9.12.10

சண்டக் கோழி, ஜல்லிக்கட்டுக் காளை


'மஹாராஜா தூங்கப்போறார் சட்டுப்புட்டுனு வாத்தியத்த எடுத்துட்டு வந்து வாசிங்கோ'என்று வைத்தி சொல்லுவார்.உடனே வித்வான் சன்முகசுந்தரத்தின் முகத்தில் கோபம் நாதஸ்வரம் வாசிக்கும்.ஒரு கலைஞனின் அறச்சீற்றத்தை ஒரு பாப்புலர் புனைவின் மூலம் அழகாகச் சித்தரித்திருப்பார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். கலையும், இலக்கியமும்,வீர விளையாட்டுக்களும் அரச சபைகளின் போதைக்கான ஊறுகாயாய் இருந்த காலத்தினை நாம் வரலாறுகளின் மூலம் மட்டுமே தெரிந்திருந்தோம்.இப்போது இந்த உலகமயமாக்களின் அதியற்புத விநோதமாக அவையெல்லாம் அன்றாடம் கண்முன்னே நடக்கிற காட்சியாகிறது.மீண்டும் கலையிலக்கிய விளையாட்டுக்கள்  பெருமுதலைகளின் சொத்துக்களில் ஒன்றாகமாறிவருகிறது.

இந்த கிரிக்கெட் இருக்கிறதே அது பிறப்பிலேயே ராஜாக்களின்,காலனிஆதிக்கவாதிகளின் முதுகு சொறிகிற விளையாட்டாக மட்டுமே இருந்தது.தொலைக் காட்சிகளின் அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் அது பட்டி தொட்டிகளிலும் புழங்கும் விளையாட்டாக மாறியது.இருந்தாலும் நான் எப்போதும் அரசமாடங்களின் சொத்து என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டேதான் வந்திருக்கிறது. வீரர்கள் தங்களின் சட்டை,மட்டைகளில் பொறித்துக்கொண்ட கம்பெனிகளின் இலச்சினை இப்போது அவர்களின் தன்மானத்தின் மேல் குத்தப்பட்டுவிட்டது.விளையாட்டைபெருமுதலைகளிடம் மொத்தமாக குத்தகைக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.இதற்கு....... பெயர்கள் வேறு.

வியாபாரம்,போட்டி,பதவி,உத்தியோகம் போன்றவற்றின் அழுத்தங்களில் இருந்து மனசு தளர்த்த கிடைக்கிற விளையாட்டையும் வியாபாரமாக்கியது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.திருவிழாக் கூட்டங்களில் பலூன் விற்கலாம்,ஐஸ் விற்கலாம் திருவிழாவையே விற்கமுடியுமா ?. விற்பனை நடக்கிறது.ஓடியா ஓடியா போனா வராது பொழுது போனாக்கிடைக்காது என்று அணிகளைக்கூவி விற்கிற கொடுமையை மடிப்புக் குழையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.என்னசெய்ய ?,ஒரே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இந்த சூதாட்ட வியாபாரச் சூத்திரத்தை மக்கள் விளையாட்டுக்களின் பக்கம் திருப்பிவிடவேண்டாம்.பாவம் நூற்றிப்பத்துக்கோடி மக்களுக்கும் அவர்தம் சந்தததிகளுக்கும் அவையாவது மிஞ்சியிருக்கட்டும்.நட்சத்திர வீரர்களே உங்களை நீங்கள் பூஸ்ட், காண்டோம்,உப்புப் போடாத ஊறுகாய்களுக்கு விளம்பரமாக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.எங்கள் லட்சியங்களின் விளம்பரத்தை நாங்கள் சாதாரண ஜனங்களிடமிருந்து எடுத்துக்கொள்வோம்.

11 comments:

Chitra said...

திருவிழாக் கூட்டங்களில் பலூன் விற்கலாம்,ஐஸ் விற்கலாம் திருவிழாவையே விற்கமுடியுமா ?.


.....கேள்வியின் சூடு நியாயமானதே!

vasu balaji said...

