19.2.11

வசியக்காரனும், அடுத்தவீட்டு செல்லப்பிராணிகளும்


செல்லப்பனுக்கு நாய்கள் என்றால்  ரொம்பப்பிடிக்கும் ஆனால் அவன் ஒரு போதும் நாய்கள் வளர்த்ததில்லை.அதற்கு ரெண்டுகாரணங்கள் இருக்கிறது.ஒன்று ரெண்டுவேளைக்கஞ்சி குடித்தாலே அது கடவுள் கொடுத்த கொடுப்பினையாகிற சொத்து சுகம். இருக்கிற கூரை வீட்டில் ஆள் படுக்கவே இடம் பத்தாமல் மடத்துக்கும் வேதக்கோயிலுக்கும் அலையவேண்டியிருக்கிறது. இதில் நாயை வைத்துக்கொண்டு காபந்து பண்ண எப்படி முடியும். ரெண்டு இந்த நாய் பூனை,ஆடு,கோழிகளுக்கு வீட்டு அடங்கல்,பட்டா, விஸ்தீரணம் தெரியாது.தவிரவும் பங்காளி வீட்டுக்கார செல்லையக்கொத்தன் ஒட்டி ஒறவாட்றானா, இல்ல ஏதாச்சும் குத்தங்கண்டு பிடிக்க காத்திருக்கிறானா என்பது கண்டு பிடிக்கமுடியாது. இருக்கிற பிரச்சினையில் சாயங்காலமும் ராத்திரியும் சண்டைபோட்டுக்கொண்டு அலைய முடியாது என்கிற தீர்மானத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில்லை.

ஆனால் செல்லப்பன் தெருவில் நடந்தால் ஊர்க்காட்டு நாய்கள் குதியாட்டம் போட்டுக்கொண்டு பின்னால் ஓடியாரும்.கையில் இருக்கிற சீனிக்கிழங்கு,சேவு,வட்டரொட்டி எதுவனாலும் பாதி பிச்சு போட்டுவிடுவான்.திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஒண்ணு எட்டத்தில் ஒண்ணு தூரத்தில் ஒண்ணு இப்படி எல்லை வகுத்துக்கொண்டு நிக்கும். ”‘சேடு ஓடுங்க சோத்து மணம் பிடிச்சுக்கிட்டு சொம்ம சேந்து வந்திருவீகளே பிள்ளைய ஒருவா திங்கவுடாம” என்று வெளக்கமாத்தக் கொண்டு அம்மா விராட்டுவாள். ஆனாலும் அப்படியே ஒரு எவ்வு எவ்வி  போக்குக் காட்டிவிட்டு நொடியில் திரும்பிவந்துவிடும் அத்தணை நாய்களும். ”ஆக்குனது காப்பிடி அதுல நாய்க்கு பங்குவச்சிட்டு அரவகுத்தோடு போயிருவான்,கிறுக்குப்பிள்ள” என்று சொல்லிக்கொண்டே தந்து பங்கில் கொஞ்சத்தை எடுத்து கொண்டு வந்து வட்டிலில் தட்டிவிட்டுப்போவாள்.

