29.12.10

இடப் பெயர்வு...

மூன்றாவது இடம் மாறிய போதும்
நிலைகொள்ளாது அலைகிறது
வேகம் குறையாத குறுவாலணில் ஒன்று.

அடர்ந்த பெரு மரத்தின் மறைசலைப்போல
பிறிதொன்று இல்லாது சுற்றுச்சுவரில் நின்று
மயிருணர்த்தி அலகுரசிக்கொள்கின்றன
காதற் குருவி ரெண்டு.

சுவர்தாண்டி விழுந்த நிழலில் அமர்ந்து கொண்டு
மதியக்கஞ்சி குடித்து இளைப்பாறிய சித்தாள்கள்
இன்னொரு இடம் தேடிப்போகிறார்
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு  

என்ன ஒரே எறும்புப் பட்டாளமா இருக்கு
என புலம்பிக்கொண்டே துடப்பம் எடுக்கிறாள்.
வெட்டுப்பட்டு சாய்ந்துகிடக்கும் வாதா மரத்தின்
புலம்பல் மொழி கேட்காத வீட்டெஜமானி.

27.12.10

பராக்குப் பார்த்தல்

மதுரையிலிருந்து சாத்தூர் வந்த பேருந்துப் பயணம் ஒரு நட்பைக் கொடுக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.அப்போது கைப்பேசி புழக்கத்தில் இல்லை.தொலைபேசி கூட மேட்டிமை மிகுந்த சாதனமாக இருந்த காலம்.எனது விலாசத்தை நினைவுபடுத்தியபடி ஒரு நீலநிற உள்நாட்டுத் தபால் வந்தது.ஒரு தபால் வருவதுகூட பெரிய சேதியாக நடமாடும் எனது கிராமம்.அதன் ஊகங்கள் அது காதல் கடுதாசி என்றும், வேலைக்கான அழைப்பிதழ் என்றும் தத்தமக்கான கற்பனைகளை கதையாக்கின.பின்னர் நெடு நாள் நான் கடிதம் எழுத அவன் எழுத மைப்பேனாவின் முனை வழிப் பூத்தது அபூர்வ நட்பு .பேருந்தின் அடுத்த இருக்கையும் அவனது சில சொற்களும் மட்டுமே நிலாடிக் கொண்டிருந்தது.ஒரு நாள் நான் அவனைப் பார்க்க அந்த கோவில் பட்டிக்குப் போக முடிவானது.

கோவில்பட்டி போவதற்கான நாள் குறித்தது, அதற்கான பயணச்செலவு தயார் செய்தது,என்ன பேசிக்கொள்ள வேண்டும் என்று மனக் குறிப்பெழுதிக்கொண்டது,வீட்டாரிடம் எப்படி அறிமுகம் செய்துகொள்வது,அவர்களின் பேச்சையும் பார்வைகளையும்,அன்பையும் ஒருவேளை நிராகரிப்பையும் எப்படி எதிர்கொள்வது எனக்குறு குறுப்புடன் அலைந்த நாட்கள் அற்புதமானவை.

அப்படித்தான் ஈரோடு வலைப்பதிவர் சங்கமமும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.எதிர்பாரத ஒரு நிகழ்வால் அது நிராசையாகிப்போனது.ஆரம்பத்திலிருந்தே என்னை தொடர்புகொண்டு அழைத்த §¾¡Æ÷ கதிருக்கும், அன்பின் பாலாசிக்கும் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.இன்று காலை ஈரோட்டிலிருந்து தொடர்புகொண்டு என்னை அன்பால் திக்குமுக்காடச் செய்தார் சகோதரி மஹி கிரான்னி.அந்த அன்பும் இன்னும் முகமுகமாய் நான் பார்க்க ஆசைப்பட்ட வலைத்தோழர்களின் அன்பும் கடைசி நிமிடத்தில் தவற விட்ட புகைவ ண்டியாகைப் போனது.காலம் எங்காவது ஒரு புள்ளியில் அந்த வாய்ப்பைக்கொண்டு வந்துசேர்க்கும்.

முற்போக்கு இலக்கியங்களின் வழியே விளிம்புமக்களின் வாழ்வை காத்திரமாக முன்வைக்கிற அன்பிற்கினிய தோழர் ஆதாவன் தீட்சண்யாவின் தந்தையார் 26.12.10 அன்று மரணமடைந்துவிட்டார்.அங்கேயும் கூடப் போகமுடியாத சூழல்.முதல் தலைமுறையாக அரசுவேலைக்கு வருகிற கிராமத்துக்காரனின் அப்பா உடுத்துகிற தேய்த்த துணியும் வெள்ளைத்துண்டும் ஊருக்குள் அலாதியாகத் தெரியும்.பொட்டிக்கடை,சீட்டு விளையாடுகிற ஊர்மடம்,டீக்கடை பெஞ்ச்,பக்கத்தூர் டாஸ்மாக் கடை ஆகியவற்றில் அவர்களுக்கென தனிக்கவனிப்பு காத்திருக்கும்.அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட அந்தப் புழுதிபறக்கும் தெருக்களில் இருந்து அவர்களைப் பிரித்தெடுப்பது கடினம்.அங்கே அவர்களுக்கென ஒரு கையகல நிலம் இல்லாது போனாலும் கூட அந்த மண்ணிலே விதையுண்டு போகச் சித்தமாவார்கள்.தோழர் ஆதவன் அவரது தந்தையாரைப் பற்றிப் பேசுகிற போதெலாம் இப்படியான நினைவுகள் வந்துபோகும்.

25.12.10

கூறு போட முடியாத குளிர்.

வியர்த்துக் குளிர் நிழல் தேடி
வெயில் அலைந்த தெருக்களில்
நடுக்கும் பனி படுத்துறங்குகிறது.

வெது வெதுப்பான இடம் தேடிவருவோர்க்கு
பீடிக் கங்குகளும் பெருமாள் கடைத் தேநீரும்
கடந்து போகும் வாகனப்புகையும்
இடைக்கால இடம் தருகிறது.

பஜனைப்பாடல்களும் வருகைக்கீதங்களும்,
உறக்கம் கெடுத்தாலும் ஒரேகுரலில்
இழுத்துக்கொண்டு போகிறது
இழந்த இசை நினைவுகளுக்கு.

அண்டை வீடுகளுக்கும் பரவுகிறது
கிழிசலில் சிதறும் கிறிஸ்துமஸ் நட்சத்திர வெளிச்சம்
அங்கே உறங்கும் குழந்தைகள் மீது
குவிந்து கிடக்கிறது ஆலீஸின் அற்புத உலகம்.

வண்ணப் பொடிகளில் உயிர்க்கும்
வட்டவடிவக் கனவுகளைத் தொற்றியபடி
கோல வாசல்களைக் கடந்துபோகிறார்
மார்கழிக் காலைகளின் பாதசரிகள்.

வீடுகள், கோடுகள், வண்ணங்கள்
தாண்டிய இயற்கையின் வீர்யத்தோடு
சிரித்துக் கொண்டிருக்கிறது மார்கழிப்பனி.

24.12.10

பழய்ய உள்ளியும், புதியவெங்காயங்களும்

எப்பொழுது இந்தப் பெயரைக் கேட்டாலும் அந்த ஈரோட்டுக் கிழவனின் ஞாபகம் வராமல் இருக்காது. இது இந்தியாவில் விளைந்த சொந்த பயிரா,எங்கிருந்து வந்தது,இதன் வயதென்ன என்கிற சிந்தனை வரும்போதெல்லாம், இது எகிப்திலிருந்து தான் வந்திருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையிலான பதில் கிடைக்கிறது.அந்த அடிமை எகிப்தியர்கள் இதைக் கடவுளாகத் தொழுதிருக் கிறார்கள். பசியோடிருக்கிறவனுக்கு உணவு தான் கடவுள்.  பிரமீடுகளை நிர்மாணித்த லட்சக்கணக்கான எகிப்திய அடிமைகளின் உணவாக இருந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

89 சதமானம் நீர்ச்சத்தும்,9 சதமானம் கரியமிலமும்,4 சதமானம் சர்க்கரைச்சத்தும் அடங்கிக்கிடக்கிற  எளிய உணவு இது. அதனாலே தான் எகிப்திய அடிமைகள் தாங்களாவே பயிரிட்டு பசியாற்றிக்கொள்ள கிடைத்த அருமருந்தாகவும் இருந்திருக்கிறது.மற்ற காய்கறி பழங்களைப்போல அழுகிப்போகாத இதன் நீடித்த ஆயுள் கூட அந்த அடிமைகளின் வரப் பிரசாதாமாக இருந்திருக்கலாம்.அடிமைகளைப் போலவே இதற்கும் காற்றும் வெயிலும் கிடைத்தால் அதுபாட்டுக்கு நீண்டகாலம் தன்னுள் ஈரத்தை அடைகாத்துக் கொண்டு பயன் கொடுக்கும் பயிர் இந்த வெங்காயம்.

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு அருமருந்தான இந்த வெங்காயம்.ஆதிகாலத்து விளையாட்டு வீரர்களின் ஊட்டச்சத்தாக இருந்ததற்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் இதன் மருத்துவ குணமே காரணம் என்று நம்புகிறார்கள்.கருப்பிடிப்பதற்காக பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படும் வெங்காயம் இன்னும் உலக ஜனத்தொகையின் மிக அதிகமான அளவு ஏழைகளின் வியாதிகளுக்கு மருந்தாக இருக்கிறது.காய்ச்சல் தலைவலிக்கு தேங்காய் எண்னெயில் வதக்கி அரைத்து பத்து போடுவதும்,ஆறாதபுண் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகக்கட்டுவதும் இன்னும் இந்தியக் கிராமங்களில் தொடர்கிறது.எனினும்  இந்தியாவில் மட்டும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை ஒதுக்கி வைப்பதற்கான வலுவான காரணம் என்னவெனத் தெரியவில்லை.

எழுபதுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் காமராசர் மாவட்ட உழைக்கிற உயிரைத் தக்கவைக்கும் உணவாக இருந்தது. அந்தச் சனங்களுக்கு இந்த வெங்காயம் வராது வந்த மாமணியாய் இருந்தது வெங்காய உபரி. அறுவடை நேரத்தில் வீணாய்ப் போகும் வெங்காயத் தழைகளை எடுத்துக்கொண்டு வந்து சேமித்து பின் அவித்து உணாவாக்கி தங்கள் பசியைப் போக்கிக் கொண்டார்கள். இப்பொழுதும் கூட தென் தமிழகத்து உழைக்கிற மக்களின் தொட்டுக்கொள்ளும் ( sade dish) பதார்த்தமாகத் தொடர்கிறது. கம்மங்கஞ்சி,சோழக்கஞ்சி,கூழ் போன்ற ( தண்ணிக்கஞ்சி)நீராகாரங்களுக்கான இயற்கை இணை இந்த வெங்காயம்.

எனினும்  இந்தியாவில் மட்டும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை ஒதுக்கி வைப்பதற்கான வலுவான காரணம் என்னவெனத் தெரியவில்லை.இவ்வளவு மருத்துவ மகத்துவம் வாய்ந்த உணவுப்பயிரை இழி சொல்லாகப் பயன் படுத்தினார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.கடவுள் மறுப்பா ளராகவும், வர்ணாசிரம எதிர்ப்பாளராகவும் இருந்த தந்தை பெரியார் கூட இதை ஒரு வசவாகத்தான் பயன்படுத்தினார் என்பதும் நமது மரபின் மீது கேள்விகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

வெப்பதேசத்தில் விளையும் இந்த வெங்காயத்தை 1492 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர் க்ரிஸ்டோ பர் கொலம்பஸ். இப்போதைய நிலவரப்படி உலகின் மொத்த வெங்காய விளைச்சலில் அதிகப்பங்கு வகிப்பது இரண்டு நாடுகள் ஒன்று சீனா இன்னொன்று இந்தியா.ஏனைய வளர்ந்த நாடுகளில் எல்லாம் சேர்ந்து விளையும் மொத்த வெங்காயம் 177 லட்சம் டன்.இந்தியா சீனா இரண்டு தேசங்களில் மட்டும் விளைகிற மொத்த வெங்காயம் 299 லட்சம் டன்.இது ஒன்றும் கடவுள் செய்த அற்புதமல்ல.மனித சக்தியின் மகத்துவம். இரண்டு தேசத்திலும் உள்ள கூட்டு மக்கள் தொகை உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு.எனவே அது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.

வருடத்திற்கு சுமார் எண்பது லட்சம் டன் இந்தியாவில் விளைகிற இந்த ஏழைகளின் பயிர் அதன் உபரி விளைச்சலாலும்,எளிய மக்களின் பயன்பாட்டாலும் கைக்கடக்கமான விலையிலேதான் நீடித்தது.புதிய பொருளாதாரம்,உலகமயம்,ஊகபேர வர்த்தகம் என்கிற அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வராதவரை.கிலோ பதினெட்டு ரூபாய்க்கு கிடைத்த இதன் விலை கண்மூடித் திறப்பதற்குள் எண்பது ரூபாய்க்கு தாவிவிட்டது.

ஒரு காலத்தில் வரிசெலுத்தாதது,நிலம் அதிகம் வைத்திருப்பது, தேவைக்கு
அ திகமாக சொத்து குவிப்பது,உணவுதாணியங்களைப்பதுக்கி வைப்பதெலாம் சமூகக்குற்றமாக இருந்தது.பழய்ய எம்ஜியார் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.
அதெல்லாம் இப்போது சட்டங்களாக இருக்கிறதா?. தெர்ல.

எனில் இங்கே அரசாங்கத்தின் உண்மையான வேலை என்ன,என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகள் வெறும் செய்தியாகவே நீடிக் கிறது. 1998 ஆம் ஆண்டு பிஜேபி அரசாங்கம் கவிழ்ந்துபோனதற்கு வெங்காய விலைதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லு கிறார்கள். அப்படியெனில் வெங்காய விலையை கட்டுப்படுத்தமுடியாமல் போன ஒரே குற்றத்துக்கான தண்டனைதான் மற்றபடி அவர்கள் உலகமகா யோக்கியர்கள் என்கிற மறைமுக விளம்பரம் இது.

நூற்றிப்பத்துக்கோடி மக்களின், சுகம், துக்கம், கல்வி, கலாச்சாரம், வேலை வாய்ப்பு,விலைவாசி, சுதந்திரம் மத சுதந்திரம்  எல்லாவற்றிலும் பிஜேபி நூறுமார்க் வாங்கியதுபோன்ற பிம்பத்தை உருவாக்கும் தகிடுதத்தம் இந்த வாதம்.மனசாட்சி யில்லாதவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமில்லை இந்த ஊடகங்களும்,அதன் அதிமேதாவி நோக்கர்க்களும்  தான்.வெங்காயம் மட்டுமே ஆட்சியை நிர்ணயிக்கிற காரணி என்றால் அடித்துவைத்த கொள்ளைப் பணத் திற்கு வெங்காயம் வாங்கி ஓட்டுக்கு கொடுக்கலாமே.அல்லது வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள் பிரதமராக வரலாமே.

போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும்.

23.12.10

கொஞ்சம் பொறுங்கள்,கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன்.

தங்களின் நிறம்,தாங்கள் சாப்பிடும் உணவு,உடுத்தும் உடை,படிக்கும் கல்வி கீழானது என்று அவர்கள் மூளைக்குள் புகுத்திவிட்டாலே போதும் நாம் இந்தியாவை எளிதில் வெற்றிகொண்டுவிடலாம் என்கிற அறிக்கையை 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மெக்காலே சமர்ப்பித்திருக்கிறான்.
அந்த அறிக்கையை செயலாக்குவதில் அவர்களுக்கு எந்தச்சிரமமும் இருக்க வில்லை.

அதற்கான தட்பவெப்பம் இங்கு தேவைக்கு அதிகமாகவே இருந்தது என்பதுதான் நிதர்சனம்.அது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த வர்ணாசிரமம்.இதோ 175 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட நம்மால் அதை புடுங்கி எறிய முடியவில்லை.மெக்காலே வேர் இந்திய மண்ணைப் பிளந்து மறுபக்கம் பாய்ந்து இப்போது உலகமயமாக்களாக திரும்பவும் வந்திருக்கிறது. junk food எனப்படுகிற ஆயத்த உணவுகள் கொடுமையான விஷம் என்பதைச் சொல்லுபவர்கள் கோமாளியாகிறார்கள்.அது சாப்பிட்டால் உன்னத மடைவோம் என்று சொல்லுகிற விளம்பர மாடல்கள்தான் இந்தியாவின் கதாநாயக் கனவுக் கன்னிகளாக இருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களிலும்,அதற்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவிலும் ஆயத்த உணவுகளையும் கரியமில வாயு செலுத்தப்பட்ட குளிர்பாணங்களையும் விற்கத்தடை செய்ய வேண்டும் என்று  உதய் பவுண்டேசன் என்கிற தொண்டு நிறுவணம் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறது.டெல்லி உயர் நீதி மன்றம் அதற்கு பதில் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.இது மாதிரி எத்தனை நாடகங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற தாடிக்காரனின் குறள் நமக்கு அநாவசியமானது.எவன் எவனோ வந்து நிலங்களை வாங்கி வளங்களை அழித்து பகாசுர ஆலைகள்ஆக்ரமிக்கிறான்.அப்போது பொத்திக்கொண்டு கிடக்கிற தொண்டும் நாட்டுப்பற்றும் பொதுநலவழக்குகள் தாக்கல் செய்தததோடு புரட்சியைச்சுருட்டிக்கொண்டு படுக்கப் போய்விடுகிறார்கள்.

என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது.போராடத் தெரியாத இந்த ஊமை ஜனங்களுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட விஷம் விற்பான். விஜய்,ராதிகா, விவேக்,சூரியா,அசின் போன்றவர்கள் அதையும் சிபாரிசு செய்வார்கள். கொஞ்சம் பொறுங்கள் ரெண்டு மடக்கு கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன். ரெண்டும் ஒண்னுதானே?

22.12.10

வறுமையின் வாசமும் சிகப்புத்தான்.

கோழிக் கடைக்கானால் ஆளில்லாத நேரமாகப் பார்த்துப்போவான் தங்கவேல்.ஓசி வாங்கவோ கடன் வாங்கவோ இல்லை. அந்த ஊதா நிற வெற்று பீப்பாய்க்குள் கிடந்து அறுபட்ட கோழிகள் துடிக்கிற சத்தம் கேட்கவே பயமாக இருக்கும்.கோதைநாச்சியார் புரத்து காளியம்மன் பொங்கலுக்கு போயிருந்தப்போ கோழியை அறுத்து பச்சை ரத்தம் குடிக்கிற காட்சியைப்பார்த்து விட்டு ரொம்ப நாள் கோழிக்கறியே திண்ணாது இருந்தான்.அதுவும் அந்த பூசாரி விறகுவெட்டும் போது கையில் அறிவாள் பட்டு ரத்தம் வரும்போது துடித்தார்,அந்தக்காயம் ஆறாமல் அவஸ்தைப்பட்டார் .அப்போதும் கூட அந்தக் கோழியின் ஞாபகம் வேறு வந்து தொலைத்து விட்டது.அயிரை மீனையும்  சாப்பிடமாட்டான். அது குழம்புக்குள் கிடப்பதும் கலங்கல் தண்ணீரில் உயிரோடு மிதக்கிற மாதிரியே இருக்கும்.சாப்பிடும் போது தொலைக்காட்சியில் செய்தி பார்க்கமாட்டான் எதாவது குலைபதறுகிற மாதிரி காட்சிகள் தெரிந்தால்,அத்தோடு கைக்கழுவி விடுவான்.

ஞாயிற்றுக்கிழமைகள் அந்த இடம் ஒரே ரத்தச்சிவப்பாக இருக்கும். இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கரவாகனங்கள் சைக்கிள், பாதசாரி  என மசாலா தடவிய ஏக்கங்களோடு குழுமியிருப்பார்கள்.கையில் வயர்க்கூடை,மஞ்சள் பை ஏந்திக்கொண்டு முதல் வளையம்.எனக்கு முதலில் நான் மேனேஜர்.நான் நான் இந்த ஏரியா கவுன்சிலர் எனக்குத்தான் முதல் கவிச்சை.நான் சட்டம் ஒழுங்கு. இப்படி சைலன்சர் மாட்டிய உருமல்களோடு காத்திருப்பார்கள். வாலைத் தூக்கிக் கொண்டு நாய்கள் இரண்டாவது வளையம்.வெளிப்படையாக குறைத்துக் கொண்டு,விரட்டிக்கொண்டும்.மூன்றாவது வளையம் காக்கைகள்.எல்லோருடைய சட்டைப்பைகளையும் குறிவைத்தபடி அந்த மாலா ப்ராய்லர் கடைக்கார கந்தசமி.

'வாங்க தலைவரே எத்தனை கிலோ'என்று கேட்பார்.வியாபார நெளிவு சுளிவு.

