7.8.11

களவு போகுதடா.


அந்த சம்பவம் நடந்து ஒரு மூன்று நாட்கள் ஓடி விட்டது. அந்த குடியிருப்பில் இருக்கிற எல்லோருக்கும் அது பேசு பொருளாகவும்  மாறிப்போனது. சம்பவம் நடந்தபோது வயதான மூதாட்டி மட்டும் இருந்தார் என்று குடும்பத்தின் ஒருதரப்பும்.இல்லை மகனும் மருமகளும் கூடவே இருந்ததார்கள் ஆனால் அதை போலிசார் மறைத்துவிட்டார்கள் என மறுதரப்பும் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அது பிரதான பேசுபொருளாக இருந்தது.களவு போன நகைகளின் எடைகுறித்து மேலும் கீழுமான தகவல்கள் வந்துகொண்டே இருந்தது.இன்னொரு வீட்டில் திருடர்கள் எப்படி வந்து பேசினார்கள் எப்படி கவனத்தை திசை திருப்பி பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்தார்கள் என்று நடித்துக் காண்பித் தார்கள். வந்தவர்களில் ஒருத்தர் கூட நடுவயதுக்காரன் கூட இல்லை எனவும் பார்த்தால் களவாணிகள் போலவே இல்லை எனவும் திருடர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார்கள். போலீசார் மறுநாள் வந்து கூடுதல் காவலர்களோடு ரோந்து சுற்றினார்களாம் தெருத்தெருவாக நின்று ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரஸ்தாபித்தார்களாம். இவ்வளவும் பேச்சும், தகவல்களும் பரிவர்த்தனைகளும் அவரவர் வீட்டுக்குள்ளே தொலைபேசியை கவனித்தபடியே பரிமாறிக்கொள்ள பழகிவிட்டிருந்தது அந்த மத்திய தர குடியிருப்பு.

காய்கறி வாங்க கடைக்கு வரும் நேரங்களில்.தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் அவதானிப்பில் கசிந்த இந்த தகவல்கள் ஒரு முழுநேர பொழுதுபோக்கின் இடையில் கொடுக்கும் விளம்பரம் போலவோ இல்லை இடையில் கொறிக்கும் தின்பண்டம் போலவோ கறைந்து போனது.இன்னும் ஒருவாரத்துக்கு, கொஞ்சம் கூடப்போனால் அடுத்த பரபரப்பு வரும் வரை பேசப்படலாம். இல்லை மகனின் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தயார் செய்து அனுப்புகிற கவலையில் மறந்து போகலாம். வாழ்வை இழந்து ஒரு ஆயுட்கால விபரீதத்திற்கு தங்களை தயார்ர் செய்துகொண்ட அந்த இளைஞர்கள் பக்கமோ,தங்கள் ஆயுட்கால சேமிப்பை இழந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்
அந்த மத்திய தரக் குடும்பத்துப் பக்கமோ நின்று பேசாமல் இங்கு கருகிப்போன சமூக விலங்கின் அணிதிரட்டலை நினைத்து வேதனை மட்டுமே மேலோங்குகிறது.

மிக அருகருகே இருக்கும் வீடுகளில் தனது சமயோசிதத்தை மட்டுமே மூலதனமாக்கித் திருடிச்சென்ற அந்த இளைஞர்கள் அவதானிப்பின் மிக முக்ய புள்ளி ஒருவனுக்கொருவன் கைகொடுக்கமுடியாத தூரத்தில் இந்த மதியதரவர்க்கம் இருக்கிறது என்பதே. எவ்வளவு பெரிய சத்தம், அவலச்சத்தம் வந்தாலும் சன்னலை மட்டும் திறந்து பார்க்கும் சிங்கங்களும் புலிகளும் நிறைந்த குடியிருப்பு என்று மிகத் துள்ளி யமாகக் கணக்கெடுத்திருக்கும் அந்த இளைஞர்களை ஏமாற்ற விரும்பாத எனது மக்கள். அவர்கள் தொலைக்காட்சி பார்த்து லயித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு டெம்போ வேனைக் கொண்டுவந்து நிறுத்தி எல்லா தட்டு முட்டு சாமான்களையும்  அள்ளிப் போட்டுக் கொண்டு போன நிகழ்வுகள் மிக இயல்பாக நடந்திருக்கிறது. இப்படித்தான் தெருத்தொடங்கி,ஊர் தாலுக்கா,மாவட்டம்,மாநிலம் என விஸ்தரித்துக்கொண்டு போகிறது இந்த வேற்றுமையின் ஒற்றுமை. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து ரொம்பச் சுளுவாகக் களவாண்டு போவதற்கு ஏதுவாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா. இப்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே களவாட விடும் அளவுக்கு தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது கணினி இந்தியா.வீரத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இந்தியர்கள் அன்றும் இன்றும் உயிரோடுதான் இருந்தார்கள்,இருக்கிறார்கள் என்பதை இறுதியாகச்சொல்லி முடிக்கிறேன்.

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பகிர்வுக்கு நன்றி...

நிலாமகள் said...

வீரத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இந்தியர்கள் அன்றும் இன்றும் உயிரோடுதான் இருந்தார்கள்,இருக்கிறார்கள்//

சிரிப்பாய் சிரித்தாலும் ஆறாத‌ வ‌யிற்றெரிச்ச‌ல் தான்!

அன்புடன் அருணா said...

களவு போனது
களவு போய்க்கொண்டிருக்கிறது
களவு போகும் :((

க.பாலாசி said...

போகிறப் போக்கில் ஒரு சாட்டை அடி...

aotspr said...

"நல்ல முயற்சி".
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

ஓலை said...

Sad affairs.

sila varigal nachnnu irukku. Nice.

vasan said...

ஏமாற்றுப‌வ‌ர்க‌ளை 'என்ன‌ திற‌மையா பண்ணிருக்கானுக‌ ... பாத்தியா' எனப் பாராட்டி பிர‌மிக்கும் ச‌மூக‌த்தில் வாழ்கிறோம் திரு.காம‌ராஜ். இல்லையெனில் நாட்டின் செல்வத்தை திருடி, அந்நிய‌ வ‌ங்கிக‌ளில் சேர்த்து வைத்திருப்ப‌வ‌ர்க‌ளை த‌லைவ‌ர்க‌ளாக‌ இன்னும் த‌லையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, நாட்டை அவ‌ர்க‌ளிட‌மே ம‌றுப‌டியும், ம‌றுப‌டியும் தாரை வார்ப்போமா?