Showing posts with label அவள் அப்படித்தான். Show all posts
Showing posts with label அவள் அப்படித்தான். Show all posts

5.2.12

சூழ்ச்சியால் பேசப்படாது போன - அவள் அப்படித்தான்.

இன்று அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு உள்ளூர் கேபிள் மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்து  பாடல் கள் ஒலி_ஒளி பரப்பினார்கள். கடவுள் அமைத்துவைத்த மேடை,கம்பன் ஏமாந்தான்,பன்னீர்புஷ்பங்களே என மிக மிக நெருக்கமான பாடல்களாக இருந்தது. எழுபது  எண்பதுகளின் பாடல்கள். எல்லாமே என் கல்லூரிக்  காலங் களின் பாடல்கள். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பாடல்கள். ஆனால் அது முழுக்க  கமல காசனின் படங்களாக இருந்ததால் கமலகாசனின் பாடல்கள் என்றுதான்  தமிழ்ச் சினிமா சொல்லும்.

முன்னாடி  கமலகாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது அபூர்வராகங்கள் மற்றும் நிழல் நிஜமாகிறது ஆகிய இரண்டு படங்களால் சிவாஜியிலிருந்து கமலுக்கு உருமாற்றமான ரசனை. இரண்டிலும் ஒரு அசல் கோபக்கார  இளை ஞனாக சித்தரிக்கப் பட்டிருப்பார் கமல். பிற்பாடு அந்த ரசனையை ரஜினிக்கு  மாற்றிக் கொண்டேன் காரணம் இன்னும் அடர்த்தியான கோபம் அவரிடமிருந்து வெளியானதாக நான் நம்பியதால் வந்த வினை இது.

இதெற்கெலாம் சிவாஜியோ,ரஜினியோ,கமலோ காரணமில்லை அதன் இயக்குனர் தான் என்பதை அறிந்த போது எனக்கு அவள் அப்படித்தான் என்கிற படமும் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்கிற படமும் மிக மிக  நெருக் கமான படமாகத் தெரிந்தது. இந்த இரண்டில் அவள் அப்படித்தான் படத்தை குறிப்பிட்டுச்சொல்லியே தீரவேண்டும். தமிழ் இலக்கியச் சூழலில் சில எழுத்தும் எழுத்தாளர்களும்  கவனிக்கப் படாமல் போனது போல அவள்  அப்படித் தான் படமும் கவனிக்கப்படாமல் போனது. அதே காலத்தில் வெளியான பாரதிராஜாவின் படங்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கான தூண்டுகோலாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவற்றில் பெண்கள் பெண்ணடிமைக் கலாச்சாரத்தைத் தூக்கிபிடிக்கும் பழய்ய பதுமைகளாகவே முன்னிருத்தப்பட்டார்கள். அவள் அப்படித்தான் அப்படி யில்லை.

1980 ஆம் வருஷம் சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் திரையிடப் பட்டது. அப்பொழுதெல்லாம் சினிமா சகலரையும் விழுங்கும் ஒரு ராட்சஷ பொழுது போக்காக இருந்தது.புதுப்படம் திரையிடப்பட்ட முதல் நாள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கி அரங்கில் உட்காருகிற தமிழகம் தங்களுக்கான தேவைகள் எல்லாவற்றையும் கண் ணெதிரே பூதாகரமாக ஒளிரும் திரைம் தரும் என்று நம்பினார்கள். இன்னமும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். இந்த நம்பிக்கையிலிருந்து  விலகிய இலக்கியம் காலங் காலங் காலமாக தோற்றுப் போய்க்கொண்டே  இருக்கிறது. அவள் அப்படித்தான் படமும் அப்படித்தான். மூன்றே நாட்களில் படத்தைத் தூக்கிவிட்டார்கள். மொத்தம் முன்னூறுபேர் கூடப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.அந்த மூன்று நாளில் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு மூன்று முறைபார்த்தோம்.

