28.10.09

காடுகளும், காட்டு மனிதர்களின் உணர்வுகளும் தமிழ்சினிமாவுக்குப் புதுசு - பேராண்மை

முப்பது ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் இல்லை என்பதை கறாராகச் சொல்லுகிற எழுத்துக்களைக் கடந்து தியேட்டருக்குள் நுழைந்தால் எல்லா வகுப்புக்களிலும் முக்கால்வசி இருக்கைகள் மூளியாய்க் கிடக்கிறது. சின்னவயசில் வெறும் ஐம்பது பைசாவுக்கு சினிமாக் காண்பித்த போது வெகுஜனங்கள் அடித்துக் கரையேறிச் சினிமாப்பார்த்த காலங்கள் மலரும் நினைவுகளாக மட்டும் வந்து போகிறது.


கோவணம் கட்டிக்கொண்டு மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் மலைப்புறத்து இளைஞானாக அறிமுகமாகிற ஜெயம் ரவியே பயிற்சி அதிகாரியாக மாறுகிறபோது அதைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்களாக ஐந்துபேர் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து துருவன் என்கிற மலைப்புறத்து இளைஞனை அவமானப் படுத்துவகிற காட்சிகள் இந்த முறை ஜாதியின் பேரால் சொல்லப்படுகிறது. இதே போல காட்சியமைப்புகள் கொண்ட மசாலாக்களை எம்ஜியார்,ரஜினி,கமல் இன்னும் எல்லோரும் கடந்து வந்தாலும் ஜாதியாலான இழிவை முதன் முதலாகக் கையிலெடுத்த சினிமா இது. அதனால் கூட எதிரும் புதிருமானவிமர்சனங்கள் வராமல் போயிருக்கலாம். துருவன் செய்யாத தவறுக்காக கழிப்பறையைச்சுத்தம் செய்யச்சொல்லுவது. india untouched என்கிற லெனின் k விஜயனின் ஆவணப்படத்திலும், தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் பேசப்பட்ட உலகறியா உண்மைகள்.


வீரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தி மலைமக்கள் அனுபவித்த கொடூரங்கள் மனித இனம் முழுவதும், குறிப்பாகத் தமிழ்ச்சமூகம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கவில்லை. அதனாலே தான் துருவனைத் தேடிப்போகிற உயர் அதிகாரி கணபதிராமன்மலைமக்களின் வாழிடங்களைத் துவம்சம் செய்யும் காட்சிகள் வெறும் சித்தரிப்புகளாகக் கடந்து போகிறது. எரிக்கப்படும் குடிசைகளோடு ருஸ்ஸிய இலக்கியங்களும், சமகால தமிழ் புத்தகங்களும் சேர்த்து எரிக்கப்படுகிறதான காட்சிகளும் கூட அதிக அதிர்வை உண்டாக்க முடியவில்லை. காண்டா விளக்கொளியில் படித்துக்கொண்டிருக்கும் மலைச்சிறுவர்களின் முதுகில் விழுகிற அடி ஜாதிகள் குடியேறிக்கிடக்கும் அரசுப் பயங்கரவாதத்தின் அசல் குறியீடான காட்சி.


''அரசுப்பணத்தில் படித்துவிட்டு அரசாங்கத்தையே எதுத்துப் பேசுறீங்களடா, இவனுகளுக்கு கழிப்பறை சுத்தம்செய்வதெல்லாம் புதுசில்ல, துருவனோட சொந்தக்கரங்க அப்பப்ப காட்டுல வெளையிறத தந்துட்டுப் போவானுக'' என்று சொல்லும் கணபதி ராமனின் உரையாடல்கள் வாழ்விலிருந்து தெரித்து விழும் எச்சங்கள். ஒரு சமூகத்து இழிவையே உரமாக வைத்து வளரும் துருவனின் கல்வியும், அரசுவேலையும் அவனை கூனிக்குறுகச்செய்யும் பொதுச்சமூகத்து ரியாக்சனாக மலிந்து கிடக்கிறது. அதை உள்வாங்குகிற பதில்தான்'' நான் இங்க்லீஸ் பேசுனா எம்மக்களுக்குப் புரியாது, ஒங்களுக்குப் பிடிக்காது'' எனும் உரையாடலாக வருகிறது.


படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை பல உரையாடல்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு வெறும் உதட்டசைவுகளை மட்டும் அனுமதித்திருக்கிறது சென்சார் போர்டு. ஆனாலும் கூட மட்டறுத்தலை மீறிச் சில வசனங்கள் உயிர்பிழைத்து வந்து திரையில் விழுகிறது. ஊமைகளின் பாஷையை ஊமைகள் எளிதில் உணரமுடியும். முகபாவங்களின் செய்திகளை எல்லோரும் உணரமுடியும். அதனலே தான் இறுதிக்காட்சியில் அடர்த்தியான மௌனம் தொக்கி நிற்கிறது.


அடர்ந்த வனமும் அங்கு பயிற்சிக்குப்போகிற என்சிசி குழுவும், அவர்கள் கண்ணில் படுகிற வெளிநாட்டு ஊடுறுவலும், அதை முறியடிக்கிற ஆறு பேர் என்பதே மூலக்கதை. ஒளிப்பதிவு சதீஷ்குமாராம் மனுசன் பார்வையாளர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அடர்ந்தவனத்தின் பிரமிப்பையும், வனப்பையும், ரகசியக் குறியீடுகளையும் விளக்குகிறார். காடுகளைகாட்சிப் படுத்துவதும், அதன் பகுதிகளை விவரிப்பதுவதும், மலைமக்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே அதைக் கடப்பதும் தமிழ்ச் சினிமாவுக்குப் புதிது. சண்டையும் கதையும் ரொம்ப ரொம்ப்பப் பழசு.


