12.1.10

வளர்ந்துவரும் அம்மண அரசியல் எதிர்கொள்ளும் எளிமையான ஆயுதம்.

அவரது முதிய தாயார் தனிக்கட்டையாக விருதுநகரில் குடியிருந்தார். அந்திமக்காலத்தில் கிணற்றிலிருந்து  தண்ணீர் கொண்டு  வர  எசக்கில்லாத உடம்பு. அந்தக்காலத்தில்தான் ஊர் ஊராக, அணைக்கட்டுகள், நீத்தேக்கத்தொட்டிகள், குடிதண்ணீர்  குழாய்கள்  என்று அமல்படுத்திக்கொண்டிருந்தார் அந்த முதலமைச்சர். ஒரு முறை விருதுநகர் வந்த அவர் தாயைப் பார்க்கப் போனார்.அந்த முதிய தாயருக்கு முதலமைச்சரிடம்  சொல்ல  ஒரு  கோரிக்கை  இருந்தது.
தனது  வீட்டுக்கு  தனியாக குடிநீர்க் குழாய் இணைப்பு வேண்டும் என்று. கர்ண கொடூரமாய்  மறுத்து விட்டு அருகிலுள்ள வீட்டுக்காரரிடம் சொல்லி அம்மாவுக்கு ஒத்தாசை செய்யச் சொன்னாராம். பொழைக்கத் தெரியாத  கருப்புக் காந்தி காமராஜர்.அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.

கக்கன் தனது அந்திமக் காலத்தில் தர்மாஸ்பத்திரியின் தரையில் கோரப்பாய் விரித்து சாகக் கிடந்தாராம்.பதவியிலிருந்து இறங்கியதும் நாலுவேட்டி,நாலுசட்டை,அன்றாயர் கொஞ்சம் புத்தகங்கள் அடங்கிய தனது ஒரே சொத்தான ட்ரெங்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கட்சி அலுவலகத்துப் போனாரம் திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் நிரூபன் சக்கரவர்த்தி. அறிஞர் அண்ணா கூட மூக்குப்பொடியும் அதன் காரத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத பேச்சும் இலக்கியமும் தனது சொத்தாக விட்டுவிட்டுப்போனார்.

இந்தக் கதையெல்லாம் எதோ புராணகாலத்து விராட பர்வக்கதைகளோ நாடோ டிப்பாட்டி கதைகளோ இல்லை.
சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் சட்டமன்றம் சந்தித்த மகோன்னத மனிதர்களின் வரலாறு.இதை நாம் இந்த்கால சந்ததிகளுக்கு சொல்லியிருக்கிறோமா, சொல்ல வழியிருக்கிறதா,சொன்னால் செவிமடுப்பார்களா என்னும் கேள்விகள் பெரும் மலைப்பை கொண்டு வந்து முன்னிறுத்துகிறது.

அந்த கவுன்சிலர் மகளின் கல்யாணத்துக்கு நகர் முழுக்க அலங்கார வலைவுகள். அவையாவும் நாகர்கோவிலிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஒவ்வொரு வளைவும் ஒரு அரசாங்க ஊழியனின் ஒருமாத சம்பளத்தைக்காவு வாங்கிய தொகை.பல்லாயிரக்கணக்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு அழைப்பிதழின் விலையும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியையின் தினக்கூலி.அல்லது ஒரு பெண் விவசாயக் கூலிக்காரிக்கு ஒரு நாள் அடுப்பெறியும் சன்மானம். குறைந்தது ஒரு கோடி செலவானது ஜாம் ஜாம் என்ற கல்யாணத்தில்.அவரது அகவுன்சிலர் பதவிக்கோ மாதச் சம்பளம் கிடையாது. 

