16.7.09

நிஜத்தின் காலில் மிதிபடும் மாயபிமபங்கள்.







நேற்றிரவு சாப்பிடும் நேரத்தில் அபிக்கும், ஆதிக்கும் சண்டை நடந்தது. இதோடு சேத்து 127 வது முறையாக பொய் வழக்குப் போட்டு சிறைக்குத்தள்ள எத்தனித்துவிட்டான் ஆதி. பால்ய காலத்து கள்ளம் போலீஸ் விளையாட்டில் கூட சில வரம்புகளும் விதிமுறைகளும் உண்டு. உண்டா இல்லையா ?. இந்த திருச்செல்வம் ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறார் என்று தெரியவில்லை.


ஒரு பெண் வாழ்வை எதிர்த்துப் போராடுகிறாள் என்பதை வலிந்து, வழிந்து, வலியுறுத்துகிறார். சொல்லவேண்டும், அந்த வகையில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அபியை சிரிப்புப் போராளியாக்கி விடுவதுதான் ரொம்பப் பாவமாக இருக்கிறது. அப்றம் செந்தமிழரசி ஐபிஎஸ். இரண்டையும் பார்க்கையில் பழைய்ய ராமாயணப்படம் பார்த்த அலுப்பு மேலிடுகிறது.


லீனா மணிமேகலையின் ஆவணப்படம் " தேவதைகள் " SIGNS2007 ஆம் ஆண்டுக்கான விருதுபெற்றபடம். எங்காவது கிடைத்தால் பார்க்கவேண்டும். மூன்று பெண்கள் பற்றிய காத்திரமான பதிவு அது. நடுக்கடல் போய் மீன்பிடிக்கும் ராமேஸ்வரம் பெண்கள். கணவனை இழந்த பின் பிழைப்புக்கு இறைச்சியை தலைச்சுமையாய் விற்கிற இரண்டாவது பெண், வெள்ளிசெவ்வாயில் சாமியாடிக்குறி சொல்வார். மூன்றாவதை பார்க்க கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் அனாதைப் பிணங்களை வாங்கிப் புதைக்கும் ஒரு பெண் பற்றிய பதிவு அது. அடிக்கடி அவள் பணியிடத்துக்கு வரும் ஆடவன் மித மிஞ்சிய போதையில் பினாத்துவதும், அதை அவள் கையாள்வதுமானகாட்சிகள் மாயபிம்பங்களை சுக்குநூறாக்கும். ஆனால் எந்தக்காலத்திலும் இந்த காட்சிகள் இரவு ஒண்பது மணிக்கு தொலைக்காட்சியில் இடம்பெறாது. அதுவரை நமது மனைவிமார்களும் தாய்மார்களும் கண்கலங்கியபடி ஆதியைச்சபிப்பதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.


திருப்பரங்குன்றத்துக்கு அருகில், திருநகரில், தேசிய நெடுஞ்சலையோரம் ஒரு இருசக்கரவாகன பஞ்சர் கடை இருக்கும்.அது செய்தியல்ல. அதை நிர்வகிக்கிறவர் பெண் அதுவும் கூட செய்தியல்ல. அந்த பஞ்சர் தொழில் பார்ப்பவர் கடையின் முதலாளியான ஒரு பெண் என்பதும், சக்கரங்களைக் கழற்றாமலே பஞ்சர் பார்க்கும் வல்லமை படைத்தவர் என்பதையும் தெரிந்து கொண்டால் செந்தமிழரசியும், அபியும் வருஷக்கணக்கில் நம்மைக் கிச்சனங்காட்டுவது தெரியும்.

16 comments:

Karthikeyan G said...

Sir, உண்மையை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

அக்னி பார்வை said...

அருமை சார்

Praveenkumar said...

அண்ணே!
பிரமாதமாக சொல்லியிருக்கீங்க.....
பாராட்டுகள்....

செல்வநாயகி said...

///ஆனால் எந்தக்காலத்திலும் இந்த காட்சிகள் இரவு ஒண்பது மணிக்கு தொலைக்காட்சியில் இடம்பெறாது. அதுவரை நமது மனைவிமார்களும் தாய்மார்களும் கண்கலங்கியபடி ஆதியைச்சபிப்பதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.///



:((

அன்புடன் அருணா said...

புரியலியே காமராஜ்?????@#$%

காமராஜ் said...

வாருங்கள் கார்த்திகேயன்.வணக்கம்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வாருங்கள்,வணக்கம் நன்றி அக்கினிப்பார்வை

காமராஜ் said...

வணக்கம் பிரவீன்குமார். உங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி செல்வநாயகி மேடம்

காமராஜ் said...

வணக்கம் அருணா மேடம்.
அவ்வளவு புதிராகவா இருக்கிறது ?
கேலி தானே ?.

காமராஜ் said...

//?????@#$%//

சும்மாவே நான் கணக்கில் மக்குப்பிள்ளை.
இவ்வளவு பின்னங்களோடு,
இப்படி கடினக்கேள்விகளை கேட்டா எப்டி மேடம்

அகநாழிகை said...

காமராஜ்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
லீனாவின் குறும்படம் அவரிடமே கேட்கலாமே.. உங்களுக்கு தேவையெனில் அவரது அலைபேசி எண் தருகிறேன்.
மற்றபடி நீங்கள் முதலில் எழுதியிருப்பது தொலைக்காட்சி தொடர் குறித்து என எண்ணுகிறேன். (முதலில் புரியவில்லை)
அதையும் லீனாவின் படத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்க வேண்டாமென எண்ணுகிறேன்.

பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஈரோடு கதிர் said...

//அந்த பஞ்சர் தொழில் பார்ப்பவர் கடையின் முதலாளியான ஒரு பெண் என்பதும், சக்கரங்களைக் கழற்றாமலே பஞ்சர் பார்க்கும் வல்லமை படைத்தவர் என்பதையும் //

மிகப்பெரிய சல்யூட்

காமராஜ் said...

வாருங்கள் வாசுதேவன். லீனா மணிமேகலையின் "தேவதைகள்" திருவணந்தபுரம் சைனஸ் ஆவணப்படவிழாவில்
பார்த்துவிட்டேன்.எங்கள் படமான " இதுவேறு இதிகாசமும் " அந்தப்போட்டியில் கலந்துகொண்டது. அதுமாதிரி விஷயங்கள்
கவனப்படாமல் இருப்பது குறித்த ஆதங்கம் தான் பதிவு. சரிவர சொல்லப்படவில்லையெனில் வருந்துகிறேன்.
தனியாக அந்தப்படம் குறித்து விரிவான பதிவு இருக்கிறது. நன்றி வாசுதேவன்.

காமராஜ் said...

நன்றி தோழர் கதிர். நன்றி

பொ.வெண்மணிச் செல்வன் said...

சீரியல்கள் பார்கிறீர்களா? சகிப்புத்தன்மை நிறைய வேண்டுமே அதற்கு. "கிச்சனங்காட்டுவது" வீட்டில் பேசி சென்னையில் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிற வார்த்தை(கிண்டலுக்கு பயந்துதான்). நன்றி!