Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

22.4.12

வலைப்பதிவர் அறிமுகம்


சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.

தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.

ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.
அப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.

வரவேற்போம்.

அவரது வலை விலாசம்

www.denilantony.blogspot.in

30.1.12

பராக்குப் பார்த்தல் அங்கும் இங்கும் - யேனம் தொழிலாளர் கிளர்ச்சி,மணிப்பூர் தேர்தல்

உத்திரப்பிரதேசத்தில் குசுப்போட்டாலும் அது தேசியப்பிரச்சினை யாகும். மணிப்பூர் போன்ற மாநிலங்களில் எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்தாலும் அது ஒருவரிச் செய்தியாகக் கூட இடம்பெறாது.இதுதான் இந்தியாவின் சன நாயகம்,பத்திரிகை அனுகுமுறை,ஊறிப்போன மந்தை நடைமுறை. வீட்டில் போரடித்து நேரம் போகவில்லை யென்றால் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசம் போய்விடுவார். அங்குபோய் நின்றுகொண்டு தான்  அரசி யல் படிப்பார். அதற்கு காரணமும் அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை தான். ஏன் உத்திரப் பிரதேசம் ஏன் மணிப்பூர்.

இந்த இரண்டிலும் உள்ள பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் இந்த ஒப்பீட்டுக்கு காரணம். உபியின் மொத்த பாராளுமன்ற  உறுப்பினர்கள் 80. மணிப்பூரின் மொத்த பா ம உ எண்ணிக்கை- 2. 1958 ஆம் வருடம் தொடங்கி இன்று வரை  மணிப் பூரில் கிட்டத்தட்ட  ஒரு மறைமுக ராணுவ ஆட்சி நடை பெறுகிறது. இந்த நிமிடம் வரை அங்கு அடக்குமுறையும், அதற்கெதிரான போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கிறது. அது பெரும்பாண்மையான இந்தி யர்களுக்கு தெரியாது.அது பெரும்பாண்மையான  படித் தவர்களுக்கு தெரி யாது.அது பெரும்பாண்மையான அரசியல்வாதிகளுக்கு தெரியவே தெரி யாது.தெரிந்துகொள் வதால் எந்த லாபமும் இல்லையென்கிற கணக்குத்தான் இதற்கெலாம்  மூலகாரணம்.

வெறும் 2 எம்பிக் கள் மட்டுமே இருக்கிற அதற்கென மெனக்கெட 63 வருடங் களாக நமது அரசுக்கு நேரமில்லை. தங்களின் வலி, வேதனை, கஷ்டம், ஆகியவற்றை கண்டு கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் அவர்களுக்குள் இருக்கிறது. அந்த நேரத்தில் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்தியமக்கள் என்று  சொல்லு வதும். எல்லோரும் உடன் பிறந்தவர் என்று சொல்லுவதும்.,பாரத்மாதாகீ ஜே சொல்லுவதும் அர்த்தமில் லாததாகி விடும். ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த மாநிலம் தனது வெறுப்பை பல்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆயுதத்தின் மூலமா கவும் வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பதுதான் சமீபத்திய தேர்தலில் நடந்த வன்முறையும் அதில் பலியான ஆறு மனிதர்களும். ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரம் பெரும்பாணமையால் தீர்மானிக்கப்படுகிறது. அதற்காக அந்த அரசு பெரும்பாண்மை மக்களுக்கு மட்டுமானது என அர்த்தமில்லை.

யேனம் என்கிற ஊர் புதுச்சேரி மாநிலத்துக்குச்சொந்தமானது. அங்கிருந்து கிட்டத்தட்ட எண்ணூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கிற அந்த ஊரைச்சுற்றி  கேரளா,ஆந்திரா,கர்நாடக எல்லைகள்தான். இது சனநாயகத்தின் இன்னொரு வியப்பு. ஏதாவதொரு மாநிலத்தோடு சேர்த்த்தால் என்ன கேடு வந்துவிடுமென்று  தெரிய  வில்லை. பழய்ய நடைமுறையைக்கைவிடாமல் பிரெஞ்சுக்காரார்கள் அடிமைப்படுத்தியிருந்த போது எப்படி இருந்ததோ அதே நிலைமை தான் இன்னும் நீடிக்கிறது.

அந்த யேனத்தில் இருக்கிற ரீஜென்சி செராமிக் டைல்ஸ்  நிறுவ ணத்தின் ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாதகாலமாக போராடிவருகிறார்கள். போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. கைதான வர்களில் முரளிமோகன் என்கிற தலைவர் கொலை செய்யப்பட்டிருக் கிறார். அதற்கெதிரான போராட்டம் வன்முறையாகி யிருக்கிறது. போலீஸ்காவலில் இறந்தவருக்கு மாரடைப்பாம் அதனால் இறந்துவிட்டாராம். வன்முறையில் நிறுவண அதிகாரி கொல்லப்பட்டது ஒரு குறிப்பிட்டவர்களின் தூண்டுதலால் நடந்த கொலையாம்.

எந்தக் காலத்திலும் செய்தி ஊடகங்கள் உழைப்பாளிகளுக்காகவும்,  அடித் தட்டு  மக்களுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுவதில்லை. தாங்கள் விளம் பரப்படுத்தும் நடு நிலை என்கிற வார்த் தைக்காகவாவது உண்மையாக நடக்க வேண்டாமா? வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம் தொழிலை அபிவிருத்தி பண்ணுவதோடு அது அடித் தட்டு மக்கள் வரைப்போய்ச் சேர்கிறது இந்த பிரக்ஞை  இல்லாமல் இன்னமும் இருட்டடிப்பு வேலைகளில் ஈடுபட முடி யாது. சூழ்சியும்,இருட்டடிப்பும்,வஞ்சகமும்,பாரபட்சமும் அதிகாரத்தின் ஆயுத மாக இருக்கும் போது, தெருவில் கிடக்கும் கல்லெல்லாம் உழைப்பவரின் ஆயுதமாகும்.

21.1.12

பகடிகளில் கரைந்து போகும் இளைத்தவர் சோகம்

முடி திருத்தக் காத்திருக்கும் நேரங்கள் அலுப்பைத் தருவது போலவே  சுவாரஸ் யத்தையும் தரும். சலூன்காரரிட மான உரையாடலில் ஒரு வாடிக் கையாளர் அவரது முதலாளியைப் பற்றிச் சொன்ன தகவல்கள் இவை. இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.

எங்க முதலாளி போனவாரம் முடிவெட்டக்கூப்பிட்டாரே போகலியா ?

போயிட்டாலும் உள்ள கூலியிலும் பத்து ரூவா ஆட்டயப்போட்டுட்டு குடுப்பாரு ?

பதினேழு வருசம் ஒழச்ச எனக்கே ரெண்டாயிரம் ஓவா குடுத்தாரு ஒனக்கு நல்லா நொட்டுனாரு

ரெண்டாயிரமா பொண்டாட்டி பூவாங்கிக் குடுக்க கூட காணாதே

பூ....வா,நல்லா வருது வாயில.கட்டுபடியாகல, அதா வெளியேறி, பெயிண்டடிக்க போயிட்டேன்

எப்படிய்யா மனசார ரெண்டாயிரந் தர்ராறு, கூட்டிக் கேக்கலயா

கேட்டேன்,இதுவே அதிகமாம். ஆனா வெளிநாட்டுல இருக்கிற மகனுக்கு மாசம் மூனுலட்சம் அது அவருக்கு பத்தலயாம். ஊருக்கு ஒரு நாயம் தனக்கொரு நாயம்.

ரெண்டு பயகல்ல அப்ப மாசம் ஆறுலட்சமா அவிங்க எப்டி

தெரியாதா வந்தவுடன இங்கவந்து  முடிவெட்டுவாய்ங்களே,எதுக்கு

எதுக்கு

அங்க வெட்னா அஞ்சாயிரம் ஆகுமாம் கெளம்புறதுக்கு ஆறுமாச முன்னாடியே முடிவளக்க ஆரம்பிச்சுருவானுக

இதென்ன கூத்தா இருக்கு

இன்னுங் கேளு வார வாரம் கறியெடுப்பாரே எவ்ளோ எடுப்பருன்ற

ஒருகிலோ

ம்ஹும்

அரைகிலோ,

ம்ஹும்

கா கிலோ

ம்ஹும்

நூறுகிராம் எடுப்பாரு

கொழம்பு வச்சா வாசன கூட வராதே,பேசாம மிலிட்டரி ஓட்டல் பக்கமா நின்னு வாசன பிடிக்லாமே ஓசியா 

ஏ பொறு இன்னும் முடிக்கல அந்தகொழம்பயும் சுண்ட வச்சு சுண்ட வச்சு மூனுநாள் தேத்துவாரு.

19.1.12

சல்மான்ருஷ்டியின் வருகையும் ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவும்

எதிர்வரும் 20 ஆம் தேதி தொடக்கம் 24 ஆம் தேதிவரை ஜெய்ப்பூரில் நடக்க விருக்கும் ’ ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா 2012 ’ ஆசியாவின் மிகப்பெரிய இலக்கியச் சந்திப்பு. இதில் பங்கேற்க உலகின் 100  இலக்கிய   ஆளுமை கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.சமூகத்தின் பிரதான நிகழ் பிரச்சினைகளின் மீதான  சொற்பொழி வுகள் மற்றும் நேர்காணல்கள்  ஒழுங்கமைக்கப் பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் பாமா,கவிஞர் சேரன்,கவிஞர் சச்சிதானந்தன்  குல்சார்,  ஜாவித்அக்தார், சல்மான்ருஸ்டி, கபில்சிபல், ஓம்ப்ரகாஷ்வால்மீகி ஆகிய தெரிந்த  பெயர் களும் பலதெரியாத பெயர்களுமான இலக்கிய உலகத்தை ஒன்றாகப் பார்க்கமுடிகிற நிகழ்வு இது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் அதிகமாகப்பங்குகொள்கிறார்கள். இதுதவிர இசைத்துறை,நாடகத்துறை,மற்றும் திரைத்துறை பிரமுகர்களும் பங்குகொள்கிறார்கள்.

