31.8.11

பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கும் பெரியவர் ஹசாரே இயக்கம்.


லஞ்சத்துக்கும் முன்னாடிப்பிறந்த மூத்த வியாதிகள் அப்படியே தொடர.ஊடகங்களின் ஊதிப்பெருக்கலில்  உச்சானிக்கொம்புக்கே ஏறி விட்டது லஞ்சத்துக்கு எதிரான புரட்சி.எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே பொது செய்தியாக பெரியவர் ஹசாரே உடனடித் தேசிய நாயகனாகி விட்டார்.லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்.ஆமாம்.சாதிச்சான்றிதழ் வாங்குவதற்கு நான் தாசில்தார் அலுவலகத்துக்கு கொடுத்தேன்.தாசில்தார் அலுவலக சிப்பந்தி இருசக்கர வாகனம் வாங்கிப்பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்துக்குப் போனார். வட்டாரப்போக்குவரத்து அதிகாரி தனது அந்தச் சம்பாத்யத்தில் சொத்துவாங்கி அதைப்பதிய பத்திரப் பதிவு அலுவலகம் போனார்.பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் தன்மகனை தொழில் நுட்பக்கலூரியில் சேர்க்க  மூட்டை கட்டிக் கொண்டு போனார்.தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டை சூட்கேசுகளோடு ஆட்சியாளர்களிடம் போனார்.ஆட்சியாளர்கள் தங்களின் நாற்காலி நாட்களை நீட்டிக்க என்னிடம் என் குடும்பத்தாரிடமும் கொடுத்தார்கள்.

சங்கிலித் தொடர்போல நீண்டு பிணைந்திருக்கிற இந்த கண்ணிக்குள் ராம்லீலா மைதானத்து மேடைகளில் அமர்ந்திருப்போர் தொடங்கி தேநீர்க் கடையில் நாளைக் காலையில் லஞ்சம் நாட்டைவிட்டு ஓடிவிடும் என்று கூவுகிற தினத்தந்தியால் உணர்ச்சிவசப்பட்ட போராட்டக் காரன் வரை இணைக்கப் பட்டிருக்கிறான். தாங்கள் கொடுப்பதை கண்ணக்கில் எடுத்துக்கொண்டு வாங்கியதை வருமாண வரிக்காரர்களிடம் மறைப்பது போல மனசாட்சியிடம் மறைத்துவிட்டு சனம் கும்பல்கும்பலாக கூவுகிறது லஞ்சம் ஒழிக என்று. அந்த குரலின் சத்தத்தில் பெரியவர் ஹசாரே உடனடிக் கதாநாயகனாகிவிட்டார். எனில் வில்லன் யார்.

வணிகவியலின் விதிப்படியும் வாழ்வியலின் விதிப்படியும் கொடுப்பவர் இருந்தால் பெறுபவர் இருந்தே ஆகவேண்டும். அதாவது வாங்குகிற வில்லன் யார்.காங்கிரசா ? பாஜகாவா ? திமுகவா ? அதிமுக வா தேதிமுகவா ?. யார் அந்த தேசீய எதிரி. இந்த அமைப்பு. நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய கடைநிலை ஊழியன் சாம்பிளுக்காகப் பிடிபட்டு வேலையிழந்து தெருவில் திரிய லட்சக்கணக்கில் கல்லாக்கட்டுகிற கோமான்களுக்கு முதல் மரியாதை கொடுத்து ஒதுங்கிக்கொள்கிற இந்த அமைப்பு. தனது சாதிக்காரன், தனது மதத்துக்காரன், தனது கட்சிக்காரன் லஞ்சம் வாங்கும்போது கள்ளமௌனம் காத்துவிட்டு எதிர்ச் சாரியில் இருப்பவனை மாட்டிவிடத் துடிக்கும் இந்த அமைப்பு தான் அதன் எதிரி.  ஆதலால் தான் ஜனநாயக அமைப்பின் அடிநாதமான பஞ்சாயத்து முறையில் தனக்கு வேண்டாத சாதி  போட்டி போடக்கூட சகிக்காத மனோபாவமும். சொந்தச் சாதிக்குள்ளே ஜனநாயகத்தை, தேர்தல் முறையை ஏலத்துக்கு விடுகிற திமிரும் வந்து சேர்கிறது.

அதனலேதான் ஒரு மூன்று பேரின் உயிருக்காக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கையில் ஊடகங்கள் ஹ்சரேவின் புகழ்பாடிக் கொண்டிருந்தன. பெரியவர் ஹசாரே பதிரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிப்போனார். செய்தியோ சாப்பாடோ அரசியலோ கொள்கையோ இந்தியர்களுக்கு வீட்டுக்குள்ளே கொண்டுவந்து தரவேண்டும். முதல் நாள் எதிர் வீட்டில் நடந்த திருட்டை  மறுநாள்  செய்திபடித்து தெரிந்துகொள்கிற மனோபாவம் பெருகிக்கொண்டுவரும் இந்த தேசத்தில் புரட்சியைக்கூட தொலைக்காட்சி வழியே நடத்த துடிக்கிற உத்வேகம் பெருகிக் கிடக்கிறது.அதனாலேதானோ என்னவோ முன்னாள் புரட்சியாளர் ரஜினிகாந்தும் இந்நாள் புரட்சியாளர் விஜய்யும் ராம்லீலா மைதானத்துக்குப் போய் மொய்யெழுதிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்தப் படிதாண்டாப் புரட்சிக்கு அன்புத் தோழர் சொர்ணமால்யா தலைமைதாங்கி நடத்தி வந்தகாட்சி அழகானது. அதைப் பார்க்கையில் முன்னக்கூட்டியே நடக்கிற விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் மாதிரியும், முன்னாடி பெரும்பரபரப்பாக பிள்ளையார் பால்குடித்தாரே அதற்கு எழுந்த மக்கள் அலையைப்போலவும் தெரிந்தது.

அடுத்தவீட்டுக்காரி ஆம்பிளப்பிள்ளை பெத்தாலென்று எகிப்து மற்றும் துனீசியாவைப்போல எதாவது செய்யாவிட்டாலும்  அம்மிக் குழவியைப்போல பெரியவர் அன்னா ஹசாரேவைத் தூக்கிவைத்துக் கொண்டது தேசம். அப்பப்பா இந்த பத்திரிகைகள் தங்கள் பெயரையே ஹசாரே மலர்,ஹசாரே மணி, ஹசாரே தந்தி, ஹசாரே எக்ஸ்பிரஸ் என்று போடாததுதான் குறை.   இதை யெல்லாம் படித்த ஒரு கடை கோடி முகம்மதியத்தோழன் விசனப்பட்டார் இப்படியொரு மகான் குஜராத்தில் பிறந்திருக்கக்கூடாதா அப்படிப் பிறந் திருந்தால்  அநியாயமாக பலியிடப்பட்ட அப்பாவி உயிர்கள் பிழைத்துக் கிடந்திருக்குமே என்று. அதே போல விசனப்பட கோடிக்கணக்கானவை பட்டியலில் இருக்கிறது.

ஒரு பதின்மூன்றுநாட்கள் நடக்கும் உண்ணாவிரதம் தேசிய வியாதியைப் போக்கும் அருமருந்தாகுமானால். இந்த தேசம் முழுவதும் பீடித்துக்கிடக்கிற இன்னபிற நோய்களுக்காக வாழ்நாள் முழுக்க உண்ணாநோன்பிருக்க ஆட்கள் வரிசையிலிருக்கிறார்கள். ஆனால் நிலைமை பாரபட்சமானது என்பதை நாம் மகாத்மா காந்தி தொடங்கி நிறைய்ய வராலாற்று உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம்.  அதோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் மூச்சை மட்டுமே சுவாசித்து வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமகாலப்போராளி இரும்புப்பெண் பற்றி ஒரு வரிச்செய்தி கூடப்போடிருக்குமா இந்த ஊடகங்கள். மணிப்பூர் மலைகளில் இருந்து இறங்கிவந்து அந்த மக்களுக்கு ராணூவச்சட்டம் AFSPA 1958 யிலிருந்து விடுதலைவேண்டுமென சன்னம் சன்னமாய் செத்துக்கொண்டிருக்கிற ஐரோம் சர்மிளாவைப்பற்றி எத்தனை தினத்தந்தி வாசகர்களுக்குதெரியும். குறைந்த பட்சம் மணிப்பூர் இந்த தேசத்தில் இருக்கிற இன்னொரு மாநிலம் என்பது கூடத்தெரியுமா ?

