தான். "முப்பது குடு சில்லரை மாத்தி சாயங்காலம் திருப்பித்தரேன்"

தயங்கித்தயங்கி அவளிடம் போய்க்கேட்டேன். அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. "நூறையும் கொடுத்துருங்க" காசை வாங்கிக்கொண்டு மருகி மருகி நின்னவனிடம் டீக்கொடுத்து, பிறகும் தயங்கி நின்னவனிடம் சாப்பிடச்சொல்ல மடமட வென உட்கார்ந்து சாப்பிடத் தயாராகிவிட்டான். போகும்போது மறக்காமல் இரண்டு பழய சட்டைகளை கேட்டு வாங்கிக்கொண்டு போனான்.

என் விளையாட்டுப்பருவத்தின் மையப்புள்ளியாக இருந்தவனா, சதா சர்வகாலமும் ஏழெட்டுப்பையன்களோடு ஊரைச்சுற்றிவந்தவனா. எந்த விளையாட்டிலும் தனது பிரவேசத்தால் தோல்வியை அனைவருக்கும் மொத்தமாக வினியோகம் பண்ணுகிற மாரியப்பனா இவன். அப்போதெல்லாம் அவனை ஒரு தரம், ஒரே ஒருதரம் ஜெயித்துவிடத் துடிக்கிற வெறிகொண்டலைந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த வெறியே அவனது மூலதனம். பரபரப்பு, நிலைகொள்ளாமை, இலக்கைத்த் துல்லியப்படுத்தமுடியாமல், சிதறிப்போகும். அவனோ நிதானமாகக் குறிவைப்பான்.இடது கைப்பெருவிரலை தரையில் ஊன்றி பாம்புவிரலின் நுனியில் கோலிக்குண்டை வைத்து அந்த விரலை வில்லாக வளைத்து, உருவிவிடும்போது சுற்றி நிற்கிற அத்தனைபேரும் குறிதவர வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருப்ப்பார்கள், சொடீரென்று எதிராளியின் கோலிக்குண்டில் அடிவிழ எல்லோரது வேண்டுதலும் தகர்ந்து போகும். காக்கை நோக்கறியும் கொக்கு டப்பறியும் என்னும் பழமொழியைத் தவிடுபொடியாக்கியவன் மாரியப்பன். பறவைகளில் காக்கைக்கு குறிப்பறியும் திறமை அதிகம், அதன் கண்களுக்கு நூற்றி அறுபது டிகிரி சுழலும் அசாத்தியம் இருப்பது மாதிரி,பின்னால் இருந்து கையை ஓங்கினாலும் சுதாரித்துக்கொண்டு பறந்து ஓடிவிடும். பறக்கிற வேளையிலும் கூட கல்லெறிந்தால் பசக்கென்று எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும். சாதாரணக் கவன்கல்லில் காக்காயைச் சாய்த்து விடுகிற வல்லமை கொண்டவன்.

