27.11.09

ஒரு போராளிக் கவிஞனின் டைரிக்குறிப்பு - ஜோஸ் மார்த்தி - 2 ( JOSE MARTI )




1853 ல் பிறந்து வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து க்யூபாவின் விடுதலைக்கும் லத்தின் அமெரிக்க இலக்கியத்துக்கும் ஆயுதமும்,அதைஏந்துகின்ற வீரமும் கொடுத்துவிட்டுப்போன போராளிக்கலைஞன் ஜோஸ் மார்த்தி.க்யூபா அப்போது ஸ்பானிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது. பின்னர் அவர்கள் அதை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டுப் போனார்கள். நாடுகள் பண்டங்களாகப் பாவிக்கப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவைஅடிமைப்படுத்தியிருந்த காலம் அது.


ஏழு தங்கைகளுக்கு மூத்தவனான மார்த்தி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தான். 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனப்படுகொலை செய்யப்பட்ட புரட்சிக்காரன் ஆப்ரஹாம் லிங்கத்தின் மரணம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோஸ் மார்த்தியை அலைக்கழித்தது. அடிமை முறையை ஒழிக்கப்போராடிய ஒரு அண்டை நாட்டு ஆளுமைக்காக மௌன அஞ்சலிக்கூட்டத்தை நடத்தினான் ஜோஸ் மார்த்தி. 1868 ஆம் ஆண்டில் முடிவுற்ற பத்தாண்டு ஸ்பானியப் போரினால் க்யூபாவின் நிலைமை மிக மோசமடைந்தது. அப்போது க்யூபா ஸ்பானியக் காலணியாகவே இருந்தது. இது குறித்து விசனப்பட்ட க்யூபத்தேசிய வாதிகள் ஒருங்கிணைப்பு நடந்தது. மார்த்தியும் அவரது நண்பர் ஜெர்மினும் இதற்கு தலைமை தாங்கினார்கள்.


அதற்கான பிரச்சாரம் முழுக்க ஜோஸ் மார்த்தியின் கவிதைகளும் கட்டுரைகளுமாகவே இருந்தது. 1869 ஆம் ஆண்டு தனது முதல் அரசியல் கட்டுரையை எல் டியாப்ளோ என்கிற செய்தித்தாளில் வெளியிட்டார். பிரபலமான நாடகமான அப்தலா வையும் அதே ஆண்டு வெளியிட்டார். நூபியா என்னும் கற்பனை நாட்டின் விடுதலைப்போராக சித்தரிக்கப்பட்ட அந்த நாடகம் அந்த நாளில் விடுதலையின் வெப்பத்தை ஊதிவிட்டது.
அக்டோபெர் பத்தாம் நாள் என்கிற பிரபலக் கவிதையும் அதே ஆண்டு வெளியானது. அந்த ஆண்டிலேதான் அவன் படித்த பள்ளியை ஸ்பானிய ஆதிக்க அரசு இழுத்து மூடியது. 1869 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் மார்த்தி ஸ்பானிய அரசால் சிறப்பிடிக்கப்பட்டான். ஸ்பானிய அரசினை ஏமாற்றி லஞ்சம் வாங்கியதாக பொய்க்குற்றம சுமத்தப்பட்டான். நான்கு மாதம் கழித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டணை வித்திக்கப்பட்டு சிறயிலடைக்கப் பட்டார். மார்த்தியின் தாய் தனது மகன் சிறுவன் அவனை சிறையிலடைக்க வேண்டாம் என ஸ்பானிய அரசுக்கு கருணை மணுச் செய்தார். அவரது தந்தை வழக்கறிஞரை அமர்த்தி வாதாடிப்பார்த்தார் ஒரு ஆதிக்க அரசை ஏழைத்தாய் தந்தையின் கண்ணீரால் என்ன செய்ய முடியும்.


கொடுமையான அடக்குமுறையும் கால் விலங்குகளால் உருவான ஆறாத காயமும் அவரது உடல் நிலையை பாதித்தது அங்கிருந்து க்யூபாவின் இஸ்லாபியோன் பகுதிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை ஸ்பெயினுக்கு நாடுகடத்த தீர்மானித்தது ஸ்பானிய அரசு. அங்கு அவரது கல்யியைத் தொடரவும் அனுமதித்தது. ஸ்பானிய அரசுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் எனும் நிபந்தனையோடு.


1871 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரை அடைந்த மார்த்தி அங்கே தனது சிறைச்சாலை நண்பன் கார்லோசைச் சந்தித்தார். மார்த்தியின் வசிப்பிடம் நாடுகடத்தப்பட்ட க்யூப அகதிகளின் சந்திப்பிடமாக மாறியது. அந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி காஸ்டில்லோ என்னும் அவரது கட்டுரை காடிஸ் நகரின் லா சொபரினியோ நேசனல் எனும் பத்திரிகையில் வெளியானது. சிறையில் சந்தித்த சக கைதி ஒருவன் அனுபவித்த சிறைக்கொடுமையை வெளி உலகுக்கு அறியத்தரும் அதிர்ச்சித் தகவலாகியது அந்தக்கட்டுரை. தன்னை மாட்ரிட் நகரின் சட்டக் கல்லூரியில் தனி மாணவனாகப் பதிவு செய்து கொண்டபின் துணிந்து ஸ்பானியப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தார். அதில் க்யூபாவின் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பட்டியலிடப்பட்டது.


1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏழுபேர் பொய்க்குற்றம் சுமத்தி ஹவானாவில் தூக்கிலிடப்பட்டார்கள். தனது பத்திரிகையில் இதை எழுதிய மார்த்தியின் நண்பன் ஜெர்மினும் ஆறுவருடம் சிறைத்தண்டனை பெற்று ஸ்பெயினுக்கே அனுப்பி வைக்கப்பட்டான். ஸ்பெயினில் ஜெர்மினும் மார்த்தியும் மீண்டும் இணைந்தார்கள். நவம்பர் மருத்துவக் கல்லூரி சம்பவம் மீண்டும் மார்த்தியின் வார்த்தைகளில் எழுதப்பட்டு மாட்ரிட் நகரிலிருக்கும் க்யூப மாணவர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. நவம்பர் சம்பவத்தின் முதலாண்டு நினைவாக மாட்ரிட் நகரில் ஒரு, அடக்கச் சடங்கும் மௌன ஊர்வலமும் நடத்தப்பட்டது.


1873 ஆம் ஆண்டு தான் தங்கியிருந்த அறையின் முகப்பில் க்யூப தேசியக் கொடியைப் பறக்கவிட்டார் ஜோஸ்மார்த்தி.அப்போது புதிதாக நிறுவப்பெற்ற ஸ்பானியக் குடியரசு க்யூபாவை அதன் இன்னொரு அங்கமாக அறிவித்தது.இதை எதிர்த்து மார்த்தி ஸ்பானியப் பிரதமருக்கு ஒரு கண்டனக்கடிதம் அனுப்பினார். ஸ்பானியக் குடியரசும் க்யூபவிடுதலையும் எனும் அந்தக் கடிதத்தில் தன்னை ஒரு மக்களாட்சி அரசாகப் பிரகடப் படுத்திக்கொள்ளும் ஸ்பானியப் பொறுப்பாளர்கள் க்யூபாவை மட்டும் அடிமையாக நீடிக்க வைப்பது அதிகார வெறியின் மிகச்சிறந்த உதாரணம் என எழுதியிருந்தார்.
தனது எழுத்துக்கள் அணைத்தையும் நியூயார்க்கிலுள்ள நியூயார்க் மத்திய புரட்சிகர அமைப்பின் உறுப்பினர் நோஸ்ட்டர் போன்சுக்கு அனுப்பிவைத்தார். கியூப விடுதலை முயற்சிக்கு தனது ஆதரவை அந்த அமைப்பு பிரகடனப்படுத்தியது.1874 ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்துகொண்டு அங்கிருந்து பாரிசுக்குப் போனார். பாரிசில் ஆகஸ்ட் வகவுரி எனும் கவிஞரையும் விக்டர் ஹுயுகோவையும் சந்தித்தார். அங்கிருந்து மெக்சிகோவுக்கும், க்வட்டமலாவுக்கும் பயனமானார். 1875 முதல் 1878 வரை மெக்சிகோவிவின் கால் மொனெடோவில் தங்கினார். அங்குதான் மனுவேல் மெர்கடோ எனும் ஆப்த நண்பரின் சிநேகம் கிடைத்தது. அங்குதான் ஒரு க்யூப முதியவரைச் சந்திக்கிற பல நாட்கள் அலைந்தார். முதியவரின் மகளையும் சந்திக்கிற தங்கநிறத் தருணங்கள் அங்கேதான் கிடைத்தது. அவரது மகள் கார்மென் ஜயாஸ் பின்னாளில் மார்த்தியின் துணையானார்.


1877 ல் ஜுலியொ ப்ரெஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டு ஹவானாவுக்குப் பயணமானார் மார்த்தி. ஹவனாவிலிருந்த குடும்பத்தை மொத்தமாக மெக்சிகோவுக்கு மாற்றும் திட்டத்தோடு போனாலும் திரும்புகிற வழியில் மார்த்தி க்வட்டமாலாவில்ஒரு வீடு பார்த்து தங்கிவிட்டார். அங்கே ட்ராமா இண்டியானொ ( இந்திய நடகம்) - தேசமும் விடுதலையும் என்னும் நாடகத்தை உருவாக்கினர். அந்த மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்தார் அதன் விளைவாக ஆங்கிலம்,இத்தாலி,ப்ரெஞ்ச், மற்றும் ஜெர்மன் இலக்கியங்களுக்கான பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பாடம் நடத்தும் லாவகத்தில் அவரிடம் மாணவர்கள் கிறங்கிக் கிடந்தார்கள். அதில் முக்கியமானவர் மரியா கார்சியா க்ரேனடோஸ். க்வட்டமெலாவின் ஆளுநர் மிக்கேல் கார்சியா க்ரேனடோஸின் மகளான அவர் மார்த்தியின் மேல் பைத்தியமாகக் கிடந்தார். எனினும் மெக்சிகோ சென்று கார்மெனையே மணந்தார்.


1878 ஆம் ஆண்டு க்வட்டமாலா திரும்பிய மார்த்தி க்வட்டமாலா என்னும் நூலை வெளியிட்டார். அதே காலத்தில் நுறையீரல்நோயால் பாதிக்கப்பட்டிருந்த மரியா கார்சியா மரணமடைந்தார். அவள் நினைவில் வாடிய மார்த்தி 'காதாலால் மரணமான க்வட்டமாலாப் பெண்' எனும் புதினத்தை எழுதினார். மரியாவின் இழப்பால் மனதொடிந்துபோன மார்த்தி அங்கிருந்து க்யூபா திரும்பினார். அங்கே பத்தாண்டுப்போரின் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார். போர் முடிவடைந்த போதும் ஸ்பானியக் காலனி நீடிக்க, க்யூப விடுதலை அப்படியே கிடந்தது. அங்கிருந்து 1880 ஆம் ஆண்டு வெனின்சுலா சென்றார் அங்கு அவர் வெனின்சுலா ரிவியூ எனும் பத்திரிகை ஆரம்பித்தார். அவரின் எழுத்துக்களால் ஆத்திரமடைந்த வெனின்சுலா அதிபர் மார்த்தியைக் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். நியூயார்க் வந்த மார்த்தி மீண்டும் அங்கே க்யூப விடுதலை அமைப்பை உருவாக்கினார் ப்ரூனோ ஏர்ஸ் பத்திரிகையின் பொறுப்பாளராக இருந்தார்.


பத்தாண்டுப்போரில் தளபதிகளாக இருந்த கோமெஸ், அந்தோணியோ இருவரும் ஒரு உடனடி ராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டனர் அதற்கு மார்த்தியின் ஆலோசனையையும் நாடினார்கள். மார்த்தி ராணுவக் கலகம் செய்து க்யூபாவை மீட்க விருமபவில்லை. தவிரவும் அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்படாததால் அந்த முயற்சி சிறுபிள்ளைத்தனமானது என்று வாதிட்டார். 1891 ஆம் ஆண்டு மார்த்தியின் மனைவி,குழந்தைகள் அவருடனே தங்குவதர்காக நியூயார்க் வந்தார்கள். மார்த்திக்கு க்யூப விடுதலையை விட குடும்பதின் மீது அக்கறையில்லாதது வந்த சிறிது காலத்தில் தெரிந்துபோனது. கார்மென் குழந்தைகளோடு மீண்டும் ஹவனாவுக்கு கிளம்பினார். அதன் பின்னர் மார்த்தியை அவர்கள் சந்திக்கவே முடியாமல் போனது. வெனின்சுலாவில் விடுதி நடத்திக்கொண்டிருந்த கார்மென் மாரிய மாண்டில்லாவுடன் வாழ்ந்தார். மாண்டில்லாவின் பேரன் புகழ்பெற்ற நடிகர் சீசர் ரொமெரோ பின்னாட்களில் தன்னை மார்த்தியின் பேரனாகவே பிரகடனப்படுத்திக்கொண்டார்.


1892 ஆம் ஆண்டு க்யூப புரட்சிகரக்கட்சியை நிறுவினார். 1894 வரை ப்ளோரிடா,பிலடெல்பியா,டொமினிக்ககுடியரசு, மத்திய அமெரிக்க,ஹயத்தி,ஜமைக்கா,நிகரகுவா போன்ற அயல்நாடுகளில் வாழ்ந்த க்யூப மக்களிடம் சென்று கூட்டங்கள் நடத்தினார் அவர்களிடம் இயக்கத்துக்கான நிதியையும் திரட்டினார். 1895 ஆம் ஆண்டு க்யூப எழுச்சிக்கான வரைவு அறிக்கையை உருவாக்கினார். 1895 ஏபரல் 1 ஆம் தேதி க்யூபாவுக்கு கிளம்பும் முன் ஒரு இலக்கிய சாசனம் எழுதி கன்சோலாவிடம் ஒப்படைத்தார். கோமெஸ், ஏஞ்சல்,ப்ரான்சிஸ்கோ,சீசர்,மர்கோஸ் ஆகியோருடன் க்யூப விடுதலைப்போருக்குக் கிளம்பினார். ஏப்ரல் 11 ஆம் தேதி க்யூபாவை அடைந்தார்கள். அங்கிருந்து நாட்டுக்குள் இருந்த புரட்சிப்படைக்கு தூது அனுப்பினார்கள். ஸ்பானியத் துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. மார்த்தியின் புரட்சிப்படை முன்னேறி மே 13 ஆம் தேதி டாஸ் ரியோ வை அடைந்தது. அங்கே அடர்ந்த பனைகளை அரணாகக் கொண்டுள்ள ஸ்பானியத் துருப்புக்களை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததால் கோமெஸ் படைகளைப் பின்வாங்கச் சொன்னார். ஆனால் இந்த தகவல் கிடைக்காத மார்த்தி தனித்துவிடப்பட்டார். 1895 மே 19 ஆம் தேதி மதிய நேரம் ஒரு குதிரைவீரன் வருவதைப் பார்த்து 'இளைஞனே தாக்கு' எனக்குரல் கொடுத்தார். எப்போதும் கருப்புச்சட்டை அணிந்து வெள்ளைக் குதிரையில் அமர்ந்து வரும் மார்த்தியின் தனித்த அடையாளமே அவரை இலகுவாக குறிவைக்க ஏதுவாக இருந்தது.


