21.12.11

வறுமையும் அறியாமையும் விகடமாகும் வெள்ளந்தி வீடுகளில்


எங்கோ போவதும் திரும்பி வந்து சீ இந்தப்பொழப்பும் ஒரு பொழப்பா என்று புலம்புவதுமாக இருக்கிற அம்மையைப் பார்க்க பாவமாக இருந்தது. ரெங்குப் பெட்டியில் இருக்கும் சில்லறைகளை எண்ணிப்பார்த்தான் பதினேழு ரூபாய் முப்பந்தைந்து காசு இருந்தது. பழய்ய நோட்டுப் புஸ்தகத்தையெல்லாம் எடுத்து அடுக்கினான். அதைப்பார்த்த அம்மை ’ஏலே ஏ ஒனக்கென்ன கிறுக்குப்பிடிச்சிருச்சா சரஸ்வதியப்போய் எடைக்குப்போடப்போற என்றாள். எம்மா இது பழசுதாம்மா,இதெதுக்குமா இன்னும்,எடத்த அடச்சுக்கிட்டு’ என்று சொன்னான்.’அதுக்காக படிக்கிற பொஸ்தகத்த வெலைக்குப் போடனுமா இருப்பா யார்ர்ட்டயாச்சும் கடன்  வாங்கியாரன்’.  சொல்லிக் கொண்டே விடுவிடுவென்று வெளியே கிளம்பினாள்.

என்சிசி யில் சேர்வதற்கு பெயர்கொடுக்கும் போதே சொன்னார்கள்.ஆளு ஒசரமா  இருக்கணும்,  முட்டிதட்டக் கூடாது,டெய்லி புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஆறுமணிக்கே பள்ளிக்கூட மைதானத்தில்  இருக்கணும், தாமதமானால் 15 ரவுண்டு மைத்தானத்தை சுற்றவிடுவார் வெள்ளைச்சாமி சார்,வேறு ஏதும் தப்பு பண்ணினால் மணல் மூடையை தூக்கிதலையில வச்சுருவார் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.அதற்கெல்லாம் அசரவில்லை. எட்டு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கூடம் போனவனுக்கு,லீவுநாட்களில் கூலி வேலைக்குப் போகிற வனுக்கு இந்த தண்டனைகள் எல்லாம் எறும்புகடிச்ச மாதிரி.ஆனால்  125 ரூபாய் டெப்பாசிட் கட்டணும்  என்று சொன் னதும் தான் ஆடிப்போனான்.அவ்வளவு பெரிய தொகையைக்கேட்டால் தங்கராசை அவங்கம்மா  நிப்பட்டியது போல போதும் போதும் நீ படிச்சுக் கிழிச்சது, ஓடு சீலுத்தூருக்கு கல்லொடைக்க என்று அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் தொற்றிக்கொண்டது.

ஆனாலும் புதன் கிழமையும் வெள்ளிக் கிழமையும் காலையில்  மசாலக் கிழங்கு வாசம் மணக்க மணக்க தனலெச்ச்சுமி ஓட்டல் பூரிக்கிழங்கை திண்கிற என்சிசி மாணவர்களைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கும். புழுச்செத்து மிதக்கும் கோதுமைக் கஞ்சியைக் குடிக்க அரசு மாணவர்  விடு தியில் வரிசையில் நிற்கிற போதெல்லாம் தனலெச்சுமி ஓட்டலின் பூரிக்கிழங்கு கேந்தியைக் கிளப்பும். இந்தப் பிறவியில் தனலெச்சுமி ஓட்டலில் காசு கொடுத்து பூரிக்கிழங்கு வாங்கித்திண்போம் என்கிற நம்பிக்கையும் சுத்தமாக இல்லை அவனுக்கு. திங்கள் கிழமை காலையில் கொடுத்து விடுகிற ஒரு ரூபாயில் வெள்ளிக்கிழமை திரும்ப கொடைக்கான் பஸ்சில் வருவதற்கு 25 காசு எடுத்து வைத்துக்கொண்டு அந்த வாரம் முழுக்க செலவழிக்கணும். இடையிடையே பேணாவுக்கு மையும் அடைக்க வேண்டும். இவ்வளவு கையிருப்பில் வாங்கித்திங்க கட்டுபடியவது  ஏவீஸ்கூல் வாசலில்  விற்கிற  அரை நெல்லிகாயும், சவ்வு மிட்டாயும்தான்.