'கேள்வியை மாத்துங்க எத்தனை கிராம்'

'கவர்மெண்டு ஸ்டாப் இப்படிக் கஞ்சத்தனம் பண்றீங்களே சார்'.

'நாங்க ஸ்டாப் மாத்ரம் தான்,நீங்க அதுக்கும்மேலே.சனிக்கிழமை வரைக்கும் கவர்ண்மெண்டு தொழிலாளி.ஞாயிற்றுக் கிழமையானால் கறிக்கடை முதலாளி'.

சம்பளம் கொடுக்கிற அலுவலகத்தில் பகுதிநேரமும்,சம்பாத்யம் கொடுக்கிற கோழிக்கடையில் சதா சர்வகாலமும் கிடக்கிற அவர் ஒருகாலத்தில் பெரும் கோழிப்பண்ணையாரானால் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அடைமொழி போட்டுக்கொள்ளலாம்.எவன் கேட்கப்போகிறான்.சோலைச்சாமி மாதிரி வட்டிக்கு கொடுத்து வாங்காததால் கந்தசாமியை ஏற்றுக்கொள்ளலாம் பரவாயில்லை.ஊர் முழுவதும் மினரல் வாட்டர் விற்பனை நடக்கிறது.பானை பத்துரூபாய்க்கு குறைந்த விலையில் கொடுப்பவன் தானே தியாகி.

நான் ஒரு சேரிவீட்டில் சாப்பிட்டேன் அதனால் எனக்கு தியாகிப் பட்டம் வேண்டும் என்று ஆளுநருக்கு விண்ணப்பம் அனுப்பித்த குறுந்த மடம் கோவிந்தராஜைப் பற்றிப் பிறகு விலாவாரியாகப் பேசிக்கொள்ளலாம்.இப்போ கறிக்கடைக்கு வாங்க.கந்தசாமியைக் கண்டால் தங்கவேலுக்கு பிடிக்கவே பிடிக்காது.அவர் போட்டிருக்கிற  கோழி ரத்தத்தால் நெய்த சட்டையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.அதை  அவர் வீட்டுக்கு கொண்டு போவாரா, துவைப்பாரா. இந்தச் சந்தேகத்தை எப்படித் தீர்த்துக்கொள்வது என்கிற உறுத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தங்கவேலின் சாயங்காலம் வரை கூடவரும்.ரத்தப் பிசுக்கோடு விரல்களுக்கிடையில் புகையும் கத்திரிச் சிகரெட்டு.அதை ஒரு நிழற் படமாக எடுத்தால் கண்காட்சியில் வைக்கலாம். அதை அவர் உதட்டில் வைக்கும்போது ரத்தவாடை வருமா நிகோட்டின் கலந்த புகைவாடை வருமா. இப்படி விநோதமான பட்டிமன்றத் தலைப்புகள் நொரண்டிக்கொண்டே இருக்கும்.

பக்கத்து கடையிலிருந்து ஐந்து தேநீர் குவளை வரும்.கழுத்து அறுக்கிற வினோத்,துண்டு போடுகிற சதீஷ்,பக்கத்து ஆட்டுக்கறிக்கடை ராமர்,கந்தசாமியின் நண்பர் லட்சுமணன்  நாலுபேரும் மடமடவெனக் குடித்துவிடுவார்கள்.பணம் வாங்கிப்போட சில்லரை கொடுக்க கடனை நோட்டெடுத்து எழுதிவைக்க தேநீர் ஆறிப்போகும்.துக்கித்தண்ணீர் குடிக்கிறமாதிரிக் குடிப்பார்.பார்க்கிற தங்கவேலுவுக்கு அவர் பச்சை ரத்தம் குடிக்கிற மாதிரியே இருக்கும்.சில நேரம் இட்லி வாங்கிக் கூட அதே இடத்தில் வைத்துச் சாப்பிடுவார்.அப்பொழுதெல்லாம் மத்தியானம் வயக்காட்டில் சாப்பிட உட்காருகிற அய்யாவின் ஞாபகம் வந்து போகும்.குடிக்கப்போகிற கம்மங்கஞ்சியை ஏதோ எட்டுவகை காய்கறியோடு இலச்சாப்பாடு சாப்பிடுகிற முஸ்தீபுடன். பம்புசெட்டுத் தொட்டியில் கைகால் அலம்புவார்.தலைத் துண்டை எடுத்து ஈரம் துடைத்துக்கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்து அந்த துண்டை மடியில் வைத்துக்கொள்வார்.

இந்தக் கந்தசாமியின் கல்லா முதல்,தொங்குகிற பெருமாள்சாமி படம் வரை ரத்தம் தோய்ந்ததாகவே  இருக்கும். ஆனால் அவரே ஒருநாள் டீயில் ஈ விழுந்துகிடந்ததென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாரே பார்க்கலாம்.டீக்கடைக்காரர் கெக்கெக்கே எனக் கோழி கேறுவதுபோலச் சிரித்து விட்டு வேறு தேநீர் கொண்டு வைத்துவிடுப் போனார்.இந்த கலேபரசுவாரஸ்யத்தில் வண்டியில் மாட்டியிருந்த கோழிக்கறையைக்காணவில்லை.பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்தான். மீண்டும் கல்லாப்பாக்கம் வந்தான்.என்ன தலைவரே வண்டிச்சாவி மறந்துட்டிங்களா என்று கந்தசாமி கேட்டார்.விஷயத்தைச்சொன்னான். அந்த இடமே தங்கவேலைக் கவனிக்கத் தொடங்கியது.கந்தசாமி கல்லாவை விட்டு இறங்கிவந்து சுற்றுமுற்றும் நோட்டம் விட்டார்.அப்போது வண்டியில் வந்து இறங்கிய சுகுமார் வாத்தியார் என்னவெனக்கேட்டார்.ஓடைப்பக்கம் கையைக்காட்டி அங்கே ஒரு நாய் பாலித்தீன் பையைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதென்று சொன்னார்.

ஓடிப்போய் பார்த்தார்கள் சொறிப் பத்திப்போய் ஒரு செவலை நாய் தின்று கொண்டிருந்தது.போட்றா விநோத் என்றார் கந்தசாமி.வாலிபமும் கோபமும் கொண்ட விநோத் வெட்டுக் கத்தியை பலங்கொண்ட மட்டும் ஓங்கினான்.
வேண்டாந் தம்பி என்று தடுத்து நிறுத்தினான் தங்கவேல். ரெண்டுபேரும் விநோதமாகப் பார்த்தார்கள்.வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பவும் அந்தவழியே வந்தான்.இப்போது அங்கு நாயைக் காணவில்லை.சிதறிக்கிடந்த கறித்துண்டுகளை எடுத்து கிழியாத பாலித்தீன் பையில் சேகரித்துக் கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயசுக்காரர். 

21.12.10

உலகின் மிகச்சிறந்த மாயாஜாலகாரர்கள்

அவள் ஜிகினா உடையோடு மேடைக்கு வருவாள்.ஒரு மரப்பெஞ்சில் படுப்பாள்.அரங்கம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்திருக்கும். அவன் பேசிக்கொண்டே இருப்பான்.கைகளைக் கொண்டு காற்றில் நர்த்தனம் ஆடுவான்,கண்களை உருட்டுவான். கூட்டத்தைப் பேச்சுக்கும்,காட்சிக்கும் இடையில் ஊசலாட விடுவான். வாளை உருவுவான்,அவள் மேல் ஒரு மூடியைக் கவிழ்த்துவான். வாளைச்சுழற்று வான். மனம் பதறும். எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் பருவத்தினளை வாள் கொண்டு அனுகுவது கண்டு ஆடிப் போவார்கள்.

இதை மாயா ஜாலம் என்று சொல்லுவார்கள்.மேஜிக் என்று  பிரகடனப் படுத்து வார்கள். கிராமங்களில் இதை கண்கட்டி வித்தை என்று சொல்லுவார்கள்.

ஒரு கோப்பையில் தாள்களை போட்டு எரித்து விட்டு அதைக் கவிழ்கும் போது எப்படி புறா பறக்கிறது என்கிற கேள்வி இன்னும் கூடக் கேள்வியாகவே தொடர்கிறது.அதற்கு காரணம் நம்மைத் துரத்தும் வயிறும் அதைத்தொடர்ந்து நம்மோடு கூட வரும் மறதியும் தான்.
  
மக்களே....
சற்று கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.ராகுலின் குரலைக் கேளுங்கள்.இப்போது ராஜீவின் எதிரொலி கேட்கும்.

இப்படி ஒரு பழுத்த அரசியல்வாதி மேடையில் இருந்துகொண்டு இந்தியாவைக் கண்ணை மூடிக்கொள்ளச்சொல்லுகிறார்.நேரு பிரதமரான நிமிடத்திலிருந்து இன்று வரை இப்படித்தான் யாராவது சொல்லிக் கொண்டே  இருக்கிறார்கள். முன்னிருவரும் லாஞ்சனைப்பட்டு கொஞ்சம் மறைமுகமாக செய்ததவறை வெட்டவெளிச்சம் போட்டு துவக்கி வைத்தவர்.கலப்பு பொருளாதாரம் என்கிற பசப்பு பொருளாதாராத்தை புதிய பொருளாதாரக்கொள்கை என்று மாற்றி முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு திறந்துவிட்டவர்.

நான்கு தலைமுறைகளாக இந்திய சமூகம் இவர்களின் மாயாஜாலத்துக்குள் கிடந்து ஊசலாடுகிறது, உற்றுக்கவனிக்கிறது,பதறுகிறது,கண்ணீர் விடுகிறது கடைசியில் ஒன்றும் புரியாமல் வயித்துப் பாட்டைப் பார்க்க திரும்பிப்போய் விடுகிறது.

இந்த வம்சாவழி ஆட்சியில்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று எழுதி வைத்த பொய்யாமொழியின் குரல்வளை நெறிபடுகிறது. வருடா வருடம் வாழ வழியில்லாதும் பட்டினி யாலும் செத்துப்போகும் விவசாயிகளின் எண்ணிக்கை இருபதாயிர மாகிறது. சாக்கடைக் குழிக்குள் இறங்கி சமூக அடைப்பெடுக்கும் இந்தியர்கள் சராசரி யாக இருபதாயிரம் பேர் மூச்சடைத்து போகிறார்கள். ஜாதி மத மோதல்களில் நசுக்கப்படும் இந்திய மன்னர்களின் கணக்கு இன்னும் முழுதும் தெரியாது கறுப்புக் கணக்காகவே இருக்கிறது.ஒரு மாதத்துக்கு லட்ச ரூபாய் சம்பளம் தரத்தயாராக இருக்கும் இதே இந்தியாவின் குடிமகனுக்கு நாள் முழுதும் உழைத்தால் கிடைக்கிற சம்பளம் வெறும் நாற்பது ரூபாய்தான்.கருறைவக்குள் இருந்து கொண்டு கோடிஸ்வரர்களுக்கு அருள் வழங்கும் கருணாமூர்த்திகளும் கூட வாசலில் தட்டேந்தும் பிச்சமூர்த்திகளைக் கண்டுகொள்ளாத தேசம் என் தேசம் தான்.

ஆட்சியாளர்களே....

கண்ணை மூடிக்கொண்டு உற்றுக்கேளுங்கள்.சுனாமிப்பேரலையின் ஓசையைக்காட்டிலும் ஒரு ஓசை கேட்கும். காலங்காலமாக உறுமும் ஏழை இந்தியாவின் வயிற்றிரைச்சல்.இந்தியாவின் பரப்பளவைக் குறுக்கும் நெடுக்குமாகக்கிடந்து  தட்டுத்தடுமாறி அலைகிற அவர்களின் கண்கள் இன்னும் திறக்கப்படவே இல்லை.அதைக் காவித்துணிகளும், ஜாதித் துணிகளும் கட்டிப்போட்டுவிட்டது.

என்றாவது
ஒரு நாள்
கட்டிவைத்த
கறுப்புத் துணிகளைக்
கழற்றுவார்கள்.

16.12.10

பராக்குப்பார்த்தல். குழந்தைகள், நாடு, சகிப்புத்தன்மை

பள்ளியின் சேர்கிற மாதத்தை ஒட்டிப்பிறக்கும் குழந்தைகளின் பருமனும், முந்திப்பிறக்கும் குழந்தைகளின் பருமனும் வளர் இளம்பருவத்தில் ஒப்பீட்டளவில் வித்தியாசப்படுகிறதாம்.இதை ஆராய்ச்சி செய்கிற பள்ளி மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் சொல்லுகிறது.

குழந்தைப்பருவத்துக்கும் இளமைப்பருவத்துக்கும் இடையிலான இந்த காலத்தை ஒவ்வொரு நாடும் மிக உன்னிப்பாக அனுகுகிறது.அதிக கண்டிப்பு மில்லாத அதிக சுதந்திரமுமில்லாத ஒரு விட்டுப்பிடிக்கிற இடத்தில் பெற்றோரை நிற்கச்சொல்லுகிறது.தேசத்துக்கு தேசம் வித்தியாசமான அனுகுமுறை இருந்த போதிலும்,கல்யாணம்,வாகன ஓட்டும் உரிமம், மதுக் குடிப்பதற்கான சுதந்திரம்,உயர் கல்விகற்பதற்கான தகுதி,ஆயுதப்படைகளில் பணிபுரிவதற்கான தகுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான தகுதி இவற்றில் உலகளாவிய பொதுத்தன்மை நிலவுகிறது.

எனினும் கல்விகற்கிற,கற்றுக்கொடுக்கிற பொறுப்பை எல்லா தேசமும் கட்டாயம் ஆக்குகிறது.அந்த வயதில் அவர்களுக்கு வேலைசெய்யும் உரிமை மறுக்கப்படுகிறது.அதை ஒரு பாவச்செயலாக எழுதிவிட்டு தொடரவிடாமல்
ஒரு தண்டணைக்குரிய குற்றமாக்கி அதை அமல்படுத்தவும் செய்கிறது. இதுபோன்ற நல்ல பழக்கவழக்கங்களைத்தூக்கி குப்பையில்போட்டுவிட்டு தொடர்ந்து பீடு நடை போடுவதுதான் இந்த தேசத்தின் மிகப்பெரிய அவமானம். சாப்பிடப்போகிற உணவு விடுதிகளில் தொள தொள சட்டைப் போட்டுக் கொண்டு மேஜை துடைக்கிற இவர்களைப் பார்த்துச் சின்னச் சலனம் கூட வராத சகிப்புத்தன்மை இருக்கிறது.அந்தச் சாமன்யனுக்கு சாம்பார் ரசத்தில் உப்புக்கூடக் குறைய்ய இருந்தால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

பொது மக்கள் அப்படியென்றால் அரசும் அதன் எந்திரமும் 'இங்கு குழந்தை தொழிலாளர் இல்லை' என்கிற அட்டையைத்தொங்கவிட்டால் போதும் என்று திருப்தியடைந்து கொள்கிறது.அதுபோலத்தான் புகையிலைப்பண்டங்களின் உறைகளில் இப்போது இருக்கிற எச்சரிக்கை வாசகம் போதுமானதாக இல்லையாம். அதாவது அட்டையின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கவேண்டிய எச்சரிக்கை வாசகம்  ஒரு பங்குதான் இருக்கிறதாம்.அதை ஆழ்ந்த கவலையோடு பரிசீலித்திருக்கிறது.சட்டங்கள் வெரும் எழுத்து வடிவோடு நின்றுபோனால் குற்றங்கள் காற்றுப்புகாத இடத்துக்குள்ளும் நுழைந்து திரும்பும்.

சினிமாக்கள் மூலமாக மட்டும் அறியப்பட்ட சிபிஐ என்கிற அரசு நிறுவணம் எதிர்க்கட்சிக்காரர்களின் வீடுகளுக்கு மட்டும் சோதனைக்குப்போகும் என்கிற எழுதப்படாத சட்டம் சுதந்திரத்துக்கு முனாடியே அமலுக்கு வந்துவிட்டது. இது தெரியாமல் அடி சக்க கிளம்பிட்டாய்ங்கய்யா என்று பூரித்துப்போவதில் செய்தித்தாள்களின் விற்பனை மட்டுமே கூடும்.மக்களால் மக்களுக்காக செய்யப்படுவது தேர்தல்காலத்துக்கான ரூபாய் நோட்டு மட்டும் தான்.

14.12.10

இரண்டு சிறுகதைகள். தீட்சண்யா, bk

தேடித்தேடிக்கதைகள் படித்த காலங்களை பாதாள கரண்டிபோட்டுத்துழாவ வேண்டியிருக்கிறது.பேச்சில் மற்றவர் வேல.ராமமூர்த்தியின் வேட்டையைச் சிலாகிக்கிறபோதே ஆசை விதை  விழுந்துவிடும்.செக்காவின், தமிழ்ச்செல்வனின்,மாமா ஷாஜியின் கதைகள் குறித்து  வாயாற பேசுவார்கள். அந்தப்பேச்சு புத்தகங்களைத்தேடி த்துரத்தும்.அப்படித்தான் இரும்புக்குதிரை படித்துவிட்டு மாதுவும் bk யும் பேசிக்கொண்டிருந்தார்கள்.'அதன் அழகே அதன் சமயமற்ற தன்மையில்தான் இருக்கிறது' என்று bk சொல்லுவதற்கு முன்னாடி அந்தக்கதையின் தெறிப்பான இடங்களைப்பேசினார்கள்.அன்று இரவே விடிய விடிய முழித்து இரும்புக்குதிரை படித்துவிட்டேன்.அது போல ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய bk 'புரிந்துகொண்டு வாழும் ஆண்,பெண் உறவு ரெட்டை நாயனத்தின் சங்கீதமாக வழிந்து ஓடும்' என்று எழுதினார்.

அப்படியான ஒருவாழ்வைப்பற்றியது. அது முடிகிற நுனியில் கிடைக்கிற அடர்த்தியான சோகம் நிறைந்த சிறுகதை
அப்பத்தா.பேச்சின் சாமர்த்தியத்தை அப்படியே எழுதவும் முடிகிற வீச்சு.

//வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.//

//பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு.//

இப்படிச் சிறுசு சிறுசாக அப்பத்தா தாத்தா இணையின் உறவைச் சொல்லிக்கொண்டே போய் அப்பத்தாவின் கதையை முடித்துவைக்கிறார் எழுத்தாளர்.கீற்றுவில் கிடைக்கும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11876&Itemid=263

சுட்டிப்படிக்கும் வரை நான் சொல்வது அதிகமெனப்படும்.

0

இன்னொன்று ஆதவன் தீட்சண்யாவின் 'களவு' இந்த காலாண்டுக்கான புதுவிசையின் கடைசிப்பக்கத்தில்.மேலே சொன்ன கதை , வயிறாரச் சாப்பிடும் ஒரு குடும்பத்தின் உறவும், உலுக்குகிற பிரிவும் என்றால். இது ஒரு விளிம்பு மக்களின் வயிற்று இரைச்சல் கேட்கிற எழுத்து.முழுவதும் கேட்க முடியாத படிக்கு எழுந்து ஓட வைக்கும் வாழ்வின் கதை. ஒரு அடர் மழை நாளில் கிழங்கு திருட வந்து பிடிபட்டுக்கொண்ட பெண்ணின் வறுமை சுழற்றியடிக்கும் கதை. முழுக்க முழுக்க எள்ளல்வழியே நகரசுத்தி தொழிலின் கொடுமையைச் சொன்ன  அவரே எங்கும் விலகாத அடர்த்தியோடு இழுத்துக்கொண்டு போகிறார். ஒரு வேளை பசியமர்த்தும் கிழங்கைத் திருடப் போகிறவள் மின்சார வேலியில் சிக்கிச் செத்துப்போனவர்களின் பட்டியலை நினைத்துக் கொள்கிறாள்.  நிஜத்திலும் கதையிலும் அது கடக்க முடியாத துயரம்.உழைப்பு உன்னதம் தான்,களவு கேவலம் தான். இந்த இரண்டையும் விட இருத்தலும் உயிரும் இன்றி யமையாதது. இதோ இல்லாதவர்களை அலைக்கழிக்கும் இருத்தலின் வலி.

http://www.facebook.com/#!/notes/aadhavan-dheetchanya/kalavu-cirukatai-atavan-titcanya/180560295304249

12.12.10

நேரமற்ற நேரத்தின் நினைவரிக்கும் பேர்கள். கிருஷ்ணக்குமார் - பாரதி

பாரதியப்பற்றி யோசிக்கும்போதெலம் அந்தப்பெயரும் நினைவுக்கு வந்துவிடும்.பாரதியைப்பற்றி சொல்லுமுன் என்னைச்சொல் என்னைச்சொல் என்று பிடிவாதம் பண்ணும்.ஆமாம் அதுதான் அது மட்டும் தான் நியாயம் என்று ஏற்றுக்கொள்கிற இடத்துக்கு வந்தாகிவிட்டது.ஒவ்வொரு கொடியேற்ற நாளின் போதும் பாரத சமுதாயம் வாழ்கவே பாடலாக இருந்த பாரதியை.இயற்பெயர் சுப்ரமணிய பாரதியார் என்று மதிப்பெண்ணுக்காக படித்த பாரதியை.அங்கொன்றும் இங்கொன்றுமான  அறிமுகத்தில் சலித்துப்போன பரதியை கொண்டுவந்து கண்முன் நிறுத்தி பாராடா மஹா கவியை.கேளடா மானிட சாதியில்கீழோர் மேலோர் இலை என்று சொன்ன மயிர்க்கால்கள் குத்திட வைத்த ஒரு கிரியா ஊக்கி கிருஷ்ணக்குமார். ஒரு பத்தாண்டுகள் பேய்பிடித்து ஆட்டிய காலத்தில் கூடவே நடந்தகால்கள்.மாதுவெனும் மஹா நட்பின் தூதுவனாக வந்து தாலியெடுத்துக் கொடுத்த கைகள். அவ்வளவு பெரிய கண்களில் எங்களை விழுங்கிச் செரிக்கிற பார்வை இருக்கும்.தமிழகம் அப்போதும் இப்போதும் கொண்டாடுகிற ஒரு பேச்சாளியின் இடமும்,வலமுமாக நானும் மாதுவும் மட்டும்.நானும் மாதுவும் மட்டுமே அலைந்தோமென்கிற பெருமித்தன் பெயர் கிருஷ்ணகுமார்.