கொலை செய்யப்பட்ட விடுதலைக்காரர்களின் உடலை கொடுக்காமல் தாங்களே அடக்கம் செய்கிற அதிகாரவெறியோடுஸ்பானிஸ் அரசு அவரைப்புதைத்தது. பின்னர் மீளத் தோண்டியெடுத்தாலும் அவரை எறிக்கத் தடை செய்தது. சண்டியாகோ டி க்யூபா வில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஒரு ராஜத் துரோகியைப் போல
என்னை இருளில் புதைக்கவேண்டாம்.
நான் சுத்தமான போராளி
நான் சூரியனைப் பார்த்துக்கொண்டே
உயிர் துறப்பேன்.


இந்தக் கவிதை வரிகள் நிஜமாக அவர் க்யூப விடுதலையை சூரியனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டுப்போனார். சூரியன் தகிக்கிற காலம் முழுக்க சுதந்திர வேட்கை எறிந்துகொண்டிருந்தது. அதிலிருந்துதான் ஒரு தீர்க்கமான தீப்பந்தம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார்கள் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும்.


கிட்டத்தட்ட சேகுவேராவின் வாழ்கைக்குறிப்பைப் போல இருக்கும் மார்த்தியின் வரலாறு. லத்தீன் அமெரிக்க இலாகியத்தின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அவருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நியூயார்க் மெக்சிகோவிலும் அழிக்கமுடியாத இலக்கியச் செல்வாக்கு பரவிக்கிடக்கிறது. 1959 ஆம் ஆண்டு நியூயார்க் மத்தியப்பூங்காவில் மார்த்தியின் சிலையை அமைத்துக் கௌரவப் படுத்திருக்கிறார்கள். 1869 ஆண்டு முதல் வெளியான அப்தலா தொடங்கி தனது இறுதி நாளில் உருவாக்கிய க்யூப விடுதலைப்ப்போரின் வரைவு அறிக்கை வரை 45 வகையான எழுத்துச் சொத்துக்களை இந்த உலகத்துக்கு விட்டுச்சென்றிருக்கிறார் மார்த்தி.


கவிஞன்,ஓவியன்,கட்டுரையாளர்,நாடகஆசிரியன்,பேராசிரியன்,
குழந்தைஎழுத்தாளன்,மொழிபெயர்ப்பாளர்,பத்திரிகைநிருபர்,
பத்திரிகைஸ்தாபகர்,அரசியல்தத்துவவாதி,ஆயுதம் ஏந்தியபோராளி
எனும் மலைக்கவைக்கும் சாகசக்கரனாக வாழ்ந்து மறைந்தவன்மார்த்தி.தனது நாற்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குமேல் நிலையாக எங்கும் தங்கியிருக்காதஓடுகாலி நமது மார்த்தி.லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் திருப்புமுனையாக இன்றும் போற்றப்படுகிற எழுத்துப்பாணிக்கு சொந்தக்காரன் மார்த்தி. நிகரகுவாக் கவிஞன் ரூபன் டாரியோவுக்கும், சிலிக்கவிஞன் காப்ரியெல்லா மிர்ஸ்டல்லுக்கும் ஆதர்சமாக விலங்கியவை மார்த்தியின் எழுத்துக்கள்.

24.11.09

பேனாவையும் துப்பாக்கியையும் ஒருசேர ஏந்தியவன் - ஜோஸ் மார்த்தி








பனைகள் போல நிமிர்ந்து நிற்கும் தேசத்தில்

வளர்ந்த நான் ஒரு நேர்மையானவன் .

மடியுமுன் எனது ஆவியின் படலை

பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .



எனது பாடல் தெளிந்தபசுமை
எனதுபாடல் கருஞ்சிவப்பு தீப்பிழம்பு

எனது பாடல் காயம்பட்ட காயம்பட்ட மான்

எனது பாடல் மான் தேடும் வனப்புகலிடம்.



என்னை நோக்கி கரங்கள்

நீட்டும்உண்மையான நண்பனுக்காக.

ஜூலையிலும் அதே போல ஜனவரியிலும்நான்

வெள்ளை ரோஜாவை நடுகிறேன்.



நாம் வாழும் எங்கள் இதய தேசத்தை

கிழிக்கிற குரூர மனிதர்களுக்காக

கம்பிவேலிகளையும் முட்செடிகளையும்

நான் நடப்போவதில்லை

நான் வெள்ளை ரோஜாவையே நடுகிறேன்.



இந்த மண்ணில் வாழும் ஏழைகளோடேஎன்

சொந்த வாழ்வைப்பகிர்ந்து கொள்வேன்

மலையினின்று வழியும் சிற்றருவி

கடலைக் காட்டிலும் சந்தோசம் தரும்.



0



க்வாண்டமேரா என்றழைக்கப்படும், இது கியூபாவின் தேசியப்பாடல். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும் எனது மொழியாக்கம். ஒரு கவிஞனாக, ஒரு சிறுகதைப் படைப்பளியாக, நாவலாசிரியராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட போதும் அவனது தேசத்தின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிக் கண்ணிகளை உடைக்கும் சம்மட்டிகளாகவே அவை உருமாற்றமடைந்தது. ஓய்வில்லாத அலைச்சல் அதில் கிடைத்த தேடல் எல்லாமே விடுதலைக்கான திசையாகவே இருந்தது அவருக்கு. சட்டமும் படித்தார் சர்வகாலாசாலையில் ஓவியமும் படித்தார். தனது கல்வி கேள்வி அணைத்தையும் விடுதலைக்கான ஆயுதமாக்கியவர் இறுதியில் ஆயுதமேந்திப் போர்க்களம் போனார்.



கியூப விடுதலையின் வீரஞ்செரிந்த விதையாக அறியப்படும் தேசியக் கவிஞன் ஜோஸ் மார்த்தி. நெற்றியில் புரளும் கற்றை முடியோடு ஒரு புரட்சியின் நட்சத்திரம் தரித்த சேகுவேராவுக்கும்-பிடலுக்கும் முன்னத்தி ஏர் இந்த ஜோஸ்மார்த்தி. உலக வரலாற்றில் காணப்படும் விடுதலை வீரர்களோடும், இலக்கியவாதிகளோடும் ஒருசேரத் தனது இருப்பை பதிய வைத்துள்ள போதும் கவிஞனாகவே அடையாளமாகிறான் ஜோஸ் மார்த்தி.

சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்



'' ஏய் இங்க என்னடா பண்றீங்க ''அந்த மூன்று பேரும். ரோட்டை ஒட்டிய பாலத்துச்சுவரில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு முந்திய இரவு பார்த்த சினிமாவைப்பற்றியோ, குடித்த சிகரெட்டைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள். அலட்சியமாகத் திரும்பிப்பார்த்தார்கள். மாடத்தி டீச்சரை அங்கு துளியும் எதிர் பார்க்கவில்லை.'' டே பேச்சிமுத்து, வீடெங்க இருக்கு.. ஸ்கூலுக்கு வராம... ராஸ்க்கல் ''


மாடத்தி ரோட்டை விட்டு இறங்கி அவர்களை நோக்கி நகரவும், குதித்து ஓடி, தெரு முடிவிலிருந்த சுவரில் ஏறிக்குதித்து தண்டவாளப்பக்கமாய் மறைந்துபோனார்கள். துரத்தி ஓடமுடியாத ஆத்திரமும், காந்திநகருக்கு அலையாய் அலைந்து சேர்த்த ஒருவன் வீனாப்போனதும் சகிக்கமுடியவில்லை எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறாள் அவனை பேர் சேர்க்க. தீப்பெட்டி ஆபீசுக்கு போக இருந்தவனை நிறுத்தி குடும்பத்தாரிடம், வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது என்று கல்வியின் பெருமை சொன்னபோது அவன் வேலைக்குப்போகலைன்னா அடுப்புல சோறு வேகாது என்று அவனது தாயும் தகப்பனும் பதில் சொன்னர்கள். நிப்புக்கம்பெனி மூடியதால், பழைய பேப்பர், பிளாஸ்டிக், பழைய பாட்டில் வாங்கி விற்கும் அப்பா.தீப்பெட்டிக்கட்டு வாங்கி ஒட்டும் அம்மா. வாஸ்த்துப்பாத்து கட்டிய படிகளைப்போல வரிசையாய் ஆறு குழந்தைகள். அவர்களின் வயிறு நிறைக்க முடியாமல் ரெண்டுபேர் சம்பாத்தியம் நொண்டியடித்தது.


பிள்ளைகள் படிப்பார்கள் பேரெடுப்பர்கள் கை நிறையகொண்டு வந்து கொட்டுவார்கள் என்கிற கனவுகள் தோற்றுப்போய் எதார்த்த வறுமை எட்டு வயசிலேயே பையனை வேலைக்கனுப்ப வைத்தது. இந்தக்கதையெல்லாம் செல்லாதபடிக்கு திரும்பத் திரும்ப படிப்பினால் உயர்ந்தோரின் பட்டியலைச்சொன்னார்கள். படிக்கிறவயசில் சிறார்களை வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று லேசாக கலங்கடித்தார்கள். மசியவில்லை. மாசம் நூறு ரூபாய் ஸ்டைபண்ட் கொடுப்பார்கள் மதியம் சாப்பாடு உண்டு என்று சொன்னதும் கண்கள் லேசாக விரிந்தது. யோசிக்க ஆரம்பித்த தாயை மடக்கி ஒரு எதிர்கால கம்ப்யூட்டர் எஞ்சினீயரை மீட்டெடுத்தார்கள். அதற்கென நாலு நாள் சாயங்காலம் செலவானது, இருட்டிய பின்னால் வீட்டுக்கு வந்தார்கள் .


விளக்குப்போடக்கூட ஆளில்லாமல், பூட்டிக்கிடந்த வாசலில் மாடத்தியின் மகன் வீட்டுப்பாடம் எழுதமுடியாமல் காத்துக்கிடந்தான். சிவகாசி அச்சுத் தொழிற்சாலையில் கணக்கெழுதுகிற கணவன் பதினோருமணிக்கு வந்தபோது பையன் சொல்லியதைக்கேட்டு வீட்டில் ஒருவாரம் சண்டை நடந்தது. இவ்வளவு மெனக்கெட்டுச் சேர்த்த பேச்சிமுத்து மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டான். எல்லாம் வீனாகிப்போனது. கோபம் கோபமாக வந்தது மாடத்தி ட்டீச்சரின் கணவன் நாகரீகமாகக் கேட்ட சில கேள்விகள் இப்போதுகூட முள்ளாகக்குத்தியது.


அந்த அதிகாலை வேலையில் காளியம்மன் கோவிலுக்குப்போய்விட்டுத்திரும்பி வந்த சந்தோசம் கானாமல்போனது. உடனடியாக ஐந்து புள்ளிக்கு ரத்த அழுத்தம் கூடியது. கூட வந்த வார வட்டி முருகேசன் மனைவி '' போனாப்போகட்டும் விடுங்க டீச்சர், அவன் படிக்கலைன்னா அவனுக்குத்தானே நட்டம் ''என்று சொன்னாள். அவளுக்கென்ன தெரியும் இப்படியே நாலைந்து பேர் வராமல் நின்றுபோனால் இவளுக்கு கிடைக்கிற ஆயிரத்து ஐநூறும் நின்னுபோகும் என்று அவளுக்கெப்படித்தெரியும். உண்மையைச்சொன்னால் ஆத்திர அவசரத்துக்கு கிடைகிற இருநூறு ஐநூறு கைமாத்தும், டீச்சர் பட்டமும் பறிபோகும் என்று மாடத்தி பயந்தாள். அந்த உண்மை, " பேரு பெத்த பேரு தாக நீலு ரேது " என்பது போலத்தான். ஊரும், பிள்ளைகளும் அவளை டீச்சர் என்று கூப்பிடுவார்கள். எதிர்ப்படுகிற தீப்பெட்டியாபீஸ் பெண்களெல்லாரும் மரியாதைகொடுத்து ஒதுங்கிப்போவார்கள்.அது மட்டும் தான் இப்போது ஆசுவாசமாக இருக்கிறது. எண்பத்தெட்டாம் வருசம் பதிந்து வைத்த பட்டப்படிப்பு, தட்டச்சு பட்டயப்படிப்பு, ரெண்டும் சேர்ந்து எப்போதாவது வேலை தருமென்கிற நம்பிக்கை சுத்தமாக மண்மூடிப்போனபோது. ஜீவனம் தள்ள இந்த இடத்துக்கு வந்தாள்.


இதற்கும் கூடப் பெரும்போட்டி , சில பேர் வட்டிக்கு வாங்கி பத்தாயிரம் லஞ்சமாகக் கொடுத்தார்களென்று பேசிக்கொண்டார்கள். ஒரு காலத்தில் முறைசாராக்கல்வி என்று பேயரிடப்பட்டு கல்லூரியில் படிக்கிற என் எஸ் எஸ் மானவர்களைக்கொண்டு சேவை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வேலையில்லா ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இப்போது தொண்டு நிறுவணங்களின் கையில் அந்தப்பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடைகோடிக்கும் கல்வி போக வேண்டுமெனும் உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் இப்போது ரொம்ப பிரபலம். கொள்கைகள் சுருக்கமாக வெளிப்பக்கம் எழுதப்பட்ட டாடா சுமோவின் உள்புறத்தில் குளிரூட்டப்பட்டிருக்கும், எப்போதும் மாறாத செண்டு வாசம் வாகனம் முழுக்க பரவியிருக்கும். செண்டு வாசத்தோடு தொண்டு நிறுவனத்தலைவர் வருவார். '' நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேர'' பாட்டுப்போட்டு பிள்ளைகளை டிரில் வாங்கி, ஆடவைத்து குஷிப்படுத்தவேண்டும். அவரோ பிள்ளைகளைப் புழுக்களைப்பார்ப்பது போல் பார்ப்பார். அவர் வந்து போகிற வரை ஆசிரியைகள் உட்பட எல்லோரும் கைகட்டிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும். படியளக்கிற புண்ணியவானாச்சே?. சம்பளம் எண்ணூரில் ஆரம்பித்து இந்தப்பத்து வருசத்தில் ஆயிரத்து ஐநூறில் வந்து நிற்கிறது. இந்த ஆயிரத்து ஐநூறு சம்பளத்துக்கு வாரத்தில் ஐந்து நாள் இன்ஸ்பெக்சன் நடக்கும், மாதத்தில் ஐந்து நாள் மீட்டிங் நடக்கும். அந்த கூட்டங்களில் நாடு போற்றும் பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், குழந்தை தொழிலாளர் அவலம், எல்லாம் பிரதானப்பொருளாகப் பேசப்படும். சில நேரம் நாடகங்கள் கூடப்போடுவார்கள்.


அரை மணிநேரம் தாமதமாகப்போனாலோ தலைவலி காய்ச்சல் என்று மத்தியானம் வீட்டுக்குப்போனாலோ, அந்த நாளுக்குறிய சம்பளம் கழிக்கப்படும். வேலை என்பது ஊரிலுள்ள குடிசைப்புறத்து வீடுகளாகப்போய் படிப்பு பாதியில் நின்று போன குழந்தைகள் தேடவேண்டும். அந்தப்பிள்ளைகள் படிப்பதற்கு வெறும் ஐநூறு ரூபாயில் வாடகைக்கட்டிடம் தேட வேண்டும். மழைக்காலத்தில் ஒழுகும் ஓட்டுக்கூரைக்கடியில் நனையாமல் குழந்தைகளைக் காக்க வேண்டும். அந்த ஐம்பது பிள்ளைகளுக்கு சாப்பாடு போட அரிசி பருப்பு தேட வேண்டும். நிர்வாகியின் பிரதிநிதி வந்து '' என்ன செய்வீகளோ ஏது செய்வீகளோ குழம்புச்செலவு ஒரு நாளைக்குப் பத்து ரூபாய்க்கு மேலே போகக்கூடாது, போனால் சம்பளத்தில் பிடிச்சிருவேன்''என்று சொல்லிவிட்டு விறைப்பு மாறாமல் பைக்கில் ஏறிப்பொய்விடுவார்.


