14.8.12

நைல்நதி காதல் நாகரீகத்தின் தொட்டில். cairo time (சினிமா)



தமிழ்த்திரைப்படங்களை கேமரா இல்லாமல்கூட படம் பிடித்துவிடுவார்கள் போல அருவா இல்லாமல் படமே எடுப்பதில்லை. ஆங்கிலத்திரைப் படங்களென்றால் துப்பாகியால்சுட்டுத்தான் ஜிப்பைக்கூடக் கழற்றுகிறது.
அல்லது நம்பமுடியாத உருவில் பல்லிகளையும் பாச்சான்களையும் வடிவமைத்து அமெரிக்காவை மிரட்டுவதாக கதைகள் ஜோடிப் பார்கள். இடையில் இத்தாலியன் ஜாப் என்கிற ஆங்கிலப்படம் பார்த்தேன். அது ஏற்கனவே பார்த்த மாதிரியே இருந்தது. அடடே நமக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்துவிட்டதா என்று பயந்துபோய் மூளை கசக்கினேன். ஆமாம் அது மங்காத்தா. அப்படியெல்லாம் இல்லை இதோ மெல்லிய பியானோ ஒலி படம் முழுக்க பரவிக்கிடக்க நைல் நதியில் மிதக்கும் ஒரு காதல்கதையைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று கொடுத் திருக்கிறார் இயக்குநர் ரூபா நடா.கதையும் கூட உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி எழுதிய ரூபா நடாவின் நாவல்.

இதுவும் கூட ஒரு நடுவயதுப் பெண்ணின் தனிமையின் அருகே நகர்ந்து போகும் கதைதான். ஆனால் அந்த அமைதியும்,நைல்நதியும்,கழுத்து ஒடியும் உயரத்தில் எழுந்துநிற்கும் பிரமீடுகளும்,மணற்பரப்பும் நம்மை கட்டிப் போடுகிறது. காஸாவில் அமெரிக்க அரசுப்பணிக்காக வந்து தங்கிவிட்ட தனது கணவன் மார்க்கை (டாம் மெக்காமஸ்) மூன்றுவருடங்கள் கழித்து கெய்ரோவுக்கு தேடி வருகிறாள் பத்திரிகையாளர் ஜூலியட் ( பாட்ரீசியா க்ளார்க்சன்). உலகம் முழுவது ம் தாங்கள் விதைத்து வைத்திருக்கும் பயங்கரவாதம் கெய்ரோவிலும் செழித்துக்கிடக்கிறது. காஸாவிலிருந்து கெய்ரோ வரும் வரை அவளுக்கு பாதுகாப்புக்கென தனது பழய்ய மெய்க்காப்பளன் தாரிக்கை (அலெக்சாண்டர் சித்திக்) அமர்த்துகிறான் கணவன் மார்க்.

தனது காதலி இன்னொருவனுக்கு மனைவியானதினால் மணம் உடைந்து போன தாரிக்ஒரு தேநீர்விடுதியை நடத்திக்கொண்டு தனியே வாழ்கிறான். அவர்களிருவரும் ஒருமூன்றுவாரம் ஊரைச்சுற்றுகிறார்கள். கெய்ரோவின் உணவுகள்,தேநீர்,மக்கள்,அவர்களின் வறுமை,அவர்களின் கல்யாணம் அங்குநடக்கிற இசையும் நடனமும், அவர்களின் குக்கா புகை என ஜூலி யட்டை மட்டுமல்ல நம்மையும்  ஈர்த்துவிடுகிற காலாச்சாரம் கெய்ரோ வெங்கும் விரிந்துகிடக்கிறது. அந்தக் காட்சிகளின் பதிவில் நாம் கூடவே பயணிக்கிற உணர்வு மேலிடுகிறது.ஒரு நாள் பொழுதுபோகாமல் தாரிக்கின் தேநீர்விடுதிக்கு போகிறாள் அங்கே ஒரே குடியும் பாட்டும் கும்மாளமுமாக இருக்கிறது.அந்தக்கூட்டம் முழுக்க அவளை விநோதமாகப் பார்க்கிறது. ஏனென்று கேட்கிறாள். இது ஆண்களுக்கான விடுதி என்று கூறுகிறான். ஆண் பெண்ணென்று தனித்தனியாகவா வாழ்கை இருக்கிறது என்றுகேட்கிறாள்.