நெல்லிக்காயென்றதும் அவனுக்கு ரோசாப்பூவின் நினைப்பு வந்தது. சனிக்கிழமை வாங்கிப் பத்திரப்படுத்திய முழு நெல்லிக்காயை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.மேலத்தெருவுக்குள் நுழையும் போது ரோசாப்பூவின் சிநேகிதி காளீஸ்வரி வந்தாள்.ரோஜா எங்கயிருக்கா என்று கேட்டான். என்ன புஸ்த்தகம் கொடுக்கவா என்று கேட்டுவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள். கவனிக்காமல் ஓடினான்.போனவேகத்தில் திரும்பி வந்தான். ஏ லூசு அவ  கோயில் பட்டிக்கு போயிருக்காளே சொல்லமிண்ண அப்படி என்ன அவசரம் என்றாள்.இதக்கொடுத்துரு என்று கொடுத்தான் அப்புறம் என்றாள். இரண்டு நெல்லிக்காயைக்கொடுத்தான். அதானே என்றாள். வீட்டைத்திறந்து போட்டுவிட்டு வந்த ஞாபகம் வந்தது.ஓட்டமெடுத்தான். ரெண்டு வட்டி சண்முகப் பெரியாவோடு  பேசிக் கொண்டிருப்பது அம்மா மாதிரித் தெரிந்தது. கையில் ஒரு புது மண்பானை வைத்திருந்தாள்.என்சிசிக்குப் பணம் கெட்டத்  துப்பில்லை, இந்நேரத்தில் புத்துப்பானைக்கு என்ன அவசரம் என்கிற கோபம் வந்தது.அம்மா வந்ததும் கேட்டேவிட்டான்.சும்மா கெட பெரிய்ய மனுசனாட்டம் என்று கண்டுக்காமல் பித்தளைப்பானையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

ராத்திரி முழுக்க கனவில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் வந்தார்கள்.இவனுக்கு கொடுத்த  ராணுவத்துப்பாக் கியை வேறு யாரோ புடுங்கிக்கொண்டு ஓடுவது போலெல்லாம் வந்தது.விடிகாலையில் எழுந்து  அரக்கப் பறக்க கிளம்பிக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டு கையில் பத்து ரூபாய் நோட்டாக ஒரு கத்தையை வைத்தாள் அம்மா. அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது.ஏதும்மா என்று கேட்டான்.செல்லம்மா பெரிம்மாட்ட சீட்டு போட்ருந்தேன்ல என்று சொன்னாள். அப்போதும் கூட அந்த பித்தளைப்பானை வீட்டில் இல்லாதது அவனுக்குத் தெரியவில்லை.புதூர் ஞானப்பழம் சைக்கிளில்  தொத்திக் கொண்டு எட்டுமணிக்கே பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தான். என்சிசி ஆபீஸ் திறக்கவில்லை.மைதானத்துக்குப் போய் ரெண்டு ரவுண்டு ஓடினான்.திரும்பி வந்தான் அன்றைக்கு விளையாட்டு வாத்தியார் வெள்ளைச்சாமி லீவு என்று சொன்னார்கள். பூதம் அடைகாத்த மாதிரி அந்த 125 ரூபாயை பொத்தி பொத்தி வைத்திருந்தான்.மறுநாள் தான் கடைசி நாள்பயந்து கொண்டே இருந்தான். பணத்தைக் கட்டி காக்கிக்கலர் சீருடையும்,தொப்பியும்,பூட்சும்  வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்த போது ஒரு ராணுவ வீரனின் மிடுக்கோடுதான் வந்தான்.

அந்த வாரத்தில் சனியும் ஞாயிறும் பயிற்சி இருந்தது.ஊருக்குப்போக முடியவில்லை.சனிக்கிழமை காலையில் பரேடுக்கு வரும் போது பஜாரில் சாமிக்கண்ணு மாமாவைப் பார்த்தான்.வலியப்போய்  அவர் முன்னாடி நின்று மாமா என்று கூப்பிட்டான்.பதறிப்போனவரிடம் அம்மாவிடம் இந்த வாரம் லீவுக்கு வரமுடியாதுன்னு  சொல்லி ருங்க மாமா என்றான்.அடுத்த வெள்ளிக்கிழமை எப்போ வரும் என எதிர்பார்த்துக் கிடந்தான். சாயங்காலம்  எஸ் ஜி ஜே வண்டியில் ஏறும்போது எல்லோரும் இவனை உற்றுப் பார்த்தார்கள்.ஜன்னலோர இருக்கையில் இருந்த படியே ஊருக்குள் உலாவினான். அம்மாவின் அகலவிரியும் கண்கள்,வாசலில் நின்றுகொண்டு  பெருமை யடிக் கப்போகும் அவளது உற்சாகம் எல்லாம் வந்துபோனது.ரோசாப்பூவிடம் உடுப்போடு போய் நிற்கிறபோது அவளிடம் என்ன ரியாக்சன் இருக்கும் என்பதை கற்பனை செய்தான். இந்தப்பவுலுப் பயல் கட்டாயம் இதை ஓசி கேட்பான் கொடுக்கக் கூடாது. நிறுத்தம் வந்து விட்டது. அப்போதுதான் நடத்துநர் சுதாரித்துக்கொண்டு ’ஏப்பா பள்ளிக்கூடத்தான் நீயா,ஏட்டய்யாவோன்னு நெனச்சி வுட்டுட்டேன். இந்தா டிக்கெட்’ என்று கொடுத்தார்.

