Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

3.1.16

சமம்




சமம் என்பது துரதிஷ்டவசமானது.
சமம் என்ற சொல்லுக்கு இணையான
அல்லது மாற்றுச்சொல் காணக்கிடைக்கவில்லை.
சமம் என்பது அதே போல் அல்லது
அதற்கு இணையான என்று பொருள் கொள்ளலாம்.
இணையான என்பதை அளவை,தொகை,எண்ணிக்கை,
மதிப்பு,தரம்,பட்டம் என்ற மதிப்பீடுகளில் ஒப்பிடலாம்.
இந்த மதிப்பீடுகள் பௌதீக மற்றும் கணித இலக்கணங்களுக்கு வேண்டுமானால் துள்ளியப்படலாம் இந்த மதிப்பீடுகளை
மனித உயிர்களுக்கு ஒரு போதும் இலக்கணப்படுத்தமுடியாது.

27.12.15

கருப்புக்கவிதைகள்



 1

கருப்புக்காதல்
---------------------
கருப்புக்காதல்
தொகுப்பிலிருந்து
பெயரிடப்படாத
ஒரு கருப்புக்கவிஞனின்
வெறுப்புப்பாடல்

நன்றி.
black poems

0
நேர்த்தி ஒருபோதும் நேர்த்தி இல்லை,
உண்மை என்னவெனில்
நானெப்போதும் நேர்த்தி இல்லை.
தவறுகளால் கட்டமைக்கப்பட்டவன் நான்.

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்
அவர்களிலும் நேர்த்தியானவனாகவும்
சிகப்பே புதிய கருப்பாவது போல
வேற்றுமை தான் நிஜ உலகம்.

நான் எப்படி இருப்பதெனவும்
நான் யார்போல இருப்பதெனவும்
நான் மட்டுமே முடிவெடுக்கமுடியும்.

நான் பிறர்போல் நடிக்கமுடியாது
மன்னிக்கவும்
என்னிடம் இல்லாத நேர்த்தியை
இருக்கிறதென்று ஒருநாளும்
என்னால் நடிக்கவே முடியாது.
0

2

கடவுளுக்கும் பிடித்த நிறம்
------------------------------------------------

சத்தியமான உலக அழகி
இரவின் வண்ணம் குழைந்தவள்
சுருள்சுருளான கேசம் அணிந்தவள்
உயர்ந்த தோள்களும் தாழ்ந்த புன்னகையும் படைத்தவள்
அவள் தான்சானியாவிலிருந்து வருகிறாள்
அவளே ஆண்களின் ஆதித்தாய்.

தேனின் நிறம்பெற்றவர்களே தேவதைகள்
அவர்கள் அலபாமாவினின்று வருகிறார்கள்
பசிய கண்களும் தடித்த அதரங்களும்
அகன்ற நாசியும் அதுபோன்றே இடையும் கொண்ட
அவர்கள் சூரியன் உறங்கும் போது
உருவெடுத்த வண்ணம் பூசியவர்கள்
அவர்களின் வளைவுகளை வடிக்கும் போது மட்டும்
கடவுளுக்கு கைநடுங்கவில்லை.

ஆகவே அழகிய கருப்புத்தான்
கடவுவுளுக்கு பிடித்த நிறம்

அழகிய கவிதையின் சொந்தக்காரி
ஆதி அழகின் சொந்தக்காரி

அன்புக்கருப்பி
-திமோத்தி.n.ஸ்டெல்லி







0
3



இது ஒரு கருப்புக்கவிதை.
ஆப்ரிக்க - அமேரிக்க கவிஞனின் வேதனை ஊற்றி எழுதப்பட்டவரிகள்.
கவிஞனின் பெயர் தெரியவில்லை.ஆனாலும் அந்த வலி
எல்லாக்கருப்பின மக்களின்பெயரையும் ஓங்கி உச்சரிக்கிறது

being a black at work place

எனது அன்பை பலஹீனமாக எடுத்துக்கொண்டார்கள்
எனது அமைதியை ஊமைத்தனமென்றார்கள்
எனது தனித்தன்மையை புரியாதபுதிரென்றார்கள்
எனது மொழியை வட்டாரவழக்கென்றார்கள்
எனது உறுதியை மூர்க்கமென்றார்கள்
எனது சிறிய தவறுகளுக்காக என்னை வீழ்த்தினார்கள்
எனது வெற்றியை விபத்தென்று உருவகப்படுத்தினார்கள்
எனது புத்திக்கூர்மையை என்வேலையாகக்குறுக்கினார்கள்
எனது கேள்விகளை என் அறியாமை என்று அறிவித்தார்கள்
எனது முன்னேற்றத்தை தகாதகுறுக்குவழி என்றார்கள்

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

21.6.12

வலி மிகுந்த மாற்றம்.

கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த  எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த  மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற  நேரம்,  வண்டி யோட்டுகிற நேரம்,தூங்குகிற நேரங்களில் போன்பேச இயலாது என்கிற சிந்தனை இல்லாமல்  கோபித்துக் கொள்ளுகிற சுந்தரலிங்கண்ணன். சுந்தரலிங்கண்ணன் வாடிக்கையாக ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போன் பண்னுவார். எடுக்காவிட்டால் மறுபடியும் மறுபடியும் அழைப்புமணி அடிக்கும். எடுத்து விட்டால் எலே  சின்னப் பயலே உனக்கு அவ்வ்ளோ திமிராலே என்று தொடங்கி குறைந்தது அரை மணி நேரம் பேசுவார்.  தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகுட்டிகள் எழுந்து விடும். அவளுக்கானால் ரொம்ப நாளாச் சந்தேகம்  வேறு.  ”அர்த்த ராத்திரியில் அப்படி ஆம்பளக்கி ஆம்பள என்ன பேசுவீங்க”  பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.

எங்கப்பா போன?, அவனும் போன எடுக்கமாட்டுக்கான், நீயும் எடுக்கமாட்டுக்க என்று எடுத்ததும் கோபத்தை மட்டுமே வணக்கமாகச் சொல்லும் சன்முகண் ணாச்சி. சுருளி எடுக்காமல்போய் அவள் எடுத்துவிட்டாள் மிகவும் பரிவோடு குசலம் விசாரிப்பார். பிள்ளைகளைப் பற்றிக் கேட்பார். இந்த ஒரு வருடத்தில் ரெண்டே ரெண்டுதரம் மட்டுமே அவரிடமிருந்து போன் வந்திருந்தது. பல முறை அழைத்தும் எடுக்காமல் ஒரு நாள் எடுத்து  என்னப்பா, சீக்கிரம் சொல்லு என்றார். எப்படிண்ணே இருக்கீங்க என்று கேட்டான். இருக் கேன் இருக்கேன் வையி என்று மறுமுனை கட்டானது. படபடவெனக் கண்ணீர் வந்து தொலைத்துவிட்டது. என்ன ஏதென்று கேட்டவளிடம் சொன்னான். எதுக்கெடுத்தாலும் சின்ன நொள்ள கெனக்க அழதுக்கிட்டு,ஆம்பள தான ?, என்று அங்கிருந்து போய்விட்டாள்.

வாரத்துக்கு ஒருமுறையாவது  போன்பண்ணுங்கண்ணே அத மிச்சம் பிடிச்சி எங்ககொண்டு போகப் போறிங்க என்று அன்பை உலுக்கிவிடும் நாசர். இப்படி யான எண்கள் எல்லாம் ஒருகாலத்தில்  நெருக் கமாக இருந்து இப்பொழுது  எட்டாத தொலைவுக்கு போயிருந்தது. ”என்னங்க எல்லார்ட் டயுமா சண்ட போட்டீங்க  முன்ன மெல்லாம் நொய்யி நொய்யின்னு போனடிச் சிக்கிட்டே இருக்கும் இப்பென்ன மாசத்து ஒரு போனக்கூட காணும்” என்கிறவளுக்கு மார்க்சைப் பற்றி என்னசொல்ல ? மாற்றம் சாஸ்வதமானது மட்டுமல்ல ரொம்ப  வலிமிகுந்ததும் தான்.

வரிவடிவில் வந்துபோன ஒவ்வொரு எண்ணாகக் கடந்து போகும்போதும் நினைவுகள்  துயர்வடிவில்  கடந்து போனது. சங்கரராமன் சேர்மன் என்றிருந் தது அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பின்னிரவிலும் நிற்காமல் புனுப் புனு வெனப்பெய்த ஒரு  அடைமழை நாள், காரின் கண்ணாடிகளில் வழித்தோடிய நினைவுவந்தது. பாலுசாரின் மாருதி 800 காரும்,அதன் பின் பகுதியில் ஏற்றப் பட்ட சுவரொட்டிகளும், அன்று சூலக்கரை முக்கு ரோட்டில்  விடிய விடியப் பேசிக்கொண்டிருந்ததும்  நினைவுக்கு வந்தது. அத்தோடு கூட மூன்றுநாள்   சங்க அலுவலகத்தில் தோழர்களோடு குழுமிக்கிடந்த நாட்களும் நினைவுக்கு வந்தது.

சின்னவனாக இருக்கும் போது வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பன்றி குட்டி போட்டிருந்தது.அதில் ஒரு குட்டி இரண்டு மரக் கவளிக்கிடையில் சிக்கிக் கொண்டு வீர் வீரென்று கத்திக்கொண்டிருந்தது.குட்டிப்போட்ட பன்னிக்கு பக்கத்தில போகாத வெறிபிடிச்சிக்கடிச்சிறும் என்று அம்மா பயமுறுத்தியதை யும் சட்டை பண்ணாமல்  சிக்கிக் கிடந்த குட்டியையெடுத்து விட்டான். மறு கனம் எங்கிருந்தோ பிடறி சிலிர்த்து ஓடிவந்த தாய்ப்பன்றி  சுருளிச் சாமியை  தூக்கி எறிந்தது.மயங்கி விழுந்து கிடந்தவனை எடுத்துவைத்துக் கொண்டு அலறிப்பிடிச்சி தலையில தலையில அடித்துக்கொடு அழுதாள் அம்மா. அப்போது  பன்றி கடித்த கெண்டைக்கால் தழும்பும் கூடவே நினைவுக்கு வந்தது.