தாரிக்கின் பழய்யகாதலி  யாஸ்மீனைத்( ஆமினா அன்னாபி )  .கணவனை இழந்துவிட்ட அவள் தாரிக்கின் அளப்பரிய காதலை கண்ணீரோடு நினைவு கூறுகிறாள். அவனோடு திரும்ப வாழ ஆசைப்படுவதாகவும் சொல்லுகிறாள். தாரிக்கிடம் வந்து அதைச்சொன்னதும் தாரிக் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். வாதப்பிரதிவாதங் களோடே நைல்நதியில் படகுப்பயணம் செய்கிறார்கள். பிரம்மீடுகளின் மீதேறி அமர்ந்து கொண்டு கெய்ரோவை வேடிக்கை பார்க் கிறார்கள். பிரம்மீடுகளுக்கு போகும் வழியெங்கும் மணற்பரப்பில் நடப்பதான காட்சி ஒருமுறை யேனும் எகிப்துக்கு போய்வரத்தூண்டும். அந்த மூன்றுவார அருகாமையும் ஒருவருக்கொருவரின் பகிர்தலும் அவர்களுக்குள் மெல்ல மெல்ல வேதியல் விளைவுகளை உண்டுபண்ணுகிறது.

இந்த சுற்றுலா முழுக்க விந்தைகளை அவளுக்கு அறிமுகம் செய்த காரணத் துக்காக பாரம்பரிய அமெரிக்க நன்றியாக ஜூலியட் தரும் முத்தத்தில் தாரிக் கிளர்ச்சியாகிறான். விடுதி அறையின் பொழுதுபோகாத  நிமிடங் களை நகர்த்த அவள் அடிக்கடி தாரிக்கைத் தேடிவருகிறாள். கணவன் மார்க்கின் திரும்புத லோடு கதையின் கடைசி நிமிடங்கள் அழகிய காதல்கவிதையாய் முடிகிறது. கணவனின் அணைப்பிலும் அவனது முத்தத்திலும் தாரிக்கையே அவள் விழிகள் தேடுகிறது. அந்த லிஃப்டின் கதவுகள் மூடும் வரை தாரிக்கின் பிம்பத் தில் நிலைகுத்தி நிற்கிறது ஜூலியட்டின் காதல் கசியும் கண்கள்.

மெசப்படோமியா,நைநதி,எகிப்து என்ற பள்ளிப்பருவத்தில் போரடித்த  மனப் பாடப்பகுதி எழுந்து அலையலையாய் வந்து கவிதைகோர்க்கிற அனுபவம்.

29.7.12

bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.


ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே கதாபாத்திரங்கள். அவர்களு டனான உறவுகள், உணர்வுகள் இவை அணைத்தையும் பார்வையாளர்கள் மேல் பாய்ச்சமுடிந்திருக் கிறது அந்த இயக்குனரால்.

விடுமுறையைக்கழிக்க பேருந்தில் பயணமாகும் ஒரு குடும்பம் ஓரிடத்தில் அந்தக்குடும்பத்தின்  பிரதானப் பெண்ணை மறந்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறது. இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் கணவனோ குழந்தைகளோ அவளைத்தேடி திரும்ப வராததால் பேதலித்துப் போகிறாள். தெரியாத இடம் மீண்டும் எப்படி வீடுபோவோம் என்று அல்ல. எப்படி மொத்தக்குடும்பமும் தன்னை மறந்து போனது என்கிற சிந்தனையில் குழம்பி, தன்னைத்தானே தொலைத்துக்கொள்கிறாள்.அந்த விடுமுறையைத் தனியேகழிக்க விரும்புகிறாள். தன் வாழ்நாளில் ஒருதரமாவது பார்த்துவிட ஏங்கிய வெனிஸ் நகருக்கு போகிறாள் ரோசல்பா.