இதுவரை நடந்த அகில உலக இலக்கியசந்திப்புகளில் 7000 பார்வையாளர்கள் வரை கலந்துகொண்டதாக புள்ளிவிபரம்  சொல்லு கிறது. இந்த முறை கூடுதலாக 2000 பார்வையாளர்களை எதிர்பார்க்கிறது.ஆனால் சால்மன் ருஷ்டி எழுதிய சாத்தானின் வேதம் கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு கடந்தும் பூதாகரமாகிறது. மத உணர்வுகளைப்புண்படுத்திய சல்மான்ருஷ்டி இந்தியாவுக்குள் வரக்கூடாது என உபி மதவாத அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. அவர் ஒரு இந்தியர் எனவே அவரது விசாவை முடக்கிவைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கைவிரிக்கிறது அரசு. ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் கெல்லாட் கைபிசைந்து கொண்டிருக்கிறார். இந்த எதிர்ப்பு எதிரும் புதிருமான பரபரப்பு விளம்பரத்தையும் புயல் வேகத்தில் அதிகரிக்கிறது.

இந்த விழாவின் ஆரம்ப நிகழ்வே பக்தி இலக்கியமும் இந்தியாவும் என்கிற தலைப்பிலிருந்துதான் துவங்குகிறது. இலக்கியம் மனிதனில் இருக்கிற கரடுதட்டிப்போனவைகளை உதிர்த்து இலகுவாக்குகிற விஞ்ஞானம். ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்குள், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குள் நுழையத்தடை சர்வ சாதாரண நிகழ்வாக இருக்கிற இந்த இந்தியக் கட்டமைப்பில் இது போன்ற தொரு செய்தி பெரிதாக எந்தத் தாக்கத்தையும் செய்துவிடப் போவதில்லை. ஆனாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதிய  பூங்குன் றனாரரின் வரிகளும்,சாரே சகாஞ்சே அச்சா என்கிற சேர்ந்திசையும் மிகப்பெரும் இலக்கியாந்தஸ்து மிக்கவை. . தனது இறுதி ஊர்வலத்துக்காகக் கூட இந்தியாவுக்குள் நுழைய முடியாத ஓவியர் எம்.எஃப்.உசேனும் ஒரு மகாகலைஞன்.ஆனாலும் வரது ஆவிகூட இது மாதிரியான ஒதுக்குதலை ஒத்துக்கொள்ளாது.

8.1.12

நக்கீரன் அலுவலகத்தில் எறியப்பட்ட கல்ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது.

எதைச் செய்தியாக்குவது எதை இருட்டடிப்பு செய்வது என்பதில் ஒரு சாரார் இன்னும் காலம் கடந்த  விற்பன்னர் களாகவே இருக்கிறார்கள். செப் 11- 2011 ல் ஆறு தமிழர்கள் மன்னிக்கணும் ஆறு சக மனிதர்கள்  கொல்லப் பட்டார்கள். அப்போது தமிழகம் ஒரு கனத்த மௌனத்தோடு கடந்து போனது.இதே சமூக வலைத் தளத்தில் கூட அதைப்பற்றி பேசியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மனிதாபிகள் மட்டுமே. வாச்சாத்தி  வன்கொடுமை யின் தீர்ப்புகள் வெளியானபோது ஒரு கட்சிமட்டும் அதை செய்தியாக்கியது. அதனோடு  தொடர்புடை யவர்கள் அதுபற்றி எழுதினார்கள். அந்த தீர்ப்பு வெளியான கொஞ்சநாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட  மலை மக்கள் அதே பானியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

இவையாவும் தமிழகத்து மக்களின் மனிதாபிமானத்தை, இன உணர்வை, புரட்சிசெய்யும் வீரத்தை உசுப்பி விட முடிய வில்லை. தமிழகத்து செய்திக் கலாச்சாரத்துக்கு தீனி போட வும் முடியவில்லை. ஒரு மனிதர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று எழுதிய செய்தியால் தூங்கமுடியாத தமிழகம் கொதித்தெழுந்து வந்து பத்திரிகை அலுவலக த்தை சூறையாடுகிறது. ஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் என்று சும்மா இருக்க முடியாத  அறிவுத் தமிழகம் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது சரியா என்று எதிரும் புதிருமாக களத்தில் இறங்குகிறது.

இப்பொழுதல்ல இது வரலாற்று நெடுகிலும் கல்வெட்டுக்களால் எழுதப்பட்ட நமது வீரம். நாட்டில் பஞ்சம் பசி பட்டினி,கொலை கொள்ளை நடந்து கொண்டிருப்பதை அறியாத மன்னன் மனைவியின் கூந்தலில் மணம் எப்படி வந்தது என்று மோப்பம் பிடித்துக்கொண்டு அலைந்தான். அதை பட்டிமன்றப் பொருளாக்குவான். பொண்ணுபிறந்து கல்யாண வயதானால் மணம் முடித்து வைப்பதை விட்டுவிட்டு ஊரைக்கூட்டி போட்டிகள் நடாத்துவான்  புற நானூற்றுத் தமிழன். குடும்பம் நடத்த விளையாட்டும் வீரமும் தெரிந்திருந்தால் போதுமென்று நினைத்த அறிவுத் தமிழகம் அடித்துக்கொண்டு சாகும். உலகம் உருண்டை என்று கண்டுபிடித்துக்கொண்டு  விவாதித்துக் கொண் டிருக் கையில் இமயமலையில் கல்யாணக்கூட்டம்.கூட்டத்தின் சுமை தாங்காமல் தென்பகுதி தராசு போலத் தூக்கியது என்று சரடு விட்டுக் கொண்டலைந்தான். பரிணாமக் கண்டுபிடிப்புகள் தர்க்கமாகிக் கொண்டிருக் கையில் உயர்ந்த கடவுள் ஹரியா சிவனா என்று மயிர்பிளந்து மல்லுக்கட்டிக் கொண்டலைந்தான்.

இப்படித்தான் வெள்ளையன் வந்து அறுநூறு ஆண்டுகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போதும் பொழுது போனது. ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமையாகிக் கிடப்பதை மறந்து அவனவன் மொழி பெரிதா,சாதி பெரிதா சடங்குகள் பெரிதா என்று சண்டையிட்டுக் கொண்டலைந்தார்கள். அப்போதும் டவாலிகளில் இருந்து  ஜில்லாக் கலெக்டர்கள் வரை. சிப்பாய்களில் இருந்து ராணுவ உயரதிகாரிகள் வரை அவனுக்குச் சேவகம்  செய்யப் போட்டி கள் போட்டுக்கொண்டோம். அதற்கு நால்வகை வர்ணக் கோட்பாட்டை துணைக்கழைத்துக்கொண்டோம்.

நான் ஆரியன் எனக்குமட்டும்தான் எல்லாம் தெரியும் எனவே நான் ஆட்சியதிகாரத்துக்கு துணைநிற்கிறேன் என்னைத்தவிர வேறெவனும் அறிவாளியில்லை. நான் வைசியன் எனக்குமட்டுமே வியாபாரம் செய்யத் துப்பிருக் கிறது உனது நாட்டு பொருட்களை என்னிடம் கொடு, நானுனக்கு விற்றுத்தருகிறேன்.நான் சத்திரியன் எனக்கு மட்டுமே சண்டைபோடத்தெரியும் என்னை மட்டும் சிப்பாயாகச் சேர்த்துக்கொள் உனக்காக நான் என்  இந்திய மக்களைக் கொன்று குவிப்பேன் என்று மீசை முறுக்கிக்கொண்டு அலைந்தது இந்தியா.

இதில் என்ன கொடுமை என்றால் அவன் கொண்டுவந்த துப்பாக்கி யாரைக்கொல்ல என்று தெரியாமல் அதன் தொழில் நுட்பத்தில் வியந்து மயங்கிக் கிடந்தான் தமிழன் உட்பட அணைத்து இந்தியனும்.அந்த துப்பாக்கியில் தடவும் கொழுப்பு எதிலிருந்து வந்தது என்று தெரியாமலே அறுநூறு வருடம் பிழைத்துச் செத்தான். இறுதியில் அதில் பன்றிக்கொழுப்பு தடவியிருக்கிறதென்று புரளி கிளப்பிய பிறகு ஒரு பிரிவினர் அடடா என்மதம் இழிவு படுத்தப்பட்டுவிட்டது என்றும். மாட்டுக் கொழுப்பு தடவி இருக்கிறதென்று சொன்ன பிறகு அடடா என் ஜாதி இழிவு படுத்தப்பட்டு விட்டது என இன்னொரு பிரிவும் கலகம் செய்ய ஆரம்பித்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அண்டை நாடுகளொடு சண்டைவேண்டாம் என்கிற பஞ்சசீலக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் உள்ளுக்குள் உள்ளுக்குள் நடக்கும் சாதிமதச்சண்டைகல் உரம்போட்டு வளர்க்கப்பட்டது.

வரலாறு திரும்புகிறது..

ஆம் இப்பொழுதும் கூட மாட்டுக்கறிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. தோழர் சிந்தன் தனது முகநூலில் மாட்டுக்கறி உண்பது ஒரு சமூகத்தின் உணவு முறை என்கிறார். அது பெரிய்ய தகவல் பிழை. இருக்கிற இந்தியப் புலால் உணவுகளில் அது மலிவானது. வரலாற்று வழியான தகவல்களின்படி அது கற்காலத்தோடு மிகத் தொண்மை யானது. கால்நடைகள் பண்டையக் காலத்தில் சாமி கும்பிடுவதற்காக மட்டும் வளர்க்கப்பட்டது என்கிற குறிப்பு எந்தவரலாற்று சுவட்டிலும் இல்லை.வெறும் பாலுக்காகவும் அது கூட்டம் கூட்டமாக  வளர்க்கப் படவில்லை.அப்போது கெலாக்சும்,ஓட்சுக்கஞ்சியும்,நூடுல்சும் அப்போது உணவுப்பழக்கத்தில் இல்லை.
ஆகையால் ஆடு மாடுகள் உணவுக்காகவும்  தோலுக்காகவும், மயிருக் காகவும் மட்டுமே வளர்க்கப்பட்டது. மிகமுந்திய காலத்து யாகங்களில் மாடுகள்தான் யாககுண்டங்களில் பலியிடப்பட்டுப் பின்  பரிமாறப்  பட்டிருக்கிறது என்பது நமது தேவைக்காக மறைக்கப்பட்ட வரலாறு. ஒரு சமுதாய மக்கள் மட்டும்தான்  இதைச் சாப்பிடு கிறார்கள் என்பது பெரும் தவறு. சேரிமக்கள் உழைப்பில் விளைகிற எல்லாம் சேரிமக்கள் மட்டும் உண்பதில்லை. அது போலவே சேரிகளில் வெட்டப்படும் மாடுகள் சேரிகளுக்குமட்டும் உணாவாவதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல உலக கணக்கெடுப்புகளில் கூட மனிதர்களுக்கிணையான ஜீவராசிகளில் மாடுமட்டும் தான் பெரிய ஜனத் தொகை. அதுபோலவே உலக புலால் உணவில் எண்பது சதமானத்துக்குமேல் பீஃப்  எனப் படுகிற மாட்டுக்கறியே. மாடு சாப்பிடுவதால் மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாகிறது என்றால் உலகமக்கள் தொகை அணைத்தும் கீழ்சமுதாயம் என்றாகிவிடுமா ?. உணவு முறையால் மேல் கீழ் என்பது வேதாந்திக்கப் படுவது எப்படியோ அதுபோல ஒரு சமுதாயம் மட்டுமே சாப்பிடுகிறதென்பதும் தவறு. ஆயிரக் கணக்கான தானி யங்கள் அழிந்து வெறும் ஒற்றை நெல்லே உணவானதுபோலவே இந்தியாவில் பலதரப்பட்ட புலால் உணவு வகைகளின் உபயோகமும் குறைந்து கறிக்கோழிக்கு மாறி வருகிறது.

