23.5.09

அமெரிக்காவும், அதைத்தழுவும் சிங்கள அரசும்








அன்று இரட்டைக்கோபுரம் தகர்ந்த போது உலகத்தின் கடைக்கோடி மனிதனும் பதறிபோனான். அப்போதைக்கு தீவிர வாதம் தவிர உலகில் எதுவும் பிரச்சினையில்லை என அமெரிக்கா உலகிற்கு கட்டளையிட்டது. அதே நேரத்தில் தான் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்க ராணுவம். அப்புறம் ஒரு நாள் தாஜ் உல்லாச விடுதி தாக்கப்பட்டது. அப்போதும் கூட உலகம் பதை பதைத்தது. இந்த ஊடகங்கள் அதை வைத்து என்னென்ன வியாபாரமெல்லாம் பண்ணியது என்பதையும் சேர்த்து உலகம் பார்த்தது. பகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்ட போதும், ஒரு ஒற்றை மனிதன் கர்நாடக - தமிழகக் காடுகளில் ஒளிந்தலைந்த போதும் தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக்கதையை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பிவந்தது. நிஜப் பூச்சாண்டிகள் அந்த ஊடக வெளிசத்துக்குள் ஒளிந்துகொண்டார்கள்.



எந்த ஒரு மனிதனும் பொழுதுபோகாமல் துப்பாக்கி தூக்குவதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கோ நிலைமை அப்படியில்லை எப்படியும் உற்பத்தியான உயிரெடுக்கும் ராணுவக்கருவிகளை விற்றுத் தீர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. எந்த ஆங்கிலத்தொலைக்காட்சி அலைவரிசையைத் தெரிவுசெய்தாலும் துப்பாக்கி சண்டை ராணுவம் தொடர்பான சாகசச் சினிமாக்களைத்தான் சதா ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அமெரிக்க மூளைகளிலும் ஊறிப்போன கலையும் கலாச்சாரமும். அமெரிக்கா தனது மூன்று நூறு ஆண்டுகால சரித்திரத்தில் படையெடுத்து அழித்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத நாடு இனிமேல் தான் உதயமாக வேண்டும்.



இலங்கை இன்று கொண்டாட்டங்களில் இருக்கிறது. டைம்ஸ் நௌ பத்திரிகையின் இலங்கை செய்தியாளர் நாராயணன் ஆர்ப்பரிக்கும் சிங்கள இளைஞர்களோடு இணைந்துகொண்டு கருத்து திரட்டுகிறார். தமிழகத்தில் பத்திரிகையாளர் சோ ராமசாமி, வடநாட்டில் ராஜீவ் ஆதரவாளர்கள் என்று வெற்றியைக் கொண்டாடுகிறவர்களின் முகங்கள் மின்னுகின்றன. ராஜபக்சே முப்பத்தியிரண்டு பற்களும் அதைத்தாண்டி குழாய் வழியே ரத்தவெறிகொண்டு துடிக்கும் இதயமும் தெரிகிற அளவுக்கு வாயைப் பிளக்கிறார்.



ஆனால் அகதிமுகாம்கள், சண்டை நடந்த வவுனியா, முள்ளிவாய்க்கால் பகுதிகளையும், மருத்துவமனைகளையும் பதிய மறுக்கிறது ஒளிப் படக்கருவிகள். கேட்பாரற்றுக்கிடக்கும் அங்ககீனமான மனிதர்கள் தமிழ் மனிதர்களின் ஈனக்குரல் எந்த ஊடகம் மூலமாகவும் ஒளிபரப்பப் படவில்லை. இலங்கை முழுவதும் விரவிக்கிடக்கும் எஞ்சிய தமிழ்ச்சமூகத்தின் கடைகள், வீடுகளோடு, பெண்டுகளும் சூரையாடப்படுவதான செய்திகள் கொதிப்பை உயர்த்துகிறது.


பரபரக்கிற போக்குவரத்து நெரிசலிலும் கூட முகம் தெரியாத சவ ஊர்வலத்துக்கு ஒதுங்கி நின்று மரியாதை செய்கிற மனித மனம். இந்த ரத்தவாடையையும், மனிதப்பேரழிவையும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது.



சாம்ராஜ்ய வெறியில் கலிங்கத்தை வென்ற பேரரசன் அசோகன். சண்டைக்கு பிந்தைய போர்க்களத்துக் காட்சிகளால் மனம்பேதலித்து ஆசைகளை மறுதலித்தான். அப்புறம் பௌத்த மதம் தழுவினான். லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சே, குருதிகுடித்த மயக்கத்தில் ஆடும் ராஜபக்சே எதைத் தழுவலாம்.

7 comments:

வெண்காட்டான் said...

பரபரக்கிற போக்குவரத்து நெரிசலிலும் கூட முகம் தெரியாத சவ ஊர்வலத்துக்கு ஒதுங்கி நின்று மரியாதை செய்கிற மனித மனம். இந்த ரத்தவாடையையும், மனிதப்பேரழிவையும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது.///
sathiyamaana varthai. mmm. ellam suyanalam. varalattru thavarai saithu vittarkal tmaillaga makkal. eelathamillarkaluku anithi saivathai kooda nindru paartha dmk poola oru adivarudikalai uruvakkuvathan moolam meendum tamilnadukku intha nilai vanthal enna saiveerkal. tamillaka makkale? konjamavathu yoositheerkala? appadi oru nilai varaathu endu virumbukireen. vanthal enna nadakkum?

geevanathy said...

///கேட்பாரற்றுக்கிடக்கும் அங்ககீனமான மனிதர்கள் தமிழ் மனிதர்களின் ஈனக்குரல் எந்த ஊடகம் மூலமாகவும் ஒளிபரப்பப் படவில்லை. ///

இப்போது மறைக்கப்படும் பின் மறக்கப்படும்.....

காமராஜ் said...

வணக்கம் வெண்காட்டான்
தடித்த தோல்கொண்ட தமிழர்களைப்பார்த்து அப்போதே
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட இல்லை
என்று அடங்காத ஆத்திரத்தில் சபித்தான் பாரதி
நிலைமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

காமராஜ் said...

வாருங்கள் ஜீவன் வணக்கம்

Unknown said...

மாமா! அழுத்தமான,ஆழமான,அவசியமான பதிவு.அற்புதமாக உள்ளது.

காமராஜ் said...

வாருங்கள் க்ரிபா வணக்கம். கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

வா மாப்பிள்ளை ஆண்டோ, கருத்துக்கு நன்றி