வெனிஸ் நகரின் மார்க்கபோலோ விடுதியில் தொடர்ந்து தங்கமுடியாத அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த விடுதியின் சேவகர் பெர்னாண்டோவிடம் உதவி கேட்கிறாள்.பெர்னாண்டோ தனது அறையில் தங்க இடம் அளிக்கிறான். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மஸாஜ் மற்றும் அழகு கலை நடத்தும்  க்ராஸி யாவுடன் நட்புக்கொள்கிறாள்.சாப்பாட்டுக்கு துலிப் மலர்கள் விற்கும் ஒரு கடையில்  வேலைக்குச் சேர்கிறாள்.
ஒவ்வொரு நாளும் அறைக்குத் திரும்பும்போது கொஞ்சம் உணவும், துலிப் மலர்கள் மீது செருகப் பட்ட ஒரு கடிதமும் காத்திருக்கிறது. அதை வைத்து விட்டு அங்கிருந்து போய்விடும் எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்தோடு அலையும்  பெர்னாண்டோவை அறிந்துகொள்கிற ஆர்வம் மேலிடுகிறது அவளுக்கு. அவன் வாசித்துவிட்டு அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்கள் அவன்மீது லயிப்பை உண்டாக்குகிறது. அவனது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்கார்டியன் வாத்தியம் பெர்னாண்டோ மீது கூடுதல் ஈர்ர்ப்பை உண்டாக்கு கிறது. அந்த அக்கார்டியனை இசைத்து பக்கத்து அறை சிநேகிதியை சிலாகிக்கச்செய்கிறாள். அவனைப்பின் தொடர்கிறாள். ஊருக்குள் அவனது மகளும் பேரனும் இருப்பதை அறிகிறாள்.அவர்களோடு சேர்ந்து பேரனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கணவனின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சிப்பந்தியை உளவுக்கு அமர்த்தி ரோசல்பாவை வெனிஸ் நகர் முழுக்கத் தேடச்சொல்லுகிறான்.அவனிடம் இருந்து தப்பிக்க நடன விடுதிக்குப் போகிறார்கள் ரோசல்பாவும், பெர்னாண்டோவும்.அங்கே அவளுக்குச்சில கவிதைகள் சொல்லுகிறான், பின்னர் இருவரும் நடனமாடு கிறார்கள்.விடுதியைத்தேடிக்ககண்டுபிடிக்கிற உளவாளி,ரோசல்பாவின் சிநேகிதி க்ராசியாவுடன் உறவுகொள் கிறான். பின்னர் உளவு வேலையை உதறிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். ஊரில் தனது மகன் போதைக்கு அடிமையாகி,பள்ளியில் இருந்து இடைநின்று போவதை அறிந்து வேண்டாவெறுப்புடன் ஊருக்குத் திரும்புகிறாள். அன்றிரவு மிகுந்த எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு செல்லுகிற ரோசல்பாவை கண்டு கொள்ளாமல் தூங்கி விடும் கணவனை எழுப்பி பேசுகிறாள். இனி நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தூங்கிவிடுகிறான்.

வெனிசில் ரோசல்பாவை நினைத்துக்கொண்டே உருகிப்போகிற பெர்னாண்டோ அவலைத்தேடி போகிறான். மீண்டும் ஒரு முறை தன்னோடு நடனமாட அழைக்கிறான்.இருவரும் காதலாகி நடனமாடுகிறார்கள்.மிகச்சாதார ணமாக ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் பரபரப்பு,சண்டை,குரோதம்,திகில்,சஸ்பென்ஸ் என எதுவுமில்லை.அதுமட்டு மல்ல மையக்கதாபாத்திரங்கள் யாரும் இளையவர் இல்லை.ரோசல்பாவாக நடிக்கும் லிசியாமாக்லியட்டாவும், பெர்னாண்டோவாக நடிக்கும் கான்ஸும் நடுவயதுக்காரர்கள்.தவிரவும் படம் முழுக்க ஆங்கில பாணியிலான காதல் காட்சிகள் ஏதும் இல்லை.

ஆனால்

படம் முழுக்க நகர விடாமல் நம்மை ஈர்க்கிற மெலிதான புல்லாங்குழல் இசைபோல காதல் கதை நெய்யப் பட்டிருக்கிறது. சிறுபிராயத்தில் நம்மை வசீகரித்த மூன்றாம் வகுப்பு கனகசுந்தரி டீச்சர்,அடுத்த தெருவுக்கு வாக்கப்பட்டு வந்த மல்லிகா மதினி,மூன்றுவருடம் சிவகாசிப்பேருந்துப்பயணத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த  மின்சார வாரிய தமயந்தி மேடம். இப்படி நினைவுகளின் நிலைத்துப்போன முகங்களின் முதிர்ந்த பிம்பமாய் வருகிறது லிசியா மாக்லியட்டாவின் வசீகரமுகம். சிரிக்கிற காந்தக்கண்களும் அவரது பாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போகிறது. நீர் சூழ்ந்த அந்த அழகிய வெனிஸ் நகர வீதியெங்கும் சுழன்று சுழன்று போய் நடனத்துடனான இறுதி முத்தத்தில் ஜொலிக்கிறது. கனிந்து விழுந்த பழத்தின் வாசனையோடும் ருசியோடும் காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.