27.4.11

ரயில் கோபம்


இப்போதெல்லாம் சாத்தூர் ரயில்வே ஸ்டேசனில் தினம் தினம் சாயங்கால புகைவண்டிகளுக்கு கூட்டம் அலைமோதுகிறது.பயணம் செய்வோரும் வழியனுப்புவோருமாக தினம் தினம் திருவிழாக்கூட்டம்தான்.பிளாட்பாரத்தின் ஓரங்களுக்குப்போய் ரயில்வருகிறதா என்று எட்டிப்பார்க்கிற குழந்தைகளுக்குப் பின்னால் குதூகலம் துரத்துகிறது. அதட்டிக்கொண்டே ஓடிப்போய் கூட்டிவருகிற சாக்கில் தாய்தந்தையரும் குழந்தையாகின்றனர். ’ஐயெ பாத்துங்க,கையில சிந்திரப்போகுது வேண்டாண்ணு சொன்னாக்கேக்கீங்களா’ இந்தவார்த்தை இளம் மனைவிக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டுவருகிற தேநீர்க்குவளையின் சூட்டை இதமாக்குகிறது.

அப்பா அம்மாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு செல்போனில் தோழியோடு பேசுவதாய்ப் பாவனை செய்கிற மகளின் கண்களில் தெறிக்கிறது காதல்.அதைக்கண்டும் காணாததுபோல் கோணங்கித்தனம் காட்டும் அப்பனின் நினைவுகள் பிந்தடமறியாததா. கொக்கோக் கோலாப் பாட்டிலுக்குள் கலந்து விட்ட  டாஸ்மாக் மதுவின் நிறம் கானாமல் போகலாம் மனம் சுழன்றடிக்கிறது அந்த கரைவேட்டிக் கூட்டத்தில்.சிலுசிலுவென முகத்திலடிக்கிற காற்றை ஏந்தியபடி கடைக்கோடி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நடைப் பயிற்சிக்கு வந்தவருக்கு இத்தனை காற்றும் இந்த ஊருக்குள்ளேதான் இருக்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது.

கொய்யாப் பழம் விற்கிற பாட்டியின் கண்களுக்கு பசியோடு பழவாசனையெடுத்துவரும் கண்கள் அரிதாகவே தென்படுகிறது. தேநீர்க் கேத்தலை ஓரங்கட்டி வைத்துவிட்டு பீடிகுடிக்கிற முத்துச்சாமியின் நினைவுகள் காலையில் வட்டித்துட்டு கேட்டுவரப்போகும்  மீசைக் காரனின் முகம் கலவரப்படுத்துகிறது. இல்லாத மார்புக்குமேல் மாரப்பை இழுத்துவிட்டு அழகு பார்த்துக் கொள்கிற திருநங்கையின் குரலில் அந்தபாடல் கொஞ்சம் இனிமையாகவும் இருக்கிறது.

”கெளம்பு போ ரயிலு வரத்தேரமாகும்,இப்ப போனாத்தான் கடைசி வண்டியப் பிடிக்கமுடியும், இந்தா இங்கரு, கண்ணக்கசக்காத எண்ணி ஆறுமாசம் கையில கொஞ்சம் துட்டோட வந்துரமாட்டேன்” முருகேசனின் வார்த்தைகளைக்காதில் வாங்காமல் இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.அதே வாசம் அதே கதகதப்பு.எழுந்து நடந்து கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போகிற செல்வியை பார்க்கத் திராணியில்லாமல் கத்திரிச்சீரெட்டை எடுத்துப்பற்றவைத்தான் முருகேசன்.ரயில் வந்துவிடட்டும் இன்னும் தனியே உட்கார்ந்திருந்தால் மனசு மாறி பைத்தூக்கிக்கொண்டு போனவருசம் மாதிரி பின்னாலேயே கிளம்பினாலும் கிளம்பிவிடுவான்.

போனதரம் கிளம்பிப்போனவன் கொஞ்சநாள்  அமுக்கிக்கொண்டு மெட்ராசில் இருந்திருந்தால் இந்த மாதிரி ஆகியிருக்காது. அடிதடி ஆகி போலிஸ் ஸ்டேசன் வரை போகவேண்டியதிருந்திருக்காது. அந்த செவப்பு ஏட்டு கேட்ட கேள்வியை வேறெவனாவது கேட்டிருந்தாள் கொலப்பலி உளுந்திருக்கும்.

(மிச்சம் இன்னொரு நாளைக்கு)

25 comments:

பொன் மாலை பொழுது said...

நல்லா இருக்கு :)

Yaathoramani.blogspot.com said...

நல்ல துவக்கம்
பிளாஷ் பேக்கை ஆவலுடன் எதிர்பார்த்து...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சல்லடை போட்டு சலிச்சிட்டீகளே ராசா ஒரு ரயில்வே டேசன் ப்ளாட்பாரத்தையே!

