29.7.12

bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.


ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே கதாபாத்திரங்கள். அவர்களு டனான உறவுகள், உணர்வுகள் இவை அணைத்தையும் பார்வையாளர்கள் மேல் பாய்ச்சமுடிந்திருக் கிறது அந்த இயக்குனரால்.

விடுமுறையைக்கழிக்க பேருந்தில் பயணமாகும் ஒரு குடும்பம் ஓரிடத்தில் அந்தக்குடும்பத்தின்  பிரதானப் பெண்ணை மறந்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறது. இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் கணவனோ குழந்தைகளோ அவளைத்தேடி திரும்ப வராததால் பேதலித்துப் போகிறாள். தெரியாத இடம் மீண்டும் எப்படி வீடுபோவோம் என்று அல்ல. எப்படி மொத்தக்குடும்பமும் தன்னை மறந்து போனது என்கிற சிந்தனையில் குழம்பி, தன்னைத்தானே தொலைத்துக்கொள்கிறாள்.அந்த விடுமுறையைத் தனியேகழிக்க விரும்புகிறாள். தன் வாழ்நாளில் ஒருதரமாவது பார்த்துவிட ஏங்கிய வெனிஸ் நகருக்கு போகிறாள் ரோசல்பா.

வெனிஸ் நகரின் மார்க்கபோலோ விடுதியில் தொடர்ந்து தங்கமுடியாத அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த விடுதியின் சேவகர் பெர்னாண்டோவிடம் உதவி கேட்கிறாள்.பெர்னாண்டோ தனது அறையில் தங்க இடம் அளிக்கிறான். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மஸாஜ் மற்றும் அழகு கலை நடத்தும்  க்ராஸி யாவுடன் நட்புக்கொள்கிறாள்.சாப்பாட்டுக்கு துலிப் மலர்கள் விற்கும் ஒரு கடையில்  வேலைக்குச் சேர்கிறாள்.
ஒவ்வொரு நாளும் அறைக்குத் திரும்பும்போது கொஞ்சம் உணவும், துலிப் மலர்கள் மீது செருகப் பட்ட ஒரு கடிதமும் காத்திருக்கிறது. அதை வைத்து விட்டு அங்கிருந்து போய்விடும் எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்தோடு அலையும்  பெர்னாண்டோவை அறிந்துகொள்கிற ஆர்வம் மேலிடுகிறது அவளுக்கு. அவன் வாசித்துவிட்டு அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்கள் அவன்மீது லயிப்பை உண்டாக்குகிறது. அவனது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்கார்டியன் வாத்தியம் பெர்னாண்டோ மீது கூடுதல் ஈர்ர்ப்பை உண்டாக்கு கிறது. அந்த அக்கார்டியனை இசைத்து பக்கத்து அறை சிநேகிதியை சிலாகிக்கச்செய்கிறாள். அவனைப்பின் தொடர்கிறாள். ஊருக்குள் அவனது மகளும் பேரனும் இருப்பதை அறிகிறாள்.அவர்களோடு சேர்ந்து பேரனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கணவனின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சிப்பந்தியை உளவுக்கு அமர்த்தி ரோசல்பாவை வெனிஸ் நகர் முழுக்கத் தேடச்சொல்லுகிறான்.அவனிடம் இருந்து தப்பிக்க நடன விடுதிக்குப் போகிறார்கள் ரோசல்பாவும், பெர்னாண்டோவும்.அங்கே அவளுக்குச்சில கவிதைகள் சொல்லுகிறான், பின்னர் இருவரும் நடனமாடு கிறார்கள்.விடுதியைத்தேடிக்ககண்டுபிடிக்கிற உளவாளி,ரோசல்பாவின் சிநேகிதி க்ராசியாவுடன் உறவுகொள் கிறான். பின்னர் உளவு வேலையை உதறிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். ஊரில் தனது மகன் போதைக்கு அடிமையாகி,பள்ளியில் இருந்து இடைநின்று போவதை அறிந்து வேண்டாவெறுப்புடன் ஊருக்குத் திரும்புகிறாள். அன்றிரவு மிகுந்த எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு செல்லுகிற ரோசல்பாவை கண்டு கொள்ளாமல் தூங்கி விடும் கணவனை எழுப்பி பேசுகிறாள். இனி நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தூங்கிவிடுகிறான்.

வெனிசில் ரோசல்பாவை நினைத்துக்கொண்டே உருகிப்போகிற பெர்னாண்டோ அவலைத்தேடி போகிறான். மீண்டும் ஒரு முறை தன்னோடு நடனமாட அழைக்கிறான்.இருவரும் காதலாகி நடனமாடுகிறார்கள்.மிகச்சாதார ணமாக ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் பரபரப்பு,சண்டை,குரோதம்,திகில்,சஸ்பென்ஸ் என எதுவுமில்லை.அதுமட்டு மல்ல மையக்கதாபாத்திரங்கள் யாரும் இளையவர் இல்லை.ரோசல்பாவாக நடிக்கும் லிசியாமாக்லியட்டாவும், பெர்னாண்டோவாக நடிக்கும் கான்ஸும் நடுவயதுக்காரர்கள்.தவிரவும் படம் முழுக்க ஆங்கில பாணியிலான காதல் காட்சிகள் ஏதும் இல்லை.

ஆனால்

படம் முழுக்க நகர விடாமல் நம்மை ஈர்க்கிற மெலிதான புல்லாங்குழல் இசைபோல காதல் கதை நெய்யப் பட்டிருக்கிறது. சிறுபிராயத்தில் நம்மை வசீகரித்த மூன்றாம் வகுப்பு கனகசுந்தரி டீச்சர்,அடுத்த தெருவுக்கு வாக்கப்பட்டு வந்த மல்லிகா மதினி,மூன்றுவருடம் சிவகாசிப்பேருந்துப்பயணத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த  மின்சார வாரிய தமயந்தி மேடம். இப்படி நினைவுகளின் நிலைத்துப்போன முகங்களின் முதிர்ந்த பிம்பமாய் வருகிறது லிசியா மாக்லியட்டாவின் வசீகரமுகம். சிரிக்கிற காந்தக்கண்களும் அவரது பாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போகிறது. நீர் சூழ்ந்த அந்த அழகிய வெனிஸ் நகர வீதியெங்கும் சுழன்று சுழன்று போய் நடனத்துடனான இறுதி முத்தத்தில் ஜொலிக்கிறது. கனிந்து விழுந்த பழத்தின் வாசனையோடும் ருசியோடும் காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

21.6.12

வலி மிகுந்த மாற்றம்.

கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த  எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த  மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற  நேரம்,  வண்டி யோட்டுகிற நேரம்,தூங்குகிற நேரங்களில் போன்பேச இயலாது என்கிற சிந்தனை இல்லாமல்  கோபித்துக் கொள்ளுகிற சுந்தரலிங்கண்ணன். சுந்தரலிங்கண்ணன் வாடிக்கையாக ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போன் பண்னுவார். எடுக்காவிட்டால் மறுபடியும் மறுபடியும் அழைப்புமணி அடிக்கும். எடுத்து விட்டால் எலே  சின்னப் பயலே உனக்கு அவ்வ்ளோ திமிராலே என்று தொடங்கி குறைந்தது அரை மணி நேரம் பேசுவார்.  தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகுட்டிகள் எழுந்து விடும். அவளுக்கானால் ரொம்ப நாளாச் சந்தேகம்  வேறு.  ”அர்த்த ராத்திரியில் அப்படி ஆம்பளக்கி ஆம்பள என்ன பேசுவீங்க”  பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.

எங்கப்பா போன?, அவனும் போன எடுக்கமாட்டுக்கான், நீயும் எடுக்கமாட்டுக்க என்று எடுத்ததும் கோபத்தை மட்டுமே வணக்கமாகச் சொல்லும் சன்முகண் ணாச்சி. சுருளி எடுக்காமல்போய் அவள் எடுத்துவிட்டாள் மிகவும் பரிவோடு குசலம் விசாரிப்பார். பிள்ளைகளைப் பற்றிக் கேட்பார். இந்த ஒரு வருடத்தில் ரெண்டே ரெண்டுதரம் மட்டுமே அவரிடமிருந்து போன் வந்திருந்தது. பல முறை அழைத்தும் எடுக்காமல் ஒரு நாள் எடுத்து  என்னப்பா, சீக்கிரம் சொல்லு என்றார். எப்படிண்ணே இருக்கீங்க என்று கேட்டான். இருக் கேன் இருக்கேன் வையி என்று மறுமுனை கட்டானது. படபடவெனக் கண்ணீர் வந்து தொலைத்துவிட்டது. என்ன ஏதென்று கேட்டவளிடம் சொன்னான். எதுக்கெடுத்தாலும் சின்ன நொள்ள கெனக்க அழதுக்கிட்டு,ஆம்பள தான ?, என்று அங்கிருந்து போய்விட்டாள்.

வாரத்துக்கு ஒருமுறையாவது  போன்பண்ணுங்கண்ணே அத மிச்சம் பிடிச்சி எங்ககொண்டு போகப் போறிங்க என்று அன்பை உலுக்கிவிடும் நாசர். இப்படி யான எண்கள் எல்லாம் ஒருகாலத்தில்  நெருக் கமாக இருந்து இப்பொழுது  எட்டாத தொலைவுக்கு போயிருந்தது. ”என்னங்க எல்லார்ட் டயுமா சண்ட போட்டீங்க  முன்ன மெல்லாம் நொய்யி நொய்யின்னு போனடிச் சிக்கிட்டே இருக்கும் இப்பென்ன மாசத்து ஒரு போனக்கூட காணும்” என்கிறவளுக்கு மார்க்சைப் பற்றி என்னசொல்ல ? மாற்றம் சாஸ்வதமானது மட்டுமல்ல ரொம்ப  வலிமிகுந்ததும் தான்.

வரிவடிவில் வந்துபோன ஒவ்வொரு எண்ணாகக் கடந்து போகும்போதும் நினைவுகள்  துயர்வடிவில்  கடந்து போனது. சங்கரராமன் சேர்மன் என்றிருந் தது அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பின்னிரவிலும் நிற்காமல் புனுப் புனு வெனப்பெய்த ஒரு  அடைமழை நாள், காரின் கண்ணாடிகளில் வழித்தோடிய நினைவுவந்தது. பாலுசாரின் மாருதி 800 காரும்,அதன் பின் பகுதியில் ஏற்றப் பட்ட சுவரொட்டிகளும், அன்று சூலக்கரை முக்கு ரோட்டில்  விடிய விடியப் பேசிக்கொண்டிருந்ததும்  நினைவுக்கு வந்தது. அத்தோடு கூட மூன்றுநாள்   சங்க அலுவலகத்தில் தோழர்களோடு குழுமிக்கிடந்த நாட்களும் நினைவுக்கு வந்தது.

சின்னவனாக இருக்கும் போது வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பன்றி குட்டி போட்டிருந்தது.அதில் ஒரு குட்டி இரண்டு மரக் கவளிக்கிடையில் சிக்கிக் கொண்டு வீர் வீரென்று கத்திக்கொண்டிருந்தது.குட்டிப்போட்ட பன்னிக்கு பக்கத்தில போகாத வெறிபிடிச்சிக்கடிச்சிறும் என்று அம்மா பயமுறுத்தியதை யும் சட்டை பண்ணாமல்  சிக்கிக் கிடந்த குட்டியையெடுத்து விட்டான். மறு கனம் எங்கிருந்தோ பிடறி சிலிர்த்து ஓடிவந்த தாய்ப்பன்றி  சுருளிச் சாமியை  தூக்கி எறிந்தது.மயங்கி விழுந்து கிடந்தவனை எடுத்துவைத்துக் கொண்டு அலறிப்பிடிச்சி தலையில தலையில அடித்துக்கொடு அழுதாள் அம்மா. அப்போது  பன்றி கடித்த கெண்டைக்கால் தழும்பும் கூடவே நினைவுக்கு வந்தது.

எல்லா எண்களுக்கும் பெயர் இருந்தது. ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் நட்சத்திரக் குறியிருந்தது. அது யாருடை யதாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க சுருளிச்சாமி மறந்து போன மனிதர்கள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் அந்த எண் யாருடையது என்று கண்டுபிடித்து விட்டான். ஒருநாள்  புறவழிச் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டி ருக்கும் போது ஒரு பெண் ஓடிவந்தாள். சார் நீங்க பேங்லதான வேலபாக்கீங்க, சுருளிச்சாமிதான சார். நா பிகாம் படிச்சிருக்கேன்,சும்மாதான் வீட்ல இருக் கேன், ஒங்க பேங்க்ல ஏதாச்சும் வேலை இருந்தாச்சொல்லுங்க,இது எங்க அண்ணன் வீட்டு லேண்ட் லைன்,எம்பேரு சந்த்ரமதி இப்படி  திடுதிப் பென்று பிரசன்னமாகி ஒரு பயோடேட்டாக் கொடுத்து விட்டு மறைந்து போனவளை மறுபடியும் சுருளி பார்க்கவே இல்லை.முகம் கூட மறந்து போனது.அவள் கண்களில் இருந்த கெஞ்சல்,படபடப்பு இன்னும் அப்படியே   சுவடு மாறாமல் நிழலாடுகிறது. அந்தப்பெண்மேல் எந்த ஈடுபாடும்,ஈர்ப்பும் இல்லை. அசரீரி போல திடீரென்றுவந்த அந்தக் கோரிக்கையும், நம்பிக்கையும் அழிக்க முடியா ததாகிவிட்டது.

குட்டி,பேனா வானா என்று இரண்டு பெயர்கள் இருந்தது. ஜெயராஜும், பாலு சாரும்தான் அவை  இரண்டு பெயர்களும். குட்டி வெறும் மூன்று வருடப் பழக்கம் தான். பபுள்கம் மாதிரி அப்படியே ஒட்டிக்கொண்டான். சாயந்திரம்  சைக்கிளை எடுக்கப் போகும்போது அவனிருக்கும் மாடிக்குப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான் சுருளி. போகும் போது யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆட்காட்டி விரலை உயர்த்தி முகத்தை கெஞ்சலாக வைப்பான். ஒருநிமடம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். மறு கணமே அதே ஆள்காட்டி விரலை ஆட்டி நாக்கைத் துருத்தி முறைப்பான். போனால் கொன்னுறுவானாம்.

கீழே இறங்கி ஒரு கோல்டு பில்டரும் ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிக் கொண்டு,  ரெண்டு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு மேலேறும்போது. என்ன ஒரு நானூறு ரூவா கவர்மெண்டுக்கு நட்டமாயிருச்சா,என்னமா டயர்ட்டா  வாரப்பா, வேல பாத்தவன் மாதிரியே இருக்கியே என்பான். நாப்பது ஜுவல் போட்டுருக்கு,துட்ட எண்ணி எண்ணி இங்கரு ரேகை அழிஞ்சி போச்சி,இதுல இன்னைக்கு ஐநூறுரூவா ஷாட் வேற. ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ”பேத்த பேத்த,ஜோக்கடிச்சா சீரியஸ்சாகிறதப்பாரு,எங்க எனக்கு சிகரெட் என்று பைக்குள் விட்டு சிகரெட்டை  எடுத்துக் கொண்டு வாங்க சார் வெளியே என்று தோளில் கைபோட்டு பால்கணிக்கு இழுத்துக்கொண்டு போவான். அவன் அருகாமை சிகரெட் நெடியும்,நிஜாம் பாக்கு நெடியும் கலந்து மணக்கும்.

விடுமுறை நாட்களென்றால் அவனிடமிருந்து போன் வரும். ஏ சோம்பேறி என்ன தூக்கமா மூஞ்சக்கழுவிட்டு ஒடனே  இங்க  வரணும். அவன் இருக் கானா? ரொம்ப பிகு பண்ணுவான்,வந்தாக்கூப்பிட்டு வாங்க இல்ல உட்ருங்க, ஏம்பா இந்தக்காம்ரேட்ஸ் எல்லாமே இப்படித்தானா? என்பான். ரூமுக்குப் போனால் கிரிக்கெட்டைப்பற்றிப்,  பேசு வான்,குஷ்வந்த்சிங் ஜோக் சொல்லு வான், மெக்சிகோ ஜோக்கும் சொல்லுவான். ஏப்பா ஒங்க தலைவர் என்ன இப்படி லூஸ் மாதிரி ஸ்டேட்மெண்ட் விட்ருக்கார். வால்மார்ட் வந்தா எல்லாஞ் செத்தா போவாய்ங்க  என்பான். விவாதமாகும் சூடுபிடிக்கும்.அவன் வந்ததும் இன் னமும் காட்டமாகும்.அவன் சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவான்.

சுருளியும் குட்டியும் பத்துமணி வரைக்கும் சண்டை போடுவார்கள். மனத் தாங்கலோடு  பிரிந்து போவார்கள். ஒரு நாள்தான்  சுருளி அங்கு போக மாட்டான். மறுநாளே அவனிடமிருந்து போன் வரும்  பிச்சிப் பிடுவேன் பிச்சி ஒழுங்கா ஸ்டுடியோவுக்கு வா என்று அன்போடு கடிந்து கொள்வான். சுருளி யால் தட்ட முடியாது. போனதும் ’இந்த இப்படி சீரியஸ்ஸா முகத்த வைக்கா தண்ணே, ஒனக்கு ஒத்து வராது’ என்று கன்னத்தைப்பிடித்து  இணுங்குவான். அவனக்கூப்பிடு, இன்னைக்கு உள் சொட்டர் என்னோடது என்று உசுப்பி விடு வான். அன்று பின்னிரவுவரை பாட்டும், கதையும், விகடமும்ஆகக் கழியும். பனிரெண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடுவரை வந்து விடைபெற்றுக்கொண்டு போவான்.போகும் போது அந்த தெற்றுப்பல் பளீரென்று வசீகரிக்கும்.

மூன்று வருடத்தில் நண்பனாய்,குகனோடு ஐவராய்,பின்னர் தோழனாயும் மாறிப்போனவன், ஒரு  அதிகாலை விபத்தில் பெருங் குரலெடுத்து கதறக்கதற உற்றார் உறவுகளை உலுக்கி எடுத்து விட்டுப்போனான். அதற்கப்புறம் வாசல் வழிக்கடந்து போகும் எல்லா டீவிஎஸ் விக்டர் பைக்கும் அவனது நினைவு களைக் கிளறிக்கொண்டே கடந்து போனது. இதோ ஐந்து வருடங்கள் ஓடிப் போனது. அந்த எண் உபயோகத்திலிருக்கிறதா இல்லையா என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகளும் சிந்தனையும் இல்லாமல்  மூன்று கைப்பேசிகளுக்கு இடம் பெயர்ந்து இன்னும் சுருளியின் நட்புப் பட்டியலில் இருக்கிறது. அந்த எண்ணுக்கான அழைப்பு பாடலாக சிச்சூர் படத்தில் ஜேசுதாஸின் கொரித்தெரா ஹாவுமேராவை ஏற்றி வைத்திருந்தான்.அது குட்டி அடிக்கடி படிக்கும்   ஹிந்திப்  பாடல். இந்த மூன்று வருடத்தில் மட்டுமல்ல இனி மீதமுள்ள நாட்களிலும் அது  ஒலிக்காது. ஆனாலும்  கிட்டத் தட்ட மூடநம்பிக்கை போன்ற இந்த பாதுகாத்தல் சுருளிக்கு சந்தோசமானதாக இருந்தது.