8.8.16

கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.



மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம்
மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள்

மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே பங்குவகிக்கிறது, தலித்துக்களுக்கெதிரான வன்கொடுமைகள்  50 சதமானத்துக்குமேல் அங்குதான் தலைவிரித்தாடுகிறது.

மாட்டுத்தோல்வைத்திருந்ததாக பழிசுமத்தி நான்கு தலித் இளைஞர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராக எழுந்த பொறி இப்போது தேசமெங்கும் பற்றிப்படர்கிறது.குஜராத் தலித்துகளுக்கு இது முதல் வலியல்ல.அதன் வரலாறு நெடுகிலும் ரணங்களும் அவமானங்களும்,வன்கொடுமைகளாய் சிதறிக்கிடக்கிறது. வர்ணாசிரமப்பாடுகளின் பின்புலத்தில் அசுத்தமானவர்களாக ஒதுக்கப்பட்ட தலித்துகள் சந்திக்கும் கொடுமைகள் ரத்தக்கண்ணீர் வரவழைப்பவை என்று சாடுகிறார் குஜராத் பகுதியின் தலித் மனித உரிமைப்போராளி, நவசர்ஜன் அமைப்பின் ஸ்தாபகர் மார்ட்டின் மக்வான்.
1986 ஆம் ஆண்டு தலித் கூலித்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி நில உரிமைகேட்டும், கூலிச்சுரண்டலை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மார்ட்டின் மக்வானின்சக ஊழியர் 1986 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.தனது தோழனின் உயிரிழப்பை உரமாக்கி 1988 ஆம் ஆண்டு நவசர்ஜன் என்கிற அமைப்பை உருவாக்கினார் மக்வான்.

2012 ஆம் ஆண்டு சுரேந்திரநகர், தாங்கத் என்கிற ஊர் திருவிழாவில் கடைகள் போட தடைவிதித்த பார்வார்ட் ஜாதியினருக்கும்,தலித்துகளுக்கும் இடையே  மோதல் உருவானது. குஜராத் காவல் துறையின் துப்பாக்கிமுனைகள் தலித்துகளின் மார்பை மட்டுமே குறிவைத்தன.நான்கு தலித்துகள் அரசபயங்கரவாதத்துக்குப் பலியாகினார்கள்.அதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.சாட்சிகள் கலைக்கப்பட்டதால் தீர்ப்பெழுத தினறுகிறது நீதிமன்றம். நீதித்துறையும் அரசாங்கமும் காட்டுகிற ஓரவஞ்சனையால் மதர்த்துப்போன ஆதிக்க மனோபாவம்தான் நடுத்தெருவில் கட்டிவைத்து உதைக்க ஊக்கம்கொடுக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசீய ஆணையம், மற்றும் தேசியகுற்றப்புலனாய்வு நிறுவணம் ஆகிவற்றின் அறிக்கைப்படி குஜராத்தில் வசிக்கும் தலித்துகளின் எண்ணிக்கை மொத்த இந்திய தலித்துகளில் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே. ஆனால் அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமை மொத்த இந்திய வன்கொடுமைகுற்ற எண்ணிக்கையில் பாதிக்குமேல் இருக்கிறது.எனில் குஜராத் என்ன மாதிரியான மாநிலம் என்பது தெளிவாகிறது. மாநிலம் முழுவதும் 1569 கிரமங்களில் திரட்டப்பட்ட98000 சாட்சியங்களின் ஊடாக,தீண்டாமையைத்தெரிந்துகொள்வோம் என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 98 வகையான வன்கொடுமைகள் நிகழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வில் சமர்ப்பிக்கப்பட்ட பாகுபாடுகளை சரிசெய்யாமல் மாநில அரசு அஹமதாபாத்திலுள்ள cept பல்கலைக்கழகத்தின் உதவியோடு அது ஒரு எதிர் ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்தக் கண்துடைப்பு ஆய்வு தலித்துகள் வசிக்காத சில ஊர்களில் விசாரித்துவிட்டு தீண்டாமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அறிக்கை சமர்ப்பித்து கோப்பை மூடிவிட்டது.
ஜாதிய அடிப்படையிலான துப்புறவு ஒழிக்க அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்திய போதிலும் குஞராத்தில் அது அதிகரிக்கவே செய்கிறது.கல்வியின் வழியே வேலைவாய்ப்பு என்பது அங்கு அர்த்தமற்றதாகிப்போனது.தாழ்த்தப்பட்ட்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட 64000 பணியிடங்கள் நிறப்பப் படாமலே வீணடிக்கப்பட்டது. 54 சதமான அரசுப்பள்ளிகளில் தலித்த் மாணவர்களுக்கு தனி இருக்கை ஒதுக்கப்படும் அவலம் தொடர்கிறது.பெரும்பாலான பள்ளிகளில் தலித்குழந்தை கள் கழிப்பறைகளை கழுவ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படிக் கல்விக்கூடங்களில் கடைப் பிடிக்கப்படும் பாகுபாடுகளால் இடைநிற்றல் பெருகுகிறது.அதனால் மறுபடியும் சாதி சார்ந்த இழிதொழிலுக்கு போயே தீரவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

11.7.16 அன்று உனா- மோட்டா சமிதியாலாவில் பசுத்தோலை வைத்திருந்ததாக் குற்றம் சுமத்தி நான்கு இளைஞர்களை பசுபாதுகாப்பு கமிட்டி இழுத்துவந்தது.சந்தடி மிகுந்த சந்தையின் நடுவில் ஒரு வாகனத்தின் முன் கட்டிவைத்து இரும்பு குழாய்களால் அடித்துக்கொடுமைப் படுத்தியிருக் கிறார்கள்.பார்வைபடும் தூரத்தில் காவல்நிலையம் வேறு இருந்திருக்கிறது. பசு ரட்சக சேனை என்கிற பெயரில் குஜராத்தில் சுமார் 200 குழுக்கள் உருவாகியிருக்கிறது. பிரபல கேடிகளும் ரவுடிகளும் உறுப்பினராக உள்ள இந்தக்குழுக்களுக்கு ஆளும் அரசின் ஆசி கிடைக்கிறது. அவர்கள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் மீது திட்டமிட்ட வன்முறைய பிரயோகிக்கிறார்கள். கொடுங்கோல் மன்னராட்சிக்காலத்தில் கூட கேள்விப்பட்டிராத இந்த வகைக்கொடுமை முகநூலில் காட்சிப்படுத்தப்பட்டதும் அதுவரை கனன்று கொண்டிருந்த கோபம் போராட்டமாகியிருக்கிறது.

ஜூலை 12 ஆம் தேதி உனாவில் தன்னெழுச்சியான போராட்டம் உருவாகி ஆர்ப்பாட்டம்.  கதவடைப்பு நிகழ்த்தப்பட்டது.அதன் பின்னர்அமரேலியில் நடந்த எதிர்ப்புபேரணி கலவரமாக மாறியது.மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட்டு குஜராத்தின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திங்களன்று 1500 பேர் கொண்ட தலித் போராட்டக்காரர்கள் இறந்து போன மாடுகளின் உடலை லாரிகளில் ஏற்றி வந்து தெருக்களில் வீசி எறிந்தார்கள். உங்கள் புனிதப்பசுக்களை நீங்களே எடுத்துப்புதையுங்கள் என்று கோஷமிட்டார்கள்.
சுரேந்தர்நகர்,அகமதாபாத்தை தொடர்ந்து இந்த அதிர்ச்சியளிக்கும் போராட்ட வடிவம் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியது.
குஜராத் வன்கொடுமைகளுக்கெதிரான கோபம் 2004 ஆம் ஆண்டே கொப்பளித்திருக்கவேண்டும்
காவல்துறையின் அடக்குமுறையால் நீர்த்துப்போனது. செவ்வாய்க்கிழமை 16 பேர்களடங்கிய தலித் போராட்டக்குழு தர்கொலையை போராட்டவடிவமாக அறிவித்தது போராட்ட முடிவில் ஒருவர் இறந்துபோனார். இது ஜனநாயக இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு அதிர்வை ஏற்படுத்திய மணிப்பூர் பெண்களின் போராட்டத்திற்கு ஈடானது என்று தலித் போராளி மோவானி கூறுகிறார்.
இந்த இரண்டு நாள் எழுச்சி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உதவித்தலவர் ராஹுல் காந்தியும்,டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவாலும் உனாவுக்கு புறப்படத்தயாரானார்கள்.அமெரிக்க பத்திரிகை தனது கடும்கண்டனத்தை பதிவுசெய்தது. உதறலெடுத்த குஜராத் அரசு உடனே நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் உதவித் தொகையாக அறிவித்தது.கொழுந்துவிட்டு எரியும் போராட்டம் இந்த கொப்பளித்த நீரில் அணைந்துவிடவில்லை.

அரசியல் சார்பற்ற தலித் இயக்கங்களும் அரசியல் கட்சிகளில் உள்ள தலித் பிரிவுகளும் ஒன்றிணைந்தன. பிஜேபி, காங்கிரஸ் ஆகிய தேசியக்கட்சிகளின் தலித் பிரிவுகள் கூட
தலித் போராட்டக்கூட்டணியில் அங்க வகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.ஜுலை 25 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள அம்பேத்கர் சிலை முன்னால் கூடி இரண்டுமணிநேர அமைதிப்போராட்டம் நடத்த கூட்டணிஅறைகூவல் விடுத்தது.நாடெங்கிலும் உள்ள முற்போக்கு இயக்கங்களும்,அரசியல் கட்சிகளும் கண்டன அறிக்கையை காத்திரமாகப் பதிவுசெய்தன. பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்பு வலுவாக எழுந்தது.முதல்வர் ஆனந்திபென் ராஜினாம செய்யநேர்ந்தது.

350 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் பேரணி ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டு ராஹுல்சர்மா தலைமையில் மூன்றாவது நாளாகப்பயணிக்கிறது. கயர்லாஞ்சி கொடூரத்திற்கு எதிராக உருவான தலித் எழுச்சியைவிடவும் கூடுதல் வீரியத்தோடு இந்த முறை களம் காணுகிறது கூட்டியக்கம்.

10.1.16

யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914


அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது.  விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போனவர்கள்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அயோத்திதாசர் எல்லா வழிகளிலும் உழைப்பை முன்னிறுத்தினார். அதுவே தனது இயக்கத்தின் மிகமுக்கியமான புள்ளியாகவும் கருதினார்.மேட்டிமைச் சாதிகள் உடல் உழைப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒருபோதும் உழைக்கத்தயாரக இருந்ததில்லை. ஆதலால் உழைப்பை அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். எனவே அயோத்திதாசர் தனது ஆதிவேதம் என்கிற நூலில், உழைப்பிலிருந்து வந்ததுதான் சிந்தனை, உழைப்பிலிருந்து வந்ததுதான் கண்டுபிடிப்புகள் என்பதையும் உழைப்பிலிருந்து வந்ததுதான் கலாச்சாரங்கள் எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான வாழ்வியல் ஆதாரங்களியும் முன்வைத்தார்.

அயோத்திதாசரின் இந்த ஓயாத பரப்புரைதான் தமிழ்ச்சூழலில் தனித்தமிழ்,சாதியற்ற தமிழகம்,உழைப்பாளர்களை போற்றுகிற சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது.

நன்றி அயோத்திதாசர் வலைத்தளம், மற்றும் முத்துமோகன்


6.1.16

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

வடக்கே போ,மேற்கே போ,தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.
எதற்கம்மா என்ன தீமை இருக்கிறது எனக்கேட்பான்
தீமைகள் இல்லையப்பா பூச்சாண்டி இருக்கிறான் என்பாள்.

இல்லையம்மா கிழக்கே தான் என் நண்பன் இருக்கிறான்
இல்லையம்மா கிழக்கே தான் நம் வயல் இருக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் சூரியன் உதிக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் நம் பசுமாடு மேய்கிறது

சொன்னாக்கேளு எதுத்துபேசினால் சூடு வைத்துவிடுவேன்
வடக்கே போ மேற்கே போ தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.




3.1.16

சமம்




சமம் என்பது துரதிஷ்டவசமானது.
சமம் என்ற சொல்லுக்கு இணையான
அல்லது மாற்றுச்சொல் காணக்கிடைக்கவில்லை.
சமம் என்பது அதே போல் அல்லது
அதற்கு இணையான என்று பொருள் கொள்ளலாம்.
இணையான என்பதை அளவை,தொகை,எண்ணிக்கை,
மதிப்பு,தரம்,பட்டம் என்ற மதிப்பீடுகளில் ஒப்பிடலாம்.
இந்த மதிப்பீடுகள் பௌதீக மற்றும் கணித இலக்கணங்களுக்கு வேண்டுமானால் துள்ளியப்படலாம் இந்த மதிப்பீடுகளை
மனித உயிர்களுக்கு ஒரு போதும் இலக்கணப்படுத்தமுடியாது.