சம்பளமும் மூனு மாசம் நாலு மாசம் சேர்த்து சேர்த்துத்தான் பட்டுவாடா பண்ணப்படும். அது வரை ஏதாவது நகைகளை அடகு வைத்துத்தான் அடுப்பெரிக்க வேண்டும்.அதுவுமில்லாதவர்கள் அண்டை அயல் வீடுகளில் குறைந்த வட்டிக்கு வாங்கி காலம் தள்ளவேண்டும். இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு டவுசர் கிழிந்த பிள்ளைகளுக்குப்பாடம் சொல்லித்தரவேண்டும். ஐஸ் விற்கிறவனையும், வடை விற்றுக்கொண்டுபோகிற பெண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கிற அவர்களைக் கம்பெடுத்து அடிக்கவேண்டும். அடிவிழுந்த இடத்தில் வலி குறைவதற்குள் அவர்களுக்கு ஆறுவது சினம் சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு காலையும் ஸ்கூல் வாசல் நுழகிற போது நாற்பது சுரத்தில் சேர்ந்து குட்மார்னிங் டீச்சர் சொல்லும் போதும், எங்காவது பொது இடங்களில் பார்க்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும் உருவாகிற போதையில் இந்தப்புலப்பமும் வலிகளும் தீர்ந்துபோகும்.


பேசிமுத்து வராதது ஒரு வாரத்துக்கு திக் திக்கென்று இருந்தது. அந்தப்பக்கமாகக் கடந்து போகிற எல்லா ஜீப்பும், பைக்கும் லேசான உதறலை உண்டுபண்ணிப்போனது. வேலிக்காட்டுக்குள் சாராயம் காச்சுகிறவர்கள் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க முடியும். இந்த நூறு ரூபாய் பள்ளிக்கூடத்தில் எந்த நேரமும் நெருப்பைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். வேலை அப்படி.போக்குவரத்து துறை தவிர, தமிழக அரசின் முக்கால் வாசி இலாக்கக்களிலிருந்து ஆய்வுக்கு வருவார்கள்.புதிதாக வந்த சப்கலெக்டர் ஒரு வெளிமாநிலத்துக்காரர். இளம்பெண் அதிகாரி. அந்தப்பக்கமாக போன ஜீப்பை நிறுத்தி மடமடவென உள்ளே வந்தது. இந்தமாதிரி ரொம்பப்பேர் வருவாங்க. வெளிநாட்டு, உள்நாட்டு தொண்டு நிறுவணங்கள். அப்புறம் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்தெல்லாம் வருவார்கள்.புரியாத மொழியில் புரியாத விஷயங்கள் பேசிவிட்டு.கையடக்கமான வீடியோ கேமராவில் ஒளியற்ற முகங்களைப்படம் பிடித்துக்கொண்டு போவார்கள்.
அதுபோலத்தான் அந்த சப்கலக்டெர் வந்தது. பசங்களிடம் கேள்வி கேட்டது தமிழுக்கே தரிகனத்தான் போடுகிற பிள்ளைகள் இங்கிலீஸுக்கேள்விகளால் நிலைகுலைந்து போனார்கள்.அவ்வளவுதான் அம்மா வேபங்கொலையில்லாமல் சாமியாடியது. தாட் பூட், கக்கிரி,புக்கிரி என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஏதேதொ திட்டியது. பசங்களுக்கு அந்த மொழி புதிராக இருந்தது.மனநிலை சரியில்லாத காதர் என்கிற நாலாவது படிக்கிற பையன் சப்கலெக்டருக்கு பதில் சொல்லுகிற மாதிரி அவனும் இஷ்ட மிஷ்ட டிரிங்,புரிங் என்று சொல்லவும் பிள்ளைகள் ஒட்டுமொத்தமாக சிரித்துவிட. அம்மா ஓட்டைச்சேரில் உட்கார்ந்து மெமோ எழுத ஆரம்பித்தது அதுவரை பேசாதிருந்த உதவியாளர் அவரது ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார்.


பேச்சிமுத்துவை முற்றிலுமாக மறந்துபோயிருந்த ஒரு நாளில் கலை இலக்கிய இரவு பார்க்கப்போனாள் மாடத்தி டீச்சர். நிகச்ழ்சி ஆரம்பிக்கும் முன்னாள் கூட்டத்திற்குள் ஒரு சிறுவன் சம்சா விற்றுக்கொண்டு அலைந்தான். தூரத்திலிருக்கும் வரை காட்சியாக இருந்த அவன் பக்கத்தில் வந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் பேச்சிமுத்துவே தான். கூப்பிட்டு விசாரித்தபோது அப்பாவுக்கு தீராத வயிற்று வலியெனவும் வேலைக்கு போகவில்லை அதனால் சம்சா விற்க வந்துவிட்டேன் என்றும் சிரித்துக்கொண்டே சொன்னான். ஹோமியோபதி டாக்டரிடம் காட்டச்சொல் ஐம்பது ரூபாய்க்குள் சொஸ்தமாகிவிடும் என்று பேருக்கு சொல்ல மறுநாள் பேச்சிமுத்துவின் அப்பா ஸ்கூலுக்கே வந்து விட்டார். டீச்சர்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்குப் பத்துரூபாய் போட்டு அவரை ஹோமியோ டாக்டரிடம் அனுப்பி வைத்தார்கள். ஒருவாரத்தில் ஆச்சரியம் ஒன்று நடந்தது. சைக்கிளின் முன்பக்கம் உட்காரவைத்து அவரே பேச்சிமுத்துவைக் கூப்பிட்டு வந்தார். வயித்து வலி சரியாப்போச்சு டீச்சர் என்பதை வார்த்தைகளிலும் நன்றியைக்கண்களிலும் சொல்லிவிட்டு பின்னாலிருந்த மரப்பெட்டியிலிருந்து ஐந்து கொய்யாப் பழங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்.அன்றைக்குப் பூராவும் டீச்சர்கள் பேச்சிமுத்து வந்த சந்தோசத்தில் அவனைப்பற்றியும்,அவனைக் கூப்பிடப்போன சம்பவங்களையும் அசைபோட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


இப்பொதெல்லாம் காலை எட்டுமணிக்கே பேச்சிமுத்து வந்துவிடுகிறான். மூணுதெரு தள்ளியிருக்கும் குளோரி டீச்சர் வீட்டுக்குப்போய் சாவி வாங்கி வருவது.அவனே திறந்து அந்த கைப்பிடி போன பெருக்குமாறால் பள்ளிக்கூடத்தை பெருக்குவது. ஒவ்வொரு டீச்சர் வரும்போதும் ஓடிப்போய் பையை வாங்கி வருவது. எங்காவது கடைக்குப் போகச்சொன்னால் அடம்பிடித்து சண்டைபோட்டு முந்திக்கொண்டு தானே போவது. டீச்சர்கள் இல்லாத பொழுதுகளில் பிள்ளைகளைக்கவணிப்பது என்று அந்த பள்ளிக்கூடத்தில் அவன் எல்லாமுமாகிப்போனான். கொடைக்கானல் சுற்றுலாவுக்கு கூட்டிக்கொண்டு போனப்பிறகு அவன் இன்னும் கூடுதல் பிரியமானவனாக மாறிப்போனான். ஒருமாதத்துக்கு முன்னமே கொடைக்கானல் போகிறோம் வேன் செலவுக்கு ஆளுக்கு ஐம்பது தரவேண்டும் என்று சொன்னதிலிருந்தே அவன் சுறு சுறுப்பாகி விட்டான்.ஒவ்வொரு நாளும் மாடத்தி டீச்சரிடம் ஒரு ரூபாய் கொடுத்து சேர்த்து வைத்தான். ஐஸ் வண்டி வரும்போது வெளியே வராமல் உள்ளேயே இருந்து புஸ்தகம் படிப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டான். கொடைக்கானல் போக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதையும், எவ்வளவு பணம் சேர்க்கவேண்டு மென்பதையும் தினம் தினம் மாடத்தி டீச்சரிடம் நச்சரிப்பான். அப்போது அவன் கண்களில் இருக்கிற ஏக்கம் அதள பாதாளங்களையும் தாண்டிய பாதாளத்தில் இருக்கும். பிறகு அவனே மனதுக்குள் ஒரு கணக்குப் போடுவான் பிறகு சோர்ந்து போவான்.


கொடைக்கானல் போக இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அப்போது அவன் கணக்கில் இருபத்தி எட்டு ரூபாய் தான் இருந்தது. அதைக்கேட்டதிலிருந்து மிகவும் சோர்வாய்க் காணப்பட்டான். எந்த நேரமும் மற்ற பிள்ளைகளை அதட்டிக்கொண்டும், அடித்து அழவைத்துக்கொண்டுமிருக்கிற பேச்சிமுத்து இப்போது மூலையில் உட்கார்ந்து நிறையச்சிந்திக்க ஆரம்பித்து விட்டான். பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அவனைக்கேலி செய்ய அழுதுகொண்டிருந்தான். கனகா டீச்சரிடம் 'துட்டு கொறைய்யாக்குடுத்தா கொடைக்கானல் கூட்டிக்கிட்டு போகமாட்டீங்களா டீச்சர் ' என்று கேட்டான் " டிக்கட்டுக்கு ஐம்பது செலவுக்கு வேற பணம் இருக்கு அதனால எழுபது ரூபாயாச்சும் இல்லாயின்னா நீ கிடையாது " என்று கட்டன் ரைட்டாச் சொல்லியயதும் சுத்தமாக நொறுங்கிப்போனான். கொடைக்கானல் போவதற்கு இன்னும் இரண்டு நாள் தானிருந்தது. படந்தால் ரோட்டில் இருக்கிற இதேமாதிரியான இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு ஆள் அனுப்பி எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியதிருந்தது. ஓட்டு கூறை வாய்பிளந்து கிடக்கிற அந்தப்பள்ளிக் கூடங்களில் தொலை பேசி என்பது எட்டாக்கனி.
தூதனுப்ப பேச்சிமுத்துவைத் தேடும்போது தான் அவன் ரெண்டு நாள் வராதது தெரிய வந்தது. பக்கத்து வீட்டு கனிமொழியைக் கேட்டதற்கு எங்கம்மாவுக்கும் அவங்கம்மாவுக்கும் சண்டை எனக்குத்தெரியாது என்று சொல்லிவிட்டாள். சிவக்குமாரை அனுப்பி கூடிவரச்சொன்னதற்கு பள்ளிக்கூடத்துக்குத்தான் போயிருப்பதாக அவன் அம்மா சொன்னதாகச் சொன்னான். இதைக்கேட்டதும் டீச்சர்மாரெல்லாம் ஆடிப்போனார்கள். நாளைக்கு தாய் தகப்பன் வந்து பிள்ளையைக்காணோம் என்று கேட்டாள் என்ன செய்ய எனும் உதறல் வந்தது. கொடைக்கானல் போக இன்னும் ஒரு நாள் தானிருந்தது இந்த நேரத்தில் இதென்ன சோதனை என்று ஆளாலுக்கு அங்களாய்த்தார்கள். மறு நாள் மதியச் சாப்பாட்டுக்கு பிள்ளைகள் தயாராகிகொண்டிருக்கும்போது ஒண்ணுக்கிருக்கப்போன பக்கத்து வீட்டுக் கனிமொழி ஓடி வந்து மூச்சிறைக்க ' டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து ' என்று சொல்லி நிறுத்தினாள். பள்ளிக்கூடம் மொத்தமாகத் திரும்பிப்பார்த்தது. திரும்பவும் டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து என்று சொன்னாள். ஆயாம்மாதான் ' ஏ சொல்லுடி ஒடைஞ்ச ரிக்காடு மாரி சொன்னதெயே சொல்லிக்கிட்டு ' என்று அரட்டினார்கள்.


ரோட்டில் தையல் கடை நிழலில் பேச்சி முத்து இருப்பதைச்சொல்லியதும் அப்பாட என்றிருந்தது. பையன்களை அனுப்பிக்கூட்டி வரச்சொன்னதற்கு பயந்து கொண்டு வரவில்லை. மாடத்தி டீச்சர் போய்பார்த்தது. வெண்டைக்கய் மாதிரி வதங்கி அழுக்குச்சட்டையோடு பிச்சைக்காரனைப் போலிருந்தான். மாடத்தி டீச்சரைப் பார்த்ததும் கண்கள் நிரம்பியது. சாப்பிட்டிருக்கமாட்டான் என்று தெரிந்தது " சாப்பிட்டயாடா " கேட்டதற்கு ஆமாம் எனத் தலையாட்டினான்." இல்ல வா சாப்பிட " என்று சொல்லித் தலையைத் தொட்டதும் கேவிக்கேவி அழுதான். ரெண்டு நாள் பள்ளிக்கூடம் போகிறேனென்று சொல்லி விட்டு சம்சா விற்கப்போயிருக்கிறான் அவனுக்கு சரக்குக்கொடுக்கமாட்டேனென்று கடைக்காரர் சொல்லியதோடல்லாமல் " நீங்க தான் படிச்சு கம்ப்யூ..ட்டர் எஞ்சினீராகப் போறீகள்ள போங்க " என்று குத்தலாகப்பேசியது அவன் கண்முன்னே இன்னொரு பேச்சிமுத்துவுக்கு சம்சா எண்ணிப்போட்டது. பிறகு தேவி தியேட்டருக்குப்போய் கெஞ்சிக் கெதறிக் கேட்டு இண்டர்வெல்லில் முறுக்கு விற்றது. பேப்பர் பொறுக்கி கடையில் போட்டது எல்லாம் சொல்லிவிட்டுப்பைக்குள் கைவிட்டு பதினைந்து ரூபாய் சில்லறையாக மாடத்தி டீச்சரிடம் நீட்டினான்.


" இத வச்சிக்கிட்டு என்னியக் கூட்டிக்கிட்டுப் போங்க டீச்சர், நா எப்டியும் சேத்து வச்சி ஒங்களுக்கு மிச்சத்துட்ட தந்துருவேன் "
சொன்னதும். மாடத்தி டீச்சருக்கு மட்டுமல்ல அங்கிருந்த பிள்ளைகளும் ஆயாவும் வார்த்தைகள் மறியல் பண்ண கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்றார்கள்.
சமூகம்,குழந்தைத்தொழிலாளர்,சிறுகதை

23.11.09

கற்பிதங்கள் கழிந்து ஓடும் நேரம்.

அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்போதெல்லாம் எனக்கு தோழர் கந்தர்வனின் ' தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' சிறுகதை தான் நினைவுக்கு வரும். மனிதர்களின் அபிலாஷைகளை அள்ளிக்கொண்டு வந்து தட்டுகிற இடமாக அந்த எழும்பூர் ரயில் நிலையம். முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அங்குபோய் இறங்கினேன். மதுரை தாண்டி பயணம் செய்த முதல் அனுபவம் அது. அன்றும் கூட அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் தாதார் எக்ஸ்பிரசைப் பிடிக்கனும், ஒருமணிநேர அவகாசத்தில். வெளியே வந்தபோது பீடியைக் கிழே போட்டுவிட்டு ஒரு தாத்தா அழைத்தார். அவரது வாகனத்தில் சென்ட்ரல் போவதாக உடன்பாடு. அவரைவிட வயதான குதிரையும் வண்டியும் எனக்காகக் காத்திருந்தது. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்னும் பாடலை மந்தமாகச்சுழலும் இசைத்தட்டின் லயத்தில் பாடிக்கொண்டு போனேன். இனிக் குதிரை வண்டி நினைவுகூறலில் மட்டுமே காணலாம்.


டெல்லி சென்று திரும்பி வந்த அந்த 1995 ஆம் ஆண்டையும் என்னால் மறக்க முடியாது. நானும் தோழர் நடராஜனும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இறங்கி உடனடியாக வைகையைப் பிடிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். மனசு முழுக்கஇந்தியாவின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நிறைந்து கிடந்தது. உடலில் ஒரு பத்து நாளின் ரயில்புகை படிந்தது போல உணர்வு. பல்துலக்காதபோதும் பசி அரிசிச்சோறு தேடியது. சின்னவன் அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்பதாக அவள் சொன்னது. பயணவேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு பணிரெண்டு மணிநேரத்தில் சாத்தூர் என்ஜிஓ காலனியில் இருக்கப்போகிறோம் என்னும் குறுகுறுப்பு வந்தபோது அவள் வாசம் அடித்தது. பலநேரங்களில் குழந்தைகள் துவர்களாகவும் இருந்துவிடுவார்கள்.


முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான வரிசை நீண்டு கொண்டே போனது. திருச்சிக்கு அம்மா அப்பவை அனுப்பிவைக்க,மதுரையில் சாயங்காலம் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள.நேற்று மகனின் வேலைக்காக மந்திரியைப்பார்க்க வந்தஇப்படி ரகரகமான பயணிகளின் கூடவே ஒரு ராணுவவீரன் தன் காதல் மனைவியோடு மிகமிக நெருக்கமாக. ஒன்பது மாதத்துக் கர்ப்பினியான அவளுக்கு எழும்பூர் இம்பாலாவில் நெய்த்தோசை வாங்கிவந்து கொடுத்தான்.ராணுவ கிட்பேக்குகளையும் பெரிய பெரிய சூட்கேசுகளையும் அடுக்கி அதன் மேல் அவளை உட்கார வைத்திருந்தான்.ஈக்கள் கூட அவளை நெருங்காதபடிக்கு அன்புவேலி சுற்றியிருந்தான். நெய்த்தோசையின் மணம் எங்கள் பசியைக் கூடுதலாக்கியது.


தயிர் சாதப் பொட்டலம் வாங்குவதற்காக நிலைய முகப்புக்குப் போனோம். ஐந்து பேர் தாடியோடு மரப்பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். பொட்டலம் வாங்கித் திரும்பும்போது அவர்கள் அந்த ஐந்து பேர் இந்த உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவார்கள் எனத்தெரியாமல் கடந்துபோனோம். திரும்பும்போது அந்த இடம் ஒரே கலவரமாக இருந்தது.ஒற்றைப்பெண் காவலர் அதில் ஒருவரின் கழுத்தைப்பிடிக்க அவர் கத்திக்கொண்டிருந்தார். ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் மூன்று பேரை சயனைடு விழுங்கிவிட்டிருந்தது. யாராவது ரயில்வே போலீசில் தகவல் சொல்லுங்கள் என வேடிக்கை மனிதர்களிடத்தில் முறையிட்டார்கள் அந்த போலீஸ். யாரும் போகவில்லை என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் நான் ஓடிப்போய் சொன்னேன். ரயில்வே போலீஸ் எந்த அவசரமும் காட்டவில்லை.


திரும்பவும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தேன் இன்னும் கூட அங்கு நடப்பது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. கூட்டத்தை விலக்கிக்கொண்டு போனேன். நான்குபேர் இறந்து கிடந்தார்கள். அவர்களது கண்களில் ஏக்கமும் கனவுகளும் நிலைகுத்தி நின்றது. மரணம் என்பது அவ்வளவு சடுதியில் லயிக்கும் என்பதை நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இன்னும் கூடுதலாக இரண்டு மூன்று காவலர்கள் வந்திருந்தார்கள். பிடிபட்டவர் ஈழத்தமிழில் பேசிக் கொண்டிருந்தார். எங்களை வாழத்தான் அனுமதிக்கவில்லை சாகவாவது அனுமதியுங்கள் என்று கத்தி கத்திச் சொன்னார். எங்கட நாடு விடுதலை அடையும் என்று கோஷம் எழுப்பினார். வேலூர் சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்த ஈழப்போராளிகளை தமிழ்நாடு சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த செய்தி அப்போது நினைவுக்கு வந்தது.


கூட்டத்திலிருந்தவர்கள் தங்கள் கற்பனைகளோடு செய்தியை வேறு வேறு நிகழ்ச்சியாக மாற்றிக்கொடுத்தனர். அதிரடிப்படை கவச வாகனம் வருவதற்கு முன்னமே செய்தித் தாள்களின் வாகனங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தன. காவலர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள்; டீ காபி சாப்பாடு விற்போரின் குரல்கள்; போர்ட்டர்களின் அரைஓட்டம்; ரயில்வருகை அறிவிப்பு; வழியனுப்பும் நெகிழ்வும்; வரவேற்குமுற்சாகமும் ஆன எழும்பூர் ரயில் நிலைய வளமை சிதைந்து எங்கும் பரபரப்புசூழ்ந்து கொண்டது. இப்போது எங்குபார்த்தாலும் காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. கூட்டம் கலைக்கப்பட்டது நாங்கள்வரிசைக்குத் திரும்பினோம். அந்த ராணுவவீரர் இன்னும் மனைவியோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்.


" இந்த ரயில் நிலையத்தில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது எல்லோரும் கலைந்து ஓடுங்கள்" என்று காவல் துறை அறிவித்தது. தீப்பந்தமிட்டுக் கலைத்துவிட்ட தேன்கூடு மாதி கூட்டம் கலைந்தோடியது. சூட்கேஸ் எடுக்க மறந்தவர்கள்வாங்கிவந்த சப்பாட்டுப் பொட்டலத்தை எடுக்க மறந்தவர்கள் கையில் குழந்தையை துக்கிக்கொண்டு ஓடிய தாய்மார்கள் என உயிர்கள் பயத்தில் ஓடியது. நானும் நடராஜனும் கடைசியாய் உயிர்காக்க நடந்தோம். பின்னலே திரும்பிப் பார்த்தபோது வெறிச்சோடிக்கிடந்தது எழும்பூர் நிலையம். ஓட முடியாத - வேகமெடுத்து நடக்க முடியாத, அந்த ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் எங்களுக்கு முன்னால் நடந்து போனாள். ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை.


எந்த வெடிகுண்டும் இல்லை பயணிகள் திரும்ப வரலாம் என்று மறு அறிவிப்பு வந்தது. போலீசின் முந்தைய அறிவிப்பு எஞ்சிய இருக்கிற போராளிகளைப்பிடிக்கிற உத்தி என்பது பின்னால் ஆனந்தவிகடன் படிக்கும்போது அறிய நேர்ந்தது. நாங்கள் இருந்த வரிசை மறுபடி உருவானது. நாங்கள் அந்த ராணுவ வீரனின் அருகில் இருந்தோம். அவன் அவளிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் எதிர்த்திசையில் திரும்பிக்கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான். பல கட்ட சோனைக்குப்பின் இரண்டு மணிநேர தாமதத்தில் வைகை கிளம்பியது.


நிலைகுத்திய கண்களோடு கிடந்த நான்கு பேர்: நெடுநேரம் வரை வராமல் வந்தும் ஓடவசதியாய் நின்றிருந்த காவலர்கள்; தலைதெறிக்க ஓடிய கூட்டம்: அவர்களை முந்திக்கொண்டு ஓடிய ராணுவவீரன்: ஒரு பெண் போலீஸ்: கண்ணீர் நிறைந்திருந்த கர்ப்பிணிப் பெண்னின் கண்கள் எல்லாம் இன்று வரை கூட வருகிறது. அதுவரை என்னோடு வந்த கற்பிக்கப்பட்ட இலக்கணங்கள் அருவருப்பாய் கழிந்தோடியது புகைவண்டி கழிப்பறையினூடாக.





21.11.09

ஒரு பறவை - ஒரு கவிதை

ஆம்ப்ளேன்னா ச்சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு நடக்கனும், பொம்ப்ளேன்னா தலையக் குனிஞ்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா நடக்கனும் இப்படி மன்னன் படத்தில் ரஜினி பஞ்ச் டயலாக் சொல்லுவார். போதாது போதாது என எழுதிய காதல் பாட்டு வரிகளை மாற்றி தாங்காது என எழுதச் சொன்னாராம் எம்ஜியார். கார்த்திக்கின் கைலியைப்பிடித்து ப்ரியாமணி இழுக்க உலகமகா பருத்திவீரன் அல்லாடிப்போவான்.


சாத்தூர் ரயில் நிலையத்தின் முன்னால் கால்சரய் போட்ட ஒருவன் அந்த நாடோடிக் குடும்பத்துப் பெண்ணைச் சீண்டியதற்கு வாங்கிக் கட்டிக்கொண்ட கொடமானம் அவன் தலைமுறைக்கும் போதுமானதாக இருந்தது. நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்லை என் மனிதாபிமானத்தால் என்று சொன்ன வாத்தைகளின் அர்த்தம் யானையின் முதுகில் ஒரு சின்ன தொரட்டிக்கம்போடு மீசை முறுக்கும் நோஞ்சான் யானைப்பாகருக்குத் தெரியும். எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு எனச்சொல்லுவார்கள்.


ரொம்ப நளினமாக - கவித்துவமாக நான் பறவை எனப் பிரகடனப்படுத்துகிறது அன்புச்சகோதரி எஸ். தேன்மொழியின் கவிதை.


என்னை அங்கே தேடாதீர்கள்
என் இல் உள் நான் இல்லை
பறவையின் சிறகுகளில்
கட்டப்பட்டிருக்கும் என் வீடு.


கடலின் ரகசியங்களைகூட்டிப்
போகும் என் ஆளுமை.
அண்ட ஆகசங்களை
அடைகாக்கும் என் தாய்மை.


காட்டுப் பூக்களில்
கரைந்திருக்கும் என் பெண்மை.

20.11.09

மனசுக்குள் சலசலக்கும் பனங்காடு - ( நெடுங்கதையிலிருந்து ஒரு பகுதி )







ஆறுகச்சாமி நாடாருக்கு வெத்திலைதான் உயிர். அந்த அழுக்கேறிப்போன கைவச்ச பனியனும், வெத்திலை வாயும் தான் அவரது அடயாளம். வெத்திலைக்காக அவர் வெள்ளியிலான டப்பாவோ, காடாத்துணியில் அடுக்கு வைத்துத்தைத்த சுருக்குப்பையோ, வைத்திருக்க வில்லை. அதுக்கான தேவையும் இல்லாமலே அவருக்கும் வெத்திலைக்குமான தொடுப்பிருந்தது. அவருக்கு முன்னாலுள்ள மண் கொப்பறையில் ததும்பத் ததும்ப கருத்த வெத்திலை நிறைந்திருக்கும். கொஞ்சம் தள்ளி அஞ்சரைப்பெட்டியில் கொட்டப்பாக்கு கிடக்கும். சுண்ணாம்பிருக்கிற தகர டப்பாவும், அங்குவிலாஸ் போயிலையும் கைக்கெட்டுகிற தூரத்திலேயே இருக்கும். மேல்பரப்புக்கு வந்து மீன்கள் வாய் பிளக்கிற மாதிரி வாயைத்திறந்து கொர் கொர் என தொண்டையிலிருந்து சத்தம் எழுப்பி வெத்திலைச் சாறை வாய்க்குள் தக்கவைத்துக் கொள்வார்.


தூங்குகிற நேரம் போக எந்நேரமும், கன்னத்தின் இடது பக்கம் சிலந்தி மாதிரி பொடப்பா இருக்கும். சாப்பிட, வரக்காப்பி குடிக்க மட்டும் வெளியே வந்து வாய் கொப்பளிப்பார். அது தவிர நாள் முழுக்க சரப்பலகையிலே உட்கார்ந்திருப்பார். குத்துக்காலிட்டு, சம்மணம் கூட்டி, ஒருக்களிச்சு மாறி மாறி உட்கார்ந்து கொண்டு குண்டி காந்தலை தள்ளிப்போடுவார். கருங்காலி மரத்தாலான அந்தக் கல்லாப்பெட்டியில் அய்யாணார் கோயில் எண்ணச்சட்டி மாதிரி அழுக்கேறியிருக்கும். அதற்கு மேலே நீளவாக்கிலுள்ள கணக்கு நோட்டு இருக்கும்.


சாமுவேல் வாத்தியார், காலேஜ் மாடசாமி, பைபிளம்மா, பிரசண்டுசுந்தராசு, பேர்களில் தலைப்புபோட்டு அவருக்கான தமிழில் ஊச்சி ஊச்சியாய் கணக்கெழுதியிருப்பார். காலேஜ் மாடசாமி பொண்டாட்டி வந்து புஸ்த்தகத்தை தூக்கி 'இதென்ன மொலாளி கக்கூசுல எழுதுற கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் கணக்கு நோட்டுல எழுதிவச்சிருக்கீரு எங்க மாமா பேரு அஞ்சந்தான'. என்று சொல்லுவது குறித்தெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அதற்கவர் மீண்டும் மீன் வாயைப்பிளக்கிற மாதிரி சிரிப்பார். எதிரே நிற்கிரவர்கள் மீது செகப்பா தூறல் விழும். அவர் எழுதுகிற அ வுக்கு கு வுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.


'எனக்கென்ன தாயி ஓங்க வீட்டுக்காரு மாறி காலேஜிப்படிப்பா கெட்டுப்போச்சு அந்தக்காலத்துல எங்கைய்யா பனைக்கி போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போவாரு பிள்ளமாரு வீட்டுப்பிள்ளைகளெல்லாம் பெஞ்சில ஒக்காரும் நாங்க பின்னாடி தரையில அதுக்கும் ப்஢ன்னாடி ஒங்க தெருக்காரப்பிள்ளைக ஒக்காரனும், அதெல்லாம் படிப்பாம்மா' வெத்திலைச்சாறை கொர் கொர் என்று காறி வெளியில் வந்து செகப்பு உருண்டையாய் வெத்திலையைத் துப்பி விட்டு திரும்பவும் ஆரம்பிப்பார். அது இரண்டு தலைமுறைச் சரித்திரம்.


