Showing posts with label தேசப்பாட்டு. Show all posts
Showing posts with label தேசப்பாட்டு. Show all posts

24.11.09

பேனாவையும் துப்பாக்கியையும் ஒருசேர ஏந்தியவன் - ஜோஸ் மார்த்தி








பனைகள் போல நிமிர்ந்து நிற்கும் தேசத்தில்

வளர்ந்த நான் ஒரு நேர்மையானவன் .

மடியுமுன் எனது ஆவியின் படலை

பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .



எனது பாடல் தெளிந்தபசுமை
எனதுபாடல் கருஞ்சிவப்பு தீப்பிழம்பு

எனது பாடல் காயம்பட்ட காயம்பட்ட மான்

எனது பாடல் மான் தேடும் வனப்புகலிடம்.



என்னை நோக்கி கரங்கள்

நீட்டும்உண்மையான நண்பனுக்காக.

ஜூலையிலும் அதே போல ஜனவரியிலும்நான்

வெள்ளை ரோஜாவை நடுகிறேன்.



நாம் வாழும் எங்கள் இதய தேசத்தை

கிழிக்கிற குரூர மனிதர்களுக்காக

கம்பிவேலிகளையும் முட்செடிகளையும்

நான் நடப்போவதில்லை

நான் வெள்ளை ரோஜாவையே நடுகிறேன்.



இந்த மண்ணில் வாழும் ஏழைகளோடேஎன்

சொந்த வாழ்வைப்பகிர்ந்து கொள்வேன்

மலையினின்று வழியும் சிற்றருவி

கடலைக் காட்டிலும் சந்தோசம் தரும்.



0



க்வாண்டமேரா என்றழைக்கப்படும், இது கியூபாவின் தேசியப்பாடல். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும் எனது மொழியாக்கம். ஒரு கவிஞனாக, ஒரு சிறுகதைப் படைப்பளியாக, நாவலாசிரியராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட போதும் அவனது தேசத்தின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிக் கண்ணிகளை உடைக்கும் சம்மட்டிகளாகவே அவை உருமாற்றமடைந்தது. ஓய்வில்லாத அலைச்சல் அதில் கிடைத்த தேடல் எல்லாமே விடுதலைக்கான திசையாகவே இருந்தது அவருக்கு. சட்டமும் படித்தார் சர்வகாலாசாலையில் ஓவியமும் படித்தார். தனது கல்வி கேள்வி அணைத்தையும் விடுதலைக்கான ஆயுதமாக்கியவர் இறுதியில் ஆயுதமேந்திப் போர்க்களம் போனார்.



கியூப விடுதலையின் வீரஞ்செரிந்த விதையாக அறியப்படும் தேசியக் கவிஞன் ஜோஸ் மார்த்தி. நெற்றியில் புரளும் கற்றை முடியோடு ஒரு புரட்சியின் நட்சத்திரம் தரித்த சேகுவேராவுக்கும்-பிடலுக்கும் முன்னத்தி ஏர் இந்த ஜோஸ்மார்த்தி. உலக வரலாற்றில் காணப்படும் விடுதலை வீரர்களோடும், இலக்கியவாதிகளோடும் ஒருசேரத் தனது இருப்பை பதிய வைத்துள்ள போதும் கவிஞனாகவே அடையாளமாகிறான் ஜோஸ் மார்த்தி.