16.3.14

தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)



தமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்குள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிராமத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது.எப்பொழுது தோழர் பீகேவைச்சந்தித் தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்கத்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.

எண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய் நண்பர்கள்களுக்குள் தள்ளிவிடப்பட்டேன்.அந்தக்கூட்டத்துக்குள் தான் என் தோழன் மாது இருந்தான்.அவன்கூடவே மூர்த்தியும் இருந்தான்.ஒரு அழுக்கேறிய நான்குமுழ வேஷ்டியோடு வந்து என்கையைப்பற்றிக் கொண்டான் மூர்த்தி.அவனும்கூட என்னைப்போலவே ஒரு கருசக்காட்டுப் புழுதிக்குள் கிடந்து வந்து  இந்த நட்பு இனிப்புக்குள் திகட்ட திகட்டவாழ்ந்து பிரமித்தவன்.

42 பி என் எஃப் தெருவில் அந்த பிஜிபிஇஏ சங்க அலுவலகம் இருந்தது.அங்கு ஒரே அறையில் கிடந்த நாங்கள் எதாவது எழுதிக் குமிக்க முயற்சிசெய்து கொண்டிருந்த போது, அவன் மட்டும் மூன்று பத்தி மாடியில் இருக்கும் சமயற்கட்டில் ஏதாவது வரைந்து கொண்டிருப்பான்.அண்ணன் ஜீவா அதைப்பார்த்து விட்டு ’மூமா (அப்போது அதுதான் அவனது செல்லப்பேர்) என்ன வரிஞ்சிருக்கியோ அதோட பெயரைக் கீழே எழுதிரு” என்பார் .அவனும் சேர்ந்து சிரிப்பான்.ஒரு கடைநிலை ஊழியன் மேல் குவிகிற இந்த அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் கொடூரமானது.அதை தகர்க்கிற பெருஞ்சம்மட்டியாய் பீகே இருப்பார்,அவரது நீளமான கை தோளில் விழுகிற போது கோடுகள் துவங்கி இடியாத பெருஞ்சுவர்கள்வரை இற்று இடிந்து போகும்.அவரது பேச்சை விடவும் காந்தத்தன்மை கொண்டது அவர் சகதோழர்கள் மீது காட்டு கிற பிரியம்.சாத்தூர் வீதிகளில் ஆறடி உயரத்தில் நடந்து போக அருகே நடப் பது எங்களுக்கு பெருமிதமான பயணமாகும்.

அந்தக்காலங்களில் தான் நாங்கள் பெரும்பசியோடு புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தோம்.பீகே தான் ஒவ்வொரு புத்தகமாய் கொண்டுவந்து கொட்டுவார் நானும் மாதுவும் போட்டிபோட்டு இரவுகளில் படிப்போம். அப்போது எங்கள் வயதொத்த ஊழியர்கள் அலுவலர் ஆவதற்கும்,சிஏஐஐபி படிப்பதற்கும் மெனெக்கெட்டுக்கொண்டிக்க நாங்கள் இலக்கியப் புத்தகங் களைக் கிறுக்குப் பிடித்துபடித்துக் கொண்டிருந்தோம்.நானெப்படி மாதுவை அகலக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேனோ அதைப்போலவே மூர்த்தி எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான்.அப்போதெல்லாம் நாங்கள் அவனைப்பகடி செய்வதிலேயே குறியாக இருந்தோம்.அவன் சைன்ஸ் ஜாதாவுக்கு பேர்கொடுத்து அவர்களோடு ஒரு காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அலைந்தான். ஒரு தீவிர அறிவொளி இயக்கத்தொண்டனாய்த் திரும்பிவந்த அவனுக்குள் பெரு நெருப்பு குடிகொண்டு இருந்தது.அத்தோடு

கூடவே ஒருகாதலும் அவனுக்கிருந்தது.

