14.7.10

இந்திய விடுதலையும், தலித் விடுதலையும்

அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான தலித்துகளின் போராட்டம் எனும் நூலின் தமிழாக்கத்தின் ஒருபகுதி.




எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்
எல்லோரும்  ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும்  இந்நாட்டு மன்னர்.



பாரதியின் கனவோடு காத்துக்கிடந்தது காலம். அது கனிந்தது. அந்த ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம்
நாள் நள்ளிரவு பணிரண்டு மணிக்கு. ஏன் இரவு பணிரண்டு மணி எனக் கேட்டால் அர்த்தமுள்ள இந்து தத்துவத்திலிருந்து பக்கம் பக்கமாக மிட்டாய்க்கதைகள் வரலாம். எந்த வேதம் இந்திய மனிதர்களைப்பிரித்ததோ, எந்த வேதம் ஒரு பெருவாரியான ஜனங்களை ஊரை விட்டு விரட்டி புற ஜாதியினராக்கியதோ, எந்த வேதம் அதைக்கேட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தலித்துக்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னதோ அதே வேதத்திலுள்ள ஆகம விதிப்படி தான் இந்த இந்தியாவுக்கு நள்ளிரவில் விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டது.விடுதலைக் கப்புறம் நேரு தலைமையில் உருவான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கியது. அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாதுகாப்புக் குறித்து பல அடிப்படைச்சரத்துக்கள் இயற்றப்பட்டன.

15 வது ஷரத்து.
------------
மத இன ஜாதி மற்றும் பால் பாகுபாடுகளிலிருந்து விடுதலை அடைவதற்கான உரிமையை
வழங்குகிறது

16 வது ஷரத்து.
------------
தலித்துகளுக்கு சமுதாய மற்றும் கல்வியின் மூலம் கட்டாய வளர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறது. அது மட்டுமில்லாமல் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவலியுறுத்துகிறது. தீண்டாமைக்கொள்கையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்று வறையறுக்கிறது.   

23 வது ஷரத்து
------------
வேலைபார்க்கிற இடங்களில், பொருளாதரா ரீதியாக மட்டுமல்லமால், சமூக மேலான்மையால் நிர்ப்பந்தப்படுத்தப்படும் தலித்துகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. அதோடு மட்டுமில்லாது மத்திய மாநில அரசுகளில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது இடஒதுக்கீடு அளிக்கிறது.

25 வது ஷரத்து
------------
இந்தியர் யாவரும் தங்களிஷ்டப்படி எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதில் இணைந்துகொள்ளும்அடிப்படை உரிமை.

34 வது ஷரத்து
------------
பாராளூமன்ற, சட்டசபை , பஞ்சாயத்து தேர்தல்களில் அதிகாரப்பரவலுக்காக தலித்துக்கள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்குகிறது.

46 வது ஷரத்து
------------
கல்வி மற்றும் பொருதார நிலைமகளில் தலித்துகளின் நிலைமயக் கவனித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ சிறப்புக் கண்கானிப்பு வேண்டுமென உறுதி செய்திருக்கிறது.இது தவிர மிகப்பிரபலமான பி சி ஆர் ( ப்ரொடெக்சன் ஆப் சிவில் ரைட்ஸ் ஆக்ட்- 1955 )பி சி ஆர் ஆர் சட்ட ம் ( 1977 ), வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் ( 1989 ) ஆகியவையும் இன்னும் இருக்கின்றன.

................... இந்த சட்டங்கள் பூராவும் அமலாகிப் பூர்த்தியடைந்திருந்தால் எப்போதோ கீழ் மேலென்ற நிலை மாறியிருக்கும். இந்தியா எந்தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன்பிரந்தோரென்று சொல்லியபடி தெருக்களில் ஜாதி மத பேதம் மறந்து குழந்தைகள் ஓடித்திரிந்திருக்கும். ஆனால் இங்கே இன்னும் வாச்சாத்தி, மாஞ்சோலை, வீதிகளில் மிதிபட்டுக்கிடக்கிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலிகளில்
இன்னும் இரண்டாயிர வருட முடைநாற்றம் உட்கார்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கிராமக்குடிநீர் ஆதாரங்களிலும் கண்ணுக்குத்தெரிகிற கிருமிகளாக தடைச்சட்டம் இருக்கிறது. பெருநகரங்கள் நகரங்கள் நகரத்தை நோக்கி நகருகிற உர்கள் தவிர்த்த எல்லாகிராம டீக்கடைகளிலும் ஒரு ஓரத்தில் நின்று டீக்குடிப்பதை பார்த்தபடியே காலம் நகர்கிறது. நகராட்சி ஊழியத்துக்கு அருந்ததியர்தான் என்பதை மாற்றமுடியாது.

மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று கண்கானிக்ககூட இந்தியாவின் மூத்த குடிமகன் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துக் கண்காணிக்கலாம் என்றும் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ரஜேந்திர பிரசாத் அவர்கள் 1936 ஆம் ஆண்டு
காந்தியால் முன்மொழியப்பட்டு அம்பேத்கர் ஆதரவோடு கொண்டுவந்த பட்டியல் இனத்தவர்களின் பட்டியலுக்கு
ஒரு புது வியாக்கியானத்தைக் கொண்டுவந்தார் அதுதான் அரசியலில் மதத்தைக்கலக்குகிற முயற்சி. யார் யாரெல்லாம் பட்டியல் இனத்தவர் என்று சொல்லிவிட்டு அவர்களில் எவெரேனும் இந்து அல்லாத பிற மதத்தைத் தழுவினால் அவர்கள் ஷெடூல்டு இனத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் எனும் ஒரு சூழ்ச்சியை
இடைச்செறுகலாக, பிற்சேர்க்கையாக சேர்க்கிறார் இந்தியாவின் முதல் மூத்தகுடிமகன். இந்தச்சூழ்சியானது
இந்திய அடைப்படை உரிமைச்சட்டத்தின் 25 வது ஷரத்துக்கு நேர் எதிரானது எனப்பெரும் கலகக்குரல்கள்
கேட்டபின்னர்  மிகத் தாமதமாக இரண்டுமுறை சீர்திருத்தப்பட்டது 1956 ல் சீக்கியர் களையும், 1990 ல்
புத்த மதத்தையும் இந்த சட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.

எப்படியிருந்தபோதிலும் நசுக்கப்பட்டவர்களை அடையாளப் படுத்தும்போது கூட மத அளவுகோல் கொண்டு அளப்பது நவ நாகரீகக் கொடுமை. அதுவும் எந்த சனாதனத்தின் காலில் மிதிபட்டு நசுங்கினார்களோ அதே சனாதனத்தின் காலுக்கடியிலேயே விமோசனம் கிடைக்கும் எனும் குருட்டுத் கதையானது தலித்துக்களின் நிலைமை. எல்லா மதத்திலும் இருக்கிற தலித்துகளுக்கு ஒரே அடயாளம் கிடைக்க இருந்ததையும், அவர்களை  ஒன்று சேர விடாமலும் பிரித்தாளும் சூழ்சியை அதிகாரத்தின் துணையோடு அரங்கேற்றினார் ஹிந்து மஹாசபையின் தீவிர உறுப்பினர் ராஜேந்திர பிரசாத். அந்த அரங்கேற்றத்தின் எதிரொலியாக முஸ்லீம் தலித்துகளும் கிறிஸ்தவத் தலித்துகளும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் பிரகாரம் கிடைக்கிற அடிப்படை உரிமைகளை அனுபவிக்க இயலாத பிரிவினராயினர்.

நிலைமைகள் இப்படியிருந்த போதிலும் ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளும் அரிதாகவேனும் அவ்வப்போது
குறிஞ்சியாய் பூத்தார்கள். ஜனாதிபதியின் நேரடி  நியமனத்தால் வந்த  ஆனையாளர் L M ஸ்ரீகாந்த் அப்படிப்பட்ட ஒரு உயர் அதிகாரி. அவர் நியமிக்கப்பட்ட ஓராண்டுகாலத்தில் நடக்கிற ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும்
தலித்துகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கிற சட்டங்கள் ஒழுங்காக நிறைவேறுகிறதா என்று சோதனை செய்ய,
நடவடிக்கை எடுக்க, அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.  
அவர் சமர்ப்பித்த அறிக்கை பரபரப்பானதும் மிகுந்த ஈர்ப்புத் தன்மை கொண்டதுமாகும். அது 1951 ஆம் ஆண்டில்
சமர்ப்பிக்கப்பட்டது. அதுவே தலித்துக்கள் குறித்த முதல் அறிக்கை.