ஆனால் எங்கள் பண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்து தோழர்களிடம் எங்கள் பெயர்  பைதூக்கிகள், தூக்குத்தூக்கிகள்.உண்மையில் அது ஒனிடாப் பொறாமையின் மருவிய சொற்கள்.விடிய விடிய நடக்கும் செயற்குழுக் கூட்டம்.அவர் உள்ளே நடத்திக்கொண்டிருப்பார் நாங்கள் வெளியே காத்திருப்போம்.எதாவது கதைகள் பேசிக்கொண்டு,எதாவது புத்தகம் படித்துக்கொண்டு, சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொண்டு காத்திருப்போம்.அல்லது கோட்டோ வியம் வரைவான். அவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதிப் புகையாக்குவான். நானும் ரெண்டு மூணு பங்கெடுத்துக்கொள்வேன்.பசிக்கும், ஒரு டீ க்கூட குடிக்காமல் காத்திருப்போம். 'அவர் வீட்டுக்காரம்மா கூட இப்படிக்காத்திருக்குமோ என்னமோ ஏண்டா இப்படிக் கெடந்து வயித்தப் பாழாக்றீங்க' என்று சொல்லிச்செல்லும் வார்த்தைகள் எங்களுக்கு பெருமிதமாகப்பட்ட நாட்கள்.இரவு பதினோரு மணிக்குமேல் வருவார்.எல்லோரையும் கழித்துவிட்டு மூவர் மட்டும் சாப்பிடப் போவோம்.அவர் தான் செலவழிப்பார் பணத்தை.சாப்பட்டோ டு முடிந்து போவதில்லை அந்த இரவுகள்.இலக்கியம்,மார்க்ஸ்,பாரதியென்று விரியும் சஞ்சாரம்.இப்படித்தான் பேச்சின் திசையிருக்கும் என்று திட்டமிடப்படாதபடிக்கு பூவே பூச்சூடவா படத்து நதியாவின் நடையும் அவளது பிருஷ்ட அசைவுகளும் இடையிடையே வந்து புல்லாங்குழல் வாசிக்கும்.


அதுதான் அந்த சிலாக்கியம்தான் கூடவே பாரதியையும் பேசும். அகண்டமாக்கு அணைந்துகொள் விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை என்று  புறம் பேசுகிற பாரதிதான் உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று அகம் பேசும்.ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியையும்,கண்ணமாவிடம் கனியும் அந்தரங்கத்தையும் பேசுவோம்.அப்போது பாரதி,அந்த மதுக்கிறக்க நேரத்தில் எங்களை அந்தரத்துக்கு தூக்கிப்போவான்.பாரதியைப்பற்றி பேசப்போகிற மேடைப்பேச்சுகளின் அனுக்கங்களை,உச்சிக்குத் தூக்கிப்போகும் இடங்களை எங்களிருவரிடமும் பேசிப்பயின்று கொள்வார்.அந்தக்காலத்தில் அவர் பேசப்போகிற இடங்களுக்கெல்லாம் நாங்கள் இருவரும் கட்டாயம் போவோம்.ஆயிரக் கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்துக்குள் அமர்ந்து அழுவோம் சிரிப்போம் எழுந்து கைதட்டுவோம்.மேடை காலியாகி கீழே வரும்போது நேரே எங்களிடம்தான் வருவார் என்கிற பெருமிதத்தோடு காத்திருப்போம்.

தொழிற்சங்க சுற்றறிக்கையில் பாரதியின் கவிதை வரிகள் கோர்த்துக்கொடுக்க அவர்தான் பரிந்துரைப்பார்.எங்கள் சங்கத்துக்காக ஒரு பத்திரிகை தொடங்குவதெனத் திட்டமிடும் போது பாரதிதான் எங்களுக்கு பத்திரிக்கைக்கு பேர்தந்தான்.அக்கினிக்குஞ்சு.அது ஒரு கையெழுத்துப் பிரதி.அந்தப்பதினாறு பக்கப் பிரதியில் எது யார் கையெழுத்து என்று கண்டுபிடிக்கச் சிரமப்படும் எழுத்துக்கள் மூவருக்கும் வாய்க்கபெற்றோம்.மாது இதை நீ எழுது,காம்ஸ் நீ எழுதிப்பாரேன் என்று உசுப்பேத்தி எங்களை அங்கீகாரம் செய்த சமதர்மக் குருகுலம் கிருஷ்ணக்குமார். நாங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது சட்டையைப்போட்டுக்கொண்டு வெளியேறிப்போவார்.திரும்பவரும்போது ஒருபாக்கெட் கோல்டு ப்ளேக் பில்டரும் ரெண்டு குவளைத்தேநீரும் வாங்கிக் கையில் ஏந்திக் கொண்டுவருவார். அப்போது அந்த ஆறடி உயரம் எங்களுக்கும் அவருக்குமான வயது இடைவெளியைச் சுருக்கி அளக்கமுடியாத உயரத்துக்குப்போகும்.

அவரது ஜோல்னாப்பையிலும்,அவரது புத்தக அலமாரியிலுமாக பாரதிசார்ந்த புத்தகங்கள் நிறைய்யக்கிடக்கும்.மாது படிப்பான் எனக்குப்படிக்கத் தோன்றாது.கற்றலிற்கேட்டல் நன்று.முதல் பையனுக்கு கிஷோர் பாரதி எனப்பெயரிடவும்,அடுத்தவனுக்கு சூரியபாரதி எனச் சூட்டி மகிழவும் பாரதி எங்களோடிருக்கிறான்.அதன்பிறகு  எனது சுற்றத்தாரின் குழந்தைகள் எல்லோரது பெயரிலும் பாரதி தொற்றிக்கொண்டான்.



இதோ இருநூறு புத்தகங்களுக்கிடையில் ரெண்டே ரெண்டு பாரதி புத்தகம் கிடக்கிறது.அதை முழுமையாகப் படித்தேனென்றெல்லாம் பொய்சொல்ல முடியாது.ஆனால் நடந்துகொண்டு,கால்போட்டுத் துங்கும்போது, மதுக் கிறக்கத்தில்,மேடையில் என பாரதியை வியந்தோதிய வரிகள் கோர்வையற்று வந்து வந்து போகிறது.

அவரோடு இரண்டு முறை எட்டயபுரம் போயிருந்தோம்.ஒன்று கருத்தரங்கம் அதில் தோழர் எஸ் ஏபி,தமிழ்செல்வன்,கந்தர்வன்,மாம்ஸ் ஷாஜஹான், கோணங்கியெல்லாம் பேசினார்கள்.இன்னொருதரம் பாரதியின் வீட்டுக்கு அந்த தாழ்ந்த வாசலுள்ள வீட்டை நினைவிடமாக மாற்றி யிருந்தார்கள். போய்விட்டு அரண்மனை பார்க்கப் போகலாம் என்ற யோசனையை யாரோ சொன்னார்கள் நானும் மாதுவும் பிடிவாதமாக மறுத்துவிட்டோ ம்.இப்போதும் அதை நினத்தால் சிரிப்பு வருகிறது.
  
1990 ஆம் வருடம். பாரதி பிறந்தநாளில். அந்த 42 பி எல் எஃப் தெருவில். எங்கள் சங்க அலுவலகத்து விடிகாலையில்.புகைநாற்றம் கலைந்து சந்தனப்பத்தியின் வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. எங்களுக்கு முன்னாடியே எழுந்து கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து அவர் வியர்த்திருந்தார் கிருஷ்ணக்குமார்.கரகரத்த அவரது குரலில் பாரதியின் பாடல்களை முணுமுணுத்தபடி அந்த எட்டுக்குப்பத்து அலுவலகத்துக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்.ஒரு பண்டிகையின் குதூகலம் அவரிலிருந்து எங்களிடமும் தொற்றிக்கொண்டது.'அடே உடல் முழுக்க இன்று பாரதியே நிறைந்திருக்கிறான்,எனது கால்கள் தரையில் பாவமாட்டேங்குது' என்று சொல்லிவிட்டு காம்ஸ் டே அந்த சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டைப் பாட்றா என்றார். அந்த நினைவுகள் ஒவ்வொரு டிசம்பர் பதினோறாம் தே஢ மட்டும் தான் வரும் என்றில்லை. நேரமற்ற நேரத்தில்,நல்ல உச்சி வெயிலில் வியர்வையோடு.ஒரு தீக்குச்சியைக்கிழிக்கும் ஜ்வாலையின் தகிப்பில்,ஆரத்தழுவிக்கொள்கிற ஆலிங்கணத்தில் ஏன் கழிப்பறையின் காத்திருப்பில் கூட வரும்.

மன்னித்துவிடு பாரதி எனக்கு உன்னைவிட அவனை ரொம்பப் பிடிக்கும்.நண்பனாய் தோழனாய் நல்லாசிரியனுமாய்.

10.12.10

வெள்ளைக்குள் ஒளிந்திருக்கும் நிறங்கள்.

மனைவியின் மகப்பேறுக்கு போயிருந்த போது அவளை அந்த மருத்துவர் அழவைத்துக் கொண்டிருந்தார். மெயின் ரோட்டுக்குப் போய் ஒரு விண்ணப்ப படிவம் வாங்கப்போனாளாம்.அது ஒரு மருத்துவ மனை புகழ்பெற்ற மருத்துவமனை.ஒரு சிசேரியன் மகப்பேறுக்கு எதாவதொரு சொத்தை வித்துத்தான் சரிக்கட்டணும்.முழங்கால் வலியென்று போனால் கூட எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் பாத்துருங்க,ஒரு எக்ஸ்ரே பாத்துருங்கண்ணு அடுத்த கட்டிடத்துக்காரர்களையும் சேர்த்து வாழவைக்கிற கைராசிக்கார புண்யவான்.

அவர் அங்கு வேலைபார்க்கிற பெண்களுக்கு ஆயிரத்து நூறு ரூபாய்தான் கொடுப்பார்.கொடுக்க எழுதேதி ஆகிவிடும் பதினாலுதரம் எண்ணி எண்ணி பார்த்துவிட்டுத்தான் கொடுப்பார். சம்பளம் வாங்குகிற ஒவ்வொரு மாசமும் அந்தப்பெண்களுக்கு தமிழ்சினிமா இறுதிக்காட்சி பார்க்கிற த்ரில் இருக்கும்.காளிமுத்துவின் மனைவிக்கு தலைப்பிரசவம் சிச்சேரியன் தான். ஒரு வாரம் படுத்த படுக்கையாய் கிடந்தாள். அப்போது சுசீலா தான் அவளைக் கவனித்துக்கொண்டாள்.பதினெட்டு வயசு கூட இருக்காது.இரவு பகள் என ரெண்டு ஷிப்டும் பார்ப்பாள்.அப்படி நாட்களில் ஒரு மீசைக்காரர் வந்து சாப்பாடு கொடுத்துவிட்டுப்போவார்.

எல்லாப்பிள்ளைகளுக்கும் ஆள் வரும்போது ஏ..உங்க அண்ணன் ஒங்க தாத்தா,உங்க அப்பா என்று கூப்பிடுவார் வாட்ச்மேன்.சுசீலாவுக்கு மட்டும் ஏப்ப்ள சாப்பாடு வந்துருக்கு என்று சொல்லுவார்.பேச்செல்லாம் முதிர்ச்சியாய் இருக்கும்.பாப்பா என்றுதான் கூப்பிடுவான் அவளோ பிடிவாதமாக அங்கிள் என்றே கூப்பிடுவாள்.என்ன சுசீ இன்னைக்கு ஒங்கப்பா சப்பாடு கொண்டு வர்ல.கொண்டு வரது அப்பாவும் இல்ல உள்ள இருக்றது சாப்பாடுமில்ல அங்கிள் என்று சொல்லுவாள்.அப்பறம் என்ன ப்ரியாணியா என்றுகேட்பான்.ப்ரியாணியா அத படத்துல கூடப்பார்த்ததில்ல என்பாள்.ஒருநாள் சாப்பாடு வாங்கப்போன காளிமுத்துவுக்கு சுசீலாவின் ஞாபகம் வர ஒரு பொட்டலம் கறிப்பிரியாணி வாங்கிவந்தான்.அங்கிள் என்ன பிரியாணி வாட வருது எனக்கா என்று கேட்டாள்.வாயாடி.ம்ம்ம்ம் உனக்குத்தான் என்று சொன்னதும் ஆடிப்போனாள்.அங்கிள் சும்மா கேட்டேன் சாப்டுங்க என்றாள். இல்லம்மா எனக்கு பிடிக்காது உனக்காகத்தான் வாங்கி வந்தேன் என்று சொன்னதும் அமைதியாகிப்போனாள்.

நான்காம் நாள் காளிமுத்துவின் மனைவிக்கு காய்ச்சலும் வந்துவிட்டது.அறுவை சிகிச்சை,குழந்தை, கூடவே காய்ச்சல்.சுசீலவை கூடவே இருக்கச்சொல்லிவிட்டு மருத்துவர் போய்விட்டார்.அதிக மெதுவாக க்ளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது அதன் வேகத்துக்கு இரவு முழுக்க ஏறினாலும் இரண்டுபாட்டில் தான் ஏறும்.ஒரு ஆனந்த விகடனும்,தாய் நாவலையும்,ஒரு ப்ளாஸ்க்கையும் கொண்டு போயிருந்தான்.இரவு இரண்டு மணிவரை காளிமுத்து கண்விழித்திருப்பது.அதன் பிறகு சுசீலா இப்படி புரிதல் உண்டானது.ஆனாலும் முழு இரவும் அவளே விழித்திருந்தாள்.முக்கால்வாசி நாவலையும் அவளே படித்திருந்தாள்.காலை ஏழு மணிக்கு எல்லோரும் தூங்கிப்போனார்கள்.காளிமுத்து முதலில் கண்திறந்த  போது சுசீலா அவன் மேல் கைபோட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.சின்னவயசில் அவனது தங்கச்சி சந்தனமாரி அவன்மேல் கைப்போட்டு தூங்குகிறமாதிரி.

காளிமுத்து வெளியே போயிருந்த நேரத்தில் ஏப்ள ஏ சுசீலா அண்ணே ரிசப்சன்ல இருந்தா கூப்டு என்று சொல்லியிருக்கிறாள்.இங்கபாருங்கக்கா நா ஆசப்பட்டுத்தா ஒங்கள அக்காண்ணும் அவர அங்கிள்ணு கூப்பிடுறே.ஒங்க வீட்லருந்து கோழிக்கொழம்பு கொண்டு வந்தப்போ எல்லோரோடயும் ஒக்காந்து சாப்பிட்டப்பவே முடிவுபண்ணிட்டேன்.ஒங்களுக்கு பிடிக்கலண்ணா சார்னே கூப்டுறேன் என்றாளாம்.ஏப்பிள்ள அப்படீல்லாம் கெடயாது இப்பவேண்ணாலு எங்கூட வந்துரு எனக்கு ஒண்ணியப்போலொரு தங்கச்சி வேணும் என்று சொன்னதும் கட்டிப்பிடித்துக்கொண்டு அளுதாளாம்.நேரங்கிடைக்கிற போதெல்லாம் குழந்தையைத்தூக்கி வைத்துக்கொள்வாளாம். 'பாவம்ல' காளிமுத்துவின் மனைவி சொன்னாள்.

அங்கிள் எங்க படிச்சீங்க,ஒங்களுக்கு எத்தன தங்கச்சி,அக்கா வீட்ல ரொம்ப பணக்காரங்ளா கேள்விகள் கேட்டு காளிமுத்து சொல்வதை ஒரு புத்தகம் படிப்பதுப்போல கூர்ந்து கேட்பாள்.அனால் தனக்கான புத்தகத்தை ஒரு போதும் அவள் திறப்பதில்லை.அலுவலகத்துக்கு விடுப்புச்சொல்ல தந்தியடிக்க போகவேண்டியிருந்தது ஞாபகம் வந்தவனாக எதோ அப்ளிகேசன் போடனுண்ணுல்ல கேட்டான்.அந்தநேரத்தில் மருத்துவரின் வார்த்தைகள் ஒலித்திருக்கவேண்டும்,முகம் சுருங்கிப்போனாள்.இல்ல அங்கிள் எனக்கு எதுவும் கிடைக்காது,ராசியில்லாதவ எங்கம்மா அப்டித்தா சொல்லுவாங்க.வற்புறுத்திக் கேட்டு அவனே வாங்கிவந்து நிறப்பச் சொன்னான்.நீங்களே நிறப்பித்தாங்க .பத்து,ப்ளஸ்டூ,நர்சிங் டிப்ளமோ,படிப்பு அத்தாட்சி நகல்களைக் கொடுத்துவிட்டு இன்னொரு பேறுகாலத்தைப் பார்க்கப் போய்விட்டாள்.சாட்சியாபுரம் சிஎம் எஸ் பள்ளிகளில் படித்திருந்தாள்,மதுரையில் நர்சிங் டிப்ளமோ எல்லாம் நிறப்பி அப்பா பெயர்,வீட்டு விலாசங்களை நிறப்பாமல் வைத்திருந்தான்.

நான்குமணிக்கு வந்தாள்.அப்பா பேர் கேட்டான். நிறைய்ய மௌனமாக இருந்தாள்.ப்ளாங்கா விடமுடியாதா அங்கிள் என்றாள்.காளிமுத்து மௌனமாகிப் போனான்.கார்டியன் போடலாம் என்றான்.ஒங்க பேர் போடுங்க என்றாள்.ப்ரியாணி மாதிரி இதுவும் சும்மாதானே என்றான்.இல்ல மாமா நெஜம்மாவே என்ற போது கண்களில் நீர்கோர்த்திருந்தது.அனுப்பிவைத்தான். விடைபெறுகிற நாளில் ஆட்டோ  வரை வந்து வழியனுப்புவாள் என்று நினைத்திருந்தான்.லீவு போட்டுவிட்டுப்போய்விட்டாள்.ஒரு ஆறு மாதம் கடந்து போயிருக்கும் யாரோ அவனது வீட்டு விலாசம் விசாரிப்பது கேட்டு கேட்டைத்திறந்தான்.சுசீலா தான்.சென்னை பொதுமருத்துவமனையில் வந்து சேரச்சொல்லி கடிதம் வந்திருந்தது.கடித்ததோடு இனிப்பு பொட்டலமும்,ஒரு குழந்தை சட்டையும் கொண்டுவந்திருந்தாள்.காளிமுத்து வேலைக்குப்போன பின்னும் அங்கேயே தங்கிவிட்டாள்.அவளே சமைத்தாளாம்,அன்னைக்கு பூராவும் பையனைத் தூக்கி வைத்துக்கொண்டு இறக்கிவிட்வே இல்லையாம்.

இரவு திரும்பி வரும்போதும் சுசீலா இருந்தாள்.அவளே தோசை சுட்டுக்கொடுத்தாள்.அவள் நடவடிக்கைவேத்தாள் மாதிரியே இல்லை.வண்டியில் கொண்டு போய் ஊரில் இறக்கிவிட்டு வாங்க இந்த ரூபாயையும் செலவுக்கு வச்சுக்க என்று ஒரு ஆயிரம் ரூபாயையும் கொடுத்தாள்.மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.ஊர் தாண்டிப்போகும் போது இருள் அவர்கள் இருவரையும் கறைத்துக்கொண்டது.மாமா ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒங்க குடும்பத்த பார்த்திருந்திருக்க கூடாதா என்று சொன்னாள்.ஏ இனிமே ஊருக்கு வரும்போதெல்லாம் இங்கே வா என்றான்.இல்ல மாமா அம்மாவக் கூப்பிட்டுக்கிட்டு மெட்ராசிலே செட்டில் ஆகப்போறன் என்று சொல்லிவிட்டு மாமா மெட்ராஸ் வந்தா கண்டிப்பா என்னப்பாக்க வரணும் என்றாள்.தாயில்பட்டி ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளே போகணும் வழிசொன்னாள்.நடுவழியில் வண்டியை நிறுத்தச்சொன்னாள்.ஒரு கைக்கடிகாரமும் கொடுத்தாள்.

