24.2.11

நெருங்கி வருகிறது புரட்சி.


இன்று நகரின் திருப்பங்கள்,ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள்,குடிசை வீடுகள் நிறைந்த தெருக்கள் என எல்லா இடங்களிலும் கொடிகள் தோரணமாகி இருக்கின்றன.அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்,நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா என்கிற புரட்சிப் பாடல்கள் காதைக்கிழிக்கின்றன.நகரில் இருக்கிற எல்லாப் பெருந்தெய்வக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும்,பொங்கலும் சுண்டலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.நெடுநாட்கள் காணாமல் போயிருந்த தமிழக இரண்டாம் புரட்சியின் பழய்ய முகம் தெருக்கெளெங்கும் சிரித்த முகத்தோடு திரும்பி வந்திருக்கிறது. தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த அலைவரிசையில் அவர்களின் தியாக வரலாறு உருக்கமான பின்னணிக்குரலில் காட்சியாகிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க ? என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.

போன வாரம் ஒரு பொது விநியோகத் துறை ஊழியரைப்பார்த்தேன் ’ஸ்ஸ்ஸ்அப்பாட தெனந்தினம் நிறுத்துப்போட்டு பொஜம் எறங்கிப்போச்சு, இனி எண்ணி ரெண்டுமாசந்தான்,’  ‘ அதுக்குப்பிறகு?. ‘ ’அதுக்குப்பிறகு இந்த ஒத்த ரூவா அரிசி,நூறுநாள் வேலையெல்லாம் இருக்காது’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார். இதுபோல என்ன என்ன சந்தோஷமெலாம் மீண்டும் திரும்பப்போகிறதோ.

21.2.11

பினாயக்சென் விவகாரம்:ஊடகம்,ஜனநாயகம்,வெகுமக்கள்


வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதல் தர மாணவர்.அதே மருத்துவ மனையின்  நிர்வாகத்துக்கும், ஏழை எளிய நோயாளிகளுக்கும் ஒருசேர பிடித்துப்போன மக்கள் மருத்துவர்.ஜவஹர்லால் நேரு பலகலைக் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பொறுப்பு. இவை யாவும் அவரின் தாகத்தை அடக்க முடியவில்லை.அங்கிருந்து சட்டீஸ்கர்  டல்லி ரஜ்ஹாரா இரும்புச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யப்புறப்பட்டுப் போனார். அவருடன் அவரது மனைவி இலினாவும் பயணமானார். இயல்பிலேயே ஏழைகள் மீதும் விடுபட்ட ஜனங்கள் மீதும் அளவுகடந்த அக்கறை கொண்ட அவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிகள் மேல் அக்கறை வந்ததில் வியப்பேதும் இல்லை.

ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேல் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட அவருக்கு சிஎம்சி மருத்துவமனை இம்மாதிரியான பணிகளுக்கு அளிக்கப்படும் ’பால்ஹாரிஸன்’ விருது தருகிறது. 1981 ல் சத்தீஸ்கரில் பிரபலாமான தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குஹா நியோகியுடன் நட்பு உண்டாகி இரும்புச் சுரங்கத் தொழிலாளத் தோழர்களுக்கென பிரத்யேக மருத்துவமனை ”ஷாகித்தை” உருவாக்குகிறார். பின்னர் சுரங்க நிர்வாகமும் அடியாட்களும் இணைந்து  சங்கர்குஹா நியோகி யைக் கொலை செய்கிறது. அதற்கு நீதி கேட்டுத் தெருவில் இறங்கிய அப்பாவி மக்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இறையாக்குகிறது அரசு.அதில் இறந்து போன, அங்கஹீனமான ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் அமைப்பை நிறுவுவதிலும் சென் இணைந்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாய் பியுசிஎல் அமைப்பின் மாநில பொறுப்பும்,அகில இந்திய பொறுப்பும் வருகிறது சென்னுக்கு.

