27.1.10

குடியரசுக் கொண்டாட்டமும் சில செய்திகளும். 200வது பதிவு.

பனி சூழ்ந்த காலை நேரத்தில்  டெல்லி செங்கோட்டை தொடங்கி உள்ளூர் கம்மவார் நாயுடு பெண்கள் மேநிலைபள்ளி வரை கம்பத்தில் கீழ்நிற்றல் பாரீர் காணரும் வீரர் திருக்கூட்டம் எனத்தேசியக் கொடியை அண்ணாந்து பார்த்துக்கொடிருந்தது இன்னொரு இந்தியா. பின்னர் மாநிலம் தோறும் சாதனை அணிவகுப்பு நடந்தது அதை அரசுத்தொலைக்காட்சி நேரடியாக ஒலிபரப்பயது.அரசின் அணுமதிபெற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் ஒரு வரிச் செய்தியாகக் கடந்துபோயின.

அதே அதிகாலையிலே கலை கட்டிவிட்டது தொலைக்காட்சி அலை வரிசைகள்.நேற்றுவந்த காம்பியரிலிருந்து இசங்கள் பற்றிப்பேசும் கோபிநாத் வரை சினிமாவுக்குள் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் கிடந்தார்கள்.எல்லா அலை வரிசையிலும் தமிழ்த் தெரியாத ஒரு பதுமை உட்கார்ந்துகொண்டு அணிச்சையாக சிரித்துக் கொண்டும் அணிச்சையாக விரித்துப்போட்ட கூந்தலை ஒதுக்கிக்கொண்டும் இருந்தது.திரைப்படம் எனும் ஊடகம் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதை அறிவார்ந்த பேட்டிகள் விளங்கப்பண்ணியது. தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட கிண்டலும்,கேலியும் உண்மையில் பார்வையாளர்களைப் பார்த்து வக்கணம் காட்டுவதாகவே தெரிகிறது.

சோப்பு சீப்பு கண்ணாடிக் காரர்களோடு சேர்ந்து வேலம்மாள் கல்வி நிறுவணமும் விளம்பரத்தில் போட்டி போட்டது. பெயர் மட்டும்தான் வேலம்மாள். கட்டணம் எல்லாம் டாடா - பிர்லாம்மாள். எங்காவது இரைச்சலான சத்தம் கேட்டால் என்ன இங்க சந்தக்கடையா நடக்கு என்று ஒரு விமரிசனம் வரும்.அந்த இரைச்சலை ஐந்து நிமிடத்துக் கொருதரம் ஓய்வில்லாமல் வழங்கியது விளம்பரங்கள்.இடையிடையே குடியரசைக் கொண்டாடுவோம் என்கிற சத்தமும் கேட்டது அதுவும் அந்த பதுமைகள் அணிச்சையாக முடியை ஒதுக்குவதுபோலவே இருந்தது.

பிரபலமாகாத ஒரு அலைவரிசையில் பொதுமக்கள் ஒரு  பேட்டியில்,மாணவி ஒருத்தி வேற்றுமையில் ஒற்றுமை என்று மணப்பாடப்பகுதியை ஒப்பித்தாள். அதே நேரம் தான் மீண்டும் கர்நாடகத்தில் மைசூர் மாவட்டம் ஹின்கலில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் சூறையாடப்பட்டிருக்கிறது. சாலையோர வியாபாரி ஒருவர் சின்னவெங்காயத்தை நிறுத்துப் போட்டுக் கொண்டே 'குடியரசுண்ணா என்னன்னு தெரியலீங்க' என்று அப்பாவியாகச் சொன்னார்.அவர் உண்மையில் எல்லோரையும் விட நியாயமானவர்.பசியோடிருப்பவனுக்கு உணவு தெய்வம் என்று சொன்னார் புரட்சித்துறவி விவேகானந்தர்.ஒரிஸ்ஸாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அபாயமாக அதிகரிக்கிறது. இது வரை பசிக்கிறையானோர் எண்ணிக்கை 400 என்பது புள்ளிவிபரத் தகவலல்ல அவமானத் தகவல்.

இருபத்துநான்கு மணிநேர இரைச்சலில் இந்த செய்திகள் காணாமல் போய்விடுகின்றன.மாய்மால விளம்பரத்தில் வளர்ந்து வரும் வறுமை கவனப்படுத்தப் படாமல் போகிறது.இது விதிவிலக்கல்ல,இது ஒதுக்கிவிடக்கூடிய அல்லது கடந்துவிடக்கூடிய செய்திகளும் அல்ல அரசு கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டிய தகவல்கள்.குடியரசு
மக்களால் ஆனது.