அப்துல்கலாமை வரிக்குவரி எழுதுகிற சினிமா வசனகர்த்தாக்கள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் ராணுவம் பிடித்துக்கொண்டுப்போன தங்கள் வீட்டு ஆண்களின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற வலிபற்றி  எழுதி யிருக்கிறார்களா. மாட்டை கறிக்காக அடிப்பது உயிர்வதை என்பதை வலியுறுத்தக்காட்சிகள் அமைக்கிற படைப்பாளிகள் கயர்லாஞ்சியில் நடந்த கொடுமைகள் பற்றி சினிமாவில் பேசாவிட்டாலும் சரி குறைந்த பட்சம் தங்களுக்குள்ளாவது பேசிக்கொள்வார்களா ?.

இது எடுபடாத கேள்விகள்.

ஆனால் எடுபடுகிற கேள்வி ஒன்றிருக்கிறது. ஹசாரேவின் இந்த இயக்கத்தினால் லஞ்சம் ஒழியப்போகிறதோ இல்லையோ கட்டாயம் ஒரு ஆளும் அரசு ஒழிந்து விட வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. சரி அது ஒழிந்த பின்பு எது ? அதற்காகத்தான் இந்த ஊடகங்கள் ஓடி ஓடி பரபரப்பாக்குகின்றன. உண்மையான விடுதலைப் போராட்டததை மறைத்துவிட்டு மகாத்மாவை முன்னிறுத்திக் காங்கிரசுக்கு ஜெண்டாத் தூக்கிய அதே ஊடகங்கள் தங்களின் ஜெண்டாவுக்குப் பின்னாடி ஒரு அஜண்டா ஒளித்து வைத்திருப்பதை உற்று அவதானித்தால் புலப்படும்.
ஆவணப்படம் afspa 1958
ஆவணப்படம் afspa 1958
http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.htmlhttp://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.html

http://timesofindia.indiatimes.com/india/Iron-lady-of-Manipur-calls-Anna-Hazare-campaign-somewhat-artificial/articleshow/9825079.cms

5 comments:

vasu balaji said...

பொளிச்சு பொளிச்சுன்னு பொடனில போட்டாமாதிரி பாயிண்ட்ஸ். அறிவு பூர்வமா பேசுறவங்களே அசாரேக்கும் உனக்கும் வாய்க்காதகறாராருன்னு கேக்குறாய்ங்க. என்னத்த சொல்ல போங்க.

ஓலை said...

Right questions at right time. Nice.

hariharan said...

ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி மாதிரி இருக்கிறது. ஏசுநாதர் எவன் ஒருவன் பாவம் செய்யவில்லையோ அவன் இந்த வேசி மீது முதல் கல் எறியட்டும் என்பது போல இருக்கிறது. எப்போதும் இந்த சமூகம் அடுத்தவர்களின் தவறை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பது தந்து குற்றத்தை மறைப்பதற்கு எத்தனையோ சப்பைக்கட்டு கட்டுகிறது.

ராகவன் said...

அன்பு தோழருக்கு,

ரொம்பவும் அருமையான பதிவு... அத்யாவசியமான கேள்விகள்... எனக்கும் தோன்றிய அதே கேள்விகள்...

நல்லாயிருந்தது காமராஜ்!

அன்புடன்
ராகவன்

Kannan said...

Nobody perfect in the world including you and me