உலகமயமாதலின் நேரடிக்கொடூரமாக இந்திய கனிமவளங்கள் அயல் முதலாளிகளுக்கும் உள்ளூர் முதலைகளுக்கும் தாரை வார்க்கப்படுகிறது. எந்தேசம் கொள்ளைபோகிறதே எனும் கோபம் ஆதிவாசிகளுக்கு வருகிறது.அதற்கு எதிராக எழும்பும் மக்கள் கிளர்ச்சியைத் தடுக்க சல்வாஜூடும் என்கிற எதிர்ப்புரட்சி அமைப்பு உருவாகிறது. சல்வாஜூடும் என்கிற கைக்கூலிகள் ஆதிவாசிகளல்லாத உயர் சமூகத்திலிருந்து தயாரிக்கபடுகிறார்கள்.வெறும் மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துக்கு பணியிலமர்த்தப்படும் அவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாகிறார்கள்.
அது போக அவர்களுக்கு உள்ளூர் முதலாளிகள்,அவர்களின் எடுபிடிகளான காங்கிரஸ்,பாஜக,மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகளின் தார்மீக ஆதரவும் நிதி உதவியும் கிடைக்கிறது. அவுட்சோர்சிங் முறையில் ஜாதியப் பற்றை, முதலாளித்துவப் பற்றை உருவாக்கி அவர்களுக்கு வெறியூட்டுகிறது.

இப்படி அரசு மற்றும் ஆளும் எதிர்க்கட்சிகளின் செல்லப்பிள்ளைகளான அவர்கள் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இந்த தேசத்தில் நடக்கும் வன்கொடுமைகள் மொத்தத்தையும் ஆதிவாசிகளின் மீது நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக ஆதிவாசிப் பெண்கள் மீது சொல்லக்கூசும் செயல்கள் நடந்தேறுகிறது. பியுசிஎல் அமைப்பின் மாநில பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கரம் நீட்டுகிறார் பினாயக்சென். இதன்மூலம் இந்திய அதிகார,ஜாதிய,முதாலாளிகளின் கோபத்துக்கு ஆளாகிறார் மருத்துவர் சென். தன்னை ஆதரிக்கவேண்டும் அல்லது அடிபணியவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவதொருவழியில் தீர்த்துக்கட்டப்படுவாய்.இது அதிகார மையங்களின் விதி.அது சென் மீதும் செலுத்தப்படுகிறது. குறி வைக்கப் படுகிறார். வழக்கு ஜோடிக்கப்படுகிறது.பிடிபட்ட மாவோயிஸ்டுகளோடும், ஆதரவாளர்களோடும் தொடர்புபடுத்தி கதைதிரித்து வழக்கு  நடக்கிறது. வளமை போல் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்மானிக்கப் படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மூன்று வருடம் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது  2008 ஆம் ஆண்டு உலகசுகாதார நிறுவனம் அவருக்கு மனித உரிமைகளுக்கான  ‘ஜோனதன்மான் ‘ விருது கொடுத்து கௌரவிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற அறிவியல் அறிஞர்கள்,நோபல் விருதுபெற்றவர்களடங்கிய 22 பேர் குழு சென்னுக்காக பிரத்யேக கடிதம் ஒன்றை இந்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்புகிறது. இருந்தும் சென்ற 2010 டிசம்பர் மாதத்தில் அவரோடு மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குறுகிய பிரதேசத்தில் மருத்துவ பணியாளராகவும்,ஜனநாயக ஆர்வலராகவும் இருந்த சென் இந்த தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள்,ஜனநாயக அமைப்புக்கள்,உலக அறிஞர்கள் தூக்கிப்பிடிக்கும் பதாகையாக மறிக்கொண்டிருக்கிறார்.

(நன்றி காலச்சுவடு பிப் 2011,பினாயக்சென்: ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி: க.திருநாவுக்கரசு)

எத்தனை காட்சி ஊடகங்கள் இதை பொருட்படுத்தியது.எத்தனை அச்சு ஊடகங்கள் விலாவாரியாக, பத்திபதியாய் எழுதியது.எத்தனை டீக்கடை பெஞ்சுகளில் பேசுபொருளானது.எத்தனைபேர் இதை எழுதி ஹிட் வாங்கினார்கள்.

இந்த தேசம் எதைப் பேசுவது எதைப் புறந்தள்ளுவது என்கிற நுண்ணரசியலில் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்கிறது. காங்கிரஸ்  அல்லது  பாஜக -, திமுக அல்லது அதிமுக இந்த இரண்டில் ஏதாவதொன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அரசியலுக்கு நாம் ஜனநாயகம் என்றும் பேர் சூட்டிக்கொள்கிறோம்.உலகின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும்  அதைக்கண்டு பொங்குவாயானால் நீ என் தோழன் என்று சொன்னான் உலக புரட்சி நாயகன் சே.ஆனால் இங்கே கிடைக்கும் புரட்சிக் கருத்துக்கள் தன்வயப்பட்டவையாகவே இருக்கிறது. தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்களில் வெளியிலும் வலையிலும் சென்னைப்பற்றிய பிரமாதமான எந்தக்குறிப்பும் இல்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட அநீதி ஒரு ஜாதிக்கு, ஒருகட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு மட்டும் நடந்த அநீதியாக சுருக்கிப் பார்க்கிற வியாதி நீடிக்கிறது இங்கே.