அரிசியும் கறிக்கோழியும் திண்ண வக்கில் லாத ஜனத் தொகையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் யாரும் கணினி முகநூல் வைத்திருக்கவில்லை. இதுபோன்ற விவாதங் களில் முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட முகஞ் சுழித்துக்கொண்டு தன்னை ஆட்டுக்கறி மட்டும் தின்னும் மேட்டுக்குடியாக பாவித்துக்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. மாட்டைப்போலவே ஆடும்,கோழியும்,பன்றியும் வளர்த்து பின் உணவுக்காக கொல்லப்படுகிறது என்பதை இந்திய அறிவாளிகள் லாவகமாக மறந்துபோகிறார்கள். இந்த மறதி அதை உண்கிற ஜனத்தொகை ஜாஸ்த்தி என்பதால் ஆதலாலே அவை ஒஸ்த்தி வகையாக உருமாற்றம் அடைகிறது. இன்னும் ஒரு காரணம் பெரும்பான்மையைக் கைவைத்தால் எதிர்ப்பு வேறுவகையாக இருக்கும் என்கிற பயத்தாலும் கூட இருக்கலாம்.

கடைந்தெடுத்த முதலாளித்துவ நாடுகளினாலும் சரி ,இன்னும் க்ரீடத்தையும் பழம்பெருமையையும் தூக்கிப் பிடிக்கும் மன்னராட்சி நாடுகளிலும் கூடக்காணமுடியாத மிகப்பிற்போக்குத் தனமானது சாதீய அடுக்குமுறை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிற பெரும்பான்மை நிறைந்த இந்தியாவில் இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் தாண்டினாலும் அறிவியல் பூர்வமான மாற்றம் கனவிலும் நிகழாது. ஆண்டுக்கு நூறு சாதிச் சண்டைகள் வேண்டுமானல் கட்டாயம்  நிகழும். எனில் நக்கீரன் அலுவலகத்தில் வீசப்பட்ட கல் ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. அது, சூது வாது வன்மம் குடிகொண்ட சாதியத்தாலானது.

1.11.11

இசைஞானியின் மனைவியின் மறைவுக்கு...


தமிழகத்து வீடுகளில்,தெருக்களில்,சந்தோசத் திருவிழாக்களில், காற்றில், மின்காந்த அலைகளில்,அலைக்கற்றைகளில் கடல்கடந்து வாழும் தமிழர்களின் நினைவுகளில் இரண்டறக் கலந்துகிடக்கிறது இளையராஜாவின் இசை.

மனசை வசீகரிக்கிற இசையைத் தந்த படைப் பாளியோடு வாழ்ந்த அவரது மனைவி திருமதி ஜீவா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.

31.8.11

பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கும் பெரியவர் ஹசாரே இயக்கம்.


லஞ்சத்துக்கும் முன்னாடிப்பிறந்த மூத்த வியாதிகள் அப்படியே தொடர.ஊடகங்களின் ஊதிப்பெருக்கலில்  உச்சானிக்கொம்புக்கே ஏறி விட்டது லஞ்சத்துக்கு எதிரான புரட்சி.எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே பொது செய்தியாக பெரியவர் ஹசாரே உடனடித் தேசிய நாயகனாகி விட்டார்.லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்.ஆமாம்.சாதிச்சான்றிதழ் வாங்குவதற்கு நான் தாசில்தார் அலுவலகத்துக்கு கொடுத்தேன்.தாசில்தார் அலுவலக சிப்பந்தி இருசக்கர வாகனம் வாங்கிப்பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்துக்குப் போனார். வட்டாரப்போக்குவரத்து அதிகாரி தனது அந்தச் சம்பாத்யத்தில் சொத்துவாங்கி அதைப்பதிய பத்திரப் பதிவு அலுவலகம் போனார்.பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் தன்மகனை தொழில் நுட்பக்கலூரியில் சேர்க்க  மூட்டை கட்டிக் கொண்டு போனார்.தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டை சூட்கேசுகளோடு ஆட்சியாளர்களிடம் போனார்.ஆட்சியாளர்கள் தங்களின் நாற்காலி நாட்களை நீட்டிக்க என்னிடம் என் குடும்பத்தாரிடமும் கொடுத்தார்கள்.

சங்கிலித் தொடர்போல நீண்டு பிணைந்திருக்கிற இந்த கண்ணிக்குள் ராம்லீலா மைதானத்து மேடைகளில் அமர்ந்திருப்போர் தொடங்கி தேநீர்க் கடையில் நாளைக் காலையில் லஞ்சம் நாட்டைவிட்டு ஓடிவிடும் என்று கூவுகிற தினத்தந்தியால் உணர்ச்சிவசப்பட்ட போராட்டக் காரன் வரை இணைக்கப் பட்டிருக்கிறான். தாங்கள் கொடுப்பதை கண்ணக்கில் எடுத்துக்கொண்டு வாங்கியதை வருமாண வரிக்காரர்களிடம் மறைப்பது போல மனசாட்சியிடம் மறைத்துவிட்டு சனம் கும்பல்கும்பலாக கூவுகிறது லஞ்சம் ஒழிக என்று. அந்த குரலின் சத்தத்தில் பெரியவர் ஹசாரே உடனடிக் கதாநாயகனாகிவிட்டார். எனில் வில்லன் யார்.

வணிகவியலின் விதிப்படியும் வாழ்வியலின் விதிப்படியும் கொடுப்பவர் இருந்தால் பெறுபவர் இருந்தே ஆகவேண்டும். அதாவது வாங்குகிற வில்லன் யார்.காங்கிரசா ? பாஜகாவா ? திமுகவா ? அதிமுக வா தேதிமுகவா ?. யார் அந்த தேசீய எதிரி. இந்த அமைப்பு. நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய கடைநிலை ஊழியன் சாம்பிளுக்காகப் பிடிபட்டு வேலையிழந்து தெருவில் திரிய லட்சக்கணக்கில் கல்லாக்கட்டுகிற கோமான்களுக்கு முதல் மரியாதை கொடுத்து ஒதுங்கிக்கொள்கிற இந்த அமைப்பு. தனது சாதிக்காரன், தனது மதத்துக்காரன், தனது கட்சிக்காரன் லஞ்சம் வாங்கும்போது கள்ளமௌனம் காத்துவிட்டு எதிர்ச் சாரியில் இருப்பவனை மாட்டிவிடத் துடிக்கும் இந்த அமைப்பு தான் அதன் எதிரி.  ஆதலால் தான் ஜனநாயக அமைப்பின் அடிநாதமான பஞ்சாயத்து முறையில் தனக்கு வேண்டாத சாதி  போட்டி போடக்கூட சகிக்காத மனோபாவமும். சொந்தச் சாதிக்குள்ளே ஜனநாயகத்தை, தேர்தல் முறையை ஏலத்துக்கு விடுகிற திமிரும் வந்து சேர்கிறது.

அதனலேதான் ஒரு மூன்று பேரின் உயிருக்காக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கையில் ஊடகங்கள் ஹ்சரேவின் புகழ்பாடிக் கொண்டிருந்தன. பெரியவர் ஹசாரே பதிரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிப்போனார். செய்தியோ சாப்பாடோ அரசியலோ கொள்கையோ இந்தியர்களுக்கு வீட்டுக்குள்ளே கொண்டுவந்து தரவேண்டும். முதல் நாள் எதிர் வீட்டில் நடந்த திருட்டை  மறுநாள்  செய்திபடித்து தெரிந்துகொள்கிற மனோபாவம் பெருகிக்கொண்டுவரும் இந்த தேசத்தில் புரட்சியைக்கூட தொலைக்காட்சி வழியே நடத்த துடிக்கிற உத்வேகம் பெருகிக் கிடக்கிறது.அதனாலேதானோ என்னவோ முன்னாள் புரட்சியாளர் ரஜினிகாந்தும் இந்நாள் புரட்சியாளர் விஜய்யும் ராம்லீலா மைதானத்துக்குப் போய் மொய்யெழுதிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்தப் படிதாண்டாப் புரட்சிக்கு அன்புத் தோழர் சொர்ணமால்யா தலைமைதாங்கி நடத்தி வந்தகாட்சி அழகானது. அதைப் பார்க்கையில் முன்னக்கூட்டியே நடக்கிற விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் மாதிரியும், முன்னாடி பெரும்பரபரப்பாக பிள்ளையார் பால்குடித்தாரே அதற்கு எழுந்த மக்கள் அலையைப்போலவும் தெரிந்தது.

அடுத்தவீட்டுக்காரி ஆம்பிளப்பிள்ளை பெத்தாலென்று எகிப்து மற்றும் துனீசியாவைப்போல எதாவது செய்யாவிட்டாலும்  அம்மிக் குழவியைப்போல பெரியவர் அன்னா ஹசாரேவைத் தூக்கிவைத்துக் கொண்டது தேசம். அப்பப்பா இந்த பத்திரிகைகள் தங்கள் பெயரையே ஹசாரே மலர்,ஹசாரே மணி, ஹசாரே தந்தி, ஹசாரே எக்ஸ்பிரஸ் என்று போடாததுதான் குறை.   இதை யெல்லாம் படித்த ஒரு கடை கோடி முகம்மதியத்தோழன் விசனப்பட்டார் இப்படியொரு மகான் குஜராத்தில் பிறந்திருக்கக்கூடாதா அப்படிப் பிறந் திருந்தால்  அநியாயமாக பலியிடப்பட்ட அப்பாவி உயிர்கள் பிழைத்துக் கிடந்திருக்குமே என்று. அதே போல விசனப்பட கோடிக்கணக்கானவை பட்டியலில் இருக்கிறது.

