ஒரு முன்மதிய நேரத்து
குளிர் நினைவுகளை ஊடறுக்கும்
தூரத்து வேலிக்குயிலின் தேடலும்
கூட்டி விட்டுக்கூட வரும்
தனிமையின் ராகத்தோடு.
பின் தொடரும் வாகனச் சலனங்களில்
பிரிந்து போய் சக்கரம் முன்னும்
நினைவுகள் பின்னுமான பயணத்தில்
சுகந்தப் புல்லாங்குழல் ஊடிசையாய்
சுதி சேர்க்கும் கருவேலம் பூக்கள்.
ஈரம் கோர்த்த பகற்பொழுதின்
கடிகார நகர்வில் இனிப்புத்தடவி
இழுத்துச் செல்லும் அளவான ஆல்கஹாலும்
அன்புகோர்த்த நட்பின் வார்த்தைகளும்.
எல்லாவற்றையும்...
எங்கிருந்தோ கேட்கும் சுவர்ணலதாவின்
சினிமாத் தனிமைப் பாடல்களின் வழி
மீளக்கொண்டுவரலாம் வாழ்வின்
ரசம் மிகுந்த நேரங்களை.