நண்பர்கள்,பார்வையாளர்கள்,தொடர்ந்து பின்னூட்டம் வழியே என்னை ஊக்குவிக்கும், பின்தொடர்பவர்கள் மற்றும் தமிழ்மணம்,தமிழிஷ் குழுமம் அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இது எனது 200 வது பதிவு.

28 comments:

மாதவராஜ் said...

ஆரவாரமில்லாத, அடர்த்தியான எழுத்துக்கள் உன் அடையாளம். மண் வாசனை கொண்ட உன் மொழி மிக வசீகரமானது. எழுது தோழனே!

வாழ்த்துக்கள்.

na.jothi said...

வாழ்த்துக்கள் அண்ணா 200வது பதிவுக்கு

உயிரோடை said...

200 ப‌திவிற்கென‌ ஸ்பெச‌ல் வாழ்த்துக‌ள் அண்ணா

க.பாலாசி said...

//இது வரை பசிக்கிறையானோர் எண்ணிக்கை 400 என்பது புள்ளிவிபரத் தகவலல்ல அவமானத் தகவல்.//

வருத்தத்திற்குரிய தகவலும்கூட.

நல்ல இடுகை...

200வது இடுகைக்கும் வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள் காத்திருக்கிறோம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

அண்டை நாடுகளுடன் பிணக்கு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல், குண்டு வெடிப்பு என்ற ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், உடனடியாக, ஒன்றினைவு, தேசிய உணர்வு, நாட்டுப் பற்று நான்இந்தியன் என்ற எல்லா வெங்காயங்களும் பீறிட்டு எழும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொஞ்சம் குறைவான தேசிய உணர்வே எல்லோருக்கும் இருந்ததாக தோன்றுகிறது.

மக்களை அச்சுறுத்தும் ஏதாவது நிகழ்வுகளை ஒட்டி வரும் சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், தேச பக்தியுடனும் கொண்டாடப்படும்.

மற்றபடி ஒரு சாதாரண சூழ்நிலையில் வரும் சுதந்திர, குடியரசு தினம் என்பது வழக்கமான ஒரு விடுமுறைநாளே....

ஓரிரண்டு நாட்களுக்கு முன்னால், பாகிஸ்தானுடன் ஒரு கிரிகெட் மேட்ச் விளையாடி, அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலோ, அல்லது மும்பய், டெல்லி பகுதியில் ஏதாவது விபத்தாக ஒரு குண்டு வெடித்திருந்து, அதற்கு காரணம் ஒரு முஸ்லீம் என்றுமிருந்திருந்தால் கூட இந்த குடியரசு தினம், மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கும்..

கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே-நாளில் மறப்பாறடி...

ஆரூரன் விசுவநாதன் said...

200 பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழர்

லெமூரியன்... said...

ஆஹா....!

200 பதிவா..! :-)

வாழ்த்துக்கள் அண்ணா...!

லெமூரியன்... said...

குடியரசு இங்கு கேலிக் கூத்தாக்கப் பட்டு கொண்டிருக்கிறது...!

உணவளிக்கும் வயல்கள் வீடுகளாகின்றன...!

குடி தண்ணீர் வழங்கும் ஆற்று மணல் சூரையாடபடுகிறது...!

தட்டிகேட்க்கும் காவல்துறை அதிகாரி பட்டப்பகலில் கொல்லப்படுகிறார்...!

முதல்வர் புது சட்டமன்ற கட்டுமானத்தை கூர்ந்து கவனிக்கிறார்...!

கட்டுமான நிறுவனம் அவருக்கு சொந்தமென்பதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை....அல்லது அது அவசியமற்ற விவகாரமோ என்னவோ...

இன்னும் பல நிகழ்வுகள் குடியரசை கொண்டாட சொல்லி கொண்டே இருக்கின்றன..!

தமிழ்க்குமரன் said...

நீங்கள் மக்கள் தொலைக்காட்சி பார்க்கவில்லையா? நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தது

தமிழ்க்குமரன் said...

நீங்கள் மக்கள் தொலைக்காட்சி பார்க்கவில்லையா? நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தது

VijayaRaj J.P said...

கொஞ்ச நாட்கள் எழுதுவதில்லை..

சில நாட்கள் வேகமாக எழுதுகிறீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள் காமராஜ்.

மண்குதிரை said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்

சுந்தரா said...

சினிமாக்காரங்களும், வியாபார நிறுவனங்களும் அவங்கவங்க பெருமைகளைச் சொல்லக்கிடைத்த இன்னொரு நாள்...வேறென்ன சொல்ல?

இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா!

venu's pathivukal said...

அன்பிற்கினிய தோழர் காமராஜ்

இரு நூறு பதிவுகள் என்ன, இன்னும் பல நூறு பதிவுகளில் பேசப்படட்டும் மறுக்கப்பட்டோரின் கதைகளும், ஒடுக்கப்பட்டோரின் குரல்களும்...................