இன்னும் கூட டெல்லி பாராளுமன்ற கட்டிடத்தில் விற்கும் சாப்பாட்டின் விலை ஒண்ணேகால் ரூபாய்.அதேபோல அல்லது கொஞ்சம் முன்னப்பின்னதான் தமிழக அரசின் சட்டமன்ற கேண்டீனும். ஆனால் ஒரு ஐந்தாண்டில் இரண்டு முறை கூட அவர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அந்தச்சமபளத்தை வைத்து எந்த அரசியல்வாதியும் அரிசி பொங்கி வடித்ததில்லை. ஒரு நாள் விடுதிவாடகையாக ஒரு லட்ச ரூபாய் செலவழித்த வரலாறு ஒரு நான்குமாதத்துக்கு முன்னால்தானே ?.

அவர்களின் வாழ்வு முறையும் செலவும், அவர்களின் சொகுசும் பங்களாக்களும்,காரும் ஒண்ணுக்கிருக்கப்போனால் கூட ஆளுயர பேனர் வைப்பதுமான படோ டோ பமும் சாதாரண ஜனங்களை அண்ணாந்து பார்க்கவைக்கிறது.
அப்படிப்பட்டவர்கள் மட்டும் தான் இனி ஆளமுடியும் என்பதை இடைத் தேர்தல்களில் காந்தி நோட்டின் மூலம் வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச்சூழலில் நேற்றைய சட்டமன்ற விவாதத்தில்  உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்தும் தீர்மானத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் எம் எல் ஏ க்கள் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்.கொஞ்சம் அதீதமாகத்தோன்றும்,அல்லது நகைத்துவிட்டுக்கடந்து போகும் செயலல்ல இது.நாடெங்கும் அம்மணம் தலைவிரித்தாடுகையில் வேட்டிகளை கையிலெடுத்துக்கொண்டு  ஒரு சிலர் களம் இறங்குவது நகைப்பாகவே தோன்றலாம்.சர்வவல்லமை படைத்த,சர்வ ஆயுதந்தரித்த மாமிச மலையான கோலியாத்தை எதிர்கொண்டவன் சின்னஞ்சிறு தாவீது. அவன் கையிலிருந்தது குருவியடிக்கும் வெறும் கவனும் கல்லும்.

11 comments:

ஈரோடு கதிர் said...

கணக்கில வராமா கோடிக்கணக்கில அடிக்கிறாங்க... கூடவே கணக்கு காட்டும் பணமாக இருக்கட்டுமே சம்பள உயர்வு

ஆரூரன் விசுவநாதன் said...

அம்மணமான ஊரில், கோமணம் கட்டியவன், பைத்தியக்காரனாகத்தான் தோன்றும் தோழர்

ஹுஸைனம்மா said...

சம்பளம் கிடையாதுன்னாலும் கவுன்சிலர் பதவிக்கு அடிச்சிக்கிறது, அடுத்து எம்மெல்லே ஆகறதுக்கு டிரெயினிங்கும் ஆச்சு (எல்லா வகையிலயும்)!!

குப்பன்.யாஹூ said...

ஆனால் இந்த மாதிரி ஆடம்பரமான வேட்பாளரை, கட்சியை தானே வாக்காளர்களாகிய நாம் ஆதரிக்கிறோம்.

காமராஜர் நடமாடிய விருதுநகர் மக்கள் தானே , எங்களுக்கு மக்கள் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேசி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் கோபாலசாமி வேண்டாம், கட் அவுட் வைக்கும், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கும் மாணிக் தாக்கூர் தான் தேவை என்று தீர்ப்பு எழுதினர்.

இறக்கும் வரை எளிமையோடு வாழ்ந்த, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பல நேரங்களில் ஆட்டோ பிடித்து வீடு சென்ற மோகன் என்ற வேட்பாளர் வேண்டாம், மாசி வீதிகளையும், ஆவணி மூல வீதிகளையும் கட் அவுட்டுக்களாலும், ப்லேக்சி பானர்களாலும் அழகு கூட்டும் அழகிரி தான் வேண்டும் என்று தீர்ப்பு எழுதினர்.

நீலகிரி தொகுதியில் தங்கள் ஊரில் வாந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற வேட்பாளர் வேண்டாம், எங்கிருந்தோ வந்து இங்கு போட்டியிடும் ராசா தான் வேண்டும், என்று அல்லவா தீர்ப்பு எழுதினோம்.