-----------------------------------------------------------------------------------------
"இந்து சமூக ஏற்பாட்டில் ஜாதி என்பது ஒரு மனிதனின் அடயாளமாகவும்,  செய்யும் தொழிலுக்கான தகுதியாகவும்,கௌரவமகவும் வலிந்து திணிக்கப்பட்டு பின் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போலொரு வறட்டு நடைமுறை இந்தியாவைத்தவிர உலகின் வேறெந்த மூலையிலும் கிடையாது. தெருக்கூட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தோல் பதனிடுவது, செருப்புத்தைப்பது, மலம் அள்ளுவது, பிற மனிதனின் அழுக்குத்துணிகள் வெளுப்பது போன்ற தொழில்கள் எல்லாம் மனிதனால் அவனது கைகளால் செய்யப்படுகிறது. இந்தத் தொழில்கள் யாவும் ஒரு சில ஜாதிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனத்தொகையில் ஐந்து கோடிக்கு மேலிருக்கும்  அவர்கள் ஹரிஜனங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."
"
அடக்குமுறயால் திணிக்கப்பட்ட இந்த பழக்கங்களால் அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்திருக்கிறார்கள்.
அவர்கள் அதற்குள்ளே நூற்றாண்டுகாலங்களாக உழன்றுகிடப்பதால், அது சாபமில்லை, அதை உடைத்துக்கொண்டு அவர்களால் வெளி வரமுடியும் என்பதை உணராதபடிக்கு அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். எனவே அவர்கள் பிறமனிதர்களோடு போட்டி போட்டு  தொழில்களிலோ ஆலைகளிலோ உழைக்கமுடியாத சோம்பேறிகளாக மாறீப்போகிறார்கள், அவர்கள் மூலையும் உடலும் சோர்ந்து போயிருக்கிறது. அதை விடக்கொடூரம் தங்கள் குழந்தைகளைக்கூட பள்ளிக்கூடம் அனுப்ப முடியாத ஊற்றுக்கண் அடக்கிறவர்களாக மாறுகிறார்கள்

 
-----------------------------------------------------------------------------------------
அறிக்கையின் இந்த வார்த்தைகள் இருண்டு கிடக்கும் தலித்துகளின் உள்ளார்ந்த இயல்புகளின் மேல் வெளிச்சம்
பாய்ச்சுகிறது. அது ஜாதீய மேலாதிக்கத்தால் நசுங்கிக்கிடக்கும் மனித விழிப்புணர்வைப்பற்றிப்பேசுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூனிக்கிடக்கிற சமுகத்தின் முதுகெழும்புகளை நிமிர வைக்கும் மருத்துவம் குறித்து
யோசிக்க வேண்டிய நிர்ப்பந்ததில் இந்தியா இருப்பதைச்சுட்டிக்காடுகிறது. அது வெறும் காகிதச்சட்டங்களாலும்,
ஆணைகளாலும் தீர்மாணங்களாலும் பணமுடிப்புகளாலும்  நிவர்த்தி செய்யமுடியாத பீடை எனத்திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.
  
ஒரே ஒரு மாற்று தானிருக்கிறது அது கல்வி.  அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தர யோசிக்கிற போதே அவர்களின் உள்ளார்ந்த இயல்புகளை அலசி ஆராய்ந்து கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். எனவும் தெளிவக
ஆரம்பிக்கிறார் LM ஸ்ரீகாந்த்.இதற்கெனப் பிரத்யேகமாக அவர் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார்.

28 வது அறிக்கை ( 1987 ) 
-------------------------------------
கிட்டத்தட்ட முப்பத்தாறு வருடங்கள் அந்த நாற்காலி ஒரு அருங் காட்சிப் பொருளாகவும், மாதம் பிறக்கிற போது
பணம் பட்டுவாடாப் பண்ணுகிற கல்லாப்பெட்டியாகவும் இருந்ததே தவிர குறிப்பிட்டுச் சொல்லுகிற மாதிரி ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப்போடத்தயாராயில்லை. எனவே 1987 ல் வெளியான 28 வது அறிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது. அதாவது இந்த அறிக்கை தயாரான 1980 வது ஆண்டு கணக்கெடுப்புப்படி சுதந்திரமும் கடுமையான சட்டங்களும் நடைமுறைக்கு வந்து நாற்பதாண்டுகள் கடந்த பின்னரும் நிலைமைகள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.பொதுக்கிணற்றில் தண்ணீரெடுக்க முடியாத கொடும் நடைமுறைகள் கிராமங்களில் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. அது போலவே நகரங்களின் சேரிப்பகுதியில் குடியிருப்பவர்களின் நிலைமைகளும் நீடித்தது. அதுபோன்ற தீராக்கொடுமைகளின் பட்டியல் பற்றிப்பேசுகிறதுறது, அந்த 28 வது அறிக்கை.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலித்துகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு சின்னசின்னக் கீற்றாக ஒளிர ஆரம்பிக்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் அடுத்தவர்களின் ஆறாத கோபத்திற்கு ஆளக நேர்ந்தது. அந்தக்கோபத்துக்கு விலையாக மொத்தம் மொத்தமாக உயிரும் உடமைகளும் தலித்துகளிடமிருந்து பறிபோயின. அவர்களின் பாதம் பதிந்து நிற்கிற ஒரு
தப்படி இடம்கூட அவர்களுக்கெனச் சொந்தமாக இல்லாத ஜீவராசிகளாக இருந்ததனால்,  உயிர் வாழ்தலின் நிர்ப்பந்தத்தால் அறிதலுக்கான முயற்சியையும் கைவிட நேர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்கொடுமைகளுக்கெதிரான இயலாமை, அவமானங்கள், இதர கொடுமைகள் என நீளும் பாடியல்கள், தங்கள் மிச்ச நாட்களுக்காக வாய்மூடிப் பொறுத்துக்கொண்டது போக, பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தினசரி நாளிதழ்களில் இடம்பெறாத நாளேகிடையாது என்று சத்தியம் செய்து சொல்லலாம். அப்படி பதிவு செய்யப்பட்ட மிகக்கடுமையான குற்றங்கள் சராசரியாக வருடத்திற்கு 15000 என்று கணக்கிடப்படுகிறது.

1) தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்த தெளிவற்ற ஆவணங்களால் தீர்க்கப்படாத தாவாக்கள்.
2) வயிற்றுப்பாட்டுக்கு எட்டாத குறைந்த கூலி, அல்லது கூலியில்லாத உழைப்பினால் உருவாகும் மனக்கசப்பும்    பதற்றமும்.
3) தன்னெழுச்சியாக கிழம்பும் விழிப்புணர்வு ஆகியவைகளே அதற்கான காரணங்களாகச் சொல்லுகிறது.  
  
சுதந்திரத்துக்குப்பிறகான மொத்த கல்வி வளர்ச்சி 1961 ல் 24 சதவீதமாகவும், 1971 ல் 29.4 சதவீதமாகவும், 1981 ல் 36.2 ஆகவும் இருக்க தலித்துக்கள் 1981 ல் 21.4 சதவீதம் மட்டுமே எட்டமுடிந்திருக்கிறது.
மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கும் குறைவாகவே தலித்துகள் இருக்க முடிந்தது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைகிடைக்கப்பெற்றோர் கணக்கில் 1983-85 ஆண்டில் வெறும் எட்டு சதமானவர்கள் தான் தலித்துகள். கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் காலியிடங்காளாகவே கிடந்தன.

இப்படி புள்ளிவிவரங்களுக்குள் பயணமாகித்தான் தலித்துகளின் நிலைமையைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.அது கதவையும், கண்ணையும் திறந்துபார்த்தவுடன் தென்படுகிற அன்றாட அவலங்கள்.

21 comments:

லெமூரியன்... said...

ஒரு சண்டையில் எனது ஜாதியின் பெயர் சொல்லி இழிவாக வார்த்தைகள் வெடித்தன(7 வருடங்களுக்கு முன்னால்)...
ரத்தம் வரும்படி அடிப்பதை விட சட்டம் பக்கம் போகலாம் என்று கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு
சென்ற பொழுது....ஆய்வாளர் இல்லை...அவர் வரும்வரை காத்திருக்கவும் என்றனர்...
அவரும் வந்தார்...
ஆனால் காவல் துறையினர் தீண்டாமை வழக்கை பதிவு செய்யவே கூடாது என்ற முடிவோடு இருந்தனர்...
என்னை சமாதானம் செய்தனர்....
வேண்டுமானால் அவனை வேறு வழக்கில் உள்ளே தள்ளுகிறேன் என்றார் ஆய்வாளர்......
இதற்குள் சமந்தப்பட்ட எதிர்தரப்பு சமாதானத்திற்கு வந்தது...
ஆனாலும் என் கேள்வி இதுதான் படித்த என்னை போன்றவர்களுக்கே சட்டம் இப்படி...
பாமரர்களுக்கு எப்படி என்பது உத்தம்புரமே ஒரு பதம்....

ஆரூரன் விசுவநாதன் said...

அவசியமான பதிவு தோழர்.....
வாழ்த்துக்கள்

vasu balaji said...

இது ஒரு பக்கம் அவலமெனில், என் அனுபவத்தில் அலுவலகத்தில் நடக்கும் விஷயம் மிகவும் கோபத்தை ஏற்படுத்தும். வெகுநாட்களாக எழுதவேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் சரியான புரிதலின்றி வம்புசண்டையை இழுத்து விடுமோ என்று தயக்கமாயிருக்கிறது. :(

ராம்ஜி_யாஹூ said...

உங்கள் கட்டுரைகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை உண்மையாக இருக்கலாம்.

இன்று நான் இருக்கும் சென்னையில், நான் பயணிக்கும் மதுரையில், நெல்லையில், நாகர்கோவிலி, எந்த உயர் சாதியியான்ரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தலித்து மாணவர்களின் படிப்பையோ, கவுன்சிலிங்கில் இடம் பெறுவதையோ தடுப்பதில்லை.

எனக்கு தெரிந்து தியாகராய நகரிலோ, வேலாசெர்யிலோ, தரமநியிலோ, சீதுபட்டிலோ, மதுராண்டகத்திலோ எந்த பிற்படுத்த பட்ட சாதியியான்ரும் தலித்துகள் படிக்கவோ, பணியில் சேர்வதையோ தடுப்பதில்லை.

பொறியியல், மருத்துவ, விவசாய பொறியியல் அரசு கல்லூரிகளில் நேரிடையான கவுன்சிலிங் நடை பெறுகிறது . தலித்துக்களின் இடங்களை யாரும் தடுக்க வில்லை.

Do you have a case where Dalith student's admission to BE, MBBS, BE Agri was blocked/stopped by other castes in 2010 counciling.

Do you have a case where Dalith candidates placement in BSRB or IAS is blocked by BC & UC.

ராம்ஜி_யாஹூ said...

பதிவர் ரோசா வசந்த் சில மாதங்களுக்கு முன் எழுதி இருந்தார்.

தீண்டாமை, இட ஒதுக்கீட்டில் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று.

பட்டியலிடப்பட்ட, மலை சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர், இருளர், தொடர் போன்ற சாதிகளை சேர்ந்த மக்களுக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என்று.

இனிமேல் நாம் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

தலித்துக்கள் இன்று போரியல், மருத்துவ கலோரிகள், அரசு, வங்கி பணிகளில் சேர்வதற்கு எந்த வித புற தடையும் இல்லை

Unknown said...