பஸ் கிளம்பியதும் பஸ் நிறுத்தத்தில் பாஞ்சாம்புலி ஆடிக்கொண்டிருந்த கூட்டம் பதறி எழுந்தது.  கஞ்சாப் பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்த  ஐயண்ணா பொன்னுச்சாமி அதை வேலிச்செடிக்குள் எறிந்துவிட்டு காட்டுக்குள் போய் வேட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே இருப்பது போல உட்கார்ந்து கொண்டார். நெருங்கிப் போனான். சார் கல்கெடங்குல தண்ணி பெருகிருச்சு வேலையில்ல, சும்மா பொழுது போகலன்னு பாஞ்சாம்புலி என்று சொல்லிக்கொண்டே ஏ முத்தையப் பெரிய்யா மகன் மாசிலாமணி டா.என்று சொன்னதும் ஒரே  ஆச்சர் யமும் சிரிப்புமானது.அப்பிடியே போலீஸ் மாதிரியே இருக்கடா,ஏ மாப்புள இங்கரு சொங்கி ராமன் வேட்டில ஒண்ணுக்கிருந்துட்டான் என்று சொல்லி வெடிபோட்ட மாதிரி சிரிச்சான் கருத்த மணி.அத உடு அஞ்சு ரூவாய்க்கு வாங்குன கஞ்சாவத் தூக்கி எறிஞ்சிட்டு கெதிபுடுங்கா ஓட்றாண்டா பொன்னுச்சாமி. இந்நேரம்  குறுக்க கூடி ஓடிப்போய் சிவகாசி சேர்ந்திருப்பான்.அங்கன போய்த்தான் திரும்பிப் பாப்பாம்போல என்று சொல்லிவிட்டு வேலிச் செடிக்குள் கஞ்சாப் பொட்டலத்தை தேடிப்போனான்.

ஒத்தையடிப் பாதையிலெ நடந்துகொண்டிருந்தான் சரக்கு சரக்கென்கிற பூட்சுக்காலின் சத்தம் இப்போது அவனுக்கு பெருமிதத்தோடு சிரிப்பையும் கொண்டுவந்தது. ஊர் நெருங்க நெருங்க அம்மாவும் ரோசாப்பூவும் ஆயிரம் முறை வந்து போனார்கள். கொஞ்ச நேரத்தில் பின்னாடியே ஆட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது. பஸ்ஸ்டாப்பில் இருந்த  மணி மச்சானும்,ஒலக்கை செல்வராசு சித்தப்பனும் தான். எய்யா அஞ்சு ரூவா கஞ்சாவ ஓசியாக்குடுத்த ஞண்ணே மகனே கொஞ்சம் நில்லுய்யா. மடத்துல மும்மரமா சீட்டுவிளாட்டு  நடக்கு. வெட்டுச் சீட்டு.மொத்தமா ஐநூறு தேறும்.வாப்பா ஒன்ன வச்சி அதப்பூராம் கைப்பத்திரமுய்யா. என்று சொன்னார்கள். ஏ வேண்டாம் மச்சான் எங்கய்யா,ஊர்ர்ப்பெருசு எல்லாம் இருப்பாக என்றான். இங்கரு நீ ஒண்ணுஞ்செய்ய வேண்டாம் இந்தா சைக்கிளப்பிடி, பைய்யக்கொண்டா, நா அத்தையிட்ட குடுத்திர்ரேன்,ரோட்டுவழிய வந்து மடத்துக்கு பத்தடி தள்ளி நில்லு. இன்னைக்கி இருக்குடி ஒங்கலுக்கு கொடமானம்’.என்று சொல்லிவிட்டு பையை வாங்கிக்கொண்டு ஊருக்குப்போனார்கள்.