தொழிற்சங்கத்தில் ஒரு தலைமுறை போய் இன்னொன்று உருவெடுத்தபோது மூர்த்தியும் எங்களோடு செயற்குழு உறுப்பினரானான்.விடிகிற வரை நடக்கிற செயற்குழுக்கூட்டத்தில் முதன்முதலில் அவனைத்தான் பேய் பிடித்துஆட்டும். அப்புறம் என்னை.எங்களை உசுப்பிவிடுவதிலே குறியாய் இருப்பார் தோழர் சோலைமாணிக்கம்.அங்கேயும் கூட பெரிய இலக்கு ஏதும் இல்லாத ஒரு பிரதிநிதியாக இருந்தான்.நான் கூட சிலநேரத்தில் சபலப்பட்டு இருந்தேன். அவனுக்கு பதவிமோகம் துளியும் கிடையாது.எல்லா சங்கப்பொதுக்குழு விலும் அவனுக்குத்தான் கொடிக்கம்பம் தயாரிக்கிற,தியாகிகள் ஸ்தூபி தயாரித்து சிகப்பு பேப்பர் ஒட்டுகிறவேலைகாத்திருக்கும்.ஆனால் அந்த கொடியை மடக்கிகட்டிவைக்கத் திணறு வான்.அப்போது அவனுக்கு நானும் நாசரும் கூட இருக்கவேண்டும்.கொடியேற்றிக்கொடுத்துவிட்டு நான் நாசர் மூர்த்தி  மூவரும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கடைசிப்பெஞ்ச் கோஷ்டியாகி விடுவோம்.ஆதலினாலே இந்த இருபத்தைந்து வருட தொழிற்சங்க பதிவு களில் எங்கள் புகைப்படம் எதாவது கூட்டத்துக்குள் கரைந்து போயிருக்கும்.

அதுபோலவே தமுஎசவிலும் எங்களோடு பயணித்தவன் மூர்த்தி.இங்கேயும் கூட பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கிய புல்லரிப்பில் அலைபவர் கள்நாங்கள்.எண்பதுகளில் என்னையும் அவனையும் தான் குற்றாலம் சிறு கதை பட்டறைக்கு அனுப்பிவைத்தார்கள்.அங்கிருந்து வந்து ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில்லை.ஆனால் மூர்த்தி எழுதி எழுதிக்குமித்து விட்டான்.அதை முதலில் என்னிடம் மட்டும்தான் காட்டுவான்.அவனது கையெழுத்து காற்றுக்கு வளைந்த நானற்கூட்டம் போல் நீண்டு வளைந்து இருக்கும்.எழுதிக்கட்டாக கட்டி என்னிடம் அனுப்பிவிடுவான்.படித்தது படிக்காதது என அவனது கையெழுத்துப்பிரதிகள் அலமாரியில் கணிசமான இடத்தை அடைத்து இன்னும் கிடக்கிறது. மாது ராஜகுமாரன் என்கிற சிறுகதைத்தொகுப்பு போட்டு,சில கட்டுரைத்தொகுதி வெளியிட்ட பிறகு நானும் தக்கி முக்கி எழுதி  ஒரு தொகுப்பு போட்டேன்.அதே வேகத்தில் அடுத்து மூர்த்தியின் முதல் தொகுப்பு வந்தது.நான் எப்படி மாது மட்டும் தான் எனக்கு முன்னுரை எழுத வேண்டும் என்கிற உறுதியில் இருந்தேனோ அதேபோல எனக்கு முன்னுரை எழுதுகிற வாய்ப்பைக்கொடுத்தது மூர்த்தி.
    
என்பதுகள் தொடங்கி இன்று வரை ரெண்டு முறையாவது அது என்ன இது என்ன என்று அவன் கேட்கிற கேள்விகளில்தான் அந்த பெரு நெருப்பு குடி கொண்டிருந்தது.எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பு புத்தகத்தை கையில் தொடாமல் எழுத்தில் ஜெயித்த எங்கள் அன்புத்தோழர் மேலாண்மையை மாதிரியே மூர்த்தியும். ஒரு சின்ன துணுக்குகூட ஆங்கிலத்தில் படித்திருக்க வாய்ப்பில்லாதவன் மூர்த்தி.நானும்கூடத்தான்.ஆனால் எனக்கு பாடப்புத்தகம் வழியே ஆங்கிலம் அறிமுகமாகி இருந்தது.கல்லூரியில் லே மிசரபிள் போன்ற நான் டிடெய்ல் புத்தகங்தொட்டிருக்கிறேன் அப்படி வாய்ப்பில்லாத அனுபவப் படிப்பை மட்டும் கைப்பற்றி நண்பர்களை அருகிருந்து நோக்கி எழுதியவன் தோழன் மூர்த்தி.