எல்லா எண்களுக்கும் பெயர் இருந்தது. ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் நட்சத்திரக் குறியிருந்தது. அது யாருடை யதாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க சுருளிச்சாமி மறந்து போன மனிதர்கள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் அந்த எண் யாருடையது என்று கண்டுபிடித்து விட்டான். ஒருநாள்  புறவழிச் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டி ருக்கும் போது ஒரு பெண் ஓடிவந்தாள். சார் நீங்க பேங்லதான வேலபாக்கீங்க, சுருளிச்சாமிதான சார். நா பிகாம் படிச்சிருக்கேன்,சும்மாதான் வீட்ல இருக் கேன், ஒங்க பேங்க்ல ஏதாச்சும் வேலை இருந்தாச்சொல்லுங்க,இது எங்க அண்ணன் வீட்டு லேண்ட் லைன்,எம்பேரு சந்த்ரமதி இப்படி  திடுதிப் பென்று பிரசன்னமாகி ஒரு பயோடேட்டாக் கொடுத்து விட்டு மறைந்து போனவளை மறுபடியும் சுருளி பார்க்கவே இல்லை.முகம் கூட மறந்து போனது.அவள் கண்களில் இருந்த கெஞ்சல்,படபடப்பு இன்னும் அப்படியே   சுவடு மாறாமல் நிழலாடுகிறது. அந்தப்பெண்மேல் எந்த ஈடுபாடும்,ஈர்ப்பும் இல்லை. அசரீரி போல திடீரென்றுவந்த அந்தக் கோரிக்கையும், நம்பிக்கையும் அழிக்க முடியா ததாகிவிட்டது.

குட்டி,பேனா வானா என்று இரண்டு பெயர்கள் இருந்தது. ஜெயராஜும், பாலு சாரும்தான் அவை  இரண்டு பெயர்களும். குட்டி வெறும் மூன்று வருடப் பழக்கம் தான். பபுள்கம் மாதிரி அப்படியே ஒட்டிக்கொண்டான். சாயந்திரம்  சைக்கிளை எடுக்கப் போகும்போது அவனிருக்கும் மாடிக்குப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான் சுருளி. போகும் போது யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆட்காட்டி விரலை உயர்த்தி முகத்தை கெஞ்சலாக வைப்பான். ஒருநிமடம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். மறு கணமே அதே ஆள்காட்டி விரலை ஆட்டி நாக்கைத் துருத்தி முறைப்பான். போனால் கொன்னுறுவானாம்.

கீழே இறங்கி ஒரு கோல்டு பில்டரும் ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிக் கொண்டு,  ரெண்டு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு மேலேறும்போது. என்ன ஒரு நானூறு ரூவா கவர்மெண்டுக்கு நட்டமாயிருச்சா,என்னமா டயர்ட்டா  வாரப்பா, வேல பாத்தவன் மாதிரியே இருக்கியே என்பான். நாப்பது ஜுவல் போட்டுருக்கு,துட்ட எண்ணி எண்ணி இங்கரு ரேகை அழிஞ்சி போச்சி,இதுல இன்னைக்கு ஐநூறுரூவா ஷாட் வேற. ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ”பேத்த பேத்த,ஜோக்கடிச்சா சீரியஸ்சாகிறதப்பாரு,எங்க எனக்கு சிகரெட் என்று பைக்குள் விட்டு சிகரெட்டை  எடுத்துக் கொண்டு வாங்க சார் வெளியே என்று தோளில் கைபோட்டு பால்கணிக்கு இழுத்துக்கொண்டு போவான். அவன் அருகாமை சிகரெட் நெடியும்,நிஜாம் பாக்கு நெடியும் கலந்து மணக்கும்.

விடுமுறை நாட்களென்றால் அவனிடமிருந்து போன் வரும். ஏ சோம்பேறி என்ன தூக்கமா மூஞ்சக்கழுவிட்டு ஒடனே  இங்க  வரணும். அவன் இருக் கானா? ரொம்ப பிகு பண்ணுவான்,வந்தாக்கூப்பிட்டு வாங்க இல்ல உட்ருங்க, ஏம்பா இந்தக்காம்ரேட்ஸ் எல்லாமே இப்படித்தானா? என்பான். ரூமுக்குப் போனால் கிரிக்கெட்டைப்பற்றிப்,  பேசு வான்,குஷ்வந்த்சிங் ஜோக் சொல்லு வான், மெக்சிகோ ஜோக்கும் சொல்லுவான். ஏப்பா ஒங்க தலைவர் என்ன இப்படி லூஸ் மாதிரி ஸ்டேட்மெண்ட் விட்ருக்கார். வால்மார்ட் வந்தா எல்லாஞ் செத்தா போவாய்ங்க  என்பான். விவாதமாகும் சூடுபிடிக்கும்.அவன் வந்ததும் இன் னமும் காட்டமாகும்.அவன் சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவான்.

சுருளியும் குட்டியும் பத்துமணி வரைக்கும் சண்டை போடுவார்கள். மனத் தாங்கலோடு  பிரிந்து போவார்கள். ஒரு நாள்தான்  சுருளி அங்கு போக மாட்டான். மறுநாளே அவனிடமிருந்து போன் வரும்  பிச்சிப் பிடுவேன் பிச்சி ஒழுங்கா ஸ்டுடியோவுக்கு வா என்று அன்போடு கடிந்து கொள்வான். சுருளி யால் தட்ட முடியாது. போனதும் ’இந்த இப்படி சீரியஸ்ஸா முகத்த வைக்கா தண்ணே, ஒனக்கு ஒத்து வராது’ என்று கன்னத்தைப்பிடித்து  இணுங்குவான். அவனக்கூப்பிடு, இன்னைக்கு உள் சொட்டர் என்னோடது என்று உசுப்பி விடு வான். அன்று பின்னிரவுவரை பாட்டும், கதையும், விகடமும்ஆகக் கழியும். பனிரெண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடுவரை வந்து விடைபெற்றுக்கொண்டு போவான்.போகும் போது அந்த தெற்றுப்பல் பளீரென்று வசீகரிக்கும்.

மூன்று வருடத்தில் நண்பனாய்,குகனோடு ஐவராய்,பின்னர் தோழனாயும் மாறிப்போனவன், ஒரு  அதிகாலை விபத்தில் பெருங் குரலெடுத்து கதறக்கதற உற்றார் உறவுகளை உலுக்கி எடுத்து விட்டுப்போனான். அதற்கப்புறம் வாசல் வழிக்கடந்து போகும் எல்லா டீவிஎஸ் விக்டர் பைக்கும் அவனது நினைவு களைக் கிளறிக்கொண்டே கடந்து போனது. இதோ ஐந்து வருடங்கள் ஓடிப் போனது. அந்த எண் உபயோகத்திலிருக்கிறதா இல்லையா என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகளும் சிந்தனையும் இல்லாமல்  மூன்று கைப்பேசிகளுக்கு இடம் பெயர்ந்து இன்னும் சுருளியின் நட்புப் பட்டியலில் இருக்கிறது. அந்த எண்ணுக்கான அழைப்பு பாடலாக சிச்சூர் படத்தில் ஜேசுதாஸின் கொரித்தெரா ஹாவுமேராவை ஏற்றி வைத்திருந்தான்.அது குட்டி அடிக்கடி படிக்கும்   ஹிந்திப்  பாடல். இந்த மூன்று வருடத்தில் மட்டுமல்ல இனி மீதமுள்ள நாட்களிலும் அது  ஒலிக்காது. ஆனாலும்  கிட்டத் தட்ட மூடநம்பிக்கை போன்ற இந்த பாதுகாத்தல் சுருளிக்கு சந்தோசமானதாக இருந்தது.  

17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

3.6.12

மெகா சீரியல்களை மிஞ்சும் தொலைக்காட்சி விவாதங்கள்

இன்றிரவு புதிய தலைமுறை விடைதேடும் விவாதங்கள் நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பே மிகவும் நுணுக்கமான உள் நோக்கம் கொண்டது.கருத்து சுதந்திரம் குறித்த சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா இந்த தலைப்பே சார்புத்தன்மை கொண்டது. ஹோஸ்டைல் விட்னெஸ்,லீட் கொஸ்டீன் வகைகளைச்சார்ந்தது இது.

இருந்துதான் தீரும். ஆம் சகிப்புத்தனமை குறைந்து வருகிறது என்று விவாதம் செய்த எல்லோரும் அந்த மக்களுக்கான உரிமைகளை ஒடுக்கு முறைகளை அழிக்கப் போராடுங்கள் அதைவிடுத்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்காதீர் கள் என்கிற தொனி நிறைந்த மையப் புள்ளியிலே தான் நின்று பேசினார்கள். பரமக்குடியில் ஒரு ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தியதற்காக பன்றி யைச் சுட்டுக்கொல்லுகிற மாதிரி சுட்டுக்கொன்றது அரசு. கலப்புத் திருமணத்தை பொறுக்கமாட்டாமல் உயிரோடு எரித்துக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்கியது இந்த தேசத்து உச்சபட்ச நீதி.

இது ஊடகங்களில் வந்தசேதிகள். ஆனால் வராத ஒடுக்குமுறைகள் கோடிக் கணக்கில் கிடக்கிறது. இவற்றையெலாம் ரத்தக் கண்ணீரோடு தினம் தினம் சகித்துக்கொண்டுதான் உழல்கிறது தலித் சமூகம். அப்படித்தான் இந்த கார்ட்டூன் விவகாரத்திலும் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று  ஆசைப் படுகிறது மேட்டுக்குடி அறிவுலகம்.

கிராமங்களில் நடக்கிற அக்கிரமங்களை எதிர்த்துக்கேள்விகேட்டால் அடித்துக் கொல்லப்படுகிற சம்பவங்கள்.அதுகுறித்து புகார் கொடுக்கப் போனால் உயிரைப்பறிகொடுத்தவர்கள் மீதும் பொய்வழக்குகள். யாராவது போய்க்கேட்டால் கீழூருக்கு மேலூரு தாயாப் பிள்ளையாப் பழகிக்கிட்டு இருந்தோம் புதுசாப்படிச்சிட்டு வந்த அகராதி பிடிச்ச பயகளால கலவரமாகிப் போச்சி” என்கிற கருத்துக் கணிப்புவரும். இதே ரீதியில் அனுகப்படும் இந்த விவாதங்களை நாம் இன்னொரு மெகா சீரியல்போலத்தான் கடந்து போகவேண்டியிருக்கிறது.

இது குறித்த விற்பன்னர்களின் கோப்புக்காட்சிகளில் ஊடகவியளாளர் ஞானியின் வாதங்கள் அதிர்ச்சி தருபவையாகவே இருந்தது. அவரும்கூட மெகா சீரியல் கதாநாயகிரேஞ்சுக்குத்தான் கருத்துசொல்லுகிறார்.
இந்தியாவில்  மட்டும் தான் புரட்சி என்கிற சொல்லுக்கு சினிமாக்கதநாயகர்கள் என்று அர்த்தம்.

19.4.12

எதைத் தேடுகிறது நீதியின் தராசு ? ( எஸ். வி. வேணுகோபாலன் )

கைக்குழந்தைகளும் பெண்களும்
அய்யகோ என்று
அலறிய சத்தம்
பெருகிய குருதி
சாதிய வெறியோடு
சாய்க்கப்பட்ட உடல்களும்
மாய்க்கப்பட்ட உயிர்களும்
எல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது
நீதியின் மேடையிலிருந்து

அடங்காத ஆண்டைகளின்
அடியாட்கள் கும்பல் வெளியேறுகிறது
வெற்றிப் புன்னகையோடு சிறைகளிலிருந்து

சாட்சியங்கள் போதவில்லையாம்

காலகாலமான வன்கொடுமைக்கும்
தீண்டாமைக்கும்
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்
உறைந்து போன இரத்தத்தின் மீதே
நிறைந்து பெருகும் புதிய குருதியும்
சரிந்த இதயங்களும்
குலைந்தே போன நம்பிக்கைகளும்
பற்றுறுதியும் இன்ன பிறவுமாய்
தேசத்தின் சேரிகளெங்கும்  
பரவி விரவி இருக்கும் காட்சிகளுக்குச்
சாட்சிகளாய்
கையாலாகாத அரசுகளே இருக்க

வேறெதைத் தேடுகிறது நீதியின் தராசு,
வெறித்துப் போன தெருக்களில்
பொறித்திருக்கும் சாதிய வன்மத்தின்
தடயங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ?

***********

1996 ஜூலை 11 அன்று பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பெதானி தோலா என்ற கிராமத்தில் நிலச் சுவான்தார்களின் ரணவீர் சேனை என்றழைக்கப் படும் குண்டர்படை தலித் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், கைக் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

 பெரிய முயற்சிகளுக்குப் பிறகு மறு நாள் பதிவு செயயப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நீண்ட நெடிய வழக்கு இவற்றுக்குப் பிறகு ஆரா செஷன்ஸ் நீதிமன்றம் மே 2010 ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனையும், மீதி இருபது பேருக்கு வெவ்வேறு கால அளவில்  சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல் முறையீட்டை அடுத்து,  ஏப்ரல் 16, 2012 அன்று  பாட்னா உயர்நீதிமன்றம்,  'குறைபாடுள்ள சாட்சியங்கள்' என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
அத்தனை பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டது.

 0
கவிதையும்,தகவலும்,கோபமும் 
தோழர். எஸ் . வி .வேணுகோபாலன்

16.4.12

காவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.

அந்த ஊருக்கு ஏழெட்டுப்பாதைகள் இருப்பதுபோலவே அதனோடு எனக்கும் ஏழெட்டு வகையான உணர்வுகள் இருக்கிறது. அது எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவிலிருக்கிறது.அங்கிருந்துதான் பேருந்திலேறி அயலூர்களுக்குப்போகவேண்டும். ஒவ்வொருமுறை நடந்துபோகும் போதும் இடையிலே வந்துபோகும் காடு கட்டாயம் ஒரு கதை வைத்திருக்கும்.கோடை காலமான இந்த தை முதல் ஆடிவரையிலான காலங்களில் அது செக்கச் செவே லென விரித்துக் கிடக்கும் பெரிய்ய பாய்போல இருக்கும்.ஆடியில் விதைக்க ஆரம்பித்ததும் நிலக் கடலை,பாசிப்பயறு,கம்புசோளம்,குதிரைவாலி இப்படியான பலவகை செடிகள் நிறைந்த பச்சைமரகதப் போர்வை யாகிவிடும்.வெறும் கரட்டான்களும்,சில்லான்களும் ஓடித்திரிந்த அந்த செவக்காட்டில் ஒரு நூறுவகை பூச்சி புழுக்கள் பறவைகள் வந்துசேரும்.வண்ணத்துப் பூச்சிகளையும்,ரயில்தட்டாம்பூசிகளையும் பிடிக்க கைவிரல் களைக்குவித்துக்கொண்டு அதன் பின்னாடி அலைந்த காலம் முதல்,அணில் ஆபீசுக்கு வேலைக்குப் போகும் அவளைத் தொடர்ந்து நடந்த காலங்கள் வரை இன்னும் பசேலென அப்பிக் கிடக்கிறது செவக்காட்டு நினைவுகள்.

பிஞ்சைகள் பூக்க ஆரம்பித்ததும் இரண்டு ஊருக்கும் இடையில் காவல் பரண் கட்டப்படும். அதிலேறிக்கொண்டு பார்த்தால் நான்கு ஊர்களின் காடுகளும் தெரியும்.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்து பெரியாம்பளைகள் தான் காவல்காரராக இருப்பார்கள்.அப்போதெல்லாம் மதியக்கஞ்சி கொண்டுபோக நான் நீ என்று போட்டி வரும். என்னை மட்டும் வரவேண்டாம் என்று கண்டிப்பார் தாத்தா. காரணம் உண்டு. நான் தனியே போனதில்லை குறைந்தது மூன்றுபேராவது போவோம்.அப்புறம் எங்கள் வீட்டின் மற்ற பிள்ளைகளைப் போல நான் அவரது காவல் கம்புக்கும் மீசைக்கும் பயப்படுவதில்லை.சாயங்காலம் வீடுதிரும்பும்போது என்னால் அவருக்கொரு பிராது கட்டாயம் வந்துசேரும். சித்திரச்சுழி இந்த செம்பட்டப் பயல அணுப்பாத மரியசெல்வம் என்று என்  பாட்டியைச் சொல்லுவார்.’அவன் வராட்டி,பின்னே எவா கொண்டு வருவா’ என்பாள் ’இவா’ என்று பாட்டியைக்கை காட்டுவார், ’கெடக்கமாட்டயோ கெழட்டு லொள்ளி’ என்று அவர்கள் பேசுவது சண்டையென நினத்துக் கொண்டிருந் தகாலம் அது.

நாங்கள் ஊரைத் தாண்டியதுமே, தாத்தா பரணைவிட்டுக் கீழிறங்கி விடு வார்.அப்படியே நடந்து கனிநாடார்  பம்பு செட்டுக்குப் போய்க் கால்,கை அலம்பிக் கொண்டுவருவார். வரும்போதே விளைந்து முற்றிய கடலைச் செடிகள் அவரது கையில் தொங்கிக் கொண்டுவரும். அதைவாங்கிக் கொண்டு மடமடவென பரண்மேலேறுகிற தருணம் அலாதியானது. ஏணியற்ற பரணில் நான் ஏறும்போதெல்லா கொலைபதறிக்கொண்டு எந்தாத்தா ஏ மெல்லய்யா, இங்கரு..ஏ.ஏ..லே மேல்லடா,ஏய் ஏ செம்பாட்டச்..னிமெல்ல ஏறுடா,இந்தப் பொண்டாட்டியோளி,  சொன்னபிடி கேக்கமாட்டன்’என்பார். தெற்குப்பக்கம் அதிகமாகச்  சோளம் தான் போட்டிருப்பார்கள்.அதற்கு ரெண்டுகாரணம் உண்டு.அந்த பக்கத்து நாயக்கமார்களின் மாடுகளுக்கு  கோடை காலம் தீவனத்துக்கு ஆகும்.ரெண்டு அது ஊரை ஒட்டி இருப்பதால் வேறுவகையான விதைப்பாடுகள் வீடுவந்து சேராது. பாதியை களவாண்டு கொண்டு  போய் விடுவார்கள். இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரண மும் இருக்கிறது என்பதை ஒரு மதியவேளை  பரணேறிப் பார்த்த போது தெரிந்துகொண்டோம்.

பகல்வேளிகளில் காடுகள் முழுக்க பெண்களே அங்குமிங்கும் அலைந்து திரியும்  செடிகளைப் போலக்கலந்திருப் பார்கள்.ஆண்கள் தலை தட்டுப்படாது.அப்படித் தட்டுப்படுகிற தலைகள் பிஞ்சைக்கார முதலாளிகளாய் இருப்பார் கள். ரெங்காநாயக்கர் மட்டும் எல்லாக்காலங்களிலும் அந்த எள்ளுச்செடிகள் பூத்துக்கிடக்கிற  தனது பிஞ்சையைக் கட்டிக்கொண்டு கிடப் பார். எல்லாச்செடியும் அழிமாண்டமாகும் எள்ளுச்செடி ஒருகாலதுக்கும்   களவு போகாது. அதத்திங்கவும் முடியாது,ஆக்கிப்பொங்கவும் முடியாது. அது போலவே மாடுகண்ணும் உள்ள வராது. ஆனாலும் நாய்க்கரு பிஞ்சையே கதி யென்று கிடப்பார். அதனாலேயே ஆகாத காரியத்துக்கு ஆட்கள்போனால் எள்ளுச்செடிய நாய்க்கர் காத்துக்கெடந்த மாதிரின்னு சொலவட சொல்ல ஆரம்பித்துவிட்டது சனம். தாத்தாவும் ரெங்கா நாய்க்கரும் படு ஸ்நேகம் அதனால் அவர்பக்கம் திரும்பிக்குரல் கொடுக்க மாட்டார்.

பரணேறியதும் நான் எள்ளுகாட்டுப்பக்கம் அவன் எவண்டா எள்ளுச்செடியில சுத்திக்கிட்டு அலையிறது என்பேன் .தாத்தா உயிர்போகிற வேகத்தில் பரணில் ஏறிக்கொண்டே இருக்கிற எல்லாக்கெட்ட வார்த்தையும் வைவார்.நான் பின்னம்பக்கம் இறங்கி ஓடிவிடுவேன்.அப்படி ஓடுகிற ஒரு நாளில் எள்ளுக் காட்டுப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தேன்.

எள்ளுக்காட்டுக்கு அருகில் ஒசந்து வளர்ந்திருந்த சோளநாத்துக்குள் இருந்து எழுந்து எனக்கு முன்னாடி ரெங்கா நாயக்கர் ஓடிக்கொண்டிருந்தார். பயந்து போய் நின்ற நான் திரும்பிப் பார்த்த போது,அவர் எழுந்து ஓடிய இடத்தில்
சோளநாத்து ஆடியது.பேய்க்கதைகள் நினைவுக்கு வர சிலீரென்று வேர்த்தது. திரும்பப்பரணுக்கு தாத்தாவைத் தேடி ஓடப்போனேன். பச்சை நாத்துக் குள்ளிருந்து வெள்ளை வெளேரென்று ஒரு உருவம் எழுந்தது.

ஆண்டாளம்மா.

14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

8.4.12

திரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு


அலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின்  மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக உத்தேசித்துக்கொண்டோம். நான்குமணி இருக்கும் மாது வீட்டைப் பார்த்தேன் வண்டி இல்லை.போயிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு மற்றொரு தோழர் கணேசனுக்கு போன் பண்ணி அவரும் துஷ்டி வீட்டில் இருப்பதாக சொல்லவே தாமதமாகிவிட்டது என  அடித்துப்பிடித் துக்கொண்டு ஓடினேன்.

தெருவை நெருங்கிய போது ஆட்கள் யாரும் தென்படவில்லை.ஒருவேளை காரியம் முடிந்திருக்குமோ என்கிற கவலை வந்துவிட்டது. நின்று தயங்குவதைப் பார்த்த அந்த தெருக்காரர் துஷ்டி வீடு அடுத்த தெருவில் என்றார். நிம்மதியாக இருந்தது. அங்கேபோன போது ஏழெட்டு அலுவலகத் தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள் நான் போனவுடன் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தமர்ந்தோம். இறந்தவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி உண்டு. எண்பதுகளில் பத்துப்பைசாவுக்கு ஒரு ரோஜாப்பாக்குப் பொட்டலம் கிடைக்கும். சிகரெட் குடித்துவிட்டு புகை வாடையைப் போக்க பாக்குப்போடுகிற பழக்கம் எல் லோருக்கும் இருப்பதுபோல அவருக்கும் இருந்தது. அது செய்தியில்லை. ஒருபாக்குப் பொட்டலம் வாங்கி ஒருநாள் முழுக்க குடிக்கிற சிகரெட்டுக்கெல்லாம் அதையே கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திவிட்டு பத்திரப் படுத்திக் கொள்வார். யாருக்கும் அதிலிருந்து ஒரு துகள் கூடக்கொடுக்கமாட்டார் அப்படிப்பட்ட சிக்கண காரர். அதனாலே அவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி வந்தது.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாடியும் ஒரு காரணம் வைத்துக்கொள்ளும் இந்த மனிதக்கூட்டம் விசித்திரமானது. இறந்த வீட்டில் வந்து குழுமி,அந்தக் குடும்பத்தார்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகோன்னதமான பழக்கம் பொதுமைச் செயலால் ஆனது. கிராமம் என்றால் அதில் இன்னும் கூடுதல் பொதுமை இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். அன்று வேலைக்குப் போனால்தான் உலை வைக்கமுடியும் என்கிற வறுமை சூழ்ந்திருக்கும் ஏழைக்கிராமங்களிடம் இது இன்னும் அபரிமிதமாக இருக்கும். செல்போன் இல்லாத அந்தக்காலங்களில் வெளிஊர்களுக்கு செய்தி சொல்ல,அடக்க வேலைகள் பார்க்க, பந்தல்போட, சாப்பாடு தயார்செய்ய, இரவானல் தூங்கவிடாமல் செய்ய கதைப் பாடல் படிக்க பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவைக் கூப்பிட ஒருவர் என, தாங்களாகவே வேலைப்பிரிவு செய்துகொண்டு, அதை சிரமேற்கொண்டு செய்யும் மனிதாபிமானம் கட்டாயம் ஆதிப் பொதுவுடமையால் ஆனது. எவனாவது அதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட எவனாவது நினைத்தால் அவன் தொண்டையில் போடுபோடுங்கள்.

இங்கே ஒரு நடுவயதுக்காரர் ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சா என்று கேட்டார்கள் இளையபையன் மட்டும் வரவில்லை என்று பதில் வந்தது.வெளி நாட்டில் இருக்கும் அவர் வருவதற்கான சூழல் இல்லை. நிறைமாதக் கர்ப்பினியான மணைவியை அழைத் துக்கொண்டும் வரமுடியாது அங்கே அவரைத்தனியே விட்டு விட்டும் வரமுடியாது என்று சொன்னார்கள்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கொஞ்ச நாள் அலுவலகத்தில் வேலை பார்த்த  நமக்கே தாமதமாக வருவது உறுத்தியதே. வரமுடியாத அந்த இளைய பையன் என்னபாடு பட்டுக்கொண்டிருப்பார்.

5.4.12

மௌனத்தை உடைக்கும் முன்கை

பரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்ததும் திபு திபுவெனக்கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு  ஏறியது. அதோடு கூடவே பனங்கிழங்கு விற்கிற சிறுவனும்,சுண்டல் விற்கிற நடுத்தர வயதுக்காரரும் ஏறினார்கள்.பத்து ரூபாய்க்கு ஆறு அவிச்ச பனங்கிழங்கு கிடைக்கும்,ஒரு பொட்டலம் சுண்டல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். ஆனாலும் அந்த சிறுவனிடம் கிழங்கு வாங்க மனம் ஒவ்வவில்லை.அந்த ஒரு நிமிட தாமதிப்பில் குழந்தை உழைப்புக்கு எதிராக செய்கிற கையாலாலாத நடுத்தர வர்க்கத்தின் கைங்கர்யம் அதுமட்டுமே. நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது அதில் உட்காருவதற்காகக் குறிவைத்து வந்த இரண்டு கிராமத் தார்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.பனங்கிழங்கு விற்கிற சிறுவனை கழுத் தைப்பிடித்து தள்ளினார்கள் இருக்கையின் முகப்பில்  உட்கார்ந்திருந்த பீகாரி இளைஞனை விலகச்சொல்லிக் கெட்ட வார்த்தையில் வைதார்கள். அது வரை இயல்பாக வேடிக்கைபார்த்த பேருந்துப்பயணிகள் ஒவ்வொருத்தராய் தங்களை தாங்களே உள்ளிழுக்கும் ஆமைகளானோம். அப்போதிலிருந்து சுமார் ஒருமணிநேரம் ஓயாத கெட்டவார்த்தை ஒவ்வொன்றும் டாஸ்மாக் வீச்சத்தோடு பேருந்து முழுக்க வழிந்து கிடந்தது.

’எம்மருமயென் ஆறுகெடா வெட்டுனாண்டா,ஒரு சுமோப்பிடிச்சியாந்து கேஸ் கேஸா எறக்கி  பெருமப்படுத்திட் டாண்லொய்’ என்று சொல்ல எதிராளி

 ‘சும்மா கெட வகுத்தெரிச்சலக் கெளப்பாத பெறகு குத்திப்புடுவே எனக்கும் வாச்சானே மருமயென் பேத்தியாளுக்கு சடங்கே வைக்கமாட்டேனுட் டாண்டா, சாதிகெட்டபெய. க்காலி,அதாம் போச்சுண்டா பத்ராவிசுல வேல பாத்துக்கிட்டு ஒத்தப் பைசா வரும்டியில்லாம எம்மவள மூளியா வச்சிறுக் கான் சிருக்கியுள்ள.., 

வயித்தெரிச்சலக் கெளப்பாதடா என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.காற்று வரவில்லை இறுக்கமாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி கொக்கியை மடக்கி நிறுத்த தெரியவில்லை இரண்டு மூன்று முறை மடேர் மடேரென்று கண்ணாடி கீழிறங்கியது. தெறக்கத்தெர்லன்னா உடவேண்டிய தானே  கண்ணாடியப் போட்டு ஒடச்சிராதங்கப்பு என்ற பொறுமிய கண்டக் டருக்கும் ரெண்டு வசவு காத்திருந்தது. இனிமையான  பாடல் களாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டிய பேச்சுச் சத்தமும்,வசவுகளும்  ஆக்ரமித்துக்  கொண்டே யிருந்தது.

பின்னாடியிருந்த நடு வயதுப்பெண் எழுந்து ’

என்ன பஸ்ஸா இல்ல சாராயக் கடையா,பொம்பளைங்க  வர்றாங்கண்ணு தெரியல’ என்று குரல் கொடுத்தார்.

’பொட்டமுண்டைக்கி திமிரப்பாரு என்று மீண்டும் கெட்டவார்த்தையில் ஆரம்பித்தான்.

’இனிமே ஒனக்கு மர்யாதயில்ல பேச்ச நிப்பாட்டு’ என்றார்.’நா யார்ன்னு தெர்யுமா’ என்றான்.

அதான் ஒருமணிநேரமாப் பாத்துட்டு வர்ர்றோ மில்ல, நீ மனுஷனே இல்ல என்றார்.

இரண்டு பேரும் வரிந்து  கட்டிக் கொண்டு அவரோடு மல்லுக்கு நின்றார்கள். சன்னம் சன்னமாய் பேருந்துப் பயணிகள் எல்லோரும்  அந்தப் பெண்ணின் பக்கம் வந்தார்கள். பேருந்தும் திருப்புவனத்துக்கு வந்தது. பயணிகள் ஒருமித்த குரலோடு பஸ்ஸ ஸ்டேசனுக்கு விடுங்க ட்ரைவர் சார் என்று கத்தினார்கள். மள மளவென்று ரெண்டுபேரும் இறங்கி இருவரும் கூட்டத்துக்குள் மறைந்து போனார்கள்.

மீண்டும் ஓடத்துவங்கிய பேருந்து தனது இயல்புக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர்  ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். மீண்டும் பாடல் தெளிவாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தப்பெண் பக்கத்திலிருந்த குழந்தையிடம் வெளியே காட்டி எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

25.3.12

இந்த அரை நூற்றாண்டின் ஆகச்சிறந்த போராட்டம்-கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அனு உலை ஆபத்தானதா இல்லை பாதுகாப்பானதா என்கிற கேள்வி பதில்கள் இன்னும் பொதுமக்களைச் சென்றடையவில்லை.தேர்தல் நேரத்தில் 2ஜி அலைக்கற்றையில் திமுகவின் பங்கு பற்றி  ஏற்படுத்தப் பட்ட பரப்புரை போல கூடங்குளம் குறித்த கேள்விகளை ஊடகங்கள் மக்களிடம் எழுப்பத்தவறி விட்டது.  எனவே நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம் கூடங்குளம் அணு உலை  திறக்கப் படாதது தான் என்கிற மூட நம்பிக்கைக்கு மக்கள் நேரடியாகத் தள்ளப்பட்டு விட்டார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங் கள், அந்நியநாட்டு ஆலைகள்,கணினி வழியே நெல்,சோளம், கம்பு,பருப்பு விளைவிக்கும் ஐடி  நிறுவணங்கள் ஆகிவற்றுக்கு அள்ளிக் கொட்டப்படும் மின்சாரம் குறித்து ஒரு நடுநிலை நாளேடும் வாய்திறப்பதில்லை. அவர் கள் டேக்காக் கொடுக்கும் மின்கட்டணப் பாக்கித்தொகை பற்றியும், அதற்கான மொத்த சைபர்கள் என்பதை வெளியே தெரியவிடாமல் லாவகமாகப் பாதுகாத்துக் கொள்வதும் நம்மூர் ஊடகங்கள்தான்.

