25.3.12

இந்த அரை நூற்றாண்டின் ஆகச்சிறந்த போராட்டம்-கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அனு உலை ஆபத்தானதா இல்லை பாதுகாப்பானதா என்கிற கேள்வி பதில்கள் இன்னும் பொதுமக்களைச் சென்றடையவில்லை.தேர்தல் நேரத்தில் 2ஜி அலைக்கற்றையில் திமுகவின் பங்கு பற்றி  ஏற்படுத்தப் பட்ட பரப்புரை போல கூடங்குளம் குறித்த கேள்விகளை ஊடகங்கள் மக்களிடம் எழுப்பத்தவறி விட்டது.  எனவே நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம் கூடங்குளம் அணு உலை  திறக்கப் படாதது தான் என்கிற மூட நம்பிக்கைக்கு மக்கள் நேரடியாகத் தள்ளப்பட்டு விட்டார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங் கள், அந்நியநாட்டு ஆலைகள்,கணினி வழியே நெல்,சோளம், கம்பு,பருப்பு விளைவிக்கும் ஐடி  நிறுவணங்கள் ஆகிவற்றுக்கு அள்ளிக் கொட்டப்படும் மின்சாரம் குறித்து ஒரு நடுநிலை நாளேடும் வாய்திறப்பதில்லை. அவர் கள் டேக்காக் கொடுக்கும் மின்கட்டணப் பாக்கித்தொகை பற்றியும், அதற்கான மொத்த சைபர்கள் என்பதை வெளியே தெரியவிடாமல் லாவகமாகப் பாதுகாத்துக் கொள்வதும் நம்மூர் ஊடகங்கள்தான்.

இந்தியாவில் உள்ள அத்தனை டெல்டாப் பகுதிகளிலும் பெட்ரோலியம், மற்றும் எரிவாயுக்களுக்கு தேவையான கனிமவளங்கள் இருந்தாலும் அவற்றை உபயோகப் படுத்துகிற முனைப்பை அரசுகள் மேற்கொள்ளு வதில்லை. மின்சாரம்  தயாரிக்க வெறும் அனு உலைகளை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை அதுதவிர்த்த அநேக வழிமுறைகள்  இங்கே மலிந்து கிடக்கின்றன. காற்று, கடல்அலை, சூரியவெப்பம், அனல், புனல் எனத்தொடங்கி குப்பைகளில் இருந்தும்,சாணங்களில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். தென் மாவட்டங்களின் பெரும் பகுதி காடுகளை அடைத் துக் கொண்டிருக்கும் வேலிகாத்தான் முட்செடிகளை எரித்து மின்சாரம் தயாரித்தால் மொத்த தமிழகத்துக்கும் மின்சாரம் கொடுக்கலாம். இப்படி யிருக்க  ன் அனு உலையால் மட்டுமே மின்சாரம் எடுப்பேன் என்று தலைகீழாக நிற்கிறது அரசு.

வெளிநாடுகள் வேண்டாமென்று கழித்துக் கொட்டுகிற எல்லாக் குப்பைகளும் இந்தியாவுக்குள் தங்கு தடையின்றி வந்துகொண்டிருக்கிறது. சீனா ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடியே மரங்களை அழித்து  தீக்குச்சிகள்   தயாரிக்கும் முறையைத் தடை செய்து விட்டது. எனவே அங்கே உபயோகமற்றுக் கிடக் கும் தானியங்கி தீப்பெட்டி எந்திரங்களை போட்டி போட்டுக்கொண்டு இறக் குமதி செய்கிறார்கள் சிவகாசியைச் சுற்றியிருக்கும் தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள்.  காயலான் கடை விலையிலான அந்த எந்திரங்கள் மூன்று நான்குகட்ட  கமிஷன்களோடு பெருமையாய் வந்து இறங்குகிறது. அதே அணுகு முறையைத்தான் அனுஉலை மற்றுமல்ல எல்லா  விவகாரத் திலும் இந்தியா பின்பற்றுகிறது.