27.12.15

அவனைப் போக விடு


(கருப்புக் கவிதைகள் பக்கத்திலிருந்து
கருப்புக்காதல் வரிசை -
மொழிபெயர்ப்பு முயற்சி.)
..

நாம் சந்தித்துக்கொண்ட முதல்பொழுதிலேயே
உனை முடிவில்லாமல் அறிந்ததாய் உணர்ந்தேன்.
தனித்தினி நான் பயணிப்பதெப்படி நண்பனே ?
பரிமாறிக்கொண்ட ரகஸ்யங்களை விட்டு
தனித்துநான் பயனிப்பதெப்படி நண்பனே ?

சந்தோசங்களை விடவும் சண்டையில் நாம்
பரிமாறிதுதானே அதியற்புத உன்னதங்கள்.
ஆனந்தம்,களியாட்டம்,கண்ணீரென
எல்லாவற்றையும் சேர்ந்தே செலவழித்தோம்.

வாழ்வின் பரியந்தமும் புன்னகை கூடவரும்
யாரும் விரும்பாத நான் உன் அன்புக்கு பாத்திரமானதால்.
உனக்கான என் அன்பை,என்மரியாதையை, இடத்தை
எதற்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது.
என்னில் அடியாழத்தில் இருக்கும் இவற்றால்
ஒருபோதும் உனைப்பிரிய முடியாது.

எனினும், இன்னொரு நான், மிதிபட்டநான்.
என்னால் நீ இழந்தவை போதும்
இது உன்னை ஒரு போதும் காயப்படுத்தக்கூடாது
என்பொருட்டு பேத உலகில் நீ இழந்தவை போதும்.

இருப்பினும் நீயெனக்கு எப்போதும் உன்னதம்.
உவர்ப்பிலும் நானுனக்கு சளிக்காத சந்தோசம்.
அதிமாக நேசித்தால் அருகிலிருந்து நேசிக்காதே
எங்கள் முதுமொழியை நான் முன்மொழிகிறேன்

மறந்துவிடாதே
நினைவுகள் அழியும் வரை
நானும் மறக்கமுடியாது
போய்வா....

உலோகங்களை விட அடர்த்தியான துரு





சாமி கும்பிடாததால் அரச இலையை வைத்து பிள்ளையார் உருவம் செய்த க்ராபிக்சை ரசிக்கமுடியாத மரபில் வளர்ந்தவன்.
ஆனால் இளையராஜாவைப்பிடிக்கும் என்பதற்காக ஏனைய இசையமைப் பாளர்களை கிள்ளுக்கீரையாகப்பார்க்கிற மேனாமினுக்கித்தனம் துளியும் கிடையாது. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி பாடலை எங்கு கேட்டாலும் நெக்குருகிப்போகிற இசைக்கிறுக்கு.
 பிரம வதனம் வேண்டும் என்கிற மலையாளப்பாடலையும், கபி கபி இந்திப் பாடலையும் தரவிறக்கம் செய்வதற்காக இரண்டு இரவுகள் செலவழித்த பயித்தியம். இந்த வலையுலககத்திலும் கூட இளையராஜவை சிலாகிக்கிற யாரும் எம் எஸ் வியையோ, ரஹ்மானையோ விமர்சித்து எழுதியதாக ஞாபகமில்லை.

ஆனால் இங்கு பல பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எம் எஸ் வியை பேசுகிற பொழுதெல்லாம் லைட்டா இளையராஜாவை ஒரு தட்டு தட்டாமல் கடந்து போக முடியாது அவர்களால். போனால் அன்று தூக்கம் வராது. இளையராஜாவுக்கு சளிப்பிடித்தாலும் போதும் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவார்கள்.அப்போழுதெல்லாம் மனுநீதிச்சோழனின் மறுபதிப் பைப்போல தங்களைத் தாங்களே தராசாக்கிக் கொள்வார்கள். கவுரவக் கொலைகள் குறித்தோ, இளவரசன் படுகொலை குறித்தோ, பாடகி சின்மயியின் இட ஒதுக்கீட்டு தேற்றம் குறித்தோ கருத்து ஏதும் சொல்லாத கந்தசாமிகள் அவர்கள். இந்த இரண்டு நாளில் ஞாயயம்டா, நீதிடா என்று பெருங்குரலெடுத்து சொம்பில்லாத நாட்டாமையாகிவிட்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒரு பிரச்சினை குறித்து திருமாவளவனிடம் கேள்விகேட்கிறார்கள். அதற்கு அவரும் சிரத்தையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.  வியர்வையையோ அழுக்கையோ  சொரிந்து அதை பார்த்துவிட்டு பின் உதறுகிறார். இதை ஒரு நான்கு தரம்  காட்டுகிற அருவருப்பை என்ன பெயர் சொல்லி அழைப்பது ஊடகதர்மம் என்றா.
ஒரு காமிரா எவ்வளவு உன்னதமானது. மூன்றாவது கண்ணில்லையா அது?.பேட்டியோடு தொடர்புடைய ஆயிரம் காட்சிகளில் எதவதொன்றை காண்பிக்கலாம். அல்லது அதற்கு எதிர்மறையான காட்சிகளைக்கூட வைக்கலாம். இந்த இரண்டையும் விட்டு விட்டு சொரிவதையும் அழுக் கெடுப்பதையும் காட்டுகிற அந்த ஊடகத்தின் மூளையில் எவ்வளவு அழுக்கு இருக்கும்?.

நீயா நானா நிகழ்சியில் ஒருத்தர் எங்க ஜாதிப்பிள்ளைகளை காதலித்தால் வெட்டுவம் குத்துவம் என்று கொக்கரிக்கிறார். திருவாளர் ஊடகம் அப்படி யெல்லாம் பேசப்படாது என்று செல்லமாய்க் கண்டிக்கிறார். அடடே எவ்வளவு காத்திரமாக தனது அறச்சீற்றத்தை முன்வைக்கிறார் என்று வியந்து முடிப் பதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. விகழ்பமில்லாமல் கருத்துச் சொன்னதற் காக வெட்டுவோம் குத்துவோம் என்று சொன்ன பங்கேற்பாளருக்கு பரிசு கொடுத்து முடித்தார்.

நல்ல வேளை அருவாளைப் பரிசாகக்கொடுக்கவில்லை.

கருப்புக்கவிதைகள்



 1

கருப்புக்காதல்
---------------------
கருப்புக்காதல்
தொகுப்பிலிருந்து
பெயரிடப்படாத
ஒரு கருப்புக்கவிஞனின்
வெறுப்புப்பாடல்

நன்றி.
black poems

0
நேர்த்தி ஒருபோதும் நேர்த்தி இல்லை,
உண்மை என்னவெனில்
நானெப்போதும் நேர்த்தி இல்லை.
தவறுகளால் கட்டமைக்கப்பட்டவன் நான்.

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்
அவர்களிலும் நேர்த்தியானவனாகவும்
சிகப்பே புதிய கருப்பாவது போல
வேற்றுமை தான் நிஜ உலகம்.

நான் எப்படி இருப்பதெனவும்
நான் யார்போல இருப்பதெனவும்
நான் மட்டுமே முடிவெடுக்கமுடியும்.

நான் பிறர்போல் நடிக்கமுடியாது
மன்னிக்கவும்
என்னிடம் இல்லாத நேர்த்தியை
இருக்கிறதென்று ஒருநாளும்
என்னால் நடிக்கவே முடியாது.
0

2

கடவுளுக்கும் பிடித்த நிறம்
------------------------------------------------

சத்தியமான உலக அழகி
இரவின் வண்ணம் குழைந்தவள்
சுருள்சுருளான கேசம் அணிந்தவள்
உயர்ந்த தோள்களும் தாழ்ந்த புன்னகையும் படைத்தவள்
அவள் தான்சானியாவிலிருந்து வருகிறாள்
அவளே ஆண்களின் ஆதித்தாய்.

தேனின் நிறம்பெற்றவர்களே தேவதைகள்
அவர்கள் அலபாமாவினின்று வருகிறார்கள்
பசிய கண்களும் தடித்த அதரங்களும்
அகன்ற நாசியும் அதுபோன்றே இடையும் கொண்ட
அவர்கள் சூரியன் உறங்கும் போது
உருவெடுத்த வண்ணம் பூசியவர்கள்
அவர்களின் வளைவுகளை வடிக்கும் போது மட்டும்
கடவுளுக்கு கைநடுங்கவில்லை.

ஆகவே அழகிய கருப்புத்தான்
கடவுவுளுக்கு பிடித்த நிறம்

அழகிய கவிதையின் சொந்தக்காரி
ஆதி அழகின் சொந்தக்காரி

அன்புக்கருப்பி
-திமோத்தி.n.ஸ்டெல்லி







0
3



இது ஒரு கருப்புக்கவிதை.
ஆப்ரிக்க - அமேரிக்க கவிஞனின் வேதனை ஊற்றி எழுதப்பட்டவரிகள்.
கவிஞனின் பெயர் தெரியவில்லை.ஆனாலும் அந்த வலி
எல்லாக்கருப்பின மக்களின்பெயரையும் ஓங்கி உச்சரிக்கிறது

being a black at work place

எனது அன்பை பலஹீனமாக எடுத்துக்கொண்டார்கள்
எனது அமைதியை ஊமைத்தனமென்றார்கள்
எனது தனித்தன்மையை புரியாதபுதிரென்றார்கள்
எனது மொழியை வட்டாரவழக்கென்றார்கள்
எனது உறுதியை மூர்க்கமென்றார்கள்
எனது சிறிய தவறுகளுக்காக என்னை வீழ்த்தினார்கள்
எனது வெற்றியை விபத்தென்று உருவகப்படுத்தினார்கள்
எனது புத்திக்கூர்மையை என்வேலையாகக்குறுக்கினார்கள்
எனது கேள்விகளை என் அறியாமை என்று அறிவித்தார்கள்
எனது முன்னேற்றத்தை தகாதகுறுக்குவழி என்றார்கள்

6.9.15

நான்கு நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்


பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொன்னார் கலிலியோ. பூமிதட்டையானது என பைபிளில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சிதைப்பதால் மத நம்பிக்கைக்கு எதிரானது இந்த கண்டுபிடிப்பு என்று பிரகடனப்படுத்தியது கத்தோலிக்கசபை.  திருச்சபையின் உயர்மட்டக்குழு கலிலியோவை ரோமுக்கு அழைத்தது. போப் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கூற வாய்ப்பளித்து நீதிசெய்தது நானூறு ஆண்டு களுக்கு முந்தைய மூடநம்பிக்கை.  கத்தோலிக்க கார்டினல்களில் பலபேர் கலிலியோவின் அபிமானிகளாய் இருந்த காரணத்தால் அவரது வாதம் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்து மதத்தின் முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைகளை,ஜாதீயக்கட்டுமானங்களை எதிர்த்துக்கிளம்பிய இயக்கங்கள் ஏராளம், அதற்கு ஆணீவேராய் இருந்தது புத்தமதகொள்கைகள்.ஜைனம்,வீரசைவம்,சமணம்,சீக்கியம்,சூவ்பித்ததுவம்,ஆகிய இந்திய புராட்டஸ்டண்டுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததும் புத்தமதம். படையெடுத்துக் கைப்பற்றியதை விட அசோகன் புத்த மதத்தை போதித்துச் சம்பாதித்து அதிகம்.அதனால்தான் கிட்டத்தட்ட 28 முறை போதிமரம் வெட்டப்பட்டது.நாலந்தா பல்கலைக்கழகம் தரைமட்டமாக் கப்பட்டது, நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதனால் தான் இன்றுவரை ஒருகுண்டூசியைக் கூட சொந்தமாக கண்டுபிக்க இயலாத கபோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இந்த 2105 ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதியதால் கல்புர்கி கொல்லப்பட்டிருக்கிறார். ஷீனா போராவுக்கு கொடுக்கப்படுகிற ஊடக முக்யத்துவம்,சாக்‌ஷி மகராஜின் மேல் விழுகிற ஊடகவெளிச்சம் இந்த அறிவுப்படுகொலை யின்மேல் விழமறுத்துவிட்டது. மேலை தேசத்தில் போட்டி விளம்பரத்துக்காகவேணும் இவ்வாறான செய்திகள் எதிர்முகாம்களால் பெரிதுபடுத்தப்படும். அந்தோ இங்கு எல்லோரும் தங்களைத்தற்குறியாக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். அதானல் தான் எல்லா ஊடகங்களும் இதை ஒருவரிச்செய்தியாக்கிக் கடந்துபோய்விட்டன. விலங்குகளுக்கு, பறவைகளுக்கு,சிலைகளுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு,களவாணிகளுக்கு,கொள்ளையடிப்பவனுக்கு,போலிச்சாமியார்களுக்கு இந்ததேசத்தில் இருக்கிற பாதுகாப்பில் 10 ஒரு பங்கு கூட அறிஞர்களுக்கு இங்கே கிடையாது. அதுவே தீராத சாபம்.