இந்தியாவில் உள்ள அத்தனை டெல்டாப் பகுதிகளிலும் பெட்ரோலியம், மற்றும் எரிவாயுக்களுக்கு தேவையான கனிமவளங்கள் இருந்தாலும் அவற்றை உபயோகப் படுத்துகிற முனைப்பை அரசுகள் மேற்கொள்ளு வதில்லை. மின்சாரம்  தயாரிக்க வெறும் அனு உலைகளை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை அதுதவிர்த்த அநேக வழிமுறைகள்  இங்கே மலிந்து கிடக்கின்றன. காற்று, கடல்அலை, சூரியவெப்பம், அனல், புனல் எனத்தொடங்கி குப்பைகளில் இருந்தும்,சாணங்களில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். தென் மாவட்டங்களின் பெரும் பகுதி காடுகளை அடைத் துக் கொண்டிருக்கும் வேலிகாத்தான் முட்செடிகளை எரித்து மின்சாரம் தயாரித்தால் மொத்த தமிழகத்துக்கும் மின்சாரம் கொடுக்கலாம். இப்படி யிருக்க  ன் அனு உலையால் மட்டுமே மின்சாரம் எடுப்பேன் என்று தலைகீழாக நிற்கிறது அரசு.

வெளிநாடுகள் வேண்டாமென்று கழித்துக் கொட்டுகிற எல்லாக் குப்பைகளும் இந்தியாவுக்குள் தங்கு தடையின்றி வந்துகொண்டிருக்கிறது. சீனா ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடியே மரங்களை அழித்து  தீக்குச்சிகள்   தயாரிக்கும் முறையைத் தடை செய்து விட்டது. எனவே அங்கே உபயோகமற்றுக் கிடக் கும் தானியங்கி தீப்பெட்டி எந்திரங்களை போட்டி போட்டுக்கொண்டு இறக் குமதி செய்கிறார்கள் சிவகாசியைச் சுற்றியிருக்கும் தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள்.  காயலான் கடை விலையிலான அந்த எந்திரங்கள் மூன்று நான்குகட்ட  கமிஷன்களோடு பெருமையாய் வந்து இறங்குகிறது. அதே அணுகு முறையைத்தான் அனுஉலை மற்றுமல்ல எல்லா  விவகாரத் திலும் இந்தியா பின்பற்றுகிறது.

இந்த தேசத்தில் அறுபது சதமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையின் மீது நோயையும் ஏவிவிடும் அணுக்கதிர்கள் குறித்த பயம்,போபாலில் நடந்த  கசிவைப் போல இன்னொரு முறை நடந்துவிடக் கூடாது என்கிற பயம். எல்லாம்  நியாயமானது. ஆகை யால்  இவ்வளவு காலம் நடக்கும் போராட்டங்களை நியாயமாக அணுகுவது மட்டுமே மக்கள் நல அரசாக இருக்க முடியும். ஒரு கார் தொழிற்சாலை வேண்டாமென்று  நந்திக்கிராமத்தில் நடந்த போராட்டத்தை அந்த அரசு மதித்து  பின்வாங்கவில் லையா?. அதைவிட்டு விட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்த அந்நிய நாட்டுத்தொடர்பு என்கிற பெரிய்ய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதே அரசுதான் அந்நிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இப்போது அதற்கு ஒருபடிமேலே போய் ரவுடிகளை ஏவிவிட்டு ஜனநாயக ரீதியான பொதுக்கூட்டங்களில் ரகளை யைத் தூண்டிவிடுகிறது இந்த அமைப்பு. நேற்று ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் புகுந்து அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார் கள்.ஒரு நியாயமான போராட்டத்தைக் கொச்சை  படுத்த தரங்கெட்ட வகை யில் இறங்குகிற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமே நிகழும். கீரைக் கடைக்கு எதிர்க் கடைமாதிரி உண்ணாவிரதத்துக்கு எதிராக உண்ணும் விரதம் இருக்கிற விநோதம் வேறெங்கும் கேள்விப்படாத ஒன்று. அதே போலப் போராட்டக்காரர்கள் கையிலெடுக்காத வன்முறையை ஆதரவாளர்கள் எடுத்திருக்கிறார் கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இதே போலத்தான் ஐவர் என்கவுண்டர் கொலைகளை விசாரிக்கச் சென்ற உண்மை அறியும் குழுவுக்கும் நிகழ்ந்தது.

ஆனால் ஒரு  அற்புதமான போராட்டஉணர்வை  அறிமுகப் படுத்திய அனு உலை எதிர்ப்பாளர்கள் இந்த மாநில அரசை நம்பிக்கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.

04.03.2012

ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி



விரட்டி விரட்டியடித்தாலும்
ஆளில்லா நேரம் பார்த்து
கூசாமல் வீடு நுழைகிறது
ரோசமில்லாத சாம்பக் குருவி.

அலகில் ஏந்தி வந்து போட்ட
ஐந்தாவது குச்சியையும்
ஒரு வீட்டை உடைக்கிற
வேதனையோடு வெளியே எறிந்தாச்சு.

ஆனாலும் அடம்பிடிக்கிறது
ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி
வராண்டாவில் தொங்கும்
மின்விசிறியில் கூடுகட்ட.

23.3.12

பேருந்தைப்போட்டியிட்டு ஜெயிக்கும் நினைவுகள்.

அந்த விடிந்தும் விடியாத கருக்கலில்
திருமங்கலம் நுழையும் பேருந்து வெளிச்சத்தில்
மீசை பெருத்த போஸ்ட்டர்களைத் தாண்டி
நினைவு தேடும் ஷாஜகானின் சிரிப்பொலியை.

ஊருக்கு வரும் பகல் பொழுதுகளில்
முகத்துக்கு நேரே நீண்டு வெளேரெனச் சிரிக்கும்
உரித்த வெள்ளரிக்காயோடு கசியும்
காதுவளர்த்த பாட்டிகளின் வறுமை.

செழித்துக்கிடக்கும் சாலையோரத்து வேலிக்காடுகள்
கடக்கும் பொழுதெல்லாம் கயிறறுத்துக்கொண்டு
காட்டுக்குள் ஓடிமறைந்துகொள்ளும் இன்னொரு நான்.

இழுத்துக்கொண்டு வந்து இருக்கையில் வைக்கிற
இளைராஜாவின் பாடல் வந்த சுவடு தெரியாமல்
அந்தரத்தில் மீளப்பறக்க வைக்கும் என்ன செய்ய ?

28.2.12

எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?( ஷாஜஹான் கவிதைகள் )

மிகச் சிறந்த கவிஞன்,மிகச்சிறந்த கதைசொல்லி,நெஞ்சுருக்கும் பேச்சாளன் நிஜமான பொதுவுடமைக்காரன்,ஆகச்சிறந்த ஹாஸ்யக்காரன். எல்லா வற்றையும் உள்ளடக்கிய சக மனிதன். தோழர் ஷாஜகானின் கவிதை இது.


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?

நட்புக்கு நீங்கள் செய்த துரோகத்தை
நம்பிக்கைக்கு நீங்கள் செய்த அவமரியாதையை
அன்பில் மேல் நீங்கள் செலுத்திய வன்முறயை
தவிப்பின் மீது நீங்கள் விசிய அலட்சியத்தை
கலையின் மீது அள்ளிப்பூசிய பொய்மையை

வரலாற்றின் மேல் செய்த இருட்டடிப்பை
எளிமையின் மேல் கொட்டிக் கவிழ்த்த அதிகாரத்தை
உண்மையின் மேல் போர்த்திய அரசியலை
இயல்பின் மீதான மேலதிகாரத்தை
வெற்றிகளின் பேராலான தீரா வெறியை
தோல்விகளின் மீதான கேலிச் சிரிப்பை
கொல்லப்பட்டோர் பற்றிய அவதூறுகளை

சிறுமைப்பட்டோர் மீது காட்டாதிருந்த கனிவுக்கு
கனவுகள்மேல் காட்டிய ஆத்திரத்திற்கு
காலம் சகலத்தையும் மறக்கச்செய்யும்
கண்களில் கொட்டிய மணலாய் உறுத்தும்

இவை எதுபற்றியேனும் வருந்தியிருக்கிறீர்களா
எப்பொழுதேனும் ?
ஒரு பொழுதேனும் வருந்தியிருந்தால்
நீங்களும் மனிதன் என்னைப்போல

27.2.12

காவல்கோட்டத்தை காவல் காக்கும் ஜெயமோகன் - இடதுஎழுத்துக்கெதிரான சூழ்ச்சி.



காவல் கோட்டம் மிகச்சிறந்த நாவலா,இல்லை ஆதிக்க ஜாதிகளுக்காதரவான மிகச்சிறந்தபரப்புரையா என்பது குறித்து விவாதிக்கு முன்னாடி விமர்சனங் களின் விமர்சனங்களை கூர்மையாக அனுகவேண்டியிருக்கிறது. தமிழகத்தில் பார்ப்பணர்களும், முதலியார்களும், வெள்ளாளர்களும் ஜாதிகுறித்து வைத்திருந்த மேட்டிமையைக் காட்டிலும் இடைப்பட்ட சாதிகள் கொண்டிருக் கும் துவேஷமும்  மிகப் பிரபலமானது. அது இன்றுவரை தொடரும் அவலம். தீராத வன்கொடுமைகளைத் தடுக்கவழியில்லாமல் அலைகிறது தேசம். அப்படியிருக்க  இரண்டு ஜாதிகள் குறித்த பெருமிதங் களை ஒரு வரலாறாக முன்வைக்கிற இந்த நாவலில் இருக்கிற இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரான  விஷயங் களை அம்பலப்படுத்துகிறார் தோழர் மாதவராஜ்.