இந்த தேசத்தில் அறுபது சதமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையின் மீது நோயையும் ஏவிவிடும் அணுக்கதிர்கள் குறித்த பயம்,போபாலில் நடந்த  கசிவைப் போல இன்னொரு முறை நடந்துவிடக் கூடாது என்கிற பயம். எல்லாம்  நியாயமானது. ஆகை யால்  இவ்வளவு காலம் நடக்கும் போராட்டங்களை நியாயமாக அணுகுவது மட்டுமே மக்கள் நல அரசாக இருக்க முடியும். ஒரு கார் தொழிற்சாலை வேண்டாமென்று  நந்திக்கிராமத்தில் நடந்த போராட்டத்தை அந்த அரசு மதித்து  பின்வாங்கவில் லையா?. அதைவிட்டு விட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்த அந்நிய நாட்டுத்தொடர்பு என்கிற பெரிய்ய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதே அரசுதான் அந்நிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இப்போது அதற்கு ஒருபடிமேலே போய் ரவுடிகளை ஏவிவிட்டு ஜனநாயக ரீதியான பொதுக்கூட்டங்களில் ரகளை யைத் தூண்டிவிடுகிறது இந்த அமைப்பு. நேற்று ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் புகுந்து அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார் கள்.ஒரு நியாயமான போராட்டத்தைக் கொச்சை  படுத்த தரங்கெட்ட வகை யில் இறங்குகிற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமே நிகழும். கீரைக் கடைக்கு எதிர்க் கடைமாதிரி உண்ணாவிரதத்துக்கு எதிராக உண்ணும் விரதம் இருக்கிற விநோதம் வேறெங்கும் கேள்விப்படாத ஒன்று. அதே போலப் போராட்டக்காரர்கள் கையிலெடுக்காத வன்முறையை ஆதரவாளர்கள் எடுத்திருக்கிறார் கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இதே போலத்தான் ஐவர் என்கவுண்டர் கொலைகளை விசாரிக்கச் சென்ற உண்மை அறியும் குழுவுக்கும் நிகழ்ந்தது.

ஆனால் ஒரு  அற்புதமான போராட்டஉணர்வை  அறிமுகப் படுத்திய அனு உலை எதிர்ப்பாளர்கள் இந்த மாநில அரசை நம்பிக்கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.

04.03.2012

5 comments:

ஓலை said...

அணு உலை ஆபத்தின் நினைவு குலை நடுங்குது.

JOHNPAUL.S. said...

பதிவின் தலைப்போடு மனம் ஒன்ற மறுக்கிறது தோழர்...
அதென்ன அரை நூற்றாண்டின் ஆக சிறந்த போராட்டம்...?
இது வலுவானதொரு போராட்டம் என்பதில் உடன்படும் நான் "ஆக சிறந்த" எனும் வார்த்தையில் உடன்பட வில்லை...
இது "ஆக சிறந்தது" என்றால்....?
* வாச்சாத்தி மக்களின் சுமார் 20 ஆண்டு கால போராட்டம்...?
* சக்திமிக்க அதிர்வுகளை உருவாக்கிய சாலை பணியாளர்களின் போராட்டம்...?
* ஒடுக்குமுறையை உடைத்தெறிந்த உத்தபுரம் போராட்டம்..?
இவற்றை எல்லாம் என்ன வென்று சொல்வது தோழர்...
கூடங்குளம் போராட்டம் கிறிஸ்தவ மிசனரிகள் நடத்திய போராட்டம் அவ்வளவு தான்...
போராட்டத்திற்கு சென்று வருவதற்க்கான செலவை கோவில் அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளவும் என்று உவரி அந்தோனியார் கோவிலில் அறிவிப்பதை நேரடியாக கேட்ட பிறகும், மதுரை கத்தோலிக்க பேராயர் தான் இந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு போராட்டத்தை முடித்து வைக்கிறார் என்று தெரிந்த பிறகும் இந்த பதிவை சாதரணமாக கடந்து போக முடியவில்லை தோழர்.....

காமராஜ் said...

நான் இதற்கு விரிவாகத்தான் பதில் சொல்ல வேண்டும்.சாலைப்பணியாளர்கள் போராட்டத்தையும்,உத்தப்புரம் போராட்டத்தையும் மிக நெருக்கமாகப்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.இத்தோடு சேர்த்து வாச்சாத்திக்கொடுமைகளுக்கெதிரான போராட்டமும் இணைந்து எல்லாம் போராட்டங்கள் தான் எனினும் உக்கிரமும் விடாப்பிடியான மக்கள் திரளும் நீங்கள் சொன்ன யாவற்றையும் விட அதிகமானது என்பதே சரி.நீங்கள் சொன்ன மூன்றும் சிபிஎம் கட்சி தலைமைதாங்கி நடத்தியது என்பதால் அதைவிட மற்றது ஒசத்தியில்லை என்ற கருத்தைச்சொன்னால் அது நேர்மைக்கும்,மார்க்சீயக்கருத்தியலுக்கும் எதிரானது தோழர்.பாடிஸ்டாவை எதிர்த்த போரில் சே வோடு பாதிரிகளும்,மலைத்திருடர்களும் இணைந்திருந்தார்கள் என்பது வரலாறு.எனவே விருப்பு வெறுப்பின்றி அனுகினால் இது ஒரு மக்கள் திரளுடன் உண்டாகும்போர்க்குணத்துக்கான முன்னுதாரணமாகவும் வரலாறாகவும் தெரியும்.

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

நன்றி சேதுசார்