கும்பிடப் போனசாமி குறுக்க வந்த மாதிரி சைக்கிள் கையில கெடச்சிருச்சி. ரோட்டுவழியே போனால்  மேலத் தெரு தாண்டித்தான் ஊருக்குள் நுழையணும். ரோட்டுமேலதான் ரோசாப்பூ வீடு. நாய்குறைத்த சத்தங்கேட்டு ரோசாப்பூ வெளியே வந்தாள்.இரண்டே நொடியில் இனங்கண்டு கொண்டாள். என்ன என்று கைச்சாடை  போட் டாள். என்சிசி ல சேந்துருக்கேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். பத்தடி தூரத்தில் ஒலக்கை சித்தப்பன் நின்று கொண்டிருந்தான்.பக்கத்தில் ஒரு வாண்டு கருப்பாயி மதினி மகன் இருந்தான்.பதறிஓடுகிற மாதிரி ஓடி போலிஸ்,போலிஸ் என்று சொன்னான். மடத்தில் இருந்து யாரோ எட்டிப்பார்த்தார்கள்.அடுத்த விநாடி சட்டையைத் தோளில் போட்டபடி,அண்ட்ராயரோடு,தெக்க வடக்க சந்து பொந்துகளுக்குள் நுழைந்து ஆட்கள் ஓடினார்கள். ஓடமுடியாத அம்மாச்சிக்கிழவன் ஒரு ஓரமாய்ச்சுருண்டு படுத்துக்கொண்டான். மடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் பொம்பளைகள் கூடினார்கள்.

ஒருநாளாச்சும் லாரியக்கொண்டாந்து அத்தனபேரையும் அள்ளிப்போட்டுக்கிட்டு போகமாட்டெங்க்றாங்களே. வேல வெட்டிக்குப் போகாமெ இருக்கிற சாமங்களையெல்லாம் அடகு வச்சி இவிங்க பண்ற ஆட்டந்தாங்கல.வாங்கடி இன்னைக்கு அந்த ஏட்டய்யாட்டப் போயி யார் யாருன்னு எழுதிக்கொடுத்திருவம். என்று லசுமித்தாய் சொல்லுச்சு. பாப்பாத்தியக்கா விருவிரு வென்று வீட்டுக்குப்போய் கொண்டா நாயக்கர் பிஞ்சையிலிருந்து எடுத்துவந்த  பருத்தி மாத்தை தூக்கிக்கொண்டுபோய் விறகுகளுக்கு அடியில்  ஒளித்து  வைத்து விட்டு வந்தாள். திடு திப்புனு வந்துருக் கானுகளே ? நேத்து கொண்டைய்யன் வீட்டுக்கும் அகத்தியன் வீட்டுக்கும் அடி புடி நடந்துச்சே அதுக் காருக்குமோ.இல்லக்கா போன வாரம் மொளகா நாத்தக்காணுமின்னு புதூர் நாடார் தேடி வந்தாரே  அதுக்காகத் தான் இருக்கும். நம்மூருக்காரங்களுக்கு ஊறுகாமட்ட வாங்குறதுக்கே துப்புக்கிடையாது கச்சேரிக் கெங்க  போகப் போகுதுக. சின்னப்பயலுகள் கூட்டமாக ஓடிவந்து மெல்ல மெல்ல மாசிலாமணிக்கு அருகில் கெக்கெக்கே என்று சிரித்தார்கள்.

அப்புறம் சனிஞாயிறு ரெண்டு நாளும் பவுலுப்பயதான் அந்த பூட்சையும் உடுப்பையும் போட்டுக்கொண்டு தெருத்தெருவாய் சிரிப்புக் காட்டிக்கொண்டு அலைந்தான்

5 comments:

காமராஜ் said...

mmm

vasu balaji said...

அச்சோ. என்ன சொல்ல:))))+ ல ஷேர் பண்ணிக்கிறேன்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை
மனதில் காட்சிகளை வரையச் செய்து விட்டீர்கள்.
ஆமாம் இன்னமும் பூரிக் கிழங்கு மெனு மாற வில்லையா என் சி சி யில்


உங்கள் நண்பர் வெங்கடேசன் அவர்களுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்
முடிந்தால் காவல் கோட்டம் & அவர் குறித்து விரிவாக எழுதவும்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நிஜம் தான். NCC அப்போது ஒரு ஈர்ப்பு தான். பூரி கிழங்கு உணவு, அந்த உடையை போட ஒரு கம்பீரம். பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. என்னை NCC யில் சேர்க்கவில்லை.
வாழ்த்துகள்.

MaduraiGovindaraj said...

அருமையான பதிவு.
மதுரையை பற்றி "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது