31.12.09

முதல் புதுவருடமும் என் தேவதைத்தாயும்.


எட்டாம் பண்டியலு என்று சொல்லிக்கொண்டுதான் எனக்கு இந்த புதுவருடம் முதன் முதலில் அறிமுகமானது.அந்த வேதக்கோயிலில் குழாய் ரேடியோ அலறலுக்கு ஆட்டம்போடப்போய் பீடம் முழுக்க மெழுகுவர்த்தி எரிய அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே தங்கிவிட்டேன். சாமத்தில் பூஜை நடக்கும் போது பீடத்துப்பக்கம் காலை நீட்டித்தூங்கிய என்னை எழுப்பிவிட்டார்கள். வெள்ளை அங்கியில் அவர் ஜபம் சொல்லிக்கொண்டிருந்தார்.எனக்கு பாட்டி சொன்ன பலிகொடுக்கும் கதைகள் ஞாபகத்துக்கு வந்து அழுதுவிட்டேன்.கடுப்பான பாதிரியார் பூஜையை நிறுத்திவிட்டார்.எங்கோ சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த என் தகப்பனாருக்குச் சொல்ல, அவர் ஓடிவந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.

எட்டுப்படிக்கும்போது ஊருக்கு பிரச்சார்த்துக்கு வந்த அந்த சிஸ்டர்தான் என்னைக் கூப்பிட்டு பீடத்தை அலங்கரிக்கச்சொனார். அந்த வார்த்தை கன்களுக்குள் கிடந்த கனிவு.என் தலைமுடியைக்கோதிவிட்ட விரல்களில் சிக்கிக்கொண்டு அவர்களின் பின்னாலே அலைந்தேன்.ஊரிலிருந்து சாத்தூர் எட்டு கிலோமீட்டர் அவ்வளவு தூரம் அவர்களோடு நடந்து போய் கான்வெண்ட் வாசலில் விட்டுவிட்டு வருவேன்.அந்தளவுக்கு கிறுக்குச் செய்தது அவர்களின் அன்பு.குழிப்பணியாரம் பிடிக்கும் என்று சொன்ன அவர்களுக்காக என் அம்மாவிடம் மன்றாடி தினையில் செய்த பணியாரம் கொண்டுபோய்க் கொடுத்தேன். வாங்கிக்கையில் வைத்திருந்த அவர்களின் முகத்தில் தெரித்த வெளிச்சம் எந்த தேவதூதர்களுக்கும் கிடைக்காதது.

காட்டு வழியே நடக்கும் போது வாடா என் தங்கமகனே என்று என் தோழில் கைபோட்டபடியே நெடுந்தூரம் நடந்து வரும். அப்போது அந்த வெள்ளை அங்கியில் படிந்திரிருக்கும் டெட் சோப்பின் வாசத்தோடு நான் கண்மூடி நடப்பேன்.ஒரு வேலிப்புதரில் நின்று நீ முன்னாள் நட என்று சொன்னபோது விளங்கவில்லை.நான் அவர்களின் காவலன் என்கிற கர்வத்தில் நகரவில்லை. லூசுப்பயலே போடா யூரின் போகனும் என்று சொன்னபிறகுதான்.
தேவதைகளும் மனுஷிகள் என்பது புரிய ஆரம்பித்தது அந்தச் சின்னவயசில்.ஒரு முறை சிஸ்டர் நீங்க சடைபோடுவீங்களா என்று கேட்டதற்கு பதில் சொல்ல ஒரு பெரிய மௌன இடைவெளி விட்டதை நிறைய்ய காலங்கள் கழித்து படம் பிடித்து வைத்துக்கொண்டேன்.

அவர்கள் தான் முதன் முதலில் புது வருடத்துக்கு கான்வெண்டுக்கு வா நான் உனக்கு புத்தாண்டுப்பரிசு தருவேனென்று சொன்னார்கள்.அன்று வாங்க முடியாமல் போன அந்த சிகப்பு நிற நேவி பேனாவின் எழுதப்படாத
மையில் என்னைபெறாத அந்த அன்னையின் நினைவுகள் உறைந்துகிடக்கிறது. அது  என்னை அலைக்கழிக்கிறது.
அம்மா நீ எங்கிருக்கிறாய்.

30.12.09

தேடு கல்வியில்லாத ஊரை

அவள் பெயர் லட்சுமி,வயது பதினாறு இருக்கும். எழுபது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றதற்கான சிறப்பு உதவித்தொகை கிடைத்திருந்தது அவளுக்கு. அந்த காசோலையை மாற்ற எங்கள் வங்கிக்கு வந்தாள்.கணிதத்திலும்
பௌதிகத்திலும் தொண்ணூறு சதவீத மதிப்பெண் வாங்கியிருந்தாள். மிகப்பெருமையாக இருந்தது. ஊக்கம் சொன்னேன். நல்ல கல்லூரியில் சேர் எதாவது ஆலோசனை சின்னச்சின்ன உதவிகேள் செய்யலாம் என்றேன் எல்லாவற்றுக்கும் மௌனத்தை அல்லது தலையாட்டுவதைப் பதிலாக்கி விட்டுப் போனாள். பணம் வந்ததும் எடுத்து அதை நிலையான வைப்புத்தொகையில் போடச்சொன்னாள் ஏன் என்று கேட்டதற்கு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரை வைத்திருந்தாள்.

கூட வந்த ஒரு அம்மாவிடம் கேட்டதற்கு அப்பா படுத்த படுக்கை,அம்மா தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்க்கிறாள்,வீடு வாசல் இல்லாத கூலிச்சனங்கள் என்று சொல்லிவிட்டுப்போனது. மீண்டும் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். எங்கப்பாவ விட எனக்கு படிப்பு ஒண்ணும் பெரிசில்லை என்று சப்பென அறைந்து விட்டுப்போனாள்.அந்த அதிர்ர்சியிலிருந்து மீள்வதற்கு ஒரு ஆறு மத அவகாசம் கூடக்கொடுக்காமல் மீண்டும் ஒரு அதிர்ச்சியைகொண்டு வந்தாள். இப்போது அவளோடு ஒரு பதினெட்டு வயது வாலிபன்.அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு. 

இது நமது கண்களுக்குத் தெரிந்தவை தெரியாத கதைகளோடு சாயங்காலம் பருத்தியை அடைந்த மாதிரி அடைத்துக் கொண்டு போகும் தீப்பெட்டி ஆபீஸ் வாகனத்துக்குள்ளிருந்து கழுத்தை நீட்டிக் கல்லூரிகளையும் அங்கு சுடிதாரோடு நிற்கும் பொறாமைகளையும் எறித்தபடிப் போகிறது நூற்றுக் கணக்கான அக்கினிக் குஞ்சுகளின் கண்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் இந்த பிரச்சினை அதிகரித்துகொண்டே இருக்கிறது. சாத்தூரில் ஆறு தமிழ் வழிப் பள்ளிகளும் ( அதில் இரண்டு பெண்களுக்கானது) இரண்டு ஆங்கில வழிப்பள்ளிகளும் இருக்கிறது. சுற்றியிருக்கிற கிரமத்துக் குழந்தைகள் குறிப்பாக வறிய குடும்பத்துப் பெண்குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு சேர்வதென்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது.ஆம்  சென்ற வருடம் மட்டும் தகுதிகாண் தேர்வில் தோற்று விட்டதாகக் கூறி  தேர்வெழுதிய நூற்றி எழுபது பிள்ளைகளில் நூற்றி ஐம்பது பிள்ளைகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி சிபாரிசுக்கு அலைந்து முட்டிமோதித் திகைத்து நிற்கிறார்கள்.

பள்ளிகளில் நல்ல ரிசல்ட் வேண்டும்,இதற்குமேல் இட வசதியில்லை,ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனும் பதில் வருகிறது.இந்தத் தடை தாண்டிப் படிக்க நினைக்கும் பிள்ளைகள் கதி. தீப்பெட்டி,பட்டாசு ஆலைகளில் கிடைக்கிற குடும்ப வருமாணத்தில் படிக்க வைப்பது பெரும்பாடு. அதுவும் சாத்தூருக்கு பேருந்தில் அனுப்பிப்படிக்க வைப்பது அதைவிடப் பெரும்பாடு. இதில் இடறி விட்டால் மீண்டும் தீப்பெட்டி ஆபீஸ் எனும் அந்தப்பாழுங் கிணறு வாயைப்பிளந்து அவர்களை ஏந்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது. பத்தாயிரம் இருபதாயிரம் முன்பணத்தோடு.

29.12.09

இன்னொரு கோயிலும், இன்னொரு தாயும்.

திருச்செந்தூரில் இறங்கும்போது கடல் காற்று சில்லென்று முகத்திலடித்தது. நிறைய சலிச்ச வாசம் வீசுகிற காற்றில் மீன்களின் வாசமும் அடங்கியிருந்தது. எதிர்ப்படுகிற பேருந்தின் பெயர்ப் பலகையினையெல்லாம் உற்றுப்
பார்த்தான்.பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்த.அவன் அடுத்த பஸ் வர இன்னும் அரைமணி   இருக்கு  வா  தம்மடிப்போம் என்று சொன்னான். யாரோ  உற்றுப்பார்த்து விட்டுபோனார்கள். இந்தப்பெட்டிக்கடையில தான் சிகரெட் வாங்கி ஒளிஞ்சு ஒளிஞ்சு தம்மடிப்போம். அப்ப ரஞ்சன் ஒரு சிகரெட் அடிச்சுட்டு நாலு அசோகாபாக்குப் போடுவான். அவங்க க்றிச்டியன்ஸ், ரஞ்சன் தெரியும்லா. இந்தப் பஸ்டாண்ட், கடக்கரை, ரைல்வே ஸ்டேசன், எல்லாம் எங்க ஆளுகைìகுள் இருந்த பகுதிகள்.அவன் கண்ணுக்குள் எண்பதுகளின் கல்லூரிக்காலம் மினுங்கியது.   ஒரு வலத்தியான பெரியவர் 'எப்ப வந்தெ எப்பிடிப்பூ இருக்கா, நேத்தே வருவேன்னு அம்மா வாசல்லயே உக்காந்திருந்தாங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார். முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.


இன்னும்  ஒரு மணி நேரத்தில்   அம்மவைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு வந்ததும் தைப்பொங்கலை, பங்குனிப்பொங்கலை, எதிர்னோக்குகிற அவஸ்தை இருந்தது. கூடவே இன்னொரு சஞ்சலமும் இருந்தது. அதை அப்புறம் சொல்லலாம்.  பால்ய கால நன்பண் இங்க தான் இருக்கான் வா பாப்பொம்'' என்று சொல்லி விட்டு முன்னல் நடந்தான். கோவில் வாசல் போகிற அலங்கார வலைவுக்கு அருகில் சைக்கில் ரிக்சாக்கள் நின்றிருந்த பகுதியில் நின்றான். ரெண்டு மூணு பேர் வந்து கோயிலுக்கா என்று கேட்டார்கள் இல்லை என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டான். வீடு ரொம்ப தூரமா என்று கேட்டேன் இல்ல என்று சொல்லிவிட்டு சிரித்தான்.செரி வா பஸ் வந்துருக்கும் திரும்ப நடந்தவேகத்துக்கு ஈடு கொடுக்க நான் ஓடும்படி ஆனது அவன் ரொம்ப உயரம் நான் கொஞ்சம் கம்மி. நகரப்பேருந்தில் மொத்தம் இருபது நபர்கள் மட்டும் இருந்தார்கள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டோ ம். இரண்டு கிலோ மீட்டர் கடந்தவுடன் வாழையும் நெல்லும் சாலையின் இரண்டு புறமும் பொறாமைய்யொடு செழித்துக்கிடந்தது.


நெல்வயல்களைக் கடந்து வந்த காற்று பசிய வாசத்தோடு வந்தது. வாசங்கள் உள்ளூர நினைவுகளை எழுப்பிவிடும். வயல் காற்று வீசும் போதெல்லாம், செல்லிமுத்துநாடார் கிணற்றில் மல்லாக்கமிதந்த ரத்தினத்தாயென்னும் பேரழகின் உருவமும், அந்தச்சாவில், சாதீய வன்மத்தின் கொடூரம் முதன்முதலாய்  உணர்ந்த  ஞாபகங்கள் தவிர்க்கமுடியாது வந்துசேரும். எப்போதுமே இந்தக்காற்று இப்படித்தான் அது பூக்களுக்கென்றும், பீயாங் காட்டுக்கென்றும் விருப்பு வெறுப்பு சுமந்து வீசுவதில்லை.சாலையோரம் ஒரு வாய்க்கால் செருக்கோடு தண்ணீரைக் கடத்திக் கொண்டிருந்தது. ஓடைகளில் சம்பு அடர்த்தியாக முழைத்துக்கிடந்தது அதன் பூக்கள் ஏதோ வேற்று பிரதேசத்து நிலப்பரப்பைப்போல பரவசம் உண்டாக்கியது. இதுக்குள்ள தான் தூக்கனாங்குருவிகள் கூடுகட்டியிருக்கும். உள்ளே போனா கொத்து கொத்தா தொங்கும். முட்டையெடுத்து அவிச்சுத்திம்போம் அப்போ மாரப்பன் எப்போதும் கூடவே இருப்பான்.குரவ மீனெல்லாம் ரொம்ப அனாயசமா பிடிப்பான். குரவ மீன் முள்ளு குத்துச்சுன்னா ரெண்டு நாளைக்கு கடுக்கும்.

இப்படிக்கதைகள் சொல்லிக் கொண்டே வந்தவன் தூங்கிப்போனான். கதை சொல்லிகளைத்தூங்க வைத்த விநோதம் என்னவாக இருக்கும். ஒரு வேளை அந்தக்குளிர் காற்று, அந்தத்தளிர் நிலங்கள் ,பின்னிழுத்துக்
கொண்டுபோய் மீண்டும் அவனைத் தாய் மடியில் கிடத்தியிருக்கும். தூங்கட்டும்.எனக்கு தூக்கம் வரவில்லை நான் அந்தக்காடு,வயல்கள் தண்ணீரோடும்,  காற்றை கிழித்துக் கொண்டு நீச்சலடிக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டு போனேன்.பூச்சிக்காடு வருவதற்கு முன் முழித்துக்கொண்டான். பேருந்தை விட்டு இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லை.வீட்டுக்குபோனா தம்மடிக்க முடியாது இரு ஒரு தம்மடிப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு பெட்டிக் கடைக்குப் போனான்.

வீட்டுக்கு நடந்து போகிற வழியில் ரெண்டொரு பேர் எப்பப்பூ வந்தா,என்று விசாரித்தபடி முகம் மலர்ந்தார்கள்.அவனையொத்த முகஜாடையிருந்த ஒரு பெரியவரைக்காட்டி எங்க சித்தப்பா, கொஞ்சம் சண்ட என்றான் அவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கடந்து போனார். கூரைத்தாழ்வாராமும் ஓட்டுக்கூரையும் நார்க்கட்டிலும்,புராதான மரப்பீரோவும்,ஒரு பப்பாளி மரமும்,அடர்ந்த பிச்சிக் கொடியும் புதிதாய்க்கட்டிய ஒரு கழிப்பறையுமான வீட்டுக்குள் நுழைந்தோம்.முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில்  இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான். கொஞ்சம் எட்டத்தில் இருந்தேன். எப்படி அவர்களோடு முகமன் சொல்லிக் கொள்வதென்னும் குழப்பம் என்னை ஆட்டுவித்தது. முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது.

23.12.09

தண்டிக்கப்பட்ட அலுவலகக் காதல்.

இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. அவரது பணிக்காலம் முடிய ஆனாலும்கூடுதல் சுறு சுறுப்போடு அலுவலகம் வந்துவிடுவார்.அவருக்கிருக்கிற அந்த ஆஸ்த்துமா தூசியை,துர்நாற்றத்தை,குளிரை,சில நேரம் வெப்பத்தையும் கூட தாங்கமுடியாத்தாக்கிவிடும்.அது ஒரு கிராமம். பின்தங்கிய கிராமம்.காய்கறி மார்க்கெட்டைப்போல எந்த நேரமும் மனிதர்கள் கூடம் கூட்டமாக வந்துபோகும் வங்கிக்கிளை.பத்து மணிக்கு இருக்கையில் உட்கார்ந்தால் கடவுளே வாசலில் வந்து நின்றால் கூட எழுந்து போய் பார்க்கமுடியாத பணிச்சுமை.வேலைக்கு சேர்ந்த காலத்தில் நூறு வவுச்சர்களுக்கு ஆறு க்ளர்க்,ரெண்டு ஆபீசர்,ஒரு மேனேஜர்.இப்போது முன்னூற்றைம்பது வவுச்சர்களைத் தாண்டிவிடுகிறது.அதைச் சமாளிக்க வெறும் ரெண்டு க்ளார்க்குகள் தான்.தண்ணீர்ப்பந்தல் மாதிரி தான் வங்கிவேலை ஆகிப்போனது.'கையெழுத்துப் போடத்தெரியாதுல்ல' என்று மிகுந்த கர்வத்தோடு படிவங்களை முகத்துக்கு நேரே நீட்டும் மானாவாரி மனிதர்கள். மனிதாபிமானமுள்ளவர்களாக வாழ்வது சற்று சிரமம்.