வாங்கி கொண்டு வந்து வீட்டில் கட்டி கொஞ்சநாள் கஞ்சி ஊத்திவளர்த்துவிட்டு பின்னாடி தெருவில் அலையவிடுவதுதான் ஊர்வழக்க
ம்.அந்த நன்றிக்கு நாய்கள் வீட்டுவாசலில் படுத்துக்கிடக்கும்.இப்படித்தான் கட்டத்தொரை வீட்டு  செவல நாய் செல்லப்பன் பினாடியே அலஞ்சது. நம்ம வீட்டு நாய் ஊராம்பின்னாடி சுத்துதேன்னு அவனுக்கு வெலம்முண்ணா வெலம்.அவங்கம்மாவோ ஊசிப்போன சோத்தக்கூட நாய்க்கு வைக்க மாட்டா,அதையும் கொண்டு போய் ஆட்டுக்கு வச்சிருவா.ஆட்ட வளத்தா துட்டுவரும் நாய வளத்தா ஊர்ச்சண்ட தான் வரும் என்கிற தத்துவக்காரி அவள்.அது செல்லப்பன் பின்னாடியே சுத்துவதற்கு செல்லப்பன் போடும் சோறுமட்டுமல்ல,அவன் கூட அலையும் போராப்போட்ட பொட்ட நாயும் காரணம்.ஊரெல்லையில் நின்றுகொண்டு விசில் அடித்தானென்றால் ஒட்டுமொத்த நாயும் கூடிவிடும்.கூட்டிக்கொண்டு காட்டுவழியே ஓடுவான்.தூரத்த்லிருந்து பார்த்தால் செல்லப்பன் நாய்போலாவான்.அவைகளெல்லாம் மனிதர்களாகும்.விசித்திரம் நிறைந்த கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். கையில் கிடைக்கிற பொருட்களைத்தூக்கி வீசுவான் அதை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க அதுகளுக்குள் போட்டி வரும். ஆனாச்சண்டை வராதபடி பழக்கப்படுத்தியிருந்தான்.

நாய்களுக்குள்ளசண்டை வந்தாலே பிடிக்காத செல்லப்பன் மனுசங்களுக்குள் சண்டைவந்தா சும்மாருப்பானா. சீரங்காபுரத்துக்கும், இவிங்களுக்கும் சண்ட நெரு நெருன்னு வந்தது.காரணம் ரொம்பப்பெருசில்ல  ரேசங்கடை வரிசையில் ஊர்க்காரன் முந்திப் போயிட்டானாம் பின்னாடி வந்த சீரஙபபுரத்துக்காரன் களவாண்டு கஞ்சி குடிக்கிறவனெல்லாம் துட்டுக்குடுத்து ரேசன் அரிசி வாங்க வந்தா இப்பிடித்தான் என்று சொன்னானாம்.அது வாய்த்தகறாராகி,அடிபுடியாகி தீப்பத்திக்கொண்டது.அன்று சாயங்காலம் ஊரெல்லையில் அருவா, கம்பு,கோபம் துருத்திக்கொண்டு நிற்க சிந்திக்கிற மூளை செயலற்றுபோனது. செல்லப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சமாதானம் சொன்னான்.”போடாப் பொண்டுகப் பெயலே, இனியும் சும்மா கெடந்தா நாமெல்லா சேல கெட்டிக்கிட்டு அலைய வேண்டியதுதா” என்று சாமியாடினான் சண்டியர் சல்வார்பட்டியான்.

பேசிக்கொண்டிருந்த செல்லப்பன் படாரென்று தரையில் விழுந்து கையைக்காலை வெட்டினான்,வாயைக்கோணலாக வைத்துக்கொண்டு எச்சிலை வெளியே தள்ளினான். ”ஏ சனங்கா செல்லப்பனுக்கு காக்கா வலிப்பு வந்திருச்சி” என்று யாரோ குரல் கொடுக்கவும்.கூட்டம் எதிர்த்திசைக்குத் திரும்பி செல்லப்பனை தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடியது.ரெண்டு பேர் அருவாளைகையில் கொடுத்தார்கள்.ஒருத்தன் ஓடிப்போய் சண்டு வத்தல் எடுத்துக்கொண்டு வந்து அடுப்புக்கங்கில் போட்டு புகைவரவைத்தான். ஒருத்தன் மாரியம்மன் கோயில் திண்ணீரெடுத்துவந்து போட்டுவிட்டான். அம்மக்காரி அழுது புலம்பினாள்.இப்படியே ஒரு ஒரு மணிநேரம் ஆனது. கூட்டத்தின் கோபம் குறைந்திருந்தது.”செரி பெரியாளுகள உட்டு நாயங்கேப்பொம்” என்று முடிவுக்கு வந்தார்கள்.”ராத்திரி இதென்னப்பா நம்ம வம்முசத்தில யாருக்குமில்லாத நோயி” ஒனக்கு என்று அம்மை கேட்டாள். சும்மா கெட எனக்கு வலிப்பு வரலன்னா ஊர்க்காரம் பூராம்ப் போயி போலீஸ்டேசன்ல காத்துக்கெடக்கனும்” என்றான்.கிறுக்குப்பெய புள்ள என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த கொழம்புச் சட்டியைக் கொண்டு மண்டையில் இடித்து விட்டு அடுப்பைப்பார்க்கப்போனாள்.