வித்தியாசாகர் பின்னனி இசை சேர்க்க முயற்சித்திருக்கிறார். அழகிய பசிய புல்வெளி, சிலிர்ப்பை உருவாக்கும் நீர்வீழ்ச்சி, அடர்ந்து கிடக்கும் தனிமையில் கட்டு உயிரினங்கள் எழுப்பும் கிளேசப் பாடல்களென எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் டூயட் அனுமதிக்காத முரட்டுத்தாடிக்கார ஜனநாதனின் இந்தப் பேராண்மை. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். வாழ்த்துக்கள் ஜனநாதன்.

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். //

எனக்கும் அப்படிதான் தோன்றியது நண்பா

க.பாலாசி said...

உங்களின் விமர்சனப்பார்வை நன்றாயிருக்கிறது. இதுவரை நான் படித்த விமர்சனத்திலிருந்து இது வித்யாசப்படுகிறது. இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கும் ஆவல் வருகிறது.

சந்தனமுல்லை said...

/க.பாலாசி said...
on
October 28, 2009 4:13 PM

உங்களின் விமர்சனப்பார்வை நன்றாயிருக்கிறது. இதுவரை நான் படித்த விமர்சனத்திலிருந்து இது வித்யாசப்படுகிறது. இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கும் ஆவல் வருகிறது.
/

வழிமொழிகிறேன்! :-)

Unknown said...

மாமா!நீங்கள் முந்திக்கொண்டீர்கள்...நல்லாயிருக்கு.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நலமா? நீண்ட நாட்களானது போல் இருக்கிறது, உங்களுடன் அளவளாவி!
ரொம்ப அழகாய் வந்திருக்கிறது. தியேட்டர் நினைவுகளில் ஆரம்பித்து, கதையின் பின்புலம் தொட்டு, உங்களின் அனுபவ பகிர்வுடன் ஒப்பிட்டு விமர்சனத்திற்கு வந்தது, காட்டு வழி சிற்றோடையாய் நகர்கிறது.

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் விமர்சனங்களை படிக்கும் போது இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம் ஜனநாதன் என்று தோன்றுகிறது. நான் இந்த படத்தை பார்த்துவிட்டு தனியாக உங்களுக்கு எழுதுகிறேன். வசனங்கள் ரொம்ப அழகாய் வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள், அது உங்கள் பதிவில் இருந்தும் தெரிகிறது.

நாம் ஏங்கி போயிருக்கிறோம், கொஞ்சம் மாற்றம் தந்தாலே, அவர்களை ஏந்திக் கொள்வோம்.

அன்புடன்
ராகவன்

velji said...

படம் பார்க்க வில்லை.சினிமா விமர்சனத்திலும் உங்களின் பார்வை இலக்கில் இருக்கிறது.

லெமூரியன்... said...
This comment has been removed by the author.
லெமூரியன்... said...

எனது பார்வையில் வித்யாசமான தமிழ் சினிமாவாகவே இது படுகிறது....நல்ல முயற்சி....கனல் தெறிக்கும் வசனங்கள்....ஆதிக்க சாதியினரை ஆள்வதற்காகவே பிறந்தவர்கள் என்று சொல்லி வர்க்க பிரிவினையை காட்டி வந்த தமிழ் திரையுலகில் அடிமைச்ச சாதியினரை வைத்து கதை சொன்ன விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களின் வரிசையில் இதுவும் சேருகிறது....ஆனால் அப்படங்கள் தொடாத உயரத்தை இப்படம் தொட முயல்கிறது...கதை நாயகன் வாசிக்கும் புத்தகங்கள்...சமூகத்தின் குறித்த அவனது பார்வையைக் காட்டுகிறது....அங்குள்ள சிறுவர்களுக்கு அவன் பாடம் சொல்லிக் கொடுப்பது..அந்த சமூகத்தின் உண்டான அடுத்த சந்ததியினர் எவ்வாறு இருக்க வேண்டும் என்றென்னும் அவனின் ஆழமான கனவைச் சொல்கிறது.....படிக்காட்டிதான் அடிப்பாங்க....படிச்சாலும் அடிக்கிறாங்களே என்று அந்த சிறுவர்கள் கதறும்போது....ஆதிக்க சாதியினரின் அப்பட்டமான அடக்குமுறையை காண்பிக்கிறார் இயக்குனர்....அதே நேரத்தில் அவ்வளவு அடி வாங்கியும் கரும்பலகையை உடையாமல் பாது காக்க அந்த சிறுவர்கள் போராடுவது - எவ்வளவு நீங்க தடுத்தாலும் நாங்க மேல வருவோம் டா என்று அடிமை சமூகங்கள் கிளர்ந்தெளுவதைக் காண்பிக்கறது.....ஒவ்வொரு காட்சினியூடும் வசனங்களினூடும் இப்படம் சொல்கின்ற கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தினை சாட்டை கொண்டு அடிப்பவை........அதனால்தான் என்னவோ ......சக தமிழர்கள் அனைவரும் சதை காட்டும் மற்ற படங்களை பார்த்து மகிழ்கிறார்கள்....சத்யம் திரையரங்கில் இப்படத்தை நான் கண்ட போது இருக்கைகள் நிறைய காலியாகவே இருந்தன..

பா.ராஜாராம் said...

படம் பார்க்கவேணும் என தோன்றுகிற பகிர்வு காமராஜ்.பார்த்துருவோம்...