ஒரு பதின்மூன்றுநாட்கள் நடக்கும் உண்ணாவிரதம் தேசிய வியாதியைப் போக்கும் அருமருந்தாகுமானால். இந்த தேசம் முழுவதும் பீடித்துக்கிடக்கிற இன்னபிற நோய்களுக்காக வாழ்நாள் முழுக்க உண்ணாநோன்பிருக்க ஆட்கள் வரிசையிலிருக்கிறார்கள். ஆனால் நிலைமை பாரபட்சமானது என்பதை நாம் மகாத்மா காந்தி தொடங்கி நிறைய்ய வராலாற்று உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம்.  அதோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் மூச்சை மட்டுமே சுவாசித்து வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமகாலப்போராளி இரும்புப்பெண் பற்றி ஒரு வரிச்செய்தி கூடப்போடிருக்குமா இந்த ஊடகங்கள். மணிப்பூர் மலைகளில் இருந்து இறங்கிவந்து அந்த மக்களுக்கு ராணூவச்சட்டம் AFSPA 1958 யிலிருந்து விடுதலைவேண்டுமென சன்னம் சன்னமாய் செத்துக்கொண்டிருக்கிற ஐரோம் சர்மிளாவைப்பற்றி எத்தனை தினத்தந்தி வாசகர்களுக்குதெரியும். குறைந்த பட்சம் மணிப்பூர் இந்த தேசத்தில் இருக்கிற இன்னொரு மாநிலம் என்பது கூடத்தெரியுமா ?

அப்துல்கலாமை வரிக்குவரி எழுதுகிற சினிமா வசனகர்த்தாக்கள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் ராணுவம் பிடித்துக்கொண்டுப்போன தங்கள் வீட்டு ஆண்களின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற வலிபற்றி  எழுதி யிருக்கிறார்களா. மாட்டை கறிக்காக அடிப்பது உயிர்வதை என்பதை வலியுறுத்தக்காட்சிகள் அமைக்கிற படைப்பாளிகள் கயர்லாஞ்சியில் நடந்த கொடுமைகள் பற்றி சினிமாவில் பேசாவிட்டாலும் சரி குறைந்த பட்சம் தங்களுக்குள்ளாவது பேசிக்கொள்வார்களா ?.

இது எடுபடாத கேள்விகள்.

ஆனால் எடுபடுகிற கேள்வி ஒன்றிருக்கிறது. ஹசாரேவின் இந்த இயக்கத்தினால் லஞ்சம் ஒழியப்போகிறதோ இல்லையோ கட்டாயம் ஒரு ஆளும் அரசு ஒழிந்து விட வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. சரி அது ஒழிந்த பின்பு எது ? அதற்காகத்தான் இந்த ஊடகங்கள் ஓடி ஓடி பரபரப்பாக்குகின்றன. உண்மையான விடுதலைப் போராட்டததை மறைத்துவிட்டு மகாத்மாவை முன்னிறுத்திக் காங்கிரசுக்கு ஜெண்டாத் தூக்கிய அதே ஊடகங்கள் தங்களின் ஜெண்டாவுக்குப் பின்னாடி ஒரு அஜண்டா ஒளித்து வைத்திருப்பதை உற்று அவதானித்தால் புலப்படும்.
ஆவணப்படம் afspa 1958
ஆவணப்படம் afspa 1958
http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.htmlhttp://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.html

http://timesofindia.indiatimes.com/india/Iron-lady-of-Manipur-calls-Anna-Hazare-campaign-somewhat-artificial/articleshow/9825079.cms

22.6.11

பஞ்சாயத்து தலைவர் பதவி பொது ஏலத்துக்கு


ஒரு உயர்வுநவில்ச்சிக்காக முன்னமொருமுறை இப்படி எழுதியதாக ஞாபகம் இருக்கிறது.அது இப்போது செய்தியாக வந்துவிட்டதில் ஆச்சர்யமும் சந்தோசமும் இல்லை. மாறாக பெரும் சஞ்சலம் வந்துசேர்கிறது. இப்படியே போனால் அரசாங்கத்தைக்கூறு போட்டு வித்துருவான்.என்று நாம் கோபத்தில் சொல்லுவது  இப்போது மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நான் சொல்லவந்தது அதுவல்ல.இந்த ஆண்டு ஊர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரப்போகிறதில்லையா.அந்தத்தேர்தலில் அவரவர் போட்டியிடுவதற்குத் தான் தங்களை எல்லாவகையிலும் தயார் படுத்திக்கொண்டிருப்பார்கள்.ஆனால் ஒரு பஞ்சாயத்தில் பதவியை ஏலத்திற்கு விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் களாம். ஏலத்தொகை ரூபாய் இருபது லட்சமாம்.

எந்தப்பஞ்சாயத்து என்றுகேட்கிறீர்களா. ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாவும் மையம் கொண்டிருக்கிற நம்ம மதுரை மாவட்டத்தில் தான் இந்த பொது ஏலமுறை அமலுக்கு வந்திருக்கிறது.மதுரைமாவட்டம் உசிலம்பட்டி த்தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி (செல்லம்பட்டி என்றால் நீங்கள் மறந்திருக்கக் கூடும் இங்குதான் சென்ற முறை ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் மற்றும் சிபிஎம் விசிக கட்சிகளின் பெரும் போராட்டத்தில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல் நடந்தது.) ஒன்றியத்தில் உள்ள அய்யனார் குளம் ஊராட்சித்தலைவர் பதவியின் தற்போதைய மார்க்கெட் விலை 20 லட்சம்.நன்றி தீக்கதிர் நாளேடு.22.6.2011.http://www.theekkathir.in/index.asp

15.4.11

அக்கம் பக்கம் அரசியல் பராக்கு பார்த்தல் 5


வெகுதூரம் நிற்காமல் ஓடிய ஓட்டைப்பேருந்து போல. நிற்கப்போகும் போது நெடு நேரம் உருமி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தேர்தல்.திரும்ப  இயக்குவதற்கு  இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.அதுவரை அது மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்கும்.அதுவரை திருவாளர் தேர்தல் ஆணையம்தான் ஒரு மாத முதல்வர்.அப்புறம் நம்ம அம்மா ஜெயித்து விட்டால் தமிழகத்தில் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் வந்தே தீரும். ஆதலால் ஜப்பான்,சீனா,மாதிரி இங்கு நில நடுக்கமும் சுனாமியும் ஒருக்காலும் வராது. மாறி மாறி இந்த அதிமுகவும் திமுகவும் வந்து போனாலே போதாதா?.நித்தம் நித்தம் பத்துச்செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவனுக்கு சவுக்கடி வலிக்காது. சரி இது எப்போ மாறும் என்று அப்பாவியாகக் கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்ல வரிசையாக விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், தனுஷ்காந்த் என்று ஒரு பெரும் பட்டாளம் வரிசையில் நிற்கிறது.( தகுதியு திறமையும் பொங்கி வழிகிற எதிர்கால முதல்வர்கள் எவெரேனும் விட்டுப்போயிருந்தால் தயை கூர்ந்து தழிச்சமூகம் என்னை மன்னிக்கட்டும்).

பிடிக்கும், பிடிக்காது கொள்கை அரசியல் கூட்டணி அரசியல் எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு நான் வருந்துகிற ஒரே விஷயம் அய்யா வைகோ அவர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத்தான்.திமுக வை விட்டு வெளியேறி தனியே ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் 2011 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று என்னைப்போல நினைத்த எண்ணிக்கையிலடங்கா தமிழர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி விட்டது சமகால அரசியல்.தான் பேசவேண்டியதை மண்டபத்தில் எழுதி வாங்கி வாசிக்காத பேச்சாளன். நிறைய்ய இலக்கியம் படிக்கிறவர்,நிறைய்ய உலக அரசியல் படிக்கிற வாசகர். பாவம் இந்தச்சதுரங்கக் காய்நகர்த்தலில் கட்டங்களுக்கு வெளியே நிற்கிறார்.அந்தப் பாவத்துக்கு பரிகாரம் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த தமிழகம் அனுபவிக்கப்போகிறதோ தெரியவில்லை.

அதுகிடக்கட்டும் அரசியல். எனக்கு ஜெயலலிதா அவர்களை நிறைய்யப் பிடிக்கும் நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த அத்தணை படங்களையும் குறைந்த பட்சம் நாலு தரமாவது பார்த்திருப்பேன். குறிப்பாக தெய்வமகனும், கலாட்டாக்கல்யாணமும்,இன்ன பிறவும்.புற்கள் நிறைந்திருக்கும் அந்த மலை முகடுகளில் எஸ்பிபி குரலை தன்குரலாக்கிப் ’போட்டுவைத்த முகமோ’ என்று பாடும் போது எற்படுகிற பரவசம் சொல்லில் அடங்காது.

நடிகை என்று சொன்னவுடன் பழய்ய நடிகைகளில் ஒருவர் நடிப்பு அலாதியாக இருக்கும் அவர் பேர் சட்டென நினைவுக்கு வரவில்லை.அவரது தனிச்சிறப்பு வாய்ந்த நடிப்பும் அதைவிடப்பிடிக்கும்.தோசைக்கரண்டியை முகத்து நேரே நீட்டிக்கொண்டு பேசுகிற மாதிரி சோத்தாங்கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுவார்.கோபம் சந்தோசம்,பரிதாபம்,திகைப்பு என எல்லாவற்றிற்கும் தோசைக்கரண்டியையே நீட்டுவார்.

தோசை என்று சொன்னவுடன் இப்போது படாரென்று நினைவுக்கு வருவது மதுரை. மதுரைக்குள் சமீபமாக நுழைகிற எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கையில் ஒரு அருவாளும் வாயில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் என்கிற வார்த்தையும் தான்.தன்னை துதிபாடாத எதையும் மதுரைக்குள் நுழைய விடுவதில்லை என்பதில் வெற்றிபெற்ற அவர் ஆட்சியர் சகாயத்தின் வரவால் கதிகலங்கிப்போனார்.காலம் தோசையத் திருப்பிப் போட்ட மாதிரி போட்டுவிட்டது.