அந்தக் காலத்தில் ஆறுமுகச்சமியின் அய்யா இசக்கிமுத்து நாடார் பனையேறுவதில் நாடறிந்த கெட்டிக்காரர். சுத்துப் பட்டியிலெல்லாம் "பனைக்கி இசக்கி" என்று சொலவடை சொல்லுகிற அளவுக்கு பெரிய வித்தைக்காரர். காலாக்கை இல்லாமல் நிமிசத்தில் பனையுச்சிக்குப் போவதும். கண்மூடி முழிக்குமுன்னே பதினிக்கலயத்தோடு கீழே நடப்பதுவும் பார்ப்பதற்கு கண்கட்டி வித்தை மாதிரி இருக்குமாம். சில நேரங்களில் அருகருகே இருக்கும் பனைகளில் ஒன்றிலிருந்து இறங்காமலே இன்னொரு மரத்துக்குத்தாவி விடுவதால் அவருக்கு ''மாயாவி'' ங்கிற பாட்டப்பெயரும் உண்டாம். அந்தக்காலத்தில் பனை ஏறத் துவங்குகிற எல்லாரும் அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டு விட்டுத்தான் பனையேறுவார்களாம்.


அதுமட்டுமில்லெ தெக்கத்தி கம்புக்கு அவராலாலேயே பேர் வருமளவுக்கு கம்பு விளையாட்டில் அவரே பல புதிய அடிகளையும் அடவுகளையும் உருவாக்கினார். அவர் கம்பு சுத்துவதைப்பார்க்க கொடுத்துவைக்கணும். கம்பைக்கையில் வாங்கி குருவணக்கம் சொல்லி தரைதொட்டுக் கும்பிடுகிற வரைதான் கம்பும் கையும் கண்ணுக்குத்தெரியும். சுத்த ஆரம்பித்ததும் காத்தைக்கிழிக்கிற சத்தம் மட்டுமே உய்ங் உய்ங் என்று கேட்டுக்கொண்டே இருக்குமாம். சில நேரங்களில் சுத்தியும் பத்து எளவட்டங்களை நிற்கச்சொல்லி அவர்களிடம் கல்குமியைக் கொடுத்து எரியச்சொல்வாராம். எல்லாக் கல்லும் கம்பில் பட்டு சிதறுமாம். அவரிடம் வெங்கலப் பூன்போட்ட பிரம்பு போக, சுருள் வாளும், மான் கொம்பும் கூட பள பளப்பாக இருக்குமாம். அந்தக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் கண்களுக்குள் ஒரு பனைக்கூட்டம் கிடந்து சலசலக்கும்.


சின்னப்பிராயத்தில் கஞ்சி கொண்டு போகும்போது ஒவ்வொரு பனைமரத்தையும் எண்ணிக்கொண்டே போவதும் கூட ஆறுமுகச்சாமியின் விளையாட்டுகளில் ஒன்று. முதல் முதலாக அய்யாவோடு பனைக்கூட்டத்துக்குள் நடக்கும்போது காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத்தெரியும். ஒரு பயம் உண்டாகும். ஆனால் அய்யா பக்கத்திலிருப்பதால் அந்தப்பயம் தெரியாது. பழகிப்போன பிறகு பனைகளெல்லாம் சேக்காளி ஆகிப்போனது. அந்தச்சலசலப்பு அவனைக் குசலம் விசாரிக்கிற மாதிரியே இருக்கும். அது அப்பாவின் சேக்காளிகள். அவருக்குப்பிடித்த அந்த மரத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கஞ்சிச் சட்டியை இறக்கி வைத்து விட்டு அன்னாந்து பாளைகளையும், நுங்குகளையும் பார்த்து பார்த்து தனக்குள்ளே பேசிக்கொள்வது.


திரும்பி வரும் போது எக்குப்போடு ஆறடி ஏழடி ஏறி, பிறகு சறுக்கிக் கீழே விழுந்தது எல்லாம் ஆறுமுகச்சாமிக்கு நினைவுக்கு வந்து போகும். பனையோலைக் குச்சல் தான் வீடு. பனங்காய் வண்டியும், பனமட்டைச் செருப்பும் அய்யா செய்து கொடுப்பார். அந்த வீட்டில் எப்போதும் பதினி வாடையும் கருப்பட்டி வாசமும் அவர்களோடே குடியிருக்கும். பதினிக்காலம் போனபின்னால், பனம்பழம். ஒரே ஒரு பழம் கிடந்தாலும்கூட கனவிலும் கூட இனிக்கிற வாசம் அந்தப் பிரதேசம் முழுக்க பரவியிருக்கும். அப்புறம் அவிச்ச பனங்கிழங்கு. இப்படி திங்கவும், விளாத்திகுளம் சந்தையில் கொண்டுபோய் விற்கவுமாக வருசம் பூராவும் அந்தப் பனைக் கூட்டம் அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அய்யாவும் வீடு திரும்புகிற போது பதினிக் கலயத்துக்குள்ளோ, கையிலோ பண்டமில்லாமல் வரமாட்டார். காலையில் பனங்காட்டுக்குப் போகிற அய்யாவோடு இனிப்பு வடைகள் எப்படி வந்தது என்கிற சந்தேகம் தனக்குப் பிள்ளைகள் பிறக்கிற வரை தீராமலே இருந்தது.

18.11.09

கலவரத்தில் நசுங்கிய இயல்பான மனிதாபிமனம்.

மதுரையில் துணிக்கடையில் ஒரு சாத்தூர்க்காரரைப் பார்த்துவிட்டால் உடனே எதோ பொக்கிஷம் கிடைத்தது போல அவர்களைப் பற்றிக் கொள்ளச் சொல்லுகிறது. நீங்க பைபாஸ் ரோட்ல அந்திக்கட வச்சிருக்கீங்கள்ள என்று முகமன் சொல்லிக்கொண்டு சிநேகம் தொடரச் சொல்லுகிறது. சென்னையில் யாரையாவது விருதுநகர் மாவட்டத்து மனிதரைச் சந்திக்க நேர்ந்தால் எதோ உறவுகளைச் சந்திக்க நேர்ந்தது போல ஆகிவிடுகிறது. குண்டூர் தாண்டிவிட்டாலோ ஒட்டு மொத்த தமிழகமும் ஓரினம் ஆகிவிடுகிறது.


இப்படித்தான் கட்டாக் ( ஒரிஸ்ஸா) அகில இந்திய மாநாட்டுக்குப் போகும்போது நாங்கள் 48 பேர் ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியை ஆக்ரமித்துக் கொண்டோம். கூத்தும் கும்மாளமுமாக கழிந்த ரெண்டு நாள் ரயில் பயணம். யாராவது ப்ரெட் ஆம்லெட் வாங்கினால் அது பல பங்குகளாகப் பிரிக்கப்படும். சிகரெட் குடிக்கிறவர்கள் ஆரம்பத்தில் கர்ணர்களாகவும் நாள் ஆக ஆக 'மாந்தோப்புக்குயிலே சுருளிராஜனாகவும்' எதிர்ப் பரிமாணம் எடுக்கிற விந்தைகள் நடந்தது.மிக நீண்ட கிருஷ்ணா ஆற்றுப் பாலத்தைக் கடந்து ரயில்போகையில் அப்படியே அந்தரத்தில் மிதக்கிற ஆர்ப்பரிப்பு தொற்றிக்கொண்டது. விசாகப்பட்டிணம் நிலையத்தில் சுடச்சுட அவிச்ச முட்டைவாங்கி மிளகாய்ப் பொடி சேர்த்து தின்ற போது பலபேருக்கு பல்விளக்கினோமா எனும் சிந்தனையில்லாமல் போனது.


தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.


சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.


டெல்லி கரோல்பாக் வீதியில் போய்க்கொண்டிருக்கும் போது 'எலே ஞொக்காலி' எனும் வார்த்தையக் கேட்டுப்பாருங்கள் விகல்பமில்லாத தமிழ்ப்பாலருந்திய சந்தோசம் வந்து சேரும். அங்கிருந்து எஸ்ற்றிடி போட்டு வீட்டுக்காரியுடன் பேசும்போதுபெருகும் கண்ணீரும் கதகதப்பும் "எப்ப வருவீக" என்று கேட்கும் போது சுருங்கிப்போகும் உலகத்தூரம். தூரக்கிழக்கு நாடுகளில் எப்படியெனத் தெரியவில்லை இன்னும் அடர்த்தியாக இருக்கலாம்.


ஒரு நாள் சென்னை ஜெமினி பாலத்துக்கிழே இருக்கும் எமரால்டு தியேட்டரில் மமூட்டியின் 1932 படம் பார்க்கப்போனோம்.மாப்ளாக் கலவரத்தின் தியாகத்தோடு ரத்தம் தோய்ந்த வரலாறு அது. நான், மாது, பீகே,சோலைமாணிக்க அண்ணன் எல்லோரும் நுழைவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். அந்த வரிசையில் வேஷ்டி கட்டிய நபர் ஒருவரைப் பார்த்தேன். தெரிந்த முகமாக இருந்தது. மூளையைக் கசக்கிக் கொண்டு இருந்த போது மம்மூட்டியின் ' தின ராத்திரங்கள் ' பற்றி மாது சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சில நிகழ்வுகளைச் செறிவூட்டிச் சொல்லுவதைக் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு படைப்பாளி.


சற்று திரும்பிப் பார்த்தபோது அந்த வேஷ்டிக்காரர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் நம்மை வச்சகண் வாங்காமப் பார்த்தா அது நம்ம முதுகில் குறுகுறுக்குமாம் கிராமத்தில் யாரொ சொல்லக் கேட்டது. அந்த வரிசையில் ஒரு அழகான மண்ணிக்கணும், ஒரு நேர்த்தியாக உடை உடுத்திய வாலிபனும் இன்னொரு விபச்சாரப்பெண்ணும் நொடியில் கண்டதும் காதல் கொண்டார்கள். பிறகு இடைவேளைக்கு முன் அவள் அவனது கைக்கடிகாரம்,மணிப்பர்சுடன் எஸ்கேப்பினாள் அது கிடக்கட்டும் . அந்த வேஷ்டிக்காரர் இப்போதும் கூட குறுகுறு வெனப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தனியே போய் யோசித்தேன். ஆமாம் சாத்தூர் முக்குலாந்தக் கல்லில் ஒரு ஆயத்த டெலிபோன் பூத் வைத்திருந்தவர் அவர், எனது நண்பனின் நண்பன் அவரது உடன் பிறந்தவன்.


விடைகிடைத்த சந்தோசத்தில் நேரே போய் ' நீங்க சாத்தூர் தானே ' என்று கேட்டேன். மருண்டு போய் இல்லை என்றார் நீ யாரு என்று கேட்டார் சொன்னேன் நான் சாத்தூரே இல்லை என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே போனோம். நான் மாதுவிடமும் பீகேவிடமும் இதைச்சொன்னேன். அப்போதும் கூட மறைந்திருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். படம் ஆரம்பிக்குமுன்னாலேயே தியேட்டரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. எனது கண்டுபிடிப்பும், விடையும் சிதைந்து போய் நான் மீண்டும் மூளையைக் கசக்கினேன்.


இரண்டு தரப்பிலும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்களைப்பலி கொண்ட ஒரு கலவரம் நடந்தது சாத்தூரில்.சகஜ வாழ்வு பாதிக்கப்பட்டு ஒரே ஊரில் இருந்த தெருக்கள் வேறு வேறு நாடுகள் போலானது ஓவ்வொரு தெரு முனையிலும் காவலர்கள் உட்கார்ந்து பாண்டியாடிக் கொண்டிருந்தார்கள். சாத்தூரின் தண்ணீர்ப் பஞ்சம் மறந்துபோனது. இரவில் குடங்களோடு தண்ணீருக்கு அலைய பயம் தடுத்தது. நாய்களும் காற்றும் மட்டுமே பயமில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது. அப்படி ஒரு கலவரம் சாத்தூரில் முன்னதாக நடந்திருந்தது.


நெடுநாள் கழித்து சாத்தூரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் தொடர்புடையவர் பட்டியலில் அவரும் ஒருவர் எனத்தெரிந்து கொண்டபோது இன்னும் பல விடை கிடைக்காத மனிதாபிமானக் கேள்விகள் என்னைச் சூழ்ந்துகொண்டது.

17.11.09

சச்சின் - தாக்கரே அவியல், பாப்லோ நெருடா - பால்பாயாசம்

''மும்பை இந்தியர்கள் எல்லோருக்கும் சொந்தமானது"இப்படிச் சொன்னதன் மூலம் நட்சத்திர மட்டை ஆட்டக்காரர் தெண்டுல்கர் பிரிந்துகிடக்கும் சிவசேனை மற்றும் மஹராஸ்ட்ர நவநிர்மான் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.


'' இது சச்சினுக்கு நல்லதல்ல, இது போன்ற கருத்துக்களைக் கூறி அவர் தனிமைப்பட வேண்டியதில்லை, ஆட்ட மைதானத்தின் எல்லைக் கோட்டிலிருந்து வெளியேறி அரசியல் எல்லைக் கோட்டிற்குள் அநாவசியமாக நுழைகிறார் " என்று கூறி பகிரங்க மிரட்டலை தனது சாம்னா இதழின் வழியே பிரகடனப்படுத்துகிறார் பால்தாக்கரே.


மராட்டியம் மராட்டியர்களுக்கு, மும்பை சிவசேனைக்கு, மராட்டியத்தில் இருக்கும் அரசு காலியிடங்கள் மராட்டியர்களுக்கு,இப்படியே நீண்டுகொண்டு போய் இப்போது அரசியல் ரவுடிகளுக்கு மட்டும் தான் என்பதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்பதுபோல அறிக்கை விட்டிருக்கிறார். சச்சின் தனது விளையாட்டில் சேகரித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் இந்திய ரூபாயின் மேல் கணிசமான தொகைக்கு கருப்பு மை பூசியிருக்கிறார். அது எந்தக் காலத்திலும் விவாதப் பொருளாகாது. நீ அங்கே இருந்து சம்பாதித்துக்கொள் எனது ஏரியாவுக்குள் வராதே என்பதைப் போல மிரட்டல் வந்திருக்கிறது.


எல்லைகள் தாண்டக்கூடது எனும் பழைய law of retaining discremination விதியின் நடைமுறையை அர்த்தத்தை பால்தாக்கரே குண்டாந்தடியின் குரலில் கூறுகிறார். பிரிவினை வாதத்தின் உடனடி உதாராணம் பங்காளிச்சண்டை.


0


அது கிடக்கட்டும் .....


எல்லைகளுக்குள் அடங்காதவர்கள் கவிஞர்கள். அப்படி ஒருவன் புத்தகம் பற்றிச் சொன்னதைப் பாருங்கள். சிலிக்குயில் எனப் போற்றப்படும் பாப்லோ நெருதா. விருதுகளும், வெகுமதிகளும் ஆசையோடு 'என் தோழனே' என நீளும் சுரங்கத் தொழிலாளியின் கையில் ஒட்டியிருக்கும் அலுமினியத் துகள் என் கைக்கு வருவதையே விருதாகக் கருதுவேன் என்று சொன்னவன் பாப்லோ நெரூதா.


புத்தகமே,

என் கவிதைகள்

கவிதைகளைத் தின்பதில்லை.

புத்தகமே,

காலணியில் புழுதி படிய

சாலைகளில் நான் நடப்பேன்

நீ உன் நூலகத்துக்கு

திரும்பிப் போ.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்து

கற்றுக்கொண்டேன்.

காதலை

ஒரு முத்தத்திலிருந்து

கற்றுக்கொண்டேன்.


