11.11.09

கானாமல் போன சாமி - சிறுகதை

சின்னக்காள் வேகு வேகென்று நடந்து வந்தாள். அவளை விட வேகமாய் இருட்டு முந்திக்கொண்டு வந்தது. இன்னும் செத்த நேரத்தில் தெருலைட் போட்டு விடுவார்கள். சங்கனை நினைக்க நினைக்க உடல் நடுங்கியது இன்னைக்கு எதால் அடிப்பானோ. ஆப்பக்கனையோ, கலிமட்டையோ, விளக்கமாரோ. பிள்ளைமார் நல்லதண்னிக் கிணத்துப்பக்கத்தில் வந்து விட்டாள். அங்கே புளியமரங்கள் குவிந்திருந்தது. பனை மர உயரத்துக்கும் மேலிருக்கிற அதன் ஆஜானுபாகுத்தோற்றம் ஊர்தாண்டியவுடனே பசக்கென்று கண்ணிழுக்கும். மேலப்புதூரிலிருந்து வெயிலில் நடந்து வருபவர்கள், கம்மாப்பட்டிக்காட்டுக்கு களயெடுக்கப்போனவர்கள், வயக்காட்டுக்கு தொலி வெட்டப்போனவர்கள் எல்லோரும் அங்கே தான் அஞ்சு நிமிசம் நின்று, காலாத்திக்கொண்டு போவார்கள். சித்திரை மாதத்தில் புளி கொத்தாய் காய்த்துத் தொங்கும். ஆணும் பொன்னும் கல்லெடுத்து வீசி, பழம் எடுத்து எச்சில் ஊறத்தின்றுகொண்டு போவார்கள்.


அது குத்தகைக்கு விடுகிற வரைதான். அதற்குப்பிறகு சங்கரநத்தத்து கருப்பசாமித்தேவரின் மீசையும் குரலும் அவரில்லாத வேளைகூடப் பயமுறுத்தும். அதுக்குக் காக்காத்தோப்பு என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அங்கே பூந்தோட்டம் இருந்ததற்கான அடையாளமாக ஒரு வெள்ளரளிச்செடி இருந்தது. பக்கத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கிறது. அதற்குச் சவரட்ணைகள் செய்ய தோப்பும் பூங்காவும் இருந்திருக்க வேண்டும். பிள்ளையார் கோவில் உள்ளும் புறமும் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு கல்லும் கண்ணங்கரேன்று நாலு முதல் ஆறடி வரைக்கும் இருக்கும். ஓட்டார் மாமனும், கருப்பசாமிச்சித்தப்பாவும் அதை எப்படி சைசாக்கியிருப்பார்கள் எத்தனை பேர் சேர்ந்து தூக்கிவைத்திருப்பார்கள் என்று பேசிக்கொண்டு அந்தக் கல்மண்டபத்தில் உட்கார்ந்துதான் சீட்டு விளையாடுவார்கள். பெரியவர்கள் பாஞ்சாம் புலி ஆடுவார்கள். தரத்துப் பையன்கள் தாயம் விளையாடுவார்கள்.


ரெண்டு பேர் கட்டிப்பிடிக்கமுடியாத பெரியதூண்களையெல்லாம் பூதங்கள் தான் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்று மூனுகாது மாரிமுத்து சோல்லுவதை நம்பித்தான் ஆக வேண்டும். தர்க்கம் பண்ணவும் ஆராய்ச்சி பண்ணவும் எசக்கில்லை. ஆனால் அதைவிட பெரிய தூண்களை சைஸ் போடச்சொன்னால் நா வாரேன் நீ வாரேன்னு போட்டிபோட்டு உடைத்துக்கொடுக்க ஊர் முழுக்க ஆளிருக்கிறது. வெட்டிப்பொழுதுகளில் அந்தக் கல்மண்டபத்தில் சீட்டாடவும், துண்டைவிரித்து புளிய மர நிழலில் வாயைப்பிளந்து தூங்கவும் வந்துவிடுவார்கள். ஊரைத்தாண்டி இருப்பதால் பொண்டாட்டிம்மார்களின் தொல்லையும், போலிஸ்காரங்க தொல்லையும் ஜாஸ்த்தி இருக்காது. குருவம்மாதான் அப்பப்போ வருவாள். வருப்போதெல்லாம் கையில் பனைமாரு இருக்கும்.