கடைசியாக ஒன்று கிட்டத்தட்ட சாத்தூர் முழுவதும் இருப்பவர்கள் 200ம் வரப்போகிறவர்கள் 50ம் விநியோகித்துவிட, விட்டுப்போனது எங்கள் ஏரியா தான்.என் ஜி ஓ காலனி, குயில்தோப்பு எல்லாம் நடுத்தரவர்க்கம் இருக்கிற கான்க்ரீட் வீடுகள்.எனவே இரண்டு பேரும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஆத்திரம் அடைந்த ஒரு அம்மா கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டவரை இப்பொழுதுவரை அவளே இவளே என திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

7.3.11

சே’ யின் புகழ்மிக்க பயணத்தில் உடன் சென்றவர் மறைந்தார்


முதலாளித்துவம்,அதன் கொடுக்கான ஜனநாயகம் ஆகியவை மூடிமறைக்கிற ஒரு பெயர் உண்டு. அதுஒரு பொட்டலம் கட்டப்பட்ட நெருப்பு.அது ஒரு நீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்ட காற்று.அதுதான், அந்தப் பெயர்தான் உலகநாயகன் சேகுவாரா. 


எங்கோ பிறந்து மருத்துவம் படித்து பின் துப்பாக்கி தூக்கிய அரசியல்வாதி. துப்பாகியைக்கீழே வைத்துவிட்டு கியூப மக்கள் கொடுத்த அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவன்.அண்டை அயல் நாடுகளில் தொடரும் அடிமைத்தனத்தை எதிர்க்க தன் அமைச்சர் பதவியைத்தூக்கி எறிந்துவிட்டு காடுகளுக்குள் சென்றவன். என் கால்களே என் வீடு என்று சொன்ன நடோடி புரட்சிக்காரன் சே 

அவனோடு பிராயத்தில் காடுமேடு சுற்றி அலைந்த அவனது தோழன்  அல்பெர்டோ பற்றிய செய்தி தீக்கதிர் ( 07.3.2011) நாளிதழில்.

1952ம் ஆண்டில் லத்தீன்- அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற சே குவேராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் கூட்டாளியாகச் சென்ற ஆல்பர்ட்டோ கிரா னாடோ சனிக்கிழமை யன்று ஹவானாவில் மர ணம் அடைந்தார். அவ ருக்கு வயது 88.

1961 ம் ஆண்டு முதல் கியூபாவின் தலைநகர் ஹவா னாவில் வாழ்ந்த அவர் இயற்கை மரணமடைந்தார். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளராக சே குவேரா உருவாவதற்கு கிரானாடோவும் சேயும் மேற்கொண்ட பயணம் மிகப் பெரும் காரணமாக அமைந்தது. அருதப் பழ சான மோட்டார் சைக்கி ளுக்கு, வலுவான என்ற அர்த்தம் கொண்ட லா போடரோசா என்ற ஸ்பா னிஷ் பெயர் சூட்டி, அதில் இருவரும் பயணித்தனர்.

1952 ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட இப்பய ணத்தின் பதிவுகளை இரு வரும் குறித்து வைத்திருந் தனர். இவற்றைப் பயன் படுத்தி ‘தி மோட்டார் சைக்கிள் டயரீஸ்’ என்ற பெயரில் 2004ம் ஆண்டில் வெளியான திரைப்படம் சர்வதேசப் புகழ்பெற்றது.

அர்ஜென்டினாவின் கார்டோபா நகரில் 8.8. 1922ல் கிரானாடோ பிறந் தார். சே குவேராவும் கிரா னாடோவும் சிறுபிராயத் தோழர்களாகவும். மருத் துவக் கல்லூரி மாணவர் களாகவும் இருந்தனர். 1952ம் ஆண்டில் தென் அமெரிக்காவில் பயணம் செய்தனர். சிலி, கொலம் பியா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் வறுமை கோரத் தாண்ட வத்தை இருவரும் கண்ட னர். பெரு நாட்டில் தொழு நோயாளிகள் குடியிருப்பில் இருவரும் தங்கினர்.

வெனிசுலாவில் இரு வரும் பிரிந்தனர். தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை யில் கிரானாடோ பணியில் அமர்ந்தார். பயணம் முடிந்த பின் சே மருத்துவப் படிப்பை முடித்தார். பிடல், ரால் காஸ்ட்ரோக்களுடன் இணைந்த சே குவேரா கியூபா புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

சே அழைப்பின் பேரில் 1960ல் கியூபாவைச் சுற்றிப் பார்த்த கிரானாடோ 1961ல் ஹவானா பல்கலைக்கழகத் தில் பயோ கெமிஸ்ட்ரி கற்பிக்கும் பணியில் ஈடுபட் டார். பெருமைமிகு தலைவ னோடு தனக்கிருந்த நட்பை பெரிதும் மதித்த அவர், அதனைப் பெரிதுப்படுத் திக் கொள்ளவில்லை.

தன்னுடைய உடல் எரிக்கப்பட்டு சாம்பலை கியூபா, அர்ஜென்டினா மற் றும் வெனிசுலா மீது தூவப் பட வேண்டுமென்று கிரா னாடோ தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ‘சேகுவேரா வுடன் ஒரு பயணம் - ஒரு புரட்சிக்காரனின் உருவாக் கம்’ என்ற நூல் உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆவணங் களில் ஒன்றாகும்.

1.2.11

உத்தப்புரம், தாமரைக்குளம். வெட்ட வெட்டத் தழைக்கும் விஷச்செடிகள்.


திரும்புகிற திசையெலாம் கணினி வளர்ச்சியைத்தம்பட்டம் அடிக்கும் காட்சிகள். வாகன நெரிசலும்  மனித கூட்டமுமக தமிழகத்தின் தலை நகரம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நேற்று மஹாத்மா காந்தி  நினைவு தினம் ஒருபக்கம். இன்னொருபக்கம் உத்தப்புரம் முத்தாரம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாக்கிற பண்பாடு இருப்பதை இந்தச் செய்திகள் செவிட்டிலறைந்து உணர்த்துகின்றன.

இதே நாளில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு அருகில் உள்ள தாமரைக்குளத்தில் இருந்த சுமார் 30 தலித் வீடுகளில் 23 வீடுகளை அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கியிருக்கிறது அருகில் இருந்த தமிழ் இனம். இந்த செய்தி ஆளும்கட்சி எதிர்க்கட்சி நடுநிலை ஊடகங்கள் எதிலும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள். எட்டுக்கோடியா பத்துக்கோடியா தெரியவில்லை. எம் தமிழர்களுக்கு மத்தியில் இருக்கிற எரியும் பிரச்சினைகளில் இந்த இடிப்பு பிரச்சினை எங்கே வெளிவரப்போகிறது.காரணம் என்னவாக இருந்து விடப்போகிறது. 1975 ஆம் ஆண்டு கூடக் கொஞ்சம் நெல் கேட்டார்கள் என்பதற்காக உயிரோடு வைத்து எரித்தார்கள். இப்போது சுவரொட்டி ஒட்டினர்களாம் அது பிரச்சினையாகி இருக்கிறது. இது சகஜம் தானே. ஆனால் என்ன சுவரோட்டி என்று கேட்டால் இன்னும் விநோதமாக இருக்கும். தமிழர் இறையாண்மை மாநாடாம். இதையெல்லாம் பேச உனக்கென்ன அருகதை இருக்கிறது என்கிற கொடூரமான கேள்விதான் இந்த 2011 ன் வெண்மணிச் சம்பவம்.

இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் ஒதுக்கப்பட்டவர்கள் தங்கள் நெஞ்சைப்பிளந்து பிளந்துதான் தங்களின் பற்றுதலை அறிவிக்கவேண்டிய கொடூரம் நீடிக்கிறது. ஆனாலும் கூட நானும் தமிழன் நீயும் தமிழனா என்கிற ஆன்ம விசாரணை சக தமிழர்களின் மத்தியில் நடந்து கொண்டே இருக்கிறது. இது உனக்கான வேலையில்லை கோரிக்கையில்லை என்பதை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது தமிழ்ச்சமூகம்.

ஜாதி மத பிரதேச கல்வி கலாச்சார பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து கனகனவென எரிந்துகொண்டிருக்கிறது தலித்துகள் மீதான வெறுப்பு. இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கு ஆறுமுறை சென்ற போதும் உத்தப்புரம் ஆவணப் படத்துக்காக இரண்டு முறை சென்ற போதும் மிகத் துள்ளியமாக இந்த அதிர்வுகள் தெரிந்தது. குறிப்பாக திருமாவளவன் கிருஷ்ணசாமி  ஜக்கையன் என்கிற பெயர்களைக்கேட்ட மாத்திரத்திலேயே தலித்தல்லாதவர் முகத்தில் ஒரு  ஒவ்வாமை கொப்பளித்துவிடுகிறது. அவர்களின் பேச்சிலும் பேட்டியிலும் தெரிந்த இயல்பு ஒருகனம் ஸ்தம்பித்துப் பின்னர் தொடர்வதை அவதானிக்க முடிந்தது. நாங்க எப்போதும் போல சகஜாமாத்தா இருக்கோம் இவிங்க வந்துதா கலவரத்த உண்டு பண்றாய்ங்க என்று ஒரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே  ’எப்பா ஏ தோழரு ஒங்க கட்சிக்காரய்ங்க வந்துருக்காங்க’ என்று சொல்லுகிறார் ஒரு இருவத்தி எட்டு வயதுக்காரர் அறுபத்தெட்டு வயது முதியவரைப் பார்த்து. ஒரு வலிபர்  இன்னும் ஒருபடி மேலே போய் அந்தா பாருங்க ’அவிங்க தலித் அவிங்களையும் எங்களையும் ஒண்ணா நிக்க வச்சா கண்டு பிடிக்க முடியாது’ என்று சொன்னார்.ஆஹா அழகாகச்சொல்லுகிறானே அரிஸ்டாட்டில் என்று நினைத்தோம்.’அவிங்க போட்ற செருப்ப பாத்தீங்களா அவிங்க போட்ற பேண்ட பாத்தீங்களா எங்கள விட அவிங்கதான் நால்லாருக்காங்க’ என்று ஒரு போடு போட்டார்.

கழுதைகளும் நரிகளும் நாய்களும் வாசம் செய்கிற இடத்திலே தான் வசிக்கவேண்டும். கிழிந்த உதாவாத ஆடைகளைத்தான்  அணிய வேண்டும். இறந்தார்களில் எலும்புகளில் கோர்க்கப்பட்ட அணிகலன்களைத்தான் அணியவேண்டும். அவர்கள் கல்வி கற்கக்கூடாது. மீறிக் கற்பாரேயாகின் ஈயத்தைக் காய்ச்சி  அவர்கள் காதுகளில் ஊற்றவேண்டும். இது அனுலோமா பிரதிலோமாக்களுக்காக வரையறுக்கப்பட்ட மனுஸ்மிருதி. அந்த வாலிபர்களுக்கு மனுஸ்மிருதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதைப் படித்திருக்கவே முடியாது. எனினும் அதன் சாரம் இன்னும் அவர்களிடம் மிச்சமிருக்கிறதை அவர்களே அறிய வாய்ப்பில்லை.