16.11.09

அறியாமையின் மூலதனத்தில் கட்டிய கோட்டைகள்


இந்திய விடுதலைக்குப் பின் பிராந்திய வாரி மாநிலங்கள் எனும் கொள்கை மாற்றப்பட்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மஹாராஷ்ட்ரா ப்ரசிடென்சி மாநிலத்தில் இருந்த குஜராத்தும், மஹாரஷ்ற்றாவும் 1960 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய அந்நாளைய பம்பாய் நகரின் பெருமுதலாளிகள்குஜராத்திகளாகவும், மார்வாரிகளாகவும் மட்டுமே இருந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் தங்களை மூளை உழைப்புக்கு உட்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொண்டார்கள். அரசாங்க,தொழில் நிறுவண, அதிகாரத்தில் தென்னிந்தியர்களே பெருவாரியாக இருந்தார்கள். இதுவே அவர்களின் சொந்தங்களை வரவழைத்து அலுவலக பதவிகளில் இருத்திக்கொள்ள ஏதுவானதாக இருந்தது.


மும்பைவாசியான பாலசாஹேப் தாக்கரே எனும் கருத்துப்பட ஓவியர் குடியேற்ற வாசிகளை நையாண்டி செய்து மர்மிக் வார இதழில் படங்கள் வெளியிட்டதன் மூலம் பிரபலமனார். அந்த பிரபலத்தின் மூலதனத்தில் 1966 ஜூன் மாதம் 16 ஆம் தேதி சிவசேனைக் கட்சியை ஆரம்பித்தார். மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு துவக்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு கட்சியாகப் பரிணமிக்குமுன் கணக்கிலடங்கா வன்முறைகளை தென்னிந்தியர்கள் மீது பிரயோகித்தது. தென்னிந்தியர்களின்உணவுவிடுதிகளை கட்டாயமாக மராத்தியர்களுக்கு கைமாற்றியது.


அறுபதுகளில் பம்பாய் தொழில் நகரத்தின் தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்யூனிஸ்டுகளை சீர்குழைக்க தொழிலதிபர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்தது. அடிப்படையில் இந்துத்துவ கொள்கைகளோடு கிளம்பிய சிவசேனாவுக்கு கம்யூனிஸ்டுகளை அழிப்பது லட்டு சாப்பிடுகிற மாதிரியான ஒப்பந்தமானது. 1970 ஆம் ஆண்டு தாதர் பகுதி சட்டமன்ற உறுப்பினர் கிஷன்தேசயைப் படுகொலை செய்யப்பட்டார். உலகமெங்கும் வலதுசாரிகளின்வளர்ச்சி பொதுவுடமை வாதிகளின் உயிர்ப்பலியினாலேயே நிர்மாணிக்கப்படுகிறது.


1995 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிவசேனைக் கட்சியில் சந்தோசங்களும், வெறுப்புகளும் மும்பை நகரத்தின் இயலபை மோசமாக உலுக்கியது. பால்தாக்கரேயின் மனைவி மீனாத்தாய் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாக புரளி கிளப்பி இரண்டு வாரங்கள் மராட்டியம் சிதைக்கப்பட்டது. 2005 ல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைக் கண்டித்து பால்தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரே '' மஹராஸ்ட்ர நவ நிர்மான் சேனா'' என்கிற புதுக்கட்சியை ஆரம்பித்தார். இரு பிரிவுகளும் பலமாக மோதிக்கொண்டன. இருப்பினும் தனியே வந்த ராஜ்தக்கரே அவர்களின் பிரதான விதை முதலான தமிழர், கம்யூனிஸ்ட், எதிர்ப்பை விட்டுக் கொடுக்கவில்லை.

2008 அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற ரயில்வே சர்வீஸ் கமிசன் தேர்வெழுத வந்த பீகாரிகளையும், குஜராத்திகளையும் தேர்வு அரைக்கு வெளியே இழுத்துப் போட்டு அடித்தது எம் என் எஸ் கட்சி. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் திரு ஆஸ்மி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது அவரை சட்டமன்றத்துக்கு உள்ளேயே தாக்கியது. எம் என் எஸ் கட்சி இப்போது பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி புது பூதத்தைக் கிளப்பியிருக்கிறது. நடைபெறவிருக்கும் 1100 எழுத்தர் பதவிக்கான தேர்வில் மராட்டியகர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.


ஒரே நாடு ஒரே மதம் எனும் சொல்லும் கூட ஒரு தேர்தல் கால காரட் என்பதை அவர்கள் திட்டவட்டமாக நிரூபிக்கிறார்கள். அஸ்ஸாமில்,கர்நாடகாவில்,மும்பையில்,காவிரி,முல்லைப்பெரியாறு என தேசமெங்கும் தங்கள் மண்ணின் மைந்தர் கோஷங்களோடு கிளம்பியிருக்கிறது பிரதேச வெறிக்கூச்சல் பரிவாரங்கள்.


யாதும் ஊரே யவரும் கேளிர், திரைகடலோடியும் திரவியம் தேடு, கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், சரே ஜகாசே அச்சா,இந்தூஸுத்தான் ஹமாரா, ஜனகனமங்கள தாயக ஜயகே, எனும் பாடல்களில் பொதிந்து கிடக்கும் உணர்வுகளைப் பிரித்தெரியும் இந்த வெறியின் பின்னால் அப்பட்டமான சுயலாபம் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. அதைச்சரி செய்யவோ தடுக்கவோ எந்த திட்டமும் இல்லாது வெற்றுடம்பாய் கிடக்கிறது சமகால அரசியல் . எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க லாயக்கற்றுக் கைபிசைகிறது மத்திய அரசு. இது ஒரு புறம்.


ஆயிரமாயிரமாண்டு காலம் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், தாழ்த்தப்பட்ட ஜனங்களின் உயிர் வாழ்வாதாரமான கோரிக்கைகளை ஒட்டுமொத்த பலத்தைப் பிரயோகித்து அடக்குகிற சூது இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரட்டை அனுகுமுறைகளுக்குள் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறியாத ஜனங்கள்தான் இன்னும் பாரதி சொன்னது போலகஞ்சி குடிப்பதற்கிலாமலும் அதன் காரணம் அறியாமலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் அவர்கள்தான் என்பது சதம் இடம் அடைக்கிற இந்தியர்கள்.

நன்றி, விக்கிபீடியா,ஆனந்த் டெல்தும்டே( கயர்லாஞ்சி ),கூகுள் செய்தி

14.11.09

பொதுவின் தூதர்கள்.







தரையை நோக்கி நீளும்
விழுதின் நுனியில் பூத்திருக்கும்
தளிர் மஞ்சள் நிறத்தில்
குழந்தைகளின் பிஞ்சு விரல்களையும்.

இதுவரை எழுதப்படாத
சொல்கொண்டு சிதறும்
வார்த்தைகளில் உலகமகா
இசை மீட்டலையும்

முகத்தில் ஒண்ணுக்கிருந்த
பொக்கிஷ நாட்களைச்
நாட்களைச்சேமிக்க பனித்த
உன்சிரிப்பாணியாய்கிடக்கிற
குழந்தைகள் உலகம்.

எந்த தேசத்துக்
குழந்தையின் புகைப்படமும்
எனது குழந்தையின் சாயலைப்
பிரதிபலிக்கிற பொதுவின் தூதர்களாகவும்


காக்கைக்கு தன்குஞ்செப்படியோ


உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு.




12.11.09

பனியில் விழித்திருக்கும் நரகச் சாமம்.

தேநீர்க் கொப்பறைகளின் வெப்பத்தில்
வாழ்வு துவக்கும் டீ மாஸ்டர்கள்.
கடந்துபோன பேருந்துக்கும்
வரப்போகும் பேருந்துக்குமான
நிச்சயமற்ற இடைவெளியில்
கண்ணசரும் ஆட்டோக்காரர்.


அணைத்த பீடியைமீளக் கொழுத்தி
இச்சைக் கதையும் ஹெர்பல்புகையும்
விட்டதிலிருந்து தொடரும் ரிக்சாக்காரர்.
மரவட்டப்பூச்சிகளை ஞாபகப்படுத்தியபடி
படுத்துறங்கும் இலக்கமில்லா தெருவாசி.
முதல் பேருந்துக்காக விநாடி விநாடியாய்
கழித்துக் காத்திருக்கும் கிராமவாசி.


ஒற்றை விசில் அலறலோடு
மிதிவண்டிகளைப் பின்னிழுக்கும்
கூர்க்காவின்மலைப் புலத்து ஏக்கங்கள்.
நேற்றைய சுவடுகளில் மஞ்சள்
கவியெழுதும் நியான் ஒளியும்

உறங்கக் காத்திருக்கும் விடியல்தேடி.


11.11.09

கானாமல் போன சாமி - சிறுகதை

சின்னக்காள் வேகு வேகென்று நடந்து வந்தாள். அவளை விட வேகமாய் இருட்டு முந்திக்கொண்டு வந்தது. இன்னும் செத்த நேரத்தில் தெருலைட் போட்டு விடுவார்கள். சங்கனை நினைக்க நினைக்க உடல் நடுங்கியது இன்னைக்கு எதால் அடிப்பானோ. ஆப்பக்கனையோ, கலிமட்டையோ, விளக்கமாரோ. பிள்ளைமார் நல்லதண்னிக் கிணத்துப்பக்கத்தில் வந்து விட்டாள். அங்கே புளியமரங்கள் குவிந்திருந்தது. பனை மர உயரத்துக்கும் மேலிருக்கிற அதன் ஆஜானுபாகுத்தோற்றம் ஊர்தாண்டியவுடனே பசக்கென்று கண்ணிழுக்கும். மேலப்புதூரிலிருந்து வெயிலில் நடந்து வருபவர்கள், கம்மாப்பட்டிக்காட்டுக்கு களயெடுக்கப்போனவர்கள், வயக்காட்டுக்கு தொலி வெட்டப்போனவர்கள் எல்லோரும் அங்கே தான் அஞ்சு நிமிசம் நின்று, காலாத்திக்கொண்டு போவார்கள். சித்திரை மாதத்தில் புளி கொத்தாய் காய்த்துத் தொங்கும். ஆணும் பொன்னும் கல்லெடுத்து வீசி, பழம் எடுத்து எச்சில் ஊறத்தின்றுகொண்டு போவார்கள்.


அது குத்தகைக்கு விடுகிற வரைதான். அதற்குப்பிறகு சங்கரநத்தத்து கருப்பசாமித்தேவரின் மீசையும் குரலும் அவரில்லாத வேளைகூடப் பயமுறுத்தும். அதுக்குக் காக்காத்தோப்பு என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அங்கே பூந்தோட்டம் இருந்ததற்கான அடையாளமாக ஒரு வெள்ளரளிச்செடி இருந்தது. பக்கத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கிறது. அதற்குச் சவரட்ணைகள் செய்ய தோப்பும் பூங்காவும் இருந்திருக்க வேண்டும். பிள்ளையார் கோவில் உள்ளும் புறமும் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு கல்லும் கண்ணங்கரேன்று நாலு முதல் ஆறடி வரைக்கும் இருக்கும். ஓட்டார் மாமனும், கருப்பசாமிச்சித்தப்பாவும் அதை எப்படி சைசாக்கியிருப்பார்கள் எத்தனை பேர் சேர்ந்து தூக்கிவைத்திருப்பார்கள் என்று பேசிக்கொண்டு அந்தக் கல்மண்டபத்தில் உட்கார்ந்துதான் சீட்டு விளையாடுவார்கள். பெரியவர்கள் பாஞ்சாம் புலி ஆடுவார்கள். தரத்துப் பையன்கள் தாயம் விளையாடுவார்கள்.


ரெண்டு பேர் கட்டிப்பிடிக்கமுடியாத பெரியதூண்களையெல்லாம் பூதங்கள் தான் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்று மூனுகாது மாரிமுத்து சோல்லுவதை நம்பித்தான் ஆக வேண்டும். தர்க்கம் பண்ணவும் ஆராய்ச்சி பண்ணவும் எசக்கில்லை. ஆனால் அதைவிட பெரிய தூண்களை சைஸ் போடச்சொன்னால் நா வாரேன் நீ வாரேன்னு போட்டிபோட்டு உடைத்துக்கொடுக்க ஊர் முழுக்க ஆளிருக்கிறது. வெட்டிப்பொழுதுகளில் அந்தக் கல்மண்டபத்தில் சீட்டாடவும், துண்டைவிரித்து புளிய மர நிழலில் வாயைப்பிளந்து தூங்கவும் வந்துவிடுவார்கள். ஊரைத்தாண்டி இருப்பதால் பொண்டாட்டிம்மார்களின் தொல்லையும், போலிஸ்காரங்க தொல்லையும் ஜாஸ்த்தி இருக்காது. குருவம்மாதான் அப்பப்போ வருவாள். வருப்போதெல்லாம் கையில் பனைமாரு இருக்கும்.


'' எலே ஒனக்கு அறிவில்ல, கலிக்கிண்ட வச்சிருந்த கேப்பமாவத் தூக்கி வித்துட்டு வந்து வட்டப்பாச்சால போற்றுக்கிய, ராத்திரிக்கி என்ன ஓடைக்கா போவெ '' காது கேட்காதது போல மும்முரமாக சீட்டைப் பிதுக்கிக்கொண்டிருக்கும் ஆசிர்வாதம் பதிமூனு சீட்டுக்குள் அனுக்கதிர்கள் இருப்பதுபோல ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருப்பான்.


'' யப்பா ஓந்தாயார் வந்துட்டாங்க, போயிரு ''அவனைத்தவிர எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள். ''ஏ.. இன்னைக்கு புது வெளக்கமாரு வந்துருக்கு....... கலிக்கிண்ட கேப்பையில்லாட்டாக்கூட தெனம் தெனம் புதுசுதா''கூட்டத்துக்குள் யாராவது சொல்லுவார்கள். ''அடே சின்னப்பெயலே மரியாதையா எந்திரிச்சி வாரயா நா அங்க வரவா''குருவம்மா அடுத்த சுற்று ஆரம்பிப்பாள். '' நீ மூத்தவன் இல்லையா......? கடக்குட்டிதானா........? ''சில்லான் சொல்லவும் மற்றவர்கள், சிரிக்க ஆரம்பிப்பார்கள்.


'' இந்தா.....ஒங்க வீட்கள்ள ரொம்ப ஒழுங்கு தா, அன்னைக்கி கலிமட்டைய வச்சி ஓம்பொண்டாட்டி வெளுத்தத மறந்தாச்சோ'' ஆசிர்வாதன உட்டுட்டு அடுத்த தலைக்கு அம்பு பாயும். '' என்னருந்தாலு அது நாலு சொவத்துக்குள்ள,.. இது நரிக்கொறத்தி மாதிரில்ல இருக்கு..''சில்லான் சொல்லவும் குபீர்னு சிரிப்பு வரும். இப்படி குருவம்மா அங்கிருந்து பாட்டுப்பாட இங்கிருந்து எதிர்ப்பாட்டுப்பாட சிரிப்பும் வசவுமா தேரம் கழியும்.


'' எலே ஊரே சிரிக்கிது, எந்திரிச்சி ஒம்பொண்டாட்டிய என்னனு கேட்டுட்டு வாடா''கருப்பணப் பெருசு சொல்லவும். '' சீட்டுருக்கில்ல பெரியா '' '' ஆமா நொட்டுன கடசியில எப்டியும் புல்லு தாங் கொடுக்கப் போற, அதுக்கு இப்பக்கவுத்துனா... ஆப் தா வரும்,. இங்க பாரு ஜோக்கர கழட்டிப்பொடுறத ஏ....போடாக் கீர, கீர....முண்ட''சீட்டைச் சொத்தென்று எரிந்துவிட்டு ஆங்காரத்தோடு எழுந்து போவான். '' இன்னைக்கி ரணகளம்தான், ஏ சீட்ட நிப்பாட்டுங்கப்பா குருச்சேத்திரம் பாக்கலாம் '' '' ஆமா போனாலும் அந்தானக்கி.... போனதும் பொசுக்குனு படத்தப்போற்றுவாம்பாரு ''அவர்கள் சொன்னபடியே அவள் ரெண்டு வசவு வைவாள், அடிக்கப்போவது மாதிரி இவன் கைதூக்குவான், பிறகு கையிலிருக்கிற பத்து ரூபாயைக் கொடுக்கவும், சமாதானமாகிப் போய் விடுவாள்.