கம்மாய்க்கு குளிக்கப்போகும் போது கூடவரும் நாய்களையும் தூக்கி தண்ணிக்குள் போடுவான்.முள்குத்தி கால்தாங்கும் நாய்களுக்கு மண்ணெண்னெய் ,ஊத்தியோ,மஞ்சப்பத்துப்போட்டோ வைத்தியம் பார்ப்பான்.பக்கத்தில் வந்ததும் அது உரசும் இவன் தலை தடவிக் கொடுப்பான் அப்படியே உடலை சுருக்கி அவனுக்கு மரியாதை செய்யும். நாய்களென்ன பேய்கள் கூட அண்டாத கட்டத்தொர,வீட்ல கோபம் வந்தாக்கூட நாயைக்கம்பெடுத்து விளாசுவான்.ஒருநாள் மிச்சம் வச்ச சோத்துத் தட்டில் வாய் வச்சு திண்ணதுன்னு அருவாளெடுத்து வீசி விட்டான்.நடு முதுகில் காயத்தோடு அலைந்தது.செல்லப்பன் தான் டீத்தூளும்,மஞ்சத்தூளும் கொழைச்சு முதுகில் போட்டுவுட்டான். பின்ன என்ன மயித்துக்கு கட்டத்தொர பின்னால அந்த நாய் அலையும்.

”எப்பா செல்லப்பா நாப்பிராணி மேல இம்புட்டு ஆச வச்சிக்கிட்டு ஏ ஒரு குட்டிகூட வாங்கி வளக்கமாட்டிங்ற” என்று கேட்கும் மரியண்ணக் கிழவனுக்குச் சொல்ல அவனுக்கு ஒரு சேதி உண்டும்.ஏ தாத்தா மனுசப்பெய தான் வீடு,காடு,பணம் சாதின்னு பிரிச்சுப் பாக்கான் இந்த வாயில்லாப் பிராணிகளுக்கு அதுகெடயாது. அதுகளுக்குங்கொண்டு போய் நம்ம சாக்கடைய ஊட்டி வளக்கவா. ”இங்க பார்றா எங்கூருல கூல் குடிச்சி வளந்த பிள்ளைக்கு இருக்குற புத்தியெ” என்று சொல்லிக்கொண்டே மம்பட்டியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பெருமித்தத்தோடு கிளம்புவான் மரியண்ண கிழவன்.

8 comments:

ஆர்வா said...

அட.. நல்ல எழுத்தாளுமை.. வாழ்த்துக்கள்

கவிதை காதலன்

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஒரு கருத்தை சொல்லும் கதை....

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

ஓலை said...

Aahaa! arumainga.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு தோழரே!

லெமூரியன்... said...

கலக்றீங்க அண்ணா...!

செ.சரவணக்குமார் said...

அருமை காமு அண்ணா. மரியண்ணகிழவன், செல்லப்பன்.. மனமெங்கும் நிறைந்திருக்கின்றனர் நம் மக்கள். என்ன ஒரு எழுத்து..

பா.ராஜாராம் said...

அருமை காமு!

இந்த பதிவை ஒட்டிய என் சொந்த அனுபவ கதை ஒன்று உண்டு. பிறகு எழுத வேணும்