
நாம் நடந்துபோகிற தெருக்கள், நமது கண்ணில் படுகிற அதே மனிதர்கள், நாம் பார்த்துக் கடந்துபோகிற சம்பவங்களெல்லாமே ஒரு சிறுகதையைச் சுமந்தபடியே கிடக்கிறது. அது எழுத்தளர்களிடமிருந்து பிறந்து அலாதியாகநம்முன்னே வந்து நிற்கிறது. ஒரு சாதாரண மண்குடம் என்ன பேசும் தனது குளிர் நிநைவுகளை, அந்த இடுப்பின் உராய்வுகளை, அந்த வீட்டிலுள்ள அதன் இருப்பிடத்தைச் சொல்லிக்கொண்டே சத்தூரின் தண்ணீர்பஞ்சத்தைச் சொல்லும் மாதவராஜின் " மண்குடம் ". தனது தகப்பனை விட்டுப் பிரிந்துபோய் இன்னொரு மனைதனிடம் வாழ்கின்ற தனது தாய், அவளை பார்க்கப்போகிற மகனுக்கும் தாய்க்குமான அந்தத் தருணம் எந்தக்கொம்பனின் கண்ணிலும் நீர் இறைக்கும் வல்லமை கொண்ட ஷாஜஹானின் " ஈன்றபொழுது ". கோணங்கியின் மதனிமார்களின்கதை, தமிழ்ச்செலவனின் பாவனைகள், உத்யசங்கரின் யாபேர் வீட்டிலும், பவாவின் பாப்பம் பட்டி ஜமா, ஆதவன் தீட்சண்யாவின் கக்காநாடு என்று நீள்கிறது தமிழ்ச் சிறுகதைப் பரப்பு. தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கதைகளின் பட்டியல் ஏராளமாக இருக்கிறது. ஆனாலும் ஒரிய மொழியிலிருந்து பகவதிசரண் பாணிக்ரெகி எழுதி தேவகி குருநாத் மொழி பெயர்த்த ' வெகுமதி ' கதை மிக எளிய கதை. அதன் பிரதான மனிதன் கினுவா வைப்போலவே. ஒரு வேட்டைக்காரர் துப்பாக்கி எப்படிச்சுடுவது என்று தெரியாத, வெறும் வில்லாலும், கணக்கிலடங்கா கொடிய மிருகங்களைக் கொன்று டெபுடி கமிசனரிடம் பரிசு வாங்குவார். இப்படிச் சிறு அறிமுகம் முடிந்த உடனேயே கதை ஆரம்பிக்கிறது அவர் அன்று கொண்டுவந்த தலையிலிருந்து. அது பண்ணையார் சர்தாரின் தலை.ஊரின் மிகப்பெரும் கொடுமைக்காரன், தெண்ட வட்டி வாங்குபவன், பல ஏழைப்பெண்களின் பெண்மையைச் சிதைத்தவன்,அப்படி ஒரு கொடிய மனைதனின் தலைக்கு டெபுடி கமிஷனர் நிறைய்ய வெகுமதி தருவார் என்று கொண்டுவருகிறார். ஒரு சில மதங்களுக்கு முன் ஒரு நல்லவர், புரட்சிக்காரர் ஜபத்சிங்கைக் கொன்றதற்காக, தோராவுக்கு ஐநூறு ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. இவ்வளவு கொடியவனைக் கொன்ற நமக்கு ஆயிரத்துக்கு குறைவாகக் கொடுக்க மாட்டார்கள் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்கிற எண்ணம் எள்ளளவும் குறையாமல் சிறைப்பிடிக்கப் படுகிறார். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் தூக்குத்தண்டனை நிறைவேற்ற கறுப்புத்துணி தலயை மூடும் போது கூட தனது கண்ணைப் பொத்திக் கொண்டு அதிக வெகுமதி தரப்போகிறார்கள் அது கொண்டு வீடு கட்டி, காதல் மனைவிக்கு நகைகள் செய்து மிராசு இல்லாத ஊரில் ஆனந்தமாய் வாழப்போகிறோம் என்று நினைக்கிறார். அந்த நேரம் அவனது கழுத்தை ஏதோ தாக்குகிறது. இப்படித்தான் அந்தக்கதையும் நம்மைத் தாக்குகிறது. இந்தத் துணைக் கண்டத்தில் மனிதப் பரிணாமத்தின் எல்லாக் கூறுகளும் இருக்கிறது. ஆதித் தொல்குடி முதல் கணினி மாந்தர்கள் வரை. அதில் ஒரு வெள்ளந்தி மனிதனின் கதை தலைகீழாக சொல்லப் பட்டிருக்கிறது. பதினோரு பிராந்தியமொழிச்சிறுகதைகள் அடங்கிய ' பாறைகள் ' தொகுப்பு. வெளியீடு சந்தியா பதிப்பகம். |