Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

27.12.15

உலோகங்களை விட அடர்த்தியான துரு





சாமி கும்பிடாததால் அரச இலையை வைத்து பிள்ளையார் உருவம் செய்த க்ராபிக்சை ரசிக்கமுடியாத மரபில் வளர்ந்தவன்.
ஆனால் இளையராஜாவைப்பிடிக்கும் என்பதற்காக ஏனைய இசையமைப் பாளர்களை கிள்ளுக்கீரையாகப்பார்க்கிற மேனாமினுக்கித்தனம் துளியும் கிடையாது. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி பாடலை எங்கு கேட்டாலும் நெக்குருகிப்போகிற இசைக்கிறுக்கு.
 பிரம வதனம் வேண்டும் என்கிற மலையாளப்பாடலையும், கபி கபி இந்திப் பாடலையும் தரவிறக்கம் செய்வதற்காக இரண்டு இரவுகள் செலவழித்த பயித்தியம். இந்த வலையுலககத்திலும் கூட இளையராஜவை சிலாகிக்கிற யாரும் எம் எஸ் வியையோ, ரஹ்மானையோ விமர்சித்து எழுதியதாக ஞாபகமில்லை.

ஆனால் இங்கு பல பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எம் எஸ் வியை பேசுகிற பொழுதெல்லாம் லைட்டா இளையராஜாவை ஒரு தட்டு தட்டாமல் கடந்து போக முடியாது அவர்களால். போனால் அன்று தூக்கம் வராது. இளையராஜாவுக்கு சளிப்பிடித்தாலும் போதும் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவார்கள்.அப்போழுதெல்லாம் மனுநீதிச்சோழனின் மறுபதிப் பைப்போல தங்களைத் தாங்களே தராசாக்கிக் கொள்வார்கள். கவுரவக் கொலைகள் குறித்தோ, இளவரசன் படுகொலை குறித்தோ, பாடகி சின்மயியின் இட ஒதுக்கீட்டு தேற்றம் குறித்தோ கருத்து ஏதும் சொல்லாத கந்தசாமிகள் அவர்கள். இந்த இரண்டு நாளில் ஞாயயம்டா, நீதிடா என்று பெருங்குரலெடுத்து சொம்பில்லாத நாட்டாமையாகிவிட்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒரு பிரச்சினை குறித்து திருமாவளவனிடம் கேள்விகேட்கிறார்கள். அதற்கு அவரும் சிரத்தையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.  வியர்வையையோ அழுக்கையோ  சொரிந்து அதை பார்த்துவிட்டு பின் உதறுகிறார். இதை ஒரு நான்கு தரம்  காட்டுகிற அருவருப்பை என்ன பெயர் சொல்லி அழைப்பது ஊடகதர்மம் என்றா.
ஒரு காமிரா எவ்வளவு உன்னதமானது. மூன்றாவது கண்ணில்லையா அது?.பேட்டியோடு தொடர்புடைய ஆயிரம் காட்சிகளில் எதவதொன்றை காண்பிக்கலாம். அல்லது அதற்கு எதிர்மறையான காட்சிகளைக்கூட வைக்கலாம். இந்த இரண்டையும் விட்டு விட்டு சொரிவதையும் அழுக் கெடுப்பதையும் காட்டுகிற அந்த ஊடகத்தின் மூளையில் எவ்வளவு அழுக்கு இருக்கும்?.

நீயா நானா நிகழ்சியில் ஒருத்தர் எங்க ஜாதிப்பிள்ளைகளை காதலித்தால் வெட்டுவம் குத்துவம் என்று கொக்கரிக்கிறார். திருவாளர் ஊடகம் அப்படி யெல்லாம் பேசப்படாது என்று செல்லமாய்க் கண்டிக்கிறார். அடடே எவ்வளவு காத்திரமாக தனது அறச்சீற்றத்தை முன்வைக்கிறார் என்று வியந்து முடிப் பதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. விகழ்பமில்லாமல் கருத்துச் சொன்னதற் காக வெட்டுவோம் குத்துவோம் என்று சொன்ன பங்கேற்பாளருக்கு பரிசு கொடுத்து முடித்தார்.

நல்ல வேளை அருவாளைப் பரிசாகக்கொடுக்கவில்லை.

கருப்புக்கவிதைகள்



 1

கருப்புக்காதல்
---------------------
கருப்புக்காதல்
தொகுப்பிலிருந்து
பெயரிடப்படாத
ஒரு கருப்புக்கவிஞனின்
வெறுப்புப்பாடல்

நன்றி.
black poems

0
நேர்த்தி ஒருபோதும் நேர்த்தி இல்லை,
உண்மை என்னவெனில்
நானெப்போதும் நேர்த்தி இல்லை.
தவறுகளால் கட்டமைக்கப்பட்டவன் நான்.

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்
அவர்களிலும் நேர்த்தியானவனாகவும்
சிகப்பே புதிய கருப்பாவது போல
வேற்றுமை தான் நிஜ உலகம்.

நான் எப்படி இருப்பதெனவும்
நான் யார்போல இருப்பதெனவும்
நான் மட்டுமே முடிவெடுக்கமுடியும்.

நான் பிறர்போல் நடிக்கமுடியாது
மன்னிக்கவும்
என்னிடம் இல்லாத நேர்த்தியை
இருக்கிறதென்று ஒருநாளும்
என்னால் நடிக்கவே முடியாது.
0

2

கடவுளுக்கும் பிடித்த நிறம்
------------------------------------------------

சத்தியமான உலக அழகி
இரவின் வண்ணம் குழைந்தவள்
சுருள்சுருளான கேசம் அணிந்தவள்
உயர்ந்த தோள்களும் தாழ்ந்த புன்னகையும் படைத்தவள்
அவள் தான்சானியாவிலிருந்து வருகிறாள்
அவளே ஆண்களின் ஆதித்தாய்.

தேனின் நிறம்பெற்றவர்களே தேவதைகள்
அவர்கள் அலபாமாவினின்று வருகிறார்கள்
பசிய கண்களும் தடித்த அதரங்களும்
அகன்ற நாசியும் அதுபோன்றே இடையும் கொண்ட
அவர்கள் சூரியன் உறங்கும் போது
உருவெடுத்த வண்ணம் பூசியவர்கள்
அவர்களின் வளைவுகளை வடிக்கும் போது மட்டும்
கடவுளுக்கு கைநடுங்கவில்லை.

ஆகவே அழகிய கருப்புத்தான்
கடவுவுளுக்கு பிடித்த நிறம்

அழகிய கவிதையின் சொந்தக்காரி
ஆதி அழகின் சொந்தக்காரி

அன்புக்கருப்பி
-திமோத்தி.n.ஸ்டெல்லி







0
3



இது ஒரு கருப்புக்கவிதை.
ஆப்ரிக்க - அமேரிக்க கவிஞனின் வேதனை ஊற்றி எழுதப்பட்டவரிகள்.
கவிஞனின் பெயர் தெரியவில்லை.ஆனாலும் அந்த வலி
எல்லாக்கருப்பின மக்களின்பெயரையும் ஓங்கி உச்சரிக்கிறது

being a black at work place

எனது அன்பை பலஹீனமாக எடுத்துக்கொண்டார்கள்
எனது அமைதியை ஊமைத்தனமென்றார்கள்
எனது தனித்தன்மையை புரியாதபுதிரென்றார்கள்
எனது மொழியை வட்டாரவழக்கென்றார்கள்
எனது உறுதியை மூர்க்கமென்றார்கள்
எனது சிறிய தவறுகளுக்காக என்னை வீழ்த்தினார்கள்
எனது வெற்றியை விபத்தென்று உருவகப்படுத்தினார்கள்
எனது புத்திக்கூர்மையை என்வேலையாகக்குறுக்கினார்கள்
எனது கேள்விகளை என் அறியாமை என்று அறிவித்தார்கள்
எனது முன்னேற்றத்தை தகாதகுறுக்குவழி என்றார்கள்

6.9.15

நான்கு நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்


பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொன்னார் கலிலியோ. பூமிதட்டையானது என பைபிளில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சிதைப்பதால் மத நம்பிக்கைக்கு எதிரானது இந்த கண்டுபிடிப்பு என்று பிரகடனப்படுத்தியது கத்தோலிக்கசபை.  திருச்சபையின் உயர்மட்டக்குழு கலிலியோவை ரோமுக்கு அழைத்தது. போப் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கூற வாய்ப்பளித்து நீதிசெய்தது நானூறு ஆண்டு களுக்கு முந்தைய மூடநம்பிக்கை.  கத்தோலிக்க கார்டினல்களில் பலபேர் கலிலியோவின் அபிமானிகளாய் இருந்த காரணத்தால் அவரது வாதம் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்து மதத்தின் முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைகளை,ஜாதீயக்கட்டுமானங்களை எதிர்த்துக்கிளம்பிய இயக்கங்கள் ஏராளம், அதற்கு ஆணீவேராய் இருந்தது புத்தமதகொள்கைகள்.ஜைனம்,வீரசைவம்,சமணம்,சீக்கியம்,சூவ்பித்ததுவம்,ஆகிய இந்திய புராட்டஸ்டண்டுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததும் புத்தமதம். படையெடுத்துக் கைப்பற்றியதை விட அசோகன் புத்த மதத்தை போதித்துச் சம்பாதித்து அதிகம்.அதனால்தான் கிட்டத்தட்ட 28 முறை போதிமரம் வெட்டப்பட்டது.நாலந்தா பல்கலைக்கழகம் தரைமட்டமாக் கப்பட்டது, நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதனால் தான் இன்றுவரை ஒருகுண்டூசியைக் கூட சொந்தமாக கண்டுபிக்க இயலாத கபோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இந்த 2105 ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதியதால் கல்புர்கி கொல்லப்பட்டிருக்கிறார். ஷீனா போராவுக்கு கொடுக்கப்படுகிற ஊடக முக்யத்துவம்,சாக்‌ஷி மகராஜின் மேல் விழுகிற ஊடகவெளிச்சம் இந்த அறிவுப்படுகொலை யின்மேல் விழமறுத்துவிட்டது. மேலை தேசத்தில் போட்டி விளம்பரத்துக்காகவேணும் இவ்வாறான செய்திகள் எதிர்முகாம்களால் பெரிதுபடுத்தப்படும். அந்தோ இங்கு எல்லோரும் தங்களைத்தற்குறியாக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். அதானல் தான் எல்லா ஊடகங்களும் இதை ஒருவரிச்செய்தியாக்கிக் கடந்துபோய்விட்டன. விலங்குகளுக்கு, பறவைகளுக்கு,சிலைகளுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு,களவாணிகளுக்கு,கொள்ளையடிப்பவனுக்கு,போலிச்சாமியார்களுக்கு இந்ததேசத்தில் இருக்கிற பாதுகாப்பில் 10 ஒரு பங்கு கூட அறிஞர்களுக்கு இங்கே கிடையாது. அதுவே தீராத சாபம்.

3.7.13

தீவிரமாகும் தனிமையின் இசை.

நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது.

21.6.12

வலி மிகுந்த மாற்றம்.

கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த  எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த  மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற  நேரம்,  வண்டி யோட்டுகிற நேரம்,தூங்குகிற நேரங்களில் போன்பேச இயலாது என்கிற சிந்தனை இல்லாமல்  கோபித்துக் கொள்ளுகிற சுந்தரலிங்கண்ணன். சுந்தரலிங்கண்ணன் வாடிக்கையாக ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போன் பண்னுவார். எடுக்காவிட்டால் மறுபடியும் மறுபடியும் அழைப்புமணி அடிக்கும். எடுத்து விட்டால் எலே  சின்னப் பயலே உனக்கு அவ்வ்ளோ திமிராலே என்று தொடங்கி குறைந்தது அரை மணி நேரம் பேசுவார்.  தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகுட்டிகள் எழுந்து விடும். அவளுக்கானால் ரொம்ப நாளாச் சந்தேகம்  வேறு.  ”அர்த்த ராத்திரியில் அப்படி ஆம்பளக்கி ஆம்பள என்ன பேசுவீங்க”  பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.

எங்கப்பா போன?, அவனும் போன எடுக்கமாட்டுக்கான், நீயும் எடுக்கமாட்டுக்க என்று எடுத்ததும் கோபத்தை மட்டுமே வணக்கமாகச் சொல்லும் சன்முகண் ணாச்சி. சுருளி எடுக்காமல்போய் அவள் எடுத்துவிட்டாள் மிகவும் பரிவோடு குசலம் விசாரிப்பார். பிள்ளைகளைப் பற்றிக் கேட்பார். இந்த ஒரு வருடத்தில் ரெண்டே ரெண்டுதரம் மட்டுமே அவரிடமிருந்து போன் வந்திருந்தது. பல முறை அழைத்தும் எடுக்காமல் ஒரு நாள் எடுத்து  என்னப்பா, சீக்கிரம் சொல்லு என்றார். எப்படிண்ணே இருக்கீங்க என்று கேட்டான். இருக் கேன் இருக்கேன் வையி என்று மறுமுனை கட்டானது. படபடவெனக் கண்ணீர் வந்து தொலைத்துவிட்டது. என்ன ஏதென்று கேட்டவளிடம் சொன்னான். எதுக்கெடுத்தாலும் சின்ன நொள்ள கெனக்க அழதுக்கிட்டு,ஆம்பள தான ?, என்று அங்கிருந்து போய்விட்டாள்.

வாரத்துக்கு ஒருமுறையாவது  போன்பண்ணுங்கண்ணே அத மிச்சம் பிடிச்சி எங்ககொண்டு போகப் போறிங்க என்று அன்பை உலுக்கிவிடும் நாசர். இப்படி யான எண்கள் எல்லாம் ஒருகாலத்தில்  நெருக் கமாக இருந்து இப்பொழுது  எட்டாத தொலைவுக்கு போயிருந்தது. ”என்னங்க எல்லார்ட் டயுமா சண்ட போட்டீங்க  முன்ன மெல்லாம் நொய்யி நொய்யின்னு போனடிச் சிக்கிட்டே இருக்கும் இப்பென்ன மாசத்து ஒரு போனக்கூட காணும்” என்கிறவளுக்கு மார்க்சைப் பற்றி என்னசொல்ல ? மாற்றம் சாஸ்வதமானது மட்டுமல்ல ரொம்ப  வலிமிகுந்ததும் தான்.

