அப்போது கொடைக்கானல் ரோடுவேய்ஸ்,ஜெயவிலாஸ்,லயன் ஆகிய மூன்று பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.எனக்குத்தெரிந்து சாத்தூருக்கும் ஒத்தையாலுக்கும் இடையிலான கட்டணம் வெறும் பதினைந்து காசுகள்தான்.பேருந்தில் போய் வர சில நியதிகளும்,சில வசதிகளும் தேவைப்பட்ட காலம் அது.அதுவும் கொடுக்கமுடியாமல் நடந்துவந்த ஜனங்கள் தான் ஏராளம்.சாத்தூரிலிருந்து எல்லா ஊர்களுக்கும் குறுக்குப்பாதைகள் இருந்தன. அவை பாதசாரிகளுக்கானது.போகிற வழிகளில் ஆலமரம்,ஊருணி அல்லது கமலைத்தோட்டம் கட்டாயம் எதிர்ப்படும்.அங்குபோய் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு செத்த ஆசுவாசப் படுத்திக் கொண்டு நடையைக்கட்டுவார்கள்.
நடந்து போகையில் அலுப்புத்தெரியாமல் இருக்க பழமை பேசப்படும்.அல்லது சேதிகள் சொல்லப்படும். பயண காலமானதால் பெரும்பாலும் பேருந்துப் பயணங்கள் பற்றியே கதைகள் இருக்கும்.ஜெயவிலாஸ் பேருந்தில் மதுரை போய் திரும்பி வந்தார் பால்ராஸ் சின்னையா. அந்த ஒருநாள் கதையை கிட்டத்தட்ட ஒரு மாசம் சொல்லுவார்.அதில் நடத்துநரும்,ஓட்டுநரும் தான் பிரதானப்பாத்திரங்கள்.
ஜெயவிலாஸ் பேருந்தின் நடத்துநர் வேல்ச்சாமியைப் பற்றியும் கொடைக்கானல் பேருந்தின் ஓட்டுனர் பற்றியும் தெரியாத சனங்கள் இருக்கவே முடியாது. கடைசி டயத்துக்கு ஊருக்குள் வரும் ஒவ்வொரு நடையைப்பற்றியும் ஒரு கதை இருக்கும்.கொடைக்கானல் வண்டியின் டைவர்ருக்கு அப்போதே அறுபது வயதுக்கு மேலிருக்கும்.அப்படித்தான் ஒருநாள் மேட்டுப்பட்டி தாண்டி வந்துகொண்டிருந்தது வண்டி சீரெங்கா புரத்துக்கும் மேட்டுப்பட்டிக்கும் நடுவில் நிறுத்தி விட்டார்.
அப்போதெல்லாம் இரண்டு ஊர்களுக்கு நடுவில் நிறுத்தி டிக்கெட்போட்டு இன்வாய்ஸ் எழுதி முடித்துவிட்டுத்தான் வண்டியெடுப்பார்கள்.அதற்காகத் தான் நின்றுபோனதென்று சனம் நினைத்துக்கொண்டது.நல்ல ஓடைக்காடு கிய்யிருட்டு ஒதுங்கி ஒண்ணுக்கிருக்க தோதான காடு.அப்படித்தான் என்று கண்டக்டர் நினத்துக்கொண்டார்.வண்டி ஒரு அரைமணிநேரமாக நகல வில்லை. பத்துமணியானதால் பாதிப்பேர் தூங்கிப் போனார்கள். கண்டக்டரும் கூட கண்ணசந்துபோனார்.முழிச்சுப்பாத்தா வண்டி ஆணியடிச்சா மாதிரி அதே எடத்துல நிக்குது.டைவர் வட்டப்பிடிச்சமானிக்கு ஒக்கந்துருக்கார்.
’ பாழாப்போனவனே நீயுந்தூங்கிட்டியா’
கத்தினார் கண்டக்டர்.
’வெங்காயம், நடுரோட்டுல ஆள் நிக்கான், ஆர்ணு கண்டா, களவானியா சாக வந்தவனா தெரியல. கையும் ஓடல காலும் ஓடல நீயி பாட்டுக்கு மயிரு போச்சினு கொறட்டவிட்டுட்டுருக்கெயே’
கருப்பையாண்ணன்.(டைவர் தான்) கத்தினார்.
அந்தக்காலத்தில் சிப்பிபாறை கந்தசாமி என்கிற வாரண்டுக்கு தப்பியவர் காடுகளில் அலைவதாக கதைகள் இருந்தது.( மலையூர் மம்பட்டியார் போல இவருக்கும் ஒரு நாடோடிக்கதை உண்டு).இப்போது கண்டக்டர் பச்சைக் கனியண்ணனுக்கும் உதறலெடுத்தது.படாரென்று யோசனை வந்தது.நல்ல கட்டுமஸ்தான பயணிகளில் நாலுபேரைக்கூப்பிட்டு காதுக்குள் விஷயத்தைச் சொன்னார்.இறங்கி மக்காடச்சேத்துப்பிடிச்சி கையைக் காலைக் கட்டிப் போட்டுவிடுவதெனத் தீர்மானமானது. பூனை போல இறங்கினார்கள்.ஆள் அசையவில்லை.
கொஞ்சம் எட்டத்துல போனப்பிறகு கெக்கெபிக்கெவெனச் சிரித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். சிரிப்புச்சத்தம் கேட்டு தூங்கியவர்கள் எழுந்தார்கள். சேதி கேட்டு அவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.காலையில மொத வேலையா ஒரு கண்ணாடி வாங்கிப்போடணும் என்றபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணினார் கருப்பையா அண்ணாச்சி.ஊர் போகந்தட்டியும் குலுங்கி குலுங்கி நகர்ந்தது கொடைக்கான் வண்டி.
வேறொன்றும் இல்லை ஒரு பழய்ய மைல்கல் ஆளுயரத்துக்கு உண்டு.நீண்ட காலத்துக்குப் பிறகு அதுக்கு வெள்ளையடிச்சிருந்தான் ஹைவேய்ஸ்காரன்.