முதலில் இந்த விமர்சனத்தை அமைப்புக்கு எதிரானதாக கற்பித்துக்கொண்டு கிளம்பிய விவாதங்கள்  மேம்போக் கானவை. பின்னர் அதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கிளம்பும் குரல்கள் மிகுந்த உள்நோக்கமுடையவை. இந்துத் துவா மீது மோகமும் இடதுசரிகள் மீது தீராத காழ்ப்புணர்ச்சியும் கொண் டிருக்கிற ஜெயமோகன் இந்த நாவலை ஆதரித்தும் மாதவராஜை எதிர்த்தும் குமுதம் பத்திரிகையில் எழுதியிருப்பது மிகப்பெரும் வேதனை கலந்த சூழ்ச்சி யாகும். அந்த வாதங்களின் கூடுதல்  கொச்சைத் தனங்களாக எழுத்தாளர்  ஜெய காந்தனையும்,  எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சமியையும்  சுட்டிக் காட்டுவது இந்த எழுத்துலகம் கூர்ந்து  கவனிக்க  வேண்டிய விமர் சனம். யாரையும் விருப்பு வெறுப்பின்றி  விமர்சனத்துக் குள்ளாக்கும் தோழர் என்பது  மாதவ ராஜைப் பற்றி அறிந்த அத்தணை தோழர்களும்  அறிவார்கள். சு.வெங்கடேசன் உட்பட.

அமைப்பை எந்த தனி நபருக்காகவும் விட்டுக்கொடுக்காத நெறியுடையவரும் அவர். இதை தோழர்  உரா. வரதராஜன் மரணம் குறித்த பதிவிலும், அதற் கெதிராக வந்த விமர்சனங்களிலும் சமீபத்தில் தோழர் கோணங்கி குறித்த பதிவிலும் காணலாம்.அமைப்பு ரீதியாக மேலாண்மை பொன்னுச்சாமியைக் கொண்டாடுகிற மாதவராஜ் படைப்பு ரீதியாக அவரை அதிகமாக விமர்சித் திருப்பதை தமுஎச வட்டத்தில் அணைவரும் அறிவார்கள். தோழர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் கூட இது நன்றாகத் தெரியும்.தன்னை ஒரு போதும் எழுத்தாளர்  ஜெயகாந் தனின் மருமகன் என்று அறிமுகப்படுத்தாதவர் என்பதை மிகநெருக்கமாக அவரை அறிந்த எல்லோரும் அறிவார்கள். எண்பது களிலே எழுதத் தொடங்கிய அவர் தொண்ணூறுகளில் தான் எழுத்தாளர் ஜெய காந்தனின் மருமகனானார். அப்படியிருக்க எழுத்தாளர் ஜெயகாந்தனையும் தோழர் மேலாண்மையையும் இந்த விவாதங்களில் உள்ளிழுப்பது சூழ்ச்சி நிறைந்த செயல்.

இவ்வளவு காலமாக இடதுசாரிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிற சாகித்ய அகாடமி விருதுகள் தோழர் மேலாண்மைக்கும், காவல் கோட்டத் துக்கும் கொடுக்கப் பட்டதால் புனிதமானதாக மாறிவிட்டதாக மயக்கம் கொள் ளக்கூடாது என்கிற தொனி இருந்தது. தகுதிக்குறியோர் பட்டியலில் இந்த எழுத்துலகம் மதிக்கிற உன்னத எழுத்தாளர்கள் விடுபட்டதையும் அவர் தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஒரு  இயக்கவாதியாக  மட்டு மிருந்து அந்த குறிப்பை அணுகினால் எரிச்சல் வரலாம், வரும். நேர்மையான முறை யில் அணுகினால் அது அலாதியாகத்தெரியும். பெத்தானியாபுரம் முருகா னந்தம் என்கிற நபரின் கேள்விகளாக முன்வைக்கப்பட்ட வரலாற்று ரீதி யான,மற்றும் சமூக ரீதியான கேள்விகளை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.அதே கேள்விகளின் நீட்சிதான் மாதவராஜ் எழுதிய காவல் கோட்டம் விருதுகள் விழாக்கள் என்கிற மிகப்பெரிய விமர்சனம்.

இந்த விமர்சனத்துக்கு அமைப்பு ரீதியான கோபங்கள் வெளியேறும் என்பவை அறிந்த ஒன்று ஆனால்  அமைப் புக்கு எதிரான நபர்களிடமிருந்து எதிர்ப்பு வரு வது குதர்க்கமான ஒன்று. இருபத்தைந்து வருடங்கள்  முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசுவுக்கும் நேற்று கட்சியில் உறுப்பினரான ஒருவருக் கும் சமதையான அந்தஸ்து வழங்கும்  அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள். அப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிற  சட்டமன்ற வேட்பாளராக அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவர் வாளும் மலர்க் கிரீடமும் வாங்கிப் பெருமிதப்பட்டுக் கொள்வதை எந்த ஒரு இடதுசாரியும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படி ஏற்றுக் கொள்ளாத ஆயிரக்கணக்கான  உண்மைத் தோழர்களின் பிரதிநிதித் துவக் குரலாக வந்ததுதான் இந்த நேர்மையான விமர்சனம்.

என்னைத்தவிர இங்கு எவன் எழ்துவதும் எழுத்தல்ல என்கிற கர்வத்தில் இருப்பவரும்,அதனால் தினம் வண்டி வண்டியாய் அம்பாரமாக இந்துத்வாக் குப்பைகளை  அள்ளிப் போடுபவரும், அந்தக் குப்பைகளின்மேல்  உட்கார்ந் திருகிறவருமான  ஜெயமோகன் இங்கு வந்து சாட்சி சொல்லவும்,நீதி சொல்லவும் இடதுசாரி அமைப்புகள் ஒன்றும் இளைத்தவை அல்ல. அதிகார மையங்களைச் சொரிந்து விடவும்,ஆதிக்க சாதிகளைப் பெருமிதப்படுத் துவதுமான அவர் போன்றவர்களின் எழுத்தை தோலுரிக்கிற பணி தான் இடதுசாரிகளின் முதற்பணி.  அப்படி யிருக்க அவர் வலிய வந்து  வெங்கடேசன் நனைகிறதாக ஒப்பாரி வைப்பது  ஆட்சேபகர மானது. தனது திண்ணை எழுத்துக்களிலும்,தனது கவிதை முன்னுரையிலும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்  ஜெமோ என்று  ஆரம்பிக்கிற சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக  ஜெயமோகன் களத்தில் குதிப்பதும் அதை தோழர்கள் மௌனமாக ஏற்றுக் கொள்வதும் கவலை அளிப்பதான ஒன்று.

நாவலின்மீது ஜெமோ ஆதவரவாகவோ எதிராகவோ கருத்துச்சொல்லுவதை புரிந்துகொள்ளலாம்.மாதவராஜின் கேள்விகளுக்கு ஜெமோ பதில் சொல்லுவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. மாதவராஜை நோக்கி ஆரம்பக் கட்ட வாசகராக இருக்கிறார் என்கிற எள்ளலை முன்வைக்கிற ஜெயமோகனுக்கு மிகுந்த  பெருமிதத் தோடு நாங்கள் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது. இந்துத்துவ,முதலாலித்துவ,ஜாதித்துவ பெருமைகளைத்  தூக்கிப் பிடிக்கும் நீங்கள் முதுநிலை வாசகராக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அதற்கு எதிரான எந்த இடத்திலும் இருப்போம். அது பற்றி எங்களுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை. ஆனால் நாங்கள்  பாதிக்கப் பட்ட மக்கள் பக்கம் இருக்கிறோம். அவர்கள் அறிகிற பாஷைய எழுதுகிறோம் என்கிற பெருமிதம் எங்களுக்கு இருக்கிறது. அது தவிர்த்த எந்த அதிகார மையத்தின் சான்றிதழும் எங்களுக்கு அநாவசியமானது.

26.2.12

வியாரா வெறி விழுங்கிச் செரித்த பழய்ய பொது வாழ்க்கை.

பரபரப்பு வேகம் நிலகொள்ளாமை எதையும் நம்பாமை என்கிற நகரப்புழுதிகளோடு குழைந்துகிடக்கும் வாகனப் புகைகலந்த வாழ்வில் இருந்து தப்பிக்க வழியிருக்காவெனத் தெரியவில்லை. சற்றுக் கண்ணயர்ந்து பின்னுக்குப் போனால் நொடிகளில் வந்து விடுகிறது நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் பழய்ய வாழ்க்கை. நடந்து வந்த நெடுந்தொலைவில் பால்யத்தோடு தூரக்கிடக்கிறது மாசுபடாத புழுதிவாழ்க்கை. டவுசர் போட்டுக் கொண்டு ஹோவெனக்கத்திக்கொண்டு தெருவில் ஓடத்துடிக்கிறது மனசின் கால்கள்.கடந்த காலம்  பசுமை யாகவும் எதிர்காலம் சிகப்பாகவும் எழுதிக்கிடக்கிற வர்ணங்களை வாசிக்க வாருங்கள்.

ஊதாவும் கருப்பும் கலந்த வர்ணத்தில் தெப்புதெப்பெனக்கிடக்கும் சுப்பையாத் தாத்தாவின் கிணற்றுத்தண்ணீரை திரும்பவும் நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அந்த பம்புசெட் ரூமின் மேலேறிக் குதிக்கிற சாகசத்தை எழுத்தில் எப்படி முயன்றும் கொண்டுவர முடியாது. குளிக்க வரும் மதினிமார்களின் நல்ல மச்சினர்களாக ஒதுங் கிப்போய் காத்திருக்கும் தருணங்கள். இல்லை பெண்கள் வராத அடுத்த பம்புசெட்டுக்கு சுதந்திரக்குளியல் தேடி நடக்கும் தருணங்களில் மனசு பின்னுக்கிழுத்துக் கொண்டு ஓடிப்போய் எட்டிப் பார்க்கிற  குறு குறுப்பானதும் தான் திரும்ப முடியாத அந்தத் தொலைந்த வாழ்க்கை. காடுதிரிந்து வரும்போது மிளகாய்செடிக்கு ஓடும் வாய்க் காலின் ஓரம் மண்டியிட்டுக் குடிக்கும் தண்ணீரின் குளிர்ச்சி தொண்டையில் இன்னும் ஜில்லென நிலைத்திருக் கிறது.

