தனது கோட்டுக்குள் தனது வரம்புக்குள் வருகிற ஆண் பெண் ஈர்ப்புகளைக் காதலென்றும் அதற்குள் அடங்காதவற்றைக் கள்ளக்காதல் என்றும் தமிழ்ச்சமூகம் இலக்கணப்படுத்திக்கொண்டது. சினிமா அதை மெருகூட்டி,இன்று வரை பாதுகாத்துவருகிறது. அதே போலத் தொடுவது காமம் என்றும் தொடாமல் காதலிப்பது தெய்வீகம் என்றும் புதுப்புருடா வேறு இங்கு உருவாக்கி விடப்பட்டிருக்கிறது. கல்யாணம் வரையிலான காலம் மட்டுமே காதற்காலம் என்றும் சொல்லி அதற்குப்பிந்திய இந்திய அடிமை விலங்குக்குள் ஒரு பெண் தன்னைத்தானே பூட்டிக் கொள்ளுவதைச் சொல்லாமல் விட்டுவிடுகிறது. மேலை நாடுகளில் கதலில் உறவு பிரிவு என்றுதான் பேசப்படுகிறது.இங்கு மட்டும்தான் காதல் தோல்வி என்கிற ஒருசொல் கண்டுபிடிக்கப்பட்டிக்கிறது.எனில் காதல் எதனோடு போட்டி போடுகிறது.இங்கிருக்கிற சமூக ஏற்பாடுகள் மட்டுமே அதன் எதிரியாகிறது.
ஒரே ஜாதிக்குள்,ஒரே மத்தத்துக்குள் கூட எதிர்ப்புகள் வருகிறதே பின்ன எதுக்கு வீணாக சாதியை இழுக்கிறீர்கள் என்று லாஜிக் பேசலாம்.அந்த எதிர்ப்பினால் பெரும் சேதாரங்கள் ஏதும் நேர்வதில்லை. இங்கிருக்கிற அகமணமுறை எனும் ஏற்பாடுகளை மீறிப்பூகிற காதல் பூக்கள் குரூரமாக நசுக்கபட்ட கதைகள் கோடிக்கணக்கில் இருக்கும். அவைகள் தான் கிராமங்கள் தொறும் நடுகல்லாகவும், சுமை தாங்கிகளாகவும்,கன்னித் தெய்வங்களாகவும் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.இவற்றொடு மல்லுக்கட்டியவர்கள் வரலாற்றிலும், இலக்கியத்திலும் ஒரு சேர இடம் பிடிக்கிறார்கள். காத்தவராயன்,மதுரைவீரன்,பொம்மக்கா திம்மக்கா,அம்பிகாபதி அமராவதி, ஆகியோரின் கதைகள் ஒரே நேரத்தில் இரண்டு சேதிகள் சொல்லுகின்றன. அது காதலின் மகத்துவம் சமூக அடுக்குகளைத்தாண்டும் என்பதும் தாண்டியவர்களுக்கான தண்டனை என்ன என இரண்டையும் அழுத்தமகச் சொல்லுகின்றன.
ஆயினும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் காதல் எதாவதொரு புது வழியில் புகுந்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். ஓடை, வேலி கண்மாய், கடற்கரை, புகைவண்டி நிலையம் என மதிப்பு மிக்க இடங்கள் மட்டுமல்ல சில நேரம் மருத்துவமனை,சுடுகாடு, கழிப்பறை ஆகியவற்றைக்கூட அது தேர்ந்தெடுக்கும்.சோலைமணம், தென்றல்காற்று, நிலாவெளிச்சம் தேடி அலைந்தால் கரிமூட்டம் போடுகிற தோழர்களும், ஆடு பத்தும் அண்ணன்மார்களும் வீடுகட்டும் சித்தாள்களும் ஒருபோதும் காதல் செய்ய ஏலாது.
தலையை விரித்துப்போட்டு நாக்குத்துருத்தி ஆங்காரத்தோடு அப்பனைக்கூட அடெபுடே என்று சொல்லிப்பதறவைக்கும் அன்னபாக்கியம்,
ஒத்தவீட்டு மருதய்யாவின் உடுக்கடியில் ஆறிப்போவாள். நடுநிசியில் பேயோட்ட சவரட்ணைகள் செய்யப்படும்.தலையில் தூக்கிவைத்த கல்லோடு மந்தையிலிருந்து சுடுகாடு நோக்கி ஓடுவாள். உடுக்கையை கீழேவைத்துவிட்டு மருதய்யாவும் துரத்திக்கொண்டு ஓடுவார். பின்தொடர்ந்தால் பேய்பிடிக்கும் என வந்தவர் யாவரும் அங்கேயே தங்குவர். ரெண்டுபேரும் திரும்பி வரும்போது அன்னபாக்கியத்தைப் பிடித்திருந்த பேய் ஓடியிருக்கும்.அவள் முகத்தில் இன்னொரு நிலவும் குடியிருக்கும். இதை அம்பலப்படுத்தினால் சாமிக் குத்தமும் அதோடு சேர்ந்து சாதிக்குத்தமும் வந்து சேரும்.
காலந்தோறும் மீறல்கள் மீது ஒரு புது ஒளிவீசும். திருடித்திங்கிற மாங்காய்க்கு ருசி அதிகம். சுற்றிலும் மிரட்டுகின்ற அடக்குமுறைகளைத் தாண்டிக் குதித்து கொண்டு வந்துசேர்க்கிற முத்தம் கோஹினூர் வைரத்தைவிடவும் விலை மதிப்பற்றது. அதனால் தான் அந்த மஹாகவி அடடா, ஓ அடடா என்று கண்ணம்மாவின் மேல் உண்மத்தம் கொண்டான்.அத்தோடு நிற்காமல் ஆதலினால் காதல் செய்வீர் என்று கவிதைப் பிரகடனம் செய்தான்.
கொஞ்ச நாள் கோலிக் குண்டுகளைப் பைநிறையாப் போட்டுக்கொண்டு அலைந்தோம்.அப்புறம் அந்தப்பையில் தீப்பெட்டி படங்களை சேமித்துகொண்டு அலைந்தோம்.அந்தப்பைக்குள் அம்புலிமாமாவோடு சாண்டில்யன் வந்தபோது புத்தகக் கிறுக்கானோம். அதில் ஓடுகிற கருப்புவெள்ளை வரிகளில் தேவதைகள் விரட்டித் திரிந்தோம்.வாலிபம் கறைந்துபோது சம்பாத்தியத்துக்கொரு வேலையை,திகுதிகுவென பற்றி எறியும் கோபத்தோடு புரட்சியை,என தடம் கடந்து கடந்து இதோ இந்த வலை அலைக்கழிக்கிறது.
இப்படி வாழ்நாள் முழுக்க காதலிக்க கிடைக்கிற கருப்பொருள் அதிகம் இருந்தாலும் நினைக்க நினைக்க இனிக்கும் அவள் கண்கள், எப்போது பார்ப்போம் என்கிற ஏக்கம்,பார்ர்க்கும் போது தொடமறந்த தயக்கம்,தொட்டபோது உலகம் மறந்த மயக்கம் மட்டும் எல்லோரையும் திரும்பத்திரும்ப சுழன்றடிக்கும்.