திரும்பி வர நெடுநேரம் ஆனது.தயங்கித்தயங்கி வந்தவனை என்ன அதுகுள்ள வந்துட்டீக என்று கேட்டுவிட்டு அவளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் காளிமுத்து ஊங்கொட்டிக்கொண்டே இருந்தான்.

9.12.10

சண்டக் கோழி, ஜல்லிக்கட்டுக் காளை


'மஹாராஜா தூங்கப்போறார் சட்டுப்புட்டுனு வாத்தியத்த எடுத்துட்டு வந்து வாசிங்கோ'என்று வைத்தி சொல்லுவார்.உடனே வித்வான் சன்முகசுந்தரத்தின் முகத்தில் கோபம் நாதஸ்வரம் வாசிக்கும்.ஒரு கலைஞனின் அறச்சீற்றத்தை ஒரு பாப்புலர் புனைவின் மூலம் அழகாகச் சித்தரித்திருப்பார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். கலையும், இலக்கியமும்,வீர விளையாட்டுக்களும் அரச சபைகளின் போதைக்கான ஊறுகாயாய் இருந்த காலத்தினை நாம் வரலாறுகளின் மூலம் மட்டுமே தெரிந்திருந்தோம்.இப்போது இந்த உலகமயமாக்களின் அதியற்புத விநோதமாக அவையெல்லாம் அன்றாடம் கண்முன்னே நடக்கிற காட்சியாகிறது.மீண்டும் கலையிலக்கிய விளையாட்டுக்கள்  பெருமுதலைகளின் சொத்துக்களில் ஒன்றாகமாறிவருகிறது.

இந்த கிரிக்கெட் இருக்கிறதே அது பிறப்பிலேயே ராஜாக்களின்,காலனிஆதிக்கவாதிகளின் முதுகு சொறிகிற விளையாட்டாக மட்டுமே இருந்தது.தொலைக் காட்சிகளின் அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் அது பட்டி தொட்டிகளிலும் புழங்கும் விளையாட்டாக மாறியது.இருந்தாலும் நான் எப்போதும் அரசமாடங்களின் சொத்து என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டேதான் வந்திருக்கிறது. வீரர்கள் தங்களின் சட்டை,மட்டைகளில் பொறித்துக்கொண்ட கம்பெனிகளின் இலச்சினை இப்போது அவர்களின் தன்மானத்தின் மேல் குத்தப்பட்டுவிட்டது.விளையாட்டைபெருமுதலைகளிடம் மொத்தமாக குத்தகைக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.இதற்கு....... பெயர்கள் வேறு.

வியாபாரம்,போட்டி,பதவி,உத்தியோகம் போன்றவற்றின் அழுத்தங்களில் இருந்து மனசு தளர்த்த கிடைக்கிற விளையாட்டையும் வியாபாரமாக்கியது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.திருவிழாக் கூட்டங்களில் பலூன் விற்கலாம்,ஐஸ் விற்கலாம் திருவிழாவையே விற்கமுடியுமா ?. விற்பனை நடக்கிறது.ஓடியா ஓடியா போனா வராது பொழுது போனாக்கிடைக்காது என்று அணிகளைக்கூவி விற்கிற கொடுமையை மடிப்புக் குழையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.என்னசெய்ய ?,ஒரே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இந்த சூதாட்ட வியாபாரச் சூத்திரத்தை மக்கள் விளையாட்டுக்களின் பக்கம் திருப்பிவிடவேண்டாம்.பாவம் நூற்றிப்பத்துக்கோடி மக்களுக்கும் அவர்தம் சந்தததிகளுக்கும் அவையாவது மிஞ்சியிருக்கட்டும்.நட்சத்திர வீரர்களே உங்களை நீங்கள் பூஸ்ட், காண்டோம்,உப்புப் போடாத ஊறுகாய்களுக்கு விளம்பரமாக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.எங்கள் லட்சியங்களின் விளம்பரத்தை நாங்கள் சாதாரண ஜனங்களிடமிருந்து எடுத்துக்கொள்வோம்.

8.12.10

இந்திய உதடுகளுக்குள் ஒளிந்துகொள்ளும் ஊடகங்களும்,பான்பராக்கும்.

ப்ளாஸ்டிக் பை பான் மசாலா உற்பத்தியாளர்களுக்கான கெடுவை எதிர்வரும் மார்ச் 2011 வரை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் வரை பான் மசாலா என்றால்  என்னவென்று அறியாது இருந்தது எளிய இந்தியா.அது பெரும் சேட்டு  களின் பெருமைகளில் ஒன்றாக தகர டப்பாக்களில் முடங்கிக் கிடந்தது. ப்ளாஸ்டிக் தாள்களில் அடைக்கப்பட்டு பெட்டிக்கடைகளில் தொங்கப்போடும் வரை அமிதாப்,அம்பானி,போயஸ்,கோபாலபுர வீடுகளைப்போல அருங் காட்சிப்  பொருளாகத்தானிருந்தது. இந்திய மனிதவளத்தை ஒரு சந்தைப் பொருளாக மட்டுமே அனுகுகிற அமெரிக்க சிந்தனையின் நீட்சிதான் பான் மசாலா பாக்கெட்டுகள்.

முன்னமெல்லாம் கிராமத்து பெட்டிக்கடைகளில் தொங்குவது சிகப்பு தாள்களில் அடைக்கப்பட்ட கிளிமார்க் டீத்தூள் மட்டும் தான். உப்பு புளி கடுகு சீரகத்தோடு வெத்திலை போயிலையான மற்றவையெல்லாம் நகரக் கடைகளில் ஒருகிலோ அரைக்கிலோவாக வாங்கிவரப்பட்டு அததற்கான அஞ்சரைப்பெட்டிகளில் கிடக்கும். அந்த அங்குவிலாஸ் போயிலையை சின்ன சின்ன தாளிகளில் மடித்துக்கொண்டுதான் சோமுமாமன் ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார். அறுபது எழுபது வயது தாண்டிய கிழடுகளுக்கு மட்டுமே விற்கப்பட்ட அந்த அங்குவிலாஸ் போயிலை இப்போது அரிதாகிவிட்டது.அதே சோமுமாமன் கடையில் இப்போது ரகரகமான வண்ணங்களில் பான் மசாலா தொங்குகிறது. பணிரண்டே வயதான தொப்ளானின் மகன் வாங்கிப்பிரித்து கீழுதட்டை இழுத்து அதில் செருகி வைத்துக்கொண்டு கிளம்புகிறான்.

நீண்ட தூரம் சவாரி போகும் வாகன ஓட்டுனர்கள் தொடங்கி சித்தாள் கொத்தனார்களின் அன்றாடத்தேவைகளில் ஒன்றாக மாறிப்போனது பான் மசாலா.அதன் உற்பத்தியாளர்கள் பகாசுரக் கோடீஸ்வரர்களின் வரிசையில் சேர்ந்து பத்துவருடங்களுக்கு மேலாகிறது.காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை விஸ்தரிக்கப்பட்ட இந்த புற்று நோயின் நேரடித் தூதுவர்களுக்கு  இந்திய தடுப்புச்சுவர்களான ஜாதி,மதம்,மொழி ஏதும் ஒரு பொருட்டல்ல. பான்பராக் பொட்டலங்களின் மக்காத உறைகளின் வீர்யத்தினால் சக்தி உறிஞ்சப்பட்ட அமர்,அக்பர்,அந்தோணிகளின் கடவுள்கள் உண்டியல்களோடும் சண்டை களோடும் பொழுது கடத்துகிறார்கள்.அடுத்த வருட சதூர்த்தியில் பான் பராக் பொட்டலம் ஊர்வலமாய் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த உத்தரவால் என்ன நேர்ந்துவிடப்போகிறது ?. கொஞ்சநாட்கள் உயர்மட்ட அதிகாரிகள் தொடங்கி அடித்தட்டு ஏட்டு வரை ஆசிர்வதிக்க கள்ளத்தனமாக விற்கப்படும் இந்தியாவின் கலாச்சாரப் பொட்டலம்.நீதியரசர்கள் சங்க்வி,... இல்லாத பெஞ்சில் மேல் முறையீடு செய்து நீதியை லவட்டிக்கொள்வான் ரத்தன் டாடாவின் சம்பந்தகாரன்.அப்புறம் முடை நாற்றமெடுக்கும் எச்சில் களோடு எங்கே துப்பலாம் என்று அலையும் என் இந்தியா. இது பற்றியெலாம் வாய்திறக்கமாட்டார் அந்த சு.சாமி.

0

இந்திய அரசின்  இரட்டைக்கொள்கையால் பெரிதும் பயனடைந்தது ரத்தன் டாடாவின் நிறுவனங்கள் தானாம்.

இந்த புள்ளி விபரத்தை ராஜ்யசபா உறுப்பினரும்( இரண்டு அவைகளிலும் இருக்கும் பிரதிநிதிகளைப் பாருங்கள்) முன்னாள் தொலைத்தொடர்பு சாதன உற்பத்தியாளருமான திரு ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி டாடா நிறுவணங்கள்  ஒதுக்கிக்கொண்ட தொகை 19074.8 கோடிகள். சென்றவாரம் ஒரு வார இதழில் ராசாவுக்கு 10,கருணாநிதிக்கு 30,சோனி யாவுக்கு 60 என்று எழுதிய பத்திரிக்கை ரொம்ப லாவகமாக இந்த புள்ளி விபரத்தை இருட்டடிப்பு செய்துவிட்டது.

ஆமாம் ராசா குற்றவாளியா இல்லையா என்பதை விவாதிக்கிற ஆகப்பெரும் சிந்தனையாளர்களும்,பகாசுர ஊடகங்களும் இது அரசின் தனியார் கொள்கை களினால் வந்த பெரும் சரிவு என்பதை விவாதிக்கவே இல்லை.இந்திய  பொதுத்துறை நிறுவணங்களிடமிருந்த வளங்களை உள்ளிருந்து கொண்டே களவாடிக் கொண்டுபோய்  தனியார்களிடம் சேர்க்கும் இந்த பெரும் கொள்ளையைப் பற்றி ஊடகங்கள் பேசவே இல்லை. உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவிலிருந்த போது இந்தியா ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது பொதுத்துறையால் மட்டுமே.ஆனால் அது ஒரு கட்சியின் சாதனையாகப் பேசப்பட்டது.அந்தக் கருத்து ஊழலைக் கண்டுபிடிக்க சு.சாமியின் சாமர்த்தியம் பலனளிக்கவில்லை.

0

லஸ்கரின் குறியில் குஜாராத்தும் இருக்கிறதாம்.விக்கி லீக்ஸ் தலைப்புச்செய்திகள். டண்டடண்டடய்ங்.

இந்திய ஊடகங்களுக்கு பெருந்தீனி.
அடுத்த தேர்தல் வரப்போகுதில்ல
.யாரையாச்சும் அய்க்கானாக்கி
மக்களை மாய்க்காணாக்கனுமில்லையா?  
 
இந்தக் கதைகளையெல்லாம் கடைக்கோடியில் இருக்கும் எண்பது கோடி இந்தியர்களுக்கு எப்படிக்கொண்டு போய்ச் சேர்க்க ?. பொய்யும் பான் பராக் பொட்டலமும் போல விற்றுத்தீர உண்மையால் முடியவில்லை.அதைக்
கண்டுபிடிக்கிற நாள்வரை இந்த எழுத்து,அதற்கு விழும் நான்கு ஓட்டுக்கள், அதை வாசிக்கும் நூற்றி இருபத்து நான்கு அனுதாபிகள், கருத்தரங்கம், ஆர்ப்பட்டம் எல்லாம் உரமாக இருக்கட்டும்.

6.12.10

ஓடு,அவர்கள் நகரத்துக்குள் வருகிறார்கள்


(இன்று அம்பேத்கரின் நினைவு தினம்.மும்பை சிவஜி பூங்காவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மரியாதையை செலுத்த திரளும் நாள் இன்று.ஆனால் இந்த பெரும் கூடல் பரவலாக அறியப்படாத ஒரு நிகழ்வாகும்.இந்த தேசம்,அல்லது தலித்துகள்கூட அவரது கனவுகளை உணர்ந்துகொண்டார்களா என்பது இன்னும் கேள்வியாகவே தொடருகிறது.இருப்பினும் லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டவர்களை ஒரே இடத்துக்கு இழுத்துவரும் உந்து சக்தி அவரிடம் இருந்திருக்கிறது. khairlanji the bitter crop என்கிற ஆனந்த் டெல்டும்டே  புத்தகத்திலிருந்து தமிழாக்கப்பட்ட சில பக்கங்கள்)

 " சைத்யா பூமி "  அம்பேத்கர் நினைவஞ்சலி . இதுவரை ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு உணர்வுபூர்வமான அபூர்வ நிகழ்வு. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் இந்த தாழ்த்தப்பட்டவர்களின் பெருந்திரள், நிதானமாகப் பெருகிக்கொண்டே வருகிறது. தங்களின் ஒப்பற்ற வழிகாட்டி பாபாசாஹேப் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட சமத்துவ சகோதரத்துவ ஜனநாயகக் குடியரசு அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் சந்தோசமும் வழங்காவிட்டாலும் கூட அவர்களந்த நாளின் புனிதத்தன்மையின் மேல் களங்கம் வரும்படியான சிறு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். கட்டுக்கடங்காத அந்தப் பெருந்திரள் ஒரு சிறு நூலிழை போன்ற சமதா சைனிக் தல் எனும் தொண்டர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை, ஒழுங்கு படுத்தப்பட்டது.

அதுவரை சமதா சைனிக் தல்லின் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருந்த மும்பை காவல்துறை. வலுக் கட்டாயமாக நிகழ்ச்சியைக் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பீதிப் பிரச்சாரத்தால் தங்களின் மீட்பருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தமுடியாமல் பயத்தில் ஆயிரக்கணக்கான தலித்துக்கள் மும்பை பயணத்தை கைவிட்டுவிட்டார்கள். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு தலித்துக்கள் திரண்ட இந்த பெருந்திரளை காவல்துறையின் கட்டுக்குள் கொண்டு வரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

தலித்துகள் ஒன்றிணையும்போது என்ன விசை உருவெடுக்கும் எனும் அச்சத்தை இந்த வருடாந்திர நிகழ்வு சாத்தியப்படுத்துகிறது. அது தலித் ஒற்றுமைக்கான நம்பிக்கையை விரிவடையச் செய்கிறது. டிசம்பர் ஆறாம் நாள் நிகழ்ச்சியால் மாநிலத்தில் பெருகிவரும் தலித் நம்பிக்கையில் விஷத்தைக்கலக்க ஊடகங்கள் திட்டமிட்டன.

மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறத் தயாராக இருக்கிற இரண்டு மும்பை சிவாஜி நகர வாசிகளின் புகைப்படத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தது மும்பை நாளிதழ். ஒரே ஒரு நாள் தாங்கள் வசிப்பிடத்து தெருக்களில் தலித்துக்கள் நடமாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் செய்திகள் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டன. 5.12.2006 ல் வெளியான தி டெய்லி நியூஸ் அண்ட் அனலைசிஸ் நாளிதழில் " கத்தி முனையில் வசிக்கும் சிவாஜி நகரக் குடியிருப்போர்" என்கிற கட்டுரை மூலமாக உயர் ஜாதிக்காரர்களின் அசௌகரியங்களைப் பட்டியலிடுகிறார் கட்டுரையாளர் ஹைனா தேஸ்பாண்டே.ஒருதலைப் பட்சமான,முன்முடிவுகளோடு புனையப்பட்ட அந்தக்கட்டுரை  பிரிட்டிஷ் காலத்தில் எழுதப்பட்ட நேட்டிவ்ஸ், ஈவென்ட்ஸ் எனும் ஆங்கிலக் கட்டுரையை நினைவுபடுத்துகிறது.

பலர் தங்களின் அன்றாட வேலைகளை மாற்றியமைத்துக்கொண்டார்கள். வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்திக் கொண்டார்கள்.தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. தங்களுக்குள்ளே ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். இரவு நேரத்தில் இறைச்சலாக ஒலிபெருக்கி அலறுகிறது. தலித்துக்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தை அசிங்கமாக்குகிறார்கள். நடைபாதையில் குளிக்கிறார்கள். உடைத்துவிடுவார்களோ என்கிற பயத்தில் கார்களை வெளியே எடுப்பதில்லை. ஒரு நாள் முழுக்க நாங்கள் வீட்டுச்சிறையில் இருக்கிறோம் என்னும் கூப்பாடுகளை ஊடகங்கள் வெளியிட்டன.

// அம்பேத்கரைப்பின்பற்றும் ஜனங்கள் கிராமங்களினின்றும், நகரங்களினின்றும் மும்பையை நோக்கி வந்து குவிவதால் உண்டாகும் அசௌகரியங்கள் தெருக்களில் சிறுநீர்கழிப்பதும், மலம் கழிப்பதும், மட்டுமல்ல. பெண்களைச்சீண்டுவது, அரசுப் பொதுப் போக்குவரத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, என நீள்கிறது. மும்பை மக்களின் பெருமையும் மேன்மையும் அவர்கள் அதீத பொறுமையைப் படித்துக்கொண்டதால் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு தலித்துகளின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதே எனக்குத்தெரிந்த அர்த்தம். தலித்துகள் வசிப்பிடங்களில் இப்படியான அடக்குமுறைகளை எங்கும் காணமுடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிடட்டும், அதிகாரப்பகிர்வுக்காகப் போராடி அதன்மூலம் இந்தச்சமூகத்துக்குள் நுழைவதை வரவேற்கிறேன். அதற்காக மும்பையை நாசமாக்காமல் இருக்கட்டும். //

என்று 5.12.2006 தேதி ஆஃடர்நூன் டெஸ்பாட்ச் அண்ட் குரியர் இதழின் ஆசிரியர் மார்க் மனுவேல்  தலித்துக்களின் மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.இதுதான் சமூக முரண்பாடுகளின் மீது ஒட்டுமொத்த ஊடகங்கள் கொண்டிருக்கும் பொதுப் புத்தியாக இருக்கிறது. கயர்லாஞ்சிக் கொடூரம் மார்க் மனுவேலின் புத்திக்கு தலித் ஒடுக்குமுறை யாகப்  படவில்லை. இதற்கு முன்னால் அரசியல் கட்சிகளாலும் மதவாதி களாலும் சிவாஜி நகர் பூங்காவில் வருடம் முழுவதும் கூடங்கள் கூட்டப் படுகிறது. பொதுச் சொத்துக்களையும், தனியாரின் உடமைகளியும் சூரையாடிக் கொள்ளையடிக்கும் அந்தச்சீரழிவுகள் ஒரு போதும் இதழியலாளர்களின் கண்ணை உறுத்துவதில்லை.

 தங்களின் வசிப்பிடத்துவழியாக ஒரு நாள் கூட நடமாட அனுமதிக்காத மேட்டிமைப்புத்தி தான் இந்த எழுத்து.மேலோட்டமாகப்பார்த்தால் இது மிகச்சரியான அனுகுமுறை மாதிரித்தோன்றும்.ஆனால் இதே அனுகுமுறை ஏனைய பெருந்திரள்களுக்குப் பொருந்தாது.அதற்கு உளவியல் ரீதியன, பரிணாம ரீதியான தத்துவங்களை மேற்கோள் காட்டி அதை ஒரு உன்னதமான நிகழ்வாக உருமாற்றும் தந்திரம் வெளிப்படும். கவர்ஸ்டோ ரியாக.

என் நிலம் எங்கே,எனது இடம் எங்கே,என் தன்மானம் எங்கே,என்ஏதிர்காலம் எங்கே,நான் யார் என்கிற கேள்விகளைப் புதைத்து விட்டு அதைத் தேடியலைகிற 20 சதமான தலித்துகளை புரிந்துகொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டும். அதற்குத்தான் இங்கே பெரும்பஞ்சமாக இருக்கிறது.அதிலிருந்து நீள்கிற ஈரம் தோய்ந்தகைகளை அவர்கள் அறிவார்கள். 

ஒரு சில நேர்மையான பத்திரிகையாளர்கள் இதில் விதிவிலக்காகிறார்கள். சாய்நாத்தும் , ஜோதி புனிவானியும் பிரதான ஊடகங்களின் சார்புத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். கடந்த நாற்பது வருடங்களாக சிவசேனா நடத்தும் தசராக் கொண்ட்டாட்டங்களால் மொத்த மும்பையே திணறடிக் கப்படுவது ஏன் ஊடகங்கலின் கண்ணில் படுவதில்லை. பால்தாக்கரே வெறிப் பேச்சால் ஒவ்வொரு முறையும் சிவாஜி பூங்காவின் சுற்றுவட்டாரம் சூரையாடப் படும்போது மட்டும் அந்தப்பகுதிக் குடியிருப்போர் ஆனந்தம் அடைகிறார்களா?. வருடாவருடம் பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டுமொத்த மும்பை கொண்டாடும்போது, போக்குவரத்து சீர்கெட்டு மாற்றமடைகிறது, ஒலிமாசுபடுகிறது,கடல்நீர் மாசுபடுகிறது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்தில் ஒரு நாள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டுப் போகும் சைத்ய பூமி நிகழ்வை மட்டும் பூதாகரப்படுத்துவது ஏன். தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயை இழிவுபடுத்தியதாக சொல்லி ஜுலை 2006 ல் சிவசேனா கும்பல் நடத்திய, அட்டகாசங்களையும், சூரையாடல்களையும் எதிர்த்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்க துணிச்சலில்லாததுதான் உங்கள் பத்திரிகை நீதியா?.என்று புனிவாணி கேள்வி எழுப்புகிறார்.

4.12.10

நம்பி ஏன் அழுதான்.

அந்த புகைவண்டி நிலையத்தில் எங்குபார்த்தாலும் ஒரே சிகப்பாகத் தெரிந்தது.தூரத்திலிருந்து பார்க்க பெரிய்ய தீ நகர்ந்து வருகிற மாதிரித் தெரிந்தது.கணேசனுக்கு சிகப்பாய் எதைப்பார்த்தாலும் உடல் புல்லரிக்கும். அதன் அடர்த்தியினாலா,இல்லை உதிரவண்ணத் திலிருப்பதாலா, வேறு எதற்குமா என்று தெரியவில்லை.டெல்லி தர்ண்ணாவுக்கு போகும்போது வாராங்கல் பகுதியைக்கடக்கிற போதெல்லாம் காட்டுக்குள் செம்மண் பூமியில் தனியாக ஒரு சிகப்பு ஸ்தூபி நிற்கும். சுற்றிலும் சிகப்புக்கொடிகள் பறக்கிற அழகைப்பார்க்கும் போது பரவசமாகிப்போவான். ஊருக்கு வந்து  ராதாகிருஷ் ணனிடம் விசாரிப்பான் 'அங்கெல்லாம் நம்ம கட்சி சூப்பரா இருக்கே எப்படி' என்று. 'அது வேற கட்சி கணேசா நம்மளுது இல்ல'.அவனுக்குள் முளைக்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லமாட்டார்  பிறகெங்கேயாவது  அரசியல் வகுப்புகளில் விடைகிடைக்கும்.அது அவனுக்கு பத்தாது.

நகர்ந்து வரும் சிகப்பு என்னவென தெரிந்து கொள்ள பயணச்சீட்டு எடுக்கிற வேலையை மறந்து கத்திருந்தான்.சிகப்புச்சேலை சீருடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் வந்தார்கள்.பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தான்.சகல வயதிலும் பெண்கள்.சுடிதார் அணிந்த நான்குபெண்களும் ஏதேதோ சிரித்துப்பேசியபடி கடந்து  போனார்கள். சுடிதாரும் சிகப்பு வண்ணத்திலே இருந்தது.எல்லோர் முகத்திலும் பக்தியை விட பயணக்களைப்பு மேலோங்கியிருந்தது.ஒரு வயதான பெண்மணி கொண்டுவந்த பையை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து வாந்தியெடுத்தார்.  கூட்டம் அதிகமானது. அதற்குள்ளே தெரிந்த முகங்களும் வந்து போனது. முள்ளிச்செவல் டீச்சர் இவனை ஒரு கணம் பார்த்ததுப்பின் தலைகவிழ்த்தி விட்டுப்போனார்.

அந்த ஒரு கணப்பார்வை பத்துவருடங்களைப் பின்னிழுத்து கொண்டு போனது.எவ்வளவு உஷ்ணமான பார்வை.அகல விரித்து படபடக்கிற இமைகளுக்குள்ளிருந்து இனிப்புப் பறவைகள் பறந்து போகும்.டீச்சர் தான் முதன் முதலில் கணேசனுக்கு ஒரு பிட்டுப்பேப்பர் கொடுத்தது.'காலங் கலிகாலமாகிப் போச்சு சார் வாத்தீச்சிகளே பிட்டடிக்கிறாங்க' என்று மீரான்சாஹிபும்,இன்னும் தோழர்களும்அலுவலக மதியங்களில் கிண்டலடிப்பார்கள். இறுதியில் அதுவே ஒரு நீண்ட கடிதம் எழுதியது. மைப்பேனாவின் எழுத்து சில இடங்களில் தண்ணீர் பட்டழிந்திருந்தது.அது தண்ணீரல்லவாம் கண்ணீராம்.ஒரு சனிக்கிழமை மதியம் நாலைந்துபேரோடு வந்த டீச்சரின் அண்ணன் கடித்தங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்டான்.எடுத்துக் கொடுத்துவிட்டு 'அவுங்க ஒராள் வந்திருந்தாப்போதுமே கொடுத்திருப்பேனே.எதுக்கு இப்டி அடியாளேல்லாம் கூப்பிட்டுக்கிட்டு'. கடிதங்களை என்ன செய்தார்களென்று தெரியாது.அதிலிருந்த நினைவுகளை காலத்தால் கூட அழிக்க முடியவில்லை.

ரெங்கலட்சுமி ஒரு நூறு அடி போய் பைகளை இறக்கிவைத்துவிட்டு யாரையோ எதிர்பார்க்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு திரும்பிப்பார்த்தாள்.அப்படிப்பார்க்கிற நேரமெலாம் கன்னத்தில் சொறிந்து விடுகிறமாதிரி பாவனை காட்டி ஆள்காட்டிவிரலால்  சமிக்ஞை செய்ய வேண்டும்.கணேசனுக்கும் ரெங்கலட்சுமிக்கும் மட்டுமேயான தனிச் சங்கேதங்களில் அதுவும் ஒன்று.கூட வந்த கணவன் ஏதோ கேட்டான் அதற்கு பதில் சொல்லாமல் யோசிக்கிற பாவனையில் கன்னத்தை சொறிந்து கொண்டிருந்தாள் ரெங்கலட்சுமி. இன்றிரவு கணேசன் மதுக்குடிப்பான் நண்பர்களோடு.அதற்கென ஒரு காரணம் தேடிக்கொள்வான். பாட்டு, அரசியல், விகடமென மதுவாடையில் நினைவுகளை அழிக்கப் பாடாய்ப்படுவான்.வீட்டில் வந்து தனியே அமர்ந்து அசைபோடுவான்.மனைவியின் கேள்விகளுக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்று கன்னத்தைச் சொறிவான்.அந்த  நம்பியை மட்டும் பார்த்திருக்காவிட்டால்.

நம்பியை அந்தக்கூட்டத்தில் பார்த்ததும் கணேசன் அதிர்ந்து போனான். ஒருவாரத்  தாடி, கழுத்தில் ருத்ராட்ச மாலை,கையில் சிகப்புத்துணியில் காப்பு,சிகப்பு வேஷ்டி,சிகப்பு சட்டையில் நம்பி. நம்பியும் அதிர்ந்திருக்க வெண்டும். கணேசனைப் பார்க்காத்தது போல முகத்தை திருப்பிக்கொண்டு ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோ வில் ஏறி உட்கார்ந்துவிட்டான்.'எறங்குங்க இருபது ரூபாய்க்கு அம்பது கேக்காங்க நீங்க பாட்டுக்கு ஏறி உக்காந்துட்டீங்க, கொஞ்சங்கூட..'.கடுமையான குரலில் நம்பியின் மனைவி சொன்னார். தன்னைப் பார்க்க சங்கோஜப் படுகிறான் என்று தெரிந்ததும் கணேசன் அங்கிருந்து நகர்ந்து போனான்.நம்பி கருப்பும் சிகப்புமில்லாத நிறத்தில் கமலஹசனைப்போலிருப்பான்.அடர் ஊதா நிறத்தில் கால்சராயும்,வெளிர் நீல நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து கொண்டு சைக்கிளில் வருகிற அழகே அழகு.வங்கியில்  கூட வேலைபார்க்கும் பூர்ணிமாவிலிருந்து வாடிக்கையாளர்களாக வரும் டீச்சர்கள் எல்லாம் ஏங்குகிற அழகன்.அவன் மட்டுமல்ல அவனது எழுத்து குண்டு குண்டாக பிசிறில்லாமல் செதுக்கி அடுக்கி வைத்ததுபோல இருக்கும்.அவன் பாட்டு ஹஸ்கி வாய்சில் பொதிகைத் தென்றலாக இருக்கும்.அளவாகச்சிரிக்கிற போது அந்த சிங்கப்பல் சொக்கி இழுக்கும்.

தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் கணேசனையும்,வங்கியில் வேலைபார்க்கும் நம்பியையும் சேர்த்து வைத்தது அந்த கலை இலக்கிய இரவுதான்.அங்கு பேசுகிற பேச்சு,பாடல்கள்,நாடகம் எல்லாம் காண்போரை உலுக்கிவிடும்.இவர்கள் இருவரையும் உலுக்கியது. நம்பி அழகாக ஓவியம் வரைவான்.கணேசன் அழகாக கவிதை எழுதுவான்.ரெண்டு பேரையும் கலை இலக்கிய இரவுக்கான வேலைகளில் இணைத்துக்கொண்டது இயக்கம்.
ஒரு படுதாவில் அடர் பச்சை வண்ண பின்னணியில் கருப்பாக ஒரு தூளி அதிலிருந்து ரெண்டு பிஞ்சுகால்கள் வெளி நீட்டிக்கொண்டு இப்படி ஒரு விளம்பர பதாகையை நம்பி வரைந்தான்.'விடிய விடிய பாட்டு மக்களை உசுப்பி விடுகிற தாலாட்டு' இப்படி அதற்கு கவிதை தலைப்பு எழுதிக்கொடுத்தான் கணேசன்.மாநிலத்தலைவர் வெகுவாகப்பாராட்டினார்.ரெண்டுபேரும் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களானாரகள்.

நம்பியின் கல்யாணத்துக்கு இயக்கம்தான் எல்லா வேலைகளையும் செய்தது. கணேசன் மூன்றுநாள் விடுப்பெடுத்து கூடவே  இருந்தான். கணேசன் மனைவி சிசேரியன் பேறுகாலத்துக்கு நம்பி தான் ரத்தம் கொடுத்தான்.சின்ன சின்ன சந்தோஷங்களையும்,துக்கங்களையும் இயக்க நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.ரெண்டு வருடத்தில் இருவரும் கட்சி உறுப்பினர்களாகப்பதிவு செய்து கொண்டர்கள். முதல் பையனுக்கு கார்க்கி என்று பேர் சூட்டினான் நம்பி.ஊரிலிருந்து வந்த மாமனார் 'ஏழுமலையான் பேர் தான் தலப்பிள்ளைக்கு உடனும் நீங்கென்ன மாப்ள அதெல்லாம் ரோட்லயே விட்டுட்டு வந்திரனும் அடுப்படிவரைக்கும் வரக்கூடா'தென்றார்.சண்டையானது.நண்பர்கள் ஆலோசனைப்படி ரெங்கராஜன் கார்க்கி என்று நீட்டப்பட்டது.பின்னர் ஒரு வருடம் போக வர இருந்தார்கள் அடுத்த வருடத்தில் நம்பியின் மனைவிக்கு டீச்சர் வேலை கிடைத்தது.மாறுதல் வாங்கிக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு வீட்டைமாற்றிக்கொண்டு போய்விட்டான்.

பிறகான நாட்களில் கொஞ்சமாக நம்பியின் நினைவுகள் மங்கிப்போனது. அருப்புக்கோட்டைக்கு ஒரு ஊர்வலத்துக்காக வேனில் போயிருந்தபோது கணேசன் நம்பியைத்தேடினான். கிடைக்கவில்லை ஊர்வலம் போகிற பாதையில் ஒரு இரு சக்கரவாகனம் எதிரே வந்து திரும்பிப்போனது.அது நம்பியாக இருக்குமோ என்கிற சந்தேகம் வந்து காணாமல் போனது. அருப்புக் கோட்டை நண்பர்களிடம் விசாரித்து நம்பியின் அலுவலக நண்பரைடம் நம்பி பற்றிக் கேட்டான். 'அவர் நம்மாளா ஒன்னுந் தெரியலயே' என்று சொன்னார்.அதன் பிறகு ஒரு மாதங்கழித்து ஒரு ஞாயிறு இரவு கணேசனின் மனைவி '  ஏங்க ஒங்க ப்ரண்டு நம்பி வந்திருந்தாருங்க, ரொம்ப நேரம் காத்திருந்திட்டு போயிட்டார் '. என்று சொல்லிவிட்டு, 'ஏங்க அவர் குடிப்பாரா' என்று கேட்டாள்.அன்றைக்கு மாது வீட்டுக்கும் காம்ஸ் வீட்டுக்கும்  வந்திருந் ததாக தோழர்கள் சொன்னார்கள்.

வருடங்கள் ஓடிப்போய் ஒரு வெள்ளிக்கிழமை மேல்மருவத்தூர் வார வழிபட்டு மன்றக்கூட்டத்துக்குள் நம்பி தென்பட்டான்.மாற்றலாகி சாத்தூருக்கே வந்திருப்பதாகச்சொன்னார்கள். ஒரு நாள் வங்கிக்கிளைக்கு கணேசன் போன போது வேலை ஜாஸ்தியா இருக்கு சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்று அனுப்பி வைத்தான்.ஆறுமாதங்களாகிப்போனது வரவில்லை .மறந்து போயிருந்த ஒரு காலை நேரத்தில் கணேசனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.
நம்பிதான்.

'வா நம்பி நல்லாருக்கயா'
'சட்டையப்போடு வா வெளியே'
'எங்கே'
'வா சொல்றேன்'
'ஏதும் பிரச்சினையா'
'கேக்காத வா'

ஒரே வண்டியில் போனார்கள்.பிரதான சாலை ஏறி  துலுக்கபட்டி பாலத்துக்கு அருகில் இருக்கிற அடர்ந்த மரங்களுக்கு நடுவே வண்டியை நிறுத்தினான்.ஒரு புட்டியும் ரெண்டு குவளைகளையும் எடுத்து வைத்தான்.குடித்தார்கள். பேசினான்,அழுதான்,துடைத்துவிடச் சொன்னான்.பெருமூச்சு விட்டான். தழுவிக்கொண்டான்.பாட்டுப்படித்தான். பொழுது நீண்டுகொண்டே போனது.

3.12.10

வலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் தயாராகி ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அந்த திரைப்படம் கவனம் பெறாமலே போய்விட்டது.தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின்னர்
தோழர் வழக்கறிஞர் சத்திய சந்திரன் தொடுத்த வழக்கினால் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வருகிறது.அதுவும் சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் சடங்குக்கு திரையிட்டுவிட்டு மீண்டும் பூசனம்  பூக்கவிடுவதாக சித்தம் கொண்டிருக்கிறது வாழும் சமத்துவப் பெரியாரின் பரிவாரம்.

எதிரே சீறிப்பாய்ந்து வருகிற காரை 'எந்திரன்' மாதிரி கையிலே பிடித்து கரப்பான் பூச்சியைத்தூக்கிப் போடுகிற காட்சி அமைக்கப்பட்டால் கூட அம்பேத்கருக்கு அத்தனை திரையரங்கும் வழிவிடுமா என்பது சந்தேகம்.தமிழ்நாட்டில் எங்காவது ஒரு திரையரங்கு ஒரு தலித்துக்கோ,இல்லை ஒரு முற்போக்காளருக்கோ சொந்தமாக இருக்க வாய்ப்புமில்லை.ஐஸ்வர்யா ராயில்லை,ஆஸ்கார் விருதுவாங்கிய இசையமைப்பாளர் இல்லை.இன்னும் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு சாராருக்கான அடையாளமாகவே தள்ளிவைத்துப் பார்க்கிறோம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இயக்கங்கள் கூட இந்தப்படம் குறித்து ஏதும் பேசமலிருக்கிறது.

வெளியில் தமுஎச அம்பேத்கர் படத்தின் திரையிடலை  இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக வலையுலகில் தோழர் மாதவராஜ்,உண்மைத்தமிழன்,திரை_ பறை கருணா ஆகியோர் இது குறித்து தங்களின் ஆதங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே சமூகத்தில் தொடரும் ஒதுக்குதலின் நீட்சியாகவே இந்த திரைப்படத்தின் மீதான அனுகுமுறையையும் கருதவேண்டியிருக்கிறது. ஆகவே அம்பேத்கர் திரைப்படத்தின் விளம்பரத்தை நமது பக்கங்களில் பதிப்பதன் மூலம் வலை ஒரு மாற்று ஊடகம் என்பதை நிலை நிறுத்துவோம்.

வாருங்கள் ஊர்கூடித்தேர் இழுப்போம்.

2.12.10

இதற்கு என்ன தலைப்பு வைக்க ?

ஒரு புதுமனை புகுவிழாவுக்குப் போயிருந்தேன்.வீட்டுக்குச் சொந்தக்காரர் நெருக்கமானவர் எனபதால் காலை மதியம் இரவு மூன்று வேளை சாப்படும் அங்கேதான்.மூன்று நேரமும் மூக்கை உறுத்தாத இயல்பான மணம்,வயிற்றை உறுத்தாத  நல்ல சாப்பாடு.சமையல்காரர் யார் என்று கேட்டேன். அறிமுகப் படுத்தி வைத்தார்கள். மணக்க மணக்க சமைத்தவர் சிரிக்கச் சிரிக்கப்பேசினார். இவ்வளவு அருமையா சமயல் பண்றீங்க ஏன் பெரிய்ய ஆர்டகள் எடுத்து செய்யக்கூடாது என்றேன். எல்லாம் பேர் ராசி தான் தோழர் என்றார்.என்னய்யா தோழர்னு சொல்றீங்க தோழர் வீட்டுக்கு சமைக்க வந்துருக்கீங்க நீங்களே ராசி மேல நம்பிக்கை வச்சிருக்கீங்க என்று கேட்டேன்.சிரித்துக்கொண்டே 'எம்பேரு அம்பேத்கார்' என்று சொல்லிவிட்டு கடந்துபோய்விட்டார்.

என்னக்குத் தெரிந்து இதுவரை எந்தப்பள்ளி ஆண்டு விழாவிலும் அம்பேத்கர் வேடமிட்டு  குழந்தை மாணவர்கள் மாறுவேடப்போட்டிக்கு வந்ததில்லை. லோகமான்ய பாலகங்காதர திலகரைக் கூடப் பார்த்திருக்கிறேன்.காரணம் பள்ளிகள் நடத்தப்படும் கல்வித் தந்தைகளால் அது அரசு பள்ளிகளா யிருந்தாலும் கூட அம்பேத்கர் ஒரு புரட்சிக்காரன் என்கிற பிம்பம் ஏற்படுத்தப்பட வில்லை.இதெல்லாம் எழுதப்பேச அயற்சிதான் வருகிறது. ஆனால் இந்த செய்தியைப்படிக்கும் போது நமக்கு என்ன நேர்கிறது ?.

தீக்கதிர் 02.12.10 தலையங்கம்.

//தலைக்கு குளித்ததால் ஈரம் உலர வேண்டும் என்பதற்காக இரட்டைச் சடை போடாமல் வந்த கோவை மாணவி ஹரிஹரசுதாவின் தலையை சுவற்றில் மோதியதோடு தலைமுடியையும் வெட்டி எறிந்துள்ளார் ஆசிரியர். விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர் கள்; தொடர்ந்து சாதிய ரீதியாக தாக்கப்படுகிறார் கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் ரோகிணி என்ற எல்.கே.ஜி மாணவி சக மாணவனை விளையாட்டின் போது கிள்ளி இருக்கிறாள். இதற்காக ஆசிரியர் ரோகிணியை தாக்கியதில் குழந்தை இறந்துவிட்டது. இதை மறைத்து தண்ணீர் தொட்டியில் வீசியிருக்கிறார்.