4.7.15

ஒரு போராளிக் கவிஞனின் டைரிக்குறிப்பு - ஜோஸ் மார்த்தி - 2 ( JOSE MARTI )

1853 ல் பிறந்து வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து க்யூபாவின் விடுதலைக்கும் லத்தின் அமெரிக்க இலக்கியத்துக்கும் ஆயுதமும்,அதைஏந்துகின்ற வீரமும் கொடுத்துவிட்டுப்போன போராளிக்கலைஞன் ஜோஸ் மார்த்தி.க்யூபா அப்போது ஸ்பானிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது. பின்னர் அவர்கள் அதை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டுப் போனார்கள். நாடுகள் பண்டங்களாகப் பாவிக்கப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவைஅடிமைப்படுத்தியிருந்த காலம் அது.

ஏழு தங்கைகளுக்கு மூத்தவனான மார்த்தி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தான். 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனப்படுகொலை செய்யப்பட்ட புரட்சிக்காரன் ஆப்ரஹாம் லிங்கத்தின் மரணம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோஸ் மார்த்தியை அலைக்கழித்தது. அடிமை முறையை ஒழிக்கப்போராடிய ஒரு அண்டை நாட்டு ஆளுமைக்காக மௌன அஞ்சலிக்கூட்டத்தை நடத்தினான் ஜோஸ் மார்த்தி. 1868 ஆம் ஆண்டில் முடிவுற்ற பத்தாண்டு ஸ்பானியப் போரினால் க்யூபாவின் நிலைமை மிக மோசமடைந்தது. அப்போது க்யூபா ஸ்பானியக் காலணியாகவே இருந்தது. இது குறித்து விசனப்பட்ட க்யூபத்தேசிய வாதிகள் ஒருங்கிணைப்பு நடந்தது. மார்த்தியும் அவரது நண்பர் ஜெர்மினும் இதற்கு தலைமை தாங்கினார்கள்.

அதற்கான பிரச்சாரம் முழுக்க ஜோஸ் மார்த்தியின் கவிதைகளும் கட்டுரைகளுமாகவே இருந்தது. 1869 ஆம் ஆண்டு தனது முதல் அரசியல் கட்டுரையை எல் டியாப்ளோ என்கிற செய்தித்தாளில் வெளியிட்டார். பிரபலமான நாடகமான அப்தலா வையும் அதே ஆண்டு வெளியிட்டார். நூபியா என்னும் கற்பனை நாட்டின் விடுதலைப்போராக சித்தரிக்கப்பட்ட அந்த நாடகம் அந்த நாளில் விடுதலையின் வெப்பத்தை ஊதிவிட்டது.

அக்டோபெர் பத்தாம் நாள் என்கிற பிரபலக் கவிதையும் அதே ஆண்டு வெளியானது. அந்த ஆண்டிலேதான் அவன் படித்த பள்ளியை ஸ்பானிய ஆதிக்க அரசு இழுத்து மூடியது. 1869 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் மார்த்தி ஸ்பானிய அரசால் சிறப்பிடிக்கப்பட்டான். ஸ்பானிய அரசினை ஏமாற்றி லஞ்சம் வாங்கியதாக பொய்க்குற்றம சுமத்தப்பட்டான். நான்கு மாதம் கழித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டணை வித்திக்கப்பட்டு சிறயிலடைக்கப் பட்டார். மார்த்தியின் தாய் தனது மகன் சிறுவன் அவனை சிறையிலடைக்க வேண்டாம் என ஸ்பானிய அரசுக்கு கருணை மணுச் செய்தார். அவரது தந்தை வழக்கறிஞரை அமர்த்தி வாதாடிப்பார்த்தார் ஒரு ஆதிக்க அரசை ஏழைத்தாய் தந்தையின் கண்ணீரால் என்ன செய்ய முடியும்.

கொடுமையான அடக்குமுறையும் கால் விலங்குகளால் உருவான ஆறாத காயமும் அவரது உடல் நிலையை பாதித்தது அங்கிருந்து க்யூபாவின் இஸ்லாபியோன் பகுதிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை ஸ்பெயினுக்கு நாடுகடத்த தீர்மானித்தது ஸ்பானிய அரசு. அங்கு அவரது கல்யியைத் தொடரவும் அனுமதித்தது. ஸ்பானிய அரசுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் எனும் நிபந்தனையோடு.

1871 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரை அடைந்த மார்த்தி அங்கே தனது சிறைச்சாலை நண்பன் கார்லோசைச் சந்தித்தார். மார்த்தியின் வசிப்பிடம் நாடுகடத்தப்பட்ட க்யூப அகதிகளின் சந்திப்பிடமாக மாறியது. அந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி காஸ்டில்லோ என்னும் அவரது கட்டுரை காடிஸ் நகரின் லா சொபரினியோ நேசனல் எனும் பத்திரிகையில் வெளியானது. சிறையில் சந்தித்த சக கைதி ஒருவன் அனுபவித்த சிறைக்கொடுமையை வெளி உலகுக்கு அறியத்தரும் அதிர்ச்சித் தகவலாகியது அந்தக்கட்டுரை. தன்னை மாட்ரிட் நகரின் சட்டக் கல்லூரியில் தனி மாணவனாகப் பதிவு செய்து கொண்டபின் துணிந்து ஸ்பானியப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தார். அதில் க்யூபாவின் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பட்டியலிடப்பட்டது.

1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏழுபேர் பொய்க்குற்றம் சுமத்தி ஹவானாவில் தூக்கிலிடப்பட்டார்கள். தனது பத்திரிகையில் இதை எழுதிய மார்த்தியின் நண்பன் ஜெர்மினும் ஆறுவருடம் சிறைத்தண்டனை பெற்று ஸ்பெயினுக்கே அனுப்பி வைக்கப்பட்டான். ஸ்பெயினில் ஜெர்மினும் மார்த்தியும் மீண்டும் இணைந்தார்கள். நவம்பர் மருத்துவக் கல்லூரி சம்பவம் மீண்டும் மார்த்தியின் வார்த்தைகளில் எழுதப்பட்டு மாட்ரிட் நகரிலிருக்கும் க்யூப மாணவர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. நவம்பர் சம்பவத்தின் முதலாண்டு நினைவாக மாட்ரிட் நகரில் ஒரு, அடக்கச் சடங்கும் மௌன ஊர்வலமும் நடத்தப்பட்டது.

1873 ஆம் ஆண்டு தான் தங்கியிருந்த அறையின் முகப்பில் க்யூப தேசியக் கொடியைப் பறக்கவிட்டார் ஜோஸ்மார்த்தி.அப்போது புதிதாக நிறுவப்பெற்ற ஸ்பானியக் குடியரசு க்யூபாவை அதன் இன்னொரு அங்கமாக அறிவித்தது.இதை எதிர்த்து மார்த்தி ஸ்பானியப் பிரதமருக்கு ஒரு கண்டனக்கடிதம் அனுப்பினார். ஸ்பானியக் குடியரசும் க்யூபவிடுதலையும் எனும் அந்தக் கடிதத்தில் தன்னை ஒரு மக்களாட்சி அரசாகப் பிரகடப் படுத்திக்கொள்ளும் ஸ்பானியப் பொறுப்பாளர்கள் க்யூபாவை மட்டும் அடிமையாக நீடிக்க வைப்பது அதிகார வெறியின் மிகச்சிறந்த உதாரணம் என எழுதியிருந்தார்.

தனது எழுத்துக்கள் அணைத்தையும் நியூயார்க்கிலுள்ள நியூயார்க் மத்திய புரட்சிகர அமைப்பின் உறுப்பினர் நோஸ்ட்டர் போன்சுக்கு அனுப்பிவைத்தார். கியூப விடுதலை முயற்சிக்கு தனது ஆதரவை அந்த அமைப்பு பிரகடனப்படுத்தியது.1874 ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்துகொண்டு அங்கிருந்து பாரிசுக்குப் போனார். பாரிசில் ஆகஸ்ட் வகவுரி எனும் கவிஞரையும் விக்டர் ஹுயுகோவையும் சந்தித்தார். அங்கிருந்து மெக்சிகோவுக்கும், க்வட்டமலாவுக்கும் பயனமானார். 1875 முதல் 1878 வரை மெக்சிகோவிவின் கால் மொனெடோவில் தங்கினார். அங்குதான் மனுவேல் மெர்கடோ எனும் ஆப்த நண்பரின் சிநேகம் கிடைத்தது. அங்குதான் ஒரு க்யூப முதியவரைச் சந்திக்கிற பல நாட்கள் அலைந்தார். முதியவரின் மகளையும் சந்திக்கிற தங்கநிறத் தருணங்கள் அங்கேதான் கிடைத்தது. அவரது மகள் கார்மென் ஜயாஸ் பின்னாளில் மார்த்தியின் துணையானார்.

1877 ல் ஜுலியொ ப்ரெஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டு ஹவானாவுக்குப் பயணமானார் மார்த்தி. ஹவனாவிலிருந்த குடும்பத்தை மொத்தமாக மெக்சிகோவுக்கு மாற்றும் திட்டத்தோடு போனாலும் திரும்புகிற வழியில் மார்த்தி க்வட்டமாலாவில்ஒரு வீடு பார்த்து தங்கிவிட்டார். அங்கே ட்ராமா இண்டியானொ ( இந்திய நடகம்) - தேசமும் விடுதலையும் என்னும் நாடகத்தை உருவாக்கினர். அந்த மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்தார் அதன் விளைவாக ஆங்கிலம்,இத்தாலி,ப்ரெஞ்ச், மற்றும் ஜெர்மன் இலக்கியங்களுக்கான பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பாடம் நடத்தும் லாவகத்தில் அவரிடம் மாணவர்கள் கிறங்கிக் கிடந்தார்கள். அதில் முக்கியமானவர் மரியா கார்சியா க்ரேனடோஸ். க்வட்டமெலாவின் ஆளுநர் மிக்கேல் கார்சியா க்ரேனடோஸின் மகளான அவர் மார்த்தியின் மேல் பைத்தியமாகக் கிடந்தார். எனினும் மெக்சிகோ சென்று கார்மெனையே மணந்தார்.

1878 ஆம் ஆண்டு க்வட்டமாலா திரும்பிய மார்த்தி க்வட்டமாலா என்னும் நூலை வெளியிட்டார். அதே காலத்தில் நுறையீரல்நோயால் பாதிக்கப்பட்டிருந்த மரியா கார்சியா மரணமடைந்தார். அவள் நினைவில் வாடிய மார்த்தி 'காதாலால் மரணமான க்வட்டமாலாப் பெண்' எனும் புதினத்தை எழுதினார். மரியாவின் இழப்பால் மனதொடிந்துபோன மார்த்தி அங்கிருந்து க்யூபா திரும்பினார். அங்கே பத்தாண்டுப்போரின் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார். போர் முடிவடைந்த போதும் ஸ்பானியக் காலனி நீடிக்க, க்யூப விடுதலை அப்படியே கிடந்தது. அங்கிருந்து 1880 ஆம் ஆண்டு வெனின்சுலா சென்றார் அங்கு அவர் வெனின்சுலா ரிவியூ எனும் பத்திரிகை ஆரம்பித்தார். அவரின் எழுத்துக்களால் ஆத்திரமடைந்த வெனின்சுலா அதிபர் மார்த்தியைக் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். நியூயார்க் வந்த மார்த்தி மீண்டும் அங்கே க்யூப விடுதலை அமைப்பை உருவாக்கினார் ப்ரூனோ ஏர்ஸ் பத்திரிகையின் பொறுப்பாளராக இருந்தார்.