இலங்கை இடர்பாடுகள்மேல் வைத்திருக்கிற உக்கிரப் பார்வை உள்ளூர் கொடுமைகளில் பிசகுகிறது, பின்வாங்குகிறது வாளா விருக்கிறது.மீனவர் படு கொலைநடந்த அதே காலக் கட்டத்தில்தான் உத்தப்புரம் கோயில் நுழைவும், தாமரைக் குளம் தலித் வீடுகள் சூறையாடப்பட்டதும் நடந்தது.ஆராசா தலித் என்பதால் குறிவைக்கப்படுகிறார் என்று முதல்வர் சொன்னதும் உலகம் முழுக்க எள்ளி நகையாடப்படுகிறது. மிகச்சரி. தவறு செய்தவர்களுக்கு என்ன ஒதுக்கீடு வேண்டிக்கிடக்கிறது மிக மிகச் சரி.ஆனால் ஒரே ஊருக்குள் இருக்கிற சகோதர தமிழனை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறாயே தமிழா,தமிழக அரசே என்று ஒரு பலத்த குரல் எழும்பியிருக்கிறதா.2000 வருடங்களாக இப்படி ஒரு ஓங்காரக் குரல் ஒலிக்காதா என்று இந்திய தலித்துகளின் காதுகள் ஏக்கத்தில் இருக்கிற விஷயம் தெரியுமா ?

அது தெரிந்துகொள்கிற வரை புரட்சிக் கருத்துக்கள் தழல் வீரம் குன்றிப்போய் வெறும் சுயசொறிதல்களாக மட்டுமே நீடிக்கும்.பொங்குகிற கடல்மாதிரி,
பற்றி எரிகிற காடு மாதிரி, வானிடிந்து பேய்கிற பெருமழை மாதிரி புரட்சி எல்லோரையும்  ஏந்திக்கொள்ளவேண்டும். இதில் ஒதுக்கீடு கேட்பது நகைப்புக்குறியது. எனில்  ஒதுக்குவது ? அது புரட்சி என்கிற வார்த்தையைக் கொச்சைப்படுத்துவது.

19.2.11

வசியக்காரனும், அடுத்தவீட்டு செல்லப்பிராணிகளும்


செல்லப்பனுக்கு நாய்கள் என்றால்  ரொம்பப்பிடிக்கும் ஆனால் அவன் ஒரு போதும் நாய்கள் வளர்த்ததில்லை.அதற்கு ரெண்டுகாரணங்கள் இருக்கிறது.ஒன்று ரெண்டுவேளைக்கஞ்சி குடித்தாலே அது கடவுள் கொடுத்த கொடுப்பினையாகிற சொத்து சுகம். இருக்கிற கூரை வீட்டில் ஆள் படுக்கவே இடம் பத்தாமல் மடத்துக்கும் வேதக்கோயிலுக்கும் அலையவேண்டியிருக்கிறது. இதில் நாயை வைத்துக்கொண்டு காபந்து பண்ண எப்படி முடியும். ரெண்டு இந்த நாய் பூனை,ஆடு,கோழிகளுக்கு வீட்டு அடங்கல்,பட்டா, விஸ்தீரணம் தெரியாது.தவிரவும் பங்காளி வீட்டுக்கார செல்லையக்கொத்தன் ஒட்டி ஒறவாட்றானா, இல்ல ஏதாச்சும் குத்தங்கண்டு பிடிக்க காத்திருக்கிறானா என்பது கண்டு பிடிக்கமுடியாது. இருக்கிற பிரச்சினையில் சாயங்காலமும் ராத்திரியும் சண்டைபோட்டுக்கொண்டு அலைய முடியாது என்கிற தீர்மானத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில்லை.

