16.4.12

காவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.

அந்த ஊருக்கு ஏழெட்டுப்பாதைகள் இருப்பதுபோலவே அதனோடு எனக்கும் ஏழெட்டு வகையான உணர்வுகள் இருக்கிறது. அது எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவிலிருக்கிறது.அங்கிருந்துதான் பேருந்திலேறி அயலூர்களுக்குப்போகவேண்டும். ஒவ்வொருமுறை நடந்துபோகும் போதும் இடையிலே வந்துபோகும் காடு கட்டாயம் ஒரு கதை வைத்திருக்கும்.கோடை காலமான இந்த தை முதல் ஆடிவரையிலான காலங்களில் அது செக்கச் செவே லென விரித்துக் கிடக்கும் பெரிய்ய பாய்போல இருக்கும்.ஆடியில் விதைக்க ஆரம்பித்ததும் நிலக் கடலை,பாசிப்பயறு,கம்புசோளம்,குதிரைவாலி இப்படியான பலவகை செடிகள் நிறைந்த பச்சைமரகதப் போர்வை யாகிவிடும்.வெறும் கரட்டான்களும்,சில்லான்களும் ஓடித்திரிந்த அந்த செவக்காட்டில் ஒரு நூறுவகை பூச்சி புழுக்கள் பறவைகள் வந்துசேரும்.வண்ணத்துப் பூச்சிகளையும்,ரயில்தட்டாம்பூசிகளையும் பிடிக்க கைவிரல் களைக்குவித்துக்கொண்டு அதன் பின்னாடி அலைந்த காலம் முதல்,அணில் ஆபீசுக்கு வேலைக்குப் போகும் அவளைத் தொடர்ந்து நடந்த காலங்கள் வரை இன்னும் பசேலென அப்பிக் கிடக்கிறது செவக்காட்டு நினைவுகள்.

பிஞ்சைகள் பூக்க ஆரம்பித்ததும் இரண்டு ஊருக்கும் இடையில் காவல் பரண் கட்டப்படும். அதிலேறிக்கொண்டு பார்த்தால் நான்கு ஊர்களின் காடுகளும் தெரியும்.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்து பெரியாம்பளைகள் தான் காவல்காரராக இருப்பார்கள்.அப்போதெல்லாம் மதியக்கஞ்சி கொண்டுபோக நான் நீ என்று போட்டி வரும். என்னை மட்டும் வரவேண்டாம் என்று கண்டிப்பார் தாத்தா. காரணம் உண்டு. நான் தனியே போனதில்லை குறைந்தது மூன்றுபேராவது போவோம்.அப்புறம் எங்கள் வீட்டின் மற்ற பிள்ளைகளைப் போல நான் அவரது காவல் கம்புக்கும் மீசைக்கும் பயப்படுவதில்லை.சாயங்காலம் வீடுதிரும்பும்போது என்னால் அவருக்கொரு பிராது கட்டாயம் வந்துசேரும். சித்திரச்சுழி இந்த செம்பட்டப் பயல அணுப்பாத மரியசெல்வம் என்று என்  பாட்டியைச் சொல்லுவார்.’அவன் வராட்டி,பின்னே எவா கொண்டு வருவா’ என்பாள் ’இவா’ என்று பாட்டியைக்கை காட்டுவார், ’கெடக்கமாட்டயோ கெழட்டு லொள்ளி’ என்று அவர்கள் பேசுவது சண்டையென நினத்துக் கொண்டிருந் தகாலம் அது.

நாங்கள் ஊரைத் தாண்டியதுமே, தாத்தா பரணைவிட்டுக் கீழிறங்கி விடு வார்.அப்படியே நடந்து கனிநாடார்  பம்பு செட்டுக்குப் போய்க் கால்,கை அலம்பிக் கொண்டுவருவார். வரும்போதே விளைந்து முற்றிய கடலைச் செடிகள் அவரது கையில் தொங்கிக் கொண்டுவரும். அதைவாங்கிக் கொண்டு மடமடவென பரண்மேலேறுகிற தருணம் அலாதியானது. ஏணியற்ற பரணில் நான் ஏறும்போதெல்லா கொலைபதறிக்கொண்டு எந்தாத்தா ஏ மெல்லய்யா, இங்கரு..ஏ.ஏ..லே மேல்லடா,ஏய் ஏ செம்பாட்டச்..னிமெல்ல ஏறுடா,இந்தப் பொண்டாட்டியோளி,  சொன்னபிடி கேக்கமாட்டன்’என்பார். தெற்குப்பக்கம் அதிகமாகச்  சோளம் தான் போட்டிருப்பார்கள்.அதற்கு ரெண்டுகாரணம் உண்டு.அந்த பக்கத்து நாயக்கமார்களின் மாடுகளுக்கு  கோடை காலம் தீவனத்துக்கு ஆகும்.ரெண்டு அது ஊரை ஒட்டி இருப்பதால் வேறுவகையான விதைப்பாடுகள் வீடுவந்து சேராது. பாதியை களவாண்டு கொண்டு  போய் விடுவார்கள். இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரண மும் இருக்கிறது என்பதை ஒரு மதியவேளை  பரணேறிப் பார்த்த போது தெரிந்துகொண்டோம்.

பகல்வேளிகளில் காடுகள் முழுக்க பெண்களே அங்குமிங்கும் அலைந்து திரியும்  செடிகளைப் போலக்கலந்திருப் பார்கள்.ஆண்கள் தலை தட்டுப்படாது.அப்படித் தட்டுப்படுகிற தலைகள் பிஞ்சைக்கார முதலாளிகளாய் இருப்பார் கள். ரெங்காநாயக்கர் மட்டும் எல்லாக்காலங்களிலும் அந்த எள்ளுச்செடிகள் பூத்துக்கிடக்கிற  தனது பிஞ்சையைக் கட்டிக்கொண்டு கிடப் பார். எல்லாச்செடியும் அழிமாண்டமாகும் எள்ளுச்செடி ஒருகாலதுக்கும்   களவு போகாது. அதத்திங்கவும் முடியாது,ஆக்கிப்பொங்கவும் முடியாது. அது போலவே மாடுகண்ணும் உள்ள வராது. ஆனாலும் நாய்க்கரு பிஞ்சையே கதி யென்று கிடப்பார். அதனாலேயே ஆகாத காரியத்துக்கு ஆட்கள்போனால் எள்ளுச்செடிய நாய்க்கர் காத்துக்கெடந்த மாதிரின்னு சொலவட சொல்ல ஆரம்பித்துவிட்டது சனம். தாத்தாவும் ரெங்கா நாய்க்கரும் படு ஸ்நேகம் அதனால் அவர்பக்கம் திரும்பிக்குரல் கொடுக்க மாட்டார்.

பரணேறியதும் நான் எள்ளுகாட்டுப்பக்கம் அவன் எவண்டா எள்ளுச்செடியில சுத்திக்கிட்டு அலையிறது என்பேன் .தாத்தா உயிர்போகிற வேகத்தில் பரணில் ஏறிக்கொண்டே இருக்கிற எல்லாக்கெட்ட வார்த்தையும் வைவார்.நான் பின்னம்பக்கம் இறங்கி ஓடிவிடுவேன்.அப்படி ஓடுகிற ஒரு நாளில் எள்ளுக் காட்டுப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தேன்.

எள்ளுக்காட்டுக்கு அருகில் ஒசந்து வளர்ந்திருந்த சோளநாத்துக்குள் இருந்து எழுந்து எனக்கு முன்னாடி ரெங்கா நாயக்கர் ஓடிக்கொண்டிருந்தார். பயந்து போய் நின்ற நான் திரும்பிப் பார்த்த போது,அவர் எழுந்து ஓடிய இடத்தில்
சோளநாத்து ஆடியது.பேய்க்கதைகள் நினைவுக்கு வர சிலீரென்று வேர்த்தது. திரும்பப்பரணுக்கு தாத்தாவைத் தேடி ஓடப்போனேன். பச்சை நாத்துக் குள்ளிருந்து வெள்ளை வெளேரென்று ஒரு உருவம் எழுந்தது.

ஆண்டாளம்மா.

8 comments:

ந.பெரியசாமி said...

பாவம் பசியாறாத ஆண்டாளம்மாக்கள்

Mahi_Granny said...

தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு போனதுக்கு பின் இப்படி ஒரு கதையா . தாத்தா பாட்டி சண்டை எப்போதும் சுவாரஸ்யம் தான் . நம்ம ஊர் பேச்சு வழக்கில் படிக்க அருமையாய் இருக்கு .

Mahi_Granny said...

தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு போனதுக்கு பின் இப்படி ஒரு கதையா . தாத்தா பாட்டி சண்டை எப்போதும் சுவாரஸ்யம் தான் . நம்ம ஊர் பேச்சு வழக்கில் படிக்க அருமையாய் இருக்கு .

ஓலை said...

Kalakkal. Sema alumbu panniyirukkenga. :-)

காமராஜ் said...

நன்றி தோழர் பெரியசாமி.

காமராஜ் said...

நன்றி மஹி அக்கா

காமராஜ் said...

நன்றி தோழர் சேது

காமராஜ் said...

நன்றி தோழர் பெரியசாமி.