இன்றுவரை தமிழ்ச் சினிமாவுக்கென ஒரு நேர்கோடு  இருக்கிறது. அந்தப்படம் அதற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கிறது.

ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் காதலிப்பது. ஒரு சீப்பு வாங்கவேண்டுமானால் கூட ஆயிரம் முறை யோசிக்கிற சனம் பார்த்த நொடியில் காதலில் விழு வதான கற்பனை. அப்படியே அவளைப் பூஜிப்பது. அவளது மினுக்கல் களை மட்டும் விஸ்வ ரூபப்  படுத்துவது. அவளிடம் மனது என்கின்ற ஒன்றிருப் பதை லாவகமாக ஒதுக்கித்தள்ளுவது.ஒரு பெண்ணை காதலிப்பது , அதற்கு எதிரான சவால் களை சாதுர் யமாக எதிர் கொள்வது. அவங்கப்பனைக் கொன்றுவிட்டு அவளை  மண முடிப்பது.

கொடுமை.  ஒரு பெண் இந்த உலகத்தில் முதன் முதலில் நெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பது தனது தகப்பனிடம் என்கிற அறிவியல் உண்மையை ஹீரோயிசச் சாணியால் மூடி மறைத்த சினிமாக்கள் தான் இன்னும் அறி யாமையிலிருந்து மீள விடாமல் நம்மை அமுக்குகிறது.

அவள் அபபடித்தான் அப்படியில்லை. ஒருமுறைதான் காதல் வரும் எனும் சப்பைச் சிந்தனைகளை. தொட்ட வனையே கட்டிக் கொள்ளவேண்டும் என்கிற அதி பயங்கர சர்வாதிகாரச் சிந்தனைகளை மௌனமான அடியால் நொறுக் குகிற படம் அது. காதலன் காதலி நுனி விரலைத் தொட்டதும் மின்சாரம் பாய்ச்சுகிற கற்பனைகள் இல் லாத படம். ஒரு பெண்ணின் அவயவங்களைத் தொட்டுப்பார்க்க விடலைப் பையனுக்கும் ஆசைவரும்என்பதைச் சொல்லும் படம். அதை ஒரு சின்ன ஷாட்டில் சொல்லுகிற படம். காதலை பூஜை அறை யில் வைக்கிற சரக்காக ஆக்காத படம். ஆகவே அந்தப்படம் மக்களால் பெரி தும் பார்க்கப்படாமல் போனது.

ஆனால் அதிலும் நாம் சொல்லச் சின்னசின்னக் குறைகள் இருக்கிறது  அவளைப் பற்றி பேசுவது ஒரு ஆண் என்கிற குறைதான். அது எதனால் வந்த தென்றால் அதை உருவாக்க ஒரு பெண் இயக்குநர் இல்லை என்பதே. பெண் கள்  தனி யாகச் சினிமாவுக்குப் போகமுடியாத ஒரு மறைமுக தாலிபான் மனோபாவம் இருந்த இருக்கிற யுகத்தில் நாம் பெண் இயக்குநர்களுக்கு எங்கே போக?

பெண் மட்டுமல்ல இந்த சினிமா ஊடகத்தின் வழியே பேசப்படாது போன குரல்கள் ஒரு கோடியிருக்கும்.அதற்கு மேலும் இருக்கும். அந்தக் குரல்கள் தியேட்டர் இருளில், இடைவேளைக் காண்டீன் சலசலப்பில்,கழிப்பறை களில் சிதறிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறன. அவற்றைப் பேசவிடாமல் குரல் நெறிக்கும் வகையில் வியாபார உத்திகள்,அரசியல் சூழ்சிகள்,தொழில் நுணுக்கங்கள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கதைகள் வற்றிப்போய் மீண்டும் மீண்டும் கழிசடைக் கருத்துள்ள ரஜினி படங்கள் மறு அவதாரமெடுக்கின்றன ரத்த பீஜன்களைப்போல.