வரிவடிவில் வந்துபோன ஒவ்வொரு எண்ணாகக் கடந்து போகும்போதும் நினைவுகள்  துயர்வடிவில்  கடந்து போனது. சங்கரராமன் சேர்மன் என்றிருந் தது அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பின்னிரவிலும் நிற்காமல் புனுப் புனு வெனப்பெய்த ஒரு  அடைமழை நாள், காரின் கண்ணாடிகளில் வழித்தோடிய நினைவுவந்தது. பாலுசாரின் மாருதி 800 காரும்,அதன் பின் பகுதியில் ஏற்றப் பட்ட சுவரொட்டிகளும், அன்று சூலக்கரை முக்கு ரோட்டில்  விடிய விடியப் பேசிக்கொண்டிருந்ததும்  நினைவுக்கு வந்தது. அத்தோடு கூட மூன்றுநாள்   சங்க அலுவலகத்தில் தோழர்களோடு குழுமிக்கிடந்த நாட்களும் நினைவுக்கு வந்தது.

சின்னவனாக இருக்கும் போது வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பன்றி குட்டி போட்டிருந்தது.அதில் ஒரு குட்டி இரண்டு மரக் கவளிக்கிடையில் சிக்கிக் கொண்டு வீர் வீரென்று கத்திக்கொண்டிருந்தது.குட்டிப்போட்ட பன்னிக்கு பக்கத்தில போகாத வெறிபிடிச்சிக்கடிச்சிறும் என்று அம்மா பயமுறுத்தியதை யும் சட்டை பண்ணாமல்  சிக்கிக் கிடந்த குட்டியையெடுத்து விட்டான். மறு கனம் எங்கிருந்தோ பிடறி சிலிர்த்து ஓடிவந்த தாய்ப்பன்றி  சுருளிச் சாமியை  தூக்கி எறிந்தது.மயங்கி விழுந்து கிடந்தவனை எடுத்துவைத்துக் கொண்டு அலறிப்பிடிச்சி தலையில தலையில அடித்துக்கொடு அழுதாள் அம்மா. அப்போது  பன்றி கடித்த கெண்டைக்கால் தழும்பும் கூடவே நினைவுக்கு வந்தது.

எல்லா எண்களுக்கும் பெயர் இருந்தது. ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் நட்சத்திரக் குறியிருந்தது. அது யாருடை யதாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க சுருளிச்சாமி மறந்து போன மனிதர்கள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் அந்த எண் யாருடையது என்று கண்டுபிடித்து விட்டான். ஒருநாள்  புறவழிச் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டி ருக்கும் போது ஒரு பெண் ஓடிவந்தாள். சார் நீங்க பேங்லதான வேலபாக்கீங்க, சுருளிச்சாமிதான சார். நா பிகாம் படிச்சிருக்கேன்,சும்மாதான் வீட்ல இருக் கேன், ஒங்க பேங்க்ல ஏதாச்சும் வேலை இருந்தாச்சொல்லுங்க,இது எங்க அண்ணன் வீட்டு லேண்ட் லைன்,எம்பேரு சந்த்ரமதி இப்படி  திடுதிப் பென்று பிரசன்னமாகி ஒரு பயோடேட்டாக் கொடுத்து விட்டு மறைந்து போனவளை மறுபடியும் சுருளி பார்க்கவே இல்லை.முகம் கூட மறந்து போனது.அவள் கண்களில் இருந்த கெஞ்சல்,படபடப்பு இன்னும் அப்படியே   சுவடு மாறாமல் நிழலாடுகிறது. அந்தப்பெண்மேல் எந்த ஈடுபாடும்,ஈர்ப்பும் இல்லை. அசரீரி போல திடீரென்றுவந்த அந்தக் கோரிக்கையும், நம்பிக்கையும் அழிக்க முடியா ததாகிவிட்டது.

குட்டி,பேனா வானா என்று இரண்டு பெயர்கள் இருந்தது. ஜெயராஜும், பாலு சாரும்தான் அவை  இரண்டு பெயர்களும். குட்டி வெறும் மூன்று வருடப் பழக்கம் தான். பபுள்கம் மாதிரி அப்படியே ஒட்டிக்கொண்டான். சாயந்திரம்  சைக்கிளை எடுக்கப் போகும்போது அவனிருக்கும் மாடிக்குப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான் சுருளி. போகும் போது யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆட்காட்டி விரலை உயர்த்தி முகத்தை கெஞ்சலாக வைப்பான். ஒருநிமடம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். மறு கணமே அதே ஆள்காட்டி விரலை ஆட்டி நாக்கைத் துருத்தி முறைப்பான். போனால் கொன்னுறுவானாம்.

கீழே இறங்கி ஒரு கோல்டு பில்டரும் ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிக் கொண்டு,  ரெண்டு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு மேலேறும்போது. என்ன ஒரு நானூறு ரூவா கவர்மெண்டுக்கு நட்டமாயிருச்சா,என்னமா டயர்ட்டா  வாரப்பா, வேல பாத்தவன் மாதிரியே இருக்கியே என்பான். நாப்பது ஜுவல் போட்டுருக்கு,துட்ட எண்ணி எண்ணி இங்கரு ரேகை அழிஞ்சி போச்சி,இதுல இன்னைக்கு ஐநூறுரூவா ஷாட் வேற. ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ”பேத்த பேத்த,ஜோக்கடிச்சா சீரியஸ்சாகிறதப்பாரு,எங்க எனக்கு சிகரெட் என்று பைக்குள் விட்டு சிகரெட்டை  எடுத்துக் கொண்டு வாங்க சார் வெளியே என்று தோளில் கைபோட்டு பால்கணிக்கு இழுத்துக்கொண்டு போவான். அவன் அருகாமை சிகரெட் நெடியும்,நிஜாம் பாக்கு நெடியும் கலந்து மணக்கும்.

விடுமுறை நாட்களென்றால் அவனிடமிருந்து போன் வரும். ஏ சோம்பேறி என்ன தூக்கமா மூஞ்சக்கழுவிட்டு ஒடனே  இங்க  வரணும். அவன் இருக் கானா? ரொம்ப பிகு பண்ணுவான்,வந்தாக்கூப்பிட்டு வாங்க இல்ல உட்ருங்க, ஏம்பா இந்தக்காம்ரேட்ஸ் எல்லாமே இப்படித்தானா? என்பான். ரூமுக்குப் போனால் கிரிக்கெட்டைப்பற்றிப்,  பேசு வான்,குஷ்வந்த்சிங் ஜோக் சொல்லு வான், மெக்சிகோ ஜோக்கும் சொல்லுவான். ஏப்பா ஒங்க தலைவர் என்ன இப்படி லூஸ் மாதிரி ஸ்டேட்மெண்ட் விட்ருக்கார். வால்மார்ட் வந்தா எல்லாஞ் செத்தா போவாய்ங்க  என்பான். விவாதமாகும் சூடுபிடிக்கும்.அவன் வந்ததும் இன் னமும் காட்டமாகும்.அவன் சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவான்.

சுருளியும் குட்டியும் பத்துமணி வரைக்கும் சண்டை போடுவார்கள். மனத் தாங்கலோடு  பிரிந்து போவார்கள். ஒரு நாள்தான்  சுருளி அங்கு போக மாட்டான். மறுநாளே அவனிடமிருந்து போன் வரும்  பிச்சிப் பிடுவேன் பிச்சி ஒழுங்கா ஸ்டுடியோவுக்கு வா என்று அன்போடு கடிந்து கொள்வான். சுருளி யால் தட்ட முடியாது. போனதும் ’இந்த இப்படி சீரியஸ்ஸா முகத்த வைக்கா தண்ணே, ஒனக்கு ஒத்து வராது’ என்று கன்னத்தைப்பிடித்து  இணுங்குவான். அவனக்கூப்பிடு, இன்னைக்கு உள் சொட்டர் என்னோடது என்று உசுப்பி விடு வான். அன்று பின்னிரவுவரை பாட்டும், கதையும், விகடமும்ஆகக் கழியும். பனிரெண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடுவரை வந்து விடைபெற்றுக்கொண்டு போவான்.போகும் போது அந்த தெற்றுப்பல் பளீரென்று வசீகரிக்கும்.

மூன்று வருடத்தில் நண்பனாய்,குகனோடு ஐவராய்,பின்னர் தோழனாயும் மாறிப்போனவன், ஒரு  அதிகாலை விபத்தில் பெருங் குரலெடுத்து கதறக்கதற உற்றார் உறவுகளை உலுக்கி எடுத்து விட்டுப்போனான். அதற்கப்புறம் வாசல் வழிக்கடந்து போகும் எல்லா டீவிஎஸ் விக்டர் பைக்கும் அவனது நினைவு களைக் கிளறிக்கொண்டே கடந்து போனது. இதோ ஐந்து வருடங்கள் ஓடிப் போனது. அந்த எண் உபயோகத்திலிருக்கிறதா இல்லையா என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகளும் சிந்தனையும் இல்லாமல்  மூன்று கைப்பேசிகளுக்கு இடம் பெயர்ந்து இன்னும் சுருளியின் நட்புப் பட்டியலில் இருக்கிறது. அந்த எண்ணுக்கான அழைப்பு பாடலாக சிச்சூர் படத்தில் ஜேசுதாஸின் கொரித்தெரா ஹாவுமேராவை ஏற்றி வைத்திருந்தான்.அது குட்டி அடிக்கடி படிக்கும்   ஹிந்திப்  பாடல். இந்த மூன்று வருடத்தில் மட்டுமல்ல இனி மீதமுள்ள நாட்களிலும் அது  ஒலிக்காது. ஆனாலும்  கிட்டத் தட்ட மூடநம்பிக்கை போன்ற இந்த பாதுகாத்தல் சுருளிக்கு சந்தோசமானதாக இருந்தது.  

17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

8.4.12

திரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு


அலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின்  மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக உத்தேசித்துக்கொண்டோம். நான்குமணி இருக்கும் மாது வீட்டைப் பார்த்தேன் வண்டி இல்லை.போயிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு மற்றொரு தோழர் கணேசனுக்கு போன் பண்ணி அவரும் துஷ்டி வீட்டில் இருப்பதாக சொல்லவே தாமதமாகிவிட்டது என  அடித்துப்பிடித் துக்கொண்டு ஓடினேன்.

தெருவை நெருங்கிய போது ஆட்கள் யாரும் தென்படவில்லை.ஒருவேளை காரியம் முடிந்திருக்குமோ என்கிற கவலை வந்துவிட்டது. நின்று தயங்குவதைப் பார்த்த அந்த தெருக்காரர் துஷ்டி வீடு அடுத்த தெருவில் என்றார். நிம்மதியாக இருந்தது. அங்கேபோன போது ஏழெட்டு அலுவலகத் தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள் நான் போனவுடன் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தமர்ந்தோம். இறந்தவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி உண்டு. எண்பதுகளில் பத்துப்பைசாவுக்கு ஒரு ரோஜாப்பாக்குப் பொட்டலம் கிடைக்கும். சிகரெட் குடித்துவிட்டு புகை வாடையைப் போக்க பாக்குப்போடுகிற பழக்கம் எல் லோருக்கும் இருப்பதுபோல அவருக்கும் இருந்தது. அது செய்தியில்லை. ஒருபாக்குப் பொட்டலம் வாங்கி ஒருநாள் முழுக்க குடிக்கிற சிகரெட்டுக்கெல்லாம் அதையே கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திவிட்டு பத்திரப் படுத்திக் கொள்வார். யாருக்கும் அதிலிருந்து ஒரு துகள் கூடக்கொடுக்கமாட்டார் அப்படிப்பட்ட சிக்கண காரர். அதனாலே அவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி வந்தது.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாடியும் ஒரு காரணம் வைத்துக்கொள்ளும் இந்த மனிதக்கூட்டம் விசித்திரமானது. இறந்த வீட்டில் வந்து குழுமி,அந்தக் குடும்பத்தார்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகோன்னதமான பழக்கம் பொதுமைச் செயலால் ஆனது. கிராமம் என்றால் அதில் இன்னும் கூடுதல் பொதுமை இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். அன்று வேலைக்குப் போனால்தான் உலை வைக்கமுடியும் என்கிற வறுமை சூழ்ந்திருக்கும் ஏழைக்கிராமங்களிடம் இது இன்னும் அபரிமிதமாக இருக்கும். செல்போன் இல்லாத அந்தக்காலங்களில் வெளிஊர்களுக்கு செய்தி சொல்ல,அடக்க வேலைகள் பார்க்க, பந்தல்போட, சாப்பாடு தயார்செய்ய, இரவானல் தூங்கவிடாமல் செய்ய கதைப் பாடல் படிக்க பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவைக் கூப்பிட ஒருவர் என, தாங்களாகவே வேலைப்பிரிவு செய்துகொண்டு, அதை சிரமேற்கொண்டு செய்யும் மனிதாபிமானம் கட்டாயம் ஆதிப் பொதுவுடமையால் ஆனது. எவனாவது அதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட எவனாவது நினைத்தால் அவன் தொண்டையில் போடுபோடுங்கள்.

இங்கே ஒரு நடுவயதுக்காரர் ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சா என்று கேட்டார்கள் இளையபையன் மட்டும் வரவில்லை என்று பதில் வந்தது.வெளி நாட்டில் இருக்கும் அவர் வருவதற்கான சூழல் இல்லை. நிறைமாதக் கர்ப்பினியான மணைவியை அழைத் துக்கொண்டும் வரமுடியாது அங்கே அவரைத்தனியே விட்டு விட்டும் வரமுடியாது என்று சொன்னார்கள்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கொஞ்ச நாள் அலுவலகத்தில் வேலை பார்த்த  நமக்கே தாமதமாக வருவது உறுத்தியதே. வரமுடியாத அந்த இளைய பையன் என்னபாடு பட்டுக்கொண்டிருப்பார்.

5.4.12

மௌனத்தை உடைக்கும் முன்கை

பரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்ததும் திபு திபுவெனக்கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு  ஏறியது. அதோடு கூடவே பனங்கிழங்கு விற்கிற சிறுவனும்,சுண்டல் விற்கிற நடுத்தர வயதுக்காரரும் ஏறினார்கள்.பத்து ரூபாய்க்கு ஆறு அவிச்ச பனங்கிழங்கு கிடைக்கும்,ஒரு பொட்டலம் சுண்டல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். ஆனாலும் அந்த சிறுவனிடம் கிழங்கு வாங்க மனம் ஒவ்வவில்லை.அந்த ஒரு நிமிட தாமதிப்பில் குழந்தை உழைப்புக்கு எதிராக செய்கிற கையாலாலாத நடுத்தர வர்க்கத்தின் கைங்கர்யம் அதுமட்டுமே. நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது அதில் உட்காருவதற்காகக் குறிவைத்து வந்த இரண்டு கிராமத் தார்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.பனங்கிழங்கு விற்கிற சிறுவனை கழுத் தைப்பிடித்து தள்ளினார்கள் இருக்கையின் முகப்பில்  உட்கார்ந்திருந்த பீகாரி இளைஞனை விலகச்சொல்லிக் கெட்ட வார்த்தையில் வைதார்கள். அது வரை இயல்பாக வேடிக்கைபார்த்த பேருந்துப்பயணிகள் ஒவ்வொருத்தராய் தங்களை தாங்களே உள்ளிழுக்கும் ஆமைகளானோம். அப்போதிலிருந்து சுமார் ஒருமணிநேரம் ஓயாத கெட்டவார்த்தை ஒவ்வொன்றும் டாஸ்மாக் வீச்சத்தோடு பேருந்து முழுக்க வழிந்து கிடந்தது.