எலவந்தூர்க்காரியும் வந்த புதுசில், என்னங்க மாமா, போங்க மாமா என்றுதான் சொன்னாள். தெருச்சண்டையில் கெட்ட வசவுகள் கேட்டால் காது பொத்திக்கொள்ளும் நாகரீகக்காரியாகத்தானிருந்தாள். சனங்கள் சொல்வதுபோல ஊர்த்தண்ணியக்குடித்ததும் அவளுக்கும் வாயில் நாற வார்த்தைகள் தன்னாலே வந்தது. இல்லாவிட்டால் அந்த ஊருக்குள் காலந்தள்ள முடியாது. பைபிளம்மாப்பட்டிக்கு மட்டும் தான், ரெண்டு கொரிந்தியர், மத்தேயு எழுதின சுவிசேசம் பத்தாவது அதிகாரம், ஐந்தாவது வசனம் என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் வாய்க்குள் நுழையாது. ஏ சாத்தானே, கள்ளக்கழுத என்ற வார்தைகள் வந்தால் உச்சபட்சக்கொபத்தில் இருக்கிறதென்று அர்த்தம். மத்தபடி ஊரில் எல்லோருக்கும் கெட்ட வார்த்தைகள் இணைப்பு வார்த்தைகளாகி சந்தோசத்திலும், கோபத்திலும் கொப்பளிக்கும்.


ஆனால் அண்ணன் தம்பிகள், ஊர்ப்பெரியவர்கள், படிக்கிற பையன்களைப் பார்த்தால் பிரம்மாஸ்த்திர வசவுகளைப்பதுக்கிக்கொள்வது ஊர்ப்பெண்களின் இயல்பிலே குடியிருந்தது. கொட்டடடித்துக்கொண்டு தெருவழிப்போகும் எல்லா ஊர்வலங்களும், வேதக்கோயிலின் முன்னால் வந்தவுடன் சுத்தமாக நிறுத்தி நடந்து வாசல் தாண்டியவுடன் ரண்டனக்க, ரண்டனக்க எனும் உச்ச சுதிக்கு போவது போலொரு அணிச்சை மரியாதை இருக்கும். தெக்கு ஓடை பெண்களுக்கு அதனால், வடக்கு குளத்துப்பக்கம் பெண்கள் நடமாட்டம் அறவே இருக்காது. அது போலவே ஊரை ஒட்டி இருக்கிற கனி நாடார் பம்புசெட்டில் ஆம்பளைகள் குளித்தால் ஐ கோர்ட்டுக்கு வரை பெண்கள் போவார்கள். இவை யாவும் வேலிகளல்ல, மரியாதை வளையங்கள். இதைத்தாண்டிப்போகக்கூடாது எனும் கடுஞ்சட்டமும் கிடையாது, தாண்டியவர்களுக்கு தண்டனையும் கிடையாது.


'' ஏ.... ஒம்பூன வீடுமொழஞ்சி ஆனச்சட்டிய நக்குது '' என்று சொல்லுவதில் ஒரு செய்தியும், எச்சரிக்கையும் இருப்பது போல, '' ஓங் கோழிய ஒழுங்கா பஞ்சாரக்கூடைக்குள்ள பொத்திப்போடு '' என்பதிலும் எதிர் சமிக்கை மறைந்திருக்கும். அதே மாதிரி அந்த ஊர் முளைத்த நாளிலிருந்து வெள்ளைச்சேலையே யாரும் உடுத்தவில்லை. வருசம் திரும்பக்காத்திருந்து மறுதாலி வாங்கிக்கொள்ளும் தமிழ்பெண்கள் நிறைந்திருந்தார்கள்.ஒரு குச்சியை முறித்துப்போட்டு பருசப்பணத்தை திருப்பி வாங்கி பெண் வீட்டாருக்கு கொடுத்து விட்டு, ஊர்க்காரர்களுக்கு வெத்திலை பாக்கு வைத்து பிரிந்து போகும் கல்யாணங்கள். அது போலவே பிடிபட்டால் அண்ணாக்கயிறை அறுத்து தாலியாக்கிச் சேர்த்து வைக்கிற கட்டாயக்கல்யாணங்களும் சாதாரணம்.


ஆனாலும் கூட ரெண்டு வருசமாகத் தீராமலிருந்தது சின்னக்காளின் வழக்குத்தான். இதுவரைக்கும் ஆறு முறை பஞ்சாயத்துக்கூடியிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் சனிக்கிழமைதான் நடக்கும். ராத்திரி ஆரம்பிக்கிற கூட்டம் விடிய விடிய நடப்பதால் அப்படியே விடிகிற நேரம் கறிப்போட ஆள்கிளம்பும். கறியெடுத்து வதக்கி சாராயம் ஊத்திக்கிட்டு மறுநாள் தூங்கிப்போகலாம். ஒவ்வொரு தரமும் சங்கன் தான் பிராது கொடுப்பான் எனக்கு அவள் வேண்டாமே......வேண்டாமென்றும் தீர்த்து விட்டுவிடவேண்டுமென்றும், சாம்பான் வீட்டுக்கும், தங்கிளியான் வீட்டுக்கும் நடையாய் நடப்பான். வெதப்பு அறுப்பு காலங்களைத் தவிர்த்துவிட்டு சாவகாசமான நாள்குறித்து ஊர்சாட்டுவார்கள்.


''இன்னைக்கி ஒரு தேங்காயும் ஒரு கட்டு வெத்திலயும் மாரியப்ப நாடார் கடையில் வித்துப்போகும்டியோய்''சொல்லிக்கொண்டே ஊர்கூடும், ஊரென்றால் மொத்த ஊரல்ல பிராதுகுடுத்த சங்கன், சங்கனின் வலசல் பத்துப்பேர். எதிர்ப்பிராதுகுடுத்த சின்னக்காள், சின்னக்காளின் வலசல் அஞ்சு பேர். ஊர்த்தலைவர், சாம்பான், தங்கிளியான், அப்புறம் தெண்டப்பணத்தில் தண்ணியடிக்க ஆறுபேர் உட்கார்ந்திருப்பார்கள். சுவாரஸ்ய ஈர்ப்பில் எட்டத்தில் நிறைய்யப் பெண்கள் நின்றிருப்பார்கள்.


அச்சடிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் இல்லாதபோதும், ஆண்டை அடிமை இல்லாததாலும், அந்த துலாக்கோளுக்கென்றும் சேதம் வந்ததில்லை. கருப்பணப்பெருசின் வலசல்கள் பிராதுக்குள் வராதவரை நீதி ஒருபோதும் வழுவாது. ஆனாலும் சின்னக்காளின் வழக்குத்தானின்னும் தீர்ந்பாட்டில்லை. அது தொடங்கிய இடத்துக்கே வந்துவிடும் '' எங்கள வேல வெட்டியில்லாத சும்பப்பெயகன்னு நெனச்சியா, இன்னுமே ஊரக்கூட்டுன தாயோளி..ஊரவிட்டே வெரெட்டிப்பிடுவேன் கீர... கீரமுண்ட '' வேட்டிமண்ணைத் தட்டிக்கொண்டே இன்னும் கூடுதல் அடைமொழிகளோடு திட்டித்தீர்த்து விட்டு சீட்டு விளையாடப்போய்விடுவார் கருப்பணப்பெருசு.


தாழ்வாரத்தில் படுப்பதா, வீட்டுக்குள் படுப்பதா எனும் குழப்பத்திலேயே அவனது ராத்திரி கழிந்துவிடும். சின்னக்காள் கண்முழிக்கிற நேரமெல்லாம் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொடு பீடியைக்குடித்துக்கொண்டிருப்பான். சாமத்திற்குப்பிறகு கண்ணயர்ந்து ஒரு கோழித்தூக்கம்போட்டு அவனுக்கு விடியும் போது ஊர் சுறு சுறுப்பாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும். பொண்டாட்டி காணாமல் போயிருக்க, ஊரிலுள்ள சோக்குப்பேர்வழிகள் எல்லோரும் வில்லனாகத்தெரியவார்கள். பருத்திக்காட்டுக்கு களை எடுக்கப்போய்த்திரும்பி வருகிற அவளை கண்ணால் சோதனை போடவும், கேள்விகளால் தீக்குளிக்க வைப்பதும் சகிக்காமல் பூட்டிவைத்த வயைதிறப்பாள். சாம தான பேதம் தீர்ந்து கடசியில் சண்டை வந்துசேரும். ஒண்ணுரெண்டாய் ஊர்த்தலைகள் கூடி கூத்துப்பார்க்கும்.


அடுத்த நாள் மூஞ்சி முகம் வீங்கிப்போக சங்கன் வேலைக்குப்போவான் சின்னக்காள் மட்டும் விடுப்பெடுக்க நேரும். வருசத்துக்கு மூனு தரம் கோபித்துக்கொண்டு மலைப்பட்டியிலிருக்கும் தாய் வீடு போவாள். ஒரு மாதம் கழித்து வந்து சங்கன் பாவம்போல நிற்கிறதைப்பார்த்து மனசிறங்கிப்போய் திரும்பிவருவாள். இப்படியே ஆறு வருசம் ஓடிப்போனது. இப்போது அங்கும் போவதற்கும் வழியில்லாமல் பெத்தவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள். இந்த ஆறு வருசம் சந்தோசச் சுவடுகள் ஏதுமற்ற வெட்டவெளியாக கடந்துபோனது. நாலு வார்த்தை சிரித்துப்பேசவும், தோளில் கிடந்து கண் மூடவுமான ஏக்கம் கெட்டிதட்டிப்போய்விட்டது. இந்த இண்டஞ்செடிப்புதருக்குள்ளிருந்து வெளிவர வழிதெரியாமல், சில நேரம் அரளி அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து இரவு வரக்காத்திருப்பாள். ஆனால் அன்று மட்டும் பாசக்காரனாகத் தெரிவான். மறு நாள் விடிகிற போது, சங்கனின் கண்களில் இன்னும் ஆயிரம் மடங்கு சந்தேகம் தேங்கியிருக்கும். அப்போதெல்லாம் அவளை உரசிப்போகிற சினையாடு தான் இண்டஞ் செடியைத் தாண்ட தடம் தரும். குனிந்து கழனித் ததண்ணீர் காட்டும்போது முகம் உரசும். காட்டுக்கு பிடித்துக்கொண்டுபோகும் போது துள்ளியோடி திரும்பி வந்து பிருஷ்டத்தில் பொய்முட்டு முட்டி விளையாடும். சேலைத் தலைப்பைக் கடித்து இழுக்கும். அந்த ஆட்டின் கையில் தான் இவளைக்கட்டியிழுக்கிற பாசக்கயிறு இருந்தது.


சின்னக்காள் வேகு வேகென நடந்து வந்தாள். அவள் கையில் ஒரு கட்டு ஆமணக்கு குலையிருந்தது. தலையில் சின்னப்புல்லுக்கட்டு இருந்தது. கை குரக்கவலித்து, தலை குன்னிப்போனது. மனசும் உடலும் சுமை இறக்க இடம் தேடி அலைந்தது. கீழ் திசை பார்த்திருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள். கட்டைப்பீடிகளும் வெற்றிலைக்காம்புகளுமாக் கிடந்த தூசியைத்தட்டினாள். பீடி நாத்தம் குறைந்து கல் மண்டபம் குளு குளு வென்றிருந்தது. அப்போது இருட்டைப்பற்றியதான பயம் குறைவாகவும், சங்கனைப்பற்றிய பயம் அதிகமாகவும் வந்து சேர்ந்தது. மெலிதான காற்று வீசவும் வியர்வையிருந்த இடங்கள் குளிர்ந்தது.


பக்கத்திலிருந்த அடி குழாயைப்பார்த்ததும் நாவறட்சி கூடுதலானது. எழுந்துப்போய் தண்ணீர் வரும் வரை கைபிடியை அடித்தாள் குழாய்ப்பக்கம் வந்து கையேந்திக்குடித்தாள் தாகமடங்கவில்லை திரும்பவும் வந்து தானே அடித்து தானே குடித்தாள். தனியே அமர்ந்து சதுரங்கம் ஆடுவதுபோலவும், சடங்கான சமயத்தில் ஆளில்லா வேளையில் இல்லாத போட்டியாளைக் கற்பனை செய்துகொண்டு பாண்டியாடியது போலவும் இருந்தது. கொஞ்சம் தண்ணியள்ளி முகத்திலடித்துக்கொண்டாள். கல்மண்டபத்தில் உட்கார்ந்து முந்தானையெடுத்து முகம் துடைத்த போது கிழக்கே மாடசாமி கோவிலைத்தாண்டி, கருத்தரசா நாடார் மொட்டைக் கிணற்று கமலைக்குத்திக்கு மேலே உருண்டையாகச் செந்துருக்கப்பொட்டு நிறத்தில் நிலாக்கிளம்பி நின்றது. கொக்கு ஒன்று வானப்பெரு வெளியில் தன்னந்தனியே காற்றைக்கடந்து போனது. எதிரே கதவில்லாப்பிரகாரத்தில் கேட்பாரற்ற பிள்ளையார் சிலையும் தனியே கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருந்தது.


குளிர்ந்த கல்மண்டபம், நிலா, மெலிய காற்று, எல்லாம் சேர்ந்து தனிமையின் மேல் தீயள்ளி வீசியது. சின்ன வயசில் கடலைச்செடிக்குமிக்குள் கட்டிப்பிடித்துக் கடித்துவைத்த காளியப்பனின் முகம் வந்து போனது. அவனிடமிருந்து கிளம்பும் பப்பர்மிட்டய் மணத்தில், அரோக்கியதாசின் இறுக்கம் அழுத்தியது. அவன் இருந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே இருந்தது. எவ்வளவு நேரம் பின்னோக்கிச்சுற்றினாலும் சங்கனின் பீடிக்கங்கு எறிகிற முகம் தென்படவே இல்லை. காளியப்பனையும் ஆரோக்கியதாசையும் சேர்த்துப்பிசைந்த ஒரு உருவம் தேடித் தேடி அலைந்தது. பிள்ளையார் மண்டபத்தில் பட்டுத் தெறிக்கிற நிலா வெளிச்சத்தில் அவள் மட்டும் தனியே இருந்தாள். யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத நினைவுகளைப் பிள்ளையாரிடம் சொல்லுவதாகப் பாவனை செய்து கொண்டு சொன்னாள்.