இவையெல்லாம் சில செய்திகளே. தேர்வு அட்டையால் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியர், ஆசிரியர் திட்டியதால் மாண வன் தற்கொலை, மாணவனை செவிடாக்கிய ஆசிரியர், வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட் டதால் எலி மருந்து சாப்பிட்ட மாணவி, தலைமை ஆசிரியரின் பாலியல் வக்கிரங்கள், தலித் மாண வர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் என 2008ஆம் ஆண்டு மட்டும் 21 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பதிவாகாதவை இன்னும் பல.//

//“தேசிய ஆணையத்தின் வழிகாட்டல்கள் குறித்தும் குழந்தைகளையும் அவர்களது உரிமை களையும் பாதுகாப்பது குறித்தும் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமது பள்ளி யில் அனைத்துப் பெற்றோர்களும் பங்கேற்கும் பேரவைக் கூட்டங்கள், அதேபோல் பள்ளிக் கல்விக்குழு அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும்”. “உடல் ரீதி யான தண்டனைகள் தொடர்பாக வட்டார அள வில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் அனைத்து பள் ளிகளிலும் குழந்தைகளுக்கு எதிரான எந்த வன் முறைச் செயல் நடந்தாலும் ஒட்டுமொத்தத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடுமையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி, 2009, மே 26 அன்று ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா அனுப்பிய வழிகாட்டும் குறிப்பின்மீது அரசு ஏதேனும் உருப்படி யான நடவடிக்கை எடுத்ததா? நிகழ்ச்சிப் போக்குகளைப் பார்க்கும்போது அனைத்து வழிகாட்டு நெறிகளையும் அரசு தூக்கி எறிந்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.//

அதே தீக்கதிரில் ப.கவிதாகுமாரின் கட்டுரை ஒன்றும் இருக்கிறது.மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தனபாலின் மகள் ப்ரியங்காவை வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லி அந்த குப்பையைத் திங்க வைத்த ஆசிரியர் குறித்த பதிவும் இருக்கிறது.படிக்க முடியாதபடி அவலம் கண்களில் திரையிடுகிறது.நாம் எங்கே இருக்கிறோம்.

30.11.10

இடைக்காலபண்டிகைகள்.

ஒரு மாதமாகவே விருதுநகர் மாவட்டம் ஒரு இடைக்கால பண்டிகைக்கு தயாராகிக்கொண்டிருந்தது.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலங்குலம் அருகே நமது மதிப்பிற்குறிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின்
ஊருக்கு அருகே உள்ள கீழாண்மறைநாடு.அங்கே சமத்துவபுரத்தை திறந்துவைத்து,சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.குண்டும் குழியுமாக கிடந்த குறுகலான சாலைகள் துரித கதியில் தன்னாலே அகன்று கொண்டன.இருமருங்கும் அடர்ந்துகிடந்த வேலிச்செடிகள் வெட்டப்பட்டன.சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை வரை குறுக்கோடிக்கிடந்த சுமார் முப்பது வேகத்தடைகள் அகற்றப்பட்டன.இப்போது அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் போவது அவ்வளவு சுகமானதாக மாறிவிட்டது.

எல்லாம் துணை முதல்வரின் வருகை செய்த புண்ணியம்.மார்த்தாண்டத்திலிருந்தும் திருச்சியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்பு அலங்கார வளைவுகளில் செம்மொழித்தமிழ் கம்பளம் விரித்திருந்தது.தென்படுகிற சுவர்களெல்லாம் வருக வருக வாசகங்கள். இடைவிடாமல் இருமருங்கும் கட்சிக்கொடிகள் நட்டப்பட்டு கண்ணைப்பறித்தது.ஊர் ஊருக்கு கட்சி கிளைச்செயலாளர்கள் பம்பரமாய்ச்சுழன்று வாகனம் ஏற்பாடு செய்து,சுய உதவிக்குழுக்களோடு கலந்துபேசி ஆள் திரட்டினார்கள்.

இந்த உழைப்பின் பலன் 29 ஆம் தேதி காலையிலிருந்தே கிராமங்கள் நகரங்கள் வித்தியாசமில்லாமல் ஆணும் பெண்ணும் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சலைக்கு வரத்தொடங்கினார்கள்.எல்லாப்பாதைகளும் ஏழாயிரம்பண்ணை சாலையை நோக்கி. எங்கு பார்த்தாலும் எம் தாய் தங்கைகளின் தலைகள்.மக்கள் ஜனநாயக்கப்புரட்சி ஒன்று வருமா அதை நம் வாழ்நாளில் பார்த்துவிட முடியுமா என்கிற ஏக்கத்தை இதைப் பார்ப்பதன் மூலம் கற்பனை தனித்துக் கொள்ளலாம். அப்படியொரு மனித திரள்.அந்த காலை ஒண்பது மணி இரண்டு சக்கர நான்கு சக்கர பரபரப்பை தூக்கி விழுங்கிக்கொண்டு தார்ச்சாலைகள் முழுக்க மனிதப் பாதங்கள்.சாத்தூர் சின்னப்பர் குருசடியிலிருந்து தெற்கே கிருஷ்ணன் கோயில் நிறுத்தம் வரை இரண்டரை அல்லது மூன்று கிலோ மீட்டர் இருக்கும். அதை  இருசக்கர வாகனத்தில் கடக்க பதினைந்து நிமிடங்கள் ஆனது.

என்னோடு கூட ஒரு அண்ணாதிமுக அனுதாபி வந்தார் அமீர்பாளையம் நிறுத்தத்தில் குறைந்தது முந்நூறு பேர்,அதே போல சடையம்பட்டியிலும். இதைப்பார்த்து கடுப்பாகிப்போன அவர் சொன்னார் மேட்டுப்பட்டியில் இவ்வளவு மக்கள் இருக்கமாட்டார்கள் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அங்கிருக்கும் மக்கள் உயர்ந்த ஜாதிக்காரர்களும் இன்னொன்று அதிமுகவின் ஸ்திரமான கட்சிமக்களும் சமீபத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரும் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.அங்கு காத்திருந்த மனித வெள்ளத்தைப் பார்த்ததும் 'அடப்பாவிகளா என்ன மாயஞ்செஞ்சீங்கடா' என்று கத்தி விட்டார்.இதே நிலைமைதான் பதினாறு பேருந்து நிறுத்தங்களிலும்.

28.11.10

நந்தலாலா - அபூர்வமாகப் பூக்கும் தமிழ்ச்சினிமா.

எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.பத்து இருபது வருடங் களுக்குப் பிறகு ஆசையோடு பார்க்கப்போன பகல்காட்சி.நீல நிறப்படுதாவை விலக்கியபோது உள்ளிருந்த நூறுபேரில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.காட்சி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.விசிலடிக்க,கட்டவுட் வைக்க, தாள்களைக் கிழித்து தூவி விட யாரும் வரவில்லை. அப்பொழுது அகி பள்ளிக் கூடத்தி லிருந்து வந்து கொண்டிருந்தான்.திருவனந்தபுரம் கலாபவன் அரங்கில் பார்த்த ஒரு நூறு திரையிடல்களில் இருந்த அமைதி திரும்பிவந்தது.அங்கே பார்த்த ஒவ்வொரு படத்தின் முடிவிலும் இப்படியொரு படத்தைத்தமிழில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் வந்து போகும். அந்த ஏக்கத்தை தனிக்கிற படம் நந்தலாலா.பாஸ்கர் மணி கீழ்பாக்கம் மருத்துவம்னையிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் 'அகி' என்கிற அகிலேஷ் வீட்டிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் இருவரையும் சேர்த்துவைக்கிற தாயின் தாகம்.தங்களின் தாயைத்தேடி நடக்கிற பயணம் தான் கதை.

அவர்கள் பயணிக்கிற வழியெங்கும் தட்டுப்படுகிற மனிதர்கள் எளிதில் கோபப்படுகிறவர்களாகவும்,நிதானித்து புரிந்து கொண்ட பின் மனிதம் வழிந்தோடுகின்ற ஈர மனசுக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.ஒரு நெடிய பயணத்தில் கரம் கோர்க்கிற ரெண்டு குழந்தைகளும் கால்நடையாகவே தொடர்கிறார்கள்.அவர்களை ஏனையோர் சந்திக்கிற ஒவ்வொரு பகுதியும் தனித்தனி குறும்படம்.அவர்களை நடக்க விடாமல் எல்லோரும் கைகளில் தாங்கி, முதுகில் ஏற்றிக்கடத்தி விடுகிற கவிதை நிகழ்வுகள்.இதில் இன்னோவா காரில் வரும் புதுமணத் தம்பதிகள் தவிர எல்லோரும் ஒரே வகை.

க்ளோசப் காட்சிகளை தொட்டால் சினுங்கி,ரயில் பூச்சி,ஆலம் விழுதின் நுனி,பிறந்த குழந்தையின் விரல்களைப்போன்ற வெளிர் மஞ்சள் நுனி ஆகியவற்றுக்கு ஒதுக்கி வைத்து விடுகிறார். மற்ற எல்லாவற்றையும் உணர்வு பூர்வமான பிரதிபலிப்புக்கு அர்ப்பனித்து விடுகிறார்.கலவரம் நடக்கும் பகுதியில் வந்து போகிற மாற்றுத்திறனாளியும்,கூட்டு கற்பழிப்புக்குள்ளாகிற பெண்ணும்,சாலையோர விபச்சாரியும் இந்த உலகத்துக் உரத்த மௌனத்தில் ஏதேதோ சொல்லிவிட்டுப் போகிறார்கள்.சாலையோர விபாச்சாரி விவரிக்கிற பழய்ய வாழ்க்கை ஒரு கண்ணீர்க்கவிதை.வசனகர்த்தாவை துக்கிவைத்துக் கொண்டாடவேண்டும்.

பெரும்பாலான தமிழ்சினிமாவின் கதாநாயகர்களின் முதல் பிரவேசத்தை, காமிரா காலில் தொடங்கி  மேலேறி முகத்துக்கு கொண்டு வரும். சாயங்கால மானால் மாடு வீடு திரும்பும் பாதைக்கு அணிசையாய் இழுத்துச் செல்வது போல. நாயகிகளின் இடுப்பையும், மார்பகத்தையும் கண்டால் நகராமல் இருப்பது எல்லாம் தமிழ்சினிமா காமிராக் கலாச்சாரம். இந்தப்படம் முழுக்க முழங்கால்களுக்கு கீழேயே அதிக காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.எதோஒரு ஜப்பனியப்படத்தின் தழுவல் தானென்றாலும்,இப்படியும் படம் எடுக்காலாம் பாருங்கள் என்று முகத்திலடிக்கிற முயற்சி இது.சூறைக்காற்றில் மேலெ ழும்பும்  மக்கும் மக்காத குப்பைகளுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த அரிதான தமிழ் சினிமா.இடைவேளையில் வெளிவந்த போது வந்திருந்த பத்து முப்பது இளைஞர்களின் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

75 வருட திரைப்படங்கள் தமிழ் ரத்தங்களில் ஏற்றி வைத்திருக்கிற சாக்கடையை  ஒன்றிரண்டு திரைப்படங்கள் மூலம் சுத்தப்படுத்திவிட முடியாது. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற காட்சிகள்.கஞ்சிக்கில்லாத ஏழை நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில் வசிக்கிற செட்டுகள்.லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை  ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும். ஆனால் பாருங்கள் மொத்த தமிழ்ச் சினிமாவின் குறிப்பிட்டுச் சொல்லுகிற படங்கள் எல்லாமே அந்தந்த காலத்தில் ஓடாமல் முடங்கிய மொக்கைப்படம் என்பது தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடு.

இதில் விமர்சிக்கவேண்டிய இடங்கள் இல்லையா என்றால் இருக்கிறது. எனினும் அதைப் புறந்தள்ளிவிட்டு தூக்கிப் பிடிக்கவேண்டிய படைப்பு இது.இல்லையென்றால் 200 கோடி,162 கோடி செலவு செய்து தயாரிக்கும் கதையில்லாத திரைப்படம் தான் படைப்பு என்று சந்தைக்கு வரும்.

காட்சிகளின் உறுத்தலற்ற பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இசை இழுத்துச் செல்லுகிறது. இந்திய திரை இசையில் பின்னணி இசைக்கு புதிய பரிணாமமும்,அழகிய பரிமாணமும் கொடுத்து நிறுத்தி வைத்திருப்பவர் இளையராஜாதான்.ஒரு ஏழை வீட்டுக்கு வரும் அதிகாரியின் பிரவேசம் என்ன மனநிலையை உருவாக்கும் என்பதை குஞ்சுக் கோழியின் கெக்கெக் சத்தத்தை சேர்த்து பிரம்மிப்பூட்டியவர் இளையராஜா.படம் முள்ளும் மலரும் இடம் காளியின் வீட்டுக்கு வரும் எஞ்சினியரின் வருகை.ஒரு 900 இந்தியத் திரைப் படங்களுக்கு இசையமைத்த அவரின் மேதமை மத்திய அரசால் நான்கு முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

காட்சி ஊடகத்தின் மீதும், கதை மீதும்  அதீத நம்பிக்கை வைத்திருக்கிறது இந்த நந்தலாலா.அதற்கு ஈடு கொடுக்கிற அகிலேஷ்,பாஸ்கர்மணி அகியோருக்கு இணையாக இசை கூடவே நடக்கிறது.இருவரும் தங்கள் தாயைச்சந்திக்கிற  மனசை உலுக்குகிற காட்சியை கண்ணீர் விடாமல் சந்திப்பது சிரமம். அந்த ஈரம் அடுத்தொரு தரமான தமிழ்ச்சினிமா வரும் வரை காயாமல் காத்திருக்கும். நம்பிக்கையோடு.

26.11.10

எது கலாச்சாரம் ?, யார் அதை வடிவமைத்தார் ?

சின்னவயசில் கோழியச்சுற்றுகிற சேவலைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழும் இவை இரண்டும் எப்போது கல்யாணம் பண்னிக்கொண்டன என்று.தாய் பிற ஆடவனுடன் பேசும்போது சேலைத் தலைப்பை பிடித்து இழுத்து வீட்டுக்கு வா என்று அடம்பிடிக்காத குழந்தைகள் இருப்பதில்லை.அது என்ன வகையான பொஷெசிவ் என்று இனம் கண்டு பிடிக்க முடியாது.எழுத்து, சிந்தனை, செயல் எல்லாமே ஆண்வயப்பட்டதாகவே களத்திற்கு வருகிறது. கொஞ்சம் குறைய நிறைய்ய ஆணவத்தோடும் களமிறங்குகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு காதல் பிடிக்கும்.இந்தக் கேள்விக்கு தயங்காமல் 99.99 சதம் ஆதரவுக்குரல் தான் வரும்.எத்தனை தகப்பன்களுக்கு காதலைப்பிடிக்கும்,அதுவும் பெண்ணைப்பெற்ற தகப்பன்களுக்கு?.மௌனம்,திசை திருப்பல் வியாக்கியானம் தான் வரும்.என் சொந்த தாய் மாமன் அவனுக்கு  என்னைவிட ஒரே ஒரு வயது
தான் அதிகம்.கல்லூரிக்காலத்தில் அவன் காதல் பிரசித்தமானது.ஒரு ஐந்துவருடம் ஊரில் அவன் பேச்சுத்தான் பேசப்படும்.அவனைக்காதலித்த பெண்னுக்கு அடி உதை. அப்புறம் பள்ளிக்குடம் கட்.அப்புறம் வீட்டைவிட்டு வெளியே போகும் சுதந்திரம் கட்.எல்லா வேலிகளில் இருந்தும் காதல்  ஒவ்வொரு முறையும் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொடுக்கும். கொடுத்தது.காதலுக்கு ஆதரவான கோஷ்டி,எதிரான கோஷ்டி என ஊர் ரெண்டானது.இறுதியில் அந்தப்பெண்ணின் குடும்பம் ஊரைக்காலி பண்ணிக் கொண்டு  ஒரேயடியாக வெளியூர் போய்விட்டார்கள்.

ஆனல் அது இறுதியல்ல.போன இடத்தில் அவளுக்கு பேய் பிடித்துக்கொண்டது.பிடித்த பேயை விரட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் கொண்டு போனார்கள்.இவனும் போனான்.'கள்ளம்பெருசா,காப்பாம்பெருசா'என்கிற சொலவடை முழுதாகப் புரிந்தது.பிறகு போலீஸ் டேஷன், அவனுக்கு ரிமாண்ட். அத்தோடு முடிந்து போனதென்று அவனும் அவளும் உட்பட ரெண்டு பக்கமும் ஒதுங்கிக் கொண்டார்கள்.ரெண்டு வருடம் கழித்து திடீரென ஒரு நாள்மாலையும் கழுத்துமாக வந்து நின்றார்கள். அலுத்துப்போன பெற்றோர்கள்,அதற்குமேல் ஏதும் செய்ய முடியதவர்களாக பெற்றோர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.பின் ஏற்றுக்கொண்டார்கள்.இது, இந்தக் கதை ரெண்டு ஜாதிகளுக்குள் இல்லை நண்பர்களே கவிஞர் மீராவின் கவிதையை போல செம்புலப்பெயநீர் சொந்தத்துக்குள். காவியத்தில்  காதலென்றால் கனிந்துருகும் மானிடம் நமது.அது இன்னொரு வீட்டில் நடக்கும் போது மட்டும்.

இருபது வருடங்கள் ஓடிப்போனது,என்னிடம் ஒரு பிராது வந்தது 'ஊரில் ஒரு பய நம்ம பொண்ணு பின்னால சுத்துறான் என்ன செய்யலாந் தம்பி' ஒரு பெரியவர் வந்து சொன்னார். யார் பொண்ணு என்கிற விபரம் கெட்டேன்.  சொன்னார்.தாய் தகப்பன் என்ன சொல்றாங்க என்று கேட்டேன். 'கொதிச்சுப் போயி  இருக்காங்க,கேசு குடுக்கலாமா ,ரெண்டு தட்டு தட்டி வுடலாமா ஒரு ரோசன சொல்லு' என்றார்.ஒன்னுஞ்செய்ய வேண்டாம் புருசனும் பொண்டாட்டி யையும் தனியா ஒக்காந்து அவுக எப்பிடிக்கல்யாணம் முடிச்சாங்கண்ணு யோசிக்கச் சொல்லுங்க, எல்லாஞ்சுமூகமா முடிஞ்சிரும் என்று சொன்னேன்.அதன் பிறகு 'மழையில்ல,தண்ணியில்ல,இந்த பொம்பள ஆச்சியில வெலவாசியப்பாரு ஒங்க கம்மூனிஸ்ட்காரங்க சொல்றது சர்த்தாம்பா' என்று அரசியல் பேசிவிட்டு போய்விட்டார்.தூது அனுப்பிய தாய் தகப்பன் தான் முதலில் சொன்ன காதலர்கள்.முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை இங்கு,ஏராளம்.

கேட்டால் 'எங்கள் காதல் தெய்வீகமானது,இதுக சும்மா டைம்பாசுக்கு கடல போடுதுக' என்று சொல்லுவார்கள்.காலங்காலமாக பெற்றோர்களின் வார்த்தைகள் மாறிவரும் கருத்து மாறாது. இந்தச்சாதாரணக் கதையை வலையுலகத்துக்குள் நுழைந்து அவர்கள் படிக்கப் போவதில்லை என்கிற தைர்யத்தில் எழுதிவிட்டேன்.ஆனால் யாரும் வெளியில்சொல்ல முடியாத காதல் கதைகள் கோடி கோடி கொட்டிக்கிடக்கிறது. அவை யாவும் கெட்டிப்படுத்தப்பட்ட சமூகச்சுவர்களின் மறுபக்கம் உருவாகும் இருட்டுக்குள் புதைந்து கிடக்கிறது.வண்ண வண்ணக்கோலங்கள் படம் பார்க்கிற யாருக்கும் அதில் எந்த விமர்சனமும் வராது உள்ளூர ரசிப்போம்.அந்தக் கதை மாந்தர்களுக்கு கிடைக்கிற காட்டு சுதந்திரத்தை ஒரு நாளாவது அனுபவிக்கவேண்டும் என்கிற ஆவல் வந்து போகும்.அது துஷ்யந்தனுக்கும் சாகுந்தலைக்குமென்றால் காவியமாகும்.நடப்பில் என்றால் கள்ளத்தனமாகும்.

இது சரியா தவறா என்கிற வாதம் ஒரு புறம் கிடக்கட்டும்.இந்த வாதமே தவறானது இல்லை ஒருதலைப்பட்சமானது என்று புரியலாம்.இங்கு நடப்பது மோனோ ஆக்டிங் மட்டுமே.ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம்.'எலே ஊதாரிப்பெயலே நீ பெரிய சண்டியர்னு ஓண்ட அடங்கிப்போலடா,இந்த பச்சமண்ணுக தெருவுல அலையுமேங்குற கவலயிலதான் ஓண்ட சவண்டு போய்க்கெடக்கேன்' ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல் அமுங்கிப்போகலாம்.சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத மௌனத்துக்கு சக்தி அதிகம்.அடங்கிப்போவது வெடித்துச் சிதறுவது இந்த இரண்டில் எது கலாச்சாரம் என்பதுதான் கேள்வி இப்போது ?

