5.3.10

தலையணையை மாற்றுவதால் தலைவலி தீராது

இந்தியன்,வெஸ்டர்ன்,அட்டாச்டு என்று ரகரகமாய் வடிவமைத்துக் கொள்ளவும்,அதை அப்போதைய புதுமாதிரிகளாய் அலங்கரித்துக் கொள்ளமுடிகிறது, வாசனை திரவியம் ஊற்றி மணக்க வைக்கமுடிகிற மக்களுக்கு.சேரிகளையும் கிராமங்களையும் ஒட்டியிருக்கும்  நடை பாதைகளைக் கடப்பது முகஞ்சுழிக்க வைக்கிறது. ரயிலடிக்குப் பக்கத்தில் அட்டாச்டு பாத்ரூம் அளவுக்கு இருக்கும், தகரம் வைத்து வேய்ந்த குடிசைக்குள் கால் நீட்டிப்படுக்கவே முடியாத ஜனங்களிடம் சானிடரி வேர் விற்கிற பிரதிநிதிகளுக்கு வேலையில்லை.ஆனாலும் ரெண்டு வகையான மக்களுக்கும் புலன்கள் ஐந்துதான். கூடக்குறைய இருக்க வாய்ப்பில்லை. அது தெய்வப் பிறவிகளுக்கும் சேர்த்துத்தான்.

மூடிய வெள்ளையங்கியானாலும்,போர்த்திய காவியானாலும் உள்ளே இருப்பது மனித உறுப்புக்கள். பசிக்கும், வியர்க்கும், இளைக்கும், விடிகாலையில்  கழிப்பறை தேடும். கடவுளும்  இதில் விதி விலக்கல்ல.

போப்பாண்டவர் கூட மனித மந்தையிலிருந்து  தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதை அப்போதே தெரிந்துகொண்ட மேற்குலகம் இதிலிருந்து விடுபட்டு புரோட்டஸ்டண்டுகளாக மாறி குடும்பங்களுக்குள் குடி பெயர்ந்தார்கள். தேங்காயுடைத்த நெய்வேத்திய தண்ணிரை கருவறையிலிருந்து  வெளியேற்ற செலதரைக்குழிகள் செய்தது கடவுளால் ஆகாத காரியத்துக்கு மனிதன் செய்த கைங்கர்யம். ஒரு சாதாரண ஆட்டக்காரி மேனகையிடம் மயங்கிப்போனது முக்காலமும் உணர்ந்த முனிவனில்லை ஐம்புலன்கள் குடியிருக்கும் மனிதன்.அல்லது ஒரு பெண் பெற்றெடுத்த சமூக விலங்கு.விஸ்வாமித்ரனும் வித்யானந்தனும் மனிதர்கள் என்பதை மறைக்கிற மாயை தான் மதம்.

அந்த வங்கிக்கு ஒரு பெரிய அறிவாளி தொண்ணுறுகளில் சேர்மனாக வந்தார்.அப்போது தான் நாற்பது சதவீத வட்டியும் ஒரு தங்கக் காசும் தருகிறேனென்று மோசடி நிதி நிறுவணங்கள் பனை மர உயர பேனர்கள் வைத்து மயக்கிக்  கொண்டிருந்தார்கள்.ஒரு வங்கியையே நிர்வகிக்கிற அவருக்கு இது எப்படி சாத்தியமாகும் என்று சிந்திக்க முடியவில்லை. பகுத்தறிவு என்பது ஏட்டுப் படிப்பிலும்,கோட்டு சூட்டுகளிலும் இல்லை. ரமேஷ் காரில் கொண்டுபோய் கொட்டினார்  லட்ச லட்சமாய்.போட்டபணத்தை கேட்கப் போனவர் திரும்பவந்து காய்ச்சலோடு படுத்தார். வீட்டில் மந்திரித்து திரு நீறு போட்டார்கள். பணம் சம்பாதிக்கிற குறுக்கு வழிகளில் இதுபோலவே தான் கார்ப்பரேட் சாமியார்கள் வந்து சம்பாதித்துவிட்டு  ஓடிப்போக  ஓடிப்போக பிரிதொருவர் முளைக்கிறார். எல்லாமே மூட நம்பிக்கைதானே.