அடியில் தேங்கிக்கிடக்கிற நினைவுகளை வார்த்தைகளில் சொல்லமுடியாமல் திக்கினாள். சங்கன் நட்ட நடுக் கூட்டத்தில் பஞ்சாயத்தார் மத்தியில் சொன்ன வார்த்தைகள் அவளை உக்கிரமாகத்தாக்கின. '' ஊர் மேயிறவா, மலடி, ராங்கி பிடிச்சவா'' இந்த வார்த்தைகள் உலுக்கிப்போட்டது. '' பிள்ளையாரப்பா என்னியப்பாரு நானா மலடி '' என்று சாயம்போன கண்டாங்கிச் சேலையை உருவிப்போட்டு, பிறந்த கோலத்தில் நின்றாள். பேய் பிடித்து விட்டதாக ஊர் நம்பியது. சாமி இறங்கியதென்று சங்கனும் பயந்தான். அவள் ஒவ்வொரு நிலா நேரத்திலும் கானாமல் போனாள். பிறகு ஒரேயடியாகக் காணாமல் போனாள். அவனைத்தேடி வெளியூரிலிருந்து ஆட்கள் வரும் வரை ஆரோகியதாஸ் காணாமல் போன விசயம் யாருக்கும் தெரியாமலே இருந்தது.

10.11.09

வெப்பம் அடைகாக்கும் வீடு.

வெப்பம் குடித்து சினந்த மண்ணில்
மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்.
வருடாந்திரமாகப் புதைந்து கிடந்த
பசுமையின் விதைகள் சீரற்ற
மரகதப் பளிங்கெனப்பாவும் காடு.


எடுத்துக் கொண்ட தானே
மீளப்போர்த்தும் குளங்களின் அம்மணம்.
அங்கிருந்து
தவளைகள் நிரப்பும் இசை இரவு.
வேலிப்புதருக்கும் வெட்டவெளிக்கும்
அலைந்து கதறும் பன்றிக்கூட்டம்.


வெளுத்த துணியிலிருந்து கிளம்பும் புழுங்கல் சுவாசம்.
கருத்த மேனியெங்கும் கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை.
கடக்கும் நத்தையும் ஓணானும் நாயும் நசுங்கும் நாற்கரச்சாலை.


அப்பாடவெனச்சொல்லி
ஓய்வெடுக்கும் குளிர்பதனப்பெட்டி.
அனைத்திலும் ஊடுறுவித்
தகிப்பை விரட்டும் அடைமழை.


விரட்டப்பட்ட வெப்பம்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்.

9.11.09

சீசேம் வீதி. Sesame Street ( சவளைபாய்ந்து கிடக்கும் குழந்தைகள் இந்தியா)








உலகமெங்கும் வாழுகிற குழந்தைகளுக்கான கொண்டாட்டமாக சீசேம் வீதியின் நாற்பதாம் ஆண்டுக்கொண்டட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சீசெம் வீதி என்றால் என்னவென்று சொல்லு பிறகு கொண்டாட்டத்தைப் பற்றிப்பேசலாம் என்கிற குரல் கேட்கிறது. அது சீசேம் வீதி ஒரு ஆச்சரியம் ஆம் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிதான் சீசேம்வீதி. 1960 ஆம் ஆண்டுக்கு முன்னாள் குழந்தைகளை மையப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்சி ஏதும் இல்லையென்பது அமெரிக்ககளுக்கு பெரும்குறையாக இருந்திருக்கிறது.



இந்தியாவில் தொலைக்காட்ட்சி புழக்கத்தில் வந்ததே 1975 ஆம் ஆண்டுதான் என்பது நாம் பெருமையோடு நினைவுகூற வேண்டிய செய்தி. அதுவும் கூட அந்த ராமாயணத்தில் இந்த மஹாபாரதத்தில் வந்தது என ரூதர்போர்டுக்கு போட்டியாக நமது புராணங்களை முன்னிறுத்திக் கொண்டிருந்தோம் இருக்கிறோம் இருப்போம். இதைச் சவாலாக எடுத்துக்கொண்ட கார்னெகி கல்வி நிருவணம் 1966 ஆமமாண்டு ஜோன் கேன்ஸ் கூனி எனும் இயக்குநரை தத்து எடுத்து இது குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டது. மத்தியதர, குறைவான வருமானமுள்ள குடும்பத்துக் குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வியை விதைப்பதே இதன் நோக்கமாக இருந்தது.



ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதின்மூன்று தொடருக்கு சில்றன்ஸ் டெலிவிசன் வர்க்சாப் நிறுவணத்தின் சின்னமே சிசேம்வீதியின் சின்னமாக இருந்தது. அதன்பிறகான செழுமைப்படுத்தலில் கல்வியாளர்கள்,மனோத்ததுவநிபுணர்கள்,குழந்தை ஆர்வலர்கள் கூட்டு முயற்சியில் புதுப்பொலிவுடன் 1969 ஆண்டு நவம்பர் 10 ஆம்தேதி முறைப்படி ஆராம்பிக்க இருந்தது. இந்தத்தொடரின் முன்னோட்டம் அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஒலிபரப்பப்பட்டவுடன் அமெரிக்க அரசு இதன் முக்கியத்துவம் உணர்ந்து அரசு கஜானாவில் இருந்து ஒரு பெரும் தொகையை கொடுத்தது.



கணினி வரைகலை, பொம்மைகள், நிஜ நடிகர்கள் எல்லவற்றையும் இணைத்து குழந்தைகளுக்கான கற்றலின் முனைப்பை தூண்டுகிற விதமாக வடிவமைக்கப்பட்டது. குழந்தைகளிடம் எழுத்து எண்,கணிதவினாக்களுக்கான விடைகள் ஆகியற்றை பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தியது. கல்வியை அன்றாட சமூக நிகழ்வுகளில் இருந்து எடுத்துக் கொடுத்தது.வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்த முடியாததாகக் கல்வியை மாற்றியது சீசேம் வீதி.



கனத்த காட்சிகள், சடுதியில் மாறும் நிகழ்வுகளின் தொகுப்பு, வேடிக்கை, சிரிப்பு இசை எனும் லாபம் கலந்த வியாபார யுக்திகளோடுதான் துவக்கத்தில் தயாரிக்கப்பட்டது சீசேம்வீதி. இதைக் கேள்விப்படும்போது உங்களுக்கு ஏதாவது அலையாடுகிறதா?. உங்கள் ஊகம் சரிதான், சோப்பு, சீப்பு, உப்பு, கண்ணாடி, பல்பொடி விற்க இன்று பயன்படுத்தப்படும் விளம்பர யுக்தியை அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் கண்டுபிடித்து உலகத்துக்கு விற்று விட்டார்கள்.



தங்கள் நிராசைகளை ஏற்றிவைக்கும் நடுகல்லாகவும், அருதப்பழசான ஜாதி,மதம்,கடவுளைப் புதுப்பிக்கும் இடமாகவும்குழந்தைகள் பேனப்படுகிற பொது இந்தியாவில் இது போன்ற செய்திகள் வியப்பானதாக இருக்கிறது.



சவளையாகக் கிடக்கும் இந்தியக் குழந்தைகள் குறித்து பேச இன்னும் போதிய குரலற்றுக்கிடக்கிறது இந்தியா......

7.11.09

உலகைப் புரட்டிய ஓர்நாள் - The November 7, Remember today








நெருக்கடிகளின் அடர்த்தியில் தானாக முளைக்கிற எதுவும் புரட்சியின் அடையாளமாகும்.தொழிற் புரட்சிக்குப் பிந்தைய ரஷிய சமூக பொருளாதாரப் பின்னடைவுகளில் அங்கிருந்த 50 சதமான தொழிற்சலைகள் மூடப்பட்டன. கோடிக்கணக்கான தொழிலாளர் வேலையிலிருந்து விரட்டப்பட்டனர். மீதமிருந்த தொழிற்சாலைகள் அதையே காரணம் காட்டி வாங்கிக்கொண்டிருந்த கூலியில் 50 சதமானத்தை தட்டிப்பறித்தன. அதற்கெதிரான கிளர்ச்சியாக டான்பாஸ் சுரங்கத்தொழிலாளர்கள், யூரல் உலோகத்தொழிலாளர்கள், பக்கு எண்னெய் உற்பத்தித்தொழலாளர்களின், மத்திய ஜவுளி உற்பத்திக்கழக தொழிலாளர்களின் ஆர்ப்பட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நாடுதழுவிய உஷ்ணத்தை உற்பத்தி செய்தது.

1917 ஜூலை முதல் நாள் பெற்றோக்ரேடில் கூடிய ஐந்துலட்சம் ஆர்பாட்டக்காரர்களின் மேல் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. கூலி உயர்த்திக்கேட்ட தொழிளார்கள் அறுபத்துநான்குபேரின் உயிர்தான் நவம்பர் புரட்சிக்கான முதல் முதலீடானது. அங்கு சிந்திய 650 பேரின் குருதியில் இறுதி வடிவம் நவம்பர் 7 நாளில் மாஸ்கோ பெட்றோக்ரேடில் போல்ஸ்விக்குகளின்புரட்சியாக மாறியது. ப்ரவின்சியல் அரசு தூக்கிவீசப்பட்டு உலகின் முதல் தொழிலாளர் அரசின் செங்கொடி அலையாடியது.

வறட்சி வந்தால் புரட்சி வரும் எனும் கிராமச் சொலவடையின் மகோன்னதமான நிஜம் நவம்பர் 7 புரட்சி.பெருகி வரும் வேலையிழப்பு, அரைப்பட்டினி-முழுப்பட்டினி, பட்டினிச்சாவுகள், சோகையான கர்ப்பவதிகள்,குழந்தை தொழிலாளர்கள், அவுட்சோர்சிங் என்கிற கணக்கிலடங்கா நெருக்கடிகள் நிறைந்திருக்கிறது இங்கே. தகிக்கும் தனலின் மேல் ஈரத்துணிகள் போர்த்தும் நவவஞ்சகம் ஜெயிக்கிற தேசத்திலிருந்து வலைமக்களுக்கு புரட்சி நினைவுகூறும் வாழ்த்துக்கள்.

5.11.09

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்.

ஒருகாலை வேலையில் கலைஞர் தொலைக்காட்சி சந்தித்த வேளை நிகழ்சியில் கண்ணதாசன் நற்பனிமன்றத்தலைவர் ஒருவரின் நேர்கானல் ஒளிபரப்பாகியது. அவர் பல முரணான தகவல்களைப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனார். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய பிறகுதான் தமிழ் மக்கள் இந்து மதம் என்ற ஒன்று இருப்பதாக அறிந்தார்களாம். அதிர்ச்சியாக இருக்கிறதா இன்னும் கேளுங்கள்.


உழைக்கிற மக்கள் திரளில் உள்ளவர்கள் படித்து பெரிய பெரிய சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகளாக மாறிவிட்டாகளாம் அதனால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். விஞ்ஞானம் நாற்று நட, கதிரறுக்க,என விவசாய எந்திரங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் கருத்து தெரிவித்தார். விவசாயம் நசிந்து வருவதற்கு பல காரணிகள் இருக்கிறது என்பதை மறைத்து பொதுவாகவே பல பிரபலங்கள் கூட இதையேதான் சொல்லுகிறார்கள்.கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது உண்மையா.? இல்லை.


இந்திய அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்த பட்சத் தினக்கூலி என்பது ரூ231.69பைசா. அதைக் கொடுக்க விவசாயிகளெல்லாம் தயாராகக் கையை நீட்டிக் கொண்டிருந்தது போலவும் அவர்கள் அதையெல்லாம் வேண்டமென்று உதறித் தள்ளிவிட்டு ஊதாரித் தனமாக விவயாக் கூலிகள் அலைகிற மாதிரியும் ஒரு மூட நம்பிக்கை பரப்பி விடப்படுகிறது. பெண்களுக்கு தினம் நாற்பது முதல் அறுபது ரூபாயும் ஆண்களுக்கு அறுபது முதல் எண்பது ரூபாயும் தான் விவசாயக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு என்னென்ன வாங்கிவிட முடியும்?. ஒரு படி நெல் அதுவும் பொக்குநெல் அதிகம் கேட்டதற்காகத்தானே வெண்மனியில் கருகியது நாற்பது உயிர்.


நிலப்பிரபுத்துவ முறையும், பண்ணையடிமை முறையும் ஆழ வேரூன்றிக் கிடந்த காலங்களில் பழைய கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுத்து மாட்டை விடக் கேவலமாக மனிதர்களிடம் உழைப்பை உறிஞ்சிய காலம் விவசாயிகளுக்கு பொற்காலம். விவசாயக் கூலிகளுக்கு ?. விவசாய இடுபொருள், உரம் இவைகளின் விலைகளை வெளிநாட்ட்டு முதலாளிகள் நிர்னயிப்பதும். விளைந்த பொருட்களின் விலையை உள்ளூர் முதலாளிகள் நிர்ணயிப்பதுமான சிக்கல்களில் விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படுகிறது. அதை மீட்கக்கிடைக்கும் மாண்யத்தையும் கடல்தாண்டிய உத்தரவுகள் தடுக்கிறது. இது பற்றி யோசிக்கத்தெரியாத, பேசத்தெரியாதவர்களின் அரை வேக்காட்டு பொருளாதாரத் தத்துவமே இப்படித்தான் இருக்கும்.


இன்னொரு வெடிகுண்டை வீசினார் அவர். அதுதான் ஹாலில் இருந்த என்னைத் தூக்கிவாரித் தெருவில் போட்டது. இப்படி,இப்படியேதான் இந்த உலகம் மாற்றங்களைச் சந்திக்கிறதாம் " மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றதெல்லாம் மாறிவிடும்" இதைக்கூட கவிஞர் கண்ணதாசன் தான் சொன்னாராம். அதுபடிதான் நடக்கிறதாம். அப்படியானால் அந்த தாடிக்கார மனுஷன் காரல் மார்க்ஸ் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் ஒலிநாடாவுக்கு உரை எழுதினாரா ?

4.11.09

நினைவுகளில் மட்டும் நெற்றிதொடும் பாசமலர்கள்.








வாங்கிய பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிருசு பெருசெனும் போட்டியில் சண்டை போட்டுக் கொள்ளவும். எனது பழய்ய சட்டையைப் போட்டுக் கொள்ளவும். சின்னச்சின்ன தவறுகளை அப்பனிடம் போட்டுக் கொடுக்கவும். பாசி, ஸ்டிக்கர், பெண்கள்கைப்பை பார்க்கிற நேரங்கள் நினைவுக்கு வரும் அக்கா தங்கையில்லாத அனாதைக்கு. இல்லாத பொருள்கள் மீது வட்டமிடும் கனவுபோல எங்கிருந்தாவது வந்து அலைக்கழிக்கிறது எனது நாட்களை இந்தப்படம்.



ஆளில்லா நேரத்தில் கண்ணாடியின் முன்னாடி அல்லாடும் குருவியைப் போலவே. பிள்ளை விளையாட்டில் என் பிறப்பாக வந்த செல்லக்கனி. எட்டாம் வகுப்பில் ஜோடி போடும்போது எனக்குத் தங்கை முறையாக வந்த மைதிலி. பணியில் சேர்ந்த பின்னால் நடராஜன் மனைவி அம்மு, இன்னொரு .. இப்படி நான் எனக்கென வரித்துக்கொண்ட பிறப்புகள் ஏராளம்.



பாசமலர் பார்க்கிற நேரமெல்லாம் எங்கம்மாமேல் எனக்கு கோபம் வரும். அதையெல்லாம் இறக்கி வைக்கிற முதிர்ந்த பிறப்பாக,காற்றைக்,கடலை,காக்கைகுருவிகளைக் கைநீட்டும் யாரையும் உறவாக்கச்சொல்லியபடி கிந்திக் கிந்தி நடக்கும் அவள் தான் சின்னத் தங்கச்சி, பெரியக்கா.