5.6.10

நினைவடுக்களிலிருந்து சில கிளிசீட்டுக்கள்.

எண்பதுகளில் தமிழெழுத்துக்களுக்கு புதிய களம் அமைத்த தோழர்கள்.
ஆஹா நாமளும் எழுதலாமே என்கிற துணிச்சலைக் கொண்டுவந்த பாடுபொருட்கள்.ரொம்பக் கிட்டக்க வந்து தலையில் விரல் விட்டு பேனுக்கு அலைந்து விடுகிற சாக்கில் கிளர்ச்சியை கொண்டு வந்த எங்கூருக் கிழவிகளின் வாசம் கொண்டுவருகிற எழுத்துக்கள் இது.கொதிக்கிற குழம்பெடுத்து நொட்டாங்கையில் விட்டு ருசிபாகாக்க நாலு சொட்டு.

கொஞ்சம் சாம்பிள்.

0

ஒரு பார்வைக்கு அந்த ஆலமரம் அப்பத்தா இடுப்பு போலிருக்கும்.அப்பத்தா ஒருக்களித்துப் படுத்திருக்கும்போது இடுப்பில் உட்கார்ந்து குதிரையோ,
யானையோ ஓட்டலாம்.அல்லது பஸ்கூட ஓட்டலாம்.அல்லது வயக்காட்டில் பொம்ப்ளைங்க கட்டி மித்திக்கிறமாதிரி அவளுடைய மிருதுவான பருத்த உடம்பின் மேலேறி நின்று சுவரைப்பிடித்துக்கொண்டு மிதி மிதி என்று மிதிக்கலாம்.அவ மிதிக்காதலே,மிதிக்காதலே என்று சொல்லுகிற தினுசே இவனை இன்னும் தீவிரமாய் மிதிக்கச்சொல்லி உற்சாகப்படுத்தும்.

மற்றும் மைனாக்கள்

ச.தமிழ்ச்செல்வன்.


பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும்.தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள். விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களில் பாய்ச்சிக் கொள்வோம்.  நூற்றாண்டுகள்  தடித்த இருட் சுவற்றைக் கடக்க வேண்டியவர்களன்றோ  நாம்.

இரவாகி விடுவதாலே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை.

ஆதவன் தீட்சண்யா.

கடகடவெனபிரதேசமே அதிரும்படி லாரி ஒன்று ரோட்டில் போனது.மண்லாரி. குவிந்திருந்த மணலில் கைகால்களைப் பரத்திப் போட்டு வானம்பார்க்க ஒரு மனிதன் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வெயிலிலா? எங்கிருந்து வருகிறான் ?. கண்ணிலிருந்து  லாரி மறைந்த  பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதனுக்கு எது வெயில்?.

இயேசுவானவன்.

மாதவராஜ்.

முடியவில்லை திட்டுத்திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக்கறைகளில் பாட்டும் சந்தோசமும் ஒட்டிக்கிடந்தன.

தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது  தெரிந்தது. நடை தானாகவே சத்ததைக் குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப்பார்க்கவே கோபமாய் வந்தது.

சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான்.ரெண்டுபேருமே பேச ஏதுமற்றுப்போனது.விரித்திருந்த பாயின்மேல் படுத்து அவளது பழைய்ய புடவையைப் போர்த்திக்கொண்டான்.அவள் இவனைப்போர்த்திக்கொண்டாள்.

ஏழுமலை ஜமா.

பவா செல்லத்துரை.

மனசிருந்தால் புளிய இலையில் இரண்டு பேர்படுத்துத் தூங்கலாம்.

ஷாஜஹான்.

5 comments:

vasu balaji said...

/மனசிருந்தால் புளிய இலையில் இரண்டு பேர்படுத்துத் தூங்கலாம்./

அடடா! மொத்த மனுச வாழ்க்கையும் இந்த ஒத்த வரில அடங்கிப்போச்சுங்க. சுத்தி சுத்தி ஸ்நேகமும், ப்ரேமையுமா உலகம் எவ்வளவு அழகாய்டும்.

/கொதிக்கிற குழம்பெடுத்து நொட்டாங்கையில் விட்டு ருசிபாகாக்க நாலு சொட்டு. /

டொக். :). சப்புக்கொட்ட வைக்குது.

சீமான்கனி said...

//கொதிக்கிற குழம்பெடுத்து நொட்டாங்கையில் விட்டு ருசிபாகாக்க நாலு சொட்டு. கொஞ்சம் சாம்பிள்//

இன்னும் அடிமனசுல அந்த ஆனத்தோட வாசம் வீசுது...ரசிச்சு படிச்சேன் அண்ணே ரெம்ப சிறப்பா இருக்கு பகிர்வு....

ஆடுமாடு said...

தோழரே வணக்கம். கொஞ்சம் வேலைப் பளு.
பதிவுகள் பக்கம் வரமுடியவில்லை.

இந்த தலைப்பே கவிதையாக இருக்கிறது.
உங்களின் கிராமத்தையும், அனுபவத்தையும் எழுத்தில் வாசிக்கும்போது
அப்படியே உள்ளிழுத்துக்கொள்கிறது முகம் தெரியாத உங்கள் மனசு.

எல்லா பதிவையும் சின்னதாகவே முடித்துவிடுகிறீர்கள்.
ஊர் அனுபவம் பற்றி இன்னும் எழுதுங்கள்.

மாறி வரும் உலக மயமாக்கச் சூழலில் நம்மக்களின் பழக்க வழக்கங்கள் மண்ணோடு மண்ணாய் போய்விடக்கூடாது.
அதுபற்றிய பதிவு அவசியம் என்றே கருதுகிறேன்.

வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

கொதிக்கும் குழம்பெடுத்து நொட்டாங்கையில் ருசி பார்ப்பதும் மனசிருந்தால் புளிய இலையில் இரண்டுபேர் படுத்து தூங்கலாம் எனும் நேச நம்பிக்கையும் நம் கிராமத்தின் புழுதிக்காற்றை உணரச் செய்தன.

மிக முக்கியமாக இந்த நாள் முழுக்க புளிய இலையைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன்.

ஆடுமாடு சொல்வதுபோல இன்னும் கொஞ்சம் விரிவாகத்தான் எழுதுங்களேன் அண்ணா.

க ரா said...

/மனசிருந்தால் புளிய இலையில் இரண்டு பேர்படுத்துத் தூங்கலாம்./
எங்கள் வீடான பத்துக்கு பத்து அறையில் 100 பேர் படுத்து தூங்கலாம் என்று என் தந்தை எனது சிறுவயதில் சொல்வார். அது ஞாபகம் வந்தது எனக்கு.