’எம்மருமயென் ஆறுகெடா வெட்டுனாண்டா,ஒரு சுமோப்பிடிச்சியாந்து கேஸ் கேஸா எறக்கி  பெருமப்படுத்திட் டாண்லொய்’ என்று சொல்ல எதிராளி

 ‘சும்மா கெட வகுத்தெரிச்சலக் கெளப்பாத பெறகு குத்திப்புடுவே எனக்கும் வாச்சானே மருமயென் பேத்தியாளுக்கு சடங்கே வைக்கமாட்டேனுட் டாண்டா, சாதிகெட்டபெய. க்காலி,அதாம் போச்சுண்டா பத்ராவிசுல வேல பாத்துக்கிட்டு ஒத்தப் பைசா வரும்டியில்லாம எம்மவள மூளியா வச்சிறுக் கான் சிருக்கியுள்ள.., 

வயித்தெரிச்சலக் கெளப்பாதடா என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.காற்று வரவில்லை இறுக்கமாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி கொக்கியை மடக்கி நிறுத்த தெரியவில்லை இரண்டு மூன்று முறை மடேர் மடேரென்று கண்ணாடி கீழிறங்கியது. தெறக்கத்தெர்லன்னா உடவேண்டிய தானே  கண்ணாடியப் போட்டு ஒடச்சிராதங்கப்பு என்ற பொறுமிய கண்டக் டருக்கும் ரெண்டு வசவு காத்திருந்தது. இனிமையான  பாடல் களாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டிய பேச்சுச் சத்தமும்,வசவுகளும்  ஆக்ரமித்துக்  கொண்டே யிருந்தது.

பின்னாடியிருந்த நடு வயதுப்பெண் எழுந்து ’

என்ன பஸ்ஸா இல்ல சாராயக் கடையா,பொம்பளைங்க  வர்றாங்கண்ணு தெரியல’ என்று குரல் கொடுத்தார்.

’பொட்டமுண்டைக்கி திமிரப்பாரு என்று மீண்டும் கெட்டவார்த்தையில் ஆரம்பித்தான்.

’இனிமே ஒனக்கு மர்யாதயில்ல பேச்ச நிப்பாட்டு’ என்றார்.’நா யார்ன்னு தெர்யுமா’ என்றான்.

அதான் ஒருமணிநேரமாப் பாத்துட்டு வர்ர்றோ மில்ல, நீ மனுஷனே இல்ல என்றார்.

இரண்டு பேரும் வரிந்து  கட்டிக் கொண்டு அவரோடு மல்லுக்கு நின்றார்கள். சன்னம் சன்னமாய் பேருந்துப் பயணிகள் எல்லோரும்  அந்தப் பெண்ணின் பக்கம் வந்தார்கள். பேருந்தும் திருப்புவனத்துக்கு வந்தது. பயணிகள் ஒருமித்த குரலோடு பஸ்ஸ ஸ்டேசனுக்கு விடுங்க ட்ரைவர் சார் என்று கத்தினார்கள். மள மளவென்று ரெண்டுபேரும் இறங்கி இருவரும் கூட்டத்துக்குள் மறைந்து போனார்கள்.

மீண்டும் ஓடத்துவங்கிய பேருந்து தனது இயல்புக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர்  ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். மீண்டும் பாடல் தெளிவாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தப்பெண் பக்கத்திலிருந்த குழந்தையிடம் வெளியே காட்டி எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

25.3.12

இந்த அரை நூற்றாண்டின் ஆகச்சிறந்த போராட்டம்-கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அனு உலை ஆபத்தானதா இல்லை பாதுகாப்பானதா என்கிற கேள்வி பதில்கள் இன்னும் பொதுமக்களைச் சென்றடையவில்லை.தேர்தல் நேரத்தில் 2ஜி அலைக்கற்றையில் திமுகவின் பங்கு பற்றி  ஏற்படுத்தப் பட்ட பரப்புரை போல கூடங்குளம் குறித்த கேள்விகளை ஊடகங்கள் மக்களிடம் எழுப்பத்தவறி விட்டது.  எனவே நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம் கூடங்குளம் அணு உலை  திறக்கப் படாதது தான் என்கிற மூட நம்பிக்கைக்கு மக்கள் நேரடியாகத் தள்ளப்பட்டு விட்டார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங் கள், அந்நியநாட்டு ஆலைகள்,கணினி வழியே நெல்,சோளம், கம்பு,பருப்பு விளைவிக்கும் ஐடி  நிறுவணங்கள் ஆகிவற்றுக்கு அள்ளிக் கொட்டப்படும் மின்சாரம் குறித்து ஒரு நடுநிலை நாளேடும் வாய்திறப்பதில்லை. அவர் கள் டேக்காக் கொடுக்கும் மின்கட்டணப் பாக்கித்தொகை பற்றியும், அதற்கான மொத்த சைபர்கள் என்பதை வெளியே தெரியவிடாமல் லாவகமாகப் பாதுகாத்துக் கொள்வதும் நம்மூர் ஊடகங்கள்தான்.

இந்தியாவில் உள்ள அத்தனை டெல்டாப் பகுதிகளிலும் பெட்ரோலியம், மற்றும் எரிவாயுக்களுக்கு தேவையான கனிமவளங்கள் இருந்தாலும் அவற்றை உபயோகப் படுத்துகிற முனைப்பை அரசுகள் மேற்கொள்ளு வதில்லை. மின்சாரம்  தயாரிக்க வெறும் அனு உலைகளை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை அதுதவிர்த்த அநேக வழிமுறைகள்  இங்கே மலிந்து கிடக்கின்றன. காற்று, கடல்அலை, சூரியவெப்பம், அனல், புனல் எனத்தொடங்கி குப்பைகளில் இருந்தும்,சாணங்களில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். தென் மாவட்டங்களின் பெரும் பகுதி காடுகளை அடைத் துக் கொண்டிருக்கும் வேலிகாத்தான் முட்செடிகளை எரித்து மின்சாரம் தயாரித்தால் மொத்த தமிழகத்துக்கும் மின்சாரம் கொடுக்கலாம். இப்படி யிருக்க  ன் அனு உலையால் மட்டுமே மின்சாரம் எடுப்பேன் என்று தலைகீழாக நிற்கிறது அரசு.

வெளிநாடுகள் வேண்டாமென்று கழித்துக் கொட்டுகிற எல்லாக் குப்பைகளும் இந்தியாவுக்குள் தங்கு தடையின்றி வந்துகொண்டிருக்கிறது. சீனா ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடியே மரங்களை அழித்து  தீக்குச்சிகள்   தயாரிக்கும் முறையைத் தடை செய்து விட்டது. எனவே அங்கே உபயோகமற்றுக் கிடக் கும் தானியங்கி தீப்பெட்டி எந்திரங்களை போட்டி போட்டுக்கொண்டு இறக் குமதி செய்கிறார்கள் சிவகாசியைச் சுற்றியிருக்கும் தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள்.  காயலான் கடை விலையிலான அந்த எந்திரங்கள் மூன்று நான்குகட்ட  கமிஷன்களோடு பெருமையாய் வந்து இறங்குகிறது. அதே அணுகு முறையைத்தான் அனுஉலை மற்றுமல்ல எல்லா  விவகாரத் திலும் இந்தியா பின்பற்றுகிறது.

இந்த தேசத்தில் அறுபது சதமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையின் மீது நோயையும் ஏவிவிடும் அணுக்கதிர்கள் குறித்த பயம்,போபாலில் நடந்த  கசிவைப் போல இன்னொரு முறை நடந்துவிடக் கூடாது என்கிற பயம். எல்லாம்  நியாயமானது. ஆகை யால்  இவ்வளவு காலம் நடக்கும் போராட்டங்களை நியாயமாக அணுகுவது மட்டுமே மக்கள் நல அரசாக இருக்க முடியும். ஒரு கார் தொழிற்சாலை வேண்டாமென்று  நந்திக்கிராமத்தில் நடந்த போராட்டத்தை அந்த அரசு மதித்து  பின்வாங்கவில் லையா?. அதைவிட்டு விட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்த அந்நிய நாட்டுத்தொடர்பு என்கிற பெரிய்ய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதே அரசுதான் அந்நிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இப்போது அதற்கு ஒருபடிமேலே போய் ரவுடிகளை ஏவிவிட்டு ஜனநாயக ரீதியான பொதுக்கூட்டங்களில் ரகளை யைத் தூண்டிவிடுகிறது இந்த அமைப்பு. நேற்று ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் புகுந்து அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார் கள்.ஒரு நியாயமான போராட்டத்தைக் கொச்சை  படுத்த தரங்கெட்ட வகை யில் இறங்குகிற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமே நிகழும். கீரைக் கடைக்கு எதிர்க் கடைமாதிரி உண்ணாவிரதத்துக்கு எதிராக உண்ணும் விரதம் இருக்கிற விநோதம் வேறெங்கும் கேள்விப்படாத ஒன்று. அதே போலப் போராட்டக்காரர்கள் கையிலெடுக்காத வன்முறையை ஆதரவாளர்கள் எடுத்திருக்கிறார் கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இதே போலத்தான் ஐவர் என்கவுண்டர் கொலைகளை விசாரிக்கச் சென்ற உண்மை அறியும் குழுவுக்கும் நிகழ்ந்தது.

ஆனால் ஒரு  அற்புதமான போராட்டஉணர்வை  அறிமுகப் படுத்திய அனு உலை எதிர்ப்பாளர்கள் இந்த மாநில அரசை நம்பிக்கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.

04.03.2012

23.3.12

பேருந்தைப்போட்டியிட்டு ஜெயிக்கும் நினைவுகள்.

அந்த விடிந்தும் விடியாத கருக்கலில்
திருமங்கலம் நுழையும் பேருந்து வெளிச்சத்தில்
மீசை பெருத்த போஸ்ட்டர்களைத் தாண்டி
நினைவு தேடும் ஷாஜகானின் சிரிப்பொலியை.

ஊருக்கு வரும் பகல் பொழுதுகளில்
முகத்துக்கு நேரே நீண்டு வெளேரெனச் சிரிக்கும்
உரித்த வெள்ளரிக்காயோடு கசியும்
காதுவளர்த்த பாட்டிகளின் வறுமை.

செழித்துக்கிடக்கும் சாலையோரத்து வேலிக்காடுகள்
கடக்கும் பொழுதெல்லாம் கயிறறுத்துக்கொண்டு
காட்டுக்குள் ஓடிமறைந்துகொள்ளும் இன்னொரு நான்.

இழுத்துக்கொண்டு வந்து இருக்கையில் வைக்கிற
இளைராஜாவின் பாடல் வந்த சுவடு தெரியாமல்
அந்தரத்தில் மீளப்பறக்க வைக்கும் என்ன செய்ய ?

11.3.12

தோனியின் கேள்விகள் முன்வைக்கிற நம்பிக்கை.

ஒரே சுற்றுச் சுவருக்குள் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் அரவானும்,தோனியும்  திரையிடப்பட்டுக்  கொண் டிருக்கிறது. அரவான் பார்த்துவிடலாம் என்று சொல்லும்போது பதறிப்போய் வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக்கொண்டார் தேனிப் பக்கத்து ஊர்க்காரர் இளைஞர் ஒருவர்.படம் வெளியாகுமுன்னமே அரவான் க்ரூப்ஸ் னு போஸ்ட்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க சார் என்று கலக்கத்துடன் கூறினார்.ஒரு கலைப் படைப்பை, ஒரு கலை ஞனை சாயம் பூசி அழகுபார்ப்பது வேதனை மிகுந்த அருவருப்பாகும். எனவே சாவகாசமாய்  பார்த்துக் கொள்ளலாம் என்று தோனியைத் தேர்ந்தெடுத்தோம். காலம் கடந்து விமர்சனம் . ஆனாலும் இது விமர்சனம் இல்லை. சும்மா பார்த்த திரைப்படத்தை  சிலாகிப் பதுதான். இந்த சிலாகிப்பு எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதுதான் உலகம் அவரவர் ரசனை வேறுவேறாய் கிடக்கிறது. எனினும் சமூகம் சார்ந்த சிந்தனை வயப்படுகிறவர்கள் காலம் கடந்தும் நிற்கவே நிற்பார்கள். பிரகாஷ்ராஜ் நிற்பார்.

திரைத் துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு கலகக் குரலைப் பதிவு செய்ய துணிச்சல் தேவை. அது நூறு கோடி இரு நூறுகோடி பணம் முதலீடு செய்கிற மசாலாத் துணிச்சலை விட கோடி மடங்கு பெரியது. கல்வி வியாபாரமாகிற கொடுமையை ஒரு முப்பதாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி இயக்கங்கள் தெருத்தெருவாய் புலம்பிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புலம்பல்களை போட்டி என்கிற இரைச்சல் ஓரங்கட்டி விட்டது. அந்தோ.. இன்று கல்வி பொது விநியோகத்திடமிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் ....... கையில்  சிக்கிக்கொண் டிருக்கிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் விதைக்கப்பட்ட விஷச்செடி தமிழகம் முழுக்க நீக்கமற வியாபித்துவிட்டது.

மூட்டை கட்டிக்கொண்டு போனால் ஒழிய உயர்கல்வி கற்க வேறு முகாந்திரமே இல்லை என்றாகிப்போன சூழல் இருக்கிறது. மண்ணெண்ணய் விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராகினார்கள்  என் கிற செய்திகளால் பெருமிதப்பட்ட காலம் ஒன்றிருந்தது.அது வறிய மக்களின் கல்விக் கனவின்மீது திடமான வெளிச்சம் பாய்ச்சியகாலம். அதெல்லாம் இப்போது  மலை யேறிப்போய்  ஒரு லஞ்சம் வாங்காத அரசாங்க ஊழியன் கூட உயர்கல்வி குறித்து யோசிக்கமுடியாத சூழல் வந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு பத்திரப் பதிவு அலுவலக குமாஸ்தாவின் குமுறலாய் கிளம்புகிறது தோனி.  ஒவ்வொரு ப்ரேமிலும் பெற்றோர்களின் மனசாட்சியை உலுப்பி விட்டுச் செல்கிறது படம்.