'' எலே ஒனக்கு அறிவில்ல, கலிக்கிண்ட வச்சிருந்த கேப்பமாவத் தூக்கி வித்துட்டு வந்து வட்டப்பாச்சால போற்றுக்கிய, ராத்திரிக்கி என்ன ஓடைக்கா போவெ '' காது கேட்காதது போல மும்முரமாக சீட்டைப் பிதுக்கிக்கொண்டிருக்கும் ஆசிர்வாதம் பதிமூனு சீட்டுக்குள் அனுக்கதிர்கள் இருப்பதுபோல ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருப்பான்.


'' யப்பா ஓந்தாயார் வந்துட்டாங்க, போயிரு ''அவனைத்தவிர எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள். ''ஏ.. இன்னைக்கு புது வெளக்கமாரு வந்துருக்கு....... கலிக்கிண்ட கேப்பையில்லாட்டாக்கூட தெனம் தெனம் புதுசுதா''கூட்டத்துக்குள் யாராவது சொல்லுவார்கள். ''அடே சின்னப்பெயலே மரியாதையா எந்திரிச்சி வாரயா நா அங்க வரவா''குருவம்மா அடுத்த சுற்று ஆரம்பிப்பாள். '' நீ மூத்தவன் இல்லையா......? கடக்குட்டிதானா........? ''சில்லான் சொல்லவும் மற்றவர்கள், சிரிக்க ஆரம்பிப்பார்கள்.


'' இந்தா.....ஒங்க வீட்கள்ள ரொம்ப ஒழுங்கு தா, அன்னைக்கி கலிமட்டைய வச்சி ஓம்பொண்டாட்டி வெளுத்தத மறந்தாச்சோ'' ஆசிர்வாதன உட்டுட்டு அடுத்த தலைக்கு அம்பு பாயும். '' என்னருந்தாலு அது நாலு சொவத்துக்குள்ள,.. இது நரிக்கொறத்தி மாதிரில்ல இருக்கு..''சில்லான் சொல்லவும் குபீர்னு சிரிப்பு வரும். இப்படி குருவம்மா அங்கிருந்து பாட்டுப்பாட இங்கிருந்து எதிர்ப்பாட்டுப்பாட சிரிப்பும் வசவுமா தேரம் கழியும்.


'' எலே ஊரே சிரிக்கிது, எந்திரிச்சி ஒம்பொண்டாட்டிய என்னனு கேட்டுட்டு வாடா''கருப்பணப் பெருசு சொல்லவும். '' சீட்டுருக்கில்ல பெரியா '' '' ஆமா நொட்டுன கடசியில எப்டியும் புல்லு தாங் கொடுக்கப் போற, அதுக்கு இப்பக்கவுத்துனா... ஆப் தா வரும்,. இங்க பாரு ஜோக்கர கழட்டிப்பொடுறத ஏ....போடாக் கீர, கீர....முண்ட''சீட்டைச் சொத்தென்று எரிந்துவிட்டு ஆங்காரத்தோடு எழுந்து போவான். '' இன்னைக்கி ரணகளம்தான், ஏ சீட்ட நிப்பாட்டுங்கப்பா குருச்சேத்திரம் பாக்கலாம் '' '' ஆமா போனாலும் அந்தானக்கி.... போனதும் பொசுக்குனு படத்தப்போற்றுவாம்பாரு ''அவர்கள் சொன்னபடியே அவள் ரெண்டு வசவு வைவாள், அடிக்கப்போவது மாதிரி இவன் கைதூக்குவான், பிறகு கையிலிருக்கிற பத்து ரூபாயைக் கொடுக்கவும், சமாதானமாகிப் போய் விடுவாள்.


எலவந்தூர்க்காரியும் வந்த புதுசில், என்னங்க மாமா, போங்க மாமா என்றுதான் சொன்னாள். தெருச்சண்டையில் கெட்ட வசவுகள் கேட்டால் காது பொத்திக்கொள்ளும் நாகரீகக்காரியாகத்தானிருந்தாள். சனங்கள் சொல்வதுபோல ஊர்த்தண்ணியக்குடித்ததும் அவளுக்கும் வாயில் நாற வார்த்தைகள் தன்னாலே வந்தது. இல்லாவிட்டால் அந்த ஊருக்குள் காலந்தள்ள முடியாது. பைபிளம்மாப்பட்டிக்கு மட்டும் தான், ரெண்டு கொரிந்தியர், மத்தேயு எழுதின சுவிசேசம் பத்தாவது அதிகாரம், ஐந்தாவது வசனம் என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் வாய்க்குள் நுழையாது. ஏ சாத்தானே, கள்ளக்கழுத என்ற வார்தைகள் வந்தால் உச்சபட்சக்கொபத்தில் இருக்கிறதென்று அர்த்தம். மத்தபடி ஊரில் எல்லோருக்கும் கெட்ட வார்த்தைகள் இணைப்பு வார்த்தைகளாகி சந்தோசத்திலும், கோபத்திலும் கொப்பளிக்கும்.


ஆனால் அண்ணன் தம்பிகள், ஊர்ப்பெரியவர்கள், படிக்கிற பையன்களைப் பார்த்தால் பிரம்மாஸ்த்திர வசவுகளைப்பதுக்கிக்கொள்வது ஊர்ப்பெண்களின் இயல்பிலே குடியிருந்தது. கொட்டடடித்துக்கொண்டு தெருவழிப்போகும் எல்லா ஊர்வலங்களும், வேதக்கோயிலின் முன்னால் வந்தவுடன் சுத்தமாக நிறுத்தி நடந்து வாசல் தாண்டியவுடன் ரண்டனக்க, ரண்டனக்க எனும் உச்ச சுதிக்கு போவது போலொரு அணிச்சை மரியாதை இருக்கும். தெக்கு ஓடை பெண்களுக்கு அதனால், வடக்கு குளத்துப்பக்கம் பெண்கள் நடமாட்டம் அறவே இருக்காது. அது போலவே ஊரை ஒட்டி இருக்கிற கனி நாடார் பம்புசெட்டில் ஆம்பளைகள் குளித்தால் ஐ கோர்ட்டுக்கு வரை பெண்கள் போவார்கள். இவை யாவும் வேலிகளல்ல, மரியாதை வளையங்கள். இதைத்தாண்டிப்போகக்கூடாது எனும் கடுஞ்சட்டமும் கிடையாது, தாண்டியவர்களுக்கு தண்டனையும் கிடையாது.


'' ஏ.... ஒம்பூன வீடுமொழஞ்சி ஆனச்சட்டிய நக்குது '' என்று சொல்லுவதில் ஒரு செய்தியும், எச்சரிக்கையும் இருப்பது போல, '' ஓங் கோழிய ஒழுங்கா பஞ்சாரக்கூடைக்குள்ள பொத்திப்போடு '' என்பதிலும் எதிர் சமிக்கை மறைந்திருக்கும். அதே மாதிரி அந்த ஊர் முளைத்த நாளிலிருந்து வெள்ளைச்சேலையே யாரும் உடுத்தவில்லை. வருசம் திரும்பக்காத்திருந்து மறுதாலி வாங்கிக்கொள்ளும் தமிழ்பெண்கள் நிறைந்திருந்தார்கள்.ஒரு குச்சியை முறித்துப்போட்டு பருசப்பணத்தை திருப்பி வாங்கி பெண் வீட்டாருக்கு கொடுத்து விட்டு, ஊர்க்காரர்களுக்கு வெத்திலை பாக்கு வைத்து பிரிந்து போகும் கல்யாணங்கள். அது போலவே பிடிபட்டால் அண்ணாக்கயிறை அறுத்து தாலியாக்கிச் சேர்த்து வைக்கிற கட்டாயக்கல்யாணங்களும் சாதாரணம்.


ஆனாலும் கூட ரெண்டு வருசமாகத் தீராமலிருந்தது சின்னக்காளின் வழக்குத்தான். இதுவரைக்கும் ஆறு முறை பஞ்சாயத்துக்கூடியிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் சனிக்கிழமைதான் நடக்கும். ராத்திரி ஆரம்பிக்கிற கூட்டம் விடிய விடிய நடப்பதால் அப்படியே விடிகிற நேரம் கறிப்போட ஆள்கிளம்பும். கறியெடுத்து வதக்கி சாராயம் ஊத்திக்கிட்டு மறுநாள் தூங்கிப்போகலாம். ஒவ்வொரு தரமும் சங்கன் தான் பிராது கொடுப்பான் எனக்கு அவள் வேண்டாமே......வேண்டாமென்றும் தீர்த்து விட்டுவிடவேண்டுமென்றும், சாம்பான் வீட்டுக்கும், தங்கிளியான் வீட்டுக்கும் நடையாய் நடப்பான். வெதப்பு அறுப்பு காலங்களைத் தவிர்த்துவிட்டு சாவகாசமான நாள்குறித்து ஊர்சாட்டுவார்கள்.


''இன்னைக்கி ஒரு தேங்காயும் ஒரு கட்டு வெத்திலயும் மாரியப்ப நாடார் கடையில் வித்துப்போகும்டியோய்''சொல்லிக்கொண்டே ஊர்கூடும், ஊரென்றால் மொத்த ஊரல்ல பிராதுகுடுத்த சங்கன், சங்கனின் வலசல் பத்துப்பேர். எதிர்ப்பிராதுகுடுத்த சின்னக்காள், சின்னக்காளின் வலசல் அஞ்சு பேர். ஊர்த்தலைவர், சாம்பான், தங்கிளியான், அப்புறம் தெண்டப்பணத்தில் தண்ணியடிக்க ஆறுபேர் உட்கார்ந்திருப்பார்கள். சுவாரஸ்ய ஈர்ப்பில் எட்டத்தில் நிறைய்யப் பெண்கள் நின்றிருப்பார்கள்.


அச்சடிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் இல்லாதபோதும், ஆண்டை அடிமை இல்லாததாலும், அந்த துலாக்கோளுக்கென்றும் சேதம் வந்ததில்லை. கருப்பணப்பெருசின் வலசல்கள் பிராதுக்குள் வராதவரை நீதி ஒருபோதும் வழுவாது. ஆனாலும் சின்னக்காளின் வழக்குத்தானின்னும் தீர்ந்பாட்டில்லை. அது தொடங்கிய இடத்துக்கே வந்துவிடும் '' எங்கள வேல வெட்டியில்லாத சும்பப்பெயகன்னு நெனச்சியா, இன்னுமே ஊரக்கூட்டுன தாயோளி..ஊரவிட்டே வெரெட்டிப்பிடுவேன் கீர... கீரமுண்ட '' வேட்டிமண்ணைத் தட்டிக்கொண்டே இன்னும் கூடுதல் அடைமொழிகளோடு திட்டித்தீர்த்து விட்டு சீட்டு விளையாடப்போய்விடுவார் கருப்பணப்பெருசு.


தாழ்வாரத்தில் படுப்பதா, வீட்டுக்குள் படுப்பதா எனும் குழப்பத்திலேயே அவனது ராத்திரி கழிந்துவிடும். சின்னக்காள் கண்முழிக்கிற நேரமெல்லாம் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொடு பீடியைக்குடித்துக்கொண்டிருப்பான். சாமத்திற்குப்பிறகு கண்ணயர்ந்து ஒரு கோழித்தூக்கம்போட்டு அவனுக்கு விடியும் போது ஊர் சுறு சுறுப்பாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும். பொண்டாட்டி காணாமல் போயிருக்க, ஊரிலுள்ள சோக்குப்பேர்வழிகள் எல்லோரும் வில்லனாகத்தெரியவார்கள். பருத்திக்காட்டுக்கு களை எடுக்கப்போய்த்திரும்பி வருகிற அவளை கண்ணால் சோதனை போடவும், கேள்விகளால் தீக்குளிக்க வைப்பதும் சகிக்காமல் பூட்டிவைத்த வயைதிறப்பாள். சாம தான பேதம் தீர்ந்து கடசியில் சண்டை வந்துசேரும். ஒண்ணுரெண்டாய் ஊர்த்தலைகள் கூடி கூத்துப்பார்க்கும்.


அடுத்த நாள் மூஞ்சி முகம் வீங்கிப்போக சங்கன் வேலைக்குப்போவான் சின்னக்காள் மட்டும் விடுப்பெடுக்க நேரும். வருசத்துக்கு மூனு தரம் கோபித்துக்கொண்டு மலைப்பட்டியிலிருக்கும் தாய் வீடு போவாள். ஒரு மாதம் கழித்து வந்து சங்கன் பாவம்போல நிற்கிறதைப்பார்த்து மனசிறங்கிப்போய் திரும்பிவருவாள். இப்படியே ஆறு வருசம் ஓடிப்போனது. இப்போது அங்கும் போவதற்கும் வழியில்லாமல் பெத்தவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள். இந்த ஆறு வருசம் சந்தோசச் சுவடுகள் ஏதுமற்ற வெட்டவெளியாக கடந்துபோனது. நாலு வார்த்தை சிரித்துப்பேசவும், தோளில் கிடந்து கண் மூடவுமான ஏக்கம் கெட்டிதட்டிப்போய்விட்டது. இந்த இண்டஞ்செடிப்புதருக்குள்ளிருந்து வெளிவர வழிதெரியாமல், சில நேரம் அரளி அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து இரவு வரக்காத்திருப்பாள். ஆனால் அன்று மட்டும் பாசக்காரனாகத் தெரிவான். மறு நாள் விடிகிற போது, சங்கனின் கண்களில் இன்னும் ஆயிரம் மடங்கு சந்தேகம் தேங்கியிருக்கும். அப்போதெல்லாம் அவளை உரசிப்போகிற சினையாடு தான் இண்டஞ் செடியைத் தாண்ட தடம் தரும். குனிந்து கழனித் ததண்ணீர் காட்டும்போது முகம் உரசும். காட்டுக்கு பிடித்துக்கொண்டுபோகும் போது துள்ளியோடி திரும்பி வந்து பிருஷ்டத்தில் பொய்முட்டு முட்டி விளையாடும். சேலைத் தலைப்பைக் கடித்து இழுக்கும். அந்த ஆட்டின் கையில் தான் இவளைக்கட்டியிழுக்கிற பாசக்கயிறு இருந்தது.


சின்னக்காள் வேகு வேகென நடந்து வந்தாள். அவள் கையில் ஒரு கட்டு ஆமணக்கு குலையிருந்தது. தலையில் சின்னப்புல்லுக்கட்டு இருந்தது. கை குரக்கவலித்து, தலை குன்னிப்போனது. மனசும் உடலும் சுமை இறக்க இடம் தேடி அலைந்தது. கீழ் திசை பார்த்திருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள். கட்டைப்பீடிகளும் வெற்றிலைக்காம்புகளுமாக் கிடந்த தூசியைத்தட்டினாள். பீடி நாத்தம் குறைந்து கல் மண்டபம் குளு குளு வென்றிருந்தது. அப்போது இருட்டைப்பற்றியதான பயம் குறைவாகவும், சங்கனைப்பற்றிய பயம் அதிகமாகவும் வந்து சேர்ந்தது. மெலிதான காற்று வீசவும் வியர்வையிருந்த இடங்கள் குளிர்ந்தது.


பக்கத்திலிருந்த அடி குழாயைப்பார்த்ததும் நாவறட்சி கூடுதலானது. எழுந்துப்போய் தண்ணீர் வரும் வரை கைபிடியை அடித்தாள் குழாய்ப்பக்கம் வந்து கையேந்திக்குடித்தாள் தாகமடங்கவில்லை திரும்பவும் வந்து தானே அடித்து தானே குடித்தாள். தனியே அமர்ந்து சதுரங்கம் ஆடுவதுபோலவும், சடங்கான சமயத்தில் ஆளில்லா வேளையில் இல்லாத போட்டியாளைக் கற்பனை செய்துகொண்டு பாண்டியாடியது போலவும் இருந்தது. கொஞ்சம் தண்ணியள்ளி முகத்திலடித்துக்கொண்டாள். கல்மண்டபத்தில் உட்கார்ந்து முந்தானையெடுத்து முகம் துடைத்த போது கிழக்கே மாடசாமி கோவிலைத்தாண்டி, கருத்தரசா நாடார் மொட்டைக் கிணற்று கமலைக்குத்திக்கு மேலே உருண்டையாகச் செந்துருக்கப்பொட்டு நிறத்தில் நிலாக்கிளம்பி நின்றது. கொக்கு ஒன்று வானப்பெரு வெளியில் தன்னந்தனியே காற்றைக்கடந்து போனது. எதிரே கதவில்லாப்பிரகாரத்தில் கேட்பாரற்ற பிள்ளையார் சிலையும் தனியே கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருந்தது.


குளிர்ந்த கல்மண்டபம், நிலா, மெலிய காற்று, எல்லாம் சேர்ந்து தனிமையின் மேல் தீயள்ளி வீசியது. சின்ன வயசில் கடலைச்செடிக்குமிக்குள் கட்டிப்பிடித்துக் கடித்துவைத்த காளியப்பனின் முகம் வந்து போனது. அவனிடமிருந்து கிளம்பும் பப்பர்மிட்டய் மணத்தில், அரோக்கியதாசின் இறுக்கம் அழுத்தியது. அவன் இருந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே இருந்தது. எவ்வளவு நேரம் பின்னோக்கிச்சுற்றினாலும் சங்கனின் பீடிக்கங்கு எறிகிற முகம் தென்படவே இல்லை. காளியப்பனையும் ஆரோக்கியதாசையும் சேர்த்துப்பிசைந்த ஒரு உருவம் தேடித் தேடி அலைந்தது. பிள்ளையார் மண்டபத்தில் பட்டுத் தெறிக்கிற நிலா வெளிச்சத்தில் அவள் மட்டும் தனியே இருந்தாள். யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத நினைவுகளைப் பிள்ளையாரிடம் சொல்லுவதாகப் பாவனை செய்து கொண்டு சொன்னாள்.


அடியில் தேங்கிக்கிடக்கிற நினைவுகளை வார்த்தைகளில் சொல்லமுடியாமல் திக்கினாள். சங்கன் நட்ட நடுக் கூட்டத்தில் பஞ்சாயத்தார் மத்தியில் சொன்ன வார்த்தைகள் அவளை உக்கிரமாகத்தாக்கின. '' ஊர் மேயிறவா, மலடி, ராங்கி பிடிச்சவா'' இந்த வார்த்தைகள் உலுக்கிப்போட்டது. '' பிள்ளையாரப்பா என்னியப்பாரு நானா மலடி '' என்று சாயம்போன கண்டாங்கிச் சேலையை உருவிப்போட்டு, பிறந்த கோலத்தில் நின்றாள். பேய் பிடித்து விட்டதாக ஊர் நம்பியது. சாமி இறங்கியதென்று சங்கனும் பயந்தான். அவள் ஒவ்வொரு நிலா நேரத்திலும் கானாமல் போனாள். பிறகு ஒரேயடியாகக் காணாமல் போனாள். அவனைத்தேடி வெளியூரிலிருந்து ஆட்கள் வரும் வரை ஆரோகியதாஸ் காணாமல் போன விசயம் யாருக்கும் தெரியாமலே இருந்தது.

14 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு..கிராமத்து வழக்கங்கள் ஆச்சர்யம் தந்தன!

லெமூரியன்... said...

பட்டையை கெளப்புறீங்க தலைவா.....அப்டியே நம்ம ஊருக்குள்ள ஒரு சுற்று போய் வந்த உணர்வு...!

\\' ஏ.... ஒம்பூன வீடுமொழஞ்சி ஆனச்சட்டிய நக்குது '' என்று சொல்லுவதில் ஒரு செய்தியும், எச்சரிக்கையும் இருப்பது போல, '' ஓங் கோழிய ஒழுங்கா பஞ்சாரக்கூடைக்குள்ள பொத்திப்போடு '' என்பதிலும் எதிர் சமிக்கை மறைந்திருக்கும்.//

இப்போது அப்டிலாம் இல்லாம போச்சு! வாழ்க்கை முறை மாற்றத்தில் ஊடகங்களின் பங்கு ரொம்பவே உண்டு.

ஆ.ஞானசேகரன் said...

கிராம சூழல்களை அடுக்கடுகாய் சொல்லிய விதம் அருமை... நல்லாயிருக்கு நண்பா... மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு சொல்லுகின்றேன்

பா.ராஜாராம் said...

என்ன காமராஜ் இப்படி பெசையீறீங்க?சொல்ல இயலாத தாக்கம் கதை முழுக்க விரவிக்கிடக்கு.தலைகீழ் அடிச்சு போடுது மக்கா!சமேபத்தில் எழுதியதா மீள் பதிவா?கதைக்குள் காலம் கவிச்சி அடிக்குது.குலை பதறும் கவிச்சி.எப்படி ஒரு கிராமத்தை கட்டி வைத்து உரிக்க முடியும் எழுத்தில் என இருக்கு.கைக்கு இன்னொரு முத்தம் காமராஜ்!

velji said...

ரொம்ப நல்ல..கதை என்று சொல்ல மனசில்லை,நிகழ்வு என்றே சொல்கிறேன்.
நீதி வேறு,நியாயம் வேறுதான்.
அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே.

காமராஜ் said...

சந்தனமுல்லை வணக்கம்.

கருத்துக்கு நன்றி.
இந்தக்கதை குறித்த வெளிப்படையான கருத்துக்கள் வரும் என எதிர்பார்த்தேன்.
இது பதிவா சிறுகதையா எனும் அலைச்சலில் எனக்கும் கூட இன்னும் விடையில்லை.
எனினும் அன்பே பெரிது.

காமராஜ் said...

நன்றி லெமூரியன்.
தங்களின் அவதானிப்பு மிகச்சரி.
இது ஒரு கால் நூற்றாண்டுக்கு
முந்தைய கிராமம்.
இப்போது இருப்பை பிடிக்க தேரம் இல்லை.
பெருங்காய டப்பா மாதிரிதான் வாசனையை வைத்து
எழுதியது.

காமராஜ் said...

என் அன்புத்தோழா ஞான்ஸ் வணக்கம்.
உங்கள் அன்புக்கும் ஊக்கத்துக்கும் வந்தனம்.

காமராஜ் said...

அன்பான பாரா..
கூடி நின்று கைதட்டுவோர் மத்தியில் உருத்தான பார்வை தேடுவதுபோல
ஒவ்வொரு பதிவுக்கும் உங்கள் வார்த்தை தேடி அலைகிறது மனசு.
பாசம் கெட்டித்துவிட்டால் சண்டைகள் கூடப்பூக்கள் எறிந்து நடக்கும்.
கண்டிச்சு ரெண்டு வார்த்தை சொல்லமாட்டீர்களா பாரா.

காமராஜ் said...

வேல்ஜி உங்கள் கருத்து எனக்கு நிறையச்சொல்லாத ரோசனை சொல்லுகிறது நன்றி.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ஊர்ல வெள்ளச்சேலயவே பார்க்க முடியாது, மறுதாலி கட்டிக்கொள்பவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். எப்படி இவர்களுக்கு இவ்வளவு சுலபமாய் இருக்கிறது வாழ்க்கை.

அழகான கதை...எனக்கு நிறைய இடங்கள் ரொம்ப பிடித்திருந்தது.

புளியமரங்கள் குவிந்திருந்தது.

துலாக்கோள்க்கென்றும் சேதம் வந்ததில்லை.

செந்துருக்கப்பொட்டு நிறத்தில் நிலாக்கிளம்பி

பிள்ளையார் சிலையும் தனியே கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டிருந்தது.

கடைசிப்பத்தி அவ்வளவு பாந்தமாய் உட்காரவில்லை கதையில், இதை இன்னும் அழகாக முடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது காமராஜ்!

தளுக்கி நடக்கும் ஒரு சிங்காரியின் நடையும், நம்ம ஊர் வாசனையும் மழை வாசனையை விட ரம்மியமாய் இருக்கிறது காமராஜ்!

அன்புடன்
ராகவன்

☼ வெயிலான் said...

நானும் காணாமல் போய் விட்டேன்....

காமராஜ் said...

நல்லது என் அன்பு ராகவன்.

கடைசிப்பத்தி குறித்த உங்கள் விமர்சனம் மிகப்
பொருத்தம். இதையே அன்புத் தோழன் மாதுவும் சொன்னான்.
வாய் மொழியக மாதுவிடம் சொன்ன முடிவை எழுத்தில்
எழுத கைவரவில்லை.
ரொம்பவும் சந்தோசமாக இருக்கு.
இதே கதை பற்றி ஒவியர் சந்துருவும்
இன்று தான் அலைபேசியில் பேசினார்.
எல்லோருக்கும் அன்பும் நன்றியும்.

காமராஜ் said...

வெயிலான் உங்கள் பின்னூட்டத்தைப்படித்துவிட்டு நானும் இல்லத்துணையும் நெடுநேரம்
சிரித்தோம்.