/கலையும், இலக்கியமும்,வீர விளையாட்டுக்களும் அரச சபைகளின் போதைக்கான ஊறுகாயாய் இருந்த காலத்தினை நாம் வரலாறுகளின் மூலம் மட்டுமே தெரிந்திருந்தோம்.இப்போது இந்த உலகமயமாக்களின் அதியற்புத விநோதமாக அவையெல்லாம் அன்றாடம் கண்முன்னே நடக்கிற காட்சியாகிறது./

மிகச் சரி. பந்தயக் குதிரைகள் போல் வீரர்கள் வாங்கப்படும்போது விளையாட்டு வியாபாரமாகவும், சூதாகவும் மாறிவிடுகிறது.
/எங்கள் லட்சியங்களின் விளம்பரத்தை நாங்கள் சாதாரண ஜனங்களிடமிருந்து எடுத்துக்கொள்வோம்./
க்ளாஸ்

அழகிய நாட்கள் said...

" நாங்கள் அசாத்தியங்களைக்கனவு காணும் எதார்த்தவாதிகள் " என்னும் சே யின் வரிகளை நினைவுபடுத்துவதுபோல தங்களது பதிவின் முத்தாய்ப்பு இருக்கிறது தோழர் காமராஜ். தொடருங்கள்..

வினோ said...

/ எங்கள் லட்சியங்களின் விளம்பரத்தை நாங்கள் சாதாரண ஜனங்களிடமிருந்து எடுத்துக்கொள்வோம். /

உண்மை தான் அண்ணா...

விரைவில் நம்மிடமும் வருவார்கள்.. :(

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மாறுதலின் ஊற்றுக்கண் நம்மிடமிருந்துதான் தொடங்கவேணும் காமராஜ்.


கிரிக்கெட் மட்டுமா?நெருப்புச் சுடராய் தகிக்கும் தலைவரின் மந்திரிகளே 600 கோடிக்கு மேல் ஏலத்துக்குப் போகும்போது டோனியும் சேவாக்கும் என்ன பாவம் செய்தார்கள்?

இவர்களாவது வயதும்,தரமும் இருக்கும் வரைதான் ஏலத்துக்கு லாயக்கு.ஆனால் சரக்கில்லாத வயதான உளுத்துபோன பிறகுதான் அரசியல்வாதிகள் விலைபோகிறார்கள்.

தொலைக்காட்சியிலிருந்து பெறும் கேளிக்கைகள் ஆரோக்கியமானதல்ல.புத்தகங்கள் வாசிப்பதையும் நல்ல செய்தித்தாள்கள் வாசிப்பதையும் ஊக்குவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்?

பிறரைச் சுட்டும் ஆட்காட்டிவிரலின் உபயோகத்தை நாம் குறைக்கவேண்டும்.

வலுவான் புறக்கணிப்பைவிடப் பெரிய ஆயுதம் எதுவுமில்லை.

க.பாலாசி said...

எந்த ஒளிவு மறைவுகளும் இல்லாமல் வெளிப்படையாவே ஒரு மாபெரும் சூதாட்டம் நடக்குதுன்னா அது இந்த கிரிக்கெட். ஒவ்வொருமுறையும் இந்திய வீரர்கள்னு செய்தி வெளியாகும்போதும் சட்டென சூதாளிகன்னுதான் ஞாபகம்வருது...

அன்புடன் அருணா said...

/வலுவான் புறக்கணிப்பைவிடப் பெரிய ஆயுதம் எதுவுமில்லை./
ரொம்ப சரி!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்ல பதிவு இது... காமராஜ்... சமூக அக்கறையில்...கோபமும்... சாடலும் அழகாய் வருகிறது உங்களுக்கு...

அறச்சீற்றம்... ஆஹா அழகு... இதை தான் ரௌத்ரம் பழகு என்றாரோ பாரதி...

அன்புடன்
ராகவன்

Unknown said...

நல்லா சுருக்குனு இருக்குங்க.

இப்பெல்லாம் எந்த மாட்ச்சில் யார் ஜெயிக்கணும் என்பதை கூட விளயாடரவனைத் தவிர மற்றவர்கள் நிர்ணயிப்பதை பார்க்கும் போது, என்னமா நாம் இதில நேரத்தை வேஸ்ட் பண்ணி, சொ.கா.சூ. வைச்சிக்கிறோம். நம்மளை விட முட்டாள்கள் உலகத்தில் யாரும் இல்லை.

பத்மா said...

இந்த கிரிகெட்லாம் பாக்காதீங்கன்னு சொன்னா யார் கேக்கறாங்க ?
நீங்களும் பாப்பீங்க தானே ?அதான் அப்படி விளம்பரம் !

ஈரோடு கதிர் said...

கிரிக்கெட் வாரியமும் கிட்டத்தட்ட ஒரு அரசாங்கம் இந்தியாவில்!

வீரனை(!) கடவுளாகக் கொண்டாடும் சமூகமாச்சே!!!