27.12.10

பராக்குப் பார்த்தல்

மதுரையிலிருந்து சாத்தூர் வந்த பேருந்துப் பயணம் ஒரு நட்பைக் கொடுக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.அப்போது கைப்பேசி புழக்கத்தில் இல்லை.தொலைபேசி கூட மேட்டிமை மிகுந்த சாதனமாக இருந்த காலம்.எனது விலாசத்தை நினைவுபடுத்தியபடி ஒரு நீலநிற உள்நாட்டுத் தபால் வந்தது.ஒரு தபால் வருவதுகூட பெரிய சேதியாக நடமாடும் எனது கிராமம்.அதன் ஊகங்கள் அது காதல் கடுதாசி என்றும், வேலைக்கான அழைப்பிதழ் என்றும் தத்தமக்கான கற்பனைகளை கதையாக்கின.பின்னர் நெடு நாள் நான் கடிதம் எழுத அவன் எழுத மைப்பேனாவின் முனை வழிப் பூத்தது அபூர்வ நட்பு .பேருந்தின் அடுத்த இருக்கையும் அவனது சில சொற்களும் மட்டுமே நிலாடிக் கொண்டிருந்தது.ஒரு நாள் நான் அவனைப் பார்க்க அந்த கோவில் பட்டிக்குப் போக முடிவானது.

கோவில்பட்டி போவதற்கான நாள் குறித்தது, அதற்கான பயணச்செலவு தயார் செய்தது,என்ன பேசிக்கொள்ள வேண்டும் என்று மனக் குறிப்பெழுதிக்கொண்டது,வீட்டாரிடம் எப்படி அறிமுகம் செய்துகொள்வது,அவர்களின் பேச்சையும் பார்வைகளையும்,அன்பையும் ஒருவேளை நிராகரிப்பையும் எப்படி எதிர்கொள்வது எனக்குறு குறுப்புடன் அலைந்த நாட்கள் அற்புதமானவை.

அப்படித்தான் ஈரோடு வலைப்பதிவர் சங்கமமும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.எதிர்பாரத ஒரு நிகழ்வால் அது நிராசையாகிப்போனது.ஆரம்பத்திலிருந்தே என்னை தொடர்புகொண்டு அழைத்த §¾¡Æ÷ கதிருக்கும், அன்பின் பாலாசிக்கும் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.இன்று காலை ஈரோட்டிலிருந்து தொடர்புகொண்டு என்னை அன்பால் திக்குமுக்காடச் செய்தார் சகோதரி மஹி கிரான்னி.அந்த அன்பும் இன்னும் முகமுகமாய் நான் பார்க்க ஆசைப்பட்ட வலைத்தோழர்களின் அன்பும் கடைசி நிமிடத்தில் தவற விட்ட புகைவ ண்டியாகைப் போனது.காலம் எங்காவது ஒரு புள்ளியில் அந்த வாய்ப்பைக்கொண்டு வந்துசேர்க்கும்.

முற்போக்கு இலக்கியங்களின் வழியே விளிம்புமக்களின் வாழ்வை காத்திரமாக முன்வைக்கிற அன்பிற்கினிய தோழர் ஆதாவன் தீட்சண்யாவின் தந்தையார் 26.12.10 அன்று மரணமடைந்துவிட்டார்.அங்கேயும் கூடப் போகமுடியாத சூழல்.முதல் தலைமுறையாக அரசுவேலைக்கு வருகிற கிராமத்துக்காரனின் அப்பா உடுத்துகிற தேய்த்த துணியும் வெள்ளைத்துண்டும் ஊருக்குள் அலாதியாகத் தெரியும்.பொட்டிக்கடை,சீட்டு விளையாடுகிற ஊர்மடம்,டீக்கடை பெஞ்ச்,பக்கத்தூர் டாஸ்மாக் கடை ஆகியவற்றில் அவர்களுக்கென தனிக்கவனிப்பு காத்திருக்கும்.அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட அந்தப் புழுதிபறக்கும் தெருக்களில் இருந்து அவர்களைப் பிரித்தெடுப்பது கடினம்.அங்கே அவர்களுக்கென ஒரு கையகல நிலம் இல்லாது போனாலும் கூட அந்த மண்ணிலே விதையுண்டு போகச் சித்தமாவார்கள்.தோழர் ஆதவன் அவரது தந்தையாரைப் பற்றிப் பேசுகிற போதெலாம் இப்படியான நினைவுகள் வந்துபோகும்.

13 comments:

க ரா said...

அபாரமான எழுத்து நடை காமு சார்... தோழர் ஆதவன் அவர்களின் தந்தை மறைவுக்கு எனது அனுதாபங்களும்...
நான் உங்களயும் மாது சாரையும் கதிர் அண்ணனின் புகைப்பட தொகுப்புகளில் தேடினேன்... எனக்கு என்னவோ உங்கள் இருவரின் எழுத்துகளயும் படிக்கும் பொழுது சாத்தூரில் அமர்ந்திருக்கும் உணர்வு.. காரணம் அறிந்த பொழுது மெளனமாகி போனது மனசு .....

Unknown said...

மறைந்த பெரியவர்க்கு எனது அஞ்சலிகள்.

உங்களுக்கும் ஈரோடு போக முடியாமப் போயிடுச்சா. நல்ல சான்ஸ் போச்சு.

முதல்ல விவரித்த உங்க கோவில்பட்டி நட்ப இன்னும் முழுமையா சொல்லுங்க. ஆவலோட கேட்போம்.

Unknown said...

அப்பெரியவரை நீங்கள் நினைவு கூறும் வரிகள் சிலிர்க்க வைக்கிறது.

kashyapan said...

ஈரோடு சங்கமம் பற்றி விரிவாக தெரிந்துகோள்ளஆர்வமாக இருந்தேன்.தோழர் ஆதவனின் தந்தையார் இறந்த செய்தி உங்கள் இடுகைமூலம் தெரிந்து வருத்தமடைகிறேன்.இந்தப் பின்னூட்டம் மூலம் அவருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.---காஸ்யபன்

அன்புடன் அருணா said...

/காலம் எங்காவது ஒரு புள்ளியில் அந்த வாய்ப்பைக்கொண்டு வந்துசேர்க்கும்./
கண்டிப்பாகச் சேர்க்கும்!!

Mahi_Granny said...

நானுந்தான் தொரத்திக் கொண்டே வருகிறேன். உங்களையும் உங்கள் நண்பரையும் சந்திக்கலாம் என்று . மூன்று attempts தோல்வியாகிப் போனது. போகட்டும் . இப்படியே எழுத்தில் பார்த்துக் கொள்கிறேன்கொஞ்ச நாளைக்கு. சமயம் எப்போது வாய்க்கும் எனக் காத்திருக்கும் சகோதரி, மகி

வினோ said...

ஆதவன் அண்ணா தந்தைக்கு என் அஞ்சலி.. :(

அண்ணா, எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்திருக்கிறது இந்த பதிவு...

Unknown said...

கனமான பதிவு, தோழரின் தந்தையார் மறைவுக்கு எனது அஞ்சலிகள் ...

பா.ராஜாராம் said...

தோழரின் தந்தை மறைவுக்கு அஞ்சலிகள். கை எட்டும் தூரத்தில் மஹிக்கா இருந்தும் பார்க்க முடியாமல் திரும்பியிருக்கிறேன் காமு. இனி, எப்போ சந்தர்ப்பம் வாய்க்கிறதோ?

நல்ல பகிர்வு மக்கா! ஈரோட் தோழர்களுக்கு வாழ்த்துகள்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சில நாட்கள் பதிவுகளைப் படிக்கும் போது மனது வருத்தமாகிவிடுகிறது.இன்றைக்கும் அப்படி.

//அங்கே அவர்களுக்கென ஒரு கையகல நிலம் இல்லாது போனாலும் கூட அந்த மண்ணிலே விதையுண்டு போகச் சித்தமாவார்கள்.//

இந்த வரிகளைப் படிக்கும்போதும் அப்படித்தான் காமராஜ்.

க.பாலாசி said...

என்ன சொல்றதுங்க சார்... வரவில்லையென்பது ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் தங்களின் நிலைமையும் அறிகிறேன்.. இன்னொரு வாய்ப்பில் நிச்சயம் கூடுவோம்..

அன்பருக்கு எனது அனுதாபங்கள்..

Thenammai Lakshmanan said...

அவர்களின் பேச்சையும் பார்வைகளையும்,அன்பையும் ஒருவேளை நிராகரிப்பையும் எப்படி எதிர்கொள்வது ///

அட !!! எல்லா முதல் சந்திப்பின் விழைவும் இப்படியானதுதானா..

vimalanperali said...

ஈரமான பதிவு.தோழர் ஆதவன் அவர்களிடம் எனது வருத்தத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.