வெண்மைப்புரட்சி பசுமைப்புரட்சி நீலப்புரட்சி குடும்பக் கட்டுப்பாடு தொழுநோய் ஒழிப்பு அம்மைநோய் ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியா எட்ட முடிந்ததை இந்த தீண்டாமை விஷயத்தில் மட்டும் முடியாமல் போனது ஏன் என்று முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் அவர்களின் பேட்டியின்போது கேட்டோம். அதற்கு அவர் 2000 வருட நோயை இருபது வருடங்களில் குணப்படுத்துவது கடினம் என்று சொன்னார்.
ஒரு ஆட்சியர் அப்படித்தான் கருத்துச் சொல்லமுடியும். அதை மீறிச்சொல்ல முடியாத கோடுகள் நிறைந்ததிந்த அமைப்பு. இது மேலோட்டமாக பார்க்கையில் கேட்கையில் துல்லியமான லாஜிக்காக தோன்றும். ஆனால் அது இயற்கையல்ல அது விஞ்ஞானம் அல்ல அது புரட்சிஅல்ல. மாற்றங்களின் குணாம்சம் அப்படிப்பட்டதும் அல்ல.

23.1.11

நேர் செய்யப்படாத கணக்குகளை காலம் சீர் செய்யும்


நாற்பத்து நான்குநாட்கள் உக்கிரமாக நடந்தது போராட்டம். இந்திய வங்கி ஊழியர் வரலாற்றில் அதிக நாடகள் நடந்த வேலை நிறுத்தம் அது.மன்னாரங்கம்பெனி மாதிரி சாப்பாட்டைக்கட்டிக்கொண்டு வந்து சங்க அலுவலகத்தில் பகிர்ந்துகொடுத்துவிட்டு சீட்டு விளையாண்ட நாட்கள் அந்த வேலை நிறுத்த நாட்கள். மாதாமாதம் கையில் கிடைத்த கௌரவச்சம்பளத்தை உரிமைக்காக இழக்கத்துணிந்த மாதம் அது.அதைச் சரிக்கட்ட சிக்கண நாணயச்சங்கத்தில் உடனடிக்கடன் ஏற்பாடு செய்தது எங்கள் சங்கம். தளராத போர்க்குணத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்வாகம் இறங்க எத்தனித்தது. ஆனால் வெற்றி நெருங்கிக்கொண்டிருக்கும் போது பிரித்தாளும் விதிப்படி ஒரு சாரார் ஊடுசெங்கல் உறுவக் கிளம்பினார்கள். த்ரோக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தக் கையெழுத்துக்களின் மூலம் நீங்காத கறையை ஏந்திக்கொண்டனர் ஒரு பகுதி தலைவர்கள்.

நம்பி வந்ததற்கு இதுதான் கதியா என்று ஒரு கூட்டமும் துரோகத்தை தோலுரிப்போம் என்று இன்னொரு கூட்டமுமாக ஒரு மாபெரும் ஒற்றுமை ரெண்டாகப் பிளந்தது.கொலையை விடக் கொடூரமானது நம்பிக்கைத் துரோகம்.ஏக்கர் கணக்கில் நெல்விவசாயம் வட்டித்தொழில் இவைகளோடு பரம்பரைச் சொத்திருந்து பெருமைக்கு வங்கிவேலைக்கு வந்தவர்கள்  செய்த நாச வேலையை முதல் தலைமுயாய் அரசுப்பணிக்கு வந்த தோழர்கள் முதல் முதலாய்ச்சந்தித்தார்கள். அவர்களின் ஒரே கையிருப்பான ரோசத்தோடு தாக்கத்துணிந்தார்கள். தப்பித்து ஓடிய தலைவனை ஏந்திக்கொள்ள நிர்வாகம் தயாராக இருந்தது. அடுத்தடுத்து பதவி உயர்வு. அடுப்படிக்குப் பக்கத்தில் மாறுதல்.என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டு தட்டிக்கொடுக்கிற விசுவாசமுமாக ரத்தினக்கம்பளம் விரித்தது. நிர்வாகமும் துரோகமும்  நெருங்கிய நட்பானார்கள். நீதி நெடுநாள் நோஞ்சான் பிள்ளையாய்க்கிடந்தது.

ஆதிக்க வெறியோடு உலகை ஆட்டுவித்த ஹிட்லர் எப்படிச்செத்தான் என்பதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எர்ஷாத்தின் பல்லைக்கொண்டு தான் அவனது காலத்தை இறுதிசெய்தது மரணம்.அதே போல  காட்டிக் கொடுத்தற்கான கூலியைக் கையில் வாங்கியவர்களுக்கு துரோரோகத்துக்கான சம்பளம் தரப்படாமல் இருந்தது. நேர்செய்யப்படாத கணக்கை காலம் சீர்செய்கிறது.

இதே போல இன்னொரு செய்தி அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகள். (தீக்கதிர் 23.1.2011)

அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அவர்கள் பணியாற்றச் செல்வதுதான் முக்கியமான காரணம் என்று அந்நாட்டு ராணுவத்துறையே கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவமே அறிக்கை யொன்றைத் தயாரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2010ல் பணியில் இருக்கும் 156 ராணுவத்தினர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர் என்கிறார் அமெரிக்க தரைப்படைத் துணைத் தளபதி பீட்டர் சியாரெல்லி.

ராணுவத்தினர் மட்டுமல்லாமல் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து பணியாற்றும் சிவிலியன்கள் ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போர்ப்பணியில் இல்லாத ராணுவத்தினர் ஆகியோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களையும் சேர்த்து 2010 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 343 ஆகும். 2009 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 69 பேர் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது ஒரு காரணமாகச் சுட்
டிக்காட்டப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்பு ஆகியவையும் இத்தகைய தற்கொலை
களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மத்திய கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

7.11.10

ஓபாமாவிடம் கேட்கப்பட்ட அசட்டுக்கேள்வி.

தீபாவளிக்காக கரியாக்கப்பட்ட பொருளாதாரத்தைவிட அதிகம் திரு.பாரக் ஓபாமாவின் வருகைக்காக இந்தியா ஒதுக்கியது.செலவுக்கதிகமான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் கூடிக்கொண்டே போனது. எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,கருத்து மோதல்கள் என ஊடகங்களின்மூலம் அல்லோல கல்லோலப்பட்டது தேசம்.சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பர நேரத்தில் இடம் பிடிக்காதது மட்டும் தான் குறை. எல்லாம் ஒரு அமெரிக்க அதிபர் சம்பிரதாய வருகைக்காக.

வந்தவர் மும்பை புனித சேவியர் கல்லூரியின் மாணவர்களோடு உரை யாடினார். கேள்விகளும் பதிலுமான அந்த நேரத்தை உலகம் உற்றுக் கவனிக்கிறது. ஒரு மாணவி 'ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்கவில்லை, ஏன் இன்னும் நீங்கள் நட்பு பாராட்டுகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறாள். இந்தக்கேள்வியும் அதற்கு திரு.பாரக் ஓபாமா சொன்ன பதிலும் தான் இந்த நிமிஷத்தின் தலைபோகிற பிரச்சினையாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல வேளை ஜாவேத் அக்தாரை மெல்லமாக பந்துவீசச் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை.

'டைம்ஸ் நௌ' தொலைக் காட்சியின் நேரலையில் மும்பைத் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கபட்டுக் கொண்டிருக்கிறது.பிரதம செய்தியாளர் மும்பை,டெல்லி போன்ற நகரங்களின் நிருபர்களோடு தொடர்பு கொள்கிறார் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவர்களும் பதறுகிறார்கள்.அங்கிருந்து இஸ்லாமாபாத்துக்கு தொடர்புகொண்டு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளரிடம் பேசுகிறார்.தொழில் நுட்பத்தின் சகல தகிடு தத்தங்களையும் உபயோகித்து  அவரது பதிலை ஒரு எறிகிற பிரச்சனையாக்குகிறது தொலைக் காட்சி வியாபாரம்.

அடிப்படையில் அமெரிக்கா ஒரு ஆயுதவியாபார தேசம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டாவது பாகிஸ்தானைக் 'கிள்ளுகிறான் முள்ளுகிறான்' என்று சொல்லி பிராது கொடுக்கிற அளவுக்கு அமெரிக்கா ஒன்றும் சட்டாம்பிள்ளையில்லை.அது ஒரு உலக நாட்டாமையும் இல்லை.உலகத்துக்கே நீதிசொல்லுகிற அளவுக்கு மனிதவளமும், அறிவுத் திறனும் இருக்கும் 117 கோடி ஜனத்தொகை கொண்டவர்கள் நாம்.அதை மறந்து அமெரிக்காவிடம் நியாயம் கேட்கிற அளவுக்கு இந்தியா கையறுநிலைக்குப் போய்விட்ட காரணம் என்ன?பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து விடுவதன் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்.லாபமிருக்கா இல்லையா வெனத்தெரியாது.ஆனால் அறிவித்தால் அது அமெரிக்காவுக்கு எவ்வளவு நஷ்டம்.

போபால் விஷ வாயுக் கசிவினால் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலம்,பிடி கத்திரிக்காய்,காப்புரிமை,அனு ஆயுதபரவல், சந்தைப் பொருளாதாரம் போன்றவை குறித்து அமெரிக்காவிடம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரமாயிரம் இருக்கிறது.அது பற்றி அந்தப்பெண்ணுக்கு தெரியுமோ தெரியாதோ. 

இதையெல்லாம் தெரியாத ஒரு மாணவியின் அசட்டுக்கேள்வியை இந்த தேசத்தின் கோரிக்கையாக்கப் பார்ப்பது எவ்வளவு கபடம் நிறைந்தது. இது ஒரு மாணவியின் அசட்டுக் கேள்வி மட்டுமல்ல ஒரு 63 ஆண்டுகாலம் ஊட்டிவளர்த்த வெறுப்பின் பிரதிபலிப்பு.ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட இந்த பகைக்குப்பின்னாடி மிகப்பெரிய மேல்மட்ட அரசியல் இருக்கிறது. அதற்குப் பின்னாடி சர்வ நிச்சயமாக ஊடகங்கள் இருக்கின்றன.(அந்தக்கேள்விக்கு ஒரு நீண்ட பதிலைச்சொல்லிய திருமிகு ஓபாமா இறுதியில் 'இரு நாடுகளும் உட்கார்ந்து பேசித்தீர்க்கவேண்டிய விடயம் இது' என்று சொல்லுகிறார்.)இந்த ஊடக நாடகத்தின் தொடர்ச்சியாக இன்று மாலை அரசு முறைச் சந்திப்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திப்பதையும், 20 நிமிட நேரம் தனியே உரையாடுவதையும் அறிவிக்கிறது. ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிறது என்பதை போகிறபோக்கில் சொல்லி விட்டுக்  கடந்துவிடுகிறது.