ஆனால் செல்லப்பன் தெருவில் நடந்தால் ஊர்க்காட்டு நாய்கள் குதியாட்டம் போட்டுக்கொண்டு பின்னால் ஓடியாரும்.கையில் இருக்கிற சீனிக்கிழங்கு,சேவு,வட்டரொட்டி எதுவனாலும் பாதி பிச்சு போட்டுவிடுவான்.திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஒண்ணு எட்டத்தில் ஒண்ணு தூரத்தில் ஒண்ணு இப்படி எல்லை வகுத்துக்கொண்டு நிக்கும். ”‘சேடு ஓடுங்க சோத்து மணம் பிடிச்சுக்கிட்டு சொம்ம சேந்து வந்திருவீகளே பிள்ளைய ஒருவா திங்கவுடாம” என்று வெளக்கமாத்தக் கொண்டு அம்மா விராட்டுவாள். ஆனாலும் அப்படியே ஒரு எவ்வு எவ்வி  போக்குக் காட்டிவிட்டு நொடியில் திரும்பிவந்துவிடும் அத்தணை நாய்களும். ”ஆக்குனது காப்பிடி அதுல நாய்க்கு பங்குவச்சிட்டு அரவகுத்தோடு போயிருவான்,கிறுக்குப்பிள்ள” என்று சொல்லிக்கொண்டே தந்து பங்கில் கொஞ்சத்தை எடுத்து கொண்டு வந்து வட்டிலில் தட்டிவிட்டுப்போவாள்.

வாங்கி கொண்டு வந்து வீட்டில் கட்டி கொஞ்சநாள் கஞ்சி ஊத்திவளர்த்துவிட்டு பின்னாடி தெருவில் அலையவிடுவதுதான் ஊர்வழக்க
ம்.அந்த நன்றிக்கு நாய்கள் வீட்டுவாசலில் படுத்துக்கிடக்கும்.இப்படித்தான் கட்டத்தொரை வீட்டு  செவல நாய் செல்லப்பன் பினாடியே அலஞ்சது. நம்ம வீட்டு நாய் ஊராம்பின்னாடி சுத்துதேன்னு அவனுக்கு வெலம்முண்ணா வெலம்.அவங்கம்மாவோ ஊசிப்போன சோத்தக்கூட நாய்க்கு வைக்க மாட்டா,அதையும் கொண்டு போய் ஆட்டுக்கு வச்சிருவா.ஆட்ட வளத்தா துட்டுவரும் நாய வளத்தா ஊர்ச்சண்ட தான் வரும் என்கிற தத்துவக்காரி அவள்.அது செல்லப்பன் பின்னாடியே சுத்துவதற்கு செல்லப்பன் போடும் சோறுமட்டுமல்ல,அவன் கூட அலையும் போராப்போட்ட பொட்ட நாயும் காரணம்.ஊரெல்லையில் நின்றுகொண்டு விசில் அடித்தானென்றால் ஒட்டுமொத்த நாயும் கூடிவிடும்.கூட்டிக்கொண்டு காட்டுவழியே ஓடுவான்.தூரத்த்லிருந்து பார்த்தால் செல்லப்பன் நாய்போலாவான்.அவைகளெல்லாம் மனிதர்களாகும்.விசித்திரம் நிறைந்த கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். கையில் கிடைக்கிற பொருட்களைத்தூக்கி வீசுவான் அதை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க அதுகளுக்குள் போட்டி வரும். ஆனாச்சண்டை வராதபடி பழக்கப்படுத்தியிருந்தான்.

நாய்களுக்குள்ளசண்டை வந்தாலே பிடிக்காத செல்லப்பன் மனுசங்களுக்குள் சண்டைவந்தா சும்மாருப்பானா. சீரங்காபுரத்துக்கும், இவிங்களுக்கும் சண்ட நெரு நெருன்னு வந்தது.காரணம் ரொம்பப்பெருசில்ல  ரேசங்கடை வரிசையில் ஊர்க்காரன் முந்திப் போயிட்டானாம் பின்னாடி வந்த சீரஙபபுரத்துக்காரன் களவாண்டு கஞ்சி குடிக்கிறவனெல்லாம் துட்டுக்குடுத்து ரேசன் அரிசி வாங்க வந்தா இப்பிடித்தான் என்று சொன்னானாம்.அது வாய்த்தகறாராகி,அடிபுடியாகி தீப்பத்திக்கொண்டது.அன்று சாயங்காலம் ஊரெல்லையில் அருவா, கம்பு,கோபம் துருத்திக்கொண்டு நிற்க சிந்திக்கிற மூளை செயலற்றுபோனது. செல்லப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சமாதானம் சொன்னான்.”போடாப் பொண்டுகப் பெயலே, இனியும் சும்மா கெடந்தா நாமெல்லா சேல கெட்டிக்கிட்டு அலைய வேண்டியதுதா” என்று சாமியாடினான் சண்டியர் சல்வார்பட்டியான்.