நண்பர்களே ஒரு தென்மாவட்டத்து குக்கிராமத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து சாத்தூருக்கு வந்த புரிதல் இது.சென்னைப் பெருநகர் வாழ்க்கை,வேகம்,நெரிசல் இவையெல்லாம் எனக்கு சர்க்கஸ் பார்க்கிற அனுபவம்தான்.அங்கிருந்து  கிளம்புகிற இந்த வாதத்தை முழுமையாக அறிய வலை ஒரு வெளியாகிறது. எனவே

உயர்திரு மருத்துவர் ருத்ரன்,
மதிப்பிற்குறிய மருத்துவர் ஷாலினி,
பாலாண்ணா (வானம்பாடிகள்),
யாராவது ஒரு பெண்பதிவர் 
மற்றும் மாதவராஜ்

ஆகியோர் விரிவாகப்பேசினால் தேவலாம்.

25.11.10

மறதியெனும் புதை சேற்றுக்குள்

'mission scandal eradication' திருப்திகரமாக முடிந்தது.

இனி  புரட்சிப்பெண் vs சுதந்திரப்போராட்ட தியாகி வழக்கில் ஊடகங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தும்.உலக வரலாற்றில் முதன் முறையாக அரங்கேறும் இந்த குடும்பச் சண்டையின் ருசிகர ,எதிர்பாராத, ஹேர்பின் திருப்பங்கள் ஆகியவற்றை தொகுத்துவழங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள். இது போதாதென்று 162 கோடி மெகா பட்ஜெட்டில் மொழிமற்றம் செய்யப்பாடப்போகிறது ஒரு உலகமஹா காவியம்.அதற்கும் கணிசமான பக்கங்கள் ஒதுக்கியே தீரவேண்டும்.

மறதி எனும் புதைசேற்றில் நுற்றாண்டு  சூதாட்டம் தொடர்கிறது கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை காலம் தொடரும்?

24.11.10

உலகமாதா எண் 2.

கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் முந்தி அறிவியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்தான்.ஒல்லியான ஒசரமானஉருவம்.கொஞ்சம் இலக்கிய ஆர்வம்,வெகு தீவிரமான பேச்சாளி.வழக்காடு மன்றங்களில் தனக்கு பிடித்த தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அப்படியே அரசியல்வாதி மாதிரி உச்சஸ்தாயியில் பேசுவான்.அப்போதெல்லாம் கிலோக்கணக்கில் அவனுக்கு லந்து கொடுப்பேன்.அப்போது எனது நண்பன் முருகையா ஒரு புரட்சிகரப் பேச்சாளன் அவனோடு எல்லா இடங்களுக்கும் போவேன்.நான் நல்லாப் பாடுவேன் என்று அறிமுகம் செய்து பாட்டுப் போட்டியில் பேரும் கொடுத்து தள்ளிவிட்டு விடுவான்.மேடையில் எனக்கு முன்னாடிப் பாடியவர்கள் கொஞ்சம் முறைப்படி சங்கீதம் கற்றவகளாக வந்து ஒரு போடு போட்டு விட்டுப்  போனப் பிறகு, எனது சிவாஜி பாடல்கள் கரகரத்துவிடும்.

வேலை கிடைத்து ஒரு பகல் முழுக்க பயணம் செய்து கிளைக்குள் நுழையும் போது பெரிய அதிர்ச்சி காந்த்திருந்தது. அங்கே அவன் உட்கார்ந்திருந்தான். இரண்டு நாட்கள் என்னோடு தங்கி ரூம் பார்த்து விட்டு விட்டுப் போக வேண்டு மென்று வந்திருந்தார் எனது சித்தப்பா. ஆனால் அவன் இருக்கும் நிம்மதியில் சாயங்காலமே கிளம்பிவிட்டார்.அந்த வாலிபக் காலத்தில் பீறிட்டுக் கிளம்பிய உற்சாகம்,பெண்களைப் பார்க்கிறபோது ஏற்படுகிற குறு குறுப்பு,அந்யாயத்தைக் கண்டு வெடிக்கிற கோபம் இவற்றில் என்னோடு கூடவந்த தோழன் அவன். ஒருவருக்கொருவர் தோற்றுப்போன காதலைச் சொல்லி இறுக்கமானோம். பின்னர் குடும்பப் பின்னணியைச் சொல்லி இன்னும் நெருக்கமானோம்.அவன் குடும்பக் கதை சொல்லும்போது எனது வறுமை ரொம்பச் சிறியதாகத் தெரிந்தது.ஒரே ஒரு மாணாவரிக்காடு, மூன்று குழந்தைகள்,புகைப்படத்தில் கணவன் இவற்றோடு தன்னந்தனியே வாழ்வை எதிர்கொண்ட தாயின் பிம்பம் அரிச்சலாக இருந்தது.மாற்றலாகி ஊருக்கு வந்த சிலமாதங்களில் அவன் வீட்டுக்குப்போனேன். நானே வரைந்து கொண்ட தாயின் சித்திரம்  நேரில் பார்க்கும்போது கலைந்து நடக்கும் அமைதிக்கடல் மாதிரி இருந்தார்.

அப்புறம், எப்போது வீட்டுக்குப் போனாலும் அடுப்படியில், துவைகல்லில், முற்றத்தில் காயப்போட்ட கோதுமை இப்படித் தான் வெளிப்படுவார்கள். பர்த்ததும் சோபையாய் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு 'றாய்ய,டீ தாஹு' என்று சொல்லுவார்கள். உடலும், மனசும்,உடையும் வெண்மையான அந்தத்தாய். அவனுக்கு தெலுங்கு தெரியாது என்று சொன்னப்பிறகு அதைப் பொருட் படுத்தாமல் தமிழுக்கு மாறிவிடுவார்கள்.தேநீர் தானே வரப்போகிறது என்று பேசாமல்லிருந்தால்,கேட்காமலே சாப்பாடு போட்டு வைத்துவிடும் தாயுள்ளம் அவர்களுக்கு.ஒரு மாத இடைவெளியில் மீண்டும் வீட்டுக்குப் போகும்போது மறக்காமல் 'றாய்யா,கூச்சுண்டு' என்று சொல்லுவார்கள்.நான் சில நேரம் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசுவேன்.ஆனால் பல நேரங்களில் எனக்குத் தெரிந்த தெலுங்கில் பதில்பேசிவிடுவேன்.

தன் மகனோடு நெருக்கமாகப் பழகுகிறவர்கள் தன் சுயஜாதிக்காரர்களாக மட்டுமே இருக்க முடியும் என்கிற நம்பிக்கை.அது ஒரு மாணாவாரிக் குடும்பத்தின் சொச்சம் என்கிற விமர்சனம் எனக்குள் இருந்தது.கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அது இந்த சமூக அழுக்கின் மிச்சம் என்பதை உணரலாம்.வீடு குழந்தைகள் வறுமை.காடு,பாடு,பற்றாக்குறை இதற்குள்ளிருந்தே மீளமுடியாத பெண்ணை வீட்டுக்குள்ளிருந்து கூட கைதுக்கிவிட முன் முயற்சி எடுக்காத சொந்த ஆதிக்கம்.அதைக் கலாச்சாரத்தின் பெயரால் சகித்துப்போகிற பெண்கள் பெரும்பாண்மை வகிக்கும் சமூகம்.ஒவ்வொரு ஊரிலும் கூட்டமாக  ஒரு ஜாதியை ஒதுக்கி வைத்திருப்பது மேக்ரோ ஆதிக்கம்.அது போல ஒவ்வொரு வீட்டு அடுப்படியிலும் ஒதுக்கி வைத்திருப்பது மைக்ரோ ஏற்பாடு. இந்த ரெண்டையும் எதிர்த்து குரல் எழுப்பியவர்களை ரொம்பச் சுளுவாக நாத்திகர்கள் என்று ஒதுக்கிவிவைத்து விட்டது எவ்வளவு பெரிய கொடுமை.

இதைப்புரிந்து கொள்ளும்போது அந்த வெள்ளை உள்ளம் கொண்ட தாய் என் மதிப்பில் வெகுவக உயர்ந்தார்.நான் அவரோடு  தெலுங்கு மட்டுமே பேசுவது என்கிற முடிவெடுத்தேன். எனது வக்கபுலேரியில் மேலும் அதிக தெலுங்கு வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன்.அடுத்த முறை போகும்போது அவர்கள் இல்லை.கடைக்குப்போயிருந்தார்கள். வந்ததும்  'எப்பய்யா வந்தே, அண்ணன் ஊருக்கு போயிருக்கான்,வீட்டுக்காரியையும் பேரனையும் கூட்டிட்டு வரலாமில்லய்யா' என்றார்கள். ஏதேதோ இற்று இடிந்து விழும் சத்தம் கேட்டது.நான் குனிந்திருந்தேன்.நீட்டிய கையில் வரக்காப்பி இருந்தது. ஆனால் பால் வாடை அதிகமாக அடித்தது.

23.11.10

நுங்கும் நுறையாக ஓடும் காட்டாறுகள்.

இந்த மழைக்காலத்தில் பூமியெங்கும் நீராய் நிறம்பி வழிகிறது.சாத்தூரிலிருந்து மதுரை வரை குறுக்கே வருகிற அர்ச்சுனா,கௌசிகா காட்டாறுகள் நுங்கும் நுறையுமாக இழுத்துக்கொண்டு போகிறது.வேலிச்செடிகள் கரையில் அடைத்துக்கிடக்கும் பெரிய பொந்துகளாய்க்கிடந்த கரட்டு ஓடைகள் இப்போது கரை ததும்பி குதூகலமாக ஓடுகின்றன.மதுரையைக்கடக்கிற போதெல்லாம் அந்த வைகையைப் பார்க்கும் போது ஏக்கமும் பெருமூச்சும் மட்டும் வந்து போகும்.இதோ ரெண்டுகரையும் அடைத்துக்கொண்டு ஏப்பம் விடுகிறது வையை.சனம் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு பாலங்களில் நின்று நீரோட்டம் பார்க்கிறதுகள்.அடித்துச்செல்லும் மரக்கிளைகளில் மனசை ஓட விட்டு மெய்மறக்கிற கணங்கள் அலாதியானவை.

திரும்புகிற திசையெல்லாம் பசேலெனக் காடுகள் கண்னைப் பறிக்கின்றன. பிளந்து போட்ட பிளாட்டுகளின் நடுகற்களை மறைத்துக்கொண்டு கோரைப் புற்கள் பச்சைக் கொடியுயர்த்துகின்றன.உச்சிமத்தியானம் ஊதக்காத்து அடிக் கிறது எங்கள் வெயில் தேசத்தில்.எங்கு தான் மறைந்துகிடந்தனவோ இத்தனை காலம்,  இந்த தாரை தப்பட்டை முழங்குகிற தவளைகளும்,தாழப் பறக்கிற தட்டானும், ஈசலும், நெய்க்குருவிகளும். மொது மொதுவெனக் கிளம்பி வசந்த விழாக்கொண்டாடுதுகள்.

அரட்டாவளையை (அரைத்தவளை) மீனென்று நினைத்து குளம் குட்டைகளில் அலைந்து திரிந்த காலங்கள் மெல்லிதாய் வந்து போகிறது.பிடித்த அரட்டா வளையைச் மேல் சட்டையில் அள்ளிக்கொண்டுவந்து அம்மாவிடம்
கொடுத்து  கொழம்பு வைக்கச் சொல்லி பாராட்டு வாங்கலாமென்று அப்துல் கலாம் கண்டுகொண்டு போனதும்.ஒத்தப்பிள்ளையப்பெத்து இப்பிடி அரக் கிறுக்குப்பிடிச்சு அலையுதே. எலெ நீ என்ன சீனாக்காரனா தவளையத் திங்கச்சொல்ற' என்று அம்மா செல்லமாய் திட்டியதும்.வந்து அலையடிக்குது.

செக்கச்செவேலென கிடக்கும் கண்மாய்த்தண்ணீரில் ஆண் பெண் வித்தியாச மில்லாமல் நீச்சலடிச்ச காலம் வந்து போகுது.முங்கு நீச்சலடிச்சு வந்து சரசுவின் காலை அவளுக்குத் தெரியாமல் பிடித்த நிமிடங்கள் அந்த நேரத்து சாகசங்கள்.அதே கண்மாய்த் தண்ணீரில் முங்கி சாகக்கிடந்த பிச்சைக்கனியை தூக்கிக்கொண்டு வந்ததும். வண்டியக் கொடசாய்ச்சி சக்கரத்தில் வச்சு சுத்தியதும். ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த  நிஜ ஞாபகங்கள்.

22.11.10

ஊடகச்செய்திகளும் மக்கள் சேதிகளும்.

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தொழிற்சங்கம்,செல்வி ஜெயலலிதா தொழிற்சங்கத்தை ஆதரித்தது. செய்தி.

துணை நடிகர் முதல் பிரபலநடிகர்வரை தங்களுக்கென்று தனித் தனியாக தொழிற்சங்கம் தொடங்க அவரவர் தனி மேலாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்களாம். வதந்தி.
0

அடுத்தடுத்து தோல்வி,நிதானமாக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் விக்ரம்.செய்தி

டிட்டர் லெனின் எடுத்த நாக் அவுட் குறும்படமும்,அடுத்து ஒரு தேயிலைக்கம்பெனி எடுத்த
விளம்பரப்படமும் என்ன கணக்கில் வரும் ?.இப்போது காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும் மணப்புறம் கோல்டு லோன் விளம்பரம் வெற்றியா,தோல்வியா?.இல்லை கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சங்கர்,மணிரத்னம் படங்களில் சம்பாதித்தது தோல்வியா ? வெவரமாக் கேட்டுச் சொல்லுங்க. பொதுஜனம் சந்தேகக் கேள்வி.
0
கன மழையால் விருதுநகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செய்தி.

ரே ஒரு நாள் வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்தது செய்தியா வருது, வருஷம் முழுக்க ஆறு,ஓடை,கண்மாய்,குளங்களுக்குள் வீடுகள் புகுந்ததப்பத்தி எழுதறதே இல்லை ஏன்.நீர் நிலைகள் அங்கலாய்ப்பு.

கோடிக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை போட்டார்கள். செய்தி

ரெண்டு மாசத்துக்கு இம்சையிலிருந்து விடுதலை. மனைவிமார்கள் உற்சாகம்.ரெண்டுமாசத்துக்கு யாவாரமே நடக்காது அந்திக்கடைக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகிகளும் வருத்தம்.
0
விசாரணக்கைதி கொலைசெய்யப்பட்டதால் பெரியகுளத்தில் பதட்டம்.

ரே மாசத்துல ரெண்டு கொலை செய்திருக்கிறோம் ஒன்றுக்கு இனிப்புக்கொடுத்து மாலை மரியாதை பண்றாங்க.இன்னொன்னுக்கு கலவரம் பண்றாங்க. குழப்பம்.

21.11.10

பேருந்து நிலையத்தின் புகைப்படம்

ரெண்டு வாயில்கள் உள்ள அந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயில் எப்போதும் சிறுநீர் வாடை காரமாக நெடிக்கும்.அங்கிங்கெனாதபடி செத்துப்போன சித்தப்பு வுக்கு நினவஞ்சலி சுவரொட்டி இருக்கும்.அங்கு ஒதுங்குகிறவர்களை அருவெறுப்புடன் பார்த்த நானே ஒரு மழைநாளில் ஒதுங்கி குனிந்து கொண்டே திரும்பி வந்தேன்.ரெண்டே ரெண்டு சைக்கிள் ரிக்ஷா இருக்கும்.ஒரு நாள் கூட யாரும் அதில் ஏறிப்பயணம் செய்த காட்சி எனக்கு நினைவுக்கு வரவே இல்லை.ஆனால் அவர்களைக்கடக்கும் போதெல்லாம் குளிர்காலத்தில் கொசுக்களை விரட்ட போடும் புகை மூட்ட வாசனை வரும்.

அதைக்கடந்து போனால் பூவிற்கிற பெண்.ஒரு நாளும் அவர் தலையில் பூவிருந்து பார்த்ததில்லை.ஒரு ஆரு மாதத்தில் பரிச்சயமாகிப்போனபின் 'பூ வாங்கிட்டுபோங்க சார்' சொல்வார்.யாருக்கு வாங்கிட்டுப்போக என்று கேட்டால்.கல்யாணமாகியிருந்தா வீட்டுக்கரம்மாவுக்கு,இல்லாட்டசாமிக்கு என்று சொல்லுவார்.முதலாவது பழக்கமில்லை ரெண்டாவது நம்பிக்கை யில்லை என்று சொன்னால்.'இந்தக்காலத்துலயும் இப்பிடியா ?எங்க வீட்டு அண்ணாச்சி காத்தியல் ஒண்ணாந்தேதி போட்ற மாலையை தைப்பொங்கல் கறிநாளாண்ணிக்குத் தான் கழட்டுவார்'.என்று சொல்லும்.பலநாள் சிரித்த படியே கடந்து போகலாம்.

அதைத்தாண்டி வேப்ப மரத்துக்கடியில் ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை போட்ட வெளிமாநிலத்துக்காரன் உட்கார்ந்திருப்பான். ஒரே ஒரு சூட்கேஸும் ஒரு மரப்பலகையும் கொண்டு வருவான். விரித்து வைத்து,ஒரு ஒலிபெருக்கியையும் டேப் ரிக்கர்டரையும் இணைப்பான்.பத்தி பொருத்தி வைத்து ஒலிபெருக்கியை உசுப்பி விடுவான். அதிர்ஷ்டக்கல் மோதிரம்.அதை வாங்கி உபயோகித்தால் உண்டாகும் நண்மை களைப் பட்டியல் இடும் ஒலி பெருக்கி. மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வியாபாரத்தில் நஷ்டம்,மாமியார் மருமகள் சண்டை,கணவன் மனைவி பிணக்கு,சந்தேகம்,பில்லி சூனியம், இல்லற இன்பம் என அந்த சிவகாசிப் பேருந்து நிலையத்துக்கு வந்து போகும் அத்தனை பேரின் புகாருக்கும் ஒரே கல்லில் தீர்விருப்பதாகச் சொல்லும்.

அந்த அதிர்ச்சியைத் தாங்கி நின்றால் அடுத்த இடியை இறக்கும். வாங்கி கொண்டுபோய் இரண்டு வாரத்தில் பலனில்லையென்றால் பணம் வாபஸ் பண்ணப்படுமாம். அப்படிச்சொல்லிவிட்டு மராட்டிய மாநிலத்தின் ஒரு குக்கிராமத்து பேர், பின்கோடோ டு விலாசமும் சொல்லும்.கல்லின் விலை எவ்வளவு தெரியுமா?, வெறும் பத்து ரூபாய்.'இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சியை சிவாகாசித் தொகுதியில் ஜெயிக்கவைக்கணும் அதற்கு இந்தகல்லை வைத்து ஏதாவது செய்ய முடியுமா' என்று கேட்டார் ஒரு குறும்புக்கார பக்தர். முறைத்துவிட்டு தலை கவிழ்ந்து கொள்வான்.உள்ளே நுழைகிற சஞ்சல முகத்துக் காரர்களை எல்லாம் அளந்து, அழைப்பான்.எப்போதாவது வரும் ஒரு கிராமத்து மனிதரை எதிர்பார்த்து தனது தேநீர் தாகத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே  இருப்பான்.

அங்கிருந்து கொஞ்சம் தள்ளி ஏட்டு கண்ணன் நிற்பார்.யாரையும் அதட்டமாட்டார்,என்ன நடந்தாலும் அதிர்ந்து பேச மாட்டார்.மாலை ஐந்து மணி பேருந்துகளில் நெறிபொழியும் கூட்டத்தை நெறிப்படுத்தவும் மாட்டார். அவ்வளவு அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் அவரை எப்படி அந்த காவல் துறை சகித்துக்கொள்கிறதென்று புரியவில்லை.எனக்குத்தெரிந்த பூசாரியின் மகன் பரமசாது .குங்குமமும், துண்ணுரும் இல்லாமல் குளிக்கக் கூடப்போகமாட்டான்.விதவிதமாய் மீசை வைக்கவேண்டிய கல்லூரி நாட்களில்கூட மழித்துக்கொண்டு திரிந்தவன்.போலீசுக்கு தேர்வான மறுநாளே கிடா மீசை வளர்த்துக்கொண்டான். ஏட்டுக்கண்ணன் போட்டிருக்கிற உடுப்பைத்தவிர போலீசுக்கான அடையாளம் ஏதுமிருக்காது.அப்படிப்பட்ட ஆளிருந்தால் ஜேப்படிக்காரனுக்கு கொண்டாட்டம் தானே?.

வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் அங்கு வரும் அந்த வெளிர்நீள கால்சராய்க்காரனுக்கு கூட்டம் கூடும்நாட்களெல்லாம் கொண்டாட்டம் தான். சாத்தூர்,விருதுநகர்,ஸ்ரீவில்லிப்புத்தூர்,வெம்பக்கோட்டை போன்ற பிரதான வழிகளில் தான் அங்கிருந்து கிளம்புகிற எல்லாப்பேருந்தும் போகும். எல்லாப் பேருந்திலும் ஏறி இறங்கிவிடும் அவனது  வேலை நேரம் இரண்டு மூன்று நிமிடங்களில் முடிந்து போகும்.எதுவும் கிடைக்காத நேரத்தில் ஒதுங்கி ஒரு பீடி பற்றவைத்துக்கொள்வான்,சுபாரி பாக்குப்போட்டு நாற்றம் குறைத்துக் கொள்வான்.பையில் இருக்கும்  சீப்பை எடுத்து தலைவாரிக்கொள்வான்.யாரும் சந்தேகப்படக் கூடாது என்கிற ஜாக்கிரதை.பெரும்பாலும் பெண்களின் பின்னாடி நெருங்குவான்.அவர்கள் கவனத்தை மனிப்பர்சிலிருந்தோ, கைப்பையி லிருந்தோ திருப்புவதற்கு சில்மிஷத்தை நம்புவான்.ஒரு சாமான்யனான எனக்கு அவன் ஜேப்படிக்காரன் என்று தெரிந்திருக்கையில் அவனைக்கண்டுபிடிக்கிற தொழில் புரியும் ஏட்டுக்கண்ணனுக்கு ஏன் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதற்கு யூகங்கள் மட்டுமே பதிலாக இருக்கும்.

ஒரு கையில்லாத கட்டைக்குரல் கிருஷ்ணமூர்த்தியும், அவனது தொடுப்பு அட்டை கொடுத்து பணம் வசூலிக்கும் முக்காட்டுக்காரியும் வருவார்கள்.

(ஒரு நான்கு வருடம் காலையும், மாலையும் படிக்கும் புத்தகமாக இருந்தது.சில நேரம் தரமான திரைப்படம் காண்பிக்கப்படும் திரையரங்கு போலவும் மாறும்.இன்னும் சில நாட்கள் ச்சய் என்ன பொழப்பு என்று உருகி வெறுக்கும் நிகழ்வுகளும் திடும்மென வந்து விழும்.சிவகாசி என்னார் கே ஆர் பேருந்து நிலையம்.)

20.11.10

ஒரு சாமக் கனவும்,பிரம்ம முகூர்த்தவேளையும்.

பன்னாட்டு கம்பெனிகளிடம் கையேந்தாமல்,எல்லோருக்கும் சமாமய் எப்போதும் கிடைக்கிற காற்று.எந்த நடிகை நடிகரும் சிபாரிசு செய்யாமல் இயற்கையே குளிர்பதனம் செய்யது கொடுத்தகாற்று.
பிரம்ம முகூர்த்த வேலையில் கிடைக்கிற இலவச விடிகாலைக் காற்று.இதை அனுபவிக்க ஒரு பின்னிரவின் தூக்கத்தைத் தியாகம் செய்யவேண்டும்.அல்லது முன்னிரவின் ரசஞ்சாதமோ இல்லை ஒரு துர்க்கனவோ வந்து தூக்கத்தைக் கெடுக்கவேண்டும்.

வீட்டுக்குள்ளிருந்து வீசியெறியும் வெள்ளி உருண்டைகளாய் சிதறும் தண்ணீர் பட்டதும் சிலிர்த்துக்கொள்ளும் கதைகள் பொதிந்த வீட்டு  முற்றங்கள்.
எழுப்பி விட்ட குழந்தைப்போல கோலம் கேட்டுக் காத்திருக்கும் ஆதிப்பூமி.
உறக்கத்தின் மிச்சத்தைக்கண்களிலும்,கனவின் மிச்சத்தைக் கைகளிலுமாக கோலப் பொடிகளில் குழைத்துக் கொண்டு வரும் சோதரிகள்.

தகரக்குவளைகளில் உரசல்களில் எழுந்து வரும் தடதடப்பில் லயம் சேர்த்துக்கொண்டு மனதுக்கிசைந்த பாடலோடு  கடந்து போகும் பால்காரரின் சைக்கிள்.தலை எது கால் எது என்று தெரியாமல் படுத்துறங்கும் தார்ச் சாலை.எரிச்சல் தராத இறைச்சலோடு எப்போதாவது கடந்துபோகும் வாகனங்கள்.தண்ணீர் வற்றிப்போன அடிகுழாயில் தனது முழுபெலத்தையும் செலவழிக்கும் நகரத் தாதி அழகம்மாள்.

கச்சா மாவில் உப்பு உறைப்பு சரிபார்த்துவிட்டு முதல் உளுந்த வடையைப் பிளந்து வராத காக்கைக்கு ருசிபார்க்கக்கொடுக்கும் தேநீர்க்கடைக்காரர். ஆவன்னா.ராசா முதல் அக்கன்னா ராசாக்கள் வரை நாழிதழ் வழித் தெரிந்து கொள்ள உட்கார்ந்திருக்கும் முதல் போனி, பணி ஓய்வுபெற்ற பரந்தாமன் வாத்தியார். ஒரு நண்பர்கூட்டத்தின் உற்சாகம்,சிரிப்பு ஆதங்கம் சின்னச் சின்னச் சண்டை களின் மிச்சமாய்ச் சாலையின் விளிம்பில் சிதறிக்கிடக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர், சிகரெட்டுப்பெட்டி,காலியான புட்டி.அதைப் பார்த்து நினவில் கொண்டு வரலாம் ஒரு ரம்மியமான மதுவின் நாளை.

இந்த ரம்மியங்கள் யாவும் சிதைந்து போகாமல் வீடு திரும்பவேண்டுமென்றால் அந்த காட்சியைப்பார்க்காமல் திரும்ப வரவேண்டும்.

நாற்கர சாலைப் பாலத்தின் அடியில்.பீடிக்கங்கின் வெப்பத்தில் சுற்றுக்குளிரை சமாளித்தபடி ரெண்டுபேர்.அந்த விடிகாலையில் ஈக்கி விளக்கமார் தயாரிக்கும் தூரத்து மாவட்டத்துகாரர்கள்.அவர்கள் அருகில் குவிந்துகிடக்கும் துடைப்பங் களின் அளவில் தெரியும் தொலைந்து போன அவர்களின் ராத்தூக்கம். எந்திரகதியில் சுழலும் கைகளுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டி ருந்தது அவர்களின் கைப்பேசியில் ஒலித்த சினிமாப்பாடல்.

16.11.10

இது அரசியல் அல்ல, தொடர்தீபாவளி.

மூக்கைப் பொத்திக்கொண்டு
தன் பங்கு கழிவு சேர்க்கும்
கூவத்தின் தீராத நாற்றம்
தேசிய வாசனையானது.

கூவத்திலிருந்து ஒரு குவளை
சாக்கடையை அகற்றிவிட்டு
தேசிய நீரோட்டத்தை
தெளிந்த பன்னீராக்கியதாய்
திருப்திபடும் தேசம் எனது தேசம்

தெற்குக்கரை மோசம் என்று
வடக்குக்கரை வழக்குத்தொடர்கிறது.
வியாதி செய்யும் விந்தை மருத்துவம்
கறையைப்போக்க கறையே நிவாரணி.

இதோ...
உச்சக் கட்ட ஆட்டம் ஆரம்பம்
உனது எனது சுட்டு விரலில் கறைதடவ.

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி
சிறந்ததெனத்தேர்வு செய்ய நாள் வருகிறது.
வண்டியில்போய் வழியப்பலியாகும்
ஐந்து வருடத்தீபாவளி நெருங்குகிறது.

14.11.10

நோக்கியா,கோயம்முத்தூர்,மற்றும் அங்காடித்தெருக்கள்.

அன்று மூவரும் பேசிக்கொண்டிருந்த போது அண்ணன் சோலைமாணிக்கம் இது பற்றி பதைபதைக்கச்சொல்லிக்கொண்டிருந்தார்.தோழன் மாது இது இப்பதா உங்களுக்குத்தெரியுமா என்று கேட்டான்.கூடவே மேலும் பல தகவல்களைச் சொன்னான்.கைப்பேசி உபகரணத்தின் மதர் போடு எந்திரத்துக்குள் விழுந்து விட அதற்குள் தலையை விட்டு எடுக்கப்போன அம்பிகா இறந்து போனாள்.எந்திரச் சிங்கத்தின் வாய்க்குள் தலையை நுழைத்திருக்கிறாள்.இது சாதாரணமாக நிகழக்கூடியதுதான் எனினும் கட்டுப்பாட்டை இழந்த எந்திரம் சக ஊழியர்களின் கண்முன்னே தலையைத்துண்டாக்கியிருக்கிறது.கழுத்தை நெருக்கிக்கொண்டிருந்த  எந்திரத்தினை உடைத்து அம்பிகாவின் உயிரைக் காப்பாற்றத் துடித்திருக்கிறார்கள் அவர்கள்.அந்த மனிதாபிமானிகளின் கோரிக்கை ஈனக்குரலாகிப் போனதாம்,எந்திரத்தின் விலையைச்சொல்லிய அதிகாரியின் சிம்மக்குரலால்.

இந்த தகவல் சொல்லும்போதும் கேட்கும்போதும் உடல் பதை பதைக்கிறது.உடனிருந்த தோழர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்கிற கற்பனை மரணத்தைவிடக் கொடூரமானதாக இருக்கிறது. அந்தக்கொடூரம்தான் தொழில் நுட்பம்,லாபம்,போட்டி என்கிற பெயரில் தேசியமயமாக்கப்பட்டு வருகிறது.இது இந்த காலத்தின்  மிகப்பெரிய அவலம்.பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சமாளிக்கத்தான் பிறப்பெடுத்து வந்ததாக அறிமுகப்படுத்தப்படும் பன்னாட்டு நிறுவனங்கள். அது குளிரூட்டப்பட்டு கணினி மயமாக்கப்பட்ட கொட்டடி என்பதை கையில் கிடைக்கிற காகிதங்கள் மறக்கடித்துவிடுகின்றன.ஒரு கணினி அறைக்கும் இன்னொரு கணினி அறைக்கும் இடையில் இருக்கும் தடுப்புச்சுவர் தனக்கு மிக அருகில் உட்கார்ந்திருக்கும் மனிதன் யார் என்பதை மறைக்கிற பார்க்காமைச்சுவர்.அருகிலிருக்கும் சக ஊழியனுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனத்தெரியாமல் உலக அரசியல் உலக இலக்கியத்துக்குள் கால் நனைத்து என்ன ஆகிவிடப்போகிறது ?.

இதைவிட மோசம் கார்,செல்போன்,ரசாயன உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும்  சீருடை அனிந்த பண்ணையடிமைகளின் நிலைமை.ஒவ்வொன்றாகப் பட்டியலிட அவசியமில்லை நீங்கள் அங்காடித் தெருவைப் பார்த்திருந்தால்.மதுரை போத்தீஸ் ஜவுளி நிறுவணத்தின் ஊழியர்கள் ரெண்டு பேர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த மாசம் இருவத்தி அஞ்சுநாள் வேலை செய்தால் ஒருமாசச் சம்பளமாம் என்றார் ஒருவர். சொன்னவுடன் கேட்டுக்கொண்டிருந்த சிப்பந்தி உற்சாகத்தில் துள்ளிக் குதித்துவிட்டார்.அப்போது நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அல்வா என் கையிலிருந்தது.அதைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டேன்.ஆனால் அதே நேரத்தில் நிறுவண அதிபரின் பிம்பம் ஊழியர்களின் மனதில் தாறுமாறாக உயர்ந்திருக்கும். அது உண்மையுங்கூட.

ஒப்பீட்டளவில் பார்த்தால் போத்தீஸ் நிறுவணம் ஏனையவற்றைவிட ஒசத்தியாகத் தெரியலாம்.1987 ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து இந்தியா சுற்றிப்பார்க்க வந்த ஒரு இளைஞனிடம் பேசியபோது அவன் கம்பெனி செலவில் நாடு சுற்றிப்பார்க்க வந்திருக்கிறான் என்று ஆச்சர்யம் அறிந்தேன்.கம்பெனி ஒன்றும் மல்டி நேசனல் கம்பெனியல்ல. சும்மா சாதாரண ரொட்டிக்கடை.12 நாள் தற்செயல் விடுப்பு,மாசம் ஒருநாள் மருத்துவ விடுப்பு,ஈட்டு விடுப்பு,அப்புறம் அரசாங்க விடுப்புகள் என்பதெல்லாம் யாரும் போட்ட பிச்சையுமல்ல,கடவுள் கொடுத்த வரமுமல்ல.உழைக்கிற ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கவேண்டிய ஜீவாதார உரிமை.

இந்த 2010 ஆம் ஆண்டில் சனி ஞாயிறு லீவுக்கு சம்பளம் கொடுக்கிற மனிதன் கடவுளாக  றுவதற்கும். பண்ணையடிமை காலத்தில் ஆண்டைகள் கொடுத்த இன்னும் கிராமங்களில் கொடுத்துக்கொண்டிருக்கிற பண்டிகைக்கால பரிசுகளுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே அத்தக்கூலி தான் என்று சொன்னால் அவர்களே என்னைத் திட்டலாம். பரந்துகிடக்கிற கிராமங்களில்,சிறு நகரங்களில், வயிற்றுக்காக வாழ்வு கடத்தும் கோடான கோடி ஜனங்களின் வாழ்வு இன்னும் அப்படியே அத்தக்கூலியாகத்தான் தொடர்கிறது. அந்த பண்ணையடிமை சமூகத்திலிருந்து இன்னும் இந்தியா மீண்டு வரமுடியவில்லை என்பதற்கு குளிரூட்டப்பட்டு,எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்ட ஐந்து மாடி விஸ்வரூப உதாரணம் இது.

அதிலிருக்கிற குமுறல்களை ஒன்றிணைத்து சங்கமாக்கி வருகிற சிஐடியு வைப்பற்றி தீக்கதிர் தவிர நீங்கள் வேறு எந்த தினசரி ஊடகத்திலும் படிக்க முடியாது.தமிழகத்தில் மொத்தம் விற்பனையாகிற இருபதினாயிரம் பத்திரிகை,கொஞ்சம் சிற்றிதழ்கள்,அப்புறம் வினவு,மாதவராஜ் ஆகியோரின் பரப்புறைகள் பத்துக்கோடி ஜனங்களுக்கு பத்துமா?.
அப்படியே இருந்தாலும் எந்திரன்,மோகன்ராஜ்,கூட்டணிப் பரபரப்பில் இந்தசெய்தி எடுபடுமா?.

ஹியுண்டாய் கார் கம்பெனி ஊழியனுக்காகப் போராடி கைவிலங்கு மாட்டப்பட்டு ஜெயிலுக்குப்போன எங்கள் தோழர் அ.சவுந்திரராஜன் அந்தக்கம்பெனி ஊழியர் இல்லை.அந்த தொழிலாளிகளின் ஜாதிக்காரரும் இல்லை.அவர்களை முன்னிறுத்தி பேரம் பேசி சூட்கேஸ் வாங்கும் அரசியல் வியாபாரியும் இல்லை.எங்கு கொடுமைம் நடந்தாலும் அது கண்டு ரத்த அழுத்தம் கூடிப்போகிற கூட்டத்தின் தலைவன்.அப்படிப்பட்ட அசல் மனிதர்களை அச்சுறுத்துவதற்காக கொலைகாரர்களுக்கு இணையாக கைவிலங்கு மாட்டி அழைத்துப்போனது தமிழகம். அந்த தகவல் தமிழகத்தின் எத்தனைகோடிப் பேருக்குத்தெரியும்.

ரஜினி காந்தும்,சங்கரும் அந்த பாலைவனப்பகுதிக்கு பிரத்யேக விமானத்திலும் காரிலும் போனதை சாகசமாக்கிக் காட்டிக் கொண்டிருந்தது சன் டீவி.ஐஸ்வர்யாராயோடு நெருங்கி நடிக்கும் போதெல்லாம் அமிதப்பச்சன் 'கபர்தார்' என்று வக்கணம் காட்டியதாக மனசாட்சியை தொலைக்காட்சிகளில் உருக்கினார் ரஜினிகாந்த். இந்த நடிகர்களின் மனசாட்சியெல்லாம் திரையோடும்,திரைத்துறை சார்ந்த பிரபலங்களோடும் தீர்ந்து போய்விடுவதுதான் சோகமும் திசை திருப்பலும் ஆகிறது.அந்த திசை திருப்பல் வேலைகளை விட அசிங்கமானது அன்பிற்கினிய பேச்சாளர்,நாடாளுமன்ற சட்டமன்ற வித்தகர்,பழுத்த காங்கிரஸ்காரர்  ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைதியைக் குழைக்க சதி நடக்கிறது என்று பேசிய பேச்சு.

இந்த அரசு வன்முறையை,அரசாங்கமே வழிய திணிக்கிற கொத்தடிமையை முறையை தொழிற்சங்கங்களைச் சாடுவதன் மூலம் நியாயப்படுத்துகிறார் அவர்.வடக்கே தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொடங்கிய போதும், பம்பாயில் கப்பற்படை எழுச்சி நடந்த போதும்,தென்கோடியில் வ உ சி தொழிற்சங்கம் ஆரம்பித்த போதும் யார் அமைதி கெட்டுப்போனதோ அவர்களின் அமைதி மீண்டும் கெடுகிறது. கவலைப்படுவது தேசத்தை மீட்டதாகச்சொல்லுகிற அதே காங்கிரஸ் காரர்கள்.இது  விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய கேலிக்குறிய விசயம்.

பன்னாட்டு நிறுவனங்களில் செய்து வைக்கப்பட்டிருக்கிற பலத்த மௌனத்திற்குப் பெயர்தன் அமைதி என்றால் அது போலவே அமைதி மயானங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதைப் பேசுவதும் அதன்மூலம் சில வரம்பு மீறல்களைக் கண்டறிவதும் மனிதக்கூடத்தின் இயல்பு.அது மனித சுபாவமுள்ள தொழிலாளிகளின் உரிமை.அட்டூழியங்களை எதிர்த்துக் கேட்பது அமைத்திக்குப் பங்கம் என்பது பண்ணையார்கள் உருவாக்கிய உத்தி. அந்த விஷ உத்தியை இன்று வரை கெடாமல் பாதுகாத்து உலகமயத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்ததும் அவர்களே. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு எஞ்சினிய்யரிங் கல்லூரி இருக்கிறது அங்கு சேட்டை செய்த எம் இ மாணவனை கட்டைக்கம்பால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறார் ஒரு தாளாளர்.விசாரித்துப் பார்த்ததில் அவர் ஒரு பட்டாசுக்கம்பெனி அதிபர் என்பது தெரிய வந்தது.இன்னும் தோண்டித் துருவி விசாரித்ததில்  அவர் குடும்பம் ஒரு பண்ணையார்க் குடும்பம் என்றும் தெரிந்தது.தனது பாட்டனார் வயக்காட்டிலும்,தனது தந்தை பட்டாசுக் கம்பெனியிலும் செய்ததை அவர் எஞ்சினியரிங் கல்லூரியில் நடைமுறைப்படுத்துகிறார்.

கோயம்பத்தூர் குழந்தைகளின் உயிரைக்குடித்த கயவனை என்கவுண்டரில் கொன்ற அரசுக்கு. அம்பிகாக்களை மெல்ல மெல்லக்கொல்லும் நிறுவணங்களை எச்சரிக்கக்கூடத் திராணியில்லை.இரண்டுமே உயிர்தானே?.
இப்போது 'பராசக்தி' படத்தின் கனல் தெறிக்கும் வசனங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகிறது.
அம்பிகாவின் உயிரைவிட எந்திரத்தின் விலை உயர்ந்தது என்று கணக்குப்போடும் எம்பிஏ படித்தவருக்கும்,எம் இ படிக்கிற மாணவனைக் கட்டக்கம்பால் அடித்து மண்டையுடைத்த தாளாளருக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாச மில்லை.பண்ணையடிமையின் குரூரங்களும் பன்னாட்டுக்கம்பெனிகளின் லாபவெறியும் கைகோர்க்கிற இடம் அது. அதுதான் இனிமேல் வரப்போகும் சந்ததிகள் சந்திக்கவேண்டிய மிகப்பெரும் சவால்.

அதைச்சமாளிக்கிற பொறுப்பு இப்போது இந்தியப்பெண்கள் பக்கம் திரும்புகிறது.சங்கம் அமைக்கும் நடைமுறை களுக்கும்,தொழிற்சங்க உரிமைகளுக்கும்,பயந்து பெரும்பாலும் பெண்களை மட்டுமே பணியமர்த்துகின்றன தனியார் நிறுவணங்கள்.அதன் மூலம் அமைதியயையும் லாபத்தையும் ஒருசேர குவிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிற வர்களின் கணக்குத் தப்பாக ஒரு நாள் எல்லாம் மாறும்.அந்த மாற்றத்தைப் பெண்களே முன்னெடுப்பார்கள்.