புறச் சமூகம் தனது குழந்தைகள் குறித்து விசாரிக்கிற கேள்விகளால் கூனிக்குறுகிப் போகிற பெற்றோர்களின் பிரதிநிதியாய் பிரகாஷ்ராஜ் தனித்து நிற்கிறார்.பந்தியில் அருகே அமர்ந்திருப்பவர் கேட்கிற கேள்விகளுக்கு அளக்கிற பெருமிதப் பொய்யும், கல்வி நிறுவன அதிபரிடம் தனது மகன் கட்டாயம் அதிக மதிப்பெண் வாங்கு வான் என்று சொல்லுவது, அதனால் வருகிற ஆதங்கத்தை மகனிடம் காட்டுகிற கோபமும் துல்லியமான செதுக்கல். பிரகாஷ்ராஜிடம் அடிவாங்குகிற ஒவ்வொரு அடியிலும் தனது அபிமானத்தை தளரவிடாத பந்தாய் திரும்புகிறது அந்தச் சிறுவனின்  நடிப்பு. கோமாவினால் படுத்த படுக்கையாய் கிடக்கிற போது நிலைகுத்தி நிற்கிற அவனது கண்கள் எல்லோரது கண்களிலும் நீரைக்கொட்டச்செய்யும்.

அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்களுக்கிடையே ஊடுறுவிக்கிடக்கும் பந்தம் மேலோட்டமாக இருந்தாலும் இந்த ஜாதிய திரட்டல் யுகத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. குடும்பத்துக்காக அரசியல்வாதியின் சின்ன வீடாகிற நளினியின் மீது காட்டுகிற வெறுப்பு,கந்து வட்டிக்கு கொடுக்கிற கனிபாயின் கறார்தன்மை மீது காட்சிப் படுத்தப்படுகிற வெறுப்பு,மதிப்பெண் வாங்கமுடியாத மகன் மேல் கவிழ்ந்திருக்கும் கோபம்  எல்லாமதிப்பீடுகளும் உடைந்து அன்பாகத் திரும்புகிற நெகிழ்ச்சி அழகு. எல்லோருக் குள்ளும்  மனிதா பிமானம்  ஒளிந்து கிடப்பதையும் எல்லோருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்து கிடப்பதையும் நம்பிக்கையோடு முன்வைக்கிறது தோனி.அதே நேரம் கல்விக்கொள்கை,புரையோடிக்கிடக்கும் லஞ்சம் இவற்றைச்சொல்லுகிறேன் பேர்வழி என்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கோபத்தைத் திசை திருப்பாத நேர்மை இருக்கிறது இந்தப்படைப்பில்.

சமூக மாற்றங்கள் சினிமாக் கதாநாயகர்களால் மட்டுமே வரும் என்கிற மூடநம்பிக்கையையும், காதல் 100 சதவீதம் சுத்தமானதும் டூயட் பாடுவதாலும் என்கிற முரணான மூட நம்பிக்கையையும் ஜஸ்ட்லைக்தட்  ஒதுக்கி விட்டு  இயல்பாக நகர்கிறது. பின்னணி இசை படம் முழுக்க பிரகாஷ்ராஜுடன் கை கோர்த்துக் கொண்டு  வரு கிறது. நிழலாகப்படகோட்டி விளையாண்ட காலம்போய் பாடல் வீட்டுக்கு வந்த பிறகும் பின்னாடி நிழலாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

26.2.12

வியாரா வெறி விழுங்கிச் செரித்த பழய்ய பொது வாழ்க்கை.

பரபரப்பு வேகம் நிலகொள்ளாமை எதையும் நம்பாமை என்கிற நகரப்புழுதிகளோடு குழைந்துகிடக்கும் வாகனப் புகைகலந்த வாழ்வில் இருந்து தப்பிக்க வழியிருக்காவெனத் தெரியவில்லை. சற்றுக் கண்ணயர்ந்து பின்னுக்குப் போனால் நொடிகளில் வந்து விடுகிறது நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் பழய்ய வாழ்க்கை. நடந்து வந்த நெடுந்தொலைவில் பால்யத்தோடு தூரக்கிடக்கிறது மாசுபடாத புழுதிவாழ்க்கை. டவுசர் போட்டுக் கொண்டு ஹோவெனக்கத்திக்கொண்டு தெருவில் ஓடத்துடிக்கிறது மனசின் கால்கள்.கடந்த காலம்  பசுமை யாகவும் எதிர்காலம் சிகப்பாகவும் எழுதிக்கிடக்கிற வர்ணங்களை வாசிக்க வாருங்கள்.

ஊதாவும் கருப்பும் கலந்த வர்ணத்தில் தெப்புதெப்பெனக்கிடக்கும் சுப்பையாத் தாத்தாவின் கிணற்றுத்தண்ணீரை திரும்பவும் நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அந்த பம்புசெட் ரூமின் மேலேறிக் குதிக்கிற சாகசத்தை எழுத்தில் எப்படி முயன்றும் கொண்டுவர முடியாது. குளிக்க வரும் மதினிமார்களின் நல்ல மச்சினர்களாக ஒதுங் கிப்போய் காத்திருக்கும் தருணங்கள். இல்லை பெண்கள் வராத அடுத்த பம்புசெட்டுக்கு சுதந்திரக்குளியல் தேடி நடக்கும் தருணங்களில் மனசு பின்னுக்கிழுத்துக் கொண்டு ஓடிப்போய் எட்டிப் பார்க்கிற  குறு குறுப்பானதும் தான் திரும்ப முடியாத அந்தத் தொலைந்த வாழ்க்கை. காடுதிரிந்து வரும்போது மிளகாய்செடிக்கு ஓடும் வாய்க் காலின் ஓரம் மண்டியிட்டுக் குடிக்கும் தண்ணீரின் குளிர்ச்சி தொண்டையில் இன்னும் ஜில்லென நிலைத்திருக் கிறது.

இந்தத் தண்ணீரைப் பேசும் போதெல்லாம் ஊர்களுக்கிடையே யான நடைபாதைகள் நினைவுக்கு வந்துவிடும். மாட்டு வண்டிகள் நடந்து நடந்து உருவான அந்த நாற்கர சாலைகளில் நடந்துபோகும் போது நம்மோடு கூடவே வரும் சனங்களின் சுகதுக்கங்கள். பக்கத்து டவுனில் நடக்கும் திரைப்படமோ,அருகாமை ஊரில் நடக்கும்  தெருக் கூத்து நாடகமோ,அகாலத்தில் இறந்து போன சொந்தங்களின் மரணமோ ஊரை நடத்திக் கூட்டிக் கொண்டு போகும். எழுதாமல் அழிந்துபோன வரலாறும் வாழ்க்கையும், பதிவுறாமல் காற்றில் கறைந்து போனது பாட்டும் கூத்தும் சொலவடைகளும் அந்தக் கூட்டத்தோடு பேசிபேசி வளரும். பரமவைரிகள் போல முடிபிடித்துச் சண்டை யிட்டவர்கள் திரும்பிவரும் போது தோளில் கை போட்டுக் கொண்டு வருமாறு இளக வைத்துவிடும் இயல்பு உண்டு. நடந்துபோகிற நாற்பது பேரில் முன்னே போகிற பாதத்தில் முள் குத்தினால் பின்னே வரும் கால்கள் மருந்து சொல்லும். வழியை மறிக்கிற இடர்களில் எப்போதாவது தான் பாம்புகள் குறுக்கே வரும்.ஆனால் எல்லா நேரமும் பாம்புக் கதைகள் கூட வந்துகொண்டே இருக்கும். அப்போது நாம் மனிதர் தெரிந்த அத்துணை பாம்பின் வகைகளையும் அதன் குணங் களையும்  அறிந்து கொள்ளலாம்.

அத்தோடு கூட அமானுஷ்ய கற்பனைகளோடு ஐந்து தலைப் பாம்புகளும் வரும். அவை, ரத்தினத்தை  வயிற் றுக்குள் வளர்க்குமாம். உடலில் அதற்கு ரோமங்கள் முளைத்துவிடுமாம். ராக்காலங்களில் ரத்தினத்தை வாந்தி யெடுத்து,அந்த ஒளியில் இறைதேடுமாம். அந்த அரத்தினத்தின் மேல் சாணத்தைப் போட்டு மறைத்து விட்டால் கண் தெரியாமல் தரையக் கொத்தி கொத்திச் செத்துப் போகுமாம். ஆனால் கொம்பேறி மூக்கன் கொத்திவிட்டு பனைமரத்தில் ஏறிக்கொள்ளுமாம். மறுநாள் சுடுகாட்டில் புகை தெரிந்தால் தான் கீழிறங்குமாம். சாரைப் பாம்பு விரட்டினால் குறுக்கும் நெடுக்குமாக ஓடனும் நல்ல பாம்புவிரட்டினால் நேராக ஓடவேண்டும் என்கிற உபாயக் கதைகளும் கிடைக்கும். இந்தக் கதைகளைத் தாண்டி பாம்பு கடித்து விட்டால் ஊருக்கே விஷமேறிக் கொள்ளும்.

ஆளாளுக்கு மருந்து சொல்ல,மருந்து தயாரிக்கக் கிளம்பிவிடுவார்கள். அன்று இரவு கட்டாயம் பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவின் உடுக்கைச் சத்தம் ஊரைத் தூங்கவிடாது. அண்ணம்மாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே என்று பாடிக்கொண்டே கூட்டத்துக்குள் மச்சினிச்சிகளைத் தேடும் அவரது கண். ஒரு இரவு முழுக்
கப் பாடிக்கொண்டே இருக்கிற அவரது குரலில் உழைக்கும் மக்களுக்கான புராண கதைகள் கிடைக்கும்.  விராட பர்வம்,விக்கிரமாதித்த கதைகளை அதற்குப்பிறகு வேறெங்கும் கேட்கமுடியவில்லை. அதுபோலவே  மணிக் குறவன், தீச்சட்டிக் கோவிந்தன் பாடல் கதைகளும் சொல்ல ஆளில்லாமல்  தொலைந்து காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது. இச்சிப்பட்டை ராப்பட்டை,மதுரைவீரன்,அம்பிகாவதிஅமராவதி,காத்தவராயன் போன்ற கதைகளில் ஊடுசரடாய்க்கிடக்கும் மேல் கீழ் முரணை மனதுடைக்கும் குரலில் அறிமுகப்படுத்திய  நாட்டுப் புறப்பாட்கர்களும் பாடலும் இனி கிடைக்கப்போவதில்லை. 

கிராமங்களின் காலையும் மாலையும் பொது இடங்களுக்கானது இரவும் மட்டுமே வீடுகளுக்கானது. விடிந்தபிறகு அவை  காடுகளில் பரந்து விரிந்து கிடக்கும். விதைப்புக் காலங்களில் கலப்பை மாடு கடகப் பெட்டியோடும்,செடி வளர்ந்த காலங்களில்  களை யெடுப்பு செதுக்கிகளோடும், அறுப்புக் காலங்களில்  பண்ணையறுவாள் களோடும் மக்கள் காட்டுக்குள்ளே தான் திரிவார்கள். காடு அவர்களுக்கு வெறும் தானியங்களை மட்டும்  தருவ தில்லை. அத்தோடு கூட பயிர்வளர்க்கும் அறிவியல் நுணுக்கங்களையும்,பயிர்களோடு அண்ணாந்துபார்த்து வெயில்,மழை வரும் காலநிலைகளையும் சொல்லிக் கொடுக்கும். தாளப்பறக்கும் நெய்க் குருவிகளையும்,  தட்டாரப் பூச்சியைம் பார்த்துவிட்டால் மாடியில்,களத்தில் காய்கிற தானியங்களை மழைபடாத இடத்துக்கு மாற்றுகிற வேலை தொடங் கும். அதுகூட தேவைக்காகநடந்ததென்று சொல்லலாம் பறித்த நிலக்கடலை ஆய்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அந்தவழியாய் நடந்துபோகும் யாரையும் இந்தா கொஞ்சம் கடலை  திண்ணுட்டுப் போங்க என்று சொல்லுகிற வாஞ்சையை நிலம்போலே மனிதரும் வாய்க்கப்பெறுவது அலாதி குணம்.

அப்போதெல்லாம் காட்டுமரக் கிளைகளில் வகை வகையாய் தூக்குச்சட்டி தொங்கும் அதிசயம் நடக்கும். அந்த சட்டிகளுக்குள் குடியிருந்த புளிப்பேறிய கஞ்சி வகைகளைச் சொன்னால் கணினி விசைப் பலகையில் எச்சில் கட்டாயம் சிதறும். வரகரிசி, திணையரிசி, குதிரைவாலி, காடக்கண்ணி,காலக்கம்பு,சோளாச்சோறுகள் தின்று செழித்த காலங்கள் எல்லாம் கற்காலங்கள்  போலாகிப் போனது. அதை விளைவிக்க மட்டுமல்ல பதப்படுத்த, பாதுகாக்க, இடித்துப், புடைத்துச், சமைக்கக்கூட உடல் உழைப்புத் தேவையாயிருந்தது. ஆதலால்தான் ஊரில் திரும்புகிற திசையெல்லாம் உரல்கள் நிறைந்திருந்தது.

ஆதலால்தான் அந்த உரல்கள் ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியிலே இடம்பிடித்துக் கொண்டிருந்தது. அந்த உரல்களுக்குள் அப்போது வெறும் தானியங்கள் மட்டும் கொட்டி இடிபடாது. ஊர்க்கதைகள் எல்லாம் சேர்ந்த்தே இடிபடும். இடிக்கப்பெரும்பாலும் குமரிகளே வருவார்கள். இடிபடுகிற கம்புத்தவசம் மாரிக்கண்ணுசித்தி  வீட்டில் தான் சோறாகும் ஆனால் சுத்தியிருக்கிற கொமருகளெல் லாம் சேர்ந்து கம்பு குத்தும் அந்நியோன்யம் இனி எங்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் ஆள் மாத்தி ஆள் இடிக்கிறபோது ஊரே அதிரும். அது பார்த்த அந்த அதிர்வைக்கேட்ட எந்தக்கொம்பனும் பெண்கள் இழைத்தவர்கள் என்று ஒருபோதும் வாய்திறக்கமாட்டான். என்றா லும் பெண்கள் எப்போதும் உரல்மேல் உட்காருவதில்லை.ஆனால் அதொன்றும் மநுஎழுதிவைத்த விதியுமில்லை . திங்கிற சோத்துக்கு பெணகள் தரும் மரியாதை அவ்வளவே. ஆனால் எளவட்டங்கள் தூக்கமுடியாத உரல்களை சுலுவாகத்தூக்கி எறிவாள் கல்லுடைத்து கஞ்சிகுடிக்கிற கன்னிமரியாக்கா.

