Showing posts with label காடு. Show all posts
Showing posts with label காடு. Show all posts

5.9.10

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.


ஒரு ஆர்வத்தில் கூகுளில் தேடியபோது தென்பட்டது புதைந்து கிடக்கிற ஆச்சரியங்கள்.கதைகளால் மண்மூடிப்போன கனிம வளங்கள். அதுவும் எனது தேசத்தில்.தொழில் நுட்பம் விரல் நுனியில் உலகைக் கொண்டுவருகிற இந்தக் காலத்திலேயே இருட்டடிப்பு நடந்தால் மன்னராட்சிக் காலத்தில் என்னென்னவெல்லாம் புதைக்கப்பட்டிருக்கும்.இது அரசியலுக்கு அப்பாற்பட்ட என்தேசத்தின் இயற்கை பற்றிய செய்தி. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.


92500 சதுர கிலோமீட்டர்கள் விரிந்துகிடக்கும் அந்த மலைப்பகுதிகளில்தான் லட்சக்கணக்கான மரம் செடிகொடிகள் வாழ்ந்து வருகிறது.இந்தியாவின் தட்ப வெப்ப சமன்பாட்டை பாதுகாக்கிற மிகப்பெரிய பசுமைப் பிரதேசம். அங்குதான் மஹாநதி மற்றும் கோதாவரி நதிகள் ஊற்றெடுத்து சமப்பரப்புக்கு ஓடிவருகிறது.அங்குதான் அள்ளஅள்ளக் குறையாத இந்த தேசத்தின் மாசுபடாக் கனிம வளங்கள் கிடக்கிறது.இரும்புத் தாதுக்களும்,பாக்சைட் நிலக்கரி வளமும் இன்னமும் சொல்லப்படாத கனிம வளங்களும் கிடைக்கிறது. மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தண்டகாரண்யத்தில்  புதைந்து கிடக்கிற 1.1 பில்லியன் டன் இரும்புத்தாது தான் இந்தப் பூமிப்பந்தில் கிடைக்கிற ஆகப் பெரிய இரும்பு வளம்.அதுவும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதை சாமான்யன் அல்ல ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஏற்பாடு இங்கிருக்கிறது.

இதை சாட்டிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிநாடுகள் கண்டுபிடித்துவிட்டன.இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நமக்குத்தெரியாததை அவன் கண்டுபிடித்துவிட்டான்.வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான்.அப்றம் அங்கிருக்கிற முதலீட்டாளர்களின் கண்களை அது உறுத்திவிட்டது. இத்தனை யுகங்கள் மனிதக்காலடி படாமல் கிடந்த அந்தப்பகுதியில் கிடைக்கிற  கனிம வளங்களை வெட்டி எடுத்து உலகத்துக்கு விநியோகிப்படுவதை அரசும் ஊடகங்களும் சொல்லவில்லை.சொல்லப்போவதும் இல்லை. சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள் எந்த ஒப்பந்தமாவது மக்களைக்கேட்டுப்போடப்படிருக்கிறதா என்ன ?.அதற்கு அவசியமுமில்லை.

முன்னதாக அந்த கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை ஊளை மோர் விலைக்கு விற்றுவிட்டார்கள். அப்படி விற்றதொன்றும் தரிசு நிலமோ,இல்லை ஒரு தனிநபருக்குச் சொந்தமான விலை நிலமோ இல்லை.லட்சக்கணக்கான மலைமக்கள் வாழ்ந்து வருகிற வனப் பகுதி.எஸ்ஸார் என்கிற அந்நிய நிறுவனம் 2005 ஆம் ஆண்டே மத்திய இந்தியாவில் உள்ள அந்த பலைடல்டா மலைப்பகுதியில் ஒரு இரும்புத்தாது வெட்டியெடுக்கும் தொழிற்சாலையை நிறுவிவிட்டது.அங்கிருந்து மும்பைக்கு இரும்புக் கனிமத்தைக் கடத்திக்கொண்டுவர 267 (திருநெல்வேலியிலிருந்து திருச்சி வரையான தூரம்.பேருந்தில் போனால் ஐந்து மணிநேராப் பயணதூரம்)கிலோமீட்டர் நீளத்துக்கு  குழாய்கள் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.




வெள்ளைக்காரன் ஆண்ட நாட்களில் வெட்டிக்கொண்டுபோன நமது விலையுயரப்பெற்ற மரங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.அதன் பிறகும் நமது கொள்ளைக்காரர்கள் வெட்டியெடுத்தவையும் அப்படியே.அதையெல்லாம் சரிசெய்ய அங்கே நூற்றுக் கணக்கான சிறு இயக்கங்கள் இருக்கின்றன. பசுமை இயக்கங்கள்.இதுவரை லட்சோப லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வந்திருக்கின்றன.அவற்றைச் செய்பவர்கள் இயற்கை ஆர்வளர்கள்,காந்திய வாதிகள், விவசாயிகள், காட்டுப்பற்றாளர்கள், அறிவுஜீவிகள்,அறிவியல் வல்லுநர்கள்.அவர்களின் இந்த இயற்கைப் புணரமைப்பு வேலைகளை யெல்லாம் தூக்கிக்கடாச வருகிறது ஜப்பான்,சீனா ஆகிய நாடுகளின் பொக்லைன் எந்திரங்கள்.

ஒரு மரம் வெறும் இலையல்ல,
ஒருமரம் வெறும் கனியல்ல,
ஒருமரம் வெறும் பூவல்ல,
ஒருமரம் வெறும் கூடுகட்டும் இடமல்ல
கூடவே மனிதகுலத்துக்கான
ஆக்சிஜனை அள்ளிக்கொடுக்கும்
ஜீவ விருட்சம் அது.
மரம் செடி கொடிகள் இல்லாத மண்
தரிசெனச் சொல்லப்படும்.
மரம் செடிகொடிகள் இல்லாத மண்
உயிர்கள் வாழத் தகுதியற்றதாகப்படும்.
 மரம்இல்லாத மண்திங்கள் செவ்வாய்
புதனெனும் வெற்றுருண்டைகளாகும்.

ஒரே ஒரு மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகக்கலகம் செய்ததாக விடுதலை வரலாறுகள் இருக்கின்றன.ஆனால் ஆயிரக்கனக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிய கிளம்பிவருகிறது அந்நிய முதலீட்டாளர்களின் எந்திரக் கைகள்.அதற்கு ஒத்து ஊதுவது தான் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்.அவை வேரோடு பிடுங்கப்போவது மரங்களையும்,கனிம வளங்களை மட்டும் இல்லை இந்தியாவின் சீதோஷ்ணத்தயும் சேர்த்துத்தான்.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படிக்க ஆரம்பித்ததும் அதில் வருகிற தகவல்களும்,தரவுகளும் இந்திய நிலப்பரப்புகளோடு நம்முன் காட்சியாகிறது.


நன்றி: விக்கிப்பீடியா,வெப் இமேஜ்,