பத்தாண்டுப்போரில் தளபதிகளாக இருந்த கோமெஸ், அந்தோணியோ இருவரும் ஒரு உடனடி ராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டனர் அதற்கு மார்த்தியின் ஆலோசனையையும் நாடினார்கள். மார்த்தி ராணுவக் கலகம் செய்து க்யூபாவை மீட்க விருமபவில்லை. தவிரவும் அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்படாததால் அந்த முயற்சி சிறுபிள்ளைத்தனமானது என்று வாதிட்டார். 1891 ஆம் ஆண்டு மார்த்தியின் மனைவி,குழந்தைகள் அவருடனே தங்குவதர்காக நியூயார்க் வந்தார்கள். மார்த்திக்கு க்யூப விடுதலையை விட குடும்பதின் மீது அக்கறையில்லாதது வந்த சிறிது காலத்தில் தெரிந்துபோனது. கார்மென் குழந்தைகளோடு மீண்டும் ஹவனாவுக்கு கிளம்பினார். அதன் பின்னர் மார்த்தியை அவர்கள் சந்திக்கவே முடியாமல் போனது. வெனின்சுலாவில் விடுதி நடத்திக்கொண்டிருந்த கார்மென் மாரிய மாண்டில்லாவுடன் வாழ்ந்தார். மாண்டில்லாவின் பேரன் புகழ்பெற்ற நடிகர் சீசர் ரொமெரோ பின்னாட்களில் தன்னை மார்த்தியின் பேரனாகவே பிரகடனப்படுத்திக்கொண்டார்.

1892 ஆம் ஆண்டு க்யூப புரட்சிகரக்கட்சியை நிறுவினார். 1894 வரை ப்ளோரிடா,பிலடெல்பியா,டொமினிக்ககுடியரசு, மத்திய அமெரிக்க,ஹயத்தி,ஜமைக்கா,நிகரகுவா போன்ற அயல்நாடுகளில் வாழ்ந்த க்யூப மக்களிடம் சென்று கூட்டங்கள் நடத்தினார் அவர்களிடம் இயக்கத்துக்கான நிதியையும் திரட்டினார். 1895 ஆம் ஆண்டு க்யூப எழுச்சிக்கான வரைவு அறிக்கையை உருவாக்கினார். 1895 ஏபரல் 1 ஆம் தேதி க்யூபாவுக்கு கிளம்பும் முன் ஒரு இலக்கிய சாசனம் எழுதி கன்சோலாவிடம் ஒப்படைத்தார். கோமெஸ், ஏஞ்சல்,ப்ரான்சிஸ்கோ,சீசர்,மர்கோஸ் ஆகியோருடன் க்யூப விடுதலைப்போருக்குக் கிளம்பினார். ஏப்ரல் 11 ஆம் தேதி க்யூபாவை அடைந்தார்கள். அங்கிருந்து நாட்டுக்குள் இருந்த புரட்சிப்படைக்கு தூது அனுப்பினார்கள். ஸ்பானியத் துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. மார்த்தியின் புரட்சிப்படை முன்னேறி மே 13 ஆம் தேதி டாஸ் ரியோ வை அடைந்தது. அங்கே அடர்ந்த பனைகளை அரணாகக் கொண்டுள்ள ஸ்பானியத் துருப்புக்களை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததால் கோமெஸ் படைகளைப் பின்வாங்கச் சொன்னார். ஆனால் இந்த தகவல் கிடைக்காத மார்த்தி தனித்துவிடப்பட்டார். 1895 மே 19 ஆம் தேதி மதிய நேரம் ஒரு குதிரைவீரன் வருவதைப் பார்த்து 'இளைஞனே தாக்கு' எனக்குரல் கொடுத்தார். எப்போதும் கருப்புச்சட்டை அணிந்து வெள்ளைக் குதிரையில் அமர்ந்து வரும் மார்த்தியின் தனித்த அடையாளமே அவரை இலகுவாக குறிவைக்க ஏதுவாக இருந்தது.

கொலை செய்யப்பட்ட விடுதலைக்காரர்களின் உடலை கொடுக்காமல் தாங்களே அடக்கம் செய்கிற அதிகாரவெறியோடுஸ்பானிஸ் அரசு அவரைப்புதைத்தது. பின்னர் மீளத் தோண்டியெடுத்தாலும் அவரை எறிக்கத் தடை செய்தது. சண்டியாகோ டி க்யூபா வில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஒரு ராஜத் துரோகியைப் போல

என்னை இருளில் புதைக்கவேண்டாம்.

நான் சுத்தமான போராளி

நான் சூரியனைப் பார்த்துக்கொண்டே

உயிர் துறப்பேன்.


இந்தக் கவிதை வரிகள் நிஜமாக அவர் க்யூப விடுதலையை சூரியனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டுப்போனார். சூரியன் தகிக்கிற காலம் முழுக்க சுதந்திர வேட்கை எறிந்துகொண்டிருந்தது. அதிலிருந்துதான் ஒரு தீர்க்கமான தீப்பந்தம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார்கள் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும்.

கிட்டத்தட்ட சேகுவேராவின் வாழ்கைக்குறிப்பைப் போல இருக்கும் மார்த்தியின் வரலாறு. லத்தீன் அமெரிக்க இலாகியத்தின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அவருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நியூயார்க் மெக்சிகோவிலும் அழிக்கமுடியாத இலக்கியச் செல்வாக்கு பரவிக்கிடக்கிறது. 1959 ஆம் ஆண்டு நியூயார்க் மத்தியப்பூங்காவில் மார்த்தியின் சிலையை அமைத்துக் கௌரவப் படுத்திருக்கிறார்கள். 1869 ஆண்டு முதல் வெளியான அப்தலா தொடங்கி தனது இறுதி நாளில் உருவாக்கிய க்யூப விடுதலைப்ப்போரின் வரைவு அறிக்கை வரை 45 வகையான எழுத்துச் சொத்துக்களை இந்த உலகத்துக்கு விட்டுச்சென்றிருக்கிறார் மார்த்தி.

கவிஞன்,ஓவியன்,கட்டுரையாளர்,நாடகஆசிரியன்,பேராசிரியன்,

குழந்தைஎழுத்தாளன்,மொழிபெயர்ப்பாளர்,பத்திரிகைநிருபர்,

பத்திரிகைஸ்தாபகர்,அரசியல்தத்துவவாதி,ஆயுதம் ஏந்தியபோராளி

எனும் மலைக்கவைக்கும் சாகசக்கரனாக வாழ்ந்து மறைந்தவன்மார்த்தி.தனது நாற்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குமேல் நிலையாக எங்கும் தங்கியிருக்காதஓடுகாலி நமது மார்த்தி.லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் திருப்புமுனையாக இன்றும் போற்றப்படுகிற எழுத்துப்பாணிக்கு சொந்தக்காரன் மார்த்தி. நிகரகுவாக் கவிஞன் ரூபன் டாரியோவுக்கும், சிலிக்கவிஞன் காப்ரியெல்லா மிர்ஸ்டல்லுக்கும் ஆதர்சமாக விலங்கியவை மார்த்தியின் எழுத்துக்கள்.


16.3.14

தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)



தமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்குள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிராமத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது.எப்பொழுது தோழர் பீகேவைச்சந்தித் தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்கத்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.

எண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய் நண்பர்கள்களுக்குள் தள்ளிவிடப்பட்டேன்.அந்தக்கூட்டத்துக்குள் தான் என் தோழன் மாது இருந்தான்.அவன்கூடவே மூர்த்தியும் இருந்தான்.ஒரு அழுக்கேறிய நான்குமுழ வேஷ்டியோடு வந்து என்கையைப்பற்றிக் கொண்டான் மூர்த்தி.அவனும்கூட என்னைப்போலவே ஒரு கருசக்காட்டுப் புழுதிக்குள் கிடந்து வந்து  இந்த நட்பு இனிப்புக்குள் திகட்ட திகட்டவாழ்ந்து பிரமித்தவன்.

42 பி என் எஃப் தெருவில் அந்த பிஜிபிஇஏ சங்க அலுவலகம் இருந்தது.அங்கு ஒரே அறையில் கிடந்த நாங்கள் எதாவது எழுதிக் குமிக்க முயற்சிசெய்து கொண்டிருந்த போது, அவன் மட்டும் மூன்று பத்தி மாடியில் இருக்கும் சமயற்கட்டில் ஏதாவது வரைந்து கொண்டிருப்பான்.அண்ணன் ஜீவா அதைப்பார்த்து விட்டு ’மூமா (அப்போது அதுதான் அவனது செல்லப்பேர்) என்ன வரிஞ்சிருக்கியோ அதோட பெயரைக் கீழே எழுதிரு” என்பார் .அவனும் சேர்ந்து சிரிப்பான்.ஒரு கடைநிலை ஊழியன் மேல் குவிகிற இந்த அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் கொடூரமானது.அதை தகர்க்கிற பெருஞ்சம்மட்டியாய் பீகே இருப்பார்,அவரது நீளமான கை தோளில் விழுகிற போது கோடுகள் துவங்கி இடியாத பெருஞ்சுவர்கள்வரை இற்று இடிந்து போகும்.அவரது பேச்சை விடவும் காந்தத்தன்மை கொண்டது அவர் சகதோழர்கள் மீது காட்டு கிற பிரியம்.சாத்தூர் வீதிகளில் ஆறடி உயரத்தில் நடந்து போக அருகே நடப் பது எங்களுக்கு பெருமிதமான பயணமாகும்.

அந்தக்காலங்களில் தான் நாங்கள் பெரும்பசியோடு புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தோம்.பீகே தான் ஒவ்வொரு புத்தகமாய் கொண்டுவந்து கொட்டுவார் நானும் மாதுவும் போட்டிபோட்டு இரவுகளில் படிப்போம். அப்போது எங்கள் வயதொத்த ஊழியர்கள் அலுவலர் ஆவதற்கும்,சிஏஐஐபி படிப்பதற்கும் மெனெக்கெட்டுக்கொண்டிக்க நாங்கள் இலக்கியப் புத்தகங் களைக் கிறுக்குப் பிடித்துபடித்துக் கொண்டிருந்தோம்.நானெப்படி மாதுவை அகலக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேனோ அதைப்போலவே மூர்த்தி எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான்.அப்போதெல்லாம் நாங்கள் அவனைப்பகடி செய்வதிலேயே குறியாக இருந்தோம்.அவன் சைன்ஸ் ஜாதாவுக்கு பேர்கொடுத்து அவர்களோடு ஒரு காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அலைந்தான். ஒரு தீவிர அறிவொளி இயக்கத்தொண்டனாய்த் திரும்பிவந்த அவனுக்குள் பெரு நெருப்பு குடிகொண்டு இருந்தது.அத்தோடு

கூடவே ஒருகாதலும் அவனுக்கிருந்தது.

தொழிற்சங்கத்தில் ஒரு தலைமுறை போய் இன்னொன்று உருவெடுத்தபோது மூர்த்தியும் எங்களோடு செயற்குழு உறுப்பினரானான்.விடிகிற வரை நடக்கிற செயற்குழுக்கூட்டத்தில் முதன்முதலில் அவனைத்தான் பேய் பிடித்துஆட்டும். அப்புறம் என்னை.எங்களை உசுப்பிவிடுவதிலே குறியாய் இருப்பார் தோழர் சோலைமாணிக்கம்.அங்கேயும் கூட பெரிய இலக்கு ஏதும் இல்லாத ஒரு பிரதிநிதியாக இருந்தான்.நான் கூட சிலநேரத்தில் சபலப்பட்டு இருந்தேன். அவனுக்கு பதவிமோகம் துளியும் கிடையாது.எல்லா சங்கப்பொதுக்குழு விலும் அவனுக்குத்தான் கொடிக்கம்பம் தயாரிக்கிற,தியாகிகள் ஸ்தூபி தயாரித்து சிகப்பு பேப்பர் ஒட்டுகிறவேலைகாத்திருக்கும்.ஆனால் அந்த கொடியை மடக்கிகட்டிவைக்கத் திணறு வான்.அப்போது அவனுக்கு நானும் நாசரும் கூட இருக்கவேண்டும்.கொடியேற்றிக்கொடுத்துவிட்டு நான் நாசர் மூர்த்தி  மூவரும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கடைசிப்பெஞ்ச் கோஷ்டியாகி விடுவோம்.ஆதலினாலே இந்த இருபத்தைந்து வருட தொழிற்சங்க பதிவு களில் எங்கள் புகைப்படம் எதாவது கூட்டத்துக்குள் கரைந்து போயிருக்கும்.