9.2.12

நினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை.

ஒவ்வொரு பேருந்து நிலையமும் ஒரு நிறத்தோடு வித்தியாசமாக இருக்கிறது.காரணம் அங்குதான் அந்தப்பகுதி கிராமத்து மக்கள் எல்லோரும் வந்து குழுமிப்போவார்கள்.விளாத்திகுளம் பேருந்து நிலையம் ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு நான்குநாட்கள் அதை காலையும் மாலையும்  கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாத்தியமாயிற்று. அங்கிருந்து முக்கால் மணிநேரம் கிழக்கே பயணம் செய்தால் வேம்பார் வந்து விடும். வேம்பாருக்கு வேலை நிமித்தமாக நான்குநாட்கள் போய்வந்தேன்.ஆனால்  அங்கே தான் முன்னொரு காலத்தில் தங்கியிருந்த மாதிரி மனசுகிடந்து அடித்துக்கொள்கிறது.

அங்கிருந்து கொஞ்ச தொலைவில் தான் வேப்பலோடையாம்.தோழர் மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களைப் படித்ததால் ஒருவேளை நான் அங்கு நடந்து திரிந்தது போல பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.விளாத்திகுளத்திலி ருந்து ஒருமணிநேரம் மேற்கே பயணமானால் கோவில்பட்டி வந்துவிடும். எட்ட யபுரத் திலிருந்து விளாத்திகுளம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் கண்ணங்கரே லென்று கரிசல்காடு விரிந்து கிடக்கிறது. அதில் கம்பு, குதிரை வாலி, உளுந்து முளைத்துக் கிடக்கிறது.பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக் கிறது. விளைந்து நிற்கும் கம்மங் கதிரில் படகுருவிகள் பறந்துவந்து உட்காருவதும் சொல்லி வைத்தாற் போல நூறு குருவிகள் மேலெழும்பிப் பறப்பதும் மேஜிக் பார்க்கிற சுகானுபவத்தைக் கொடுக் கிறது.

இந்தக்கரிசல் காடுகளை மையமிட்டுத்தான் எங்கள் தோழர் கு.அழகிரிசாமி யின் கதையும்  முளைத் திருக்கிறது என்று நினைக்கும் போது அந்த சாப்பாட் டுக்கடை எங்கிருந்திருக்கும் என்று தேட ஆரம்பிக்கிறது  எட்டயபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் குதிரைகளின் குளம்பொலியும், நகராச் சத்தமும், சாட்டையடியின் சளீர்ச்சத்தமும் அமானுஷயமாய் வந்து போகிறது. கூடவே பாரதியின் நினைவு வருவதை யாரும் தடை செய்ய முடியாது. அதே போல அந்த ஊரில் வைத்து நடந்த பாரதி விழாவில் மேலாண்மை, எஸ் ஏ பி, கந்தர்வன், பீகே,மாது,தமிழ்செல்வன், கோணங்கி, உதயசங்கர், பார்த்தசாரதி, என எக்கச்சக்கமான எழுத்தாளத் தோழர்கள் பங்குகொண்ட கருத்தரங்கக் காட்சிகளின் நினைவுகள் நிலழாடுகிறது.

குறுக்கே குறுக்கே எழுந்து பேசிய கோணங்கியைப் பார்த்து ’மொதல்ல ஒம்பேர மாத்தப்பா,பேசச்சொன்னா பேசமாட்டீங்ற ஆனா ஒருத்தரையும் பேசவிடாம குறுக்க குறுக்க எதாச்சம் குழப்படி பண்ணிக்கிட்டே இருக்கியே ஒக்காரு மொதல்ல’. என்று எஸ் ஏ பி சொன்ன வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் எல்லொரது பேச்சுகளின் மீதும் கேள்விகளைத்தொடுத்த கோணங்கியைப்பார்த்து அடிபுடி சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நாக்குக் குளரும் பாவனையில் பேசும் கந்தர்வனின் தலைமையில் அன்று பேசிய எல்லோரும் இப்போது பெரிய ஆளுமைகள். ஆனால் எங்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும்  பீகே தான் ஆளுமை.

7.2.12

சாதாரண மக்கள் வாழ்க்கைப் பாட்டின் சொற்சித்திரங்கள்...-எஸ் வி வேணுகோபாலன்

காலண்டர்கள், கடிகாரங்கள், பஞ்சாங்கங்கள், ஜாதகக் கட்டுகள், பிரதோஷம், நவகிரக சாந்தி, பரிகாரங்கள், வாஸ்து சாஸ்திரங்கள்... இவற்றின் வாடையே படாத உலகிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள், மரிக்கிறார்கள். இவர்களது வாழ்வியல், நாகரிக உலகம் பேசிக் கொண்டிருக்கும் ஒழுக்க விதிகளின் ஆதாரத்தை அம்பலப்படுத்திவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது மேலோட்டமான பார்வையில் பிடிபடாது.

தெருவோரத்தில் எதையோ வெறித்துப் பார்த்துப் படுத்துக் கொண்டிருக்கும் ஆள், நடு வீதியில் காது கூசுகிற கெட்ட வார்த்தைகளால் எவனையோ ஏசிக் கொண்டே போகிற ஒழுங்கற்ற முறையில் உடையணிந்திருக்கும் பெண்ணொருத்தி, ரயில் பயணத்தில் திடீரென்று தோன்றி உங்கள் கால்களின் கீழே திரளும் குப்பையைப் பெருக்கிக் கொண்டே சில்லறைக்காக கையை நீட்டும் ஏழைச் சிறுவன்....இவர்களைக் கண்டால் ஏதோ தியேட்டரில் சுவாரசியமாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில்  புரொஜெக்டர் ஒளியின குறுக்கே எழுந்து நிற்கும் எவருடைய நிழலோ திரையில் விழுந்தாற் போல எரிச்சலடைகிறோம் நாம்.

பொற்கொல்லர் வீதியில் ஓடும் சாக்கடை நீரை முகந்தெடுத்து அலசி அலசி வடிகட்டி அதில் பொன் துகள்கள் கிடைக்காதா என்று தேடும் வாழ்க்கையை யாரும் ஏ.டி.எம். எந்திரத்தின்முன் வரிசையில் நின்று அட்டையைப் போட்டுப் பெற்றுக் கொண்டு வருவதில்லை. இந்த சமூகம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கும் அடிப்படை தார்மீக அம்சம் அதில் புதைந்திருக்கிறது. சமூகவியலாளர் பதிவு செய்ய வேண்டியதை, இலக்கியவாதி படைப்புகளாய் வார்க்கிறார். முன்னதில் புள்ளி விவரங்களாக இருப்பது, பின்னதில் மண்டையில் ஓங்கி அறையும் சம்மட்டியாக வெளிப்படுகிறது. எல்லோருக்கும் அப்படியான புனைதல் சாத்தியமாவதில்லை.  உலுக்கி எடுக்கும் கதைகளை எஸ் காமராஜ் இந்தத் தொகுப்பு நெடுக வழங்கி இருப்பது, இதனால் தான் கவனத்தை ஈர்க்கிறது.

"எம்மா கஞ்சி போடுங்கம்மா, அழுக்கெடுத்துப் போடுங்கம்மா.." என்று வீதி நெடுக அலைந்து  தினம் ஒரு வீட்டில் எச்சிச் சோத்தோடு அவமானத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து வயிறு நிரப்பும் வண்ணார் குடும்பத்தின் சிறுவனுக்கு, இந்த ஊரு பூராம் வேற, நாம வேற என்பதை விளக்க முடியாத பெற்றோர் (வேரை விரட்டிய மண்), தெருக்கூத்தில் நடிப்புக்குக் கூட 'செத்த மாடு திங்கிற சின்ன சாதிப்பய, நாயே, போடா, வாடா என்று நம்மாளை எந்த மசுத்துக்கும் சொல்லப்பிடாது (விடுதலையின் ஒத்திகை ) என்று திமிரும் ஆதிக்க சாதி, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குப் போன தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுமிக்கு முதலாளியின் காமத்திற்கு ஈடு கொடுக்க வேண்டியதும் ஒரு ஊழியமாக அர்த்தப்படும் கொடுமையின் அடுத்த நுனியில் அதுவே அவளது வாழ்க்கை விதியாக மாறுவதும், அந்த அவமானத் தொழிலில் இருந்து வெளியேறுவதன் வாசலில் அவள் சாமியாடி குறிசொல்லியாக பரிணமிப்பதும் (மருளாடியின் மேலிறங்கியவர்கள்).. என "கருப்பு நிலாக் கதைகள்" தொகுப்பின் சிறுகதைகள்  உள்ளத்தை உலுக்கும் விவரிப்புகளோடு பட்டவர்த்தனமான விசாரணையாகவே உருவெடுக்கின்றன.

தலைப்புக் கதை, ஈவிரக்கமின்றி பாலியல் வேட்டைக்குப் படைக்கப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சாட்டையடியாய்ச் சொல்கிறது. கயவனின் வன்புணர்ச்சியின் வலியில் இருந்து அவள் மீளுமுன் கணவன் தனது புனிதம் காப்பாற்றிக் கொள்ளக் குழந்தைகளோடு வேறிடம் போய்விடுவதும், அந்தக் கயவனோடே பகிரங்க வாழ்வை அவள் தொடர இடம் கொடுததும் கொச்சைப் படுத்தப்பட்ட உடலுக்கு மரியாதை மிஞ்சியிராததும் அவளுக்கான கூராயுதங்களைத் தயாரித்துக் கொடுக்கத் தான் செய்கிறது. 

வேதனையான வாழ்வுச் சூழல்களை மட்டுமே சொல்லி நகர்ந்துவிடாத காமராஜின் எழுதுகோல், இவற்றினூடே பனிப்பூக்கள் போல் மின்னும் மனிதநேயத்தை, மாற்றுப் போக்குகளின் தடயத்தை, சவால்களை ஏற்றுப் போராடும் வேட்கையை எல்லாம் உள்ளன்போடு பதிவு செய்கிறது. உலகெங்கும் பாட்டாளி மக்களின் விடியலுக்காகத் தன்னலமற்று உழைக்கும் தொழிற்சங்க ஆளுமைகள் அனைவருக்குமான படிமமாக படைக்கப்பட்டிருக்கும் சம்பத் (சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்) கதை ஒரு தந்தையும் மகளும் பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ சின்னச் சின்ன சந்தோசங்களை இழந்திருந்தும், ஒரே ஒரு பார்வையில், லேசாகத் தோலில் சாய்கையில், தலை கோதுவதில் அவற்றை மீட்டெடுக்கும் வல்லமை பற்றி அழகாகப் பேசி பொது வாழ்வை கவுரவிக்கிறது.

நகைச்சுவையோடு சாதாரண மனிதர்களின் அசலான வாழ்வைப் பேசும் "ஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்", காதலின் மெல்லிய கணங்களைக் கவிதையாகக் கடக்கும் "ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச் சட்டினியும்", குழந்தைத் தொழிலாளர் பற்றிய வெற்றுப் பிரகடனங்களைக் கேள்விக்குட்படுத்தும் அதிர்ச்சியான "சிறுபிள்ளைகள் என்னருகே வர தடை செய்யாதிருங்கள்", அன்பின் வெள்ளம் எங்கே வழியுமோ அங்கே கழியும் வாழ்க்கை என முகவரி தரும் "நினைவில் சலசலக்கும் பனங்காடு"...என தொகுதி முழுக்க மீண்டும் மீண்டும் வாசிக்க நிறைந்திருக்கின்றன பதினான்கு கதைகள்.

இரண்டு கதைகள் ஒன்றாகக் கலந்து விட்ட பாட்டுக்காரி தங்கலச்சுமி மற்றும் தொகுப்பு முழுவதிலும் ஆங்காங்கு சரி செய்ய விடுபட்ட  மெய்ப்பு திருத்தங்களால் நெருடும் பிழைகள், சில இடங்களில் இருவரது பேச்சுக்களை ஒன்றாகக் கலந்துவிட்ட  உரையாடல்களால் ஏற்படும் வாசிப்பின் இடையூறுகள் இவற்றைக் குறிப்பிடாதிருக்க இயலாது. என்றாலும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த அழகான நூல், காமராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.  தமது தேர்ச்சியான சொற்சித்திரங்களில் அவர் குழைத்துத் தரும் மிகச் சாதாரண மக்களது வாழ்க்கைப்பாட்டின் வித்தியாசமான வாசிப்பு அனுபவம் அது. 

2.2.12

இன்றைக்கும் ஒத்துப்போகும் பழங்கதைகள்


அது தாது வருசப் பஞ்சம்.திருடர்கள் பணம்,பொன்,பண்டங்களைத் திருடு வதை  விட்டு விட்டு.ஆக்கிவைத்த கஞ்சிப்  பானை களைக் களவாண்டு போனர்கள்.தேசம் முழுக்க பசியே வியாபித்திருந்த பஞ்சம் தலைதூக்கி ஆடியது. அவன் சொந்த ஊரைக் காலி பண்ணிவிட்டு சோறு கிடைக்கிற இடம்தேடி காடுமேடெல்லாம் அலைந்தான். பலநாள் அலைந்து கண்கள் பஞ்சடைத்துப் போய் ஓரிடத்தில் மயங்கி விழுந்தான்.

அந்த நேரத்தில் அங்குவந்த குடியானவன் ஒருவன்அவனைத் தூக்கிக் கொண்டுபோய் கண்முழிகக வைத்தான். கதைகேட்டான்.சொன்னான். இப்போதைக்கு என்னிடம் கொஞ்சம் கேழ்வரகும் வேட்டையாடிக் கொண்டு வந்த கொக்கும் இருக்கிறது சமைத்துத் தந்தால் சாப்பிடுவாயா என்று கேட்டான். ஆபத்துக்குப் பாவம் இல்லை உயிர் கொடு என்றான். கேழ்வரகை திரித்து,கொக்கைச் சமைத்துக் கலியும், கறியும் கொடுத்தான்.

அங்கேயே தங்கி விடுவதெனத் தீர்மானித்து அவனிடம் சொன்னான்.சரி என்னுடன்  தொழிலுக்கு வருவாயா எனக் கேட்டான்.சரி சொன்னான்.எனில் இன்றிரவு தொழிலுக்குப் போகலாம் என்று சொன்னான்.ஏன் இரவு என்று கேட்டான். பொறு அவசியம் வரும்போது சொல்கிறேன் என்றான்.இரவில் ஒரு வீட்டருகே போனார்கள். சன்னலை உடைத்து உள்ளே போ அங்கிருக் கும்  சாமான்களைத் தூக்கிக் கொண்டுவா என்று சொன்னான்.திருடுவதா மாட்டேன் என்று சொன்னான்.

’அப்ப என் கொக்கும் கலியும் கக்கு’
 என்றானாம்.

30.1.12

பராக்குப் பார்த்தல் அங்கும் இங்கும் - யேனம் தொழிலாளர் கிளர்ச்சி,மணிப்பூர் தேர்தல்

உத்திரப்பிரதேசத்தில் குசுப்போட்டாலும் அது தேசியப்பிரச்சினை யாகும். மணிப்பூர் போன்ற மாநிலங்களில் எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்தாலும் அது ஒருவரிச் செய்தியாகக் கூட இடம்பெறாது.இதுதான் இந்தியாவின் சன நாயகம்,பத்திரிகை அனுகுமுறை,ஊறிப்போன மந்தை நடைமுறை. வீட்டில் போரடித்து நேரம் போகவில்லை யென்றால் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசம் போய்விடுவார். அங்குபோய் நின்றுகொண்டு தான்  அரசி யல் படிப்பார். அதற்கு காரணமும் அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை தான். ஏன் உத்திரப் பிரதேசம் ஏன் மணிப்பூர்.

இந்த இரண்டிலும் உள்ள பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் இந்த ஒப்பீட்டுக்கு காரணம். உபியின் மொத்த பாராளுமன்ற  உறுப்பினர்கள் 80. மணிப்பூரின் மொத்த பா ம உ எண்ணிக்கை- 2. 1958 ஆம் வருடம் தொடங்கி இன்று வரை  மணிப் பூரில் கிட்டத்தட்ட  ஒரு மறைமுக ராணுவ ஆட்சி நடை பெறுகிறது. இந்த நிமிடம் வரை அங்கு அடக்குமுறையும், அதற்கெதிரான போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கிறது. அது பெரும்பாண்மையான இந்தி யர்களுக்கு தெரியாது.அது பெரும்பாண்மையான  படித் தவர்களுக்கு தெரி யாது.அது பெரும்பாண்மையான அரசியல்வாதிகளுக்கு தெரியவே தெரி யாது.தெரிந்துகொள் வதால் எந்த லாபமும் இல்லையென்கிற கணக்குத்தான் இதற்கெலாம்  மூலகாரணம்.

வெறும் 2 எம்பிக் கள் மட்டுமே இருக்கிற அதற்கென மெனக்கெட 63 வருடங் களாக நமது அரசுக்கு நேரமில்லை. தங்களின் வலி, வேதனை, கஷ்டம், ஆகியவற்றை கண்டு கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் அவர்களுக்குள் இருக்கிறது. அந்த நேரத்தில் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்தியமக்கள் என்று  சொல்லு வதும். எல்லோரும் உடன் பிறந்தவர் என்று சொல்லுவதும்.,பாரத்மாதாகீ ஜே சொல்லுவதும் அர்த்தமில் லாததாகி விடும். ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த மாநிலம் தனது வெறுப்பை பல்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆயுதத்தின் மூலமா கவும் வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பதுதான் சமீபத்திய தேர்தலில் நடந்த வன்முறையும் அதில் பலியான ஆறு மனிதர்களும். ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரம் பெரும்பாணமையால் தீர்மானிக்கப்படுகிறது. அதற்காக அந்த அரசு பெரும்பாண்மை மக்களுக்கு மட்டுமானது என அர்த்தமில்லை.

யேனம் என்கிற ஊர் புதுச்சேரி மாநிலத்துக்குச்சொந்தமானது. அங்கிருந்து கிட்டத்தட்ட எண்ணூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கிற அந்த ஊரைச்சுற்றி  கேரளா,ஆந்திரா,கர்நாடக எல்லைகள்தான். இது சனநாயகத்தின் இன்னொரு வியப்பு. ஏதாவதொரு மாநிலத்தோடு சேர்த்த்தால் என்ன கேடு வந்துவிடுமென்று  தெரிய  வில்லை. பழய்ய நடைமுறையைக்கைவிடாமல் பிரெஞ்சுக்காரார்கள் அடிமைப்படுத்தியிருந்த போது எப்படி இருந்ததோ அதே நிலைமை தான் இன்னும் நீடிக்கிறது.

அந்த யேனத்தில் இருக்கிற ரீஜென்சி செராமிக் டைல்ஸ்  நிறுவ ணத்தின் ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாதகாலமாக போராடிவருகிறார்கள். போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. கைதான வர்களில் முரளிமோகன் என்கிற தலைவர் கொலை செய்யப்பட்டிருக் கிறார். அதற்கெதிரான போராட்டம் வன்முறையாகி யிருக்கிறது. போலீஸ்காவலில் இறந்தவருக்கு மாரடைப்பாம் அதனால் இறந்துவிட்டாராம். வன்முறையில் நிறுவண அதிகாரி கொல்லப்பட்டது ஒரு குறிப்பிட்டவர்களின் தூண்டுதலால் நடந்த கொலையாம்.

எந்தக் காலத்திலும் செய்தி ஊடகங்கள் உழைப்பாளிகளுக்காகவும்,  அடித் தட்டு  மக்களுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுவதில்லை. தாங்கள் விளம் பரப்படுத்தும் நடு நிலை என்கிற வார்த் தைக்காகவாவது உண்மையாக நடக்க வேண்டாமா? வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம் தொழிலை அபிவிருத்தி பண்ணுவதோடு அது அடித் தட்டு மக்கள் வரைப்போய்ச் சேர்கிறது இந்த பிரக்ஞை  இல்லாமல் இன்னமும் இருட்டடிப்பு வேலைகளில் ஈடுபட முடி யாது. சூழ்சியும்,இருட்டடிப்பும்,வஞ்சகமும்,பாரபட்சமும் அதிகாரத்தின் ஆயுத மாக இருக்கும் போது, தெருவில் கிடக்கும் கல்லெல்லாம் உழைப்பவரின் ஆயுதமாகும்.

26.1.12

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

கருப்பு நிலாக் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற சிறுகதை.மீள்பதிவு.

முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப்பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பறவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப் பொட்டுக்கும்  சம்பந்த மில்லாத கிராப் தலை.  நாலு அடி ஐந்தங்குள உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து  எட்டிருக் கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில்  ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின்  ஒளி குடிகொண்டிருக்கிறது.கடந்துபோன ஒரு நவீன வாகனத்துக்கார முதலாளியின் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை. அந்த முதலாளி மாதிரியே நகரத்துப் பிரதானச் சாலையில் பல ஆண்கள் அவளைக் கடந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. செருப்பிலாத காலில் சாலையோரத்து மணல் ஒட்டிச்சிதற்கிறது. எல்லோர் பாதங்களையும் பதற வைக்கிற அந்தச்சூடு அவளை ஒன்றும் செய்யத்திராணியற்றுப் போனது.


காவல் நிலைய வாசலில் உட்கார்ந்திருந்த செவத்த வள்ளி இவளைக்கூப்பிட்டு ரெண்டு வெத்திலையையும் உடைத்த பாதி பான்பராக்கும் சேர்த்துக்கொடுக்கிறாள்.

'' சீ கருமம், இதப்போயி '' என்று தட்டி விடுகிறாள்.
'' ம்ம்ம்ம்.. ரெம்பத்தா சுத்தக்காரி மாதிரி சிலுப்பிகிராத ''
'' ஏ... சொன்னாலுஞ் சொல்லாட்டாலு நா சுத்தக்காரி தா அந்த ஆத்தாவ செமக்கமில்ல ''
'' ஆமா இடிச்சிப்போட்ட பழய டேசன் கக்கூசக்கேட்டாச் சொல்லும் '' 
'' சீ நாத்தம் பிடிச்சவா ஓண்ட மனுசி பேசுவாளா ''
 
சுருக்கென்ற கோபத்தில் அங்கிருந்து நடையைக் கட்டினாள். ப்ரியா ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது யாரோ கேலி சொல்வது கேட்டும் கேட்காமலும் நுழைந்தாள். உள்ளே மாடன்,  அலங்காரிக்கப்பட்ட சின்னக்குழந்தையை மரப்பெஞ்சில் உட்கார வைத்து படம் பிடிக்க குனிந்து, குனிந்து வசம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் கூட அங்கிருக்கிற யாரும் அவளைக் கவனிக்கவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்துவிடும் அபாயம் உணர்ந்த, கம்ப்யூட்டர் முத்து, தீபா யாருமே அவளோடு பேசவில்லை எல்லோர் முகத்தையும்  பார்த்து விட்டு திரும்பவும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அந்தக்குறுகிய வாசலின் வழியே ஒருவாரத்திற்கு முன்னாள் படம் எடுத்த எஞ்சினியரிங் மாணவன் வர யோசித்து நின்றதைக் கவனித்த தீபா ''சச்சி கொஞ்சம் தள்ளிக்கோ'' சொல்லவும். அய்யய்யோ பிள்ளாண்டன் நிக்குதா உள்ளபோங்க சாமி என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தக் கம்ப்யூட்டர் மாணவனும் எஞ்சினியரைவிடப் பெரிய பட்டம் கிடைத்த  சந்தோசத்தோடு சாமிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே போனான்.

இது ஒரு அன்றாட  வாடிக்கை தான் என்றாலும் அந்த புகைப்பட நிலையத்தோடு சம்பந்தமில்லாத ஒரு பெண்  அங்கு வந்துபோகிற எல்லோரோடும் மிக இயல்பாகப் பேசுகிற லாவகம் கற்றுக் கொண்டதும், வியப்பானவை. இன்னும் சில சாவகாசமான பொழுதுகளில் புகைப்பட நிலையத்தின் நடுக்கூடத்தில் செந்தில், மாடன், சூரியா, இன்னும்சில இளவட்டங்கள் உட்கார்ந்திருக்க நடுவில் உட்கார்ந்து கொண்டு வலமை பேசிக்கொண்டிருப்பாள் சச்சி. அந்த சச்சி யார் என்கிற ஒரு கேள்வி புதிதாய் நுழைகிற எல்லோருக்குள்ளும் எழுந்து அடங்கும்.


சரஸ்வதி என்கிற சச்சி.


மேட்டமலையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் பத்து வீடுகளுக்கும் குறைவாக இருந்தது அந்தக் குடிசைகள். அதில் ஒரு குடிசையில்  நாள், பொழுது, நட்சத்திர தேதிகளுக்குள்ளும் பஞ்சாயத்து ஜனனப்பதிவேடுகளிலும் பிடிபடாமலும் பதிவாகாமலும் பிறந்த சரசுவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு வேளைச்சோறு  சாப்பிடு வதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும்.  வெயிலோடும், புழுதியோடும், பசியோடும் கடந்துபோன பால்யப்பருவத்து பசுமை நினைவுகளில் மிக அறிதாக விளையாட்டும், மழையும், சில இனிப்பு களும் தவிர வேறு ஏதும் பிரமாதமாக இல்லை.  மானம் பார்த்த இந்த கந்தக பூமியில் விவசாயம் காய்ந்து போனது.  மத்தியில் ஆட்சி செய்த  ஜனதா அரசு தீப்பெட்டிக்கான உற்பத்தி வரியைக்குறைத்து, குடிசைத் தொழிலாக அறிவித்தது அந்த எழுபதுகளில்தான் பருத்தி, மிளகாய் விளைந்த கிராமங்களில் தீப்பெட்டிகள் முளைக்கத் தொடங்கியது. விவசாயம் செய்த பண்ணையார்கள் தீப்பெட்டி முதலாளிகளானார்கள். அபோது எல்லா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்து குழந்தைகளைப் போலவே இலவசக்கல்வி, இலவச உணவு எலாவற்றையும் தாண்டிய வறுமையை எதிர்கொள்ள உழைக்கப்போகிறாள் சச்சி.


கட்டை அடுக்குவதற்கும், தீப்பெட்டி ஒட்டுவதற்கும் கச்சாப்பொருள்களை வீடுகளில் கொண்டுவந்து  கொடுத்து விட்டு, அதைத்தயாரித்து முடித்த பின்னால் எடுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருந்தது. ஆனால் அப்படி உட்கார்ந்து வேலை பார்க்கக்கூட இடவசதியில்லாத வீடுகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய தீபெட்டி ஆலைகளுக்கு உழைக்கப்போவார்கள். காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.

ஒரே ஒரு ஆரம்பக் கல்வி நிலையம் இருக்கிற ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆபீசுகள் இருக்கிற வினோதம் உண்டு. புலர்ந்தும் புலராத இளங்காலையில் எழுந்து முகம் துடைத்து தீப்பெட்டி வாசத்துக்குள் நுழையும் அவர்கள் பொழுது சாயும் போதுதான் வீடு வரமுடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் ஓடுகிறகிற பம்ப்செட் தேடி அலைவார்கள். மொத்தமிருக்கிற ரெண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளை துவைப்பார்கள், குளிப்பார்கள். பாதி கந்தக வாசமும் பாதி சோப்பு வாசமுமாக திங்கள் கிழமை வந்துவிடும். வீடு என்பது தூங்குவதற்கும் உணவு தயாரிப்பதற்குமான இடம் மட்டும் தான். மற்றபடி கனவு, காதல் துக்கம், சந்தோசம், சண்டை எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகமாக தீப்பெட்டி ஆபீஸ் மட்டும் தான் இருக்கும்.


ரெண்டு பெண்களின் துணையோடு மத்தியான வேலைகளில் ஒருத்தி வீடு திரும்பினால், ஒரு கந்தகப்பூ மலர்ந்து விட்டது என்பது கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிகிற விசயமாகும். இதுகூட புரியாத சச்சிக்கு ராக் ரூம் இருட்டே இரவாகியது. பொதுவாக ஊர் சுத்தம் செய்யும் குடும்பத்து குழந்தைகளும் சுத்தம்செய்கிற வேலைக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.  எல்லோரும் போன பிறகு ''ஏத்தா சச்சி நீ இரு'' என்று  முதலாளி அவளை இருக்கச் சொன்னதற்கு அதுதான் காரணம் என்று நினைத்தாள். போகும் போது அலாதியாக கொஞ்சம்பணம் கிடைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பிமேல் மண் விழுந்தது. ராக் ரூமில் அந்த கணத்த எண்பது கிலோ உருவம் அவள் மேல் கிடந்தபோது அது காமம் என்று அறியாத பருவத்திலிருந்தாள்.