மூர்த்தியின்எழுத்தைப்பேச,சிலாகிக்கவேண்டியதைவிடவும்.அவனைச்சிலாகிப்பதே பெருங்கடமை.பெரிய கல்விப்பின்புலம்,எழுத்துப்பின்புலம் இல்லாததோழமை யும் நட்பும் துணைகொண்டு எழுதிகிற மூர்த்தி சிலாகிக்கப்படவேண்டியவர்(ன்).

14.3.14 ல் விருதுநகரில் நடந்த அந்த விழாவில் பங்கேற்க முடியாத தடைகளை இந்த வரிகள் சரிசெய்யும்.எங்கள் பிரியத்தோழர் முத்துக்குமாருக்காகவாவது அதில் கலந்திருக்கவேண்டும்.எங்களைப்போலவே அவரும் எளிய தோழர். மூர்த்தியைப்புரிந்து கொண்டு சரியாக விழா எடுத்த அவர்,அங்கே போகமுடியாத என்னையும் புரிந்துகொள்வார்.   

27.10.13

பட்டு- நாவலின் விமரிசனமல்ல.



ராமநாதபுரத்தில் இருந்த போது ஒவ்வொன்றாய் வாங்கிப்படித்த புத்தகங்கள் இருபது தேறும். ஒவ்வொன்றாய் வாங்கத்தான் பையும் கையும் ஒத்துழைக் கிறது.அப்போதெல்லாம் அறைத்தோழர்கள்  எப்படி சார் படிக்க நேரம் கிடைக் கிறது உங்களுக்கு,என்று கேட்பார்கள்.நேரம் என்ன கடையிலா விற்கிறது ?, இல்லை மலைமுகடு களில் இருக்கிறதா ?.அரட்டையடிப்பதற்கான  காலங் களைப்போலத்தான், இந்த புத்தகம் மூலமாக அரட்டை அடிப்பதற்கும் லபிக் கிறது தேரம்.டிஸ்கவரி புக்பேலஸ் தோழர் வேடியப்பன் மூலமாக அணுப்பிய ஆறு புத்தகங் களில் இரண்டை முடித்தாகிவிட்டது.எங்கள் பாசத்துக்குறிய தொ.ப.வின் விடுபூக்களும்,அலெக்சாண்டர் பாரிக்கோவின் ‘பட்டு” நாவலும் பற்றிச்சொல்லியே ஆகவேண்டும்.

பட்டு, நல்ல கருஞ்சிவப்பு நிறத்தில் கையடக்கமான பக்கங்களிலும் கையடக் கமான விலையிலும் உருவாக் கப்பட்ட அழகிய நாவல்.ஒரு ராணுவ வீரணான ஹெர்வே ஜென்கர் பட்டுப்புழுக்களை ஜப்பானில் இருந்து வாங்கி பிரான்சில் உள்ள லாவில்டியூ என்கிற உள்ளூரில் விற்கும் வியாபாரியாக மாறிப்போகிறான்.அவனை அவனது அப்பா போட்டுவைத்திருந்த  ராணுவப் பெரும் பதவியெனும் கனவுப்பதையிலிருந்து ஒரு கொண்டையூசி வளை வாய் திருப்பி,கூட்டுப்புழுக்கள் சேகரிக்கும் ஜப்பான் பயணியாக்கியது பல்தொப்பியாதான்.

பிரான்சிலிருந்து கடல்மார்க்கமாக,ரயிலில்,குதிரையில் என மூன்று மாதங்கள் பயணம் செய்து மறு எல்லையில் இருக்கும் ஜப்பானை அடைகிறான். முட்டைகள் வாங்கிக்கொண்டு திரும்பி பிரான்ஸ் வருகிறான்.பட்டுமுட்டைகள் வாங்குகிற ஜப்பானில் ஹரா கீய் என்கிற ஜமீந்தாரின் இளம் மனைவியை காண்கிறான்.அவள் மீதான ஈர்ப்பு அவனை ஜப்பானை நோக்கி திரும்பத்திரும்ப பயணிக்க வைக்கிறது.