தலித் மக்களும், பல்வேறு பிரிவுகளாக, அரசியல் அமைப்புகளாக பிரிந்து கிடப்பதால்தான் அவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.. அண்ணன் திருமாவளவன் தீவிர அரசியலுக்கு வந்தபோது அவரின் பின்னால் இளைஞர்கள் எழுச்சியுடன் அணிவகுத்தனர்.. ஆனால் அண்ணனும் அரசியல் சூழலில் அடக்கி வாசிக்க மீண்டும் பழைய நிலைக்கே அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்..

நல்ல கல்வியறிவுடன் கூடிய பொருளாதார மேம்பாடே அவர்களை முன்னுக்குவர வழிவகுக்கும்.. ஒரு காலத்தில் பின்தங்கியிருந்த நாடார் சமூகத்தினர் இன்று பொருளாதாரத்தில் எங்கேயோ போய்விட்டனர்.. பொருளாதார மேம்பாடே சாதிகளை அறுக்கும்..

அப்ரகாம் said...

வணக்கம்,
தலித் விடுதலை என்பது தமிழகத்தில் முழுவதுமாய் இன்று அற்றுபோகும் ஓர் போக்கை கருணாநிதி எடுத்துவருகிறார். சில தலித் தலைவர்களை கையில் வைத்துக் கொண்டு தலித் மக்களை தவிடு பொடியாக்கி வருகிறார், இன்னிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திட்டங்களும் பி.சி மற்றும் எம்.பி.சி க்கு ஆதரவாக உள்ளதை கண்டும் தலித் மக்கள் எந்த எதிற்பும் தெறிவிக்கவில்லை.

கார‌ண‌ம் த‌லித் த‌லைவ‌ர்க‌ள் என்று த‌ங்க‌ளை அடையாள‌ப் ப‌டுத்திக் கொண்ட‌வர்க‌ள் எல்லோறும் "காசு வ‌ரும் வ‌றை ம‌ட்டுமே இய‌க்க‌ம், காசு வ‌ந்த‌பின் த‌யக்க‌ம்" என்ற‌ பார்முலாவைத் பின்ப‌ற்றுவ‌துதான்.

த‌மிழ‌க‌த்தில் பெறும்பாலும் எல்லா கிராம‌ங்களிலும் இர‌ட்டை குவளை முறை இன்னும் எந்த‌வித‌ த‌ட‌ங்க‌ளுமின்றி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.


இதை தட்டி கேட்க வேண்டிய தலித் இளைஞர்களை டாஸ்மார்கில் அடைத்துவிட்டார் கலைஞர்.


தோழமையுடன்
அப்ரஹாம்

'பரிவை' சே.குமார் said...

அவசியமான பதிவு தோழர்.....
வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

லெமூரியன்,
தோழர் ஆரூர்

நன்றி

காமராஜ் said...

நீங்கள் சொல்லவரும் சேதி புரிகிறது பாலாண்ணா. அப்படியும் இருக்கிறது சில இடங்களில். அது தொழிலாகவும் கூட நடக்கும். ஆனால் நிஜமான பாதிப்பு இருக்கிற இடங்கள் தேடிப்போய் நிவர்த்திசெய்ய அவர்கள் வருவதில்லை. அரிதான சில
பேர்,நிறுவணங்கள்தான் மிஞ்சுகிறது.குற்றவாளிகளுக்கு ஜாதியில்லை.

Anonymous said...

ஓவ்வொரு நில பரப்பும் இதை போல் பல ஏற்ற தாழ்வுகளை நீக்க மற பரப்பி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது.. அவசியமான பதிவு...

காமராஜ் said...