இந்தத் தண்ணீரைப் பேசும் போதெல்லாம் ஊர்களுக்கிடையே யான நடைபாதைகள் நினைவுக்கு வந்துவிடும். மாட்டு வண்டிகள் நடந்து நடந்து உருவான அந்த நாற்கர சாலைகளில் நடந்துபோகும் போது நம்மோடு கூடவே வரும் சனங்களின் சுகதுக்கங்கள். பக்கத்து டவுனில் நடக்கும் திரைப்படமோ,அருகாமை ஊரில் நடக்கும்  தெருக் கூத்து நாடகமோ,அகாலத்தில் இறந்து போன சொந்தங்களின் மரணமோ ஊரை நடத்திக் கூட்டிக் கொண்டு போகும். எழுதாமல் அழிந்துபோன வரலாறும் வாழ்க்கையும், பதிவுறாமல் காற்றில் கறைந்து போனது பாட்டும் கூத்தும் சொலவடைகளும் அந்தக் கூட்டத்தோடு பேசிபேசி வளரும். பரமவைரிகள் போல முடிபிடித்துச் சண்டை யிட்டவர்கள் திரும்பிவரும் போது தோளில் கை போட்டுக் கொண்டு வருமாறு இளக வைத்துவிடும் இயல்பு உண்டு. நடந்துபோகிற நாற்பது பேரில் முன்னே போகிற பாதத்தில் முள் குத்தினால் பின்னே வரும் கால்கள் மருந்து சொல்லும். வழியை மறிக்கிற இடர்களில் எப்போதாவது தான் பாம்புகள் குறுக்கே வரும்.ஆனால் எல்லா நேரமும் பாம்புக் கதைகள் கூட வந்துகொண்டே இருக்கும். அப்போது நாம் மனிதர் தெரிந்த அத்துணை பாம்பின் வகைகளையும் அதன் குணங் களையும்  அறிந்து கொள்ளலாம்.

அத்தோடு கூட அமானுஷ்ய கற்பனைகளோடு ஐந்து தலைப் பாம்புகளும் வரும். அவை, ரத்தினத்தை  வயிற் றுக்குள் வளர்க்குமாம். உடலில் அதற்கு ரோமங்கள் முளைத்துவிடுமாம். ராக்காலங்களில் ரத்தினத்தை வாந்தி யெடுத்து,அந்த ஒளியில் இறைதேடுமாம். அந்த அரத்தினத்தின் மேல் சாணத்தைப் போட்டு மறைத்து விட்டால் கண் தெரியாமல் தரையக் கொத்தி கொத்திச் செத்துப் போகுமாம். ஆனால் கொம்பேறி மூக்கன் கொத்திவிட்டு பனைமரத்தில் ஏறிக்கொள்ளுமாம். மறுநாள் சுடுகாட்டில் புகை தெரிந்தால் தான் கீழிறங்குமாம். சாரைப் பாம்பு விரட்டினால் குறுக்கும் நெடுக்குமாக ஓடனும் நல்ல பாம்புவிரட்டினால் நேராக ஓடவேண்டும் என்கிற உபாயக் கதைகளும் கிடைக்கும். இந்தக் கதைகளைத் தாண்டி பாம்பு கடித்து விட்டால் ஊருக்கே விஷமேறிக் கொள்ளும்.

ஆளாளுக்கு மருந்து சொல்ல,மருந்து தயாரிக்கக் கிளம்பிவிடுவார்கள். அன்று இரவு கட்டாயம் பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவின் உடுக்கைச் சத்தம் ஊரைத் தூங்கவிடாது. அண்ணம்மாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே என்று பாடிக்கொண்டே கூட்டத்துக்குள் மச்சினிச்சிகளைத் தேடும் அவரது கண். ஒரு இரவு முழுக்
கப் பாடிக்கொண்டே இருக்கிற அவரது குரலில் உழைக்கும் மக்களுக்கான புராண கதைகள் கிடைக்கும்.  விராட பர்வம்,விக்கிரமாதித்த கதைகளை அதற்குப்பிறகு வேறெங்கும் கேட்கமுடியவில்லை. அதுபோலவே  மணிக் குறவன், தீச்சட்டிக் கோவிந்தன் பாடல் கதைகளும் சொல்ல ஆளில்லாமல்  தொலைந்து காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது. இச்சிப்பட்டை ராப்பட்டை,மதுரைவீரன்,அம்பிகாவதிஅமராவதி,காத்தவராயன் போன்ற கதைகளில் ஊடுசரடாய்க்கிடக்கும் மேல் கீழ் முரணை மனதுடைக்கும் குரலில் அறிமுகப்படுத்திய  நாட்டுப் புறப்பாட்கர்களும் பாடலும் இனி கிடைக்கப்போவதில்லை. 

கிராமங்களின் காலையும் மாலையும் பொது இடங்களுக்கானது இரவும் மட்டுமே வீடுகளுக்கானது. விடிந்தபிறகு அவை  காடுகளில் பரந்து விரிந்து கிடக்கும். விதைப்புக் காலங்களில் கலப்பை மாடு கடகப் பெட்டியோடும்,செடி வளர்ந்த காலங்களில்  களை யெடுப்பு செதுக்கிகளோடும், அறுப்புக் காலங்களில்  பண்ணையறுவாள் களோடும் மக்கள் காட்டுக்குள்ளே தான் திரிவார்கள். காடு அவர்களுக்கு வெறும் தானியங்களை மட்டும்  தருவ தில்லை. அத்தோடு கூட பயிர்வளர்க்கும் அறிவியல் நுணுக்கங்களையும்,பயிர்களோடு அண்ணாந்துபார்த்து வெயில்,மழை வரும் காலநிலைகளையும் சொல்லிக் கொடுக்கும். தாளப்பறக்கும் நெய்க் குருவிகளையும்,  தட்டாரப் பூச்சியைம் பார்த்துவிட்டால் மாடியில்,களத்தில் காய்கிற தானியங்களை மழைபடாத இடத்துக்கு மாற்றுகிற வேலை தொடங் கும். அதுகூட தேவைக்காகநடந்ததென்று சொல்லலாம் பறித்த நிலக்கடலை ஆய்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அந்தவழியாய் நடந்துபோகும் யாரையும் இந்தா கொஞ்சம் கடலை  திண்ணுட்டுப் போங்க என்று சொல்லுகிற வாஞ்சையை நிலம்போலே மனிதரும் வாய்க்கப்பெறுவது அலாதி குணம்.

அப்போதெல்லாம் காட்டுமரக் கிளைகளில் வகை வகையாய் தூக்குச்சட்டி தொங்கும் அதிசயம் நடக்கும். அந்த சட்டிகளுக்குள் குடியிருந்த புளிப்பேறிய கஞ்சி வகைகளைச் சொன்னால் கணினி விசைப் பலகையில் எச்சில் கட்டாயம் சிதறும். வரகரிசி, திணையரிசி, குதிரைவாலி, காடக்கண்ணி,காலக்கம்பு,சோளாச்சோறுகள் தின்று செழித்த காலங்கள் எல்லாம் கற்காலங்கள்  போலாகிப் போனது. அதை விளைவிக்க மட்டுமல்ல பதப்படுத்த, பாதுகாக்க, இடித்துப், புடைத்துச், சமைக்கக்கூட உடல் உழைப்புத் தேவையாயிருந்தது. ஆதலால்தான் ஊரில் திரும்புகிற திசையெல்லாம் உரல்கள் நிறைந்திருந்தது.

ஆதலால்தான் அந்த உரல்கள் ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியிலே இடம்பிடித்துக் கொண்டிருந்தது. அந்த உரல்களுக்குள் அப்போது வெறும் தானியங்கள் மட்டும் கொட்டி இடிபடாது. ஊர்க்கதைகள் எல்லாம் சேர்ந்த்தே இடிபடும். இடிக்கப்பெரும்பாலும் குமரிகளே வருவார்கள். இடிபடுகிற கம்புத்தவசம் மாரிக்கண்ணுசித்தி  வீட்டில் தான் சோறாகும் ஆனால் சுத்தியிருக்கிற கொமருகளெல் லாம் சேர்ந்து கம்பு குத்தும் அந்நியோன்யம் இனி எங்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் ஆள் மாத்தி ஆள் இடிக்கிறபோது ஊரே அதிரும். அது பார்த்த அந்த அதிர்வைக்கேட்ட எந்தக்கொம்பனும் பெண்கள் இழைத்தவர்கள் என்று ஒருபோதும் வாய்திறக்கமாட்டான். என்றா லும் பெண்கள் எப்போதும் உரல்மேல் உட்காருவதில்லை.ஆனால் அதொன்றும் மநுஎழுதிவைத்த விதியுமில்லை . திங்கிற சோத்துக்கு பெணகள் தரும் மரியாதை அவ்வளவே. ஆனால் எளவட்டங்கள் தூக்கமுடியாத உரல்களை சுலுவாகத்தூக்கி எறிவாள் கல்லுடைத்து கஞ்சிகுடிக்கிற கன்னிமரியாக்கா.

22.2.12

ஜாதி கடந்த பொதுவுடமைவாதியின் வீட்டுக்கல்யாணம்.

பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கத்துக்கு 42 பி எல் எஃப் தெரு என்று ஒரு முகவரி உண்டு அதே போல எண் 6 பிச்சைப்பிள்ளைதெரு விருதுநகர் என்கிற முகவரியும் உண்டு. அது ஒரு பாதியில் நின்று போன  கட்டிடம். மீதிக் கட்ட முடியாமல் போன வீட்டுக்காரரின் கனவை நாங்கள் வாடகைகொடுத்து நனவாக்கினோம். அவர் வீடாக் கியிருந்தால் ஒரே ஒருகுடும்பம் மட்டுமே அங்குவாழ்ந்திருக்கும்.ஆனால் தமிழ்நாடு அரசு  ஊழியர்  சங்கம், பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கம் என்ற இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களின் தற்காலிக வீடாகவும். நேரம் தப்பி வீடுபோக முடியாத தோழர்களுக்கு புகழிடமாகவும்.அங்கு தங்கியிருந்த  சுந்தரராஜ்,சிதம்பரம்  என்ற தோழர்களின் வாழிடமகவும் மாறியிருந்தது.

யாருக்காவது தேநீர்குடிக்க ஆசையிருந்தால் குறைந்தது பத்து தேநீர் செலவாகும் அதுவும் சந்தோசத்தோடு. யாருக்காவது காய்ச்சலென்றால் எதாவது ஒரு கை மாத்திரை தேடும் நெகிழ்சியான அரைக் கம்யூன் வாழ்க்கை வாழ்ந்த காலம் அது. பல நேரங்களில் பாண்டியன்கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் செயற்குழு  நடக்கும். அதுபின்னிரவில் தொடங்கி விடிய விடிய தொடரும் அப்போதெல்லாம் தங்கள் படுக்கைகளை எடுத்துக்கொண்டு மாடிப்படிக்கோ அல்லது பிடிக்காத சினிமா ஓடும் தியேட்டருக்கோ  போய் விடுகிற இங்கீதம் ஒலித்துக்கிடந்த காலம் அது. நான் மாதவராஜ், அன்பை மொத்தமாக வாங்கி  சில்லறைக்கு விநியோகம் செய்வதுபோல எந்தநேரமும் சீவலும் வெத்திலையும் கூடவே வைத்திருக்கும் தோழர் விஸ்வநாதன். எங்கள் அன்புத்தோழர் முதலாளி செல்வா தினம் அங்கே இரவு பத்துமணி வரை உட்கார்ந்திருப்போம்.

கடிதங்கள் வரும் அல்லது ஒரே ஒரு லேண்ட்லைன் போனுக்கு எப்பொழு தாவது அழைப்புவரும்.அதுதவிர்த்த நேரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தோழர்களோடு பேசிப்பொழுது கழிப்போம். அங்கே முத்துராஜ், ஜீவா, செல்வின், போன்ற தோழர்களோடு தோளாய் இருந்த அப்போதைய செயலா ளர் தோழர் பாலசுப்ரமணியன் மிகச்சிறந்த தொழிற் சங்கப்ப போராளி. அத் தோடு  மிகச்சிறந்த கவிஞர். சின்ன சின்ன கடிதங்களிலும், போஸ்டர்களிலும், நோட்டீசுகளிலும் சிரத்தையெடுத்து கவிதை மொழியில் எழுதும் தோழர். அவரை நானும் மாதுவும் நிறைய்ய எழுதச்சொல்லுவோம் அவரும்  ஆவலோடு   சரி சொல்லுவார்.ஆனால் மாவட்டம் முழுக்க வியாபித் திருக்கும்  அவரது சங்கத்தின் பிரச்சினைகள் அவரை முழுமையாக ஆகரமித்துவிடும். எங்கு பிரச்சினையென்றாலும் ஓடோடிச்செல்லும் மிகச்சிறந்த மனிதாபிமானி. அதனால் தான் எழுத்தையும் மிஞ்சிய செயலால் உயர்ந்துநிற்கிறார்.

அம்மா,அப்பா ஊர் ஜாதியக்கட்டுமானங்களை எதிர்த்து மணம் முடித்தார். அந்த மீறலில் விளைந்த கவிதையாய் ஒரு பெண் மகள் கிடைத்தாள். பெண்ணுக்கும் ஜாதிமதம் பாராத வரன் தேடினார் கிடைத்துவிட்டார். இரண்டாயிரம் வருட குப்பையைப் புறங்காலால் எத்தி நிமிரும் களிப்பை நான் அவர் முகத்தில் எபோதும் பார்க்கலாம். அதை எந்தச்சூழலிலும் தொய்வில்லாது பாது காக்கும் ஒரு சில தோழர்களில் தோழர் பாலுவும் ஒருவர்.அவர் தனது மகளின் கல்யாணத்தை ஜாதிகலக்காத தோழமையோடு நடத்தப்போகிறார்.அதற்கு அவரே எழுதிய கவிதையே அழைப்பிதழாகிறது.

சாதி,மதம்,இனம்,மொழி- என
புதர்மண்டிக்கிடக்கும்
சமூகச்சூழலுகிடையேயான
எங்களின் வாழ்க்கைப்பயணத்தை...

குருவிகளும்,கிளிகளும்
குயில்களும்,மைனாக்களும்
கூடுகட்டிகுலாவிடும்
சோலைகளுக்கு
இடையே ஆனதாக மாற்றிய
எங்கள் அன்புமலரின்
திருமணம்......

கால்நுற்றாண்டிற்கும் மேலாய்
எங்களுக்கு
எல்லாமுமாய் இருக்கிற
அன்புநெஞ்சங்களே....

அவசியம் வாருங்கள்.....

29.2.2012 விருதுநகரில்.
மணமக்கள், அபர்ணா-பாலச்சந்திரன்

அந்தக்கோட்டையில் கல்யாணம் இந்தக்கோட்டையில் கல்யாணம் என்று ப்ளக்ஸ் பேனர்கள் வழியே ஜாதி மருரூபம் எடுத்து நாக்கைத் துருத்திக் கொண்டலையும் இந்த அடர் இருளில் ஆங்காங்கே தெரியும் ஒளிக்கீற்றைப் போல நம்பிக்கையை தோற்கவிடாத தோழனுக்கும் அவர் மனைவிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.பின்னர் மகளுக்கும் வாழ்த்துக்கள். ஜாதிகடந்த பொதுவுடமையை நேசிக்கிற எல்லோரும் வாழ்த்தலாம்.
     

9.2.12

நினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை.

ஒவ்வொரு பேருந்து நிலையமும் ஒரு நிறத்தோடு வித்தியாசமாக இருக்கிறது.காரணம் அங்குதான் அந்தப்பகுதி கிராமத்து மக்கள் எல்லோரும் வந்து குழுமிப்போவார்கள்.விளாத்திகுளம் பேருந்து நிலையம் ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு நான்குநாட்கள் அதை காலையும் மாலையும்  கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாத்தியமாயிற்று. அங்கிருந்து முக்கால் மணிநேரம் கிழக்கே பயணம் செய்தால் வேம்பார் வந்து விடும். வேம்பாருக்கு வேலை நிமித்தமாக நான்குநாட்கள் போய்வந்தேன்.ஆனால்  அங்கே தான் முன்னொரு காலத்தில் தங்கியிருந்த மாதிரி மனசுகிடந்து அடித்துக்கொள்கிறது.

அங்கிருந்து கொஞ்ச தொலைவில் தான் வேப்பலோடையாம்.தோழர் மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களைப் படித்ததால் ஒருவேளை நான் அங்கு நடந்து திரிந்தது போல பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.விளாத்திகுளத்திலி ருந்து ஒருமணிநேரம் மேற்கே பயணமானால் கோவில்பட்டி வந்துவிடும். எட்ட யபுரத் திலிருந்து விளாத்திகுளம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் கண்ணங்கரே லென்று கரிசல்காடு விரிந்து கிடக்கிறது. அதில் கம்பு, குதிரை வாலி, உளுந்து முளைத்துக் கிடக்கிறது.பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக் கிறது. விளைந்து நிற்கும் கம்மங் கதிரில் படகுருவிகள் பறந்துவந்து உட்காருவதும் சொல்லி வைத்தாற் போல நூறு குருவிகள் மேலெழும்பிப் பறப்பதும் மேஜிக் பார்க்கிற சுகானுபவத்தைக் கொடுக் கிறது.

இந்தக்கரிசல் காடுகளை மையமிட்டுத்தான் எங்கள் தோழர் கு.அழகிரிசாமி யின் கதையும்  முளைத் திருக்கிறது என்று நினைக்கும் போது அந்த சாப்பாட் டுக்கடை எங்கிருந்திருக்கும் என்று தேட ஆரம்பிக்கிறது  எட்டயபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் குதிரைகளின் குளம்பொலியும், நகராச் சத்தமும், சாட்டையடியின் சளீர்ச்சத்தமும் அமானுஷயமாய் வந்து போகிறது. கூடவே பாரதியின் நினைவு வருவதை யாரும் தடை செய்ய முடியாது. அதே போல அந்த ஊரில் வைத்து நடந்த பாரதி விழாவில் மேலாண்மை, எஸ் ஏ பி, கந்தர்வன், பீகே,மாது,தமிழ்செல்வன், கோணங்கி, உதயசங்கர், பார்த்தசாரதி, என எக்கச்சக்கமான எழுத்தாளத் தோழர்கள் பங்குகொண்ட கருத்தரங்கக் காட்சிகளின் நினைவுகள் நிலழாடுகிறது.

குறுக்கே குறுக்கே எழுந்து பேசிய கோணங்கியைப் பார்த்து ’மொதல்ல ஒம்பேர மாத்தப்பா,பேசச்சொன்னா பேசமாட்டீங்ற ஆனா ஒருத்தரையும் பேசவிடாம குறுக்க குறுக்க எதாச்சம் குழப்படி பண்ணிக்கிட்டே இருக்கியே ஒக்காரு மொதல்ல’. என்று எஸ் ஏ பி சொன்ன வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் எல்லொரது பேச்சுகளின் மீதும் கேள்விகளைத்தொடுத்த கோணங்கியைப்பார்த்து அடிபுடி சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நாக்குக் குளரும் பாவனையில் பேசும் கந்தர்வனின் தலைமையில் அன்று பேசிய எல்லோரும் இப்போது பெரிய ஆளுமைகள். ஆனால் எங்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும்  பீகே தான் ஆளுமை.

2.2.12

இன்றைக்கும் ஒத்துப்போகும் பழங்கதைகள்


அது தாது வருசப் பஞ்சம்.திருடர்கள் பணம்,பொன்,பண்டங்களைத் திருடு வதை  விட்டு விட்டு.ஆக்கிவைத்த கஞ்சிப்  பானை களைக் களவாண்டு போனர்கள்.தேசம் முழுக்க பசியே வியாபித்திருந்த பஞ்சம் தலைதூக்கி ஆடியது. அவன் சொந்த ஊரைக் காலி பண்ணிவிட்டு சோறு கிடைக்கிற இடம்தேடி காடுமேடெல்லாம் அலைந்தான். பலநாள் அலைந்து கண்கள் பஞ்சடைத்துப் போய் ஓரிடத்தில் மயங்கி விழுந்தான்.

அந்த நேரத்தில் அங்குவந்த குடியானவன் ஒருவன்அவனைத் தூக்கிக் கொண்டுபோய் கண்முழிகக வைத்தான். கதைகேட்டான்.சொன்னான். இப்போதைக்கு என்னிடம் கொஞ்சம் கேழ்வரகும் வேட்டையாடிக் கொண்டு வந்த கொக்கும் இருக்கிறது சமைத்துத் தந்தால் சாப்பிடுவாயா என்று கேட்டான். ஆபத்துக்குப் பாவம் இல்லை உயிர் கொடு என்றான். கேழ்வரகை திரித்து,கொக்கைச் சமைத்துக் கலியும், கறியும் கொடுத்தான்.

அங்கேயே தங்கி விடுவதெனத் தீர்மானித்து அவனிடம் சொன்னான்.சரி என்னுடன்  தொழிலுக்கு வருவாயா எனக் கேட்டான்.சரி சொன்னான்.எனில் இன்றிரவு தொழிலுக்குப் போகலாம் என்று சொன்னான்.ஏன் இரவு என்று கேட்டான். பொறு அவசியம் வரும்போது சொல்கிறேன் என்றான்.இரவில் ஒரு வீட்டருகே போனார்கள். சன்னலை உடைத்து உள்ளே போ அங்கிருக் கும்  சாமான்களைத் தூக்கிக் கொண்டுவா என்று சொன்னான்.திருடுவதா மாட்டேன் என்று சொன்னான்.

’அப்ப என் கொக்கும் கலியும் கக்கு’
 என்றானாம்.