அதுபோலவே தமுஎசவிலும் எங்களோடு பயணித்தவன் மூர்த்தி.இங்கேயும் கூட பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கிய புல்லரிப்பில் அலைபவர் கள்நாங்கள்.எண்பதுகளில் என்னையும் அவனையும் தான் குற்றாலம் சிறு கதை பட்டறைக்கு அனுப்பிவைத்தார்கள்.அங்கிருந்து வந்து ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில்லை.ஆனால் மூர்த்தி எழுதி எழுதிக்குமித்து விட்டான்.அதை முதலில் என்னிடம் மட்டும்தான் காட்டுவான்.அவனது கையெழுத்து காற்றுக்கு வளைந்த நானற்கூட்டம் போல் நீண்டு வளைந்து இருக்கும்.எழுதிக்கட்டாக கட்டி என்னிடம் அனுப்பிவிடுவான்.படித்தது படிக்காதது என அவனது கையெழுத்துப்பிரதிகள் அலமாரியில் கணிசமான இடத்தை அடைத்து இன்னும் கிடக்கிறது. மாது ராஜகுமாரன் என்கிற சிறுகதைத்தொகுப்பு போட்டு,சில கட்டுரைத்தொகுதி வெளியிட்ட பிறகு நானும் தக்கி முக்கி எழுதி  ஒரு தொகுப்பு போட்டேன்.அதே வேகத்தில் அடுத்து மூர்த்தியின் முதல் தொகுப்பு வந்தது.நான் எப்படி மாது மட்டும் தான் எனக்கு முன்னுரை எழுத வேண்டும் என்கிற உறுதியில் இருந்தேனோ அதேபோல எனக்கு முன்னுரை எழுதுகிற வாய்ப்பைக்கொடுத்தது மூர்த்தி.
    
என்பதுகள் தொடங்கி இன்று வரை ரெண்டு முறையாவது அது என்ன இது என்ன என்று அவன் கேட்கிற கேள்விகளில்தான் அந்த பெரு நெருப்பு குடி கொண்டிருந்தது.எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பு புத்தகத்தை கையில் தொடாமல் எழுத்தில் ஜெயித்த எங்கள் அன்புத்தோழர் மேலாண்மையை மாதிரியே மூர்த்தியும். ஒரு சின்ன துணுக்குகூட ஆங்கிலத்தில் படித்திருக்க வாய்ப்பில்லாதவன் மூர்த்தி.நானும்கூடத்தான்.ஆனால் எனக்கு பாடப்புத்தகம் வழியே ஆங்கிலம் அறிமுகமாகி இருந்தது.கல்லூரியில் லே மிசரபிள் போன்ற நான் டிடெய்ல் புத்தகங்தொட்டிருக்கிறேன் அப்படி வாய்ப்பில்லாத அனுபவப் படிப்பை மட்டும் கைப்பற்றி நண்பர்களை அருகிருந்து நோக்கி எழுதியவன் தோழன் மூர்த்தி.

மூர்த்தியின்எழுத்தைப்பேச,சிலாகிக்கவேண்டியதைவிடவும்.அவனைச்சிலாகிப்பதே பெருங்கடமை.பெரிய கல்விப்பின்புலம்,எழுத்துப்பின்புலம் இல்லாததோழமை யும் நட்பும் துணைகொண்டு எழுதிகிற மூர்த்தி சிலாகிக்கப்படவேண்டியவர்(ன்).

14.3.14 ல் விருதுநகரில் நடந்த அந்த விழாவில் பங்கேற்க முடியாத தடைகளை இந்த வரிகள் சரிசெய்யும்.எங்கள் பிரியத்தோழர் முத்துக்குமாருக்காகவாவது அதில் கலந்திருக்கவேண்டும்.எங்களைப்போலவே அவரும் எளிய தோழர். மூர்த்தியைப்புரிந்து கொண்டு சரியாக விழா எடுத்த அவர்,அங்கே போகமுடியாத என்னையும் புரிந்துகொள்வார்.   

27.10.13

பட்டு- நாவலின் விமரிசனமல்ல.



ராமநாதபுரத்தில் இருந்த போது ஒவ்வொன்றாய் வாங்கிப்படித்த புத்தகங்கள் இருபது தேறும். ஒவ்வொன்றாய் வாங்கத்தான் பையும் கையும் ஒத்துழைக் கிறது.அப்போதெல்லாம் அறைத்தோழர்கள்  எப்படி சார் படிக்க நேரம் கிடைக் கிறது உங்களுக்கு,என்று கேட்பார்கள்.நேரம் என்ன கடையிலா விற்கிறது ?, இல்லை மலைமுகடு களில் இருக்கிறதா ?.அரட்டையடிப்பதற்கான  காலங் களைப்போலத்தான், இந்த புத்தகம் மூலமாக அரட்டை அடிப்பதற்கும் லபிக் கிறது தேரம்.டிஸ்கவரி புக்பேலஸ் தோழர் வேடியப்பன் மூலமாக அணுப்பிய ஆறு புத்தகங் களில் இரண்டை முடித்தாகிவிட்டது.எங்கள் பாசத்துக்குறிய தொ.ப.வின் விடுபூக்களும்,அலெக்சாண்டர் பாரிக்கோவின் ‘பட்டு” நாவலும் பற்றிச்சொல்லியே ஆகவேண்டும்.

பட்டு, நல்ல கருஞ்சிவப்பு நிறத்தில் கையடக்கமான பக்கங்களிலும் கையடக் கமான விலையிலும் உருவாக் கப்பட்ட அழகிய நாவல்.ஒரு ராணுவ வீரணான ஹெர்வே ஜென்கர் பட்டுப்புழுக்களை ஜப்பானில் இருந்து வாங்கி பிரான்சில் உள்ள லாவில்டியூ என்கிற உள்ளூரில் விற்கும் வியாபாரியாக மாறிப்போகிறான்.அவனை அவனது அப்பா போட்டுவைத்திருந்த  ராணுவப் பெரும் பதவியெனும் கனவுப்பதையிலிருந்து ஒரு கொண்டையூசி வளை வாய் திருப்பி,கூட்டுப்புழுக்கள் சேகரிக்கும் ஜப்பான் பயணியாக்கியது பல்தொப்பியாதான்.

பிரான்சிலிருந்து கடல்மார்க்கமாக,ரயிலில்,குதிரையில் என மூன்று மாதங்கள் பயணம் செய்து மறு எல்லையில் இருக்கும் ஜப்பானை அடைகிறான். முட்டைகள் வாங்கிக்கொண்டு திரும்பி பிரான்ஸ் வருகிறான்.பட்டுமுட்டைகள் வாங்குகிற ஜப்பானில் ஹரா கீய் என்கிற ஜமீந்தாரின் இளம் மனைவியை காண்கிறான்.அவள் மீதான ஈர்ப்பு அவனை ஜப்பானை நோக்கி திரும்பத்திரும்ப பயணிக்க வைக்கிறது.

ஒருவருக்கொருவர் சந்கித்துக்கொள்ளாத இந்தக்காதல் கதையின் நடுவே பிரான்சின் தொழிற்புரட்சி, லூயிபாஸ்டரின் கண்டுபிடிப்புகள், ஜப்பானியப் போர் ஆகியவை சின்னச்சின்னத்தகவல்களாக வந்துபோகிறது.ஜப்பானிய மொழியில் எழுதிய அவளது கடிதத்தை எடுத்துக்கொண்டு பெரும்பயணம் செய்து திருமதி பிளான்சி என்கிற செக்ஸ் தொழிலாளி மூலம் மொழி பெயர்த்து அறிகிறான்.காலமாற்றத்தில் சூயஸ் காலவாய்திறக்கப்பட்டு,1884ல் செயற்கைப் பட்டுக்கான காப்புரிமைபெறப்பபட்டு ஜப்பான் கொள்முதல் செலவீனமாகிறது.இருப்பினும் அவனை அவள் கண்கள் இழுக்கிறது.

மீண்டும் ஷிராக்காவை அடைந்தபோது போரால் அது சிதலமடைந்து கிடந்தது. ஹரா கீயின் அரண்மனை வெறிச்சோடிக்கிடக்கிறது.ஆளரவமற்ற ஊரின் தனி மையில் இருந்த அவனைத்தேடி ஒரு சிறுவன் வருகிறான் அவனது அழைப்பை  ஏற்று நாட்கணக்காக அவன் பின்னாடி அழைந்து இறுதியில் ஹராகீயின் முகாமை அடைகிறான்.இந்த முறை வந்த ஜென்கரின் நோக்கத் தைப் புரிந்து கொள்கிறான் ஹராகீய்.அதானால் அவனைக் கூட்டிக் கொண்டு வந்த சிறுவனைக்கொல்கிறான்.

மீண்டும் பிரான்சுக்கு பயணமாகிற வழியில் கூட்டுப்புழுக்கள் செத்துப்போய் பயணற்றதாகிவிடுகிறது.அதை அப்படியே கீழே கொட்டிவிட்டு ஊர்திரும்பி, வேறு தொழில்செய்கிறான்.அவனுக்கு ஒரு ஜப்பானிய மொழிக்கடிதம் வருகிறது அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பிளான்சியிடம் ஓடுகிறான். அது ஒரு நெடிய காதல் கடிதம்.அதன்பிறகு அவனது மனைவி ஹெலன் மரித்துப் போகிறாள்.அதன்பிறகு கடிதம் ஜப்பானில் இருந்து வரவில்லை என்பதை அறிந்து மீண்டும் பிளான்சியை சந்தேகித்து அவளிடம் போகிறான்.
கடிதத்தை எழுதியது உண்மையில் யாரென்று முடிப்பதுதான் நாவலின் பெரும் வெற்றி.

அது ஹெலன்.ஹென்கரின் காதல் மனைவி ஹெலன்.

ஒரு நெடிய சிறுகதை போல இழுத்துக்கொண்டு ஓடும் நாவலில் இன்னொரு வியப்பு இருக்கிறது.ஒரு பக்கம் மட்டுமே இருக்கிற அத்தியாயங்கள். அதை விட  வியப்பு வெறும் அரைப்ப்பக்கத்தோடு முடிந்து போகும் அத்தியாயங் களுமான அதிசயத்தை சும்மா விடுவார்களா.அது திரைப்படமாகியிருக்கிறது.

0

தமிழில்=சுகுமாரன்
விலை =ரூ.95
வெளியீடு= காலச்சுவடு
கிடைக்குமிடம்=டிஸ்கவரி புக்பேலஸும் 

3.7.13

தீவிரமாகும் தனிமையின் இசை.

நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது.

14.8.12

நைல்நதி காதல் நாகரீகத்தின் தொட்டில். cairo time (சினிமா)



தமிழ்த்திரைப்படங்களை கேமரா இல்லாமல்கூட படம் பிடித்துவிடுவார்கள் போல அருவா இல்லாமல் படமே எடுப்பதில்லை. ஆங்கிலத்திரைப் படங்களென்றால் துப்பாகியால்சுட்டுத்தான் ஜிப்பைக்கூடக் கழற்றுகிறது.
அல்லது நம்பமுடியாத உருவில் பல்லிகளையும் பாச்சான்களையும் வடிவமைத்து அமெரிக்காவை மிரட்டுவதாக கதைகள் ஜோடிப் பார்கள். இடையில் இத்தாலியன் ஜாப் என்கிற ஆங்கிலப்படம் பார்த்தேன். அது ஏற்கனவே பார்த்த மாதிரியே இருந்தது. அடடே நமக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்துவிட்டதா என்று பயந்துபோய் மூளை கசக்கினேன். ஆமாம் அது மங்காத்தா. அப்படியெல்லாம் இல்லை இதோ மெல்லிய பியானோ ஒலி படம் முழுக்க பரவிக்கிடக்க நைல் நதியில் மிதக்கும் ஒரு காதல்கதையைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று கொடுத் திருக்கிறார் இயக்குநர் ரூபா நடா.கதையும் கூட உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி எழுதிய ரூபா நடாவின் நாவல்.

இதுவும் கூட ஒரு நடுவயதுப் பெண்ணின் தனிமையின் அருகே நகர்ந்து போகும் கதைதான். ஆனால் அந்த அமைதியும்,நைல்நதியும்,கழுத்து ஒடியும் உயரத்தில் எழுந்துநிற்கும் பிரமீடுகளும்,மணற்பரப்பும் நம்மை கட்டிப் போடுகிறது. காஸாவில் அமெரிக்க அரசுப்பணிக்காக வந்து தங்கிவிட்ட தனது கணவன் மார்க்கை (டாம் மெக்காமஸ்) மூன்றுவருடங்கள் கழித்து கெய்ரோவுக்கு தேடி வருகிறாள் பத்திரிகையாளர் ஜூலியட் ( பாட்ரீசியா க்ளார்க்சன்). உலகம் முழுவது ம் தாங்கள் விதைத்து வைத்திருக்கும் பயங்கரவாதம் கெய்ரோவிலும் செழித்துக்கிடக்கிறது. காஸாவிலிருந்து கெய்ரோ வரும் வரை அவளுக்கு பாதுகாப்புக்கென தனது பழய்ய மெய்க்காப்பளன் தாரிக்கை (அலெக்சாண்டர் சித்திக்) அமர்த்துகிறான் கணவன் மார்க்.