ஓபென் சர்ஜரி,ஆஞ்சியோ ப்ளாஸ்ட்,பேஸ்மேக்கர்,செயற்கை உறுப்புக்கள் என்று  விஞ்ஞானம்  உயர்ந்து கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்தவரை பீடத்தின் முன்னால் போட்டு ப்ரேயர் பண்ணுவது எவ்வளவு முட்டாள் தனமோ. அது போலவே எங்கேயும் இல்லாத ஆன்மாவை உடலெங்கும் தேடுவது. நேற்று நடுத்தர குடியிருப்புப் பகுதி ஒன்றில் போஹிப் பண்டிகை நடந்தது. சாமிப்போலி நித்யானந்தனின் படங்கள் கொழுத்தப்பட்டது, தொடர்பான பொருட்கள் குப்பைகளில் வீசி எறியப்பட்டது.பின்னர் அந்த இடத்தில் வேறு,வேறு குப்பைகள் வந்து உட்கார்ந்து கொண்டன. தலையணைகளை மாற்றுவதால் பீடித்திருக்கும் தலைவலி தீர்ந்து போகாது.

கிராமத்திலிருந்து ஒருவர் வீட்டுக்கு வந்தார் சன் செய்திகளைப் பார்த்தார்.' கருமம்  இதெல்லாமா செய்தியாப் போடுவான்' என்று சொல்லிவிட்டு வெளியே போய் பீடி பற்றவைத்துக் கொண்டார்.

7 comments:

சந்தனமுல்லை said...

நல்லா சூடா இருக்கு இடுகை!
படிச்சவங்க படிக்காதவங்கனெல்லாம் இல்லை..எல்லாம் ஏமாறுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களும்தான்...:-(

/பகுத்தறிவு என்பது ஏட்டுப் படிப்பிலும்,கோட்டு சூட்டுகளிலும் இல்லை./

ஹ்ம்ம்...என்னதான் அறிவியல் முன்னேறினாலும்..செவ்வாய்க்கு போனாலும்..!!!

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

மென்மையான மொழிச்சாடலோடு இருக்கிறது இந்த இடுகை...

//அது போலவே எங்கேயும் இல்லாத ஆன்மாவை உடலெங்கும் தேடுவது//

பசுந்தோல் போர்த்திய புலிகளிடம் புண்ணியத்தை எதிர்பார்ப்பது மனித மூளைகளுக்கு வாய்த்த மூடத்தனமே....எனக்குத்தெரிந்து சாமியார்களை நாடிப்போவது அடத்தட்டு மக்களைக்காட்டிலும் அதற்குமேல் உள்ளவர்களே...என்று திருந்துவார்களோ அல்லது திருத்தப்படுவார்களோ தெரியவில்லை.

காமராஜ் said...

நன்றி முல்லை.

காமராஜ் said...

நன்றி சசிகுமார்

காமராஜ் said...

நன்றி பாலாஜி

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, ஆனால் நீங்களும் எல்லாரும் போல பொதுவாகவே எழுதி உள்ளீர்கள் , வருத்தமாக இருக்கிறது.

ஒரு சந்நியாசி என்பவன் உணவு கட்டுப்பாடு கொண்டு இருப்பான் (உணவு ஆசை துறந்தவன்). உணவு கட்டுப்பாடு கொண்டு வந்தால் காம ஆசை குறையும்.

எனவே துறவி என்பவன் வேறு, சாதாரண வாழ்க்கை நடத்தும் நாம் வேறு.

நம் ஐம்புலன்கள் வேறு, நம் சிந்தனை ஓட்டங்கள் வேறு- சன்யாசியின் சிந்தனை ஓட்டங்கள் வேறு , சன்யாசியின் ஐம்புலன்கள் வேறு.