உங்களது அச்சு அசலான மொழியின் மணத்தில் மேலும் சிறக்கட்டும் வலைபூவுலகம்

எஸ் வி வேணுகோபாலன்

செ.சரவணக்குமார் said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் காமராஜ் அண்ணா.

ஈரோடு கதிர் said...

//'குடியரசுண்ணா என்னன்னு தெரியலீங்க' என்று அப்பாவியாகச் சொன்னார்.//

சொல்லிக்குடுக்கவும் ஆள் இல்லை, அதே சமயம் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை....

200 இடுகையுமே கனமானதுதான்...

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

/பெயர் மட்டும்தான் வேலம்மாள். கட்டணம் எல்லாம் டாடா - பிர்லாம்மாள். /
சிரித்துத்தான் ஆற்றிக் கொள்ளவேண்டும்!200-க்குப் பூங்கொத்துக்கள் 200!

சந்தனமுல்லை said...

முதலில் 200-க்கு வாழ்த்துகள் அண்ணா!

எவ்வளவு எளிய நடையில் எத்தனையெத்தனை செய்திகளை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்..தங்களது மொழயும் நடையும் வாசிக்க இதமாக இருக்கிறது!!

அம்பிகா said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

200-ஆயாச்சா?

வாழ்த்துக்கள் காமு!

மாதவராஜ் said...

ஆரவாரமில்லாத, அடர்த்தியான எழுத்துக்கள் உன் அடையாளம். மண் வாசனை கொண்ட உன் மொழி மிக வசீகரமானது. எழுது தோழனே!

ஆம் நண்பனே..

நேசமித்ரன் said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

காமராஜ் said...

தோழன் மாது,
ஜோதி,
லாவண்யா,
பாலஜி,
அமித்தம்மா,
அரூர்,
ரமேஷ்,
தீபா,
தமிழ்குமரன்,
விஜி அண்ணா,
அம்பிகா,
மண்குதிரை,
சுந்தரா,
svv,
சரவணக்குமார்,
கதிர்,
ஹென்றி,
அருணா,
முல்லை,
ராகவன்,
பாரா,
நேசமித்ரன்,
குப்பன் சார்.

எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Kumky said...

தோழர்..

இது ஒரு போலி தேசியம்.மூட்டைகளில் அடைக்கப்பட்ட நெல்லிக்காய் அல்ல...பல வகையான காய்கள்..பல்வேறு வடிவங்களில்.

இழவு கொண்டாடும் வீட்டை தொலைக்காட்சியில் காண்பிக்கும்போது கூட விளம்பர இடைவேளைகள் அவசியம்.

நமக்கு எல்லா சுதந்திரங்களையும், பண்டிகைகளையும், விழாக்களையும், இன்னபிற விடுபட்ட விடுமுறைகளையும் கொண்டாட கற்றுக்கொடுத்தவர்களும், கொடுத்துக்கொண்டிருப்பவர்களும் சினிமாத்துறையினர் மாத்திரமே...

வாழ்க சனநாயகம்.

Kumky said...

200வது பதிவு குறித்து மிக்க மகிழ்வு தோழனே...

தொடரட்டும் உங்கள் காத்திரமான எண்ணங்கள்..

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ரொம்ப சந்தோஷமா இருந்தது உங்கள் பின்னூட்டத்திற்கான நன்றிகளை பார்க்கும்பொழுது, நான் பின்னூட்டமே எழுதவில்லை ஆனாலும் எனக்கு நன்றிகள் உங்களிடம் இருந்து. கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஆனாலும் சந்தோஷமாத்தான் இருந்தது.

காமராஜ், உங்கள் வழியாக தான் நான் இதனுள் நுழைந்தேன், உங்களுக்கு பின்னூட்டம் எழுதியே நான் பிரபலமாகி(!!??) விட்டேன். எல்லோரும் ஒரு அடைமொழி போல பின்னூட்ட ராகவன் என்று பெயரிட அடர் கருப்பு தான் காரணம். 200 பதிவுகளுக்கு மனம் நிறைய வாழ்த்துக்கள், பழைய காமராஜை பார்க்கவேண்டும் நான்.

அடர்த்தியான எழுத்துக்கள் தான் உங்க அடையாளம், தாளம் தப்பாமல் மிரட்டும் திஸ்ரஜாதி நடை... உருட்டி, உருட்டி மனசு, உடம்பெல்லாம் அதிரும் ஒரு நடை...

சம்பாரி மேளம்... தூரத்தில் எங்கோ திரள்கிறது, இடியாய் இறங்க...

வாழ்த்துக்கள் காமராஜ்,
என் பிரிய சினேகம்

ராகவன்

Deepa said...

அங்கிள்!
டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் அசத்தலான் எழுத்துப் பணி!