தனது காதலி இன்னொருவனுக்கு மனைவியானதினால் மணம் உடைந்து போன தாரிக்ஒரு தேநீர்விடுதியை நடத்திக்கொண்டு தனியே வாழ்கிறான். அவர்களிருவரும் ஒருமூன்றுவாரம் ஊரைச்சுற்றுகிறார்கள். கெய்ரோவின் உணவுகள்,தேநீர்,மக்கள்,அவர்களின் வறுமை,அவர்களின் கல்யாணம் அங்குநடக்கிற இசையும் நடனமும், அவர்களின் குக்கா புகை என ஜூலி யட்டை மட்டுமல்ல நம்மையும்  ஈர்த்துவிடுகிற காலாச்சாரம் கெய்ரோ வெங்கும் விரிந்துகிடக்கிறது. அந்தக் காட்சிகளின் பதிவில் நாம் கூடவே பயணிக்கிற உணர்வு மேலிடுகிறது.ஒரு நாள் பொழுதுபோகாமல் தாரிக்கின் தேநீர்விடுதிக்கு போகிறாள் அங்கே ஒரே குடியும் பாட்டும் கும்மாளமுமாக இருக்கிறது.அந்தக்கூட்டம் முழுக்க அவளை விநோதமாகப் பார்க்கிறது. ஏனென்று கேட்கிறாள். இது ஆண்களுக்கான விடுதி என்று கூறுகிறான். ஆண் பெண்ணென்று தனித்தனியாகவா வாழ்கை இருக்கிறது என்றுகேட்கிறாள்.

தாரிக்கின் பழய்யகாதலி  யாஸ்மீனைத்( ஆமினா அன்னாபி )  .கணவனை இழந்துவிட்ட அவள் தாரிக்கின் அளப்பரிய காதலை கண்ணீரோடு நினைவு கூறுகிறாள். அவனோடு திரும்ப வாழ ஆசைப்படுவதாகவும் சொல்லுகிறாள். தாரிக்கிடம் வந்து அதைச்சொன்னதும் தாரிக் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். வாதப்பிரதிவாதங் களோடே நைல்நதியில் படகுப்பயணம் செய்கிறார்கள். பிரம்மீடுகளின் மீதேறி அமர்ந்து கொண்டு கெய்ரோவை வேடிக்கை பார்க் கிறார்கள். பிரம்மீடுகளுக்கு போகும் வழியெங்கும் மணற்பரப்பில் நடப்பதான காட்சி ஒருமுறை யேனும் எகிப்துக்கு போய்வரத்தூண்டும். அந்த மூன்றுவார அருகாமையும் ஒருவருக்கொருவரின் பகிர்தலும் அவர்களுக்குள் மெல்ல மெல்ல வேதியல் விளைவுகளை உண்டுபண்ணுகிறது.

இந்த சுற்றுலா முழுக்க விந்தைகளை அவளுக்கு அறிமுகம் செய்த காரணத் துக்காக பாரம்பரிய அமெரிக்க நன்றியாக ஜூலியட் தரும் முத்தத்தில் தாரிக் கிளர்ச்சியாகிறான். விடுதி அறையின் பொழுதுபோகாத  நிமிடங் களை நகர்த்த அவள் அடிக்கடி தாரிக்கைத் தேடிவருகிறாள். கணவன் மார்க்கின் திரும்புத லோடு கதையின் கடைசி நிமிடங்கள் அழகிய காதல்கவிதையாய் முடிகிறது. கணவனின் அணைப்பிலும் அவனது முத்தத்திலும் தாரிக்கையே அவள் விழிகள் தேடுகிறது. அந்த லிஃப்டின் கதவுகள் மூடும் வரை தாரிக்கின் பிம்பத் தில் நிலைகுத்தி நிற்கிறது ஜூலியட்டின் காதல் கசியும் கண்கள்.

மெசப்படோமியா,நைநதி,எகிப்து என்ற பள்ளிப்பருவத்தில் போரடித்த  மனப் பாடப்பகுதி எழுந்து அலையலையாய் வந்து கவிதைகோர்க்கிற அனுபவம்.

29.7.12

bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.


ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே கதாபாத்திரங்கள். அவர்களு டனான உறவுகள், உணர்வுகள் இவை அணைத்தையும் பார்வையாளர்கள் மேல் பாய்ச்சமுடிந்திருக் கிறது அந்த இயக்குனரால்.

விடுமுறையைக்கழிக்க பேருந்தில் பயணமாகும் ஒரு குடும்பம் ஓரிடத்தில் அந்தக்குடும்பத்தின்  பிரதானப் பெண்ணை மறந்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறது. இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் கணவனோ குழந்தைகளோ அவளைத்தேடி திரும்ப வராததால் பேதலித்துப் போகிறாள். தெரியாத இடம் மீண்டும் எப்படி வீடுபோவோம் என்று அல்ல. எப்படி மொத்தக்குடும்பமும் தன்னை மறந்து போனது என்கிற சிந்தனையில் குழம்பி, தன்னைத்தானே தொலைத்துக்கொள்கிறாள்.அந்த விடுமுறையைத் தனியேகழிக்க விரும்புகிறாள். தன் வாழ்நாளில் ஒருதரமாவது பார்த்துவிட ஏங்கிய வெனிஸ் நகருக்கு போகிறாள் ரோசல்பா.

வெனிஸ் நகரின் மார்க்கபோலோ விடுதியில் தொடர்ந்து தங்கமுடியாத அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த விடுதியின் சேவகர் பெர்னாண்டோவிடம் உதவி கேட்கிறாள்.பெர்னாண்டோ தனது அறையில் தங்க இடம் அளிக்கிறான். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மஸாஜ் மற்றும் அழகு கலை நடத்தும்  க்ராஸி யாவுடன் நட்புக்கொள்கிறாள்.சாப்பாட்டுக்கு துலிப் மலர்கள் விற்கும் ஒரு கடையில்  வேலைக்குச் சேர்கிறாள்.
ஒவ்வொரு நாளும் அறைக்குத் திரும்பும்போது கொஞ்சம் உணவும், துலிப் மலர்கள் மீது செருகப் பட்ட ஒரு கடிதமும் காத்திருக்கிறது. அதை வைத்து விட்டு அங்கிருந்து போய்விடும் எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்தோடு அலையும்  பெர்னாண்டோவை அறிந்துகொள்கிற ஆர்வம் மேலிடுகிறது அவளுக்கு. அவன் வாசித்துவிட்டு அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்கள் அவன்மீது லயிப்பை உண்டாக்குகிறது. அவனது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்கார்டியன் வாத்தியம் பெர்னாண்டோ மீது கூடுதல் ஈர்ர்ப்பை உண்டாக்கு கிறது. அந்த அக்கார்டியனை இசைத்து பக்கத்து அறை சிநேகிதியை சிலாகிக்கச்செய்கிறாள். அவனைப்பின் தொடர்கிறாள். ஊருக்குள் அவனது மகளும் பேரனும் இருப்பதை அறிகிறாள்.அவர்களோடு சேர்ந்து பேரனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கணவனின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சிப்பந்தியை உளவுக்கு அமர்த்தி ரோசல்பாவை வெனிஸ் நகர் முழுக்கத் தேடச்சொல்லுகிறான்.அவனிடம் இருந்து தப்பிக்க நடன விடுதிக்குப் போகிறார்கள் ரோசல்பாவும், பெர்னாண்டோவும்.அங்கே அவளுக்குச்சில கவிதைகள் சொல்லுகிறான், பின்னர் இருவரும் நடனமாடு கிறார்கள்.விடுதியைத்தேடிக்ககண்டுபிடிக்கிற உளவாளி,ரோசல்பாவின் சிநேகிதி க்ராசியாவுடன் உறவுகொள் கிறான். பின்னர் உளவு வேலையை உதறிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். ஊரில் தனது மகன் போதைக்கு அடிமையாகி,பள்ளியில் இருந்து இடைநின்று போவதை அறிந்து வேண்டாவெறுப்புடன் ஊருக்குத் திரும்புகிறாள். அன்றிரவு மிகுந்த எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு செல்லுகிற ரோசல்பாவை கண்டு கொள்ளாமல் தூங்கி விடும் கணவனை எழுப்பி பேசுகிறாள். இனி நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தூங்கிவிடுகிறான்.

வெனிசில் ரோசல்பாவை நினைத்துக்கொண்டே உருகிப்போகிற பெர்னாண்டோ அவலைத்தேடி போகிறான். மீண்டும் ஒரு முறை தன்னோடு நடனமாட அழைக்கிறான்.இருவரும் காதலாகி நடனமாடுகிறார்கள்.மிகச்சாதார ணமாக ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் பரபரப்பு,சண்டை,குரோதம்,திகில்,சஸ்பென்ஸ் என எதுவுமில்லை.அதுமட்டு மல்ல மையக்கதாபாத்திரங்கள் யாரும் இளையவர் இல்லை.ரோசல்பாவாக நடிக்கும் லிசியாமாக்லியட்டாவும், பெர்னாண்டோவாக நடிக்கும் கான்ஸும் நடுவயதுக்காரர்கள்.தவிரவும் படம் முழுக்க ஆங்கில பாணியிலான காதல் காட்சிகள் ஏதும் இல்லை.

ஆனால்

படம் முழுக்க நகர விடாமல் நம்மை ஈர்க்கிற மெலிதான புல்லாங்குழல் இசைபோல காதல் கதை நெய்யப் பட்டிருக்கிறது. சிறுபிராயத்தில் நம்மை வசீகரித்த மூன்றாம் வகுப்பு கனகசுந்தரி டீச்சர்,அடுத்த தெருவுக்கு வாக்கப்பட்டு வந்த மல்லிகா மதினி,மூன்றுவருடம் சிவகாசிப்பேருந்துப்பயணத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த  மின்சார வாரிய தமயந்தி மேடம். இப்படி நினைவுகளின் நிலைத்துப்போன முகங்களின் முதிர்ந்த பிம்பமாய் வருகிறது லிசியா மாக்லியட்டாவின் வசீகரமுகம். சிரிக்கிற காந்தக்கண்களும் அவரது பாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போகிறது. நீர் சூழ்ந்த அந்த அழகிய வெனிஸ் நகர வீதியெங்கும் சுழன்று சுழன்று போய் நடனத்துடனான இறுதி முத்தத்தில் ஜொலிக்கிறது. கனிந்து விழுந்த பழத்தின் வாசனையோடும் ருசியோடும் காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

21.6.12

வலி மிகுந்த மாற்றம்.

கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த  எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த  மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற  நேரம்,  வண்டி யோட்டுகிற நேரம்,தூங்குகிற நேரங்களில் போன்பேச இயலாது என்கிற சிந்தனை இல்லாமல்  கோபித்துக் கொள்ளுகிற சுந்தரலிங்கண்ணன். சுந்தரலிங்கண்ணன் வாடிக்கையாக ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போன் பண்னுவார். எடுக்காவிட்டால் மறுபடியும் மறுபடியும் அழைப்புமணி அடிக்கும். எடுத்து விட்டால் எலே  சின்னப் பயலே உனக்கு அவ்வ்ளோ திமிராலே என்று தொடங்கி குறைந்தது அரை மணி நேரம் பேசுவார்.  தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகுட்டிகள் எழுந்து விடும். அவளுக்கானால் ரொம்ப நாளாச் சந்தேகம்  வேறு.  ”அர்த்த ராத்திரியில் அப்படி ஆம்பளக்கி ஆம்பள என்ன பேசுவீங்க”  பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.

எங்கப்பா போன?, அவனும் போன எடுக்கமாட்டுக்கான், நீயும் எடுக்கமாட்டுக்க என்று எடுத்ததும் கோபத்தை மட்டுமே வணக்கமாகச் சொல்லும் சன்முகண் ணாச்சி. சுருளி எடுக்காமல்போய் அவள் எடுத்துவிட்டாள் மிகவும் பரிவோடு குசலம் விசாரிப்பார். பிள்ளைகளைப் பற்றிக் கேட்பார். இந்த ஒரு வருடத்தில் ரெண்டே ரெண்டுதரம் மட்டுமே அவரிடமிருந்து போன் வந்திருந்தது. பல முறை அழைத்தும் எடுக்காமல் ஒரு நாள் எடுத்து  என்னப்பா, சீக்கிரம் சொல்லு என்றார். எப்படிண்ணே இருக்கீங்க என்று கேட்டான். இருக் கேன் இருக்கேன் வையி என்று மறுமுனை கட்டானது. படபடவெனக் கண்ணீர் வந்து தொலைத்துவிட்டது. என்ன ஏதென்று கேட்டவளிடம் சொன்னான். எதுக்கெடுத்தாலும் சின்ன நொள்ள கெனக்க அழதுக்கிட்டு,ஆம்பள தான ?, என்று அங்கிருந்து போய்விட்டாள்.

வாரத்துக்கு ஒருமுறையாவது  போன்பண்ணுங்கண்ணே அத மிச்சம் பிடிச்சி எங்ககொண்டு போகப் போறிங்க என்று அன்பை உலுக்கிவிடும் நாசர். இப்படி யான எண்கள் எல்லாம் ஒருகாலத்தில்  நெருக் கமாக இருந்து இப்பொழுது  எட்டாத தொலைவுக்கு போயிருந்தது. ”என்னங்க எல்லார்ட் டயுமா சண்ட போட்டீங்க  முன்ன மெல்லாம் நொய்யி நொய்யின்னு போனடிச் சிக்கிட்டே இருக்கும் இப்பென்ன மாசத்து ஒரு போனக்கூட காணும்” என்கிறவளுக்கு மார்க்சைப் பற்றி என்னசொல்ல ? மாற்றம் சாஸ்வதமானது மட்டுமல்ல ரொம்ப  வலிமிகுந்ததும் தான்.

வரிவடிவில் வந்துபோன ஒவ்வொரு எண்ணாகக் கடந்து போகும்போதும் நினைவுகள்  துயர்வடிவில்  கடந்து போனது. சங்கரராமன் சேர்மன் என்றிருந் தது அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பின்னிரவிலும் நிற்காமல் புனுப் புனு வெனப்பெய்த ஒரு  அடைமழை நாள், காரின் கண்ணாடிகளில் வழித்தோடிய நினைவுவந்தது. பாலுசாரின் மாருதி 800 காரும்,அதன் பின் பகுதியில் ஏற்றப் பட்ட சுவரொட்டிகளும், அன்று சூலக்கரை முக்கு ரோட்டில்  விடிய விடியப் பேசிக்கொண்டிருந்ததும்  நினைவுக்கு வந்தது. அத்தோடு கூட மூன்றுநாள்   சங்க அலுவலகத்தில் தோழர்களோடு குழுமிக்கிடந்த நாட்களும் நினைவுக்கு வந்தது.

சின்னவனாக இருக்கும் போது வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பன்றி குட்டி போட்டிருந்தது.அதில் ஒரு குட்டி இரண்டு மரக் கவளிக்கிடையில் சிக்கிக் கொண்டு வீர் வீரென்று கத்திக்கொண்டிருந்தது.குட்டிப்போட்ட பன்னிக்கு பக்கத்தில போகாத வெறிபிடிச்சிக்கடிச்சிறும் என்று அம்மா பயமுறுத்தியதை யும் சட்டை பண்ணாமல்  சிக்கிக் கிடந்த குட்டியையெடுத்து விட்டான். மறு கனம் எங்கிருந்தோ பிடறி சிலிர்த்து ஓடிவந்த தாய்ப்பன்றி  சுருளிச் சாமியை  தூக்கி எறிந்தது.மயங்கி விழுந்து கிடந்தவனை எடுத்துவைத்துக் கொண்டு அலறிப்பிடிச்சி தலையில தலையில அடித்துக்கொடு அழுதாள் அம்மா. அப்போது  பன்றி கடித்த கெண்டைக்கால் தழும்பும் கூடவே நினைவுக்கு வந்தது.

எல்லா எண்களுக்கும் பெயர் இருந்தது. ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் நட்சத்திரக் குறியிருந்தது. அது யாருடை யதாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க சுருளிச்சாமி மறந்து போன மனிதர்கள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் அந்த எண் யாருடையது என்று கண்டுபிடித்து விட்டான். ஒருநாள்  புறவழிச் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டி ருக்கும் போது ஒரு பெண் ஓடிவந்தாள். சார் நீங்க பேங்லதான வேலபாக்கீங்க, சுருளிச்சாமிதான சார். நா பிகாம் படிச்சிருக்கேன்,சும்மாதான் வீட்ல இருக் கேன், ஒங்க பேங்க்ல ஏதாச்சும் வேலை இருந்தாச்சொல்லுங்க,இது எங்க அண்ணன் வீட்டு லேண்ட் லைன்,எம்பேரு சந்த்ரமதி இப்படி  திடுதிப் பென்று பிரசன்னமாகி ஒரு பயோடேட்டாக் கொடுத்து விட்டு மறைந்து போனவளை மறுபடியும் சுருளி பார்க்கவே இல்லை.முகம் கூட மறந்து போனது.அவள் கண்களில் இருந்த கெஞ்சல்,படபடப்பு இன்னும் அப்படியே   சுவடு மாறாமல் நிழலாடுகிறது. அந்தப்பெண்மேல் எந்த ஈடுபாடும்,ஈர்ப்பும் இல்லை. அசரீரி போல திடீரென்றுவந்த அந்தக் கோரிக்கையும், நம்பிக்கையும் அழிக்க முடியா ததாகிவிட்டது.

குட்டி,பேனா வானா என்று இரண்டு பெயர்கள் இருந்தது. ஜெயராஜும், பாலு சாரும்தான் அவை  இரண்டு பெயர்களும். குட்டி வெறும் மூன்று வருடப் பழக்கம் தான். பபுள்கம் மாதிரி அப்படியே ஒட்டிக்கொண்டான். சாயந்திரம்  சைக்கிளை எடுக்கப் போகும்போது அவனிருக்கும் மாடிக்குப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான் சுருளி. போகும் போது யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆட்காட்டி விரலை உயர்த்தி முகத்தை கெஞ்சலாக வைப்பான். ஒருநிமடம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். மறு கணமே அதே ஆள்காட்டி விரலை ஆட்டி நாக்கைத் துருத்தி முறைப்பான். போனால் கொன்னுறுவானாம்.

கீழே இறங்கி ஒரு கோல்டு பில்டரும் ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிக் கொண்டு,  ரெண்டு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு மேலேறும்போது. என்ன ஒரு நானூறு ரூவா கவர்மெண்டுக்கு நட்டமாயிருச்சா,என்னமா டயர்ட்டா  வாரப்பா, வேல பாத்தவன் மாதிரியே இருக்கியே என்பான். நாப்பது ஜுவல் போட்டுருக்கு,துட்ட எண்ணி எண்ணி இங்கரு ரேகை அழிஞ்சி போச்சி,இதுல இன்னைக்கு ஐநூறுரூவா ஷாட் வேற. ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ”பேத்த பேத்த,ஜோக்கடிச்சா சீரியஸ்சாகிறதப்பாரு,எங்க எனக்கு சிகரெட் என்று பைக்குள் விட்டு சிகரெட்டை  எடுத்துக் கொண்டு வாங்க சார் வெளியே என்று தோளில் கைபோட்டு பால்கணிக்கு இழுத்துக்கொண்டு போவான். அவன் அருகாமை சிகரெட் நெடியும்,நிஜாம் பாக்கு நெடியும் கலந்து மணக்கும்.

விடுமுறை நாட்களென்றால் அவனிடமிருந்து போன் வரும். ஏ சோம்பேறி என்ன தூக்கமா மூஞ்சக்கழுவிட்டு ஒடனே  இங்க  வரணும். அவன் இருக் கானா? ரொம்ப பிகு பண்ணுவான்,வந்தாக்கூப்பிட்டு வாங்க இல்ல உட்ருங்க, ஏம்பா இந்தக்காம்ரேட்ஸ் எல்லாமே இப்படித்தானா? என்பான். ரூமுக்குப் போனால் கிரிக்கெட்டைப்பற்றிப்,  பேசு வான்,குஷ்வந்த்சிங் ஜோக் சொல்லு வான், மெக்சிகோ ஜோக்கும் சொல்லுவான். ஏப்பா ஒங்க தலைவர் என்ன இப்படி லூஸ் மாதிரி ஸ்டேட்மெண்ட் விட்ருக்கார். வால்மார்ட் வந்தா எல்லாஞ் செத்தா போவாய்ங்க  என்பான். விவாதமாகும் சூடுபிடிக்கும்.அவன் வந்ததும் இன் னமும் காட்டமாகும்.அவன் சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவான்.

சுருளியும் குட்டியும் பத்துமணி வரைக்கும் சண்டை போடுவார்கள். மனத் தாங்கலோடு  பிரிந்து போவார்கள். ஒரு நாள்தான்  சுருளி அங்கு போக மாட்டான். மறுநாளே அவனிடமிருந்து போன் வரும்  பிச்சிப் பிடுவேன் பிச்சி ஒழுங்கா ஸ்டுடியோவுக்கு வா என்று அன்போடு கடிந்து கொள்வான். சுருளி யால் தட்ட முடியாது. போனதும் ’இந்த இப்படி சீரியஸ்ஸா முகத்த வைக்கா தண்ணே, ஒனக்கு ஒத்து வராது’ என்று கன்னத்தைப்பிடித்து  இணுங்குவான். அவனக்கூப்பிடு, இன்னைக்கு உள் சொட்டர் என்னோடது என்று உசுப்பி விடு வான். அன்று பின்னிரவுவரை பாட்டும், கதையும், விகடமும்ஆகக் கழியும். பனிரெண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடுவரை வந்து விடைபெற்றுக்கொண்டு போவான்.போகும் போது அந்த தெற்றுப்பல் பளீரென்று வசீகரிக்கும்.

மூன்று வருடத்தில் நண்பனாய்,குகனோடு ஐவராய்,பின்னர் தோழனாயும் மாறிப்போனவன், ஒரு  அதிகாலை விபத்தில் பெருங் குரலெடுத்து கதறக்கதற உற்றார் உறவுகளை உலுக்கி எடுத்து விட்டுப்போனான். அதற்கப்புறம் வாசல் வழிக்கடந்து போகும் எல்லா டீவிஎஸ் விக்டர் பைக்கும் அவனது நினைவு களைக் கிளறிக்கொண்டே கடந்து போனது. இதோ ஐந்து வருடங்கள் ஓடிப் போனது. அந்த எண் உபயோகத்திலிருக்கிறதா இல்லையா என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகளும் சிந்தனையும் இல்லாமல்  மூன்று கைப்பேசிகளுக்கு இடம் பெயர்ந்து இன்னும் சுருளியின் நட்புப் பட்டியலில் இருக்கிறது. அந்த எண்ணுக்கான அழைப்பு பாடலாக சிச்சூர் படத்தில் ஜேசுதாஸின் கொரித்தெரா ஹாவுமேராவை ஏற்றி வைத்திருந்தான்.அது குட்டி அடிக்கடி படிக்கும்   ஹிந்திப்  பாடல். இந்த மூன்று வருடத்தில் மட்டுமல்ல இனி மீதமுள்ள நாட்களிலும் அது  ஒலிக்காது. ஆனாலும்  கிட்டத் தட்ட மூடநம்பிக்கை போன்ற இந்த பாதுகாத்தல் சுருளிக்கு சந்தோசமானதாக இருந்தது.  

17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

3.6.12

மெகா சீரியல்களை மிஞ்சும் தொலைக்காட்சி விவாதங்கள்

இன்றிரவு புதிய தலைமுறை விடைதேடும் விவாதங்கள் நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பே மிகவும் நுணுக்கமான உள் நோக்கம் கொண்டது.கருத்து சுதந்திரம் குறித்த சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா இந்த தலைப்பே சார்புத்தன்மை கொண்டது. ஹோஸ்டைல் விட்னெஸ்,லீட் கொஸ்டீன் வகைகளைச்சார்ந்தது இது.

இருந்துதான் தீரும். ஆம் சகிப்புத்தனமை குறைந்து வருகிறது என்று விவாதம் செய்த எல்லோரும் அந்த மக்களுக்கான உரிமைகளை ஒடுக்கு முறைகளை அழிக்கப் போராடுங்கள் அதைவிடுத்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்காதீர் கள் என்கிற தொனி நிறைந்த மையப் புள்ளியிலே தான் நின்று பேசினார்கள். பரமக்குடியில் ஒரு ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தியதற்காக பன்றி யைச் சுட்டுக்கொல்லுகிற மாதிரி சுட்டுக்கொன்றது அரசு. கலப்புத் திருமணத்தை பொறுக்கமாட்டாமல் உயிரோடு எரித்துக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்கியது இந்த தேசத்து உச்சபட்ச நீதி.

இது ஊடகங்களில் வந்தசேதிகள். ஆனால் வராத ஒடுக்குமுறைகள் கோடிக் கணக்கில் கிடக்கிறது. இவற்றையெலாம் ரத்தக் கண்ணீரோடு தினம் தினம் சகித்துக்கொண்டுதான் உழல்கிறது தலித் சமூகம். அப்படித்தான் இந்த கார்ட்டூன் விவகாரத்திலும் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று  ஆசைப் படுகிறது மேட்டுக்குடி அறிவுலகம்.

கிராமங்களில் நடக்கிற அக்கிரமங்களை எதிர்த்துக்கேள்விகேட்டால் அடித்துக் கொல்லப்படுகிற சம்பவங்கள்.அதுகுறித்து புகார் கொடுக்கப் போனால் உயிரைப்பறிகொடுத்தவர்கள் மீதும் பொய்வழக்குகள். யாராவது போய்க்கேட்டால் கீழூருக்கு மேலூரு தாயாப் பிள்ளையாப் பழகிக்கிட்டு இருந்தோம் புதுசாப்படிச்சிட்டு வந்த அகராதி பிடிச்ச பயகளால கலவரமாகிப் போச்சி” என்கிற கருத்துக் கணிப்புவரும். இதே ரீதியில் அனுகப்படும் இந்த விவாதங்களை நாம் இன்னொரு மெகா சீரியல்போலத்தான் கடந்து போகவேண்டியிருக்கிறது.

இது குறித்த விற்பன்னர்களின் கோப்புக்காட்சிகளில் ஊடகவியளாளர் ஞானியின் வாதங்கள் அதிர்ச்சி தருபவையாகவே இருந்தது. அவரும்கூட மெகா சீரியல் கதாநாயகிரேஞ்சுக்குத்தான் கருத்துசொல்லுகிறார்.
இந்தியாவில்  மட்டும் தான் புரட்சி என்கிற சொல்லுக்கு சினிமாக்கதநாயகர்கள் என்று அர்த்தம்.

13.5.12

நாளைமற்றொரு நாளே - விழுமியங்களின் எதிர்முனையிலிருந்து.

மதுரை டவுன்ஹாலில் வினாத்தாள் திருத்த ஆசிரியர்களோடு நடந்து போகையில் எங்கிருந்தாவது ஓடிவந்து ’ ஏ தணுஷ்கோடி எனக்கு ஒரு இருபது ரூபாய் கொடு, நான் சாராயம் குக்கவேண்டும். நீ எனக்குக்கொடுத்துத்தான் தீரவேண்டும். நீ எனக்குக்கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறாய்’ என்று அதட்டலோடு வாங்கிக்கொண்டு போவாராம். எங்கள் ஆசான் எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில் குறைந்த பட்சம் நான்கைந்து தரம்  இந்தக்கதையைக்  கேட்டிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் மிகச்சிறந்த தமிழ்நாவல் களின் பேச்சு வருகிறதோ அப்பொழுதெல்லாம்  அழுக்குச் சட்டையணிந்திருந்த அந்த எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை பற்றிய செய்தி கூடவே பேசப்படும்.

தனது இறுதி நாட்களுக்கு முன் மதுரை வீதிகளில் அலைந்த எழுத்தாளர் ஜி.நாகரஜனைப் பற்றித் தான் எங்கள் ஆசிரியரும் தோழருமான தணுஷ்கோடி ராமசாமி அவர்கள் சொல்லுவார். குறத்தி முடுக்கு,நாளை மற்றொரு நாளே ஆகிய புதினங்கள் படிக்கத்தூண்டும் சுவாரஸ்யத்தின் கூடவே ஒரு பயத்தையும் கொண்டு வந்து சேர்க் கும்.அந்த பயத்தோடே பத்திருபது ஆண்டுகள் ஓட்டி விட்டேன்.சென்ற பதினொன்றாம் தேதி ராமநாதபுரத்து தனிமை என்னை அரண்மனை தொடங்கி செண்ட்ரல் ப்ளாசா வழியே முன்று தரம் அலைய விட்டது.ஏதாவது நான் விரும்புகிற புத்தகம் கிடைக்குமா  என்று அங்கி ருக்கிற அருணா ஸ்டோருக்கு (பெரும்பாலான ஊர்களில் ஸ்டேசனரிக் கடைகள் அருணா ஸ்டோர் என்றே இருக்கிறது) மூன்றாம் முறையாகப் போனேன்.

வாழ்க்கையில் ஜெயிப்பது  எப்படி, இயற்கை வைத்தியம் தொடங்கி எல்லாவைத்தியம்,செட்டிநாட்டுச்சமையல் தொடங்கி சீன நாட்டுவைத்தியம் வரையில்  அடுக்கி வைத்திருந்த புத்தகங்களோடு எக்சைல்,கொற்றவை போன்ற மிரட்டல் புத்தகங்களும் கிடந்து பயமுறுத்தியது. இவற்றின் தலைப்பும் சரி விலையும் சரி சாமன்யனை அருகே  அண்ட விடாது. அங்கு அரிதாக நாளை மற்றொரு நாளே,மாதொருபாகன் இரண்டும் இருந்தது.வாரிக் கொண்டுவந்தேன்.அன்று இரவு இரண்டு முறை மின்சாரம் தடைபட்டுப் போன பின்னும் நாளை மற்ரொரு நாளே புதினத்தை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. எழுத்து அப்படியே இழுத்துக்கொண்டு போனது. எனக்குள்ளிருந்த பயம் எண்பதுகளைக் காட்டிலும் இன்னும்  அதிகமாகி விட்டது.

விளிம்பு மக்களின் வாழ்க்கையை எந்தவித மினுக்கல்களும் இல்லாமல் இயல்பாய் சொல்லவும் முடியும் என்று வரம்புகளைத் தாண்டிக் குதித்திருக்கிறார் ஜி.நாகாராஜன். தனது காதல் மனைவி மீனாவோடு கூடியிருக்கும் போது அனில்களின் கூடல்களையும், யானையின் கூடல்களையும் பேசிச்சிரிக்கும் கந்தன். விகல்பமில்லாமல் அணிகள் மயங்கிக் கிடக்கிற இதே மாதிரி, உனது வாடிக்கையாளர்கள் எவரோடும் மயங்கிக் கிடந்திருக்கிறாயா என்று கேட்கிறான்.அவள் ஒவ்வொருத்தராக விவரிப்பது உலுக்கி எடுக்கிறது.பேச்சியின் வீட்டில் வைத்து தொழில் நடத்துகிற மீனாவிடம் பொய்சொல்லி ரூபாய் வாங்குவது அவளும் அதைக் கண்டும் காணாமல் இருப்பது. ஒரு மதிய வேளையில் தன்னந்தனியே படுத்திருக்கும் கந்தனிடம்  ராக்காயி என்கிற மோகனா வருவதும் வெத்திலை பாக்கு வாங்கிக் கொடுக்கிறமாதிரி மச்சான் கந்தனுக்கு இஞ்சிச் சாராயம்  வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பது வுமாக வாழ்க்கை அவர்களுக்கு எல்லாம் கடந்ததாக இருக்கிறது.

கைப்பிள்ளையோடு வரும் கைம்பொண்,செட்டியாருடைய வைப்பாட்டியான ஆங்கிலோ இந்திய ஐரின், கடைசி யில் கொலைக் குற்றத்துக்கு ஆளாகும் வேளையில் அருகே இருக்கும் அன்னக்கிளி என,எல்லாம் கடந்த பெண் களாகவே கதை நெடுக வருகிறார்கள். இந்த கால் நூற்றாண்டில் படித்த எழுத்துக்களின் வழியே நமக்குள் படிந்து
போன படிமங்கள் ஒவ்வொன்றாய் வந்து நான் எங்கே நான் எங்கே எனத்தேடச் சொல்லுகிறது. காதல் வீரம் கற்பு
லட்சியம் என்கிற அகப்புற இசங்கள் எல்லாவற்றையும் சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய் எனப்புறந்தள்ளிவிட்டு
குடிசைக்குமுன்னாள் இருக்கும் சாக்கடையைத் தாண்டுகிற மாதிரி தாண்டிவிட்டுச்செல்கிறான் கந்தன்.அவன் நடந்து போகிற தெருக்கள்,அவனை ஏற்றிச் செல்லுகிற குதிரைவண்டி எப்பொழுதாவது கடந்து போகிற கார்கள், ஆள்பிடிக்கக் காத்திருக்கிற தியேட்டர்வாசல்,கட்சிமாநாட்டுக்கு வந்து போகிற மனிதர்கள்,லட்ஜின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அரசியல் பேசும் மனிதர்கள் என மதுரையைப் புரட்டிப்போட்டு வரை படம் வரைந்து தந்திருக்கிறார் இந்த நாவலில். 

லாட்ஜில் காத்திருக்கும் பார்ட்டியிடம் தகிடுதத்தம் செய்து ஐம்பது ரூபாய் சம்பாதிப்பது. ஐரினையும் செட்டியாரை யும் வெட்டி விட்டு தரகுபார்ப்பது. கைம்பொண்டாட்டியை விலைபேசி அனுப்புவது சாக்கனாக் கடைக்காரனுக்கு உதவுவது என எல்லா காரியங்களும் தர்மஞாயங்களின் வாடையடிக்காத காரியங்களாகவே வாய்க்கிறது கந்தனுக்கு. அதுவெல்லாம் கூட இருத்தலின் பொருட்டு என்று சமாதானப் படுத்திக்கொண்டாலும் சுகவீனப்பட்டு கிடக்கிற தனது சொந்தக் குழந்தையை இறந்து போகிற வரை இயல்பாக்கி விடுவது நிறைய்ய எதிர்ப்பார்ப்பையும் அதிர்ச்சியையும் தரும் தருணம்.

இவ்வளவு  அதிர்ச்சியை வைத்திருக்கிற கதை அதற்கு ஈடாக பக்கம் பக்கமாய் எள்ளல்களையும் அடைத்து வைத்திருக்கிறது. செட்டியார்  செத்துப்போனதும்  வளர்ந்து வந்த அவரது தொப்பை வெடித்துத்தான் செத்திருப்பார் என்று சனங்கள் நினைத்திருக்கக் கூடும் என்று படிக்கும் போது சிரிக்காமல் இருக்கமுடியாது. அவர் நடத்துகிற காய்கறி மண்டியில் வெளிநாட்டுக் காய்கறிகளை அறிமுகப்படுத்தும்போது முள்ளங்கியில் பாதரசமும் கோசில் சுண்ணாம்பும் இருக்கிறது எடுத்துப் போங்கண்ணே என்று சொல்வாராம் இப்படியே போனால் பீட்ரூட்டில்  அலு மினியமும் காலிப்ளவரில் தங்கமும் கிடைக்கும் என்று சொல்லலாமாம். இன்னொரு முறை ஒருவன் கந்தனிடம் அறிவார்ந்து பேசுவதுபோல  அண்ணே இத்தனை தவறுகள் செய்கிறீர்களே அதற்கு என்ன காரணம் தெரியுமா வறுமை தானே என்று ஒருவன் கேட்பான் அதற்கு ’கொழுப்புத்தான்’ என்று கந்தன் பதில் சொல்லுவான்.

இருந்தாலும் படித்து முடித்த பிறகு கந்தனின் சில்க் ஜிப்பாவும் அவன்மறைத்து வைத்திருக்கிற சூரிக்கத்தியும் வாடிக்கையாளர்களிடம் சந்தோசமாக இருந்த தாகப்பாவித்துவிட்டு  கந்தனுடன் இறுக்கமாக இருக்கும் மீனாவும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை விட்டு ஓடிப்போன மகன் சந்திரனின் நினைவுகளோடு கூடிய அவர்களின் துயர் நிறைந்த வாழ்வும் நெருடிக் கொண்டே இருக்கும்.

22.4.12

வலைப்பதிவர் அறிமுகம்


சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.

தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.

ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.
அப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.

வரவேற்போம்.

அவரது வலை விலாசம்

www.denilantony.blogspot.in