புளியமரத்தின் உச்சிக்கொப்பில் காக்கைகளும், வேலிச்செடியின் தூருக்கு அடியில் குழிபறித்து காடைகளும் கவுதாரிகளும் மொட்டைப்பனயின் பொந்துகளில் கிளியும் மைனாக்களூம் கூடுகட்டும் என்கிற பறவைகளின் வாழ்க்கை முறை அவனுக்கு அத்துபடி. ராத்திரி நேரங்களில் வேதக்கோயில் முகட்டில் ஏறி இறங்கும் போது நாலைந்து புறாக்களோடு இறங்குவான். ஒருநாள்  மேகக்கலரில் திட்டுத்திட்டாக பழுப்பு, கருப்பு நிறப்புள்ளிகளோடு பத்துப்பதினைந்து முட்டைகளோடு வந்தான். பாட்டி கதைகளில் வரும்  சாகசக்காரனைப்போலவும், விளையாட்டுப்பிராயத்துக் கனவுகளில் வரித்துக்கொண்டிருக்கும் லட்சிய நாயகனைப்போலவும், அவனது வருகை இருந்தது. அது என்னபொருள் என்ற புதிர்போட்டியொன்று உடனடியாக அரங்கேறியது, முட்டையென்று இனங்கண்டுகொள்ள நெடுநேரம் ஆகியது. எப்போதாவது  ஊருக்கு வரும் மைக்செட்டை, தேர்தலுக்கு மட்டும் புழுதிபறக்க வரும் பிளசர் காரை, பொங்கலுக்கு வரும் கரகாட்டக்காரர்களை, தலைக்கு மேல் பஸ் போனது மாதிரித் தாழ்வாகப் பறக்கும் ஏரோப்பிளேனை, வேடிக்கை பார்க்கிற மாதிரி அந்த காடை முட்டைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட லீவு நாட்களில் அவனோடு ஆடுமேய்க்கக் காட்டுக்குள் போவதற்கும் அவனோடு ஒட்டிபிறந்த பிரம்புக்கம்பை கையில் பிடிப்பதற்கும் கடும் போட்டிவரும். காடுகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காண்பிக்க வந்த தேவ தூதனைப்போல் முன்நடக்க பத்துப்பதினாறு வெற்றுப்பாதங்கள் ஆர்வக்கொந்தளிப்பில் தரை உரசிக்கிளம்பும். பொட்டக்கம்மாயை தாண்டியதும் பத்துப்பதினைந்து ஏக்கர் வேலிக்கரடு விரிந்து கிடக்கும் அங்கு எல்லோரும் அரவமில்லாமல் நடக்கக் கட்டளையிடுவான். முயல்களின் நடமாட்டம் அங்கு அதிகம் முள்புதர்களுக்குள் பிரவேசிக்கும்போது முயல் பார்க்கலாம் என்று துல்லியப்படுத்துவான் அது அப்படியே நடக்கும், தரையில் பறந்து போகிற மாதிரித்தோன்றும்  முயல்பாய்ச்சலைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பிரமிப்பும் ஒருசேரக்கிடைக்கும். மத்தியானப்பசிக்கு வெள்ளெலிகளும், அணில் பிள்ளைகளும் அடித்து உரித்து குடலெடுத்து அதன் வயிற்றுக்குள் சீனிக்கல்லை வைத்து சூட்டாம்போட்டுக் கொடுப்பான் ஐயரவோடு ஆரம்பிக்கிற ருசி கொண்டா கொண்டா என்று கேட்கும். கொப்பில்லாத மரத்திலும்,படியில்லாத கிணத்திலும், அனாயசமாக தரையில் நடப்பதைப்போல் ஏறி இறங்குவான். ஆடு மேய்ப்பன், களையெடுக்கப்பொவான், பெரியவர்களோடு போட்டிபோட்டு ஆஞ்சான் இழுக்கப்பொவான்.

அவன் விரும்பாத விளையாட்டும் ஒன்று உண்டு சோறு பொங்கி விளையாடும் அப்பா அம்மா விளையாட்டு. அவன் போகாத இடம் ஒன்று உண்டு அது அந்த ஊர்ப்பள்ளிக்கூடம். ஆனால் அதற்காக அவன் ஒரு வினாடி கூட வருத்தப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அந்த ஊர் நாட்டாமைக்காரரின் மகன் கூட காசு வேணும், பம்பரம் வேணுமென்று அழுது அடம்பிக்கப் பார்த்திருக்கிறோம். மாரியப்பன் மட்டும் மாறாத புன்னகையோடும், சுறுசுறுப்போடும் கவலையின் சுவடு தெரியாமல் அந்த ஊரைச் சுற்றிச்சுற்றி வருவான். அவன் மட்டுமா அந்தப்புல்லாங்குழல் சத்தமும் வருடல் நாதத்தோடு ஊரைச்  சுற்றிக்கொண்டிருக்கும்.

அதென்ன மாயமோ புல்லாங்குழலுக்கும், ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், கெட்டிப்படுத்தப்பட்ட யுகாந்திர பந்தத்தைச் சுமந்துகொண்டே காலம் நீள்கிறது. அவனது இடுப்புக்கும் டவுசருக்கும் இடையில் தனக்கென ஒதுக்கப்பட்ட வசிப்பிடம் போல் அந்தப்புல்லாங்குழல்  ஒட்டிக்கொள்ளும். உதடு குவித்து நெருங்கும் ஒவ்வொரு வேளையும் பிரியமானவளுக்கு கொடுக்கப்போகும் முதல் முத்தத்தின் ஆவலோடு அவனும், நீண்ட முத்தத்திற்கு காத்திருக்கும் ஏக்கத்தோடு எதிர்ப்படும் ஆதி இசைக்கருவூலமாக அந்த மூங்கில் குழலும் கலந்துபோவார்கள். சினிமாப்பாடல்களையும், வார்த்தைப்படுத்தப்படாத நாதத்தையும்  காற்று வழியே கலந்துவிடுவான், காற்றும் தனது குழந்தையைத் தோளில் தூக்கி நடப்பது போல் ஊரெங்கும் படர்ந்துவரும். உயர்ந்த இடத்திலமர்ந்து இசைக்கிற, எதிரிலமர்ந்து ரசிக்கிற ஏற்பாடுகளேதும் இல்லாமல் அவனும், ஊரும், காற்றும் தங்களின் அலுவல்களுக்கூடாக பரிமாறிக்கொள்ளும் இசையனுபவம் சிலாக்கியமானது. தடதடவெனச் சன்ன ஒலிக்கீற்று மேலேறித் தலைக்குமேல் வட்டமிடுகிற துள்ளலிசை. உறுமலைச் சுத்திகரித்துத் தயாரித்தது போல் அடிச்சுரத்தில் ஒரு ஓசை வரும். அது  கால அதிர்வுகளைச் சுமந்து கொண்டு தரைவழிப் பயணித்து நினைவுகளின் அந்தகாரத்தில் சஞ்சாரிக்கும்.

அந்த அதிர்வுகள் மட்டும் மிஞ்சிக்க்஢டக்கிற மாரியப்பனை மறுபடியும் இந்த நகரத்துக்குள் பார்ப்பேனென்று நினைக்கவில்லை. காலம் அலுவலக மேஜை நாற்காலிகளுக்குள் நகர்ந்தும், நகரத்து இரைச்சலில் விரைந்தும் கடந்துபோனது. பரீட்சை அட்டையைப் போட்டிபோடும் தடித்த  அழைப்பிதழின் மினுமினுப்புக்குப் பயந்து போகவா வேண்டாமாவெனத் தயங்கியிருந்தபோது நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அட்டக்கம்பெனி குணசீலன் வீட்டுக் கல்யாணத்துக்குப் போக நேர்ந்தது. மண்டப வாசலில் நறுமணமும் குளிர்காற்றும் சேர்த்துத் தெளிக்கிற கருவி நிறுத்தப்பட்டிருந்தது. மண்டப நடுவில் ஒரு செயற்கை வாழைமரம் வந்தவர்களைக் கவர்ந்துகொண்டிருந்தது. மண்டபம் முழுக்கச் செயற்கைச் சிரிப்புகளும், குதூகலமும் நிறைந்திருந்தது. பிரபலங்கள் தாங்கள் செய்துகொண்டு வந்திருந்த பாராட்டுவார்த்தைகளை ஒலிவாங்கியின் வழியே கூட்டத்துக்குள் தூவிக்கொண்டிருந்தார்கள். சீருடை அணிந்த சப்ளையர்கள் கையில் பாலித்தீன் உறைகளைச் கையில் சுற்றிக்கொண்டு பசியமர்த்தினார்கள்.

பசியைமட்டுமே அழைப்பாக ஏற்று கல்யாணத்துக்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாய் பந்தியில் ஊடுருவி விட்ட பிச்சைக்காரர்களைக் கண்டுபிடிப்பது கல்யாண வீட்டுக்காரர்களுக்கு சுலபமாக இருந்தது. அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர்களை அதட்டி விரட்டுவதைப் பார்ப்பதற்கும் தீர்ப்புச் சொல்வதற்குமாக  கூட்டம் கூடியது. பாதி சாப்பிட்ட கையோடும் கையும், களவுமாகப் பிடிபட்ட அவமானத்தோடும் நின்றுகொண்டிருந்தவனை இனங்கன்டுகொள்வது, எனக்கு சுலபமாக வந்த கனத்த பாரமாக இருந்தது. பேர்சொல்லிக் கூப்பிட்டு அருகில் போவதற்குள் அங்கிருந்து காணாமல்போனான். ஆறு சுவை உணவு வயிற்றுக்குள் கட்டையாக அழுத்தியது பின்னர் இரண்டு நாட்களுக்கு மனசும் வயிறும் சரியில்லாமல் போனது. அதற்குப் பிறகு பேச்சியம்மன் கோவில் அன்னதானக் கும்பலில், சிதம்பரம் நகரில் ஒரு பங்களாவின் வாசலில், மிச்ச வாழ்க்கையை யாசிக்கிறவனாகப் பார்க்கமுடிந்தது. அலுவலகம் கழிந்த ஒரு மாலை வேளையில், பேருந்து நிலைய வாசலில் இரக்க குணம் இருக்கிற முகம் தேடித்தேடி கை நீட்டிக்கொண்டிருந்தான். நெருங்கிப்போனபோது என்னைத்தவிர்க்க எத்தனித்துத் தோற்றுப்போனான். முதல்முதலாய் அவன் தோற்றுப்போனதைப் பார்த்தேன். எதிரே நின்ற என் முகம் பார்க்கக் கூசியவனாய் தரை பார்த்திருந்தான்.

வீட்டுக்கு அழைத்தேன் வேகமாக தலையாட்டிவிட்டான், ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாமென்று கூப்பிட்டேன் உறுதியாக மறுத்துவிட்டான். பேருந்துநிலையப் பரபரப்பையும், இரைச்சலையும் விழுங்கிய பெரும் மவுனம் நீடித்தது. அதை உடைத்துக்கொண்டு அவனே பேசினான், தன்னை இனி பார்க்க நேர்ந்தால் கண்டுகொள்ள வேண்டாமென்றும், அதுபற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாமென்றும் கேட்டுகொண்டான். மீண்டும் நான் கொடுத்த நூறு ரூபாயை நிராகரித்துவிட்டு வெறும் பத்து ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு மறைந்துபோனான்.        

6.12.09

அடயாளம், ஒற்றுமை, விடுதலைக்கான இந்தியத் தலித்துகளின் போராட்டம்





அந்தச்சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்றும் அதன் மூலச்சொல் தல் என்றும் அறியப்படுகிறது. தல் என்றால் உடைந்தவை, பிரிக்கப்பட்டவை, நொறுங்கியவை, கிழிந்தவை, மிதிபட்டவை, சிதறடிக்கட்டவை, அமிழ்த்தப்பட்டவை, அழிக்கப்பட்டவை என்று பல அர்த்தங்களில் புரியப்படும். வரலாறு நெடுகிலும் மதத்தாலும் சமூகக் கட்டுமானங்களினாலும் கொடுமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கென அடயளமில்லாது காலம் வெறும் வெற்றுத் தாளாய் கழிந்து போயிருந்தது.



என்னைக் கருவுற்றிருக்கும்போது என்தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர எனது மண் எது எனும் யுகக்கேள்வியோடு புதைந்து கிடந்தார்கள். சென்ற முப்பது நாற்பது வருடங்களில்தான் பெயரே இல்லாமல் இருந்த அவர்களுக்கு, ஒரு புதிய பெயர் மேலெழுந்து வந்ததிருக்கிறது. வடமாநிலங்களில் மட்டுமே புழக்கத்திலிருந்த இந்தச் சொல் "பாசா சபத் கோஸ்" என்கிற வடமொழி அகராதியில், முன்னேற்றமில்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதி என்று பொருள்படுத்தப் பட்டிருக்கிறது. தீண்டப்படாத இந்துக்களாகிய 'அச்சுத்', தொண்ட்டூழியம் செய்கிற 'சூத்ரா' ஆகியோரை உள்ளடக்கிய சொல் இது. உச்சி ஜதான் எனும் உயர் ஜாதியினரால் மிதித்து நசுக்கப்பட்ட (ஹினி ஜாதி) கீழ்மக்கள் எனப் பஞ்சாபி மொழிபெயர்ப்பாளர் பாய் ஜஹான் சிங் கூறுகிறார்.



அந்தப் புதிய புரிதலுக்கான விதையை விதைத்ததவர்கள், புதிய பெயரை அவர்களுக்குச் சூட்டியவர்கள் இரண்டு பேர். மஹாத்மா ஜோதிபாய் பூலேவும், இறுபதாம் நூற்றாண்டின் கலக்காரர் அம்பேத்கரும் தான். அச்சுத் எனும் வடமொழி வார்த்தைக்கு தலித் எனும் நாமகரணம் சூட்டுகிறார்கள் அவர்கள் இருவரும்.



பெண்கள், வீடற்ற நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், புத்த மதத்துக்கு மாறியவர்கள், புத்திஸ்ட், மலைவாழ் மக்கள்,

தாழ்த்தப்பட்டவர்கள். அரசியல், மத மேலாதிக்கத்தால் சுரண்டப்பட்டவர்கள் எல்லோருமே தலித் எனும் பட்டியலுக்குள் இடம் பெறுவதாக 1973 ல் மராட்டிய மாநிலத்திலிருந்து வெளியான தலித் பேந்தர் ஆப் இந்தியா இயக்கத்தின் அறிக்கை பிரகடனப் படுத்துகிறது.



நால்வகை அடுக்குகளாக இந்திய மனிதர்கள் பிரிக்கப்பட்டார்கள். அவர்களின் மேல் நான்கு வகையான மாய நிறம் பூசப்பட்டது. அதுவே நிஜமென்று கருதி ஒருவருக்கொருவர் விலகி நின்றார்கள். சூழ்சியின் பலனை அதை உருவாக்கியவர்களே அனுபவித்தார்கள். அந்த சூழ்சியாளர்கள் மனிதர்களுக்கிடையிலான இடைவெளியில் புகுந்து விளையாண்டனர். அந்த விளையாட்டில் எப்போதும் அவர்கள் மட்டுமே ஜெயித்தார்கள். அல்லது அவர்கள் ஜெயிக்கிற மாதிரியே எல்லாவற்றையும் வடிவமைத்துக்கொண்டார்கள்.