தோழர் ராம்ஜி வணக்கம்.இது 2000 ஆண்டுகால தலித் வரலாற்றில் ஒரு பகுதி.
இதில் சொல்லப்பட்டவை அப்படியே தொடர்கிறதெனும் வாதமில்லை. நிறய்ய படிக்கிறார்கள்,எல்லா இடங்கலிலும் போட்டியிடுகிறார்கள் என்பது நிஜம்.குறிப்பாகத் தமிழகம் நீங்கள் சொன்னதைவிடவும் முன்னேறியிருக்கிறது.இந்தியா முழுக்க அப்படியிருக்கிறதா ? சொல்லப்பட்டதைவிட கொடூரமானவைகள் இன்னும் இருக்கிறதென்பதை மறுக்க இயலாது.எங்காவது லெனின் K.விஜயன் இயக்கிய INDIA UNTOUCHED என்கிற ஆவணப்படம் கிடைத்தால் பாருங்கள்.முப்பதுவருடம் பொதுத் தொழிற்சங்கங்களோடும், முற்போக்கு முகாம்களோடும் பொதுவெளியில் புழங்குகிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பத்து மாநிலங்கள் பரிச்சயமும் பீகார், ஒரிஸ்சா போன்றவற்றில்,அடித்தட்டு நிலைமைகளை நேரடியாகப் பார்க்கிற சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. அவற்றோடு ஒப்பிடும் போது தமிழகம் உயரத்திலேதான் இருக்கிறது.வெளிப்படுத்துகிற விதத்தில் சின்னச் சின்ன விழுக்காடுகள் முன்னப்பின்ன இருக்கலாம்.பேருந்து நிறுத்த நிழற்குடையில்,அங்குக்கிடக்கிற உடைந்த கல்லில் உட்கார அனுமதிமருக்கப்பட்ட மக்கள் இன்னும் மதுரைக்குப்பக்கத்தில் இருக்கிறார்கள்.(இதுவேறு இதிகாசம் ஆவணப்படம்).அவர்கள் அதைக்கடந்து வந்து படித்து பட்டம் வாங்கித்தான் தரமணிக்கும்,வேளச்சேரிக்கும் வரவேண்டியிக்கிறது.கடந்துபோக வேண்டியதூரம் அதிகமிருக்கிறது தோழர்.

காமராஜ் said...

இங்கே தொழு நோயை ஒழிக்கமுடிந்திருக்கிறது,
இங்கே காசநோயை விரட்டியடிக்கமுடிந்திருக்கிறது,
இங்கே அம்மை கோமாரி நோய்களையும் இல்லாமல்செய்ய முடிந்திருக்கிறது
இங்கே குடும்பக்கட்டுப்பாட்டை உணரச்செய்யமுடிந்திருக்கிறது,
இங்கேயிருந்து வெள்ளையர்களை விரட்ட முடிந்திருக்கிறது,
இங்கேயிருந்த மன்னராட்சி மாற்றப்பட்டிருக்கிறது,
இங்கே தான் தாவணிகள் ஒழிக்கப்பட்டு சுடிதாரை தேசிய ஆடையாக்க முடிந்திருக்கிறது
இங்கே மன்னர் மான்யம் கூட ஒழிக்கப்பட்டிருக்கிறது.

இதே அளவு ஒப்பீட்டளவில் பேதமையைக்குறைக்கமுடிந்திருக்கிறதா ?

இது எனது சந்தேகம் மட்டுமே குற்றச்சாட்டல்ல.

காமராஜ் said...

//அண்ணன் திருமாவளவன் தீவிர அரசியலுக்கு வந்தபோது அவரின் பின்னால் இளைஞர்கள் எழுச்சியுடன் அணிவகுத்தனர்.. ஆனால் அண்ணனும் அரசியல் சூழலில் அடக்கி வாசிக்க மீண்டும் பழைய நிலைக்கே அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்..//


ஆமாம் செந்தில், இந்த புத்தகத்தின் இறுதிப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தும் அதுதான்.
நீங்கள் கேட்ட இதே கேள்வியை திரு.திருமாவளவன் அவர்களிடம் இதுவேறு இதிகாசம் ஆவணப்
படத்துக்காக கேட்டோ ம்.

காமராஜ் said...

வருகைக்கு நன்றி ஆப்ரஹாம்,

காமராஜ் said...

நன்றி குமார்.

மாசிலா said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி.

சீமான்கனி said...