சாமான்யன் முதல் அறிவு ஜீவி வரை எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டு பொழுதுபோக்க புனித சேவியர் கல்லூரி மாணவியின் கேள்வி.மேல்மட்ட இந்தியா இன்னும் கொழிப்பதற்கு தங்கு தடையில்லாத ஒப்பந்தங்கள்.

17.10.10

சீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்

இந்த வார 20.10.2010 ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.'சீனாவின் அமைதியைக்கெடுத்த அமைதிப்பரிசு'.திரு ஆரோக்கியவேல் எழுதியிருக்கிறார்.சீனக்கவிஞரும் தியானமென் எழுச்சியின் தலைவர்களில் ஒருவருமான கவிஞர் 'லியூ சியோபோ'வுக்கு கிடைத்த நோபல் விருதைப்பற்றியதான கட்டுரை அது.இந்தக்கால எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.நோபல் விருது கிடைத்தது தெரியாமல் சிறக்குள்ளிருக்கும் லியூ வுக்கு அவரது மனைவி மூலம்,தகவல் சொல்லப்பட்டதாகவும்.தகவல் சொல்லப்போன மனைவி என்ன ஆனாள் என்று தெரியாமல் போனதாகவும் எழுதிக்கொண்டே வந்து 'உலகின் மிகப்பெரிய  சிறைக்குப்பெயர்தான் சீனாவோ' என்று முடிக்கிறார். நல்லா இருக்குல்ல ?. இந்த முடிவின் வார்த்தைகள் ஒரு கவிதைபோல வந்து விழுந்திருக்கிறது.அருமை ஆரோக்கியவேல்.

0

ஒரு நாடு அதன் மக்களுக்கு எதுவாக இருக்கவேண்டும்.சீனா உண்மையிலேயே சிறையா இந்தக்கேள்விகள் ஊடகங்களின் வழியாக நம்மை வந்து சற்று ஆட்டிவிட்டுப்போகிறது.இது ஒன்றும் புதியதல்ல.உள்ளூர் அரசியல் வாதிகள் தகரம் கண்டுபிடிப்பதற்குமுன்னமே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் என்று வசைபாடுவதும் அமெரிக்கா தனது இலக்கியங்கள் அணைத்தையும் பொதுவுடமைக்கு எதிராகாக்கூர்தீட்டி விடுவதும் புதிதல்ல.தனது காமிக்ஸ் கதைகள்தொடங்கி உலகு புகழ் ரா ரா ரஸ்புதீன் பாடல்கள் வரை ரஷ்யாவை எதிரியாக்கியிருக்கும் அமெரிக்கா.அதன் சாகச கதநாயகர்களான ஜேம்ஸ்பாண்டுகள் ஒத்தை ஆளாய் சீனாவுக்குள்,ரஷ்யாவுக்குள்,தென்கொரியாவுக்குள்,க்யூபாவுக்குள் புகுந்து அதகளப்படுத்தி ஜெயித்துவிட்டு கடல்வழியே நாயகியோடு சல்லாப பயணம் மேற்கொள்வார்கள்.

அவர்களது ஜனங்களை சிந்திக்கவிடாமல் செய்ய அங்கே அதுதான் மேம்படுத்தப்பட்டபோதை. நமக்குத்தான் நாட்டுப்போதைகள் அதிகம் கிடைக்கிறது. அவை யாவன என்று கேட்கறீர்களா?. ஒண்ணா ரெண்டா சொல்லுவதற்கு. சின்ன வயசில் கம்யூனிசம் என்றால் இருக்கிறவர்களிடம் வழிப்பறி செய்வது என்று சொன்ன உள்ளூர் காங்கிரஸ் தாத்தா முத்தையாவின் அறியாமைதான்  எனக்கான அறிமுகம்.என்னைப்போல 90 சதமான இந்தியர்களுக்கும் அடித்தட்டு ஜனக்களுக்கான அறிமுகம் அதுவாகத்தான் இன்னும் இருக்கும். அதுபோலத்தான் சீனாவும் ஒத்தைக்கண்ணன் அறிமுகம். இந்திய சீன எல்லைப்போரின் போது

'ஐ சக்க ஐ அரைப்படி நெய்;
சீனாக்காரன் தலையில
தீயப்பொருத்தி வை'

என்கிற தேசபக்தி ரைம் மூலம் சீனா அறிமுகமானது.பக்கத்து தெருக்காரனிடம் சண்டையென்றால் சொந்தத்
தெருக்கார ஈ, காக்கா, குஞ்சுகளும் எதிரிப்பட்டை பூசியே தீரவேண்டும்.இப்படியான சின்ன ஆனால் மிகப்பெரிய உளவியல் பாதிப்போடு தான் எல்லோரும் இயங்கவும் வேண்டும் இல்லையா ?.சமீபத்தில் சீனா பற்றிய தேடலில் கூகுலுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே வாய்க்காத் தகறாராகிப்போனது தெரியவந்தது. அங்கே இருக்கிற பைடு டாட்காம் கூகுலுக்கு வியாபார எதிரியாகிப்போனதால் விக்கிப்பீடியாவில் சீனா பற்றிய தகவல் இல்லை. அதானாலாயே அது இரும்புத்திரை நாடு என்று சொல்லிவிடலாமா?.

ஒரு சராசரி சீனக்குடிமகனுக்கும்,பணக்கார சீனக்குடிமகனுக்கும் உள்ள வருமான இடைவெளி 362 டாலரிலிருந்து,1142 டாலர் என்று சொல்லுகிறது பிரிட்டிஷ் பத்திரிகை.அதுதான் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியென்றும் சொல்லுகிறது. இதை ஒருநாளைக்கு நாப்பது ரூபாய் கூட கூலிகிடைக்காமல் திண்டாடும் என் 20 சதமான இந்தியர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்லமுடியும். 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' திட்டத்தால் 250 கோடி ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டதாக அதுவே சொல்லுகிறது.நிலப்பரப்பிலும் மக்கட்தொகையிலும் நமக்கு நிகரான சீனாவின் தனிநபர் வருமாணம்,தனிநபர் சுகாதாரம் எல்லாம் திருப்தியளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் சொல்லுவதில்லை.  clean energy என்று சொல்லப்படுகிற இயற்கை எரிசக்தியை உபயோகிப்பதில் உலக நடுகளில் முதலிடத்தில்  சீனா நிற்கிறது என வாஷிங்டன் போஸ்ட் இதழ் சொல்லுகிறது.கட்டிடம்,காகிதம்,தீக்குச்சி போன்ற தளவாடங்களுக்கு மரத்தை வெட்டுவதில்லை என்கிற முடிவெடுத்ததால் தீப்பெட்டி தயாரிக்கும் பழய்ய தானியங்கி எந்திரங்கள் தென் தமிழ்நட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன.

அதை வாங்கப்போன ஒரு தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் 'அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது' என்கிற கனிப்பு பாரபட்சமானதாக இருக்கமுடியாது.இது போதாதா வேறென்ன வேண்டும்.ஜனநாயகம் வேண்டுமாம், மதநம்பிக்கைக்கான விடுதலை வேண்டுமாம்.ஹப் புக்கு போக உரிமை வேண்டுமாம்.ஐயயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ எடுக்க அனுமதி வேண்டுமாம்.5 டாலர் கொடுத்து காப்பிகுடிக்க விடுதலை வேண்டுமாம்,பொது இடங்களிலும்,தொடர்வண்டிகளிலும் பான்பராக் எச்சிலைத்துப்புகிற ஜனநாயகம் வேண்டுமாம்.தாய்ப்பால் தவிர இந்த பூமியின் அணைத்து படைப்புகள் மீதும் விலைப்பட்டியல் ஒட்டிவிடுகிற போட்டிவேண்டுமாம். அழிக்கவே முடியாத லஞ்சமும் ஜாதியும் பிணைந்துகிடக்கிற சௌஜன்யம் வேண்டுமாம். இதெல்லாம் கொடுக்காத சீனா ஒரு சிறையென்றால், சிறையே.

1991 அல்லது அதற்கு முந்தைய தேர்தலா என்று தெரியவில்லை வேட்பாளர்களின் சொத்துமதிப்பை இதே ஆனந்த விகடன் வெளியிட்டது. அதை மீண்டும் பொக்கிஷம் பகுதியில் போட்டுக் காண்பித்தால் இந்த விடுதலை பெற்ற ஜனநாயம் சம்பாதித்தது எவ்வளவு  என்று தெரிந்துகொள்ளலாம்.

19.9.10

வலையுலகில் நுழையும் சிட்டுக்குருவி.

கரிசல்காட்டிலிருந்து  இன்னொரு வலைப்பதிவர்.
ஒரு இரண்டு ஆண்டுகள் வலைத்தளங்களைக்
கேலி செய்தபடி அதன் மீது ஒரு கண் வைத்திருந்த
தோழர் விமலன்

இன்றுமுதல் வலைத்தளத்திற்குள் காலடி
பதிக்கிறார். காக்காச்சோறு, தட்டாமாலை ஆகிய
தொகுப்புக்களின் ஆசிரியர்.தமுஎகச வின் விருதுநகர்
கிளைநிர்வாகி,தொழிற்சங்கவாதி இப்படி பன்முக
அடையாளம் கொண்ட தன்னை முன் நிறுத்த
ஆசைப்படாத குணாம்சம் கொண்ட தோழர்.
இதோ தனது கவிதையோடு வலையுலகில்
களம் இறங்குகிறார்.

வரவேற்போம்
சிட்டுக்குருவி தளத்தில்
தோழர் விமலனை.

14.8.10

ஊழல் மொய்க்கிற தேசம்.

எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் தலைப்புச்செய்திகள் இந்த தேசத்தை மூழ்கடித்துக்கொடிருக்கும் முடைநாற்றத்தைச்சொல்லும் சேதிகளாகவே இருக்கிறது.கேதன் தேசாய்,கில்,அமித்ஷா,செத்துப்போன ராஜீவ் காந்தி,போபால்,டௌ கெமிக்கல்,இப்படி இந்திய துனைக்கண்டத்தை ஆளும் அரசர்களும் அவர்களின் நேரடி ஏவலாட்களான உயர் அதிகாரிகளும்,அவர்களை இயக்குகிற பெருமுதலைகளும்  ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்க குற்ற விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். இதில் எதிர்க்கட்சி- ஆளும்கட்சி பேதமில்லாமல் எல்லோரும் ஜெயிக்கிறார்கள் தோற்றுப் போனது ஜனநாயகமும் அதைக் கட்டிக்காக்கும் மக்களும் தான்.