சக ஊழியரின் சிரமத்தை,நிர்வாகத்துக்குள் இருக்கும் பாரபட்சத்தை,களவாணித்தனம் பண்ணிவிட்டு பதவிக்குள் ஒளிந்துகொள்ளும் கபடத்தைக் கண்டு பொங்குகிற மனிதர்கள் தேடி ஒருங்கிணைக்கப்பட்டதுதான் தொழிற்சங்கம்.அண்ணன் சுப்புராஜ் அப்படிப்பட்ட தொழிற்சங்க மனிதர். பழம் பெரும் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஒரு கல்லூரியின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர். லோன் வாங்கிவிட்டு டீ வாங்கிக்கொடுத்தால் கெட்டவார்த்தையில் திட்டித்தீர்க்கிறதை அவர் நேர்மை என்றும் உலகம் முசுடு என்றும் புரிந்து வைத்திருக்கிறது.ஒரு கிராமத்து நாட்டாமையின் கோபத்தோடு உயர் அதிகாரிகளைக்கூட விமர்சனம் செய்யும் அவர் தான் எங்கள் மேலாளர்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு நூறு கிலோமீட்டர் தாண்டி மாறுதல் போடப்படுகிறது. புதிதாக வேலைக்குச்சேர்ந்த அவருக்கு விடுப்பு ஏதும் இல்லை.இப்போதிருக்கும் கிளையில் பேறுகாலம் வரை நீடிக்க அனுமதி மட்டும் தான் கேட்கிறார் தயவுதாட்சண்யம் இல்லாமல் மறுக்கப்படுகிறது. இதைப்பற்றி அங்கலாய்ப்பது கூட தேசத்துரோகக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

.இதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் முதலில் நானுன்,அன் டோ வும்,அப்புறம் முத்துவிஜயன் சார், இப்போது கிட்டத்தட்ட 49 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எந்த வித முகாந்திரமும் சொல்லப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை. பிரிட்டிஷ் அரசு நாங்கள் நாய்களைக்கொல்வதானாலும் காரணம் சொல்லிவிட்டுத்தான் கொல்லுவோம் என்று சொன்னது.இங்கே அந்த சல்ஜாப்புக்கூட மிஞ்சவில்லை. ஒரு பொதுத்துறை நிறுவணம் ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஊறுகாயாகிவிட்டது. அந்தப்பச்சை மை சிந்துகிற ஒவ்வொரு நேரமும் பல வீடுகளில் கண்ணீர் சிந்துவதுதான் வாடிக்கையாகிவிட்டது. 

சனிக்கிழமை அண்ணன் சுப்புராஜுக்கு பனியிடைநீக்க உத்தரவு வருகிறது எனத்தெரிந்து.மருத்துவ விடுப்பை முறித்துக்கொண்டு கிளைக்கு வந்தார்.லேசான கலக்கம் இருந்தாலும். திமு திமுவென வந்த வாடிக்கையாளர்  கூட்டத்தில்  அது காணாமல் போனது.தன்னுடைய மேஜையில் இருந்த அவருக்கான உடமைகளை  எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து டெபாசிட்,லோன் வவுச்சர்களை சரிபார்த்து பாஸ்பண்ணுவதில் குறியாக இருந்தார்.அன்று கொடுக்கப்படவேண்டிய சுய உதவிக்குழுக் கடனை சாங்க்சன் செய்தார். பனிரெண்டு மணிக்கு ஆளுக்கு இரண்டு மாரி பிஸ்கட் தருவார்.அதுவும் வந்தது. இந்த வேகத்தினூடே வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.உத்தரவைத் தூக்கிக்கொண்டு வரும் அந்த மனிதன் வருவானென்று. வரவில்லை.திமுதிமுவென சீருடையில் சுய உதவிக் குழுப்பெண்கள் வந்தார்கள் கதவடைக்க இன்னும் பத்து நிமிடம் தான் இருந்தது. அவர்களின் தலைவி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டாளென்றும் அவள் மீது காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டுமென்றும் கசமுசவென்று கத்தினார்கள். அவர்களைச்சமாதானப்படுத்தி தலைவிக்கு இன்னொரு முறை அவகாசம் கொடுக்கலாம் என்று சொல்லி  அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

வழக்கமான பேருந்தை தவற விட்டு தாமதமாக வீட்டுக்குப்போனார்.அங்கே அவருக்கான இடை நீக்க உத்தரவு தபாலில் வந்திருந்தது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக்கூடாது என்பது தான் நீதித்துறையின் ஆதாரம். சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் மனிதர்களுக்காக உருவானது. மன்னிக்கத்தெரிந்த மனிதனின் இதயம் மாணிக்கக் கோவிலப்பா என்னும் சினிமாப்பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது.மனசு பாரம் அழுத்தும் போது இலக்கியங்கள் லேசாக்குகிறது.
 
நேற்று அலுவலகத்துக்குப் போனேன் சதாகாலமும் அவரோடு சண்டைபோட்டு கொண்டிருந்த நினைவுகள் சுரீரென்றது. அவரது நாற்காலியைச்சு ற்றி எறும்புகள் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது மாரிப்பிஸ்கட்டின் துகள் களைத் தூக்கிக்கொண்டு.அவரது கோபச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது ஒரு மூத்த சகோதரனின் வாசனையோடு. 

22.12.09

கதம்ப மனிதர்கள் நிறைந்த மல்லிகை நகரம் மதுரை.

அந்தக்காலத்தில் துணிவே துணை அப்டீன்னு ஒரு திரைப்படம் வந்தது. தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது.எல்லாப்படத்திலும் ஒரு சூட்கேசைத் தூக்கிக்கொண்டு சுவரோரமாகவே பதுங்கிக்கொண்டு போகிறதைதவிர அவர் நடித்ததாக நினைவில்லை என்று ஜெய்சங்கரைப்பத்தி எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. அதில் ஜெய்சங்கர் வழக்கம் போல ஒரு சிஐடி அதிகாரி. ஒரு கொலையைக் கண்டுபிடிக்க அந்த ஊருக்குப்போவார். ஊர் ஒரே மர்மமாக இருக்கும். தண்ணித்தாகம் எடுத்து மனுசன் நாக்குவரண்டு கிடக்கும்போது கூட அவருக்கு யாரும் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள்.

அந்தப் படம் பார்த்தபிறகு அந்தப் பெயருடய சாயலுள்ள எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு திக் திக்கென இருக்கும்.இப்படித்தான் இந்த திரைப்படம் ஒரு பொருளை அதன் கண்வழியே பார்க்க வைத்துவிடுகிறது.
இப்போதும் கூட இந்த மதுரையை அப்படிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. மதுரையென்றால் முன்னமெல்லாம் எனக்கு, எனக்குமட்டுமல்ல இந்த உலகத்துக்கு சங்கத்தமிழ்,வைகை ஆறு, மீனாட்சியம்மன்
கோவில்,திருமலைநாயக்கர் மஹால்,கண்ணகி,மல்லிகைப்பூ என பல பிம்பங்கள் நினைவுக்கு வரும்.தோழர் நன்மாறன் மதுரையப்பற்றிச் சொல்லும்போது அது ஒரு தூங்காத நகரம் என்று வர்ணிப்பார்.இரவு இரண்டு மணிக்குக் கூட சூடாகப் புரோட்டாச் சாப்பிடுகிற மக்களைப்பற்றி வியந்து சொல்லுவார் அவர்.சினிமா நடிகர்கள் எல்லோருக்கும் தலைமை ரசிகர் மன்றம் மதுரையில் தானிருக்கிறது.

ஆனால் சமீப காலமாக மதுரையென்றாலே அருவா,அடிதடி என்கிற அளவுக்கு இந்தச்சினிமா மதுரையைப் புரட்டிப் போட்டுவிட்டது.மதுரையச் சுற்றியுள்ள கிராமங்களில் எல்லோரும் முதுகு சொரிவதற்குக்கூட அருவாளைத்தான் பயன்படுத்துவது போலொரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் ஒரு படம் ஒரே படம் வெற்றியடைந்து வசூலில் சாதனை பண்ணிவிட்டால் அப்புறம் அந்த நடிகர், அந்தக் கதையின் சாயலில் கதைகள், அந்தப்படத்தின் பாடலைப் போலே பாடல்கள்  போதும் போதும் எனச்சொல்லும் அளவுக்கு கொண்டுபோய்விடும் நமது சினிமா. ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்து குழந்தைகளைக் கொன்ற பூமியும் அதுவாகத்தான் வெளி உலகுக்குச் சொல்லப்பட்டது.கோதுமைக்கலரில் இருக்கும் தமன்னா ' நான் ..... ஊர்க்காரி வெட்டிருவன்' என்று சொல்லுவதாக காதல்கொண்டேன் படத்தில் வசனம் வரும்.இப்படியே உருமாக்கட்டி இழுத்துக்கிட்டுப்போய் இப்பொ அந்த ஒன்னுக்குமத்த விளம்பரத் தொடரிலும் மதுரைப்பேய் பிடித்து ஆடத்துவங்கிவிட்டது.

சாத்தூர் மதுரையிலிருந்து எழுபது கிலோமீட்டர் தான் இருக்கும். மதுரை மாவட்டம் விருதுநகர் தாண்டியதுமே துவங்கிவிடும். அந்த எல்லையிலிருந்து நிலம், மண், மனிதர்கள் எல்லாம் வித்தியாசமாகி தரையிலிருந்து அருவா முளைத்துக் கிடக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.அங்கும் கூட நெல்,வாழை,கரும்பு கம்பு,சோளம்,கேழ்வரகுதான் நிலத்தில் விளைகிறது. ஒரு கொலை என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமில்லை. அது சம்பந்தப்பட்ட இருண்டு குடும்பங்களையும் சின்னா பின்னப்படுத்திவிடும். என்சிசி சீருடையில் உள்ளூர் மாணவர்கள் வந்தால்கூட வீட்டை,காட்டை,பெண்டுபிள்ளைகளை மறந்து தலைதெறிக்க ஓட நேர்வதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைவிட கொலைசெய்த குடும்பத்தில் மிஞ்சியிருக்கிற பெண்களைப் பற்றி இன்னும் முழுமையாக எந்த இலக்கியமும் பேசவில்லை. அவர்களுக்கான இரவுகள் பெருமைகளால் அலங்கரிக்கப்பட்டதில்லை.கட்டிய மனைவியிடம் சிரித்துப்பேசியவனை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப்போனவனின் மனைவிதான் மிச்ச நாட்களில் அந்த ஊரின் கேலிப்பொருளாவாள் என்பதை யாரும் அவதானிப்பதில்லை.
மானுடவியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி இதையே ஒரு நூலுக்கான விமர்சனத்தின் பேசுபொருளாக காலச்சுவடு இதழில் முன்வைத்திருக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் சகோதரர் சீமான் 'மதுரை அருவாள்களால் அறியப்படுகிறது அது பல்வேறு பகுதி மக்களின் கூட்டு வாழ்விடம்' என்பதை தனது பேட்டியில் அறியத்தருகிறார்.

ஐந்து வகை நிலங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வட்டார வழக்குகளும் கலந்துகிடக்கிற தமிழகத்தில் எல்லா மண்ணுக்கும் தனித்தனிக்கதை உண்டு. எதுவும் பெரிதில்லை எதுவும் சிறியதும் இல்லை. இசுலாமியத்தமிழ்,கன்னடத்தமிழ்,தெலுங்குத்தமிழ்,சௌராஷ்ட்டிராத்தமிழ்,மலையாளத்தமிழ் எனும் மொழிக்கலப்பும் இங்கே கெட்டிப்படுத்தப் பட்டிருக்கிறது.சமீபத்தில் ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஒருவர் சுமார் ஐம்பதுகிலோ மீட்டர் எல்லைப்பரப்புள்ள இருக்கன்குடிப் பகுதி ஒரு நாடாக இருந்ததென்று சொல்லுகிறார். இருஞ்சோ நாடாம் அதன் பெயர். புராண கதைகளில் ஐம்பத்தாறு தேசம் என்று பாடல் வரும். அப்போது ஒட்டுமொத்த உலகத்தைத்தான் அப்படிச்சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில்  இருந்த நாடுகளாம் அவை. ஒவ்வொரு தெருவும் கூட ஒரு நாடாகி இருந்த கல்தோன்றாக்காலத்து வெட்டிப்பெருமைகள் பல இருக்கிறது.அப்படி வழக்கொழிந்துபோன கல்லாயுதங்களை மீண்டும் தோண்டியெடுத்து மக்களுக்கு
கையில்கொடுத்து கணினி யுகத்தின் முதுகில் ஏற்றவேண்டாம் சினிமா அன்பர்களே.

7.12.09

முகம் காட்ட மறுத்தான்

            வெளியே எங்காவது சுற்றிவிட்டு காலை எட்டரை மனிக்குமேல் வீடு திரும்புகிற நடுத்தரக் குடும்பத்து ஆடவனைப்பற்றி சொல்வதற்கு நிறெய்ய இருக்கிறது. பெரும் தாக்குதலை எதிர்கொள்ளும் அத்துனை உபாயங்களையும் அசைபோட்டபடி சாலையில் பயணிப்பான். எதிர்ப்படுகிற தெரிந்தவர்களை, நண்பர்களை கவனிக்காதவன், திமிர் பிடித்தவன் கௌரவக்காரன் என்கிற பழிபாவம் தன்மேல் குவிகிற விஷயம் தெரியாத அப்பாவியானவன். அதிலும் இரண்டுபேரும் வேலைக்குப் போகிறவர்களாயிருந்தால்  ஐஸ்வர்யாராயும் அப்துல்கலாமும் எதிரே வந்தால் கூட அலட்சியப்படுத்திவிட்டுப் போவான்.

மே மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடக்க இருக்கும் கலை இரவுக்கான பேனரை முக்குலாந்தக்கல்லில் தூக்கிக் கட்டியிருந்தார்கள். மூன்று இரவுகள் தூங்காமல் பார்த்துப்பார்த்து அழகர்சாமி உருவாக்கிய பிரம்மாண்டம் .நாயகனும் நாயகியும் காமக்கிளர்ச்சியை கூவிக்கூவி விற்கிற சினிமா போஸ்ட்டர்களும்  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் கட்சிக்காரர்களின் மனக்குமுறலோடு பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த இடத்தில் பாசாங்கில்லாத ஓவியம் செருக்கோடு நின்றிருந்தது. வாசல் படியில் உட்கார்ந்து   சிறுமிகள் இருவர் பேன் பர்க்கிற நிஜத்தின் பிம்பம். அசல் புகைப்படத்திலிருந்த முகபாவங்கள் மாறிப்போயிருந்தபோதும் வேறு கோணத்தில் அதன் உணர்வுகளை அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது. கடந்துபோன யுகத்துக்குமான ஏழைப்பெண்களின் ஒட்டுமொத்தப் பதிவாக அந்த முகத்தில் ஒரு இறுக்கம் மேலோங்கியிருந்தது. இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் தீர்ந்து போனபின்னும்பேச்சு தீராமலிருந்தது. பள்ளிக்கூடத்தில்   வரைந்த  பொங்கல் பானை கரும்பு   ஓவியம் தொடங்கி மோனலிசாவின் மர்மப்புன்னகை, சோவியத் புத்தகங்களில் பார்த்த ஓவியங்களின் நுணுக்கமான முகபாவங்கள், கீழே கிடக்கும் காய்ந்த சருகுகளில் கூடப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி பற்றியெல்லாம் பேசப்பேச நேரம் தெரியாமல் முங்கிக்கிடப்பது. லீவா என்ற கேள்வியின் உசுப்பலில் சுதாரித்துக்கொண்டு தலைதெறிக்கக் கிளம்புவது வாடிக்கையானது. வீட்டில் அதற்கு கிடைக்கும் எதிர்விளைவுகள் அலாதியானது.

"விடிஞ்சும் விடியாமப் போயி அப்பிடி எந்தக் கோட்டயைப் பிடிக்கப் போறீங்களோ?" விடியுமுன்னே கண்முழிக்கிற எல்லோருக்கும் கோட்டை பிடிபட்டுவிட்டால் பால்காரர்கள், டீக்காடைமாஸ்டர்கள், பேப்பர் போடுகிற பையன்கள் எல்லாம் இந்த தேசத்தில் கிரீடங்களோடு அலைவார்கள். இந்தக் கேள்விகளோடும் பதில்களோடும் போனபோது வீடு வேறு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருந்தது. முகம் தெரியாத மனிதரொருவர் ஊர்க்காரன் என்று சொல்லிக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்திருக்க அடுப்பு வேலையும் கவனிக்காமல் வந்த மனிதனிடமும் பேசாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.                 

பையன் வேறு வீட்டுப்பாடமும் எழுதமுடியாமல், அம்மாவிடம் ஸ்கெட்ச் பேனா வேணும் புதுப்பை வேணும் என்று கேட்கமுடியாமல் அந்த ஆளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். வந்தவரும் விருந்தாளிக்குண்டான லச்சணமில்லாமல் நாற்காலியில் உட்காராமல் வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்து இனம் புரியாத பயம் வரும்படிக்கு அலைந்துகொண்டிருந்தார். அடையாளம் கண்டுகொள்ள எனக்கே சில மணித்துளிகளானது. பாட்டிவழியில் தூரத்து சொந்தக்காரன் மாரியப்பன். என்வயதுக்காரனாயிருந்தாலும் கிராமத்து வறுமையில் கிழட்டுத்தொற்றம் ஏறிப்போயிருந்தது. கிழிந்த அழுக்குச்சட்டை, பரட்டைத்தலை, குளிக்காத உடம்பு, ஒரு பிச்சைக்காரனைப் போலிருந்தான். அவனது வருகையின் நோக்கத்தை கனிக்கமுடியாதவனாகித் தவித்துக்கொண்டிருந்தேன். பொதுவாக ஊரிலிருந்து வருகிறவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு பாத்திரங்கள், வென்னீர், பழைய போர்வை கேட்டு வருவார்கள். விசேச வீடுகளுக்கு பத்திரிகை வைக்க, இனி எதுவும் வழியில்லை என முடிவாகி பெரிய எதிர்பார்ப்பில் கடன் கேட்டு, ஊர்காரியங்களுக்காக நன்கொடை கேட்டு, இப்படித்தான் இந்தப் பதினைந்து வருடத்தில் ஊர்க்காரர்களுடனான தொடர்பு இருந்தது. மருமகன், பேரன், பால்ய காலத்துச் சேக்காளி பந்தமெல்லாம் மங்கிப்போய் அரசாங்க வேலைக்காரன் கிராமத்துக்கூலிக்காரன் என்கிற மாயத்திரை விழுந்திருந்தது. எதுவும் கேட்காதவர்களின் முகமும் கண்களும் கூட ஏக்கத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு வீசும்.   

இது எதிலும் அடங்காத முகபாவத்தோடு மாரியப்பன் இருந்தான். உட்காரச் சொன்னதற்கு நாற்காலியைத் தவிர்த்து மெத்தையைத் தேர்ந்தெடுத்தான். முதல் வார்த்தையிலே ஏன் வந்தாய் என்றுகேட்க மனம் தயங்கியது. தகுதிக்கு மீறிய கோரிக்கையாக எதுவும் கேட்டு   இல்லையென்று சொல்லும் தைரியம் குறைந்தவனாயிருந்தேன். ஊரில் மழை தண்ணி எப்படி, பொழப்பு எப்டி இருக்கு, பயங்க என்ன செய்றாங்க... வழமையான விசாரிப்புகளுக்கு அவனது பதில்கள் சம்பந்தமில்லாமல் இருந்தது.