ஆனால் இந்த ஆடுகளத்திற்குள்ளே நுழைய விடாமல் ஒரு பகுதியினரை வெகுதூரத்துக்கு விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டப்பட்டவர்களுக்கான அடையாளமும் சரித்திரமும் காலம் முழுவதும் கண்ணீராகவே கழிந்துபோயிருக்கிறது. வெற்றியை மட்டுமே பதிவு செய்யும் சரித்திரச் சூத்திரமும் கூட ஆதிக்க சூழ்ச்சிதவிர வேறில்லை. எனவே இரண்டாயிர ஆண்டு கால வரலாற்றில் அவர்கள் பற்றிய குறிப்பேதும் கானப்படவில்லை. அவர்கள் தான் வகைப்படுத்தப்படாதவர்கள் என்றும் புற ஜாதியினர் என்றும் பஞ்சமர்கள் என்றும் அறியப்பட்ட இந்திய தேசத்து உதிரிகள். அவர்கள் தலித்துகள்.



இந்தியப் பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.



1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில்

தன்னை இனைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லனடன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர்

முன்னிறுத்திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மஹாத்மாக் காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.



ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுதந்திரத் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் ( All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக் கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களூக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமக்கவேண்டும். இந்த மூன்று சம பங்கான தூண்களின் மேலே தான் எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு, ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள் நமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

SCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.



சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது. நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால் தொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப் போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.



SCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத் துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொனார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால் தன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படை வாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாளின் கடைசிக் கலகமாக ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத்தழுவினார்.



பின்னர் இந்தியத் தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ''மக்கள் ஜனநாயகக் கட்சி'' என்ற ஒன்றை ஆரம்பித்தார்.பின்னர் அதன் பெயரை இந்தியக் குடியரசுக் கட்சி என்று மாற்றினார். கட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றறிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்க வில்லை. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் இதே நாளில் நிலைகுத்தி நின்றது.



சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம் போனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச்சொன்னாராம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப் பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எநக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் தனக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங்கும் சிலையாகியிருக்கிறார்.

2.12.09

ஒரு பரபரப்பு நிகழ்வின் மறுபக்கம். to the last bullet


9/11 மற்றும் 26/11 இந்த இரண்டு தேதிகளைக்கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்கிற பூச்சாண்டியின் உருவம் நிழலாடும். உலகமெங்கும் தீவிரவாதம் இந்த நேரத்தின் உடனடிச் சவாலாக முன் நிறுத்தப்படுகிறது. அந்த அரணுக்குள் அந்தமாயக் கேடயத்துக்குள் மறைந்துகொண்டு அதிகாரம் தனது மறைமுக செயல்திட்டங்கள் அணைத்தையும் வெகு இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறது.




இதோ மும்பை தாஜ் சொகுசு விடுதித் தாக்குதல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அந்த தக்குதலில் களப்பலியான உயிர்களில் அசோக் காம்டெ,கார்கரே,சலஸ்கர் எனும் பெயர்கள் முக்கியம் வாய்ந்தவை.தாக்குதலை முறியடிக்கப்போன அவர்கள் வீரமரணத்தை ஏந்திக்கொண்டார்கள். சம்பவ இடத்தின் தீவிரத்தை உடனடியாக காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லியும் நெடுநேரம் போதிய படைகள் அனுப்பப்படவில்லை.காமா மருத்துவமனையில் நாற்பது நிமிடம் இரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவல் உதவி ஆணையாளைர் அசோக் காம்டே கேட்பாரற்று இறந்து போனார்.



இப்படியான இருட்டடிப்பு செய்யப்பட்ட சேதிகளோடு ஒரு புத்தகத்தை தனது காதல் கணவருக்கு நினைவஞ்சலியாக்குகிறார் வினிதா காம்டே. மறைந்த உதவி ஆணையாளர் அசோக் காம்டெயின் மனைவியான வினிதா எழுதிய to the last bullet எனும் இந்தப்புத்தகம் மும்பை கவல்துறை மற்றும் அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. வெளியிட்ட நாளிலே விற்றுத்தீர்ந்து விட்ட அந்த விவாதப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவணமான அமேயா பப்ளிகேஷன் இது இந்திய புத்தக வரலாற்றில் ஒரு திருப்பம் என கருதுகிறது.



இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.