பேசிக்கொண்டிருந்த செல்லப்பன் படாரென்று தரையில் விழுந்து கையைக்காலை வெட்டினான்,வாயைக்கோணலாக வைத்துக்கொண்டு எச்சிலை வெளியே தள்ளினான். ”ஏ சனங்கா செல்லப்பனுக்கு காக்கா வலிப்பு வந்திருச்சி” என்று யாரோ குரல் கொடுக்கவும்.கூட்டம் எதிர்த்திசைக்குத் திரும்பி செல்லப்பனை தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடியது.ரெண்டு பேர் அருவாளைகையில் கொடுத்தார்கள்.ஒருத்தன் ஓடிப்போய் சண்டு வத்தல் எடுத்துக்கொண்டு வந்து அடுப்புக்கங்கில் போட்டு புகைவரவைத்தான். ஒருத்தன் மாரியம்மன் கோயில் திண்ணீரெடுத்துவந்து போட்டுவிட்டான். அம்மக்காரி அழுது புலம்பினாள்.இப்படியே ஒரு ஒரு மணிநேரம் ஆனது. கூட்டத்தின் கோபம் குறைந்திருந்தது.”செரி பெரியாளுகள உட்டு நாயங்கேப்பொம்” என்று முடிவுக்கு வந்தார்கள்.”ராத்திரி இதென்னப்பா நம்ம வம்முசத்தில யாருக்குமில்லாத நோயி” ஒனக்கு என்று அம்மை கேட்டாள். சும்மா கெட எனக்கு வலிப்பு வரலன்னா ஊர்க்காரம் பூராம்ப் போயி போலீஸ்டேசன்ல காத்துக்கெடக்கனும்” என்றான்.கிறுக்குப்பெய புள்ள என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த கொழம்புச் சட்டியைக் கொண்டு மண்டையில் இடித்து விட்டு அடுப்பைப்பார்க்கப்போனாள்.

கம்மாய்க்கு குளிக்கப்போகும் போது கூடவரும் நாய்களையும் தூக்கி தண்ணிக்குள் போடுவான்.முள்குத்தி கால்தாங்கும் நாய்களுக்கு மண்ணெண்னெய் ,ஊத்தியோ,மஞ்சப்பத்துப்போட்டோ வைத்தியம் பார்ப்பான்.பக்கத்தில் வந்ததும் அது உரசும் இவன் தலை தடவிக் கொடுப்பான் அப்படியே உடலை சுருக்கி அவனுக்கு மரியாதை செய்யும். நாய்களென்ன பேய்கள் கூட அண்டாத கட்டத்தொர,வீட்ல கோபம் வந்தாக்கூட நாயைக்கம்பெடுத்து விளாசுவான்.ஒருநாள் மிச்சம் வச்ச சோத்துத் தட்டில் வாய் வச்சு திண்ணதுன்னு அருவாளெடுத்து வீசி விட்டான்.நடு முதுகில் காயத்தோடு அலைந்தது.செல்லப்பன் தான் டீத்தூளும்,மஞ்சத்தூளும் கொழைச்சு முதுகில் போட்டுவுட்டான். பின்ன என்ன மயித்துக்கு கட்டத்தொர பின்னால அந்த நாய் அலையும்.

”எப்பா செல்லப்பா நாப்பிராணி மேல இம்புட்டு ஆச வச்சிக்கிட்டு ஏ ஒரு குட்டிகூட வாங்கி வளக்கமாட்டிங்ற” என்று கேட்கும் மரியண்ணக் கிழவனுக்குச் சொல்ல அவனுக்கு ஒரு சேதி உண்டும்.ஏ தாத்தா மனுசப்பெய தான் வீடு,காடு,பணம் சாதின்னு பிரிச்சுப் பாக்கான் இந்த வாயில்லாப் பிராணிகளுக்கு அதுகெடயாது. அதுகளுக்குங்கொண்டு போய் நம்ம சாக்கடைய ஊட்டி வளக்கவா. ”இங்க பார்றா எங்கூருல கூல் குடிச்சி வளந்த பிள்ளைக்கு இருக்குற புத்தியெ” என்று சொல்லிக்கொண்டே மம்பட்டியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பெருமித்தத்தோடு கிளம்புவான் மரியண்ண கிழவன்.