///எந்த வேதம் அதைக்கேட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தலித்துக்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னதோ அதே வேதத்திலுள்ள ஆகம விதிப்படி தான் இந்த இந்தியாவுக்கு நள்ளிரவில் விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டது.///

//பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலிகளில்
இன்னும் இரண்டாயிர வருட முடைநாற்றம் உட்கார்ந்திருக்கிறது.//

///அதுவும் எந்த சனாதனத்தின் காலில் மிதிபட்டு நசுங்கினார்களோ அதே சனாதனத்தின் காலுக்கடியிலேயே விமோசனம் கிடைக்கும் எனும் குருட்டுத் கதையானது தலித்துக்களின் நிலைமை.///


இத்தனைக்கும் ஒன்று படாமால் துண்டு பாட்டு கிடப்பதே காரணம் என்று என்னவோ எனக்கு தோன்றுகிறது...அழுகிற குழந்தைக்குதானே பால் கிடைக்கும்...அசாத்தியமான பதிவு அண்ணே...வாழ்த்துகள்...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அருமையான பதிவு... நிறைய கற்றுக் கொடுக்கிறது. ராம்ஜி சொல்வது போல இருபது வருஷத்திற்கு முந்தைய கதை என்று புறந்தள்ளிவிடமுடியுமா என்பது இன்னும் தெரியவில்லை எனக்கு... வேலை வாய்ப்பும், கல்லூரிகளில் இடங்கள் மட்டுமே நிலைமையை மாற்றி விட்டது என்ற வாதத்திற்கு போவது எனக்கு நியாயமாக படவில்லை... இன்னும் தலித்துகளின் நிலைமையில் எனக்கு மாற்றங்கள் தெரியவில்லை... rate of change to be considered... ன்னு தோனுது எனக்கு.

இன்னும் இரண்டு தேனீர் குடுவைகள் இருக்கிறது... உங்களின் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியின் ஆவணப்படம் ஒரு முக்கிய சாட்சி, என்னை உலுக்கிய கொலைகள்...எவ்வளவு ரத்தம், வன்மம் கோரைப்பல்லும், குடல் கிழிக்கும் குரூரமும் இன்னமும் தொடர்கிறது...

மதுரையை சுற்றி இருக்கும் கிராமங்கள், கரூர், ஈரோடு மற்றும் பல்லடம் சுற்றி இருக்கும் சிறு கிராமங்களில் இன்னும் இது போன்ற தீண்டாமையின் உச்சபச்சம் கொடுமைகள், வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் மாறி விட்டது என்று நம்பிக்கொண்டு இருக்கும் மாயையையில் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது கௌரவக்கொலைகள்.

ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு ஆகா இலக்கை எட்டி விட்டோம் என்பது எந்தவகையில் சரி. காமராஜ் சொல்வது போல் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் தான், ஆனால் அதை உணராமல் இருப்பது தான் இங்கு வேதனையே...

அன்புடன்
ராகவன்

vasu balaji said...

நீங்கள் சொல்லவரும் சேதி புரிகிறது பாலாண்ணா. அப்படியும் இருக்கிறது சில இடங்களில். அது தொழிலாகவும் கூட நடக்கும். ஆனால் நிஜமான பாதிப்பு இருக்கிற இடங்கள் தேடிப்போய் நிவர்த்திசெய்ய அவர்கள் வருவதில்லை. அரிதான சில
பேர்,நிறுவணங்கள்தான் மிஞ்சுகிறது.குற்றவாளிகளுக்கு ஜாதியில்லை.//

இல்லைங்க. இது அப்படியில்லை. இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளாமல், தன் உடன்பிறப்பைக் கைதூக்கிவிடாமல் நடக்கும் ஒரு மோசடி. யாராவது ஏதாவது செய்ய மாட்டார்களா என்ற கோபம். யாரை நொந்துகொள்ள? வந்தது வரட்டும். எழுதியேவிடுகிறேன்.

Karthick Chidambaram said...

ஒருவரை சாதி சொல்லி திட்டுவது; உடல் குறைகள் சொல்லி திட்டுவது எல்லாம் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயல்கள்.
பலரது சாதி சண்டைகளில் தான் வெளியே வந்து விழும்.

சாதி ஒழியாத வரை இந்தியா வல்லரசு ஆவதெல்லாம் பிணத்திற்கு செய்யும் அலங்காரம்.
மனிதம் வாழ வேண்டும்.