வாக்கு அளிக்கும் நாம் நம் கடமையை சரி வர செய்வோம் முதலில், பின்பு நம்மால் தேர்ந்து எடுக்கப் படும் உறுப்பினர்கள் செயல் பாடு குறித்து பேசுவோம்.

க.பாலாசி said...

//சொல்ல வழியிருக்கிறதா,சொன்னால் செவிமடுப்பார்களா என்னும் கேள்விகள் பெரும் மலைப்பை கொண்டு வந்து முன்னிறுத்துகிறது.//

சொன்னால் ஒப்புக்கொள்வார்களா என்றும் தோன்றுகிறது. எத்தனைப்பெரிய மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கொள்ளையடிப்பவர்கள் இங்கே ஏராளம்.

பா.ராஜாராம் said...

//அவன் கையிலிருந்தது குருவியடிக்கும் வெறும் கவனும் கல்லும்.//

பொட்டென..

ராகவன் said...

அன்பு நிறை காமராஜ்,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என் அன்பை சொல்லுங்கள்

தேவையான பதிவு... அழகாய் வந்திருக்கிறது. நிறைய எழுத நேரமில்லை.

அன்புடன்
ராகவன்

சுந்தரா said...

கக்கனையும் காமராஜரையும் சொல்லி, இப்போதிருக்கிற தலைவர்களையும் நினைத்தால்...

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா!

கிரகம் said...

சுஜாதா சொன்னது போல் நம் நாட்டில் ஜனநாயகம் ஒரு வீண் செலவு.

நாடு முன்னேறுகிறதோ இல்லையோ அரசியல் வாதிகளின் கஜானா மட்டும் முன்னேறிக் கொண்டு இருக்கிறது எவ்வித தங்கு தடையில்லாமல்.

சில மாதங்களாக ஆந்திரா மாநிலத்தில் மாதத்திற்கு 4 அல்லது 5 பந்த். இதனால் ஆந்திரா மாநிலம் போக்குவரத்து கழகத்திற்கு 150 கோடி நஸ்டம். இதன் காரணமாக சென்ற வாரம் 20 முதல் 25 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பந்த் செய்வது அரசியல்வாதி, போராட்டம் நடத்துவது அரசியல்வாதி அதன் மூலம் வரும் கஸ்டத்தை அனுபவிப்பது மட்டும் பொது ஜனம்.
போராட்டம், பந்த் நடத்தும் அரசியல் வாதிவாதிகளிடமிருந்து தான் அந்த நஸ்ட தொகையை வசூலிக்க வேண்டும்.
- கிரகம்

Sakthi said...

nice

498ஏ அப்பாவி said...

//அந்த கவுன்சிலர் மகளின் கல்யாணத்துக்கு நகர் முழுக்க அலங்கார வலைவுகள்//

ஐயா! இது மாதிரி சம்பாதிச்சா ஒன்னு ஆட்​டைய ​போட்டா காச அவன் திங்க முடியாது. ஏன்னா சக்கர ​நோய இருக்கம்... இல்லாட்டி ​போலிசு ​கேசுன்ன நாயா அ​லைஞ்சி திருஞ்சி ​செத்து ​போவனு​வோ!

உதாரணத்துக்கு என்​னோட கவுன்சிலர் மாமனார் (??) பல ​பே​பேர மிரட்டி கட்டபஞ்சாயத்து பண்ணி சம்பாதிச்சி அவர் மகள என்ன ​போல "​​ரொம்ப நல்லவனுக்கு" கால்ல உழுந்து கட்டிவச்சாரு... ஆனா பாருங்க அந்த புள்ள வரதட்ச​ணை வழக்க ​போட்டு இப்​போ வீட்​​டொட இருக்கு. ஊர்வயிற்றில் அடிச்ச சம்பாதிச்ச க​டைசியல் வி​​ளைவு ​​மோசமாக இருக்கும்