12.1.12

ரோஷத்தின் பெயர் வறுமை



அந்த விடிந்தும் விடியாத அதிகலையில் நகரத்தின் தார்ச்சாலையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு இருப்பது யாரென்கிற சந்தேகம் வந்தது. கொஞ்சம் விலகி நடந்து அவரை உற்றுக் கவனித்தேன். புழுதிபடிந்த தார்ச் சாலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். நெருக்கமாகப் போனபோது கரிக்கட்டையையும் உடைந்த சாக்ப்பீசுகளுடன் ஓவியம் தீட்டுவது தெரிந்தது. கடந்து போக முடியவில்லை. சற்று  நின்று கவனித்தேன். என்னால் அந்தக் கோடுகள் இணைந்து உருவாக்கப்போகிற உருவத்தை உருவகிக்க முடிய வில்லை. அவ்வளவு நேரம் நின்றிருந்து விட்டு சும்மா போனால் நான் மனிதாபி மானியில்லை என்கிற மதர்ப்பு என் பைக்குள் துழாவி ஒரு ஐந்து ரூபாயோடு வெளியேறியது. குனிந்து கைகள் வரைந்து முடிந்த பகுதியில் வைத்து விட்டு நிமிர்ந்தேன். நடந்தேன் என்னை அழைத்தார் ‘பிடி உன் திமிர்ப்பிடித்த பணத்தை ’என்று மூஞ்சிக்கு நேரே வீசினார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காசை எடுத்துக் கொண்டு தொடர்ந்தேன்.

வயிற்றுப் பிழைப்பில் அதிகாலை நடந்தது எல்லாமே மறந்துபோயிருந்தது. கடன் வசூல்செய்யச்சொல்லி மேலாளர் ஒரு முகவரிகொடுத்தார் மூன்று மணிக்கு ஆரம்பித்து இறுதியில் நான் காலையில் நட்ந்துவந்த அதே வண்டிக் காரத் தெருவில் தான் அந்த கடைஇருந்தது. வண்டியை ஓட்டிக் கொண்டு போனபோது சாலையின் ஓரத்தில் கறுப்பு வெள்ளையில்  உருவம் இருந்தது. பாதி கிருஷ்ணரும் பாதி கிருஸ்துவுமான உருவம். கிருஸ்துவின் கண்களில் மட்டும் எப்போதும் வழியும் கருணைக்குப்பதில் உக்கிரம் இருந்தது.

சுற்றும் முற்றும் தேடினேன் எங்கும் அந்தக் கலைஞன் தெரியவில்லை. யாரும் அழுக்குச்சட்டை அணிந்து எதிர்ப்படும் எ3ல்லோரும் ஓவியராகவே தெரிந் தார்கள். காசு போட்டதற்கான அடையாளமும் இல்லை.

1 comment:

vimalanperali said...

விடிந்து விடியாத இரவுகளும்,ஓவியனி ஓவிங்களும்,அவனை பாதித்த நினைவுகளும்,சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிற மொன்னைத்தனமான பிரேமைகளும்,கடித்துதின்கிற வறுமையும்அவரது உருவம் மாதிரியே அழுக்குடன் வலம் வருகிற அவலம்,,,,,,,,/