சென்ற வாரம் சிவகாசிக்கு அருகில் ஒரு வெடி விபத்து நடந்தது சட்டவிரோதமாக பட்டாசுதயாரித்தவர்களைப்பிடிக்கப்போன காவல் துறை மற்றும் வருவாய்த்துறை முதல் நிலை அதிகாரிகள் ஒன்பதுபேர் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள்.தேடுதல் வேட்டைக்குப்போனவர்கள் பலியான விபரங்களை முன்வைக்கும் செய்திகள் முரண்பாடுள்ளதாக இருக்கிறது.பத்திரிகைச் செய்திகளும் வாய்மொழிச் செய்திகளும் அரசு நிர்வாகத்தின் கையாலாகத்தன்மைக்கு மிகப்பெரிய உதாரணம்.

சிவகாசியைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் அமோகமாக நடைபெறுவது இன்றல்ல நேற்றல்ல.அதற்கு ஒரே காரணம் மோசமான கூலியும்,அமோகமான லாபமும் தான்.அதைக்கண்டு கொள்ளாத தொழிலாளர் நலத்துறை மட்டுமல்ல அந்தத் தொழிலைக் காபந்து பண்ணும் இன்னும் அதிகாமான துறைகளும் தான். பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் என்பது மத்திய கலால் துறை,மாநில விற்பனைவரித்துறை,வெடிபொருள் மற்றும் சுரங்கத்துறை,வருவாய்த்துறை,தொழில்துறை,மாசுகட்டுப்பாட்டுத்துறை என்கிற துறைகளின் கட்டுப்பட்டிலும்,கண்காணிப்பிலும் இயங்குகிறவை.ஆனால் அந்தந்த துறைகளின் கட்டுப்பட்டுத்திறமை என்ன என்பதை வருடா வருடம் நடக்கும் விபத்துக்கள் நாறடிக்கின்றன.

இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மத்தியப்பிரதேசத்திலிருந்து இன்னொரு பூதம் கிளம்புகிறது.இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி இது.600 டன் வெடிபொருட்கள் காணவில்லை என்று கைபிசைகிறார் அதை ந்ர்வகிக்கும் நேர்மைமாறா உயர்திரு. உபாத்யாய்.அதோடு நில்லாது எனக்கு பொறுப்பில்லை என்கிறார்.எல்லாம் உண்மை.மக்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் எல்லாமே இங்கு சாத்தியம்.




600 டன் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் மாயம்:தீவிரவாதிகள் கடத்தலா? சாகர், ஆக.13-

600 டன் வெடிபொருட் கள் ஏற்றப்பட்ட 61 லாரி களைக் காணவில்லை. இத னால் மத்தியப் பிரதேசத் தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. இவற்றை நக்சலைட்டு கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியி லிருந்து இந்த வெடி பொருட்கள் ஏற்றிய லாரி கள் மத்தியப் பிரதேச மாநி லம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ் புளோ சிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டன. மொத்தம் 61 லாரி களில் 600 டன்னுக்கும் மேற் பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெடி பொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ் புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத் யாய் கூறுகையில், உரிய உரிமங்களுடன் வந்த லாரி களில்தான் இந்த வெடி பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற் போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக் குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார். இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்ட வையாகும். அதில் டெட்ட னேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற் போது பூட்டப்பட்டுள் ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடி பொருட்களை அந்த நிறுவ னத்திற்கு அனுப்பினர் என் பது தெரியவில்லை. கணேஷ் வெடிபொருள் நிறு வனத்தின் உரிமையா ளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாது காப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட் டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலி ருந்துதான் டெலிவரி செய் யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாய மான சம்பவம்பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாகூர் உள்ளிட்டவர் கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிறு பான்மை மக்கள் மீது பழி போட முயன்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், இந்த பாணி யில் வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இப்போது பெருமள வில் வெடிபொருட்கள் கடத்தப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

17.9.09

இரண்டு நடைமுறைகளால் ஆன தீபகற்பம்.








அன்று சனிக்கிழமையாக இல்லாதிருந்தால் அவள் பள்ளிக்கூடம் போயிருந்திருப்பாள். இப்போது அவளும் கூட ஒரு பட்டாதாரி ஆகியிருக்கலாம். வாச்சாத்தி மலை மக்களை காவல் துறையும் வனத்துறையும் சேர்ந்து துவம்சப் படுத்தியபோதுஎட்டாம் வகுப்பு படித்த பரந்தாயி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு உங்கள் முன்நிற்கிறாள்.1992 ஆம் வருடம் ஜூன் மாதம் 20 ஆம் தேதி நடந்த கொடூரத்தின் வாழும் சாட்சியாக கிடக்கும் 2500 க்கும் மேற்பட்டமக்களில் ஒருத்தி சகோதரி பரந்தாயி. பரந்து கிடக்கும் கண்ணீர்க் கடலின் ஒரு துளி இந்த பரந்தாயி.( தீக்கதிர் 15.9.09)



அந்த சோகக்கடலின் ஒவ்வொரு அங்குளத்தையும் எழுத்து துடுப்பால் கடத்துகிறது சோளகர்தொட்டி எனும் ச.பாலமூகனின்நாவல். நாளேடுகளின் மூலையில் கவனிப்பாராற்ற செய்தியாக வந்துபோகும் இதுபோன்ற வன்கொடுமைகளைப் பட்டி யலிடுகிறது ஒரு வலைப்பக்கம். அது ஒரு தனி என்சைக்ளோபீடியாவாக விரிந்து கிடக்கிறது. அங்கு போய்விட்டுத் திரும்பினால் இந்த தேசம் முழுக்க சூன்யத்தால் மட்டுமே நிறம்பிக்கிடக்கிற மனோநிலை மேலிடுகிறது. ஆயிரமாயிரம்செய்திகள் ஒடுக்கப்பட்ட ஜனங்களின் மேல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளாக மிரட்டுகிறது. பெரும்பாலானவை காவல்துறையாலே நிகழ்த்தப் பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அவற்றில் முக்கால்வாசிக்குமேல் வஞ்சிக்கப் பட்டவர்கள் பெண்களே.



godown country என்றும், கல்வியறிவு அதிகமுள்ள மாநிலம் என்றும் வர்ணிக்கப்படும் கேரளத்தில் உள்ளது அட்டப்பாடி.சுமார் 2500 மலைவாழ் மக்களின் ஜனத்தொகை கொண்ட இந்தப்பகுதியில் சுமார் 345 முதல் 400 வரை கல்யாணமாகாததாய்மார்கள் ( unwed mothers - கன்னித்தாய்மார் ) இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கிறது. காரணம் அங்குள்ள அகாலி மாணவியர் விடுதியில் தங்கிப்பயிலும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதிக் காப்பாளர்களின் வற்புறுத்தலின் பேரில் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்படுவது. இதனால் கற்பமடைபவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் போதைக்கும், விபச்சாரத்துக்கும் மீண்டும் மீண்டும் அடிமையாவதாக உண்மை கண்டறியும் குழு தெரிவிக்கிறது. இதே போல கன்னித்தாய்மார்கள் ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பினத்தில் அதிகம் இருந்ததாக பல கருப்பினப் புதினங்கள், புனைவுகளும் முன்வைக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து வெகுகாலமாகிறது.



இந்த உலக உருண்டைக்குள் ஜீவிக்கிற மனித இனத்தில் யாருக்கும் ஒரு விபத்துப்போல நேரலாம். விசை 25 வது இதழில் வந்திருக்கிற த.அரவிந்தனின் " புனித மனங்களில் புரளும் புளுக்களின் குறியீடு " எனும் நிகழ்புனைவு, தொடர்ந்து பலாத்கரத்திற்கு ஆட்படுத்தப்படும் பெண்கள் அதை ஆதரிக்கிறார்களா இல்லை ஏற்கிறார்களா? ஏன் ஒரு முறைகூட அவள் எதிர்வினை ஆற்றாமல் விடுகிறாள்? என்னும் கேள்வியை, அதாவது அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைக்கிறது. "உனது பற்களும் நகங்களும் எங்கே போயின" என்று ஒரு வரலாற்றுக் கேள்வியைக் கூட நாம் கடந்து வந்திருக்கிறோம். இவை யாவும் வெகு மக்களின் மனோநிலையில் இருந்து கிளம்பும் அறிவார்ந்த கேள்விகள்.



ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னர் சாத்தூர் காவல் நிலையத்துக்கு ஒரு புகார் வந்தது. ஆலை முதலாளியின் பையன் அங்கு கூலிவேலை பார்த்த பெண்ணொருத்தியோடு உறவு வைத்திருந்து அது பௌதிக மாற்றமாகி அவள் கருவுற்றாள். அதுவரை உலகறியா மறைபொருளாக இருந்த ஒன்று பொதுப் பிரச்சினையாக உருமாற்றமானது, கற்பத்தினாலே. வழக்கம் போல காவல் நிலையம் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்துவைத்தது. எப்படி ? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டாருக்கு நஷ்ட ஈடு கொடுத்து சமரசம் செய்துவைத்தது. ( அனுலோமா)



இதே உறவு ஒரு கூலிக்கார ஆணுக்கும் ஆலை முதலாளியின் மகளுக்குமாக இருக்கும் போது கிட்நாப்பிங், மொலாஸ்டேசன், திட்டமிட்ட சதி, நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு முன்னாள் கட்டயத்திருமணம், எனும் வழக்குகள் பதிவாகியிருக்கும். அல்லது கூலிக் கொலைகாரர்களால் அவன் உயிரோடு எறிக்கப்பட்டிருப்பான், அல்லது மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையிலேற்றி ஊர்வலமாக வந்திருப்பான். ( பிரதிலோமா)




இப்படி இரண்டு நடைமுறைகள் இந்த தீபகற்பத்தில் மிக இயல்பாக நடக்கிறது. அதனால் தான் "கழுதைக்குப் பின்னாலே போகாதே கச்சேரிக்கு முன்னாலே போகதே" என்று ஒதுக்கப்பட்ட ஜனங்கள் காவல்துறையை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். கஞ்சி குடிப்பதற்கிலாத, அதன் காரணங்கள் இதுவென்றறிந்திராத இந்த ஊமை ஜனங்களுக்கான சரியான, முழுமையான குரல் எங்கிருக்கிறது ?