எதிர்க்க வலுவற்ற சமூகத்தில் பிறந்த அவளுக்கு அந்தக்கொடுமை கூட முதலாளிகளுக்கு செய்கிற ஒரு ஊழியமென்று  நினைத்திருந்தாள். அது போலவே பல முறை அது நடந்தது.  சாக்கடை சுமக்கிற, மலம் அள்ளுகிற, பொறுமையோடு சகித்துக்கொண்டாள். அதன் பின்னாள் முதலாளி மிளகாய்த் தோட்டத்துக்கு வேலைக்கு வரச்சொன்னார் அங்கேயும் கூட அவளுக்காக காமவெறி காத்துக்கிடந்தது. கால மாற்றமும் உடல் மாற்றமும் அவளுக்கும் கூட இச்சைகளை உண்டுபண்ணு கிற வேலையைக்காட்டியது. இப்போது முதலாளி எப்போது கூப்பிடுவார் என்கிற எண்ணம் உருவானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று கந்தக வாசமும், கழிவு, குப்பை வாசமும் சூழ வேலை பார்க்கிற நிர்ப்பந்தம்அவளுக் கில்லாமல் போனது. இரண்டு அந்த வேலைகள் இல்லாத போதும் கூட அவளுக்குத் தேவையான  எல்லாம் கிடைத்தது.  மகள் கெட்டுப்போன சேதியைக் கடைசியில் தெரிந்துகொள்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்பது கிராமத்து சொலவடை. கடைசியாகத் தெரிந்த போது அவள் கருவுற்றிருந்தாள்.

அடுத்த சாதிக்காரன் கிண்டல் பண்ணினால் கூட போட்டுத் தள்ளுகிற சமூகக் கட்டமைப்புள்ள இந்த பூமியில் ஒரு பெரிய பாலியல் பலாத்காரம் அதுவும் அறியாத வயசில் நடந்திருக்கிறது அதுகுறித்துக் கோபப்பட வேண்டிய குடும்பம், மாற்று யோசனை மட்டுமே யோசிக்க முடிந்தது. கருவைக்கலைக்க சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பினார்கள்.  அங்கேயும் ஆண்டைகளும், ஆதிக்கமும் குறைவில்லாமல் இருந்தது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அவள் அங்கேயும் ஆதிக்க சாதிப்பையன்களுக்கும் பெரியவர்களுக்கும் பொழுது போக்க கிடைத்த சாவடிபோல், பாஞ்சாம்புலி போலாகிப்போனாள். மீண்டும் பழைய ஊருக்கு வந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சட்டும் என்று பெற்றோர்களே பிராது கொடுத்து விபச்சார வழக்கில் சிறைக்கு அணுப்பினார்கள். சட்டி சுடுகிறது என்று தப்பித்துக் குதித்து அடுப்பில் விழுந்த கதையாகியது சச்சியின் பொழப்பு. சிறைவாசம் எழுந்துவரமுடியாத புதைகுழியானது. அங்கிருந்து வெளி வரும்போது ஒரு புடம் போட்ட தங்கமாக வருவாள், மறு வாழ்வு வாழ வைக்கலாம் என்ற இன்னொரு மூட நம்பிக்கையும் தகர்ந்து பெற்றோருக்கு. மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.


1985 வருசம் முதல் 1990 வரை ஒரு ஐந்தாண்டுகள் நகரத்தின் பிரபலங்களில் ஒன்றாகிப்போனாள்.அவளைப் பற்றியதான தகவல்கள் எந்த சுவரொட்டியிலும், எந்த ஊடகத்திலும் விளம்பரப் படுத்தப் படவில்லை  எல்லோ ருக்கும் அவளைப்பற்றித் தெரிந்திருந்தது. அவளைக்கடந்து போகிற யாரும் எளிதில் தவிர்க்க முடியாத வசீகர தோற்றம், இருபத்து நான்கு மணிநேரமும் வாடாத வரம் வாங்கியது போலவே அவள் சடையேறும்  மல்லி கைப்பூ, என வளைய வளைய வந்தாள். அந்தக்காலத்தில்தான்  எம்ஜியார் இறந்துபோனார். அப்போது மூன்று நாட்கள் தமிழகத்து நகரங்கள் சகஜ வாழ்கை இழந்து வெறிச்சோடிக் கிடந்தன. ஜனங்கள் போக்கிடமில்லாமல் வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். கடைகள்  மூடிக்கிடந்தன. மூடிய கடைகளின் முதலாளி நான்கு பேர் ஒரு காரில் அவளை எங்கெங்கோ கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களில் மூன்றுபேர் நல்ல குடிகாரர்கள்  அப்படி யான நேரங்களில் அவளும் குடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.


குடிப்பழக்கம் ஒரு புது அனுபவமாகவும், தாங்கும் சக்திக்கான மாற்று மருந்தாகவும் அவளுக்கு அறிமுகமாகியது. அதை அறிமுகப்படுத்திய மாரிக்கிழவி சரக்குச் சாப்பிடுவது பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். சும்மா பச்சத்தண்ணி குடிக்கிற மாதிரிக்குடித்துவிட்டு ஒரு செருமல் கூட இல்லாமல் இயல்பாகிவிடுவாள். குடித்த சரக்கின் வாசனை தவிர குடித்ததற்க்கான் எந்த தடயமும் அவளிடம் இருக்காது. முதலில் கொமட்டிக்கொண்டு வந்தாலும் பின்னர் கொஞ்சநாளில் சச்சியும் பழகிக்கொண்டாள். அப்போது கேட்ட சரக்கு கேட்ட துணிமணி,வாரி யிறைக்கிற பித்துப்பிடித்த பணக்காரர்களாக அவள் பின்னாலே அலைந்தார்கள். ஆனால்  யாரிடமும் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்கிற யோசனை அப்போது அவளுக்குத் தோன்றவேயில்லை. இந்த உடல், அதன் வசீகரம், அதன் மேலுள்ள ஈர்ப்பு எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். அப்போது வயிறும் வாழ்கையும்  வழி மறிக்குமே என்கிற தூரத்து சிந்தனை இல்லாதவளாக காலம் கடத்தினாள்.

நகரத்து பிரமுகர்களும் அவர்களது மகன்களும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அவளைத் தேடி வந்துபோகிற நாட்களில்  அவளுக்கு கர்வம் கலந்த புன்னகை குடிகொண்டிருக்கும். அதை மாரிக்கிழவியிடம் சொல்லிச் சிரித்திருப்பாள். தன்னைக்கடந்து போகிற யாரும் உற்றுப்பார்த்தாலோ அசடு வழிந்தாலோ ''இங்கஎன்னதொறந்தா கெடக்கு நாரக்கருவாட்ட பூன பாக்குற மாறி பாக்கான்'' என்று எடுத்தெறிந்து பேசுவாள். பார்த்தவன் தூரத்தில் போனதும் கெக்கலிட்டுச்சிரிப்பாள். அப்போது இந்த உலகம் தன் காலுக்கு கீழே கிடக்கும் ஆங்காரத் தோடு அலை வாள். குண்டு மஞ்சள் அறைத்துக் குளிக்கிற போதும் வாசனைச்சோப்புப் போடுக் குளிக்கிறபோதும் அவளே ரசிக்கிற இளமை மீது இன்னும் கூடுதல் கர்வம் மேலோங்கும்.தெருவுக்குள் யாரேனும் நடத்தை பற்றிப்பேசினால் காளியாட்டம் ஆடி எதிராளியை நிலைகுலையச் செய்வாள். அந்தச் சொல் மீண்டும் ஒரு முறை தன்னை நோக்கி வராதபடி வேலி போட்டுக்கொள்கிற உத்தி அது.

ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் காட்டேஜுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள். மூன்று நான்கு பிரமுகர்களோடு இரவு குடியும் கூத்துமாகக் கழிந்தது. விடிகிற நேரம் மிகையான போதையில் தூங்கிப்போய் விட்டாள் கண்விழித்தபோது மீண்டும் இருட்டியிருந்தது. எவ்வளவு குடித்தோம் யார் யார் கூட இருந்தார்கள் என்கிற எதுவும் மனசில் இல்லை. ஊரின் மிகப்பெரிய புள்ளி ஒருவரின் மூஞ்சியில் காரித்துப்பியது மட்டும் நினைவிலிருந்தது. உடல் முழுக்க அடிபட்ட காயமும், நகப்பிராண்டல்களுமாக வலித்தது. அதோடு தலை வலியும், பசியும் கலந்த கிரக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தாள். உடன்  வந்த யாரும் இல்லை. முதல் நாள் இரவோடு இரவாக அவர்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நெடுநேரம் அழுகையும் வேதனையுமாக உட்கார்ந் திருந்தாள். கைபிடித்தபடியே நடந்து வரும் அய்யாவும், மடிக்குள் வைத்து பேன்பார்க்கிற அம்மாவும், காரணமில் லாமல்  நினைவில் வந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது.  அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சில பேரிடம் சொல்லிப் பணம் கேட்டாள் பலனில்லை. பிறகு ஒரு குதிரை வண்டிக்காரர் எந்தப்பிரதி உபகாரமும் இல்லாமல் அவளுக்கு சாப்பாடும், பஸ் செலவுக்குப்பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பி வருகிற போது இவ்வளவு நாள் தேக்கி வைத்த வீராப்பும் வைராக்கியமும் உடைந்தது. அப்போது ஒரு ஆண் துணை தேவை என்று உணர்ந்தாள். அதுவும் தாட்டிக்கமான ஆண் துணை.


அந்தக் காலங்களில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அம்மாசி தான் அவளுக்கு துணையாளாகவந்தான். முதலாளி மார்கள் கூப்பிடும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போவதற்கும். திரும்பக்கூப்பிட்டு வருவதற்கும் அவனுக்கு சரக்கும் சம்பளமும் உண்டு. அவள் வைக்காத விலை, அவள் கேட்காத பணம், இரண்டுமே மறை முகமாக அவனுக்குச் சாதகமாகியது. சச்சிக்கோ அது குறித்து  ஏதும் தெரியாது. ஆனால்  முதல் முதலில் அவளுக்காக ஒரு ஆண் மெனக்கிடுவதை, சாப்பாடு வாங்கித்தருவதை, டிக்கட் போட்டு கூட்டிப்போவதை. பயணங் களில் அருகிருந்து, தூங்கும் நேரங்களில் தோள் தருவதை ஒரு வித்தியாசமாக உணர்ந்தாள்.  காலம் கடந்து , காமம் கடந்து ஒரு சிநேகம் முளைக்கத் தொடங்கியது அப்போது தான் எல்லோருக்கும் வருகிற குடும்ப ஆசை அவளுக்கும் வந்து வந்து போனது. ஆனால் அம்மாசிக்கோ கல்யாணம் ஆகி வயசுக்கு வருகிற பருவத்தில் பெண்ணிருந்தது.

இந்தக்காலத்தில் பல முறை கருவேந்திக்கொண்டாள்,  அதைக்கலைக்க நாட்டு மருத்துவச்சிகளைத் தேடிப் போனாள். அப்போது மாரிக்கிழவிதான் அவளோடு கூட இருப்பாள்.எப்போதுமே துணையாக இருந்தவள் காசில்லாத நேரங்களில் ஒரு டீ வாங்கி பகிர்ந்து சாப்பிடுகிற ஒரே ஜீவன் அவளுக்கு மாரிக்கிழவிதான்.சில நேரம்  அம்மாசி வந்து செலவுக்கு பணம் தந்துவிட்டுப் போவான். அதிக கருக்கலைப்பினால் அதிக உதிரம் விரயமாகியது. அதிக உதிர விரயத்தால்  உடலில் பெலமில்லாமல் போனது. சாப்படும் சாராயமும், அம்மாசியின் தயவால் கிடைத்தது. ஒரு குற்ற வழக்கில் மூன்றுமாதம் சிறைக்குப்போன அம்மாசியில்லாத அந்த நாட்களில் தொழிலும் மந்தப்பட்டுப்போனது. அறைவயிற்றுக்கஞ்சிக்கு கூட அவதிப்பட்டாள். அப்போது நகரில் இவளுக்கு போட்டியாக இன்னும் சில பேர் அறிமுகமானர்கள்.

வேற்று ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்ட அவர்கள் தொழில் நிமித்தமாக இரவு வந்து  தங்கி பகல் திரும்புகிறவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தனது போட்டிக்காரியைப் பார்க்க விடிய விடிய கிருஷ்ணன் கோயில் பஸ் நிறுத்தத்தில் காத்துக்கிடந்தாள். வாடிக்கையாகச் சவாரி செய்கிற ஆட்டோ  ஓட்டுநரிடம் அவள் எப்படியிருப்பாள் என்று கேட்டாள். நல்ல ஒசரம் நல்ல நெறம் என்று சொன்னதும் வதங்கிப்போனாள். மாரிக்கிழவியிடம் சொல்லிச் சொல்லி புளம்பிக்கொண்டேயிருந்தாள்.   வயித்துப்பாட்டுக்கு வேறு எதாவது செய்யென்று சொல்லிவிட்டு மாரிக்கிழவியும் செத்துப்போனாள். ''ஆமா அப்பனு ஆத்தாளு ரெண்டு தேட்டரு, ஒரு சாராயக்கடை, நாலு தீப்பெட்டியாபீசு உட்டுட்டு செத்துப்போனாகளாக்கு இந்தத்தொழில விட்டுட்டு வேற தொழில் பாக்க ?  திருப்பியு அந்தப் பீயள்ற பொழப்புத்தான  த்தூதூ....'' என்று காரித்துப்பி விட்டு விபச்சாரத்துக்குக் கிளம்பினாள்.

மிக உறுதியாக இனி சம்பாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாள். ஆனால் அவளிடம் இருந்த ஒரே மூலதனமான அந்த இளமை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு கடந்து போய்க்கொண்டிருந்தது.  கிராக்கியில்லாத எந்தப்பொருளும் லாபம் சம்பாதிக்காது என்பதே வியாபார விதி. அந்த விதியின் பிரகாரம் அவள் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.  சீனி நாய்க்கர் புரோட்டாக்கடையில் காசைக்காட்டித்தான் சாப்பிட முடிந்தது. சில நாட்கள் அதுவும் இல்லாது பட்டினியாய்க் கழிந்தது. அம்மாசி வரும் வரை நாட்கள் நகருவது வேலிப்புதருக்குள் நடக்கிற மாதிரியே இருந்தது. அம்மாசி வந்தபிறகு மூன்று நாள் வீட்டில் சண்டை நாடந்ததாகவும் அங்கு அவனை வீட்டுக்குள் யாரும் சேர்க்க வில்லையென்றும்  சொல்லி  இவளிடம் வந்தான். ரெண்டு பேரும் சென்னைக்கு ரயிலேறிப்போனார்கள் அங்கு சரக்கு செல்லுபடியாகாமல், திரும்பி வந்து திருச்சியில் ஒரு புரோக்கர் மூலம் குறி சொல்லப் போவதாக விசா எடுத்து சிங்கப்பூர் அணுப்பி வைக்கப்பட்டாள்.

மூன்று மாதம் கழித்து கைநிறையப் பணத்தோடும் கொஞ்சம் உடல் தேறி மினு மினுப்பாகத் திரும்பி வந்தாள். சாத்தூரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீடெடுத்து அங்கேயே அம்மாசியும் அவளும் வாழ்ந்தார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சேதியைச்சொல்லும் போது தான் அம்மாசி தன்னை அம்மனமாகக் காட்டினான்.  தனக்கு பிள்ளை பெறுவதற்கும் ரேசன் கார்டில் பேர் போடவும் ஊரில் ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது, நீ அதற்கு கிடையாது என்று சொல்லி விட்டான். அதற்குப்பிறகு  வாரிசு என்கிற வார்த்தை அவளை நிறையச் சிந்திக்க வைத்தது. ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள். இன்னுமொரு சேறு வேண்டாம் எனத்தீர்மானித்து ஒரு நாள் நடு இரவில் காட்டு வழியே இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்தாள்  நடக்க எசக்கில்லாமல் கால்வலித்து இருக்கங்குடி மரியம்மாளே நீயே கதி என்று போய் கோயிலில் படுத்துவிட்டாள். 

மாசக்கணக்கில் அங்கேயே இருந்து கோயில் சோறு சாப்பிட்டு காலம் கழித்தாள். வெள்ளி செவ்வாய் விரத மிருந்து குறிசொல்ல ஆரம்பித்து விட்டாள். ஜனங்களின் முகங்களில் தெரிகிற சஞ்சலம் பார்த்து கொஞ்சம் போதாத காலம் என்றும், சந்தோசத்தைப்பார்த்து ஏறுகாலம் என்றும் அவளுக்குத் தெரிந்த வானசாஸ்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது தான் மனிதர்களின் முகத்தையும் கையையும் பார்க்கிறாள். இப்பொழுது தான் குடும்பம், உறவு விரிசல் பணம், வறுமை, ஆதிக்கம், சாதி எல்லாம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது. அவளைக்கடந்து போகிற பத்து வயசுக்குழந்தை களைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் போல் சில நேரங்களில் ஆசை வருகிறது. பழைய இரவுகளில் பழக்கமான அந்த இளகிய ஆண் முகங்கள், இப்போதைய பகலில் மிக இறுக்கமாகத் தெரிகிறது. கோபம் தலைக்கேறி வாயில் கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆத்தா மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடங்கிப்போகிறாள். முதலில் கொஞ்ச நாளாய்த் தூசன வார்த்தைகள் இல்லாத மொழி பழகு வதற்கு நிறையச் சங்கடப்பட்டாள். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்ட முதல் நாள் திருநீரு ம்பக் கணமாகத் தெரிந்தது பழைய ரணங்களின் கணங்களை விட மிக மிக லேசாகிப்போனது. இப்போதும் கூட அவலைக்கடந்து போகிறவர்கள் பார்வை மையம் அவள் பக்கம் திரும்பிப் பின் கடந்து போகிறது.

அவளது வீடு எது, அவளது  குடும்பம் எது அவளது கனவு எது, எதிர்காலம் எது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிற இடங்கலுக்குள் தன்னை இருத்திக்கொள்ள நடந்து கொண்டிருக்கிறாள். வெள்ளி செவ்வாய்க்கு கருப்பசாமி வந்து அவள் மேலிறங்குவதாகவும், அந்தக்கருப்பசாமி யின் வார்த்தைகள் தான் அவளுக்கு அருள் வாக்கு எனவும் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தானொரு மானுடப்பிறவியல்ல சாதாரண மனுஷியல்ல என்னும் பிம்பம் ஒன்றை தானே உருவாக்கி அதை அவளே சித்திரமாக்குகிறாள். தொலைந்து போன பால்யகாலம், தொலைந்து போன இளமை, காதல்  எல்லா வற்றுக்கும்  அவள் மேல் விழுந்த பாறாங்கல் போன்ற சமூகம் என்பது அறியாமல் கருப்பசாமி என்னும் கற்பனை யோடு வாழ்கிறாள்.  கடந்த காலம் மேலெழும்பி வரும்போதெல்லாம் பழைய நினைவுகள் மேலெழும்புகிற நேரமெல்லாம் கிளம்பி சாத்தூர் நகரத்துக்கு வருவதும்,  ப்ரியா ஸ்டுடியோவில் உட்கார்ந்து பேசிச்சிரிப்பதும். அப்படியே எழுந்து பேருந்து நிலையத்துக்கு அவசர நடை நடப்பதுவும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

( நன்றி. புதுவிசை ஏப்- 2007 ) 
சிறுகதை

22.1.12

மதுவழிப்போதை தற்காலிகம்.

பெரும்பாலும் அந்த தேநீர்க்கடையின் வாசலில்தான் முடிவாகும்.அல்லது சில நேரம் தொலைபேசியின் வழியா கவும் அழைப்பிதழ் அனுப்பப்படும். ஒவ்வொருத்தராக வந்து இணைந்து கொள்ள ஒரு அரைமணிநேர காத்திருத் தலில்  கூட்டம் கூடி விடும்வார்கள். வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒரு மத்தியதர வர்க்க கணவனுக்கு யாரும் வெற்றித் திலகமிட்டு  வழியனுப்பு வதில்லை. அது மதுக்குடிக்கவா இல்லை விலைவாசிக்கெதிரான  ஆர்ப் பாட்டத்துக்கா என்பதில் பேதமிருக்காது. யூனியன் மீட்டிங்கா ? சத்தியா ஓட்டலுக்கா ? இந்த ரெண்டு  கேள்வி களுக்கும் ஒரே மாதிரியான எகத்தாளம் தான் இருக்கும். கனி ஓட்டலைத் தேர்ந்தெடுக்கிற வரையில் எங்கே கூடுவதென்கிற பிரச்சினை இரண்டாண்டுக்கு ஒருமுறை  விவாதப் பொருளாகும். கவிஒர்க்‌ஷாப், சங்கிலி ஸ்பேர்பர்ட்ஸ், ஆதிசக்தி எஸ்டிடி பூத் என்கிற இடங்கள் எல்லாம் இப்போது ஞாபகங்களாக மட்டும் வந்துபோக கனி ஓட்டல் மட்டுமே சந்திப்புகான மையமாகிப் போனது.

அதுபோலவே இந்த  இருபத்தைந்தாண்டுகளில் எத்தனையோ குடிமகன் களோடு உட்கார்ந்து  மதுவருந்தியாகி விட்டது. ஒருசினிமாக்காரன், ஒரு மிலிட்டரிக் காரன்,ஒரு துருக்கிதேசத்தான்,டெல்லி ரயிலில் சிகரெட்  புகைத் ததற்காகப் பிடித்துக்கொண்டுபோன  ரயில்வே போலீஸ்,பாட்டிலைத் திறந்த வுடன் அழுக ஆரம்பிக்கும் மனிதர் கள்,பாடுபவர்கள்,சண்டைபோடுவபவர்கள் என ரக ரகமானவர்களுடன் போதைப் பொழுதைப் பங்கிட்டுகொள்ள முடிந் திருக்கிறது. அது மட்டுமல்ல அவர்களின்  சமூகப் பொருளாதார தத்துவங் களையும் எதிர்கொள்ள  நேர்ந் திருக்கிறது. ’ஒக்காலி இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதாய்யா லாயக்கு’ என்றோ சவுதி மாதிரிக் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தாதான் நாடு உருப்படும் என்றோ கூறும் அவர்களின் முடிவு களை  எதிர்கொள்ள நேரிடும். அவர்களின் அசாத்திய  அறிவுத் திறனையும் அறிவியல் திறனையும்கூட வியக்க நேர்ந்துவிடும்.

கிழக்கு ராமநாதபுரத்து பாண்டுகுடியில் அம்மாசி என்கிற ஐம்பதுவயதுக்காரர் முதன்முதலில் காலிப்  பாட்டி லுக்குள் தீக்குச்சியை உரசிப்போட்டார்.அப்படிப் போட்டதும் குபீரென்று தீக்கிளம்பியது. அதைவிடக் குபீரென்று அவர்மீதான ஆச்சரியமும் பொங்கியது. எல்லோரும் வங்கி பற்று வரவு என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் தலைத் துண்டைக் கையில் ஏந்தியபடி ஒரு ஓர மாக  நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தார். பின்னே  சினிமாப் பற்றி பேச்சு திரும்பியது.அப்புறம் அதுபாடலாக  பற்றிக் கொண்டது. அப்போது சொக்க லிங்கம் சார்தான் ’அம்மாசி நீ படிடா’ என்றார். பதினாறும் நிறையாத பருவ மங்கை என்கிற பாடலைப் பாடினார். குணாவுக்கு அப்போது  அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை என்கிற பாடலுக்கு நிகர் ஏதுமிலை  என்கிற கட்டுப்  பெட்டித் தனம்  மேலோங்கி யிருந்தது.  ஆனால் அவனுக்குப்பிடிக்காத அந்தபழய்ய  பாடலைக்க்கூட கூடுதல் ரம்மிய மாக்கினார் அம்மாசி. அதன் பிறகுதான் எனக்கு அப்படிப்பட்ட பழய்ய பாடல்களின் மேல் குணாவுக்கு அபார ஈர்ப்பு வந்தது. 

அவர் பாடி முடித்ததும் அந்த இடம்  ஒரு நிமிடம் மௌனத்தால் உறைந்து போனது. அவரது திறமையை அங்கீ கரிக்க  ஏற்றுக் கொண்டு பாராட்ட மதுவில் வழியும் சமத்துவம் கூட கொஞ்ச நேரம் கூசியது என்றே பொருள் கொள்ளலாம். நாகராஜுதான் 'பெய  நல்லாப் பாடுவான் ஆனா அவனுக்கு  குளிக்கிறது மட்டும் ஆகவே ஆகாது சார்வாள், பாருங்கோ துணி எவ்வளோ  அழுக்கா  போட்ருக்காண்ணு' என்று அவனது துதியை துவக்கி  வைப் பான். 'நாகராசு கோழி ரெடியாயிடுச்சான்னு பாத்துட்டுவா' என்று சொக்கலிங்கம் சார் சொல்லவும் நாகராஜு ’அம்மாசி போடா போய் சட்டுனு எடுத்துட்டுவா’ என்பார்.

பிறிதொரு நாள் நாகாராஜு இல்லாது குடிக்க  நேர்கை யில் குணா தனது பங்கை வாங்கி அம்மாசியிடம்  கொடுத்தான். வேண்டாமென்று சொல்லிக் கொண்டே வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.யாழென்றும் குழல் என்றும் சிலர் கூறுவார் எனை அறியாமல் எதிர்த்தோர்கள் எழுந்தோடுவார் என்கிற வரிக்கு முன்னாடி சரளி சொல்லவேண்டுமல்லவா அதை அட்சர  சுத்த மாகப் பாடினார். அம்மாசிக்கு அவ்வளவு நுணுக்கங்கள் கேள்வியின் வழியேதான் வசமாகியிருக்க வேண்டும். அன்று கிட்டத்தட்ட ஒரு ஜுகல் பந்தி நடத்திக் காட்டினார் அம்மாசி. அதிசயமென்னவென்றால் பந்தியில் அந்த மாதம் வெளிவந்த புதிய திரைப்படங்களின் பாடல்கள் கூட இருந்தது. மறுநாள் காலையில் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களை  எடுத்துக் கொண்டு  உணவு விடுதிகளில்  கழனித் தண்ணீரை வாங்கி அவரது மாடுகளுக்கு கொண்டு போனார். அவர்கொண்டுபோன கழிவுதண்ணீருக்குள்ளேயே  சுர,லய நுணுக்கங்களோடு அவரது இசை அமிழ்ந்துபோனது.

21.1.12

பகடிகளில் கரைந்து போகும் இளைத்தவர் சோகம்

முடி திருத்தக் காத்திருக்கும் நேரங்கள் அலுப்பைத் தருவது போலவே  சுவாரஸ் யத்தையும் தரும். சலூன்காரரிட மான உரையாடலில் ஒரு வாடிக் கையாளர் அவரது முதலாளியைப் பற்றிச் சொன்ன தகவல்கள் இவை. இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.

எங்க முதலாளி போனவாரம் முடிவெட்டக்கூப்பிட்டாரே போகலியா ?

போயிட்டாலும் உள்ள கூலியிலும் பத்து ரூவா ஆட்டயப்போட்டுட்டு குடுப்பாரு ?

பதினேழு வருசம் ஒழச்ச எனக்கே ரெண்டாயிரம் ஓவா குடுத்தாரு ஒனக்கு நல்லா நொட்டுனாரு

ரெண்டாயிரமா பொண்டாட்டி பூவாங்கிக் குடுக்க கூட காணாதே

பூ....வா,நல்லா வருது வாயில.கட்டுபடியாகல, அதா வெளியேறி, பெயிண்டடிக்க போயிட்டேன்

எப்படிய்யா மனசார ரெண்டாயிரந் தர்ராறு, கூட்டிக் கேக்கலயா

கேட்டேன்,இதுவே அதிகமாம். ஆனா வெளிநாட்டுல இருக்கிற மகனுக்கு மாசம் மூனுலட்சம் அது அவருக்கு பத்தலயாம். ஊருக்கு ஒரு நாயம் தனக்கொரு நாயம்.

ரெண்டு பயகல்ல அப்ப மாசம் ஆறுலட்சமா அவிங்க எப்டி

தெரியாதா வந்தவுடன இங்கவந்து  முடிவெட்டுவாய்ங்களே,எதுக்கு

எதுக்கு

அங்க வெட்னா அஞ்சாயிரம் ஆகுமாம் கெளம்புறதுக்கு ஆறுமாச முன்னாடியே முடிவளக்க ஆரம்பிச்சுருவானுக

இதென்ன கூத்தா இருக்கு

இன்னுங் கேளு வார வாரம் கறியெடுப்பாரே எவ்ளோ எடுப்பருன்ற

ஒருகிலோ

ம்ஹும்

அரைகிலோ,

ம்ஹும்

கா கிலோ

ம்ஹும்

நூறுகிராம் எடுப்பாரு

கொழம்பு வச்சா வாசன கூட வராதே,பேசாம மிலிட்டரி ஓட்டல் பக்கமா நின்னு வாசன பிடிக்லாமே ஓசியா 

ஏ பொறு இன்னும் முடிக்கல அந்தகொழம்பயும் சுண்ட வச்சு சுண்ட வச்சு மூனுநாள் தேத்துவாரு.