நேற்று முன்தினம் போய்
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த
தொழில் நுட்பக்கல்லூரியில்
துண்டுபோட்டுவிட்டு வந்தாச்சு
நாளைதான் தேர்வு முடிவுகள்.
இருபது வருஷ சம்பாத்யத்தில்
வாங்கிய துண்டின் விலை இரண்டு லட்சம்.
கண்டும் காணாததுக்கு பிஎஃப் இருக்கு
அதுவும் காணாதென்றல் அவளது சங்கிலி
அப்பாட தகப்பனின் கடமை முடிந்துபோனது.
தேர்வுகள் நடக்குமுன் வினாத்தாள்
முடிவுகள் தெரியுமுன் அட்மிஷன்
கட்டணம் நிர்ணயிக்குமுன் பட்டுவாடா
இனி சட்டப்படி கவுன்சிலிங்.
அப்பாட அரசின் கடமை முடிந்தது..
ஆனால்
இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கு
ஒரு சிறு கடமை இருக்கிறது
அது இன்னும் தெரியாமலே இருக்கிறது.