ஒருவருக்கொருவர் சந்கித்துக்கொள்ளாத இந்தக்காதல் கதையின் நடுவே பிரான்சின் தொழிற்புரட்சி, லூயிபாஸ்டரின் கண்டுபிடிப்புகள், ஜப்பானியப் போர் ஆகியவை சின்னச்சின்னத்தகவல்களாக வந்துபோகிறது.ஜப்பானிய மொழியில் எழுதிய அவளது கடிதத்தை எடுத்துக்கொண்டு பெரும்பயணம் செய்து திருமதி பிளான்சி என்கிற செக்ஸ் தொழிலாளி மூலம் மொழி பெயர்த்து அறிகிறான்.காலமாற்றத்தில் சூயஸ் காலவாய்திறக்கப்பட்டு,1884ல் செயற்கைப் பட்டுக்கான காப்புரிமைபெறப்பபட்டு ஜப்பான் கொள்முதல் செலவீனமாகிறது.இருப்பினும் அவனை அவள் கண்கள் இழுக்கிறது.

மீண்டும் ஷிராக்காவை அடைந்தபோது போரால் அது சிதலமடைந்து கிடந்தது. ஹரா கீயின் அரண்மனை வெறிச்சோடிக்கிடக்கிறது.ஆளரவமற்ற ஊரின் தனி மையில் இருந்த அவனைத்தேடி ஒரு சிறுவன் வருகிறான் அவனது அழைப்பை  ஏற்று நாட்கணக்காக அவன் பின்னாடி அழைந்து இறுதியில் ஹராகீயின் முகாமை அடைகிறான்.இந்த முறை வந்த ஜென்கரின் நோக்கத் தைப் புரிந்து கொள்கிறான் ஹராகீய்.அதானால் அவனைக் கூட்டிக் கொண்டு வந்த சிறுவனைக்கொல்கிறான்.

மீண்டும் பிரான்சுக்கு பயணமாகிற வழியில் கூட்டுப்புழுக்கள் செத்துப்போய் பயணற்றதாகிவிடுகிறது.அதை அப்படியே கீழே கொட்டிவிட்டு ஊர்திரும்பி, வேறு தொழில்செய்கிறான்.அவனுக்கு ஒரு ஜப்பானிய மொழிக்கடிதம் வருகிறது அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பிளான்சியிடம் ஓடுகிறான். அது ஒரு நெடிய காதல் கடிதம்.அதன்பிறகு அவனது மனைவி ஹெலன் மரித்துப் போகிறாள்.அதன்பிறகு கடிதம் ஜப்பானில் இருந்து வரவில்லை என்பதை அறிந்து மீண்டும் பிளான்சியை சந்தேகித்து அவளிடம் போகிறான்.
கடிதத்தை எழுதியது உண்மையில் யாரென்று முடிப்பதுதான் நாவலின் பெரும் வெற்றி.

அது ஹெலன்.ஹென்கரின் காதல் மனைவி ஹெலன்.

ஒரு நெடிய சிறுகதை போல இழுத்துக்கொண்டு ஓடும் நாவலில் இன்னொரு வியப்பு இருக்கிறது.ஒரு பக்கம் மட்டுமே இருக்கிற அத்தியாயங்கள். அதை விட  வியப்பு வெறும் அரைப்ப்பக்கத்தோடு முடிந்து போகும் அத்தியாயங் களுமான அதிசயத்தை சும்மா விடுவார்களா.அது திரைப்படமாகியிருக்கிறது.

0

தமிழில்=சுகுமாரன்
விலை =ரூ.95
வெளியீடு= காலச்சுவடு
கிடைக்குமிடம்=டிஸ்கவரி புக்பேலஸும் 

3.7.13

தீவிரமாகும் தனிமையின் இசை.

நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது.