14.5.10

முடிந்ததும் முடியாததும்.

நேற்று முன்தினம் போய்
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த
தொழில் நுட்பக்கல்லூரியில்
துண்டுபோட்டுவிட்டு வந்தாச்சு
நாளைதான் தேர்வு முடிவுகள்.

இருபது வருஷ சம்பாத்யத்தில்
வாங்கிய துண்டின் விலை இரண்டு லட்சம்.
கண்டும் காணாததுக்கு பிஎஃப் இருக்கு
அதுவும் காணாதென்றல் அவளது சங்கிலி
அப்பாட தகப்பனின் கடமை முடிந்துபோனது.

தேர்வுகள் நடக்குமுன் வினாத்தாள்
முடிவுகள் தெரியுமுன் அட்மிஷன்
கட்டணம் நிர்ணயிக்குமுன் பட்டுவாடா
இனி சட்டப்படி கவுன்சிலிங்.
அப்பாட அரசின் கடமை முடிந்தது..

ஆனால்
இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கு
ஒரு சிறு கடமை இருக்கிறது
அது இன்னும் தெரியாமலே இருக்கிறது.



16 comments:

Unknown said...

ரொம்ப கஷ்டமா இருக்கு , .

ஈரோடு கதிர் said...

//நேற்று துண்டுபோட்டுவிட்டு வந்தாச்சு
நாளைதான் தேர்வு முடிவுகள்.//

காந்தி ஜெயந்திக்கு கூடுதல பத்து ரூவா கொடுக்கனும்னு,
முந்தின நாளே சரக்கு வாங்கி வச்சிக்கிற மாதிரிதான்...

ஆரூரன் விசுவநாதன் said...

"நெஞ்சு பொறுக்குதில்லையே" வேறென்ன சொல்லிவிட முடியும் தோழர்

vasu balaji said...

தள்ளுபடி அட்மிஷன்ல கொடுக்கப் போறாங்களாம். இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல.:(

நேசமித்ரன் said...

:(

ஆனால்
இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கு
ஒரு சிறு கடமை இருக்கிறது
அது இன்னும் தெரியாமலே இருக்கிறது.

சத்தியமான வார்த்தைகள் காமு சார்

மாற்றங்கள் தனி மனிதனிடமிருந்து துவங்கும் வேண்டும் துவங்கும்

மாது சார் சொல்வது போல் உலக புரட்டும் நெம்புகோல் வேறெங்கும் இல்லை நம்மிடம்தான்

பா.ராஜாராம் said...

டைமிங், மற்றும் வலி. :-(

நன்பன் நேசன் அருமையாய் சொல்லி இருக்கான்.

க ரா said...

(-:
கல்வியே ஒரு தொழில் ஆகிப்போனாது நம் நாட்டில். அதற்கு அரசாங்கமே கமிசன் ஏஜெண்ட் ஆகிப் போனது வருத்தமே.

malar said...

உண்மைதான்....

VISA said...

முதலில் துண்டு போட வேண்டிய அவசியம்?

தலை சிறந்த கல்லூரி என்பதாலா?

ஒரு வேளை நன்றாக படித்திருந்தால் கவுன்சிலிங்கில் அந்த கல்லூரி என்றில்லை
அதை விட நல்ல கல்லூரி கிடைக்கும் தானே?

படிக்க வசதி இல்லாமல் பின் தங்கி போன மாணவர்களை குறித்து யோசித்தால் அவர்களுக்கும் வெறும் பீஸ் மட்டும் கட்டி டோனேஷன்
இல்லாமல் படிக்கும் அளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. எனவே சிறந்த கல்லூரி என்று ஏன் 2 லட்சம் கொடுக்க வேண்டும்.

இங்கே அரசு கல்வியை வியாபாரம் அக்குவதை நான் மறுக்கவோ அதை ஆதரிக்கவோ இல்லை.

சரி இதற்கு யார் கேள்வி கேட்பது யார் எதிர்ப்பது எப்போது எதிர்த்திருக்க வேண்டும்?

அன்புடன் அருணா said...

/இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கு
ஒரு சிறு கடமை இருக்கிறது
அது இன்னும் தெரியாமலே இருக்கிறது../
இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கும்,முடிந்த ஜனங்களுக்கும் கூட
ஒரு சிறு கடமை இருக்கிறது.படித்து வெகு நேரம் ஆகியும் பிரச்சினையையே சுற்றிக் கொண்டிருக்கிறது மனம்.

க.பாலாசி said...

இக்காலத்திற்கு வெகு பொருத்தம்....

// ஈரோடு கதிர் said...
காந்தி ஜெயந்திக்கு கூடுதல பத்து ரூவா கொடுக்கனும்னு,
முந்தின நாளே சரக்கு வாங்கி வச்சிக்கிற மாதிரிதான்...//

அதேதான்....

ராமலக்ஷ்மி said...

வருத்தமான உண்மை!

காமராஜ் said...

முன்கூட்டியே இடம் பிடிக்க வழியிருக்கும்போது கவுன்சிலிங் என்பது அனாவசியமாகிறது.அல்லது கந்துடைப்பாகிறது. நேற்று நண்பர் சொன்னார் நர்சிங் பட்டம் முடித்துவிட்ட பெண்களுக்கு, ஒரு வருடம் பயிற்சி கொடுக்க அதாவது நர்சாக வேலைபார்க்க ஒரு லட்சம் கட்டவேண்டுமாம்.எவ்வளவு கொடூரம் இது. அயல்நாடுகளில் பகுதிநேரம் வேலைபார்த்து சம்பாதிக்க முடிகிறது. இங்கோ.வேலைக்குப்போக பீஸ் கட்ட.வேண்டியிருக்கிறது.இதை நாம் ஆதரிப்பதா? எதிர்ப்பதா?

ராம்ஜி_யாஹூ said...

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் இது.
தேர்தலின் போது , வாக்காளர்களாகிய நாம் நம் கடமையை சரி வர செய்யாமல் இப்போது , அடுத்தவர்களை குறை கூறி என்ன பயன்.

யாநிலாவின் தந்தை said...

பத்து ஆண்டுகளுக்கு முன்னே "ப்ரீ சீட்" என்கிற வகையில் ஒரு நல்ல(?) தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது எனக்கு. சாதாரண கட்டிடதொழிலாளியான என் தந்தையால் ஒரு பத்தாயிரம் ரூபாயினை வருட கட்டணமாக செலுத்தமுடியாமல் தவித்தபோது என் தந்தையின் முகத்தில் நான் கண்ட வேதனை கலந்த இயலாமை இன்றும் என் கண் முன்னே இருக்கிறது..
பத்தாயிரம் ரூபாயினை கட்டி என் படிப்பை எப்படி முடித்தேன் என்பதை ஒரு பெரிய நாவலாக எழுதக்கூடிய அளவில் சோகங்களும் வேதனைகளும் சொல்லி மாளாது.
பத்தாயிரத்திற்கே இத்தனை கொடுமை என்றால், இன்றைக்கு லட்சக்கணக்கில்.............

கல்வி இந்த அளவிற்கு மிகபெரிய வியாபாரமாகி நம்மைபோன்றோர்க்கு அந்நியமாகிப்போனதற்கு, நம்முடைய போராட்டங்கள் வலிமையானதாக இல்லையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது....

சுந்தரா said...

//இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கு
ஒரு சிறு கடமை இருக்கிறது
அது இன்னும் தெரியாமலே இருக்கிறது.//

எப்போ தெரிஞ்சு எப்போ விடியும்?
சலிப்புத்தான் மிச்சமாகிறது.