சாத்தூரு டேசனப் பாத்து எழுதுததுக்கு இன்னும் மிச்சம் மீதி எதுனாச்சும் இருக்குமான்னு தெரியலியே ராசா!காமராசா?

சபாஷ்.

மணிஜி said...

பிளாட்ஃபார்ம் டிக்கெட் நான் வாங்கலையே..பரவாயில்லையா காமு?

மணிஜி said...

பிளாட்ஃபார்ம் டிக்கெட் நான் வாங்கலையே..பரவாயில்லையா காமு?

மணிஜி said...

பிளாட்ஃபார்ம் டிக்கெட் நான் வாங்கலையே..பரவாயில்லையா காமு?

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ரொம்ப நல்லாயிருந்தது இந்தப் பதிவு... மக்கள் கூடும் எல்லா இடங்களும் சுவாரசியமானது தான்...

இது கிளறிவிடும் இது இருக்கே, அதச் சொல்லி மாளாது காமராஜ்...

இன்று காலை மனைவியை... மொம்பாசா ஏர்போர்டில் விட்டுவிட்டு... அவள் விமானம் கடக்கும் வரை கண்ணாடித்தடுப்புகளின் பின்னால் நின்று பார்த்துவிட்டு, காரோட்டிக்கு தெரியாமல், திரையிட்ட கண்ணீரை துடைத்து அலுவலகம் வந்தாலும்... நினைப்பு சுழன்றடிக்குது... எந்த இடமா இருந்தா என்ன... ஏர்போர்ட்டோ, ரயில்வே ஸ்டேஷனோ... பிரிவைச் சொல்லும் எல்லாப்பாதைகளும் உப்பு பரிந்து தான் கிடக்கு காமராஜ்...

அன்புடன்
ராகவன்

vasu balaji said...

எதுக்கு ரயில் கோபம்? ரயில் நிலைய கலககலப்பும், கலக்கமும் இன்ன பிற உணர்ச்சிகளும் ஓவியம் மாதிரி இருக்கு:)

காமராஜ் said...

வாருங்கள் கக்கு மாணிக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி திரு ரமணி அவர்களே.

Unknown said...

எண்ணி ஆறே மாசத்தில திரும்பிருவாரா முருகேசன்? அவரு அங்கிட்டு செயிலுக்குப் போறாப்லயா?

5 பத்தியில மூணு பத்தி சாத்தூர் டேசன் பத்தி:-)

நல்லா இருக்கு. ம், அப்புறம்?

காமராஜ் said...

வாருங்கள் சுந்தர்ஜீ வணக்கம்.

பத்மா said...

நடை பயிற்சியாளரின் பார்வையே தனி தான் ..எனக்கும் ரயில் பயணம் போக ஆசையா இருக்கு

காமராஜ் said...

மணீஜீ... ஆஹ்ஹா
உற்சாகமாக இருக்கிறது.

காமராஜ் said...

தாங்ஸ் ராகவன்.

அவங்க இந்தியா வந்துட்டாங்களா ?
சொல்லவே இல்ல /

காமராஜ் said...

பாலாண்ணா ரயில் என்றதும் கூடுதல் பாசம் வந்துவிட்டதா.மிச்சமும் பாத்துட்டு சொல்லுங்க.

க.பாலாசி said...

@ வானம்பாடிகள்: ஆமா வாத்யாரே நீங்க அப்படித்தான் சொல்லுவீங்க.. பயணிக்களுக்குதான தெரியும்.... மீதியும் வரட்டுமுங்க..

சார் எப்பவும்போல ரசித்து வாசித்தேன்..

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் அருமை

உங்கள் பதிவுகளை கூகுளே பஸ், முகப் புத்தகத்தில் பகிர உதவும் கொக்கிகளை சேருங்கள்

Anonymous said...

romba nalla iruku sir

ஈரோடு கதிர் said...

கூடவே உட்காரவைத்துவிட்டீர்கள்...

இன்னொரு நாள் வரைக்கும் அங்கேயே காத்துக்கிடக்க வேண்டியதுதான்

nellai அண்ணாச்சி said...

மிகவும் அருமை

ஓலை said...

Arumainga.

ராம்ஜி_யாஹூ said...

You too please join Google Buzz (Gmail)

நேசமித்ரன் said...

நாலு பால்ரஸ் பேரிங் சக்கரமா வெச்சுகிட்டு கையால உந்தி உந்தி சரட்டு ரவட்னு போறவனோட பார்வையில எல்லாத்தையும் போற போகுல சொல்லியும் தீராம ஒரு தொடரும் போட்ருக்கீங்களே காமு சார்

பிரம்மாதம் .. !

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு திரு காமராஜ்.
ரயில் நிலையங்களை பராமரிக்கும் அளவு நமது பேருந்து நிலையங்களும் பராமரித்தால் நன்றாக இருக்கும்.
நன்றி.