"பொங்கலுக்கு நம்மூர்ல பட்டிமண்டகம் போடனுமப்பா ஐயோனி நல்லாச் சிரிக்கச் சிரிக்க பேசுராம்ப்பா', "ஒங்கய்யனச் சத்தம்போட்டு வை ஓவராத்தண்ணியப் போட்டுட்டு வந்து அக்காட்ட சண்ட போடுராரப்பா","இன்னிமேக்கொண்டும் ரெட்டெலைக்கு ஓட்டுப் போடக்கூடாது இங்க பாரு தன்னியத்துட்டுக்கு விக்கிர கொடுமையெ" பேசிக்கொண்டிருக்கும் போதே அடுப்படிக்கு போய் தானே தண்ணீர் எடுத்துக் குடித்துக்கொண்டான். திரும்பிவந்து டீவிப்பெட்டிக்கருகில் உட்கார்ந்து முறைத்துப்பார்த்தான். போடுவதற்க்கு எத்தனித்துத் தோற்றுப்போனான். இந்த அத்து மீறல் ஒட்டுமொத்தமாக எல்லொருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியது. அடுப்படியில் இருந்து நீ உட்பட உங்கள் ஊர் மனிதர்களே இப்படித்தான் என்று கடுங்குற்றம் சுமத்துகிற பார்வை பார்த்தாள்.  சைகையாலே என்ன நடக்குது என்று கேட்டுவிட்டு மீண்டும் ஸ்கூல் கிளம்புகிற வேலைகளில் முங்கிப்போனான் பாரதி. இனியும் தாமதித்தால் பையனை பள்ளிக்கூடத்தில் விடுவது ஒன்பதேகால் பஸ்ஸைப் பிடிப்பது தாமதமாகிப்போகலாம்.

"ச்செரி என்னசோலியா வந்தெ பயல போயி உடனும்"அவசரப்படுத்தினேன். "அவுக இவுகமாரி வாங்குன கடனக்குடுக்காத ஆளில்ல, கடம்னா நமக்கு கை கூசும் சொந்தக்கரன் ஓண்ட கேக்காம வேரார்ட்டக்கேக்க' பலமான பீடிகையோடு ஆரம்பித்தான் அடுப்படியைப் பார்க்காமல் தவிர்த்துத் தோற்றுப்போனேன். ஆயிரம் ஐனூறு என்று கடன் வாங்கிப்போன ஊர்க்காரர்களைப் பார்வையால் பட்டியல் போடுவது தெரிந்தது. தவிரவும் வாங்கும்போது கடனாகப்பேர்கொள்ளும் காசு, நாள்பட நாள்பட இனாமாக மாறிப்போகும் வரலாறுகளையும் நினைவூட்டுகிறமாதிரி தெரிந்தது. மாத நடுவில் காசுபணம் கையிலிருக்காத விஷயத்தை விளக்க ஆரம்பித்தேன்.

"கடங்காரங்க மானத்த வாங்குறாங்க, நாக்கப்பிடுங்கிக்கிர்ராப்பயிருக்கு, ஒரு தடவ நீ இந்த ஒதவியச்செய்யி திரிப்பித்தர மிடியாட்டாலும் நீ வீடு கட்டம்போது கொத்த வேல செஞ்சி கழிச்சிர்ரனப்பா"

"இந்தா வச்சிக்க ஏண்ட்ட இப்பக்கடங்குடுக்ற அளவுக்கு காசில்ல' சட்டைப்பையிலிருந்து நூறுரூபாயை எடுத்து  நீட்டினேன்.

வடக்கடைக்கு எட்டு ரூவா, சோமண்ணங்கடக்கி பீடி வாங்குன பாக்கி ஆறு, ஆருமுகச்சாமி மோலாளி கடயில குருனயரிசி வாங்குன கடன் பன்னண்டு, பஸ்ஸுக்கும் பீடிச்செலவுக்குமாச்சேத்து முப்பத்தஞ்சி போதும்" சொல்லித்திடுக்கிட வைத்தான். "முப்பது குடு சில்லரை மாத்தி சாயங்காலம் திருப்பித்தரேன்"

தயங்கித்தயங்கி அவளிடம் போய்க்கேட்டேன். அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. "நூறையும் கொடுத்துருங்க" காசை வாங்கிக்கொண்டு மருகி மருகி நின்னவனிடம் டீக்கொடுத்து, பிறகும் தயங்கி நின்னவனிடம் சாப்பிடச்சொல்ல மடமட வென உட்கார்ந்து சாப்பிடத் தயாராகிவிட்டான். போகும்போது மறக்காமல் இரண்டு பழய சட்டைகளை கேட்டு வாங்கிக்கொண்டு போனான்.

என் விளையாட்டுப்பருவத்தின் மையப்புள்ளியாக இருந்தவனா, சதா சர்வகாலமும் ஏழெட்டுப்பையன்களோடு ஊரைச்சுற்றிவந்தவனா. எந்த விளையாட்டிலும் தனது பிரவேசத்தால் தோல்வியை அனைவருக்கும் மொத்தமாக வினியோகம் பண்ணுகிற மாரியப்பனா இவன். அப்போதெல்லாம் அவனை ஒரு தரம், ஒரே ஒருதரம் ஜெயித்துவிடத் துடிக்கிற வெறிகொண்டலைந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த வெறியே அவனது மூலதனம். பரபரப்பு, நிலைகொள்ளாமை, இலக்கைத்த் துல்லியப்படுத்தமுடியாமல், சிதறிப்போகும். அவனோ நிதானமாகக் குறிவைப்பான்.இடது கைப்பெருவிரலை தரையில் ஊன்றி பாம்புவிரலின் நுனியில் கோலிக்குண்டை வைத்து அந்த விரலை வில்லாக வளைத்து, உருவிவிடும்போது சுற்றி நிற்கிற அத்தனைபேரும் குறிதவர வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருப்ப்பார்கள், சொடீரென்று எதிராளியின் கோலிக்குண்டில் அடிவிழ எல்லோரது வேண்டுதலும் தகர்ந்து போகும். காக்கை நோக்கறியும் கொக்கு டப்பறியும் என்னும் பழமொழியைத் தவிடுபொடியாக்கியவன் மாரியப்பன். பறவைகளில் காக்கைக்கு குறிப்பறியும் திறமை அதிகம், அதன் கண்களுக்கு நூற்றி அறுபது டிகிரி சுழலும் அசாத்தியம் இருப்பது மாதிரி,பின்னால் இருந்து கையை ஓங்கினாலும் சுதாரித்துக்கொண்டு பறந்து ஓடிவிடும். பறக்கிற வேளையிலும் கூட கல்லெறிந்தால் பசக்கென்று எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும். சாதாரணக் கவன்கல்லில் காக்காயைச் சாய்த்து விடுகிற வல்லமை கொண்டவன்.

புளியமரத்தின் உச்சிக்கொப்பில் காக்கைகளும், வேலிச்செடியின் தூருக்கு அடியில் குழிபறித்து காடைகளும் கவுதாரிகளும் மொட்டைப்பனயின் பொந்துகளில் கிளியும் மைனாக்களூம் கூடுகட்டும் என்கிற பறவைகளின் வாழ்க்கை முறை அவனுக்கு அத்துபடி. ராத்திரி நேரங்களில் வேதக்கோயில் முகட்டில் ஏறி இறங்கும் போது நாலைந்து புறாக்களோடு இறங்குவான். ஒருநாள்  மேகக்கலரில் திட்டுத்திட்டாக பழுப்பு, கருப்பு நிறப்புள்ளிகளோடு பத்துப்பதினைந்து முட்டைகளோடு வந்தான். பாட்டி கதைகளில் வரும்  சாகசக்காரனைப்போலவும், விளையாட்டுப்பிராயத்துக் கனவுகளில் வரித்துக்கொண்டிருக்கும் லட்சிய நாயகனைப்போலவும், அவனது வருகை இருந்தது. அது என்னபொருள் என்ற புதிர்போட்டியொன்று உடனடியாக அரங்கேறியது, முட்டையென்று இனங்கண்டுகொள்ள நெடுநேரம் ஆகியது. எப்போதாவது  ஊருக்கு வரும் மைக்செட்டை, தேர்தலுக்கு மட்டும் புழுதிபறக்க வரும் பிளசர் காரை, பொங்கலுக்கு வரும் கரகாட்டக்காரர்களை, தலைக்கு மேல் பஸ் போனது மாதிரித் தாழ்வாகப் பறக்கும் ஏரோப்பிளேனை, வேடிக்கை பார்க்கிற மாதிரி அந்த காடை முட்டைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட லீவு நாட்களில் அவனோடு ஆடுமேய்க்கக் காட்டுக்குள் போவதற்கும் அவனோடு ஒட்டிபிறந்த பிரம்புக்கம்பை கையில் பிடிப்பதற்கும் கடும் போட்டிவரும். காடுகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காண்பிக்க வந்த தேவ தூதனைப்போல் முன்நடக்க பத்துப்பதினாறு வெற்றுப்பாதங்கள் ஆர்வக்கொந்தளிப்பில் தரை உரசிக்கிளம்பும். பொட்டக்கம்மாயை தாண்டியதும் பத்துப்பதினைந்து ஏக்கர் வேலிக்கரடு விரிந்து கிடக்கும் அங்கு எல்லோரும் அரவமில்லாமல் நடக்கக் கட்டளையிடுவான். முயல்களின் நடமாட்டம் அங்கு அதிகம் முள்புதர்களுக்குள் பிரவேசிக்கும்போது முயல் பார்க்கலாம் என்று துல்லியப்படுத்துவான் அது அப்படியே நடக்கும், தரையில் பறந்து போகிற மாதிரித்தோன்றும்  முயல்பாய்ச்சலைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பிரமிப்பும் ஒருசேரக்கிடைக்கும். மத்தியானப்பசிக்கு வெள்ளெலிகளும், அணில் பிள்ளைகளும் அடித்து உரித்து குடலெடுத்து அதன் வயிற்றுக்குள் சீனிக்கல்லை வைத்து சூட்டாம்போட்டுக் கொடுப்பான் ஐயரவோடு ஆரம்பிக்கிற ருசி கொண்டா கொண்டா என்று கேட்கும். கொப்பில்லாத மரத்திலும்,படியில்லாத கிணத்திலும், அனாயசமாக தரையில் நடப்பதைப்போல் ஏறி இறங்குவான். ஆடு மேய்ப்பன், களையெடுக்கப்பொவான், பெரியவர்களோடு போட்டிபோட்டு ஆஞ்சான் இழுக்கப்பொவான்.

அவன் விரும்பாத விளையாட்டும் ஒன்று உண்டு சோறு பொங்கி விளையாடும் அப்பா அம்மா விளையாட்டு. அவன் போகாத இடம் ஒன்று உண்டு அது அந்த ஊர்ப்பள்ளிக்கூடம். ஆனால் அதற்காக அவன் ஒரு வினாடி கூட வருத்தப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அந்த ஊர் நாட்டாமைக்காரரின் மகன் கூட காசு வேணும், பம்பரம் வேணுமென்று அழுது அடம்பிக்கப் பார்த்திருக்கிறோம். மாரியப்பன் மட்டும் மாறாத புன்னகையோடும், சுறுசுறுப்போடும் கவலையின் சுவடு தெரியாமல் அந்த ஊரைச் சுற்றிச்சுற்றி வருவான். அவன் மட்டுமா அந்தப்புல்லாங்குழல் சத்தமும் வருடல் நாதத்தோடு ஊரைச்  சுற்றிக்கொண்டிருக்கும்.

அதென்ன மாயமோ புல்லாங்குழலுக்கும், ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், கெட்டிப்படுத்தப்பட்ட யுகாந்திர பந்தத்தைச் சுமந்துகொண்டே காலம் நீள்கிறது. அவனது இடுப்புக்கும் டவுசருக்கும் இடையில் தனக்கென ஒதுக்கப்பட்ட வசிப்பிடம் போல் அந்தப்புல்லாங்குழல்  ஒட்டிக்கொள்ளும். உதடு குவித்து நெருங்கும் ஒவ்வொரு வேளையும் பிரியமானவளுக்கு கொடுக்கப்போகும் முதல் முத்தத்தின் ஆவலோடு அவனும், நீண்ட முத்தத்திற்கு காத்திருக்கும் ஏக்கத்தோடு எதிர்ப்படும் ஆதி இசைக்கருவூலமாக அந்த மூங்கில் குழலும் கலந்துபோவார்கள். சினிமாப்பாடல்களையும், வார்த்தைப்படுத்தப்படாத நாதத்தையும்  காற்று வழியே கலந்துவிடுவான், காற்றும் தனது குழந்தையைத் தோளில் தூக்கி நடப்பது போல் ஊரெங்கும் படர்ந்துவரும். உயர்ந்த இடத்திலமர்ந்து இசைக்கிற, எதிரிலமர்ந்து ரசிக்கிற ஏற்பாடுகளேதும் இல்லாமல் அவனும், ஊரும், காற்றும் தங்களின் அலுவல்களுக்கூடாக பரிமாறிக்கொள்ளும் இசையனுபவம் சிலாக்கியமானது. தடதடவெனச் சன்ன ஒலிக்கீற்று மேலேறித் தலைக்குமேல் வட்டமிடுகிற துள்ளலிசை. உறுமலைச் சுத்திகரித்துத் தயாரித்தது போல் அடிச்சுரத்தில் ஒரு ஓசை வரும். அது  கால அதிர்வுகளைச் சுமந்து கொண்டு தரைவழிப் பயணித்து நினைவுகளின் அந்தகாரத்தில் சஞ்சாரிக்கும்.

அந்த அதிர்வுகள் மட்டும் மிஞ்சிக்க்஢டக்கிற மாரியப்பனை மறுபடியும் இந்த நகரத்துக்குள் பார்ப்பேனென்று நினைக்கவில்லை. காலம் அலுவலக மேஜை நாற்காலிகளுக்குள் நகர்ந்தும், நகரத்து இரைச்சலில் விரைந்தும் கடந்துபோனது. பரீட்சை அட்டையைப் போட்டிபோடும் தடித்த  அழைப்பிதழின் மினுமினுப்புக்குப் பயந்து போகவா வேண்டாமாவெனத் தயங்கியிருந்தபோது நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அட்டக்கம்பெனி குணசீலன் வீட்டுக் கல்யாணத்துக்குப் போக நேர்ந்தது. மண்டப வாசலில் நறுமணமும் குளிர்காற்றும் சேர்த்துத் தெளிக்கிற கருவி நிறுத்தப்பட்டிருந்தது. மண்டப நடுவில் ஒரு செயற்கை வாழைமரம் வந்தவர்களைக் கவர்ந்துகொண்டிருந்தது. மண்டபம் முழுக்கச் செயற்கைச் சிரிப்புகளும், குதூகலமும் நிறைந்திருந்தது. பிரபலங்கள் தாங்கள் செய்துகொண்டு வந்திருந்த பாராட்டுவார்த்தைகளை ஒலிவாங்கியின் வழியே கூட்டத்துக்குள் தூவிக்கொண்டிருந்தார்கள். சீருடை அணிந்த சப்ளையர்கள் கையில் பாலித்தீன் உறைகளைச் கையில் சுற்றிக்கொண்டு பசியமர்த்தினார்கள்.

பசியைமட்டுமே அழைப்பாக ஏற்று கல்யாணத்துக்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாய் பந்தியில் ஊடுருவி விட்ட பிச்சைக்காரர்களைக் கண்டுபிடிப்பது கல்யாண வீட்டுக்காரர்களுக்கு சுலபமாக இருந்தது. அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர்களை அதட்டி விரட்டுவதைப் பார்ப்பதற்கும் தீர்ப்புச் சொல்வதற்குமாக  கூட்டம் கூடியது. பாதி சாப்பிட்ட கையோடும் கையும், களவுமாகப் பிடிபட்ட அவமானத்தோடும் நின்றுகொண்டிருந்தவனை இனங்கன்டுகொள்வது, எனக்கு சுலபமாக வந்த கனத்த பாரமாக இருந்தது. பேர்சொல்லிக் கூப்பிட்டு அருகில் போவதற்குள் அங்கிருந்து காணாமல்போனான். ஆறு சுவை உணவு வயிற்றுக்குள் கட்டையாக அழுத்தியது பின்னர் இரண்டு நாட்களுக்கு மனசும் வயிறும் சரியில்லாமல் போனது. அதற்குப் பிறகு பேச்சியம்மன் கோவில் அன்னதானக் கும்பலில், சிதம்பரம் நகரில் ஒரு பங்களாவின் வாசலில், மிச்ச வாழ்க்கையை யாசிக்கிறவனாகப் பார்க்கமுடிந்தது. அலுவலகம் கழிந்த ஒரு மாலை வேளையில், பேருந்து நிலைய வாசலில் இரக்க குணம் இருக்கிற முகம் தேடித்தேடி கை நீட்டிக்கொண்டிருந்தான். நெருங்கிப்போனபோது என்னைத்தவிர்க்க எத்தனித்துத் தோற்றுப்போனான். முதல்முதலாய் அவன் தோற்றுப்போனதைப் பார்த்தேன். எதிரே நின்ற என் முகம் பார்க்கக் கூசியவனாய் தரை பார்த்திருந்தான்.

வீட்டுக்கு அழைத்தேன் வேகமாக தலையாட்டிவிட்டான், ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாமென்று கூப்பிட்டேன் உறுதியாக மறுத்துவிட்டான். பேருந்துநிலையப் பரபரப்பையும், இரைச்சலையும் விழுங்கிய பெரும் மவுனம் நீடித்தது. அதை உடைத்துக்கொண்டு அவனே பேசினான், தன்னை இனி பார்க்க நேர்ந்தால் கண்டுகொள்ள வேண்டாமென்றும், அதுபற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாமென்றும் கேட்டுகொண்டான். மீண்டும் நான் கொடுத்த நூறு ரூபாயை நிராகரித்துவிட்டு வெறும் பத்து ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு மறைந்துபோனான்.        

6.12.09

அடயாளம், ஒற்றுமை, விடுதலைக்கான இந்தியத் தலித்துகளின் போராட்டம்





அந்தச்சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்றும் அதன் மூலச்சொல் தல் என்றும் அறியப்படுகிறது. தல் என்றால் உடைந்தவை, பிரிக்கப்பட்டவை, நொறுங்கியவை, கிழிந்தவை, மிதிபட்டவை, சிதறடிக்கட்டவை, அமிழ்த்தப்பட்டவை, அழிக்கப்பட்டவை என்று பல அர்த்தங்களில் புரியப்படும். வரலாறு நெடுகிலும் மதத்தாலும் சமூகக் கட்டுமானங்களினாலும் கொடுமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கென அடயளமில்லாது காலம் வெறும் வெற்றுத் தாளாய் கழிந்து போயிருந்தது.



என்னைக் கருவுற்றிருக்கும்போது என்தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர எனது மண் எது எனும் யுகக்கேள்வியோடு புதைந்து கிடந்தார்கள். சென்ற முப்பது நாற்பது வருடங்களில்தான் பெயரே இல்லாமல் இருந்த அவர்களுக்கு, ஒரு புதிய பெயர் மேலெழுந்து வந்ததிருக்கிறது. வடமாநிலங்களில் மட்டுமே புழக்கத்திலிருந்த இந்தச் சொல் "பாசா சபத் கோஸ்" என்கிற வடமொழி அகராதியில், முன்னேற்றமில்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதி என்று பொருள்படுத்தப் பட்டிருக்கிறது. தீண்டப்படாத இந்துக்களாகிய 'அச்சுத்', தொண்ட்டூழியம் செய்கிற 'சூத்ரா' ஆகியோரை உள்ளடக்கிய சொல் இது. உச்சி ஜதான் எனும் உயர் ஜாதியினரால் மிதித்து நசுக்கப்பட்ட (ஹினி ஜாதி) கீழ்மக்கள் எனப் பஞ்சாபி மொழிபெயர்ப்பாளர் பாய் ஜஹான் சிங் கூறுகிறார்.



அந்தப் புதிய புரிதலுக்கான விதையை விதைத்ததவர்கள், புதிய பெயரை அவர்களுக்குச் சூட்டியவர்கள் இரண்டு பேர். மஹாத்மா ஜோதிபாய் பூலேவும், இறுபதாம் நூற்றாண்டின் கலக்காரர் அம்பேத்கரும் தான். அச்சுத் எனும் வடமொழி வார்த்தைக்கு தலித் எனும் நாமகரணம் சூட்டுகிறார்கள் அவர்கள் இருவரும்.



பெண்கள், வீடற்ற நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், புத்த மதத்துக்கு மாறியவர்கள், புத்திஸ்ட், மலைவாழ் மக்கள்,

தாழ்த்தப்பட்டவர்கள். அரசியல், மத மேலாதிக்கத்தால் சுரண்டப்பட்டவர்கள் எல்லோருமே தலித் எனும் பட்டியலுக்குள் இடம் பெறுவதாக 1973 ல் மராட்டிய மாநிலத்திலிருந்து வெளியான தலித் பேந்தர் ஆப் இந்தியா இயக்கத்தின் அறிக்கை பிரகடனப் படுத்துகிறது.



நால்வகை அடுக்குகளாக இந்திய மனிதர்கள் பிரிக்கப்பட்டார்கள். அவர்களின் மேல் நான்கு வகையான மாய நிறம் பூசப்பட்டது. அதுவே நிஜமென்று கருதி ஒருவருக்கொருவர் விலகி நின்றார்கள். சூழ்சியின் பலனை அதை உருவாக்கியவர்களே அனுபவித்தார்கள். அந்த சூழ்சியாளர்கள் மனிதர்களுக்கிடையிலான இடைவெளியில் புகுந்து விளையாண்டனர். அந்த விளையாட்டில் எப்போதும் அவர்கள் மட்டுமே ஜெயித்தார்கள். அல்லது அவர்கள் ஜெயிக்கிற மாதிரியே எல்லாவற்றையும் வடிவமைத்துக்கொண்டார்கள்.



ஆனால் இந்த ஆடுகளத்திற்குள்ளே நுழைய விடாமல் ஒரு பகுதியினரை வெகுதூரத்துக்கு விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டப்பட்டவர்களுக்கான அடையாளமும் சரித்திரமும் காலம் முழுவதும் கண்ணீராகவே கழிந்துபோயிருக்கிறது. வெற்றியை மட்டுமே பதிவு செய்யும் சரித்திரச் சூத்திரமும் கூட ஆதிக்க சூழ்ச்சிதவிர வேறில்லை. எனவே இரண்டாயிர ஆண்டு கால வரலாற்றில் அவர்கள் பற்றிய குறிப்பேதும் கானப்படவில்லை. அவர்கள் தான் வகைப்படுத்தப்படாதவர்கள் என்றும் புற ஜாதியினர் என்றும் பஞ்சமர்கள் என்றும் அறியப்பட்ட இந்திய தேசத்து உதிரிகள். அவர்கள் தலித்துகள்.



இந்தியப் பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.



1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில்

தன்னை இனைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லனடன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர்

முன்னிறுத்திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மஹாத்மாக் காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.



ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுதந்திரத் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் ( All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக் கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களூக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமக்கவேண்டும். இந்த மூன்று சம பங்கான தூண்களின் மேலே தான் எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு, ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள் நமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

SCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.



சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது. நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால் தொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப் போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.



SCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத் துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொனார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால் தன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படை வாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாளின் கடைசிக் கலகமாக ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத்தழுவினார்.



பின்னர் இந்தியத் தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ''மக்கள் ஜனநாயகக் கட்சி'' என்ற ஒன்றை ஆரம்பித்தார்.பின்னர் அதன் பெயரை இந்தியக் குடியரசுக் கட்சி என்று மாற்றினார். கட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றறிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்க வில்லை. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் இதே நாளில் நிலைகுத்தி நின்றது.



சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம் போனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச்சொன்னாராம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப் பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எநக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் தனக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங்கும் சிலையாகியிருக்கிறார்.

2.12.09

ஒரு பரபரப்பு நிகழ்வின் மறுபக்கம். to the last bullet


9/11 மற்றும் 26/11 இந்த இரண்டு தேதிகளைக்கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்கிற பூச்சாண்டியின் உருவம் நிழலாடும். உலகமெங்கும் தீவிரவாதம் இந்த நேரத்தின் உடனடிச் சவாலாக முன் நிறுத்தப்படுகிறது. அந்த அரணுக்குள் அந்தமாயக் கேடயத்துக்குள் மறைந்துகொண்டு அதிகாரம் தனது மறைமுக செயல்திட்டங்கள் அணைத்தையும் வெகு இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறது.




இதோ மும்பை தாஜ் சொகுசு விடுதித் தாக்குதல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அந்த தக்குதலில் களப்பலியான உயிர்களில் அசோக் காம்டெ,கார்கரே,சலஸ்கர் எனும் பெயர்கள் முக்கியம் வாய்ந்தவை.தாக்குதலை முறியடிக்கப்போன அவர்கள் வீரமரணத்தை ஏந்திக்கொண்டார்கள். சம்பவ இடத்தின் தீவிரத்தை உடனடியாக காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லியும் நெடுநேரம் போதிய படைகள் அனுப்பப்படவில்லை.காமா மருத்துவமனையில் நாற்பது நிமிடம் இரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவல் உதவி ஆணையாளைர் அசோக் காம்டே கேட்பாரற்று இறந்து போனார்.



இப்படியான இருட்டடிப்பு செய்யப்பட்ட சேதிகளோடு ஒரு புத்தகத்தை தனது காதல் கணவருக்கு நினைவஞ்சலியாக்குகிறார் வினிதா காம்டே. மறைந்த உதவி ஆணையாளர் அசோக் காம்டெயின் மனைவியான வினிதா எழுதிய to the last bullet எனும் இந்தப்புத்தகம் மும்பை கவல்துறை மற்றும் அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. வெளியிட்ட நாளிலே விற்றுத்தீர்ந்து விட்ட அந்த விவாதப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவணமான அமேயா பப்ளிகேஷன் இது இந்திய புத்தக வரலாற்றில் ஒரு திருப்பம் என கருதுகிறது.



இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.

27.11.09

ஒரு போராளிக் கவிஞனின் டைரிக்குறிப்பு - ஜோஸ் மார்த்தி - 2 ( JOSE MARTI )




1853 ல் பிறந்து வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து க்யூபாவின் விடுதலைக்கும் லத்தின் அமெரிக்க இலக்கியத்துக்கும் ஆயுதமும்,அதைஏந்துகின்ற வீரமும் கொடுத்துவிட்டுப்போன போராளிக்கலைஞன் ஜோஸ் மார்த்தி.க்யூபா அப்போது ஸ்பானிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது. பின்னர் அவர்கள் அதை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டுப் போனார்கள். நாடுகள் பண்டங்களாகப் பாவிக்கப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவைஅடிமைப்படுத்தியிருந்த காலம் அது.


ஏழு தங்கைகளுக்கு மூத்தவனான மார்த்தி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தான். 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனப்படுகொலை செய்யப்பட்ட புரட்சிக்காரன் ஆப்ரஹாம் லிங்கத்தின் மரணம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோஸ் மார்த்தியை அலைக்கழித்தது. அடிமை முறையை ஒழிக்கப்போராடிய ஒரு அண்டை நாட்டு ஆளுமைக்காக மௌன அஞ்சலிக்கூட்டத்தை நடத்தினான் ஜோஸ் மார்த்தி. 1868 ஆம் ஆண்டில் முடிவுற்ற பத்தாண்டு ஸ்பானியப் போரினால் க்யூபாவின் நிலைமை மிக மோசமடைந்தது. அப்போது க்யூபா ஸ்பானியக் காலணியாகவே இருந்தது. இது குறித்து விசனப்பட்ட க்யூபத்தேசிய வாதிகள் ஒருங்கிணைப்பு நடந்தது. மார்த்தியும் அவரது நண்பர் ஜெர்மினும் இதற்கு தலைமை தாங்கினார்கள்.


அதற்கான பிரச்சாரம் முழுக்க ஜோஸ் மார்த்தியின் கவிதைகளும் கட்டுரைகளுமாகவே இருந்தது. 1869 ஆம் ஆண்டு தனது முதல் அரசியல் கட்டுரையை எல் டியாப்ளோ என்கிற செய்தித்தாளில் வெளியிட்டார். பிரபலமான நாடகமான அப்தலா வையும் அதே ஆண்டு வெளியிட்டார். நூபியா என்னும் கற்பனை நாட்டின் விடுதலைப்போராக சித்தரிக்கப்பட்ட அந்த நாடகம் அந்த நாளில் விடுதலையின் வெப்பத்தை ஊதிவிட்டது.
அக்டோபெர் பத்தாம் நாள் என்கிற பிரபலக் கவிதையும் அதே ஆண்டு வெளியானது. அந்த ஆண்டிலேதான் அவன் படித்த பள்ளியை ஸ்பானிய ஆதிக்க அரசு இழுத்து மூடியது. 1869 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் மார்த்தி ஸ்பானிய அரசால் சிறப்பிடிக்கப்பட்டான். ஸ்பானிய அரசினை ஏமாற்றி லஞ்சம் வாங்கியதாக பொய்க்குற்றம சுமத்தப்பட்டான். நான்கு மாதம் கழித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டணை வித்திக்கப்பட்டு சிறயிலடைக்கப் பட்டார். மார்த்தியின் தாய் தனது மகன் சிறுவன் அவனை சிறையிலடைக்க வேண்டாம் என ஸ்பானிய அரசுக்கு கருணை மணுச் செய்தார். அவரது தந்தை வழக்கறிஞரை அமர்த்தி வாதாடிப்பார்த்தார் ஒரு ஆதிக்க அரசை ஏழைத்தாய் தந்தையின் கண்ணீரால் என்ன செய்ய முடியும்.


கொடுமையான அடக்குமுறையும் கால் விலங்குகளால் உருவான ஆறாத காயமும் அவரது உடல் நிலையை பாதித்தது அங்கிருந்து க்யூபாவின் இஸ்லாபியோன் பகுதிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை ஸ்பெயினுக்கு நாடுகடத்த தீர்மானித்தது ஸ்பானிய அரசு. அங்கு அவரது கல்யியைத் தொடரவும் அனுமதித்தது. ஸ்பானிய அரசுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் எனும் நிபந்தனையோடு.


1871 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரை அடைந்த மார்த்தி அங்கே தனது சிறைச்சாலை நண்பன் கார்லோசைச் சந்தித்தார். மார்த்தியின் வசிப்பிடம் நாடுகடத்தப்பட்ட க்யூப அகதிகளின் சந்திப்பிடமாக மாறியது. அந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி காஸ்டில்லோ என்னும் அவரது கட்டுரை காடிஸ் நகரின் லா சொபரினியோ நேசனல் எனும் பத்திரிகையில் வெளியானது. சிறையில் சந்தித்த சக கைதி ஒருவன் அனுபவித்த சிறைக்கொடுமையை வெளி உலகுக்கு அறியத்தரும் அதிர்ச்சித் தகவலாகியது அந்தக்கட்டுரை. தன்னை மாட்ரிட் நகரின் சட்டக் கல்லூரியில் தனி மாணவனாகப் பதிவு செய்து கொண்டபின் துணிந்து ஸ்பானியப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தார். அதில் க்யூபாவின் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பட்டியலிடப்பட்டது.


1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏழுபேர் பொய்க்குற்றம் சுமத்தி ஹவானாவில் தூக்கிலிடப்பட்டார்கள். தனது பத்திரிகையில் இதை எழுதிய மார்த்தியின் நண்பன் ஜெர்மினும் ஆறுவருடம் சிறைத்தண்டனை பெற்று ஸ்பெயினுக்கே அனுப்பி வைக்கப்பட்டான். ஸ்பெயினில் ஜெர்மினும் மார்த்தியும் மீண்டும் இணைந்தார்கள். நவம்பர் மருத்துவக் கல்லூரி சம்பவம் மீண்டும் மார்த்தியின் வார்த்தைகளில் எழுதப்பட்டு மாட்ரிட் நகரிலிருக்கும் க்யூப மாணவர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. நவம்பர் சம்பவத்தின் முதலாண்டு நினைவாக மாட்ரிட் நகரில் ஒரு, அடக்கச் சடங்கும் மௌன ஊர்வலமும் நடத்தப்பட்டது.


1873 ஆம் ஆண்டு தான் தங்கியிருந்த அறையின் முகப்பில் க்யூப தேசியக் கொடியைப் பறக்கவிட்டார் ஜோஸ்மார்த்தி.அப்போது புதிதாக நிறுவப்பெற்ற ஸ்பானியக் குடியரசு க்யூபாவை அதன் இன்னொரு அங்கமாக அறிவித்தது.இதை எதிர்த்து மார்த்தி ஸ்பானியப் பிரதமருக்கு ஒரு கண்டனக்கடிதம் அனுப்பினார். ஸ்பானியக் குடியரசும் க்யூபவிடுதலையும் எனும் அந்தக் கடிதத்தில் தன்னை ஒரு மக்களாட்சி அரசாகப் பிரகடப் படுத்திக்கொள்ளும் ஸ்பானியப் பொறுப்பாளர்கள் க்யூபாவை மட்டும் அடிமையாக நீடிக்க வைப்பது அதிகார வெறியின் மிகச்சிறந்த உதாரணம் என எழுதியிருந்தார்.
தனது எழுத்துக்கள் அணைத்தையும் நியூயார்க்கிலுள்ள நியூயார்க் மத்திய புரட்சிகர அமைப்பின் உறுப்பினர் நோஸ்ட்டர் போன்சுக்கு அனுப்பிவைத்தார். கியூப விடுதலை முயற்சிக்கு தனது ஆதரவை அந்த அமைப்பு பிரகடனப்படுத்தியது.1874 ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்துகொண்டு அங்கிருந்து பாரிசுக்குப் போனார். பாரிசில் ஆகஸ்ட் வகவுரி எனும் கவிஞரையும் விக்டர் ஹுயுகோவையும் சந்தித்தார். அங்கிருந்து மெக்சிகோவுக்கும், க்வட்டமலாவுக்கும் பயனமானார். 1875 முதல் 1878 வரை மெக்சிகோவிவின் கால் மொனெடோவில் தங்கினார். அங்குதான் மனுவேல் மெர்கடோ எனும் ஆப்த நண்பரின் சிநேகம் கிடைத்தது. அங்குதான் ஒரு க்யூப முதியவரைச் சந்திக்கிற பல நாட்கள் அலைந்தார். முதியவரின் மகளையும் சந்திக்கிற தங்கநிறத் தருணங்கள் அங்கேதான் கிடைத்தது. அவரது மகள் கார்மென் ஜயாஸ் பின்னாளில் மார்த்தியின் துணையானார்.


1877 ல் ஜுலியொ ப்ரெஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டு ஹவானாவுக்குப் பயணமானார் மார்த்தி. ஹவனாவிலிருந்த குடும்பத்தை மொத்தமாக மெக்சிகோவுக்கு மாற்றும் திட்டத்தோடு போனாலும் திரும்புகிற வழியில் மார்த்தி க்வட்டமாலாவில்ஒரு வீடு பார்த்து தங்கிவிட்டார். அங்கே ட்ராமா இண்டியானொ ( இந்திய நடகம்) - தேசமும் விடுதலையும் என்னும் நாடகத்தை உருவாக்கினர். அந்த மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்தார் அதன் விளைவாக ஆங்கிலம்,இத்தாலி,ப்ரெஞ்ச், மற்றும் ஜெர்மன் இலக்கியங்களுக்கான பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பாடம் நடத்தும் லாவகத்தில் அவரிடம் மாணவர்கள் கிறங்கிக் கிடந்தார்கள். அதில் முக்கியமானவர் மரியா கார்சியா க்ரேனடோஸ். க்வட்டமெலாவின் ஆளுநர் மிக்கேல் கார்சியா க்ரேனடோஸின் மகளான அவர் மார்த்தியின் மேல் பைத்தியமாகக் கிடந்தார். எனினும் மெக்சிகோ சென்று கார்மெனையே மணந்தார்.


1878 ஆம் ஆண்டு க்வட்டமாலா திரும்பிய மார்த்தி க்வட்டமாலா என்னும் நூலை வெளியிட்டார். அதே காலத்தில் நுறையீரல்நோயால் பாதிக்கப்பட்டிருந்த மரியா கார்சியா மரணமடைந்தார். அவள் நினைவில் வாடிய மார்த்தி 'காதாலால் மரணமான க்வட்டமாலாப் பெண்' எனும் புதினத்தை எழுதினார். மரியாவின் இழப்பால் மனதொடிந்துபோன மார்த்தி அங்கிருந்து க்யூபா திரும்பினார். அங்கே பத்தாண்டுப்போரின் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார். போர் முடிவடைந்த போதும் ஸ்பானியக் காலனி நீடிக்க, க்யூப விடுதலை அப்படியே கிடந்தது. அங்கிருந்து 1880 ஆம் ஆண்டு வெனின்சுலா சென்றார் அங்கு அவர் வெனின்சுலா ரிவியூ எனும் பத்திரிகை ஆரம்பித்தார். அவரின் எழுத்துக்களால் ஆத்திரமடைந்த வெனின்சுலா அதிபர் மார்த்தியைக் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். நியூயார்க் வந்த மார்த்தி மீண்டும் அங்கே க்யூப விடுதலை அமைப்பை உருவாக்கினார் ப்ரூனோ ஏர்ஸ் பத்திரிகையின் பொறுப்பாளராக இருந்தார்.


பத்தாண்டுப்போரில் தளபதிகளாக இருந்த கோமெஸ், அந்தோணியோ இருவரும் ஒரு உடனடி ராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டனர் அதற்கு மார்த்தியின் ஆலோசனையையும் நாடினார்கள். மார்த்தி ராணுவக் கலகம் செய்து க்யூபாவை மீட்க விருமபவில்லை. தவிரவும் அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்படாததால் அந்த முயற்சி சிறுபிள்ளைத்தனமானது என்று வாதிட்டார். 1891 ஆம் ஆண்டு மார்த்தியின் மனைவி,குழந்தைகள் அவருடனே தங்குவதர்காக நியூயார்க் வந்தார்கள். மார்த்திக்கு க்யூப விடுதலையை விட குடும்பதின் மீது அக்கறையில்லாதது வந்த சிறிது காலத்தில் தெரிந்துபோனது. கார்மென் குழந்தைகளோடு மீண்டும் ஹவனாவுக்கு கிளம்பினார். அதன் பின்னர் மார்த்தியை அவர்கள் சந்திக்கவே முடியாமல் போனது. வெனின்சுலாவில் விடுதி நடத்திக்கொண்டிருந்த கார்மென் மாரிய மாண்டில்லாவுடன் வாழ்ந்தார். மாண்டில்லாவின் பேரன் புகழ்பெற்ற நடிகர் சீசர் ரொமெரோ பின்னாட்களில் தன்னை மார்த்தியின் பேரனாகவே பிரகடனப்படுத்திக்கொண்டார்.


1892 ஆம் ஆண்டு க்யூப புரட்சிகரக்கட்சியை நிறுவினார். 1894 வரை ப்ளோரிடா,பிலடெல்பியா,டொமினிக்ககுடியரசு, மத்திய அமெரிக்க,ஹயத்தி,ஜமைக்கா,நிகரகுவா போன்ற அயல்நாடுகளில் வாழ்ந்த க்யூப மக்களிடம் சென்று கூட்டங்கள் நடத்தினார் அவர்களிடம் இயக்கத்துக்கான நிதியையும் திரட்டினார். 1895 ஆம் ஆண்டு க்யூப எழுச்சிக்கான வரைவு அறிக்கையை உருவாக்கினார். 1895 ஏபரல் 1 ஆம் தேதி க்யூபாவுக்கு கிளம்பும் முன் ஒரு இலக்கிய சாசனம் எழுதி கன்சோலாவிடம் ஒப்படைத்தார். கோமெஸ், ஏஞ்சல்,ப்ரான்சிஸ்கோ,சீசர்,மர்கோஸ் ஆகியோருடன் க்யூப விடுதலைப்போருக்குக் கிளம்பினார். ஏப்ரல் 11 ஆம் தேதி க்யூபாவை அடைந்தார்கள். அங்கிருந்து நாட்டுக்குள் இருந்த புரட்சிப்படைக்கு தூது அனுப்பினார்கள். ஸ்பானியத் துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. மார்த்தியின் புரட்சிப்படை முன்னேறி மே 13 ஆம் தேதி டாஸ் ரியோ வை அடைந்தது. அங்கே அடர்ந்த பனைகளை அரணாகக் கொண்டுள்ள ஸ்பானியத் துருப்புக்களை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததால் கோமெஸ் படைகளைப் பின்வாங்கச் சொன்னார். ஆனால் இந்த தகவல் கிடைக்காத மார்த்தி தனித்துவிடப்பட்டார். 1895 மே 19 ஆம் தேதி மதிய நேரம் ஒரு குதிரைவீரன் வருவதைப் பார்த்து 'இளைஞனே தாக்கு' எனக்குரல் கொடுத்தார். எப்போதும் கருப்புச்சட்டை அணிந்து வெள்ளைக் குதிரையில் அமர்ந்து வரும் மார்த்தியின் தனித்த அடையாளமே அவரை இலகுவாக குறிவைக்க ஏதுவாக இருந்தது.


கொலை செய்யப்பட்ட விடுதலைக்காரர்களின் உடலை கொடுக்காமல் தாங்களே அடக்கம் செய்கிற அதிகாரவெறியோடுஸ்பானிஸ் அரசு அவரைப்புதைத்தது. பின்னர் மீளத் தோண்டியெடுத்தாலும் அவரை எறிக்கத் தடை செய்தது. சண்டியாகோ டி க்யூபா வில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஒரு ராஜத் துரோகியைப் போல
என்னை இருளில் புதைக்கவேண்டாம்.
நான் சுத்தமான போராளி
நான் சூரியனைப் பார்த்துக்கொண்டே
உயிர் துறப்பேன்.


இந்தக் கவிதை வரிகள் நிஜமாக அவர் க்யூப விடுதலையை சூரியனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டுப்போனார். சூரியன் தகிக்கிற காலம் முழுக்க சுதந்திர வேட்கை எறிந்துகொண்டிருந்தது. அதிலிருந்துதான் ஒரு தீர்க்கமான தீப்பந்தம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார்கள் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும்.


கிட்டத்தட்ட சேகுவேராவின் வாழ்கைக்குறிப்பைப் போல இருக்கும் மார்த்தியின் வரலாறு. லத்தீன் அமெரிக்க இலாகியத்தின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அவருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நியூயார்க் மெக்சிகோவிலும் அழிக்கமுடியாத இலக்கியச் செல்வாக்கு பரவிக்கிடக்கிறது. 1959 ஆம் ஆண்டு நியூயார்க் மத்தியப்பூங்காவில் மார்த்தியின் சிலையை அமைத்துக் கௌரவப் படுத்திருக்கிறார்கள். 1869 ஆண்டு முதல் வெளியான அப்தலா தொடங்கி தனது இறுதி நாளில் உருவாக்கிய க்யூப விடுதலைப்ப்போரின் வரைவு அறிக்கை வரை 45 வகையான எழுத்துச் சொத்துக்களை இந்த உலகத்துக்கு விட்டுச்சென்றிருக்கிறார் மார்த்தி.


கவிஞன்,ஓவியன்,கட்டுரையாளர்,நாடகஆசிரியன்,பேராசிரியன்,
குழந்தைஎழுத்தாளன்,மொழிபெயர்ப்பாளர்,பத்திரிகைநிருபர்,
பத்திரிகைஸ்தாபகர்,அரசியல்தத்துவவாதி,ஆயுதம் ஏந்தியபோராளி
எனும் மலைக்கவைக்கும் சாகசக்கரனாக வாழ்ந்து மறைந்தவன்மார்த்தி.தனது நாற்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குமேல் நிலையாக எங்கும் தங்கியிருக்காதஓடுகாலி நமது மார்த்தி.லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் திருப்புமுனையாக இன்றும் போற்றப்படுகிற எழுத்துப்பாணிக்கு சொந்தக்காரன் மார்த்தி. நிகரகுவாக் கவிஞன் ரூபன் டாரியோவுக்கும், சிலிக்கவிஞன் காப்ரியெல்லா மிர்ஸ்டல்லுக்கும் ஆதர்சமாக விலங்கியவை மார்த்தியின் எழுத்துக்கள்.

24.11.09

பேனாவையும் துப்பாக்கியையும் ஒருசேர ஏந்தியவன் - ஜோஸ் மார்த்தி








பனைகள் போல நிமிர்ந்து நிற்கும் தேசத்தில்

வளர்ந்த நான் ஒரு நேர்மையானவன் .

மடியுமுன் எனது ஆவியின் படலை

பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .



எனது பாடல் தெளிந்தபசுமை
எனதுபாடல் கருஞ்சிவப்பு தீப்பிழம்பு

எனது பாடல் காயம்பட்ட காயம்பட்ட மான்

எனது பாடல் மான் தேடும் வனப்புகலிடம்.



என்னை நோக்கி கரங்கள்

நீட்டும்உண்மையான நண்பனுக்காக.

ஜூலையிலும் அதே போல ஜனவரியிலும்நான்

வெள்ளை ரோஜாவை நடுகிறேன்.



நாம் வாழும் எங்கள் இதய தேசத்தை

கிழிக்கிற குரூர மனிதர்களுக்காக

கம்பிவேலிகளையும் முட்செடிகளையும்

நான் நடப்போவதில்லை

நான் வெள்ளை ரோஜாவையே நடுகிறேன்.



இந்த மண்ணில் வாழும் ஏழைகளோடேஎன்

சொந்த வாழ்வைப்பகிர்ந்து கொள்வேன்

மலையினின்று வழியும் சிற்றருவி

கடலைக் காட்டிலும் சந்தோசம் தரும்.



0



க்வாண்டமேரா என்றழைக்கப்படும், இது கியூபாவின் தேசியப்பாடல். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும் எனது மொழியாக்கம். ஒரு கவிஞனாக, ஒரு சிறுகதைப் படைப்பளியாக, நாவலாசிரியராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட போதும் அவனது தேசத்தின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிக் கண்ணிகளை உடைக்கும் சம்மட்டிகளாகவே அவை உருமாற்றமடைந்தது. ஓய்வில்லாத அலைச்சல் அதில் கிடைத்த தேடல் எல்லாமே விடுதலைக்கான திசையாகவே இருந்தது அவருக்கு. சட்டமும் படித்தார் சர்வகாலாசாலையில் ஓவியமும் படித்தார். தனது கல்வி கேள்வி அணைத்தையும் விடுதலைக்கான ஆயுதமாக்கியவர் இறுதியில் ஆயுதமேந்திப் போர்க்களம் போனார்.



கியூப விடுதலையின் வீரஞ்செரிந்த விதையாக அறியப்படும் தேசியக் கவிஞன் ஜோஸ் மார்த்தி. நெற்றியில் புரளும் கற்றை முடியோடு ஒரு புரட்சியின் நட்சத்திரம் தரித்த சேகுவேராவுக்கும்-பிடலுக்கும் முன்னத்தி ஏர் இந்த ஜோஸ்மார்த்தி. உலக வரலாற்றில் காணப்படும் விடுதலை வீரர்களோடும், இலக்கியவாதிகளோடும் ஒருசேரத் தனது இருப்பை பதிய வைத்துள்ள போதும் கவிஞனாகவே அடையாளமாகிறான் ஜோஸ் மார்த்தி.

சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்



'' ஏய் இங்க என்னடா பண்றீங்க ''அந்த மூன்று பேரும். ரோட்டை ஒட்டிய பாலத்துச்சுவரில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு முந்திய இரவு பார்த்த சினிமாவைப்பற்றியோ, குடித்த சிகரெட்டைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள். அலட்சியமாகத் திரும்பிப்பார்த்தார்கள். மாடத்தி டீச்சரை அங்கு துளியும் எதிர் பார்க்கவில்லை.'' டே பேச்சிமுத்து, வீடெங்க இருக்கு.. ஸ்கூலுக்கு வராம... ராஸ்க்கல் ''


மாடத்தி ரோட்டை விட்டு இறங்கி அவர்களை நோக்கி நகரவும், குதித்து ஓடி, தெரு முடிவிலிருந்த சுவரில் ஏறிக்குதித்து தண்டவாளப்பக்கமாய் மறைந்துபோனார்கள். துரத்தி ஓடமுடியாத ஆத்திரமும், காந்திநகருக்கு அலையாய் அலைந்து சேர்த்த ஒருவன் வீனாப்போனதும் சகிக்கமுடியவில்லை எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறாள் அவனை பேர் சேர்க்க. தீப்பெட்டி ஆபீசுக்கு போக இருந்தவனை நிறுத்தி குடும்பத்தாரிடம், வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது என்று கல்வியின் பெருமை சொன்னபோது அவன் வேலைக்குப்போகலைன்னா அடுப்புல சோறு வேகாது என்று அவனது தாயும் தகப்பனும் பதில் சொன்னர்கள். நிப்புக்கம்பெனி மூடியதால், பழைய பேப்பர், பிளாஸ்டிக், பழைய பாட்டில் வாங்கி விற்கும் அப்பா.தீப்பெட்டிக்கட்டு வாங்கி ஒட்டும் அம்மா. வாஸ்த்துப்பாத்து கட்டிய படிகளைப்போல வரிசையாய் ஆறு குழந்தைகள். அவர்களின் வயிறு நிறைக்க முடியாமல் ரெண்டுபேர் சம்பாத்தியம் நொண்டியடித்தது.


பிள்ளைகள் படிப்பார்கள் பேரெடுப்பர்கள் கை நிறையகொண்டு வந்து கொட்டுவார்கள் என்கிற கனவுகள் தோற்றுப்போய் எதார்த்த வறுமை எட்டு வயசிலேயே பையனை வேலைக்கனுப்ப வைத்தது. இந்தக்கதையெல்லாம் செல்லாதபடிக்கு திரும்பத் திரும்ப படிப்பினால் உயர்ந்தோரின் பட்டியலைச்சொன்னார்கள். படிக்கிறவயசில் சிறார்களை வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று லேசாக கலங்கடித்தார்கள். மசியவில்லை. மாசம் நூறு ரூபாய் ஸ்டைபண்ட் கொடுப்பார்கள் மதியம் சாப்பாடு உண்டு என்று சொன்னதும் கண்கள் லேசாக விரிந்தது. யோசிக்க ஆரம்பித்த தாயை மடக்கி ஒரு எதிர்கால கம்ப்யூட்டர் எஞ்சினீயரை மீட்டெடுத்தார்கள். அதற்கென நாலு நாள் சாயங்காலம் செலவானது, இருட்டிய பின்னால் வீட்டுக்கு வந்தார்கள் .


விளக்குப்போடக்கூட ஆளில்லாமல், பூட்டிக்கிடந்த வாசலில் மாடத்தியின் மகன் வீட்டுப்பாடம் எழுதமுடியாமல் காத்துக்கிடந்தான். சிவகாசி அச்சுத் தொழிற்சாலையில் கணக்கெழுதுகிற கணவன் பதினோருமணிக்கு வந்தபோது பையன் சொல்லியதைக்கேட்டு வீட்டில் ஒருவாரம் சண்டை நடந்தது. இவ்வளவு மெனக்கெட்டுச் சேர்த்த பேச்சிமுத்து மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டான். எல்லாம் வீனாகிப்போனது. கோபம் கோபமாக வந்தது மாடத்தி ட்டீச்சரின் கணவன் நாகரீகமாகக் கேட்ட சில கேள்விகள் இப்போதுகூட முள்ளாகக்குத்தியது.


அந்த அதிகாலை வேலையில் காளியம்மன் கோவிலுக்குப்போய்விட்டுத்திரும்பி வந்த சந்தோசம் கானாமல்போனது. உடனடியாக ஐந்து புள்ளிக்கு ரத்த அழுத்தம் கூடியது. கூட வந்த வார வட்டி முருகேசன் மனைவி '' போனாப்போகட்டும் விடுங்க டீச்சர், அவன் படிக்கலைன்னா அவனுக்குத்தானே நட்டம் ''என்று சொன்னாள். அவளுக்கென்ன தெரியும் இப்படியே நாலைந்து பேர் வராமல் நின்றுபோனால் இவளுக்கு கிடைக்கிற ஆயிரத்து ஐநூறும் நின்னுபோகும் என்று அவளுக்கெப்படித்தெரியும். உண்மையைச்சொன்னால் ஆத்திர அவசரத்துக்கு கிடைகிற இருநூறு ஐநூறு கைமாத்தும், டீச்சர் பட்டமும் பறிபோகும் என்று மாடத்தி பயந்தாள். அந்த உண்மை, " பேரு பெத்த பேரு தாக நீலு ரேது " என்பது போலத்தான். ஊரும், பிள்ளைகளும் அவளை டீச்சர் என்று கூப்பிடுவார்கள். எதிர்ப்படுகிற தீப்பெட்டியாபீஸ் பெண்களெல்லாரும் மரியாதைகொடுத்து ஒதுங்கிப்போவார்கள்.அது மட்டும் தான் இப்போது ஆசுவாசமாக இருக்கிறது. எண்பத்தெட்டாம் வருசம் பதிந்து வைத்த பட்டப்படிப்பு, தட்டச்சு பட்டயப்படிப்பு, ரெண்டும் சேர்ந்து எப்போதாவது வேலை தருமென்கிற நம்பிக்கை சுத்தமாக மண்மூடிப்போனபோது. ஜீவனம் தள்ள இந்த இடத்துக்கு வந்தாள்.


இதற்கும் கூடப் பெரும்போட்டி , சில பேர் வட்டிக்கு வாங்கி பத்தாயிரம் லஞ்சமாகக் கொடுத்தார்களென்று பேசிக்கொண்டார்கள். ஒரு காலத்தில் முறைசாராக்கல்வி என்று பேயரிடப்பட்டு கல்லூரியில் படிக்கிற என் எஸ் எஸ் மானவர்களைக்கொண்டு சேவை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வேலையில்லா ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இப்போது தொண்டு நிறுவணங்களின் கையில் அந்தப்பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடைகோடிக்கும் கல்வி போக வேண்டுமெனும் உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் இப்போது ரொம்ப பிரபலம். கொள்கைகள் சுருக்கமாக வெளிப்பக்கம் எழுதப்பட்ட டாடா சுமோவின் உள்புறத்தில் குளிரூட்டப்பட்டிருக்கும், எப்போதும் மாறாத செண்டு வாசம் வாகனம் முழுக்க பரவியிருக்கும். செண்டு வாசத்தோடு தொண்டு நிறுவனத்தலைவர் வருவார். '' நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேர'' பாட்டுப்போட்டு பிள்ளைகளை டிரில் வாங்கி, ஆடவைத்து குஷிப்படுத்தவேண்டும். அவரோ பிள்ளைகளைப் புழுக்களைப்பார்ப்பது போல் பார்ப்பார். அவர் வந்து போகிற வரை ஆசிரியைகள் உட்பட எல்லோரும் கைகட்டிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும். படியளக்கிற புண்ணியவானாச்சே?. சம்பளம் எண்ணூரில் ஆரம்பித்து இந்தப்பத்து வருசத்தில் ஆயிரத்து ஐநூறில் வந்து நிற்கிறது. இந்த ஆயிரத்து ஐநூறு சம்பளத்துக்கு வாரத்தில் ஐந்து நாள் இன்ஸ்பெக்சன் நடக்கும், மாதத்தில் ஐந்து நாள் மீட்டிங் நடக்கும். அந்த கூட்டங்களில் நாடு போற்றும் பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், குழந்தை தொழிலாளர் அவலம், எல்லாம் பிரதானப்பொருளாகப் பேசப்படும். சில நேரம் நாடகங்கள் கூடப்போடுவார்கள்.


அரை மணிநேரம் தாமதமாகப்போனாலோ தலைவலி காய்ச்சல் என்று மத்தியானம் வீட்டுக்குப்போனாலோ, அந்த நாளுக்குறிய சம்பளம் கழிக்கப்படும். வேலை என்பது ஊரிலுள்ள குடிசைப்புறத்து வீடுகளாகப்போய் படிப்பு பாதியில் நின்று போன குழந்தைகள் தேடவேண்டும். அந்தப்பிள்ளைகள் படிப்பதற்கு வெறும் ஐநூறு ரூபாயில் வாடகைக்கட்டிடம் தேட வேண்டும். மழைக்காலத்தில் ஒழுகும் ஓட்டுக்கூரைக்கடியில் நனையாமல் குழந்தைகளைக் காக்க வேண்டும். அந்த ஐம்பது பிள்ளைகளுக்கு சாப்பாடு போட அரிசி பருப்பு தேட வேண்டும். நிர்வாகியின் பிரதிநிதி வந்து '' என்ன செய்வீகளோ ஏது செய்வீகளோ குழம்புச்செலவு ஒரு நாளைக்குப் பத்து ரூபாய்க்கு மேலே போகக்கூடாது, போனால் சம்பளத்தில் பிடிச்சிருவேன்''என்று சொல்லிவிட்டு விறைப்பு மாறாமல் பைக்கில் ஏறிப்பொய்விடுவார்.


சம்பளமும் மூனு மாசம் நாலு மாசம் சேர்த்து சேர்த்துத்தான் பட்டுவாடா பண்ணப்படும். அது வரை ஏதாவது நகைகளை அடகு வைத்துத்தான் அடுப்பெரிக்க வேண்டும்.அதுவுமில்லாதவர்கள் அண்டை அயல் வீடுகளில் குறைந்த வட்டிக்கு வாங்கி காலம் தள்ளவேண்டும். இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு டவுசர் கிழிந்த பிள்ளைகளுக்குப்பாடம் சொல்லித்தரவேண்டும். ஐஸ் விற்கிறவனையும், வடை விற்றுக்கொண்டுபோகிற பெண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கிற அவர்களைக் கம்பெடுத்து அடிக்கவேண்டும். அடிவிழுந்த இடத்தில் வலி குறைவதற்குள் அவர்களுக்கு ஆறுவது சினம் சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு காலையும் ஸ்கூல் வாசல் நுழகிற போது நாற்பது சுரத்தில் சேர்ந்து குட்மார்னிங் டீச்சர் சொல்லும் போதும், எங்காவது பொது இடங்களில் பார்க்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும் உருவாகிற போதையில் இந்தப்புலப்பமும் வலிகளும் தீர்ந்துபோகும்.


பேசிமுத்து வராதது ஒரு வாரத்துக்கு திக் திக்கென்று இருந்தது. அந்தப்பக்கமாகக் கடந்து போகிற எல்லா ஜீப்பும், பைக்கும் லேசான உதறலை உண்டுபண்ணிப்போனது. வேலிக்காட்டுக்குள் சாராயம் காச்சுகிறவர்கள் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க முடியும். இந்த நூறு ரூபாய் பள்ளிக்கூடத்தில் எந்த நேரமும் நெருப்பைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். வேலை அப்படி.போக்குவரத்து துறை தவிர, தமிழக அரசின் முக்கால் வாசி இலாக்கக்களிலிருந்து ஆய்வுக்கு வருவார்கள்.புதிதாக வந்த சப்கலெக்டர் ஒரு வெளிமாநிலத்துக்காரர். இளம்பெண் அதிகாரி. அந்தப்பக்கமாக போன ஜீப்பை நிறுத்தி மடமடவென உள்ளே வந்தது. இந்தமாதிரி ரொம்பப்பேர் வருவாங்க. வெளிநாட்டு, உள்நாட்டு தொண்டு நிறுவணங்கள். அப்புறம் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்தெல்லாம் வருவார்கள்.புரியாத மொழியில் புரியாத விஷயங்கள் பேசிவிட்டு.கையடக்கமான வீடியோ கேமராவில் ஒளியற்ற முகங்களைப்படம் பிடித்துக்கொண்டு போவார்கள்.
அதுபோலத்தான் அந்த சப்கலக்டெர் வந்தது. பசங்களிடம் கேள்வி கேட்டது தமிழுக்கே தரிகனத்தான் போடுகிற பிள்ளைகள் இங்கிலீஸுக்கேள்விகளால் நிலைகுலைந்து போனார்கள்.அவ்வளவுதான் அம்மா வேபங்கொலையில்லாமல் சாமியாடியது. தாட் பூட், கக்கிரி,புக்கிரி என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஏதேதொ திட்டியது. பசங்களுக்கு அந்த மொழி புதிராக இருந்தது.மனநிலை சரியில்லாத காதர் என்கிற நாலாவது படிக்கிற பையன் சப்கலெக்டருக்கு பதில் சொல்லுகிற மாதிரி அவனும் இஷ்ட மிஷ்ட டிரிங்,புரிங் என்று சொல்லவும் பிள்ளைகள் ஒட்டுமொத்தமாக சிரித்துவிட. அம்மா ஓட்டைச்சேரில் உட்கார்ந்து மெமோ எழுத ஆரம்பித்தது அதுவரை பேசாதிருந்த உதவியாளர் அவரது ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார்.


பேச்சிமுத்துவை முற்றிலுமாக மறந்துபோயிருந்த ஒரு நாளில் கலை இலக்கிய இரவு பார்க்கப்போனாள் மாடத்தி டீச்சர். நிகச்ழ்சி ஆரம்பிக்கும் முன்னாள் கூட்டத்திற்குள் ஒரு சிறுவன் சம்சா விற்றுக்கொண்டு அலைந்தான். தூரத்திலிருக்கும் வரை காட்சியாக இருந்த அவன் பக்கத்தில் வந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் பேச்சிமுத்துவே தான். கூப்பிட்டு விசாரித்தபோது அப்பாவுக்கு தீராத வயிற்று வலியெனவும் வேலைக்கு போகவில்லை அதனால் சம்சா விற்க வந்துவிட்டேன் என்றும் சிரித்துக்கொண்டே சொன்னான். ஹோமியோபதி டாக்டரிடம் காட்டச்சொல் ஐம்பது ரூபாய்க்குள் சொஸ்தமாகிவிடும் என்று பேருக்கு சொல்ல மறுநாள் பேச்சிமுத்துவின் அப்பா ஸ்கூலுக்கே வந்து விட்டார். டீச்சர்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்குப் பத்துரூபாய் போட்டு அவரை ஹோமியோ டாக்டரிடம் அனுப்பி வைத்தார்கள். ஒருவாரத்தில் ஆச்சரியம் ஒன்று நடந்தது. சைக்கிளின் முன்பக்கம் உட்காரவைத்து அவரே பேச்சிமுத்துவைக் கூப்பிட்டு வந்தார். வயித்து வலி சரியாப்போச்சு டீச்சர் என்பதை வார்த்தைகளிலும் நன்றியைக்கண்களிலும் சொல்லிவிட்டு பின்னாலிருந்த மரப்பெட்டியிலிருந்து ஐந்து கொய்யாப் பழங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்.அன்றைக்குப் பூராவும் டீச்சர்கள் பேச்சிமுத்து வந்த சந்தோசத்தில் அவனைப்பற்றியும்,அவனைக் கூப்பிடப்போன சம்பவங்களையும் அசைபோட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


இப்பொதெல்லாம் காலை எட்டுமணிக்கே பேச்சிமுத்து வந்துவிடுகிறான். மூணுதெரு தள்ளியிருக்கும் குளோரி டீச்சர் வீட்டுக்குப்போய் சாவி வாங்கி வருவது.அவனே திறந்து அந்த கைப்பிடி போன பெருக்குமாறால் பள்ளிக்கூடத்தை பெருக்குவது. ஒவ்வொரு டீச்சர் வரும்போதும் ஓடிப்போய் பையை வாங்கி வருவது. எங்காவது கடைக்குப் போகச்சொன்னால் அடம்பிடித்து சண்டைபோட்டு முந்திக்கொண்டு தானே போவது. டீச்சர்கள் இல்லாத பொழுதுகளில் பிள்ளைகளைக்கவணிப்பது என்று அந்த பள்ளிக்கூடத்தில் அவன் எல்லாமுமாகிப்போனான். கொடைக்கானல் சுற்றுலாவுக்கு கூட்டிக்கொண்டு போனப்பிறகு அவன் இன்னும் கூடுதல் பிரியமானவனாக மாறிப்போனான். ஒருமாதத்துக்கு முன்னமே கொடைக்கானல் போகிறோம் வேன் செலவுக்கு ஆளுக்கு ஐம்பது தரவேண்டும் என்று சொன்னதிலிருந்தே அவன் சுறு சுறுப்பாகி விட்டான்.ஒவ்வொரு நாளும் மாடத்தி டீச்சரிடம் ஒரு ரூபாய் கொடுத்து சேர்த்து வைத்தான். ஐஸ் வண்டி வரும்போது வெளியே வராமல் உள்ளேயே இருந்து புஸ்தகம் படிப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டான். கொடைக்கானல் போக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதையும், எவ்வளவு பணம் சேர்க்கவேண்டு மென்பதையும் தினம் தினம் மாடத்தி டீச்சரிடம் நச்சரிப்பான். அப்போது அவன் கண்களில் இருக்கிற ஏக்கம் அதள பாதாளங்களையும் தாண்டிய பாதாளத்தில் இருக்கும். பிறகு அவனே மனதுக்குள் ஒரு கணக்குப் போடுவான் பிறகு சோர்ந்து போவான்.


கொடைக்கானல் போக இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அப்போது அவன் கணக்கில் இருபத்தி எட்டு ரூபாய் தான் இருந்தது. அதைக்கேட்டதிலிருந்து மிகவும் சோர்வாய்க் காணப்பட்டான். எந்த நேரமும் மற்ற பிள்ளைகளை அதட்டிக்கொண்டும், அடித்து அழவைத்துக்கொண்டுமிருக்கிற பேச்சிமுத்து இப்போது மூலையில் உட்கார்ந்து நிறையச்சிந்திக்க ஆரம்பித்து விட்டான். பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அவனைக்கேலி செய்ய அழுதுகொண்டிருந்தான். கனகா டீச்சரிடம் 'துட்டு கொறைய்யாக்குடுத்தா கொடைக்கானல் கூட்டிக்கிட்டு போகமாட்டீங்களா டீச்சர் ' என்று கேட்டான் " டிக்கட்டுக்கு ஐம்பது செலவுக்கு வேற பணம் இருக்கு அதனால எழுபது ரூபாயாச்சும் இல்லாயின்னா நீ கிடையாது " என்று கட்டன் ரைட்டாச் சொல்லியயதும் சுத்தமாக நொறுங்கிப்போனான். கொடைக்கானல் போவதற்கு இன்னும் இரண்டு நாள் தானிருந்தது. படந்தால் ரோட்டில் இருக்கிற இதேமாதிரியான இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு ஆள் அனுப்பி எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியதிருந்தது. ஓட்டு கூறை வாய்பிளந்து கிடக்கிற அந்தப்பள்ளிக் கூடங்களில் தொலை பேசி என்பது எட்டாக்கனி.
தூதனுப்ப பேச்சிமுத்துவைத் தேடும்போது தான் அவன் ரெண்டு நாள் வராதது தெரிய வந்தது. பக்கத்து வீட்டு கனிமொழியைக் கேட்டதற்கு எங்கம்மாவுக்கும் அவங்கம்மாவுக்கும் சண்டை எனக்குத்தெரியாது என்று சொல்லிவிட்டாள். சிவக்குமாரை அனுப்பி கூடிவரச்சொன்னதற்கு பள்ளிக்கூடத்துக்குத்தான் போயிருப்பதாக அவன் அம்மா சொன்னதாகச் சொன்னான். இதைக்கேட்டதும் டீச்சர்மாரெல்லாம் ஆடிப்போனார்கள். நாளைக்கு தாய் தகப்பன் வந்து பிள்ளையைக்காணோம் என்று கேட்டாள் என்ன செய்ய எனும் உதறல் வந்தது. கொடைக்கானல் போக இன்னும் ஒரு நாள் தானிருந்தது இந்த நேரத்தில் இதென்ன சோதனை என்று ஆளாலுக்கு அங்களாய்த்தார்கள். மறு நாள் மதியச் சாப்பாட்டுக்கு பிள்ளைகள் தயாராகிகொண்டிருக்கும்போது ஒண்ணுக்கிருக்கப்போன பக்கத்து வீட்டுக் கனிமொழி ஓடி வந்து மூச்சிறைக்க ' டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து ' என்று சொல்லி நிறுத்தினாள். பள்ளிக்கூடம் மொத்தமாகத் திரும்பிப்பார்த்தது. திரும்பவும் டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து என்று சொன்னாள். ஆயாம்மாதான் ' ஏ சொல்லுடி ஒடைஞ்ச ரிக்காடு மாரி சொன்னதெயே சொல்லிக்கிட்டு ' என்று அரட்டினார்கள்.


ரோட்டில் தையல் கடை நிழலில் பேச்சி முத்து இருப்பதைச்சொல்லியதும் அப்பாட என்றிருந்தது. பையன்களை அனுப்பிக்கூட்டி வரச்சொன்னதற்கு பயந்து கொண்டு வரவில்லை. மாடத்தி டீச்சர் போய்பார்த்தது. வெண்டைக்கய் மாதிரி வதங்கி அழுக்குச்சட்டையோடு பிச்சைக்காரனைப் போலிருந்தான். மாடத்தி டீச்சரைப் பார்த்ததும் கண்கள் நிரம்பியது. சாப்பிட்டிருக்கமாட்டான் என்று தெரிந்தது " சாப்பிட்டயாடா " கேட்டதற்கு ஆமாம் எனத் தலையாட்டினான்." இல்ல வா சாப்பிட " என்று சொல்லித் தலையைத் தொட்டதும் கேவிக்கேவி அழுதான். ரெண்டு நாள் பள்ளிக்கூடம் போகிறேனென்று சொல்லி விட்டு சம்சா விற்கப்போயிருக்கிறான் அவனுக்கு சரக்குக்கொடுக்கமாட்டேனென்று கடைக்காரர் சொல்லியதோடல்லாமல் " நீங்க தான் படிச்சு கம்ப்யூ..ட்டர் எஞ்சினீராகப் போறீகள்ள போங்க " என்று குத்தலாகப்பேசியது அவன் கண்முன்னே இன்னொரு பேச்சிமுத்துவுக்கு சம்சா எண்ணிப்போட்டது. பிறகு தேவி தியேட்டருக்குப்போய் கெஞ்சிக் கெதறிக் கேட்டு இண்டர்வெல்லில் முறுக்கு விற்றது. பேப்பர் பொறுக்கி கடையில் போட்டது எல்லாம் சொல்லிவிட்டுப்பைக்குள் கைவிட்டு பதினைந்து ரூபாய் சில்லறையாக மாடத்தி டீச்சரிடம் நீட்டினான்.


" இத வச்சிக்கிட்டு என்னியக் கூட்டிக்கிட்டுப் போங்க டீச்சர், நா எப்டியும் சேத்து வச்சி ஒங்களுக்கு மிச்சத்துட்ட தந்துருவேன் "
சொன்னதும். மாடத்தி டீச்சருக்கு மட்டுமல்ல அங்கிருந்த பிள்ளைகளும் ஆயாவும் வார்த்தைகள் மறியல் பண்ண கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்றார்கள்.
சமூகம்,குழந்தைத்தொழிலாளர்,சிறுகதை

23.11.09

கற்பிதங்கள் கழிந்து ஓடும் நேரம்.

அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்போதெல்லாம் எனக்கு தோழர் கந்தர்வனின் ' தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' சிறுகதை தான் நினைவுக்கு வரும். மனிதர்களின் அபிலாஷைகளை அள்ளிக்கொண்டு வந்து தட்டுகிற இடமாக அந்த எழும்பூர் ரயில் நிலையம். முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அங்குபோய் இறங்கினேன். மதுரை தாண்டி பயணம் செய்த முதல் அனுபவம் அது. அன்றும் கூட அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் தாதார் எக்ஸ்பிரசைப் பிடிக்கனும், ஒருமணிநேர அவகாசத்தில். வெளியே வந்தபோது பீடியைக் கிழே போட்டுவிட்டு ஒரு தாத்தா அழைத்தார். அவரது வாகனத்தில் சென்ட்ரல் போவதாக உடன்பாடு. அவரைவிட வயதான குதிரையும் வண்டியும் எனக்காகக் காத்திருந்தது. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்னும் பாடலை மந்தமாகச்சுழலும் இசைத்தட்டின் லயத்தில் பாடிக்கொண்டு போனேன். இனிக் குதிரை வண்டி நினைவுகூறலில் மட்டுமே காணலாம்.


டெல்லி சென்று திரும்பி வந்த அந்த 1995 ஆம் ஆண்டையும் என்னால் மறக்க முடியாது. நானும் தோழர் நடராஜனும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இறங்கி உடனடியாக வைகையைப் பிடிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். மனசு முழுக்கஇந்தியாவின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நிறைந்து கிடந்தது. உடலில் ஒரு பத்து நாளின் ரயில்புகை படிந்தது போல உணர்வு. பல்துலக்காதபோதும் பசி அரிசிச்சோறு தேடியது. சின்னவன் அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்பதாக அவள் சொன்னது. பயணவேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு பணிரெண்டு மணிநேரத்தில் சாத்தூர் என்ஜிஓ காலனியில் இருக்கப்போகிறோம் என்னும் குறுகுறுப்பு வந்தபோது அவள் வாசம் அடித்தது. பலநேரங்களில் குழந்தைகள் துவர்களாகவும் இருந்துவிடுவார்கள்.


முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான வரிசை நீண்டு கொண்டே போனது. திருச்சிக்கு அம்மா அப்பவை அனுப்பிவைக்க,மதுரையில் சாயங்காலம் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள.நேற்று மகனின் வேலைக்காக மந்திரியைப்பார்க்க வந்தஇப்படி ரகரகமான பயணிகளின் கூடவே ஒரு ராணுவவீரன் தன் காதல் மனைவியோடு மிகமிக நெருக்கமாக. ஒன்பது மாதத்துக் கர்ப்பினியான அவளுக்கு எழும்பூர் இம்பாலாவில் நெய்த்தோசை வாங்கிவந்து கொடுத்தான்.ராணுவ கிட்பேக்குகளையும் பெரிய பெரிய சூட்கேசுகளையும் அடுக்கி அதன் மேல் அவளை உட்கார வைத்திருந்தான்.ஈக்கள் கூட அவளை நெருங்காதபடிக்கு அன்புவேலி சுற்றியிருந்தான். நெய்த்தோசையின் மணம் எங்கள் பசியைக் கூடுதலாக்கியது.


தயிர் சாதப் பொட்டலம் வாங்குவதற்காக நிலைய முகப்புக்குப் போனோம். ஐந்து பேர் தாடியோடு மரப்பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். பொட்டலம் வாங்கித் திரும்பும்போது அவர்கள் அந்த ஐந்து பேர் இந்த உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவார்கள் எனத்தெரியாமல் கடந்துபோனோம். திரும்பும்போது அந்த இடம் ஒரே கலவரமாக இருந்தது.ஒற்றைப்பெண் காவலர் அதில் ஒருவரின் கழுத்தைப்பிடிக்க அவர் கத்திக்கொண்டிருந்தார். ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் மூன்று பேரை சயனைடு விழுங்கிவிட்டிருந்தது. யாராவது ரயில்வே போலீசில் தகவல் சொல்லுங்கள் என வேடிக்கை மனிதர்களிடத்தில் முறையிட்டார்கள் அந்த போலீஸ். யாரும் போகவில்லை என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் நான் ஓடிப்போய் சொன்னேன். ரயில்வே போலீஸ் எந்த அவசரமும் காட்டவில்லை.


திரும்பவும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தேன் இன்னும் கூட அங்கு நடப்பது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. கூட்டத்தை விலக்கிக்கொண்டு போனேன். நான்குபேர் இறந்து கிடந்தார்கள். அவர்களது கண்களில் ஏக்கமும் கனவுகளும் நிலைகுத்தி நின்றது. மரணம் என்பது அவ்வளவு சடுதியில் லயிக்கும் என்பதை நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இன்னும் கூடுதலாக இரண்டு மூன்று காவலர்கள் வந்திருந்தார்கள். பிடிபட்டவர் ஈழத்தமிழில் பேசிக் கொண்டிருந்தார். எங்களை வாழத்தான் அனுமதிக்கவில்லை சாகவாவது அனுமதியுங்கள் என்று கத்தி கத்திச் சொன்னார். எங்கட நாடு விடுதலை அடையும் என்று கோஷம் எழுப்பினார். வேலூர் சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்த ஈழப்போராளிகளை தமிழ்நாடு சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த செய்தி அப்போது நினைவுக்கு வந்தது.


கூட்டத்திலிருந்தவர்கள் தங்கள் கற்பனைகளோடு செய்தியை வேறு வேறு நிகழ்ச்சியாக மாற்றிக்கொடுத்தனர். அதிரடிப்படை கவச வாகனம் வருவதற்கு முன்னமே செய்தித் தாள்களின் வாகனங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தன. காவலர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள்; டீ காபி சாப்பாடு விற்போரின் குரல்கள்; போர்ட்டர்களின் அரைஓட்டம்; ரயில்வருகை அறிவிப்பு; வழியனுப்பும் நெகிழ்வும்; வரவேற்குமுற்சாகமும் ஆன எழும்பூர் ரயில் நிலைய வளமை சிதைந்து எங்கும் பரபரப்புசூழ்ந்து கொண்டது. இப்போது எங்குபார்த்தாலும் காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. கூட்டம் கலைக்கப்பட்டது நாங்கள்வரிசைக்குத் திரும்பினோம். அந்த ராணுவவீரர் இன்னும் மனைவியோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்.


" இந்த ரயில் நிலையத்தில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது எல்லோரும் கலைந்து ஓடுங்கள்" என்று காவல் துறை அறிவித்தது. தீப்பந்தமிட்டுக் கலைத்துவிட்ட தேன்கூடு மாதி கூட்டம் கலைந்தோடியது. சூட்கேஸ் எடுக்க மறந்தவர்கள்வாங்கிவந்த சப்பாட்டுப் பொட்டலத்தை எடுக்க மறந்தவர்கள் கையில் குழந்தையை துக்கிக்கொண்டு ஓடிய தாய்மார்கள் என உயிர்கள் பயத்தில் ஓடியது. நானும் நடராஜனும் கடைசியாய் உயிர்காக்க நடந்தோம். பின்னலே திரும்பிப் பார்த்தபோது வெறிச்சோடிக்கிடந்தது எழும்பூர் நிலையம். ஓட முடியாத - வேகமெடுத்து நடக்க முடியாத, அந்த ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் எங்களுக்கு முன்னால் நடந்து போனாள். ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை.


எந்த வெடிகுண்டும் இல்லை பயணிகள் திரும்ப வரலாம் என்று மறு அறிவிப்பு வந்தது. போலீசின் முந்தைய அறிவிப்பு எஞ்சிய இருக்கிற போராளிகளைப்பிடிக்கிற உத்தி என்பது பின்னால் ஆனந்தவிகடன் படிக்கும்போது அறிய நேர்ந்தது. நாங்கள் இருந்த வரிசை மறுபடி உருவானது. நாங்கள் அந்த ராணுவ வீரனின் அருகில் இருந்தோம். அவன் அவளிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் எதிர்த்திசையில் திரும்பிக்கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான். பல கட்ட சோனைக்குப்பின் இரண்டு மணிநேர தாமதத்தில் வைகை கிளம்பியது.


நிலைகுத்திய கண்களோடு கிடந்த நான்கு பேர்: நெடுநேரம் வரை வராமல் வந்தும் ஓடவசதியாய் நின்றிருந்த காவலர்கள்; தலைதெறிக்க ஓடிய கூட்டம்: அவர்களை முந்திக்கொண்டு ஓடிய ராணுவவீரன்: ஒரு பெண் போலீஸ்: கண்ணீர் நிறைந்திருந்த கர்ப்பிணிப் பெண்னின் கண்கள் எல்லாம் இன்று வரை கூட வருகிறது. அதுவரை என்னோடு வந்த கற்பிக்கப்பட்ட இலக்கணங்கள் அருவருப்பாய் கழிந்தோடியது புகைவண்டி கழிப்பறையினூடாக.





21.11.09

ஒரு பறவை - ஒரு கவிதை

ஆம்ப்ளேன்னா ச்சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு நடக்கனும், பொம்ப்ளேன்னா தலையக் குனிஞ்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா நடக்கனும் இப்படி மன்னன் படத்தில் ரஜினி பஞ்ச் டயலாக் சொல்லுவார். போதாது போதாது என எழுதிய காதல் பாட்டு வரிகளை மாற்றி தாங்காது என எழுதச் சொன்னாராம் எம்ஜியார். கார்த்திக்கின் கைலியைப்பிடித்து ப்ரியாமணி இழுக்க உலகமகா பருத்திவீரன் அல்லாடிப்போவான்.


சாத்தூர் ரயில் நிலையத்தின் முன்னால் கால்சரய் போட்ட ஒருவன் அந்த நாடோடிக் குடும்பத்துப் பெண்ணைச் சீண்டியதற்கு வாங்கிக் கட்டிக்கொண்ட கொடமானம் அவன் தலைமுறைக்கும் போதுமானதாக இருந்தது. நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்லை என் மனிதாபிமானத்தால் என்று சொன்ன வாத்தைகளின் அர்த்தம் யானையின் முதுகில் ஒரு சின்ன தொரட்டிக்கம்போடு மீசை முறுக்கும் நோஞ்சான் யானைப்பாகருக்குத் தெரியும். எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு எனச்சொல்லுவார்கள்.


ரொம்ப நளினமாக - கவித்துவமாக நான் பறவை எனப் பிரகடனப்படுத்துகிறது அன்புச்சகோதரி எஸ். தேன்மொழியின் கவிதை.


என்னை அங்கே தேடாதீர்கள்
என் இல் உள் நான் இல்லை
பறவையின் சிறகுகளில்
கட்டப்பட்டிருக்கும் என் வீடு.


கடலின் ரகசியங்களைகூட்டிப்
போகும் என் ஆளுமை.
அண்ட ஆகசங்களை
அடைகாக்கும் என் தாய்மை.


காட்டுப் பூக்களில்
கரைந்திருக்கும் என் பெண்மை.

20.11.09

மனசுக்குள் சலசலக்கும் பனங்காடு - ( நெடுங்கதையிலிருந்து ஒரு பகுதி )







ஆறுகச்சாமி நாடாருக்கு வெத்திலைதான் உயிர். அந்த அழுக்கேறிப்போன கைவச்ச பனியனும், வெத்திலை வாயும் தான் அவரது அடயாளம். வெத்திலைக்காக அவர் வெள்ளியிலான டப்பாவோ, காடாத்துணியில் அடுக்கு வைத்துத்தைத்த சுருக்குப்பையோ, வைத்திருக்க வில்லை. அதுக்கான தேவையும் இல்லாமலே அவருக்கும் வெத்திலைக்குமான தொடுப்பிருந்தது. அவருக்கு முன்னாலுள்ள மண் கொப்பறையில் ததும்பத் ததும்ப கருத்த வெத்திலை நிறைந்திருக்கும். கொஞ்சம் தள்ளி அஞ்சரைப்பெட்டியில் கொட்டப்பாக்கு கிடக்கும். சுண்ணாம்பிருக்கிற தகர டப்பாவும், அங்குவிலாஸ் போயிலையும் கைக்கெட்டுகிற தூரத்திலேயே இருக்கும். மேல்பரப்புக்கு வந்து மீன்கள் வாய் பிளக்கிற மாதிரி வாயைத்திறந்து கொர் கொர் என தொண்டையிலிருந்து சத்தம் எழுப்பி வெத்திலைச் சாறை வாய்க்குள் தக்கவைத்துக் கொள்வார்.


தூங்குகிற நேரம் போக எந்நேரமும், கன்னத்தின் இடது பக்கம் சிலந்தி மாதிரி பொடப்பா இருக்கும். சாப்பிட, வரக்காப்பி குடிக்க மட்டும் வெளியே வந்து வாய் கொப்பளிப்பார். அது தவிர நாள் முழுக்க சரப்பலகையிலே உட்கார்ந்திருப்பார். குத்துக்காலிட்டு, சம்மணம் கூட்டி, ஒருக்களிச்சு மாறி மாறி உட்கார்ந்து கொண்டு குண்டி காந்தலை தள்ளிப்போடுவார். கருங்காலி மரத்தாலான அந்தக் கல்லாப்பெட்டியில் அய்யாணார் கோயில் எண்ணச்சட்டி மாதிரி அழுக்கேறியிருக்கும். அதற்கு மேலே நீளவாக்கிலுள்ள கணக்கு நோட்டு இருக்கும்.


சாமுவேல் வாத்தியார், காலேஜ் மாடசாமி, பைபிளம்மா, பிரசண்டுசுந்தராசு, பேர்களில் தலைப்புபோட்டு அவருக்கான தமிழில் ஊச்சி ஊச்சியாய் கணக்கெழுதியிருப்பார். காலேஜ் மாடசாமி பொண்டாட்டி வந்து புஸ்த்தகத்தை தூக்கி 'இதென்ன மொலாளி கக்கூசுல எழுதுற கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் கணக்கு நோட்டுல எழுதிவச்சிருக்கீரு எங்க மாமா பேரு அஞ்சந்தான'. என்று சொல்லுவது குறித்தெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அதற்கவர் மீண்டும் மீன் வாயைப்பிளக்கிற மாதிரி சிரிப்பார். எதிரே நிற்கிரவர்கள் மீது செகப்பா தூறல் விழும். அவர் எழுதுகிற அ வுக்கு கு வுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.


'எனக்கென்ன தாயி ஓங்க வீட்டுக்காரு மாறி காலேஜிப்படிப்பா கெட்டுப்போச்சு அந்தக்காலத்துல எங்கைய்யா பனைக்கி போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போவாரு பிள்ளமாரு வீட்டுப்பிள்ளைகளெல்லாம் பெஞ்சில ஒக்காரும் நாங்க பின்னாடி தரையில அதுக்கும் ப்஢ன்னாடி ஒங்க தெருக்காரப்பிள்ளைக ஒக்காரனும், அதெல்லாம் படிப்பாம்மா' வெத்திலைச்சாறை கொர் கொர் என்று காறி வெளியில் வந்து செகப்பு உருண்டையாய் வெத்திலையைத் துப்பி விட்டு திரும்பவும் ஆரம்பிப்பார். அது இரண்டு தலைமுறைச் சரித்திரம்.


அந்தக் காலத்தில் ஆறுமுகச்சமியின் அய்யா இசக்கிமுத்து நாடார் பனையேறுவதில் நாடறிந்த கெட்டிக்காரர். சுத்துப் பட்டியிலெல்லாம் "பனைக்கி இசக்கி" என்று சொலவடை சொல்லுகிற அளவுக்கு பெரிய வித்தைக்காரர். காலாக்கை இல்லாமல் நிமிசத்தில் பனையுச்சிக்குப் போவதும். கண்மூடி முழிக்குமுன்னே பதினிக்கலயத்தோடு கீழே நடப்பதுவும் பார்ப்பதற்கு கண்கட்டி வித்தை மாதிரி இருக்குமாம். சில நேரங்களில் அருகருகே இருக்கும் பனைகளில் ஒன்றிலிருந்து இறங்காமலே இன்னொரு மரத்துக்குத்தாவி விடுவதால் அவருக்கு ''மாயாவி'' ங்கிற பாட்டப்பெயரும் உண்டாம். அந்தக்காலத்தில் பனை ஏறத் துவங்குகிற எல்லாரும் அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டு விட்டுத்தான் பனையேறுவார்களாம்.


அதுமட்டுமில்லெ தெக்கத்தி கம்புக்கு அவராலாலேயே பேர் வருமளவுக்கு கம்பு விளையாட்டில் அவரே பல புதிய அடிகளையும் அடவுகளையும் உருவாக்கினார். அவர் கம்பு சுத்துவதைப்பார்க்க கொடுத்துவைக்கணும். கம்பைக்கையில் வாங்கி குருவணக்கம் சொல்லி தரைதொட்டுக் கும்பிடுகிற வரைதான் கம்பும் கையும் கண்ணுக்குத்தெரியும். சுத்த ஆரம்பித்ததும் காத்தைக்கிழிக்கிற சத்தம் மட்டுமே உய்ங் உய்ங் என்று கேட்டுக்கொண்டே இருக்குமாம். சில நேரங்களில் சுத்தியும் பத்து எளவட்டங்களை நிற்கச்சொல்லி அவர்களிடம் கல்குமியைக் கொடுத்து எரியச்சொல்வாராம். எல்லாக் கல்லும் கம்பில் பட்டு சிதறுமாம். அவரிடம் வெங்கலப் பூன்போட்ட பிரம்பு போக, சுருள் வாளும், மான் கொம்பும் கூட பள பளப்பாக இருக்குமாம். அந்தக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் கண்களுக்குள் ஒரு பனைக்கூட்டம் கிடந்து சலசலக்கும்.


சின்னப்பிராயத்தில் கஞ்சி கொண்டு போகும்போது ஒவ்வொரு பனைமரத்தையும் எண்ணிக்கொண்டே போவதும் கூட ஆறுமுகச்சாமியின் விளையாட்டுகளில் ஒன்று. முதல் முதலாக அய்யாவோடு பனைக்கூட்டத்துக்குள் நடக்கும்போது காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத்தெரியும். ஒரு பயம் உண்டாகும். ஆனால் அய்யா பக்கத்திலிருப்பதால் அந்தப்பயம் தெரியாது. பழகிப்போன பிறகு பனைகளெல்லாம் சேக்காளி ஆகிப்போனது. அந்தச்சலசலப்பு அவனைக் குசலம் விசாரிக்கிற மாதிரியே இருக்கும். அது அப்பாவின் சேக்காளிகள். அவருக்குப்பிடித்த அந்த மரத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கஞ்சிச் சட்டியை இறக்கி வைத்து விட்டு அன்னாந்து பாளைகளையும், நுங்குகளையும் பார்த்து பார்த்து தனக்குள்ளே பேசிக்கொள்வது.


திரும்பி வரும் போது எக்குப்போடு ஆறடி ஏழடி ஏறி, பிறகு சறுக்கிக் கீழே விழுந்தது எல்லாம் ஆறுமுகச்சாமிக்கு நினைவுக்கு வந்து போகும். பனையோலைக் குச்சல் தான் வீடு. பனங்காய் வண்டியும், பனமட்டைச் செருப்பும் அய்யா செய்து கொடுப்பார். அந்த வீட்டில் எப்போதும் பதினி வாடையும் கருப்பட்டி வாசமும் அவர்களோடே குடியிருக்கும். பதினிக்காலம் போனபின்னால், பனம்பழம். ஒரே ஒரு பழம் கிடந்தாலும்கூட கனவிலும் கூட இனிக்கிற வாசம் அந்தப் பிரதேசம் முழுக்க பரவியிருக்கும். அப்புறம் அவிச்ச பனங்கிழங்கு. இப்படி திங்கவும், விளாத்திகுளம் சந்தையில் கொண்டுபோய் விற்கவுமாக வருசம் பூராவும் அந்தப் பனைக் கூட்டம் அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அய்யாவும் வீடு திரும்புகிற போது பதினிக் கலயத்துக்குள்ளோ, கையிலோ பண்டமில்லாமல் வரமாட்டார். காலையில் பனங்காட்டுக்குப் போகிற அய்யாவோடு இனிப்பு வடைகள் எப்படி வந்தது என்கிற சந்தேகம் தனக்குப் பிள்ளைகள் பிறக்கிற வரை தீராமலே இருந்தது.

18.11.09

கலவரத்தில் நசுங்கிய இயல்பான மனிதாபிமனம்.

மதுரையில் துணிக்கடையில் ஒரு சாத்தூர்க்காரரைப் பார்த்துவிட்டால் உடனே எதோ பொக்கிஷம் கிடைத்தது போல அவர்களைப் பற்றிக் கொள்ளச் சொல்லுகிறது. நீங்க பைபாஸ் ரோட்ல அந்திக்கட வச்சிருக்கீங்கள்ள என்று முகமன் சொல்லிக்கொண்டு சிநேகம் தொடரச் சொல்லுகிறது. சென்னையில் யாரையாவது விருதுநகர் மாவட்டத்து மனிதரைச் சந்திக்க நேர்ந்தால் எதோ உறவுகளைச் சந்திக்க நேர்ந்தது போல ஆகிவிடுகிறது. குண்டூர் தாண்டிவிட்டாலோ ஒட்டு மொத்த தமிழகமும் ஓரினம் ஆகிவிடுகிறது.


இப்படித்தான் கட்டாக் ( ஒரிஸ்ஸா) அகில இந்திய மாநாட்டுக்குப் போகும்போது நாங்கள் 48 பேர் ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியை ஆக்ரமித்துக் கொண்டோம். கூத்தும் கும்மாளமுமாக கழிந்த ரெண்டு நாள் ரயில் பயணம். யாராவது ப்ரெட் ஆம்லெட் வாங்கினால் அது பல பங்குகளாகப் பிரிக்கப்படும். சிகரெட் குடிக்கிறவர்கள் ஆரம்பத்தில் கர்ணர்களாகவும் நாள் ஆக ஆக 'மாந்தோப்புக்குயிலே சுருளிராஜனாகவும்' எதிர்ப் பரிமாணம் எடுக்கிற விந்தைகள் நடந்தது.மிக நீண்ட கிருஷ்ணா ஆற்றுப் பாலத்தைக் கடந்து ரயில்போகையில் அப்படியே அந்தரத்தில் மிதக்கிற ஆர்ப்பரிப்பு தொற்றிக்கொண்டது. விசாகப்பட்டிணம் நிலையத்தில் சுடச்சுட அவிச்ச முட்டைவாங்கி மிளகாய்ப் பொடி சேர்த்து தின்ற போது பலபேருக்கு பல்விளக்கினோமா எனும் சிந்தனையில்லாமல் போனது.


தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.


சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.


டெல்லி கரோல்பாக் வீதியில் போய்க்கொண்டிருக்கும் போது 'எலே ஞொக்காலி' எனும் வார்த்தையக் கேட்டுப்பாருங்கள் விகல்பமில்லாத தமிழ்ப்பாலருந்திய சந்தோசம் வந்து சேரும். அங்கிருந்து எஸ்ற்றிடி போட்டு வீட்டுக்காரியுடன் பேசும்போதுபெருகும் கண்ணீரும் கதகதப்பும் "எப்ப வருவீக" என்று கேட்கும் போது சுருங்கிப்போகும் உலகத்தூரம். தூரக்கிழக்கு நாடுகளில் எப்படியெனத் தெரியவில்லை இன்னும் அடர்த்தியாக இருக்கலாம்.


ஒரு நாள் சென்னை ஜெமினி பாலத்துக்கிழே இருக்கும் எமரால்டு தியேட்டரில் மமூட்டியின் 1932 படம் பார்க்கப்போனோம்.மாப்ளாக் கலவரத்தின் தியாகத்தோடு ரத்தம் தோய்ந்த வரலாறு அது. நான், மாது, பீகே,சோலைமாணிக்க அண்ணன் எல்லோரும் நுழைவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். அந்த வரிசையில் வேஷ்டி கட்டிய நபர் ஒருவரைப் பார்த்தேன். தெரிந்த முகமாக இருந்தது. மூளையைக் கசக்கிக் கொண்டு இருந்த போது மம்மூட்டியின் ' தின ராத்திரங்கள் ' பற்றி மாது சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சில நிகழ்வுகளைச் செறிவூட்டிச் சொல்லுவதைக் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு படைப்பாளி.


சற்று திரும்பிப் பார்த்தபோது அந்த வேஷ்டிக்காரர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் நம்மை வச்சகண் வாங்காமப் பார்த்தா அது நம்ம முதுகில் குறுகுறுக்குமாம் கிராமத்தில் யாரொ சொல்லக் கேட்டது. அந்த வரிசையில் ஒரு அழகான மண்ணிக்கணும், ஒரு நேர்த்தியாக உடை உடுத்திய வாலிபனும் இன்னொரு விபச்சாரப்பெண்ணும் நொடியில் கண்டதும் காதல் கொண்டார்கள். பிறகு இடைவேளைக்கு முன் அவள் அவனது கைக்கடிகாரம்,மணிப்பர்சுடன் எஸ்கேப்பினாள் அது கிடக்கட்டும் . அந்த வேஷ்டிக்காரர் இப்போதும் கூட குறுகுறு வெனப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தனியே போய் யோசித்தேன். ஆமாம் சாத்தூர் முக்குலாந்தக் கல்லில் ஒரு ஆயத்த டெலிபோன் பூத் வைத்திருந்தவர் அவர், எனது நண்பனின் நண்பன் அவரது உடன் பிறந்தவன்.


விடைகிடைத்த சந்தோசத்தில் நேரே போய் ' நீங்க சாத்தூர் தானே ' என்று கேட்டேன். மருண்டு போய் இல்லை என்றார் நீ யாரு என்று கேட்டார் சொன்னேன் நான் சாத்தூரே இல்லை என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே போனோம். நான் மாதுவிடமும் பீகேவிடமும் இதைச்சொன்னேன். அப்போதும் கூட மறைந்திருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். படம் ஆரம்பிக்குமுன்னாலேயே தியேட்டரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. எனது கண்டுபிடிப்பும், விடையும் சிதைந்து போய் நான் மீண்டும் மூளையைக் கசக்கினேன்.


இரண்டு தரப்பிலும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்களைப்பலி கொண்ட ஒரு கலவரம் நடந்தது சாத்தூரில்.சகஜ வாழ்வு பாதிக்கப்பட்டு ஒரே ஊரில் இருந்த தெருக்கள் வேறு வேறு நாடுகள் போலானது ஓவ்வொரு தெரு முனையிலும் காவலர்கள் உட்கார்ந்து பாண்டியாடிக் கொண்டிருந்தார்கள். சாத்தூரின் தண்ணீர்ப் பஞ்சம் மறந்துபோனது. இரவில் குடங்களோடு தண்ணீருக்கு அலைய பயம் தடுத்தது. நாய்களும் காற்றும் மட்டுமே பயமில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது. அப்படி ஒரு கலவரம் சாத்தூரில் முன்னதாக நடந்திருந்தது.


நெடுநாள் கழித்து சாத்தூரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் தொடர்புடையவர் பட்டியலில் அவரும் ஒருவர் எனத்தெரிந்து கொண்டபோது இன்னும் பல விடை கிடைக்காத மனிதாபிமானக் கேள்விகள் என்னைச் சூழ்ந்துகொண்டது.

17.11.09

சச்சின் - தாக்கரே அவியல், பாப்லோ நெருடா - பால்பாயாசம்

''மும்பை இந்தியர்கள் எல்லோருக்கும் சொந்தமானது"இப்படிச் சொன்னதன் மூலம் நட்சத்திர மட்டை ஆட்டக்காரர் தெண்டுல்கர் பிரிந்துகிடக்கும் சிவசேனை மற்றும் மஹராஸ்ட்ர நவநிர்மான் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.


'' இது சச்சினுக்கு நல்லதல்ல, இது போன்ற கருத்துக்களைக் கூறி அவர் தனிமைப்பட வேண்டியதில்லை, ஆட்ட மைதானத்தின் எல்லைக் கோட்டிலிருந்து வெளியேறி அரசியல் எல்லைக் கோட்டிற்குள் அநாவசியமாக நுழைகிறார் " என்று கூறி பகிரங்க மிரட்டலை தனது சாம்னா இதழின் வழியே பிரகடனப்படுத்துகிறார் பால்தாக்கரே.


மராட்டியம் மராட்டியர்களுக்கு, மும்பை சிவசேனைக்கு, மராட்டியத்தில் இருக்கும் அரசு காலியிடங்கள் மராட்டியர்களுக்கு,இப்படியே நீண்டுகொண்டு போய் இப்போது அரசியல் ரவுடிகளுக்கு மட்டும் தான் என்பதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்பதுபோல அறிக்கை விட்டிருக்கிறார். சச்சின் தனது விளையாட்டில் சேகரித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் இந்திய ரூபாயின் மேல் கணிசமான தொகைக்கு கருப்பு மை பூசியிருக்கிறார். அது எந்தக் காலத்திலும் விவாதப் பொருளாகாது. நீ அங்கே இருந்து சம்பாதித்துக்கொள் எனது ஏரியாவுக்குள் வராதே என்பதைப் போல மிரட்டல் வந்திருக்கிறது.


எல்லைகள் தாண்டக்கூடது எனும் பழைய law of retaining discremination விதியின் நடைமுறையை அர்த்தத்தை பால்தாக்கரே குண்டாந்தடியின் குரலில் கூறுகிறார். பிரிவினை வாதத்தின் உடனடி உதாராணம் பங்காளிச்சண்டை.


0


அது கிடக்கட்டும் .....


எல்லைகளுக்குள் அடங்காதவர்கள் கவிஞர்கள். அப்படி ஒருவன் புத்தகம் பற்றிச் சொன்னதைப் பாருங்கள். சிலிக்குயில் எனப் போற்றப்படும் பாப்லோ நெருதா. விருதுகளும், வெகுமதிகளும் ஆசையோடு 'என் தோழனே' என நீளும் சுரங்கத் தொழிலாளியின் கையில் ஒட்டியிருக்கும் அலுமினியத் துகள் என் கைக்கு வருவதையே விருதாகக் கருதுவேன் என்று சொன்னவன் பாப்லோ நெரூதா.


புத்தகமே,

என் கவிதைகள்

கவிதைகளைத் தின்பதில்லை.

புத்தகமே,

காலணியில் புழுதி படிய

சாலைகளில் நான் நடப்பேன்

நீ உன் நூலகத்துக்கு

திரும்பிப் போ.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்து

கற்றுக்கொண்டேன்.

காதலை

ஒரு முத்தத்திலிருந்து

கற்றுக்கொண்டேன்.


16.11.09

அறியாமையின் மூலதனத்தில் கட்டிய கோட்டைகள்


இந்திய விடுதலைக்குப் பின் பிராந்திய வாரி மாநிலங்கள் எனும் கொள்கை மாற்றப்பட்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மஹாராஷ்ட்ரா ப்ரசிடென்சி மாநிலத்தில் இருந்த குஜராத்தும், மஹாரஷ்ற்றாவும் 1960 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய அந்நாளைய பம்பாய் நகரின் பெருமுதலாளிகள்குஜராத்திகளாகவும், மார்வாரிகளாகவும் மட்டுமே இருந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் தங்களை மூளை உழைப்புக்கு உட்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொண்டார்கள். அரசாங்க,தொழில் நிறுவண, அதிகாரத்தில் தென்னிந்தியர்களே பெருவாரியாக இருந்தார்கள். இதுவே அவர்களின் சொந்தங்களை வரவழைத்து அலுவலக பதவிகளில் இருத்திக்கொள்ள ஏதுவானதாக இருந்தது.


மும்பைவாசியான பாலசாஹேப் தாக்கரே எனும் கருத்துப்பட ஓவியர் குடியேற்ற வாசிகளை நையாண்டி செய்து மர்மிக் வார இதழில் படங்கள் வெளியிட்டதன் மூலம் பிரபலமனார். அந்த பிரபலத்தின் மூலதனத்தில் 1966 ஜூன் மாதம் 16 ஆம் தேதி சிவசேனைக் கட்சியை ஆரம்பித்தார். மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு துவக்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு கட்சியாகப் பரிணமிக்குமுன் கணக்கிலடங்கா வன்முறைகளை தென்னிந்தியர்கள் மீது பிரயோகித்தது. தென்னிந்தியர்களின்உணவுவிடுதிகளை கட்டாயமாக மராத்தியர்களுக்கு கைமாற்றியது.


அறுபதுகளில் பம்பாய் தொழில் நகரத்தின் தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்யூனிஸ்டுகளை சீர்குழைக்க தொழிலதிபர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்தது. அடிப்படையில் இந்துத்துவ கொள்கைகளோடு கிளம்பிய சிவசேனாவுக்கு கம்யூனிஸ்டுகளை அழிப்பது லட்டு சாப்பிடுகிற மாதிரியான ஒப்பந்தமானது. 1970 ஆம் ஆண்டு தாதர் பகுதி சட்டமன்ற உறுப்பினர் கிஷன்தேசயைப் படுகொலை செய்யப்பட்டார். உலகமெங்கும் வலதுசாரிகளின்வளர்ச்சி பொதுவுடமை வாதிகளின் உயிர்ப்பலியினாலேயே நிர்மாணிக்கப்படுகிறது.


1995 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிவசேனைக் கட்சியில் சந்தோசங்களும், வெறுப்புகளும் மும்பை நகரத்தின் இயலபை மோசமாக உலுக்கியது. பால்தாக்கரேயின் மனைவி மீனாத்தாய் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாக புரளி கிளப்பி இரண்டு வாரங்கள் மராட்டியம் சிதைக்கப்பட்டது. 2005 ல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைக் கண்டித்து பால்தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரே '' மஹராஸ்ட்ர நவ நிர்மான் சேனா'' என்கிற புதுக்கட்சியை ஆரம்பித்தார். இரு பிரிவுகளும் பலமாக மோதிக்கொண்டன. இருப்பினும் தனியே வந்த ராஜ்தக்கரே அவர்களின் பிரதான விதை முதலான தமிழர், கம்யூனிஸ்ட், எதிர்ப்பை விட்டுக் கொடுக்கவில்லை.

2008 அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற ரயில்வே சர்வீஸ் கமிசன் தேர்வெழுத வந்த பீகாரிகளையும், குஜராத்திகளையும் தேர்வு அரைக்கு வெளியே இழுத்துப் போட்டு அடித்தது எம் என் எஸ் கட்சி. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் திரு ஆஸ்மி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது அவரை சட்டமன்றத்துக்கு உள்ளேயே தாக்கியது. எம் என் எஸ் கட்சி இப்போது பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி புது பூதத்தைக் கிளப்பியிருக்கிறது. நடைபெறவிருக்கும் 1100 எழுத்தர் பதவிக்கான தேர்வில் மராட்டியகர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.


ஒரே நாடு ஒரே மதம் எனும் சொல்லும் கூட ஒரு தேர்தல் கால காரட் என்பதை அவர்கள் திட்டவட்டமாக நிரூபிக்கிறார்கள். அஸ்ஸாமில்,கர்நாடகாவில்,மும்பையில்,காவிரி,முல்லைப்பெரியாறு என தேசமெங்கும் தங்கள் மண்ணின் மைந்தர் கோஷங்களோடு கிளம்பியிருக்கிறது பிரதேச வெறிக்கூச்சல் பரிவாரங்கள்.


யாதும் ஊரே யவரும் கேளிர், திரைகடலோடியும் திரவியம் தேடு, கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், சரே ஜகாசே அச்சா,இந்தூஸுத்தான் ஹமாரா, ஜனகனமங்கள தாயக ஜயகே, எனும் பாடல்களில் பொதிந்து கிடக்கும் உணர்வுகளைப் பிரித்தெரியும் இந்த வெறியின் பின்னால் அப்பட்டமான சுயலாபம் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. அதைச்சரி செய்யவோ தடுக்கவோ எந்த திட்டமும் இல்லாது வெற்றுடம்பாய் கிடக்கிறது சமகால அரசியல் . எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க லாயக்கற்றுக் கைபிசைகிறது மத்திய அரசு. இது ஒரு புறம்.


ஆயிரமாயிரமாண்டு காலம் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், தாழ்த்தப்பட்ட ஜனங்களின் உயிர் வாழ்வாதாரமான கோரிக்கைகளை ஒட்டுமொத்த பலத்தைப் பிரயோகித்து அடக்குகிற சூது இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரட்டை அனுகுமுறைகளுக்குள் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறியாத ஜனங்கள்தான் இன்னும் பாரதி சொன்னது போலகஞ்சி குடிப்பதற்கிலாமலும் அதன் காரணம் அறியாமலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் அவர்கள்தான் என்பது சதம் இடம் அடைக்கிற இந்தியர்கள்.

நன்றி, விக்கிபீடியா,ஆனந்த் டெல்தும்டே( கயர்லாஞ்சி ),கூகுள் செய்தி

14.11.09

பொதுவின் தூதர்கள்.







தரையை நோக்கி நீளும்
விழுதின் நுனியில் பூத்திருக்கும்
தளிர் மஞ்சள் நிறத்தில்
குழந்தைகளின் பிஞ்சு விரல்களையும்.

இதுவரை எழுதப்படாத
சொல்கொண்டு சிதறும்
வார்த்தைகளில் உலகமகா
இசை மீட்டலையும்

முகத்தில் ஒண்ணுக்கிருந்த
பொக்கிஷ நாட்களைச்
நாட்களைச்சேமிக்க பனித்த
உன்சிரிப்பாணியாய்கிடக்கிற
குழந்தைகள் உலகம்.

எந்த தேசத்துக்
குழந்தையின் புகைப்படமும்
எனது குழந்தையின் சாயலைப்
பிரதிபலிக்கிற பொதுவின் தூதர்களாகவும்


காக்கைக்கு தன்குஞ்செப்படியோ


உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு.